Showing posts with label பயிலரங்கு. Show all posts
Showing posts with label பயிலரங்கு. Show all posts

Nov 5, 2019

இன்டயில இருந்து உங்களுக்கு ஒரு மகள் கூட இருக்கு சார் Sir.


நீண்ட நேர கடும் பயணத்திற்குப் பிறகான இரவில் கிட்டும் ஆழ்ந்த உறக்கம் அலாதியானது. எத்தனை தூங்கினாலும் சில நொடிகளில் எழுந்தது போலவே இருக்கும். திங்கட்கிழமை இனிதே விடிந்தது. அடுத்த திங்கட்கிழமை வரை நாட்கள் பரபரப்பாக இருக்கும் எனும் மனநிலை சூழ்ந்தது. கடந்த ஆண்டு போல் காலை மாலை என இந்த ஆண்டு நிகழ்ச்சிகளைத் திட்டமிடவில்லை. கடந்த ஆண்டு ஒரே நாளில் இரு நிகழ்ச்சிகள் மற்றும் இடையே பயணங்கள் என்பது மிகுந்த நெருக்கடியைக் கொடுத்திருந்தது.

ஏறத்தாழ ஒராண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கை பாடசாலைப் பிள்ளைகளை சந்திக்கச் செல்கிறேன். முதல் நாள் வழக்கம்போல் மொழிச் சவால் நிறைந்ததாகத்தான் இருக்கும். இருவருக்கும் தமிழ்தான் என்றாலும், நம்ம ஊர் சொற்களுக்கும், அவர்கள் பாவிக்கும் சொற்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அவர்களோடு உரையாடும்போதுதான் நினைவில் உறங்கிக் கிடக்கும் சில சொற்கள் மெல்ல மேலெழும்பி வரும். ஒருவாறாக இலங்கை தமிழ்ச் சொற்களை பயணத்தின் இறுதிக்குள் பழக்கப்படுத்திக் கொள்ளவே முயற்சி செய்வேன்.

*

புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலை.

நான் பாடசாலைக்குள் நுழையும்போதே மாணவிகள் தயாராக அமர்ந்திருந்தனர். அதிபர் அருட்சகோதரி சாந்தி மேரி முகப்பில் நின்று வரவேற்றார். கடந்த ஆண்டு நிகழ்வில் பங்கெடுத்த மூத்த மாணவிகளில் சிலர், இந்த ஆண்டு பங்கெடுக்கும் மாணவிகளிடம் நிகழ்ச்சி குறித்து பகிர்ந்து, எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வைத்திருந்திருந்தார்கள். மிகுந்த உற்சாகத்தோடு இருந்த மாணவிகளின் சிறப்பான பங்கேற்போடு முதல் நிகழ்வே மிகத் திருப்தியாக அமைந்தது.



*

கண்ணன்குடா மகா வித்தியாலயம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில், அந்த வலயத்தின் பல்வேறு பாடசாலைகளில் படிக்கும் மாணவ மாணவிகளில் சிலரைத் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைத்து நடத்தப்படும் பயிலரங்கு. பயிலரங்கிற்குச் செல்லும் வழியில் வலயகக் கல்வி அலுவலகத்தில் நடந்த நவராத்திரி விழா நிகழ்வு பூஜையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

வலயகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் பிரத்யேகமான முயற்சிகள் எடுத்து ஆசிரியர்கள் தம் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர். வலயக மற்றும் மாகாண கல்வித் துறை சார்ந்த உயர் பொறுப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அற்புதமான வரவேற்புடன் நிகழ்வு தொடங்கியது. மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் , ஸுரநுதன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்தனர்.




~

வலயகத்தில் இருக்கும் பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிலரங்கு. நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்திருந்த வலயக கல்வி பணிப்பாளர், வேறு பணிகள் இருப்பதால், நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டு, நிகழ்ச்சி நிறைவடைவதற்குள் வந்து விடுகிறேன் என்றவர், முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தார். இடைவேளையின்போது துவங்கியவுடன் சென்றிருக்க வேண்டும். ஆனால் செல்ல முடியாமல் என்னை இருக்க வைத்துவிட்டீர்கள் என்றபடி, நீங்கள் தொடர்ந்து நடத்துங்கள், நிறைவில் வருகிறேன் என்றார். எனினும் தொடர்ந்து நிகழ்ச்சி முழுக்க அமர்ந்திருந்தார். ஏறத்தாழ தானும் ஒரு பங்கேற்பாளர்போல நிகழ்வில் உற்சாகத்துடன் கலந்தும் கொண்டார். நிறைவடைந்ததும், நிகழ்வின் துவக்கத்திலும் இடையிலும், பணி நிமித்தம் செல்ல நினைத்ததாகவும், நிகழ்ச்சி தன்னை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை எனக் கூறியதை எனக்கான பாராட்டாக எடுத்துக் கொண்டேன்.




*
புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்

பாடசாலையில். தன்னார்வ அமைப்பான CERI ஒரே தினத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். காலை 8 மணி முதல் 10.30 மணி வரை பாடசாலை ஆசிரியர்களுக்கும், 10.45 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை பிள்ளைகளுக்கு பயிலரங்கு நடத்தப்பட்டது. CERI தன்னார்வ பணியாளர்கள் எல்லா விதங்களிலும் உடனிருந்து நிகழ்விற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அமைப்பின் மேலாளர் எபினேசர் மற்றும் பணியாளர்கள் மிகுந்த அன்பிற்கு உரியவர்கள்.



*

வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை

நவராத்திரி பூஜைகள் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்ததால் வழக்கமான அரங்கத்திற்குப் பதிலாக மாற்று அரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் ஒலி / ஒளி அமைப்புகள் மட்டும் சவாலாக இருந்தன. அதை சரி செய்திட அங்கிருந்த ஆசிரியர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி மகத்தானது. எத்தனை சவால்கள் இருந்தாலும் அதனால் என்ன என்பது போல் மாணவிகளின் தரமான பங்களிப்பு பெரிதும் கை கொடுத்தது.


*

ஒரு வார காலத்தில் ஆறு பயிலரங்குகளில் ஏறத்தாழ 250 ஆசிரியர்கள் மற்றும் 850 மாணவ மாணவியர்களைச் சந்தித்து உரையாடிய நிறைவு இந்த முறை ஏற்பட்டது. நகரத்துப் பிள்ளைகள் ஒரு பக்கம், உள்ளடங்கிய கிராமத்துப் பிள்ளைகள் இன்னொரு பக்கம் என மாறி மாறிப் பயணித்து, இரண்டு தரப்புகளோடு கலந்துரையாடி பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன.

ஆசிரியர்களுக்கான அமர்வுகளில் பகிரும் அனைத்தையும் உள்வாங்கும் வேட்கை அவர்களிடமிருந்ததை உணர்ந்தேன். இலங்கையில் பாடசாலைகள் அரசு வசம் தான். இந்தப் பயிலரங்கில் சந்தித்த ஆசிரியர்கள் புத்தகம் வாசிப்பதில் பேரார்வம் காட்டினர். ஒவ்வொரு அமர்விலும் புத்தகங்களை எப்படி பெற்றுக்கொள்வது என ஆர்வமுடன் கேட்டனர். கைவம் வைத்திருந்த #வேட்கையோடு_விளையாடு புத்தகங்கள் அனைத்தையும் வேட்டையாடினார்கள் என்றே சொல்ல வேண்டும்.



