ஈரோட்டில் மறந்துபோன மாமனிதர்கள்! - ஆனந்த விகடன் என்விகடன் கட்டுரை

ல்லோரும் தனி மனிதர்களாகத்தான் பிறக்கிறார்கள். சிலர் மட்டுமே சமூக அக்கறை கொண்ட மனிதனாகத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட சிலரின் தியாகங்களைக் காணும் போதுதான் இந்தப் பூமி அன்பினாலும் தியாகங்களினாலும் கட்டமைக்கப்பட்டது என்பது புரிகிறது.




ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் 650 ஏக்கர் விளைநிலம், புகையிலை மண்டி, மஞ்சள் மண்டி, 100 ஆண்டுகளுக்கு முன்பே http://www.vikatan.com/images/rupee_symbol.png40 லட்சம் முதலீடு கொண்ட சொந்த வங்கி எனச் செழிப்பான ஒரு குடும்பம் இருந்தது. ஆனால், மக்களுக்காக அவர்கள் எல்லாவற்றையும் துறந்தார்கள். வெளியில் அதிகம் தெரியாத இந்தக் கதையை 'ஓயாமாரிஎன்ற பெயரில் ஆவணப்படம் ஆக்கி இருக்கிறார்  'சோளகர் தொட்டிநாவல் எழுதிய .பால முருகன்.


இந்த ஆவணப்படம் டி.சீனிவாச அய்யர் மற்றும் அவருடைய மகன் ஜி.எஸ்.லட்சுமண அய்யர் ஆகியோரின் தியாகம் குறித்துப் பேசுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு துவக்கத்தில் லட்சுண அய்யர் காலமானார். அவர் மறைவுக்குச் சில மாதங்கள் முன்பாக அவரைச் சந்தித்து ஆவணப்படத்தைக் காட்சிப்படுத்தி இருக்கிறார் பாலமுருகன். காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றிய சீனிவாச அய்யர் தலித் மக்களுக்கு அக்ரஹாரத்தில் உள்ள தன் வீட்டில் சமபந்தி உணவு அளிக்கின்றார். இதனால், அக்ரஹாரம் அவரை ஒதுக்கி வைக்கிறது. சீனிவாச அய்யரின் மகளை வாழா வெட்டியாகப் பிறந்த வீட்டுக்குத் திருப்பி அனுப்புகிறது.

சீனிவாச அய்யர் கோபியில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு 40 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தைக் கொடுப்பதுடன், தலித் மாணவர்களுக்காக கல்வி நிறுவனங்களையும் இலவச விடுதியையும் துவக்குகிறார். தலித் மக்களும் எல்லாரையும்போல் சுகாதாரமாக, சுதந்திரமாக வாழத் தன் னுடைய சொந்த நிலத்தில் காற்றோட்டமான வீடுகள், அகலமான சாலைகள் என காலனி அமைத்துக் கொடுக்கிறார்.

ராஜாஜி சுதந்திராக் கட்சி துவங்கியபோது, காங்கிரஸ்காரர்களின் போக்குப் பிடிக்காத சீனிவாச அய்யர் சுதந்திரா கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்கிறார். உடனே எதிர் அணியினர் சீனிவாச அய்யரின் வங்கியில் முதலீடு செய்து இருந்த தங்களின் மொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் திருப்பிக் கேட்கிறார்கள். அசராமல் தன்னுடைய மொத்த சொத்துக்களைப் பிரித்துக்கொடுத்து வங்கிக் கணக்கினைத் தீர்க்கிறார் சீனிவாச அய்யர். இதனால், அவருக்கு எதுவுமே மிஞ்சாமல் போகிறது.

தொடர்ந்து அவருடைய மகன் லட்சுமண அய்யருக்கு, ஊர்க்காரர்கள் பெண் தர மறுக்கிறார்கள். பழநியில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் இவரைப் பற்றி கேள்விப்பட்டு, தன்னுடைய குடும்பத்துப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கிறார். சத்தியாக் கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்ட லட்சுமண அய்யர், அவருடைய மனைவி லட்சுமி அம்மாள் இருவரும் சிறை செல்கின்றனர்.  