ஆண்டு முழுக்க நிகழும் இது போன்ற பயணத்தில், வழி தோறும் நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் கைகள் பற்றிக் குலுக்கி, தமக்கு சரியான கதவுகளைக் காட்டியிருக்கிறீர்கள் என்கிறார்கள்.

"இன்டயில இருந்து உங்களுக்கு ஒரு மகள் கூட இருக்கு சார் Sir. அது நான்தான் .. Thank you so much appa" என்று ஒரு முகம் தெரியாத மகள் எழுதியது தொடங்கி... ஒரு கடிதம் எழுதுங்க என்று 15 நிமிடம் ஒதுக்கிய நேரத்தில், நான் நிறைய எழுத வேண்டும் என அனுமதி வாங்கி 45 நிமிடங்கள் எழுதி, நிகழ்ச்சி முடித்ததும் தன் குடும்பம், அவர்களின் தேவை உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு கதறி அழுதது வரை...
"
பயிலரங்கு நிகழ்வுகள் என்பது, எனக்கு ஒருவரை புதிதாய் சந்திக்கும் அனுபவத்தையும், அவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு நேரமாக இருப்பதாயும் மட்டும் அமைவதில்லை. அது தேவையானவர்களுக்கு சரியான கதவுகளைத் திறந்துவிடும் அதி முக்கியத் தருணம்.

- அக்டோபர் முதல் வாரம்’ 2019

#KathirSLTrip #SriLanka #Batticalo #SLTB


Sep 3, 2019

அவ்ளோதானா சார், பேசமாட்டீங்ளா சார்?

திருவையாறு...
இத்தனை ஆண்டுகாலமும் கேள்விப்பட்ட ஒரு ஊர் பெயர் மட்டுமே. ஒரே ஒரு முறை மட்டும் பெரம்பலூரில் ஒரு திருமண நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு நாகப்பட்டினம் செல்லும் வழியில் அரியலூருக்கும் தஞ்சாவூருக்கும் இடையே திருவையாற்றினைக் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டியது. அப்போது அந்த ஊரின் திருப்பத்தில் அசோகா இனிப்பு சாப்பிடுவதற்காக காவிரி ஆற்றின் அருகே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்து சாப்பிட்டது தவிர வேறெதுவும் தெரியாது.
இந்தச் சூழலில்தான் திருவையாறு அரசர் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தார்கள். அதன் நிமித்தமாக கவிஞர்.கிருஷ்ணப்பிரியா முன்னெடுப்பில் அங்கிருந்து ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த திரு. குப்பு வீரமணி அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டிருந்தார். முந்தைய நாள் இரவே சென்றடைந்த என்னை நட்புகளோடு வரவேற்றார். அன்பாக உபசரித்தார்.
நிகழ்ச்சிகளுக்குச் செல்கையில் முடிந்தவரை பங்கேற்பாளர்களின் நிலை, பின்புலம், தேவை ஆகியவற்றை அறிந்துகொள்ள முற்படுவேன். அதன் காரணமாகவே முந்தைய தினமே திருவையாறு சார்ந்த யாரும் இருக்கிறீர்களா என ஃபேஸ்புக்கில் கேட்டு சிலரிடம் தகவல்கள் பெற்றிருந்தேன். எனினும் முழுமையான வடிவம் கிட்டவில்லை. திருச்சியிலிருந்து கல்லணை வழியாக ஆற்றையொட்டியே பயணப்பட்டத்தில் நான் கடந்தது அத்தனையும் கிராமங்கள். அங்கும் சுற்று வட்டமும் கிராமங்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
மூன்று மணி நேர அமர்வு என்பதால் LCD வேண்டுமெனக் கேட்டிருந்தேன். இரவுதான் அந்த வசதி இல்லையெனக் கூறியிருந்தார்கள். ஆகவே உரை மற்றும் உரையாடலாவே சமாளிக்கும் மனநிலைக்கு மாறத் துவங்கினேன்.
கல்லூரியின் வரலாறு சற்றே சுவாரஸ்யமாக இருந்தது. சரபோஜி மன்னரின் அந்தப்புர மாளிகையாக இருந்த கட்டிடத்தில் சமஸ்கிருத பட்டப்படிப்பு துவங்கப்பட்டிருக்கின்றது. சத்திரம் எனும் நிர்வாகத்தின் வாயிலாக தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரி. தனியார் கல்லூரி, அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி என்று மட்டும் இதுவரை பார்த்து வந்த எனக்கு ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் இயங்கும் கல்லூரி என்பது ஆச்சரியமாக இருந்தது.
காலையில்தான் அந்தக் கல்லூரியில் இருக்கும் பாடப்பிரிவுகள் தெரியவந்தன. இளங்கலை தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் முதுகலை தமிழ் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. அரங்கு குறித்து விசாரித்தபோது, அடுத்த இடி இறங்கியது. நாற்காலி வசதி இல்லை, அனைவரும் கீழேதான் அமர வேண்டும் என்ற தகவல் கிடைத்தது.
நிலத்தில் அமர்வது அவர்களுக்குப் பழகியிருந்தாலும், பயிற்சியாளராக எனக்கு நாற்காலிகளில் அமர்த்தப்படாத பிள்ளைகளிடம் உரையாடுவது பெரும் சவாலானது. கீழே அமர்ந்திருப்பவர்கள் மத்தியில் நடப்பது, எந்நேரம் கழுத்து வளைந்தபடி நம்மையே அவர்கள் பார்க்க வேண்டும் என நினைப்பது எல்லாமே சிரமத்திற்குரியது.
LCD இல்லை, நாற்காலிகள் இல்லை. தலைக்கு மேலே வெள்ளம்... இனி சாண் என்ன முழமென்ன என்ற மனநிலையில் இருந்தேன்.
நிகழ்ச்சி குறித்த எந்த விளக்கங்களுமின்றி, எல்லோரும் மீட்டிங் ஹால்ல உட்காருங்க என்றுதான் அழைத்து வரப்பட்டிருப்பார்கள் எனப் புரிந்துகொண்டேன். அனைத்து மாணவிகளும் நிலத்தில் அமரவைக்கப்பட்டிருக்க, மிகச் சொற்பமாய் இருந்த மாணவர்கள் மட்டும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் பெருந்தொகையான மாணவிகளுக்கு படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் என்பது ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அதன் காரணமாகவும் படிப்பு என்ன பெரிய படிப்பு என்ற மனநிலை இருந்திருக்கலாம்.
என்ன நிகழ்ச்சி என்று தெரியாது, எப்போது முடியுமென்று தெரியாது, பேசுபவர் குறித்தும் அறிமுகமில்லை, நிலத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதுள்ளிட்ட எந்தக் குறையும், குழப்பமும் இல்லாமல் அந்த மாணவிகள் தம் பார்வைகளில் ஒரு கூர்மையைத் தக்க வைத்திருந்தனர்.
முதல் நாள் பயணம், இரவு உறக்கமின்மை, ஏற்பாடுகளில் சில தடுமாற்றங்கள் என என்னைச் சூழ்ந்திருந்த அத்தனை அலுப்பு, சலிப்புகளையும் சில நிமிடங்களில் துடைத்தெறியும் வீரியம் அவர்களிடமிருந்தது. உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களையும் தனக்குள் பத்திரப்படுத்தும் பசி அவர்களிடமிருந்தது. முந்தைய நிகழ்வுகள் எத்தனையோ மனதிற்குள் நிழலாடினாலும், இவர்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.


ஒன்னரை மணி நேரம் கழிந்து தேநீர் இடைவேளை விட்டபோது, சூழ்ந்து கொண்டு “அவ்ளோதானா சார், பேசமாட்டீங்ளா சார்?” எனக் கேட்டார்கள். ஆச்சரியமாக ஏன் எனக் கேட்டேன். “கொஞ்சம் தான் பேசியிருக்கீங்க, ப்ளீஸ் சார் நிறையப் பேசுங்க சார்!” எனக் கெஞ்சலாகக் கேட்டதை இங்குதான் முதன்முறையாகப் பார்த்தேன்.
நிகழ்ச்சி முடிவடைந்ததும், ஆட்டோகிராஃப் வாங்க குவிந்தவர்களிடம், (அது ஒரு ஆர்வ விளைவு மட்டும்தானே) இதை வாங்கி என்ன செய்யப்போறீங்க எனக்கேட்டேன் “என்னைப் பத்தின வரையறையை அதில் எழுதி வச்சுக்குவேன்” என்றார்கள் பலரும்.
இத்தனை நெகிழ்வான அனுபவத்திற்கு முக்கியக் காரணமாக இருந்த கவிஞர்.கிருஷ்ணப்ரியா மற்றும் திரு. குப்பு வீரமணி ஆகியோருக்கு ப்ரியம் நிறைந்த நன்றிகள். நிகழ்விற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு தஞ்சையிலிருந்து தமது கணவரோடு வந்து கலந்துகொண்ட கவிஞர் கிருஷ்ணப்பிரியா பேரன்பிற்கு உரியவர். எழுபது வயதுகளைக் கடந்திருந்தாலும், அச்சு அசலான இளைஞருக்குரிய ஆர்வத்தோடு எல்லாவற்றிலும் செயல்பட்ட அய்யா குப்பு வீரமணி அவர்கள் மிகப் பெரும் ஆச்சரியத்துக்குரிய முன் மாதிரி.
நிறைவாக பல மாணவிகளை ஒன்று திரட்டி ஒரு குழு நிழற்படம் எடுத்தார் இலக்கியத் தடம் அமைப்பைச் சார்ந்த குணா ரஞ்சன் அவர்கள். அதில் ஒரு மாயம் செய்யப்போவதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.


Mar 9, 2019

பேச வேண்டியது பெற்றோர்களிடமே!

மாணவர்களுக்கான பயிலரங்குகளின் நிறைவில் அதை ஏற்பாடு செய்யும் உயர்மட்டத்தில் உரையாடும்போது எப்படியும் “உண்மையில் நாம் உரையாட வேண்டியது, மாணவர்களிடம் மட்டுமே இல்லை... முக்கியமாக ஆசிரியர்களிடம், இன்னும் மிக முக்கியமாக பெற்றோர்களிடமே!” எனச் சொல்வதுண்டு.
அவர் என் நீண்ட நாள் நண்பர். அவ்வப்போது சந்திப்பது, உரையாடுவது உண்டு. கடந்த மாதத்தில் ஒருநாள் அவருடைய மகன் படிக்கும் கல்லூரியில் இருந்து அழைத்தார். மகனை அழைத்துக்கொண்டு வருகிறேன், அவனோடு உரையாட வேண்டுமென்றார். முதல் இரண்டு ஆண்டுகளில் மிகக் கணிசமான அரியர்ஸ். கல்லூரியிலிருந்து நேரில் வரச் சொல்லி அழைத்துவிட்டார்கள். மகனிடம் நான் பேச வேண்டும் எனும் வேண்டுகோளில் ஒரு வற்புறுத்தல் இருந்தது.
என்னை அறிந்திராத பிள்ளைகளிடம் தனிப்பட்ட முறையில் பேசி கவுன்சிலிங் கொடுக்கும் அனுபவம் பெரிதாக இல்லை. இதுவரை சுமார் பத்துப் பேரிடம் மட்டுமே பேசியிருப்பேன். என் களம் பயிலரங்குதான். பயிலரங்கிற்குப் பின் தொடர்பில் இருப்பவர்களுடன் என்னால் உரையாட முடியும். முன்பின் தொடர்பில்லாத தனி ஒருவரின் பிரச்சனைகளுடன் உரையாடுவது எளிதானதல்ல. ஒப்புக்கொள்ளத் தயங்கிக் கொண்டிருக்கையில் அவர் வற்புறுத்தலாக வருகிறேன் எனச் சொல்லிவிட்டார்.
வந்தபோது அவரை வெளியே அனுப்பிவிட்டு மகனோடு சுமார் ஒரு மணி நேரம் உரையாடினேன். அற்புதமான பையன். ஒரு தெளிவான வடிவத்திற்குள் வந்தோம். தனித்த பிள்ளைகளிடமும் இனி தயக்கமின்றி உரையாடலாம் எனும் நம்பிக்கையை முதல் சந்திப்பிலேயே தந்தான்.
அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். பின்னிரவு வரை அவர் தந்தையிடமிருந்து விசாரிப்பு வருமெனக் காத்திருந்தேன். அடுத்தடுத்த நாட்களும். ஒரு வாரம் கடந்தது, நானே பொறுக்க முடியாமல் அவரைத் தொடர்பு கொண்டு, ‘நான் உங்க பையன்கிட்ட என்ன பேசினேனு என்கிட்டதான் கேட்கல, அவன்கிட்டியாச்சும் கேட்டீங்களா!?’ என்றேன். கேட்டதாகவும் அவன் ஒரு இரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டதாகவும், மகன் குறித்து என்னிடம் பேசத் தயக்கமாக இருந்ததாகவும் கூறினார். என்கிட்ட பேச என்ன தயக்கம் என்றேன். இத்தனைக்கும் நாங்கள் மணிக்கணக்கில் பேசிக் கொள்கிறவர்கள். சரி நாளை அழைக்கிறேன் என்றார். இன்னும் அந்த ‘நாளை’ வரவில்லை.
நானும் அது அவ்வளவுதான் என மறந்து போயிருந்தேன். வற்புறுத்தலாய் மகனை அழைத்து வந்தவர், அதன்பின் என்ன ஏது என எதுவுமே விசாரிக்காதது அழுத்தம் தரக்கூடியதே.
மூன்று வாரங்கள் கழிந்த நிலையில் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. மாணவத்தனமான குரல். பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான். அடையாளம் தெரியாமல் யார் எனக் கேட்டேன். தம் தந்தையின் பெயரைச் சொன்னவுடன் புரிந்து கொண்டேன்.
”சொல்லு கண்ணு!”
“அங்கிள்... நான் ரொம்பத் தெளிவாயிட்டேன் அங்கிள். ஒரு அஷ்யூரன்ஸ் தர்றேன் அங்கிள், எல்லாத்தையும் ஒதுக்கிவச்சுட்டு, ஒழுங்கா படிச்சு, சஸ்சஸ்ஃபுல்லா டிகிரி வாங்கிடுவேன் அங்கிள்”
மிகுந்த உற்சாகப் பேசினான். நான் அது குறித்து வேறு எதுவும் சொல்லவோ கேட்கவோ இல்லை
“ரைட்டு தம்பி. என் நம்பர் வச்சுக்க, தேவைப்படும்போது பேசு, ஈரோடு வந்தா மீட் பண்ணு” என்றேன்.
“ஷ்யூர் அங்கிள்” என அழைப்பைத் துண்டிக்கவிருந்தவனிடம் கேட்டிருக்ககூடாதுதான் ஆனாலும் கேட்டேன்...
“ஏந் தம்பி, நாம அன்னிக்குப் பேசினதைப் பத்தி உங்கப்பா உன்கிட்ட எதும் பேசினாரா!?”
“ஜஸ்ட் ஒருதடவ கேட்டார் அங்கிள். பெருசா எதும் கேட்கல”
“உங்ககிட்ட!?” எனும் கேள்வியை என்னிடம் அவன் கேட்காததற்கு, அந்த நண்பர் தம் மகனுக்கு நன்றி சொல்லிக்கொள்ள வேண்டுகிறேன்.
மீண்டும் முதல் பத்திக்கு....