பெல்லாரி சிறையில் இருந்த காலத்தில் லட்சுமண அய்யர் மனித மலத்தை அள்ளும் வேலையைச் செய்கிறார். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வந்து, குஜராத் சென்று காந்தியைச் சந்திக்கிறார். அப்போது காந்தி, 'தலித் மக்களின் விடுதலைக்காக வாழ்நாள் முழுதும் உழைக்க வேண்டும்என்று லட்சுமண அய்யரிடம் உறுதிமொழி பெறுகிறார்.

1951, 1981- என இரண்டு முறை கோபி நகராட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற லட்சுமண அய்யர், பொதுக் கிணறுகளில் தலித் சமூகத்தினர் தண்ணீர் எடுக்கும் உரிமைக் காகப் பல வழிகளிலும் போராடுகிறார். தலித் கள் வாழும் பகுதியிலேயே கிணறு வெட்டிக் கொடுக்கிறார். நகராட்சி மூலம் அதிரடித் திட்டங்கள் தீட்டி வீடுகளில் இருந்த உலர் கழிப்பிடங்களை, நீர் வழிக் கழிப்பிடங்களாக மாற்றி இந்தியாவிலேயே மனித மலத்தை மனிதன் அள்ளாத முதல் நகராட்சியாக கோபியை மாற்றுகிறார். தேசத்தில் நிகழ வேண்டிய நல்ல மாற்றங்களைத் தன்னளவில் துவங்கி, தொடர்ந்து செயல்படுத்துகிறார் லட்சுமண அய்யர்.

இவற்றை எல்லாம் மிக அழகாகவும் ஆழமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார் பாலமுருகன். குறிப்பாக, பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டது குறித்து விசாரிக்கும் காட்சியில், சிறுவர்களை அழைத்து வயிற்றைக் காட்டச் சொல்லி, வயிறு புடைப்பாக இருக்கிறதா எனச் சோதிப்பதன் மூலம் ஒரு தாத்தாவின் கவிதைத்தனமான அன்பை வெளிப்படுத்துகிறார்.


ஈரோடு மாவட்டத்தின் அடையாள மனிதர்கள் என்பதில் தீரன் சின்னமலை, தந்தை பெரியார் என்பவர்களுடன் லட்சுமண அய்யரின் பெயரும் இடம்பெற வேண்டியது காலத்தின் அவசியம். அதற்கு இந்த ஆவணப் படம் ஓர் அவசியமான ஆரம்பம்.




***
26.07.2012 ஆனந்த விகடன் - கோவை என்விகடனில் வெளியான விமர்சனக் கட்டுரை.

நன்றி : ஆனந்தவிகடன், ச.பாலமுருகன்.

தொடர்புக்கு : ச.பாலமுருகன் (94432-13501)

-

35 ரூபாய்க்கு என்ன செய்யலாம்?






நேற்று இரவு 7.30 மணி இருக்கும். அலுவலக அறையின் வாசலில் அவர் நின்றார். 

“உள்ளே வரலாமா”? என்றார்

”வாங்க” என்று சொல்லிவிட்டு…. பார்த்த உருவமா இருக்கே என நினைவுகளை மீட்டெடுத்தேன்.

”யார்னு தெரியுதுங்ளா?” என்றார்

”ம்ம்ம்.. அட தெரியுதுங்க, தெரியாம என்ன” என்றேன்

பெயர் நினைவில் இல்லை. ஒரு சிறிய தொழில் நிறுவனம் நடத்தி வந்தவர். ஈரோட்டின் ஒரு பிரதானச் சாலையில் அவரின் நிறுவனம் இருந்தது. ஓரிருமுறை வேலையாக சென்றிருக்கிறேன், அவரும் வந்து போயிருப்பதாக நினைவு. அவரை 1998, 1999களில் சந்தித்ததாக நினைவு. யோசித்தும் கூட பெயர் நினைவுக்கு வரவில்லை. பெயரைக் கேட்கலாமா வேணாம என மனது ஊசலாடியது.

மெலிதாக தடுமாற்றத்தோடு, மெதுவாக வந்தவர், மப்பில் இருக்கிறாரோ எனத் தோன்றியது. நான் பார்த்த காலத்தில் குடியை வெகுவாக சிலாகித்தவர் என்பதும், எப்போதும் பான்பராக் வாசத்தோடு இருப்பவர் என்பதும் நினைவிற்கு வந்தது.