Dec 31, 2018

நானும் 2018ம்...

2018ல் மிக முக்கியமான ஒரு காரியம் செய்திருக்கிறேன். சுற்றிலும் நடக்கும் அபத்தம், சகிக்க முடியாத கண்றாவிகளையெல்லாம் பார்த்தவுடன் ஜிவ்வ்வ்வுனு ஒரு கோபம் வரும் தெரியுமா...! அதை எழுதி, பேசி என எதுவும் செய்யாமல், அதற்காகவே இருக்கும் இரண்டு வாட்ஸப் குழுமங்களில் பகிர்ந்துவிட்டு அமைதியாகி விடுகிறேன். அந்த குழுக்களில் தலா 8 மற்றும் 5 பேர் மட்டுமே! குழுமங்களின் பெயரை வெளியில் சொல்வதில் சில சட்டச் சிக்கல்கள் உண்டு என்பதால்.... ஆமாம் அதில் ஒரு வக்கீல் அண்ணன் இருக்கிறார்.
மற்றபடி...
இத்தனை வேகமாய் ஒரு ஆண்டு கடக்குமென்றால் எத்தனை ஆண்டுகளையும் வாழ்ந்து கடக்கலாம் எனத் தோன்றும் ஆண்டு 2018.
2018 என்னளவில் அற்புதமான ஆண்டு...
பேரன்பு தளும்பும் மனிதர்களை இந்த ஆண்டும் இனம் கண்டு கை பற்றிக் கொண்டேன்.
சாலைப் பயணத்தில் அற்புத அனுபவமாக ஒரு நாள், காலை ஈரோட்டில் புறப்பட்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைந்தது என இடை தங்காமல் பயணித்தது குறிப்பிடத்தகுந்த ஒரு அனுபவம். அதிலும் அஜந்தா குகை விசிட்...ம்ம்ம்... என்றும் மறக்க முடியா தருணம்.
உடற்பயிற்சியில் 100 நாட்கள் அதிலும் 100வது நாள் 21 கி.மீ ஓடியது கெத்து என்றால், அதன்பின் தொடர்ந்து ஏமாற்றி சோம்பேறியா இருப்பதற்கு என்னை நானே மொத்திக் கொள்ளலாம்.
ஏறத்தாழ 22 ஆண்டுகளாக இருந்த ஒரு துறையிலிருந்து வெளியேறிய திடமான முடிவு ஒன்று எடுத்திருக்கிறேன். அதேபோல் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக ஆர்வம் காட்டிய அமைப்புகளிலிருந்தும் ஒதுங்க ஆரம்பித்திருக்கிறேன்.
எழுத்தில்... புதிய தலைமுறை கல்வியில் 25 வாரங்கள் தொடர் எழுதியது மிக மகிழ்வான பணி. அயல்சினிமா, மின்னம்பலம் என உறவெனும் திரைக்கதையின் அடுத்த பாகத்தை சற்றே மெதுவாக தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எழுத்தில் இன்னும் சில இலக்குகளை நானே கைவிட்டது குறித்து வெட்கப்படுகிறேன்.
பேச்சு மற்றும் பயிற்சியில் குறிப்பாக இலங்கைக்கு மேற்கொண்ட அனுபவத்தில் என்னை நானே பெருமையாக உணர்ந்தேன். தொடர்ந்து ஐந்து நாட்களில் 9 அமர்வுகளில் ஏறத்தாழ 35 மணி நேரம் பயிற்சியளித்த ஆற்றல் பெரும் தன்னம்பிக்கை கொடுத்திருக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி தொடங்கி டிசம்பர் 30 தேதிக்குள்ளாக 102 மேடை மற்றும் அரங்குகளில் பங்கெடுத்திருக்கிறேன். அதன்வாயிலாக ஏறத்தாழ 30,000ற்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களில் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை 22,000+. இதற்காக சுமார் 227 மணி நேரம் பேசியிருக்கிறேன். வெறும் 18 பேர் முதல் 2900 பேர் வரை என இரண்டு எல்லைகளுக்குமான கூட்டத்தை இந்த ஆண்டு சந்தித்தேன். சிறப்பு விருந்தினராகச் சென்று, ஒரு கூட்டத்தில் வெறும் 2 நிமிடம் மட்டுமே பேச வேண்டிய சவாலான அனுபவமும் இந்த ஆண்டில் நிகழ்ந்தது. அந்த சவாலை சரியாக கடந்ததாலே சில கூட்ட வாய்ப்புகள் கிடைத்ததையும் மறுக்க முடியாது.
வாசிப்பு என்று எடுத்துக்கொண்டால்.... @#$%@#%@#$% தட் மீன்ஸ்..... த்த்தூ....த்த்தூ....
இந்த ஆண்டில் வருத்தமானது, துன்பமானது எதுவும் இல்லாமலா இருந்திருக்கும். நான் அதை நினைவில் கொள்ளவோ, மீட்டிப் பார்க்கவோ விரும்புவதில்லை என்பதாலேயே அவற்றில் பகிர எதுவும் இல்லை.
மற்றபடி எங்கள் ஈரோடு வாசல் குழுமத்தில் கணிசமான நேரம் மற்றும் பங்களிப்பை செய்திருக்கிறேன். அதிலிருந்து அற்புதமான பலரை அடையாளம் கண்டது பெருமையளிக்கிறது. ஈரோடு வாசல் தம்மளவில் சமூகத்திற்கான உடனடிப் பங்களிப்பாக கஜா புயல் நிவாரணத்தில் 2.20 லட்சம் ரூபாய்க்கு உணவுப் பொருட்களை வழங்கியிருப்பதில் பெரும் நிறைவு கொள்கிறேன்.
நிறைவான அன்பைத் தருவதற்கும், பெற்றுக்கொள்வதற்கும் யோசித்ததேயில்லை. என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் காட்டும் அன்பிற்கு என்ன பிரதியன்பு செலுத்தப்போகிறேன் எனும் வினாக்களோடுதான் எப்போதும் இருக்கிறேன்.
எவர் மீதும் பெரிய புகார் இல்லை, வெறுப்பு இல்லை, வன்மம் இல்லை. சில தருணங்களில் சிலரிடம் கோபம் வரும், அதுவும் இப்பொழுதெல்லாம் குறைந்து வருகிறது.
இந்த வாழ்வை அதன் இயல்புகளோடு இனிதே வாழ்ந்திடும் கனவு அனுபவமாகவும் தொடர்கிறது. இனியும் தொடரும். இன்னும் கூடுதல் அன்பினையும் பிரியங்களையும் தேடிக்கொண்டே..

Nov 30, 2018

செம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்


நாவாற்காடு பிள்ளைகளின் உற்சாகமான வழியனுப்புக் கையசைப்பை மனது முழுக்கச் சுமந்தபடி கல்லடிக்குத் திரும்பினேன். நான்கு நாட்கள் கனவுபோல் கடந்திருந்ததை ஆச்சரியமாய் நினைத்துக் கொண்டேன். இது எனக்கான மிகப் பெரிய சுய பரிசோதனை. தொடர்ந்து நான்கு நாட்கள் சராசரியாக ஒவ்வொரு நாளும் 6-7 மணி நேரப் பேச்சு என்பது என்னால் இயலுமெனத் தெரிந்துகொண்ட தருணம் இது. திட்டமிட்ட ஒன்பது நிகழ்ச்சிகளில் எட்டு நிகழ்ச்சிகளை முடித்த நிறைவு பெரும் உற்சாகம் கொடுத்தது. இதுவரை மட்டக்களப்பில் நட்புகள் என யாரையும் சந்தித்திருக்கவில்லை. ஒருநாள் சிவகாமி-சுந்தர் வீட்டுக்கு சென்று வந்ததோடு சரி.

முந்தைய நாளே சந்திக்கத் திட்டமிட்டு முடியாமல் போயிருந்த நண்பர் டேனியலை அழைத்தேன். 2015ல் முதன்முறையாக மட்டக்களப்பு பயிலரங்கில் சந்தித்தது. மற்றொருமுறை கொழும்பு அலுவலகத்தில் சந்தித்திருந்தோம். மூன்றாம் முறையாக இந்தச் சந்திப்பு. நிறுவனச் செயல்பாடுகள் குறித்து தொடங்கிய உரையாடல் பொருளாதாரம், இலங்கை அரசியல் என்று மாறி இறுதியாக இறுதிக்கட்ட போரில் நீண்ட நேரம் தொடர்ந்தது. ஈழத்தில் இருக்கும் மக்களோடு போர் குறித்து உரையாடும்பொழுதெல்லாம் எப்படியும் மனது கனத்துவிடும். இந்தமுறையும் கனத்துப் போனது.



சற்று நேரத்தில் நண்பர் கோமகன், நண்பரோடு வந்திருந்தார். இருவரும் ஆசிரியர்கள் என்பதால் அதுவரை  நடந்த பயிலரங்குகள் குறித்தும், அதன் பின்னூட்டங்கள் குறித்தும் துவங்கிய உரை இறுதியாக அடுத்த நாள் செல்லவிருக்கும் புனித மைக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை குறித்துத் திரும்பியது. அவர்களும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். அவர்கள் மட்டுமல்ல, மட்டக்களப்பில் நான் சந்தித்தவர்களும், வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களும்கூட மைக்கேல் பாடசாலையில் படித்தவர்கள். தமிழ்நாட்டிற்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், மறைந்த திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திரா படித்த பாடசாலை.

மைக்கேல் குறித்த அறிமுகங்களில் தவறாமல் இடம் பெற்றவை அருமையான பள்ளி, நன்கு படிக்கும் புத்திசாலிப் பிள்ளைகள் ஆனால் அடங்க மாட்டார்கள், அவர்களிடம் பயிலரங்கு நடத்துவது பெரும் சவாலாய் இருக்கும் என்றே அனைவரும் எனக்குத் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக கோமகனும், அவர் நண்பரும் சிரித்தபடியே.... ’சென்ட்ரல்தானே பார்த்திருக்கீங்க, மைக்கேல்ஸ் பாருங்க!’ அப்பத் தெரியும் என்பதுதான் மென்மையாய் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது.

விடிந்ததும் நிகழ்ச்சிக்கு தயாராகும் முன்பு கொழும்பிற்கு மதியம் கிளம்புவதா அல்லது இரவு கிளம்புவதா என மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டேயிருந்தேன். மதியம் ஒரு மணிக்கு இ.போ.ச பேருந்து இருப்பதாகச் சொன்னார்கள். மீண்டும் இ.போ.ச பேருந்து என்பதுதான் மிரட்சியாய் இருந்தது. சரி நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்தை வைத்து முடிவு செய்துகொள்ளலாம் என்று ஆயத்தமானேன்.

இந்த நிகழ்ச்சிகளின் பின்னால் இரண்டு முக்கியமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்க வேண்டும் எனும் திட்டமிருந்தது. அதில் ஒருவர் திருமதி. சக்தி அருட்ஜோதி. ஓய்வுபெற்ற முன்னாள் பாடசாலை அதிபர். என்னைக் குறித்தான அறிமுகமும், என் பயண விபரமும் கிடைத்த கணத்தில் அவர்தான் இங்கிருக்கும் பிள்ளைகளுக்கு இப்படியொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய இயலுமா என மட்டக்களப்பு வலையகக் கல்வி பணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்களிடம் பரிந்துரை செய்ய, அவர்தான் ஏழு நிகழ்வுகளை அட்டவணையிட்டு ஒழுங்கு செய்தவர். அவர்களை முடிந்தவரை நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு அதன் பின்னூட்டங்களுடன் மட்டுமே சந்திக்க நினைத்திருந்தேன். அதனாலாயே சந்திப்பைத் தள்ளி வந்தேன். ஒருவேளை மதியம் கிளம்புவதாக இருந்தால், காலையிலேயே சந்தித்துவிடுவோம் என்று முதலில் சக்தி டீச்சரிடமும், வலையக கல்வி பணிப்பாளரிடமும் நேரம் கேட்டேன். நிகழ்ச்சிக்கு முன்னதாகவே நேரம் ஒதுக்கினார்கள்.

நான் இருந்த இடத்திலிருந்து மிக அருகில் இருந்த சக்தி டீச்சரின் வீட்டிற்கு முதலில் சென்றேன். ஓய்வுக்காலத்தை பேரக்குழந்தையோடு கழித்துக் கொண்டிருந்த சக்தி டீச்சர்அருட்ஜோதி சார் தம்பதியினர் அன்பாக வரவேற்றார்கள். பின்னூட்டங்களைக் கொடுத்ததும், மாணவிகளின் பின்னூட்டங்களை மேலோட்டமாக வாசித்தவர், மெதடிஸ்த மத்தியக் கல்லூரியின் பின்னூட்டங்களை ஊன்றி வாசித்தார். அவரின் எண்ணவோட்டம் புரிந்தது. திருப்தியாய் தலையசைத்தார். பாராட்டினார். சென்ட்ரல் காலேஜ் ஓகே, மைக்கேல் சற்று கவனமாக கையாளுங்கள் என அவரும் அறிவுறுத்தினார். நேற்று கோமகன் இன்று சக்தி டீச்சர்.... எனக்குள் பொறுப்பும் சவாலும் கூடியது. அதற்குள் அருட்ஜோதி சார் அருமையான காபி ஒன்றை தயாரித்து அளித்தார். மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்தபடியாக வலையகக் கல்வி அலுவலகத்திற்குச் சென்றேன். வலையகக் கல்வி பணிப்பாளர் திரு.பாஸ்கரன் மிகுந்த உற்சாகமாக வரவேற்றதோடு, நிகழ்ச்சிகள் குறித்து நிறையக் கேட்டறிந்தார். அந்த குறுகிய இடைவேளையிலும் இந்திய விவசாயம் குறித்தும் நிறையக் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. நடந்த நிகழ்ச்சிகள் குறித்துக் கேட்டு மகிழ்ந்ததோடு, மைக்கேல்ஸ் சற்று சவாலாக இருக்குமென அவர் பங்குக்கும் தெரிவித்தார்.