“உங்ககிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கிறேன்” என்றார்

என்ன உதவியாக இருக்கும் எனும் சிந்தனையோடு..

“ம்ம்ம். என்னங்க” என்றேன்

“ஒரு நூறு ரூபா பணம் குடுங்க, காலையில 9 மணிக்கு கொண்டு வந்து தந்துடுறேன்”

“ஆஹா… ஏங்க என்னாச்சு…. ஏன் நூறு ரூவாயிக்கு… இவ்ளோ தூரம்” என்றேன்

வெகு வெகு அரிதாக… மிகப் பழகிய நண்பர்கள் எப்போதாவது அவசரமாக வந்து 50 அல்லது 100 குடுங்க வண்டியில் பெட்ரோல் தீர்ந்துடுச்சு என்று கேட்டதுண்டு. அப்போதெல்லாம் ஒரு துளியும் சந்தேகம் வந்ததில்லை. ஆனால் நேற்று சந்தேகம் வலுத்தது.

“இன்னிக்கு எனக்கு பர்த்டேங்க, 100 ரூவா குடுங்க, காலையில சத்தியமா தந்துடுறேன்”

பிறந்தநாள் என்று சொல்லியும் ஏனோ வாழ்த்தத் தோன்றவில்லை எனக்கு, சிந்தனை அவரையும் மதுவையும் குறித்தே உழன்று கொண்டிருந்தது.

“எங்கிருந்து வர்றீங்க, இப்ப?”

“அக்கா வீட்ல இருந்து வர்றேங்க” என ஒரு பகுதியைச் சொன்னார்.

அக்கா வீடு இருப்பதாகச் சொல்லும் பகுதியிலிருந்து, அவர்கள் நிறுவனம் இருந்த பகுதியைவிட என்னைச் சந்திக்க வந்திருப்பது கூடுதல் தொலைவும் கூட.

”சரிங்க…. உங்க கடை அங்கிருந்து பக்கம்தானே, ஏன் இவ்ளோ தூரம்” என கொஞ்சம் ஆச்சரியத்துடன் கேட்டேன்

“இல்லீங்க…. சரிங்க…. 50 ரூபா குடுங்க போதும், காலையில் தந்துடுறேன்”

“பணம் இல்லைங்ளே… இப்பத்தானே ஒருத்தருக்கு கொடுத்து அனுப்பினேன்” என்று சமாளித்தேன்

“அய்யய்யோ.. உங்கள நம்பித்தான்… இவ்ள தூரம் வந்தேன், எப்படியாச்சும் குடுங்க” என்றார்

“நிஜமா இல்லீங்க, இப்பத்தான் ஒரு பில்லுக்கு சுத்தமா பொறுக்கிக் கொடுத்தேன்”

“இல்லீங்க, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது, எப்படியாச்சும் குடுங்க” என்றார்

“எப்படி வந்தீங்க… வண்டி இல்லைனா சொல்லுங்க… உங்க கடையில வேணா விடுறேன்” என்றேன்

“சரி… ஒரு 35 ரூபாயாச்சும் குடுங்க… ப்ளீஸ்….”

“நிஜமா இல்லீங்க”

”என் பர்த்டேங்க இன்னிக்கு, உங்களை நம்பித்தான் வந்திருக்கேன் எப்படியாச்சும் குடுங்க:” என அடம்பிடிக்க ஆரம்பித்தார்.

“சரிங்க… 35 ரூபாய வெச்சு, பர்த்டே-க்கு என்ன பண்ணப்போறீங்க” என்றேன்

”அப்பப்ப ஹான்ஸ் போடுவங்க …. ஹான்ஸ் வாங்கக் கூட காசில்ல… நீங்க 35 ரூபா எப்படியாச்சும் குடுங்க” எனத் தொடர்ந்தார்.

அந்த அடம் கொஞ்சம் எரிச்சலை உண்டாக்கியது. இல்லையெனும் மறுப்பைத் தீவிரமாக்கியது.

ஒருவழியாக எழுந்து சென்றார்.

”கொடுத்திருக்கலாமோ?” ”ஏன் கொடுக்க வேண்டும்?” என மனது உழன்று கொண்டேயிருந்தது. பின்னர் மறந்து போனேன்.