கோமகன், சக்தி டீச்சர், பாஸ்கரன் சார் என்று மட்டும் நின்றிருந்தாலும்கூட ஓகே, அங்கிருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழியில், என்னை அழைத்துக் கொண்டு சென்ற ஆசிரியர் திரு. மணிமாறன் அவர்களும் அதையே சொல்ல... எனக்குள் அழுத்தம் கூடத் தொடங்கியது. லோக்கல் லாங்வேஜ்ல சொல்லனும்னா... சற்று டரியல் ஆகியிருந்தேன்.




மைக்கேல்ஸ் பாடசாலைக்கான பயிலரங்கிற்கு, அருகில் உள்ள சிசிலியா கான்வென்டிற்கு மாற்றப்பட்டிருந்தது. சிசிலியா அரங்கில் மற்றொரு நிகழ்வு இருந்த காரணத்தால், எட்டு மணிக்குத் துவங்க வேண்டிய நிகழ்வு தாமதமாகத்தான் துவங்கும் எனத் தெரிவித்திருந்தார்கள். சிசிலியா சென்று அரங்கிற்குள் நுழையும்போது அருட்சகோதரி. மேரி சாந்தினி இருந்தார். இரண்டாம் முறையாக சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.



மாணவர்களை அமர்த்தி வைக்க சற்று நேரம் பிடித்தது. அப்போது ஒரு ஆசிரியை வந்து இராமகிருஷ்ணா மிஷன்நிர்வாகி என்னை சந்திக்க அழைப்பதாகக் கூறினார். ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் இங்கே வந்திருக்கிறார்களா எனக் கேட்க, காலையில் சிசிலியாவில் நடந்தது இராமகிருஷ்ணா மடத்தின் நிகழ்ச்சிதான் எனச் சொன்னார். அவர் அழைத்துச் சென்ற இடத்தில் ஒரு இளம் துறவி நின்று கொண்டிருந்தார். வணக்கம் சொன்னேன். கல்லடியில் இருக்கும் மடத்தின் நிர்வாகியாக இருப்பதாகத் தெரிவித்தார். ஏறத்தாழ என் நாக்கில் மட்டக்களப்புத் தமிழ் ஒட்டியிருந்தது. சட்டென அவர் இப்பத்தான் மூன்று மாதம் முன்பு சென்னையிலிருந்து வந்திருக்கிறேன். இன்னும் இங்கத்தைய தமிழ் புழங்கவில்லையெனச் செல்ல ஒருவாரத்திற்குப் பின் தமிழகத் தமிழில் எனக்குப் பேச்சு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கட்டுரை ஒன்றை இராமகிருஷ்ண விஜயம் இதழில் வெளியிட்ட வகையில் சுவாமி விமுர்த்தானந்தா அவர்களோடு அறிமுகம் கிடைத்ததைச் சொல்லி, அவர் குறித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விடைபெற்றேன்.




அரங்கில் மாணவர்கள் தயார் நிலையில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் குறித்து நான்கு முனைகளிலிருந்தும் எனக்குச் சொல்லப்படிருந்தது அழுத்தமாய் மாறியிருந்தது. உண்மையில் இவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றே நினைப்பே ஓடிக் கொண்டிருந்தது.

திங்கட்கிழமை சிசிலியா அரங்கு மைக் சரியாக வேலை செய்யாததால், இந்தமுறை நன்றாக இருக்க வேண்டும் என முன்பாகவே வேண்டியிருந்தேன். ஆனாலும் அது சரிவர இயங்கவில்லை. பலமுறை முயற்சித்தும் திருப்தி ஆகாததால், தங்கள் கல்லூரிக்கே சென்று அதை எடுத்து வர ஆசிரியர் மணிமாறன் ஏற்பாடு செய்தார். அதற்காக அவர் மிகுந்த பிரயத்தனம் எடுத்தார்.

மாணவர்கள் ஒருவித குறுகுறுப்போடு, சற்று கூச்சலும் குழப்பமுமாக அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் நிகழ்ச்சியைத் தொடங்காமல் அமைதியாகக் காத்திருந்தேன். மெல்ல எழுந்து மாணவர்களைச் சுற்றிவர ஆரம்பித்தேன். என்னைப் பார்ப்பதும் அவர்களுக்குள் பேசுவதுமாய் ஏதேதோ செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அரட்டை ஓய்வதாகத் தெரியவில்லை. ஒரு குழு வெகு சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தது. அவர்களின் மத்தியில் ஒரு காலி இருக்கை இருக்க, அதில் அமர்ந்தேன்.

கிண்டலும் சிரிப்புமாய் சட்டென என்னை ஓட்ட ஆரம்பித்தார்கள். ‘யார், எங்கிருந்து, எதுக்கு வந்திருக்கீங்க!?’ எனும் கேள்விகள் பறந்தன இந்தியா என்றதும் ‘விஜய் தெரியுமா சார்!?’ என்றான் ஒருவன். ‘எனக்குத் தெரியும், அவருக்குத் தெரியாது!’ என்றேன். ’அப்ப என்னை உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே!’ என்றான். எப்படி எனக் கேட்க, ”போக்கிரி படத்தில் விஜய் கூட டான்ஸ் ஆடுறது நான் தான், என்னைப் பார்க்காம படத்தில் அப்படியென்ன பார்த்தீங்க!” என்றான். இன்னொருவன் அனுஷ்கா தெரியுமா சார். அவ என் அக்கா சார்!’ என்றான். இப்படி அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

நானும் அதற்காகத்தான் காத்திருந்தேன். எனக்கான நுழைவை அவர்களே ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவர்களை மேலும் கவனிக்க ஆரம்பித்தேன்.. முடிந்தவரை அவர்களைப் பேச விட்டு, கொட்ட விட்டு ஓரிரு வார்த்தைகளில் அமைதியாக பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒருவழியாக மைக் ஏற்பாடாகி பயிலரங்கு தொடங்கியது. ஆசிரியர் மணிமாறன் அவர்கள் வரவேற்புரை, அறிமுகவுரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார்.

மைக்கேல்ஸ் பிள்ளைகள் குறித்து அத்தனைபேரும் கூறியிருந்ததை மனதில் வைத்துக் கொண்டு ஆரம்பித்தேன். எல்லோரும் மைக்கேல்ஸ் மாணவர்கள் குறித்து அறிமுகப்படுத்தும்போது, மிக நன்றாகப் படிப்பவர்கள், அதற்கு நிகராகக் குறும்பு செய்பவர்கள் என்பதையே வலியுறுத்தியிருந்தனர். எந்த அளவுக்கு குறும்போ அதற்கு நிகரான தேடலும் அவர்களிடம் இருந்தது.  குறும்பை எனக்கான ஒத்துழைப்பாக மாற்றிவிட வேண்டும் என்பதில் நான் தீர்மானமாக இருந்தேன்.

இந்த அரங்கு எப்படியிருக்கும் என்பது குறித்து தீர்க்கமாக முன்னோட்டம் தெரிவிக்கும்போதே, அமைதியானர்கள். அனுஷ்காவின் தம்பியும், விஜயின் நண்பனும் குனிந்த தலை நிமிரவில்லை. இடைவேளையில் தனித்தனியே உரையாடினேன். நிகழ்வின் நிறைவில் நெகிழ்வான சில பின்னூட்டங்களை கையளித்தார்கள். அவர்களின் விஜய் தெரியுமா, அனுஷ்கா தெரியுமா!?’ என ஆரம்பத்தில் ஓட்டிக் கொண்டிருந்தவர்கள்தான் “வீ வில் மிஸ் யூ / ஐ மிஸ் யூ சார்!” என எழுதிக் கொடுத்திருந்தார்கள். ஆசிரியர் மணிமாறன் நிகழ்ச்சி குறித்து பெருமகிழ்ச்சி கொண்டிருந்தார். அன்போடு என்னை அறைக்கு அழைத்து வந்து விடைபெற்றார்.