காலை அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன், நேற்று அவர் அமர்ந்திருந்த நாற்காலியைப் பார்த்தவுடன் ”அந்த 35 ரூபாய்” நினைவுக்கு வந்தது.

அந்த நிறுவனத்தோடு தொடர்பிலிருந்த நண்பரை அழைத்து

“இந்த மாதிரி…. ******* ல இருந்து அவர் வந்தார்” என்றவுடன்

“வந்து காசு எதும் கேட்டாரா? பயங்கரமான ட்ரிங்ஸ்ங்க அவரு” என்றார் நண்பர்.

நடந்த கதையைச் சொன்னேன். குடியால் அந்த நிறுவனத்தில் அவர் இல்லையென்றும், வேறு பக்கம் வேலைக்குச் செல்வதாகவும், வேலைக்கும் ஒழுங்காகச் செல்வதில்லையென்றும் நண்பர் தொடர்ந்தார்.

மீறிய குடியின் பொருட்டு வேலை, தொழில் சிதைந்து, குடிப்பதற்காக சிறிய தொகை கேட்டு வரும் ஆட்கள் குறித்துப் பட்டியலிட்டார் நண்பர். இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றும் நபர், அம்மாவின் மருத்துவச்செலவுக்கு 300 ரூபாய் வேண்டுமெனக் கேட்டு வர, அந்த நிறுனத்தின் உரிமையாளரை இவர் போனில் அழைக்க... அவர் அந்த பணியாளார் ஊர் முழுக்க காசு வாங்கிய கதையைச் சொல்லி எச்சரித்ததையும் கூறினார்.

நான் தெளிந்தேன்.

கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு என்னைச் சந்தித்து அவர் பணம் கேட்ட தீவிரம், திடம் குறித்து யோசிக்கையில்…. இது போன்ற தீவிரங்கள், பணத்திற்காக ஒரு குற்றத்தை வெகு எளிதாகச் செய்யக்கூட தயங்காதோ எனவும் தோன்றியது. நேற்று அந்த 35 ரூபாயைப் பெற்றிட வேறு என்ன செய்திருப்பாராக இருக்கும் எனவும் யோசிக்க முயன்றது மனம்.

மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தேன்.

-0-


கீச்சுகள் - 22


கேட்க ஆரம்பித்தால் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள் என்பது கேட்ட பிறகுதான் தெரிகிறது!

*

அவர்களாய் உணராமல் அறிவுரையால் திருந்துவதாக இருந்தால், சிகரெட்டை அருங்காட்சியகத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கும்.

*

பெரும்பாலான சண்டைகளில், ஆரம்பம் எதுவெனத் தெரியாமலே, பாதியில் நுழைந்து கருத்து சொல்லி ஆதரிக்கிறார்கள்/எதிர்க்கிறார்கள் #எதாச்சும் பண்ணனும்யா

*

மியான்மரில் ஆங்சான் சூகியை சந்தித்த மன்மோகன், நானும் வீட்டுச்சிறை மாதிரி ஒரு விதிச்சிறையில் இருக்கிறேன்  என்பதை சைகையால் சொல்லியிருப்பாரா?

*

ஒவ்வொரு மனித மனத்திற்குள்ளும் எத்தனையெத்தனை உளச்சிக்கல்கள், போராட்டங்கள். மனித மனம் மீண்டும் மனிதனாக பிறக்க விரும்புமா என்ன?

*

இந்தக் கணம் மனம் செய்ய விரும்புவதை, ’அவசியம்தானா?’ என்று கேள்வி கேட்கத் துணிந்தவன் முன்னேறுவான்!

*

கச்சா எண்ணை ஏறுது, $ ஏறுதுனு பெட்ரோல் விலை ஏத்துற கூட்டுக் களவாணிங்க, ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில வரியையும் கூடவே ஏன் ஏத்துறாங்க?

*

பிரபலம்ங்கிற வார்த்தையைக் கண்டுபிடிச்சவன் ’பிரபலம்’ ஆனானோ இல்லையோ, Problemஆ நினைக்கிற ஆளையெல்லாம் பிரபலம்னே கொல்றாங்கய்யா #இணைய வசை மொழி

*

”நீயா நானா” நிகழ்ச்சியில் கோபிநாத் ’கோட்’ அணிவதும்கூட ஒருவித போலி கௌரத்திற்காகத்தானேனு கோபிநாத் கிட்டே யாராச்சும் கேட்டாங்களா?