நிகழ்ச்சியை முடித்து அறைக்குத் திரும்பியதும், தொடர்ந்து நிகழ்ச்சிகளின் மேல் அக்கறையாய் இருந்தவர்களுக்கு I have done it! எனும் செய்தியை அனுப்பிவிட்டு ஐந்து நாட்களின் அழுத்தத்திலிருந்து விடுபட்டு மெல்ல மிதக்க ஆரம்பித்தேன். காலையில் சந்தித்திருந்த இராமகிருஷ்ணமட நிர்வாகி, நேரம் இருப்பின் மாலை சந்தியுங்கள் எனச் சொல்லியிருந்தார். மாலை நான்கு மணிக்கு அவரைச் சந்தித்தேன். அரை மணி நேரம் எனத் திட்டமிட்டிருந்த சந்திப்பு ஏறத்தாழ இரண்டு மணி நேரங்களை எடுத்துக் கொண்டது.

மீண்டும் சக்தி டீச்சரை சந்தித்து மைக்கேல்ஸ் பிள்ளைகளின் பின்னூட்டங்களை அளித்து, வாசித்துவிட்டு பாஸ்கரன் சாரிடம் கொடுத்துவிடச் சொல்லி வேண்டினேன். நான் எவ்வளவோ மறுத்தும் இரவு உணவிற்கு அருட்ஜோதி சார் என்னை சரவண பவன் உணவகத்திற்கு வலிந்து அழைத்துச் சென்றார். நிறைவான மனதோடு, அன்பு நிறைந்தவர்களோடு சாப்பிடும்போது உணவும் அமுதம் அமைகிறது. திரும்புகையில் என்னை அறையில் விட்டுவிட்டு, பேருந்துக்கு புறப்படும் நேரத்தைக் கேட்டுவிட்டுப் போனார். மிகச்சரியாக நான் அறையைவிட்டு கிளம்பலாம் என நினைத்த நேரத்தில் அறையின் வாசலில் காத்திருந்தார். என் தந்தை வயது கொண்டிருப்பவர். எனக்கு பதட்டமானது, ஏன் சார் இப்படி சிரமப்படுறீங்க என்றேன். அதெல்லாம் பரவாயில்லை என என்னோடு பேருந்து நிறுத்தம் வரை உடன் வந்து, என்னோடு இருந்து பதிவு செய்திருந்த பேருந்து வந்ததும் ஏற்றி வழியனுப்பிச் சென்றார்.




// Yes... I have done it!
மட்டக்களப்பில் ஏறத்தாழ 117 மணி நேரம்...
ஆயிரக்கணக்கான நட்புகள்...
பல நூறு கை பற்றுதல்கள்...
அரிய சில சந்திப்புகள்...
கொண்டாட்டம்
ஏக்கம்
நெகிழ்வு
சிரிப்பு
கண்ணீர்
பிரியம்
மரியாதை
பேரன்பு...
லவ் யூ மட்டக்களப்பு 
நன்றி நல் உள்ளங்களே! :)
சென்று வருகிறேன்
// என்று அன்றிரவு பேருந்தில் இருந்தபடி ஃபேஸ்புக்கில் பதிவிட்டது அந்த ஊர், மண், கட்டிடங்கள், காற்று, கடலுக்கு மட்டுமல்ல. அங்கே அந்த ஐந்து நாட்களில் நான் கடந்து வந்த ஆயிரக்கணக்கான பிள்ளைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கும்தான்.

இந்த நிகழ்வுகளின் பின்னால் அன்பிற்கினிய மஞ்சுபாஷினி, சஞ்சயன் செல்வமாணிக்கம், கோபி ஆகியோரின் உதவி என்றைக்கும் அன்பிற்கும் நன்றிக்கும் உரியது.

மிகவும் சொகுசான பேருந்து மிதந்தபடி விரைந்து கொண்டிருந்தது. சாமி-2 ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையில் இருந்து திருநெல்வேலிக்குத் திரும்பியிருந்த, ராவணப் பிச்சையும் இராம்சாமியும் சவால் விட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு சிரிப்பாக இருந்தது. பின் இருக்கையில் காத்தான்குடியில் ஏறியிருந்த இருவரில், ஒருவர் தன் அருகில் இருந்தவருக்கு எல்லா வசனங்களையும் ஐந்து விநாடிகள் முன்கூட்டியே சொல்லிக் கொண்டிருந்தார். “யோவ் ஹரீஈஈஈஈஈ” என்று எழுந்த இயலாமைக் குரலை அமுக்கிவிட்டு, இதுவும் ஒரு அனுபவமென, கடந்திருந்த ஐந்து நாட்களை அசை போட ஆரம்பித்தேன்.

Nov 26, 2018

குறைந்தபட்சம் தொட்டுவிடும் தேடல் அது - வின்சன்ட், நாவற்காடு பாடசாலைகள்


ஆசிரியர்களுக்குமான இரண்டாவது பயிலரங்கும் நிறைவடைந்த திருப்தி, தொடர் அடை மழை என இரவு மிக நெகிழ்வாய் அமைந்தது. காலையிலும் மழை தொடர்ந்து கொண்டிருந்தது.

வின்சென்ட் மகளிர் பள்ளியில் மாணவிகளுக்கான பயிரலரங்கு. நண்பர் உமா சங்கர் அழைத்துச் சென்றார். மழை சாரலாக மாறி மெல்ல அடங்கத் தொடங்கியிருந்தது. பள்ளியை நெருங்கும்போதுதான் கவனித்தேன், அகலமான சாலையில் சில தற்காலிக குறியீடுகள் வைக்கப்பட்டிருந்தன. அது பள்ளி நேரத்திற்கான சமிஞ்சைகள். U-Turn கூடாது என்பதும் அவற்றில் ஒன்று. சாலையில் யாரும் இல்லை, எனினும் விதிகளை மிகக் கச்சிதமாக மதித்து வாகனத்தை நிறுத்தினார். இப்படி பள்ளிகள் முன்பு காலையும் மதியமும் மட்டும் சிக்னல்கள் வைப்பது ஒரு நல்ல யோசனையாகப் பட்டது. அதை நேர்த்தியாக மதிக்கும் இலங்கை மக்களின் குணம் கற்றுக்கொள்வதற்கு உரியது.




பயிலரங்கு தொடங்கியது. பிள்ளைகள் பெரும் வீச்சு காட்டினார்கள். உரையாடலை ஊக்குவிக்கும் வண்ணம் ஏதேனும் சாக்லேட் தருவது வழக்கம். காலையில் பள்ளியில் என்னிடம் கொடுத்திருந்த சாக்லெட்களை மொத்தமாய் கபளீகரம் செய்துவிடுவது போல ஒவ்வொருவரும் ஆர்வமாய் பங்கெடுக்கத் தொடங்கினர்.

மிக ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தினர். தரம் வாய்ந்த பிள்ளைகள் தாம் என்பதை ஒவ்வொரு பெண்ணும் முனைப்போடு வெளிப்படுத்தினர். சிறிதும் அவர்களிடம் நான் தயக்கத்தைக் கண்டிருக்கவில்லை. நேரம் கடக்க கடக்க நான் உற்சாகம் ஆனேன். உண்மையில் மூன்று மணி நேரம் அதற்குள் நெருங்கிவிட்டதா என நான் நினைக்கும் அளவிற்கான ஒத்துழைப்பு.