*

கறை படுத்தப்பட்டேனே தவிர கறை படியவில்லை - நித்தி
# பெரிய கவிஞரு இவரு, எதுகை மோனையில பேசுறாராம்!

*

நறுமணத்தையும், நாற்றத்தையும் உலகம் முழுக்கச் சுமப்பது ஒரே காற்றுதான்!

*

காவிரி ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் - கி. வீரமணி # நீங்க முதல்ல உங்க வீடு வாசலை கூட்டுங்க பாஸ்!

*
ஒபாமாவால் அதிபராக முடியுமெனில் என்னால் ஜனாதிபதி ஆக முடியாதா? - சங்மா # அண்ணே அவரு எட்டாங்கிளாஸ் பாஸ், நீங்க பத்தாங்கிளாஸ் ஃபெயில்ண்ணே!

*

திண்ணைகளை ஒழித்துவிட்டு, எங்கே போய் சகமனிதனோடு இணக்கத்தைப் பெற்றுவிடப் போகிறோம்?

*

”தாமதமாகும் திருமணம்” பரிகார பூஜைக்கு அழைத்து செல்கிறது தமிழக சுற்றுலாத்துறை # இதுக்கு பொண்ணு மாப்ளை பார்த்துக்கொடுக்கிற வேலை செய்யலாம்ல!

*

ஆட்கொள்வதைக் கொல்!

*

“குடி குடியைக்கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக்கெடுக்கும்” உலகம் கத்துக்கவேண்டிய ”டாஸ்மாக் பலகையிலேயே எழுதுற சூப்பர் சாணக்கியத்தனம்”

*

எந்திரன் பட மொத்த வசூல் ரூ.179 கோடி. தமிழகத்தில் ஒரு வருடம் மணல் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் லாபம் ரூ.194 கோடி என நினைக்கிறேன்.

*

கோட்டக் மகேந்திரா பேங்ல இருந்து வருட வருடம் வருமானம் வர்ற திட்டம், 2 நிமிசம் பேசலாங்ளா? - போனில் #இந்தமாதிரி நல்லவங்களாலதான் மழை பெய்யுது

*

சாலையில் யாரோ ‘டேய்’னு கூப்பிட்டா நம்மையோனு திரும்பிப்பார்க்கிறமாதிரி இணையத்துல யாரோ யாரையோ திட்டுனா நம்மையோனு நிறைப்பேர் நினைக்கிறோம்

*

சுவையாக இருப்பதுதான் திகட்டும்!

*

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி மாதிரி, நானும் பைக் நிறுத்திட்டு, வரலாறுல இடம் பிடிச்சுடலாமானு யோசிக்கிறேன் #தேர் பெட்ரோல்ல ஓடியிருக்குமோ?

*

எல்லா நேரங்களிலும் அழுகைக்கான காரணம் வெற்றியோ தோல்வியோ அல்ல... அழுகை ஒருவித தேவை!

*

பெட்ரோல் தான் ஏறிடுச்சுல்ல, பேசாம ஈமுக் கோழி ”டூ லெக்கர்” விற்பனை மையம் ஆரம்பிச்சுடலாம்னு நினைக்கிறேன்

*

மத்திய அரசு மக்கள் காதில் பூ சுற்றுகிறது - கேப்டன் # பூ விக்கிற விலையில, இவரு வேற காமடி பண்றாரு. ஏற்கனவே அவங்க நார் சுத்துறது தெரியாம!

*

ட்ராபிக் ராமசாமியும் ’நித்தி’யை ஆதரிக்கிறாராம். # இந்த பயபுள்ள எதும் வசிய மருந்து வெச்சிருக்கானோ!?