மதியம் நாவற்காடு  பள்ளியில் ZOA  அமைப்பினர் ஏற்பாடு பயிலரங்கு இருப்பதால் வின்சென்ட் பள்ளியில் குறித்த நேரத்தில் முடித்தே தீர வேண்டியிருந்தது.

நிகழ்வை முடித்து அதிபர் திருமதி.சுபாஹரனை சந்தித்து விடைபெறவும், நண்பர் ஜெயந்தன் வந்து சேரவும் சரியாக இருந்தது. மதிய உணவை முடித்துவிட்டு நாவற்காடு நோக்கி பயணித்தோம்.

*

கரடியனாறு அளவிற்கு தொலைவு இல்லையென்பதே எனக்கு முதல் ஆறுதலாக இருந்தது. ஆனால் அதே வழியில்தான் பயணித்தோம். செல்லும் வழியில் மழையடிக்கத் தொடங்கியது. சற்று நேரத்தில் நின்றது. மாணவர்களும், மாணவிகளும் வெள்ளைச் சீருடையில் குடைகளைப் பிடித்தவாறு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள். பள்ளியை நெருங்குகிறோம் எனச் சொன்னார்கள். அவர்கள் நிகழ்ச்சிக்கு வரும் பிள்ளைகள் எனத் தெரிந்தது. கடக்கும் பொழுதெல்லாம் வாகனத்தில் இருந்து அவர்களை எட்டிப் பார்த்தபடியே கடந்தேன். அவர்கள் அதையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி என்றார்கள். இன்னுமே மீண்டிடாத இடம் போன்றுதான் தோன்றியது. பள்ளி மிக எளிமையாகத் தென்பட்டது. எளிமையாக என்பதைவிட ஏழ்மையாக என்றுதான் சொல்ல வேண்டும்.

வகுப்பறைகள் மிக எளிமையாக இருந்தன. கலையரங்கத்திற்கான கட்டிடம் மட்டும் புதிதாக கட்டப்பட்டு முடிவடையும் நிலையில் இருந்தது. அதில் தான் பயிலரங்கிற்காமாணவ மாணவிகள் அமர வைக்கப்பட்டிருந்தனர். லைட், ஃபேன் இருந்தும், கட்டிடத்திற்கு இன்னும் மின் இணைப்பு வந்திருக்கவில்லை.



இரண்டு பள்ளிகளைச் சார்ந்த A-Level இரு பாலர் பிள்ளைகள் கலந்து கொண்டிருந்தனர். சிவப்பு மற்றும் நீலக் கழுத்துப்பட்டையை வைத்தே இரு பள்ளிக்குமான வேறுபாட்டினைத் தெரிந்து கொண்டேன்.

பயிலரங்கு நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக தற்காலிக மின் இணைப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள். பேசுவதற்கு வசதியாக ஒரு மைக்செட்காரரையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் திருவிழாவிற்கு தயாராவது போல் சினிமா பாடலை ஒலிக்கவிட்டு ஒலியை பலவாறு சரி செய்து கொண்டிருந்தார். எனினும் நிகழ்வு தொடங்கியதும், மைக் சொதப்பியது. மைக் இல்லாமலே பேச முயற்சித்தேன். ஒவ்வொன்றிலும் மூன்று மணி நேர பேச்சு என எட்டாவது நிகழ்ச்சி என்றளவில் நானும் களைத்திருந்தேன். சப்தமாக பேசுவது மிகச் சிரமமாக இருந்தது. ஆனாலும் மைக் செட் தம்பி ஏதேதோ செய்து மைக்கை சரி செய்து கொடுத்தார்.



இடைவேளையில் அனைவருக்கும் Refreshments வழங்கப்பட்டது. பிள்ளைகள் அங்கும் இங்கும் உலவ, நான் பள்ளியைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தேன். பயிலரங்கில் இருந்த ஒரு பத்தாம் வகுப்பைச் சார்ந்த சிறிய மாணவன், அவனுடைய பையை எடுத்துக்கொண்டிருந்தான். “என்ன தம்பி வீட்டுக்கு போறியா!?” எனக் கேட்டேன். இல்லை என்றவன் கையில் அமைப்பினர் வழங்கிய குளிர் பானம் இருந்தது. ”அது ஏன் இங்கே கொண்டு வந்திருக்கே, அங்கேயே குடிக்க வேண்டியதுதானே!?” ”வீட்ல தம்பிக்கு கொண்டு போறேன் சேர்என்றான். ஒரு கணம் விக்கித்துப் போனேன். ”சரி அதை பேக்ல வச்சுட்டு வா, இன்னொன்னு வாங்கி நீ குடிஎன்றேன். மறுத்தான். “நானே வாங்கித் தர்றேன் நீ குடி, இதை வீட்டுக்கு கொண்டு போ!” என்றேன். கடுமையாக மறுத்தான். “ஏன் இந்த ட்ரிங் உனக்கு பிடிக்காதா!?” எனக் கேட்டேன். “பிடிக்கும், ஆனா வேணாம் சேர்என்றான். என்னால் இயன்றவரை வற்புறுத்தியும், நான் தோற்றுத்தான் போனேன்.



பயிலரங்கு தொடர்ந்தது. பிள்ளைகள் போட்டி போட்டுக்கொண்டு பங்கெடுத்தார்கள். மிகுந்த மகிழ்ச்சியோடு பயிலரங்கை நிறைவு செய்தேன். எல்லாம் எடுத்து வைக்கும்போது மைக் செட் தம்பி வந்து மைக் எடுத்துக்கட்டுமா எனக் கேட்டார். பெயரைக் கேட்டு கை குலுக்கி, ரொம்ப சிரமப்பட்டு, நல்லா செஞ்சு கொடுத்தே தம்பிஎன்றேன். எதோ சொன்னார். விளங்கல என்றேன். குனிந்துமைக் சரியா இல்லாதத்துக்கு மன்னிச்சிடுங்க. அடுத்தமுறை சரியா இருக்கும் என்றார். நெகிழ்வோடு அணைத்துக் கொண்டேன்.

வெளியேறி வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்தேன். ஒன்பதில் எட்டு நிகழ்ச்சிகள் செய்து முடித்த திருப்தி. அலையலையாய் வெளியேறிய பிள்ளைகள் கும்பலாய் வந்து கை பற்ற முயற்சித்தார்கள். குறைந்தபட்சம் தொட்டுவிடும் தேடல் அது. மேலும் நெகிழ்ந்து புறப்பட்டோம்.

எங்களுக்கு முன்பாக புறப்பட்ட பிள்ளைகள், நாங்கள் செல்லும் பாதையில் வரிசையாக சைக்கிளில் நீண்ட தூரம் வரைக்கும் சென்று கொண்டிருந்தனர். எங்கள் வாகனம் ஒதுங்கும்போது அடையாளம் கண்டு “சேர்என விதவிதமாக கத்தியபடி மலர்ச்சியோடு கை ஆட்டியதெல்லாம் வாழ்நாளின் மிக நெகிழ்வான நிகழ்வுகள். ஏறத்தாழ 25 தினங்களைக் கடந்து இதை எழுதும் கணத்திலும்கூட நெகிழ்ந்து குழைகிறேன்.


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...