*

நமக்கே இப்படி வேர்க்குதே, பாவம் நம்மைக் கொளுத்துற சூரியனுக்கு எப்படி வேர்க்கும்...!? # வெயில்ல என்னென்னவோ யோசிக்க தோணுது

*

25 வயது அமெரிக்க விலைமாது பெண்ணுக்கு, இந்திய தொழிலதிபர்கள் (1 hr) தரும் காசு ரூ.5 லட்சம் # யாருய்யா இந்தியா ஏழைகள் நிறைந்த நாடுனு சொன்னது

*

”ஏன்டா பெட்ரோல் விலை ஏத்துனே”னு வீதியில எறங்கிச் சண்டை போடாம, பணம் மிச்சம்னு பெட்ரோல் பங்க்ல முட்டி மோதுறவங்களை என்ன சொல்ல? #நாம வல்லரசு :(

*

மின் அரட்டையில், அலைபேசியில், குறுந்தகவல்களில் நாம் புடுங்கும் ஆணிகளில் எத்தனை சதவிகிதம் தேவையான ஆணிகள்?

*

குழந்தைகள் குழந்தைத்தனமாய் செலுத்தும் தாயன்புக்கு முன்பு, தாயே கூட சில நேரங்களில் தோற்றுப்போய்விடுவாள்

*

டாஸ்மாக்-ல் HOBSONS-XR பிராந்தி குடிப்பது எப்படி என விளக்கம் # வர்ற பள்ளிக்கூட பாடத்திட்டத்திலயும் சேர்த்துட்டா நாடு உடனே உருப்பட்டுடும் :(

*

மாசு படாமல் இருப்பது ”ஊழல்” மட்டுமே!

*

ஒரு பையனோ பொண்ணோ கஷ்டப்பட்டு(!) படிச்சு முதல் மார்க் வாங்குறதால அவங்க குடும்பம் மட்டும் முன்னேறுறதில்ல, அவங்க படிச்ச பள்ளிக்கூடமும்தான்!

*

ரிசல்டு வரும் தினங்களில் கோடீஸ்வரர் ஆவது லாட்டரி வாங்கியோரும், முதலிடங்களைப் பிடிக்கும் பள்ளி நிர்வாகிகளும்தான்!

*

கொதிக்கிற  வெயிலில் வாடி வதங்கி, கருகி, நொந்து புலம்பியோரில், 1% கூட கோடை மழையில் நனைய முன் வருவதில்லை!

*

பாஸ் மார்க் 35-னு தீர்மானித்த புண்ணியவான், 40 மார்க் கூட எடுக்க முடியாத நம்ம இனத்தைச் சார்ந்த ஆளாத்தான் இருந்திருப்பார் # என் இனமடா நீ!

*

அனுமதிக்கப்படும் அளவிற்கான தவறு / குற்றமே ’நெளிவு சுழிவு’ என வகைப் படுத்தப்படுகிறது.

*
பிரதமராக மக்கள் ஆதரவு: மோடி 17%, மன்மோகன் 16%, ராகுல் 13%, சோனியா 9% மட்டுமே # இதையும் 16+13+9 = 38%னு அபிசேக் சிங்வி பேசுவாரே!

*

செல்போனின் மற்றுமொரு சாதனை குபீர் இசை வெறியர்களை உருவாக்கியது # பேருந்து பின் படிக்கட்டருகே 7 பேராச்சும் செல்போன்ல பாட்டு ஒலி பரப்புறாங்க

*

திருச்சி ராமஜெயம் கொலைக் குற்றவாளிகளை ’துப்பறியும் சாம்பு’தான் வந்து கண்டு பிடிக்கணும் போல் இருக்கு!

*

சோலார் வாட்டர் ஹீட்டர் கண்டுபிடிப்பை ’மிஸ்டர். சூரியன்’ தப்பா புரிஞ்சுட்டார் போல, எந்த பைப் திறந்தாலும் ஹீட்டர் இல்லாமலே தண்ணி கொதிக்குது

*

கிருமிநாசினியான சானம், அனைவர் கையிலும் படவேண்டும் என்று அம்மா மாடு வழங்கியுள்ளார் - அதிமுக MLA # சட்டமன்றத்திலும் மாடு வாங்கிக் கட்டிவைங்க

*

ஞாயிற்றுக்கிழமை காலையில் குளிப்பதற்கும் விடுப்பு விட்டால், நீயும் என் நண்பனே! # அட ச்ச்சே! எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு

*

மப்புல போறவன் மானாவாரியாதான் போவான், மாநிலத்துக்கு படியளக்குற  மவராசன்ல, மவனே மானம் போவக்கூடாதுனா மருவாதியா நீ ஒதுங்கிப்போ #எனக்கு நானே

*

எங்களை அதிமுக ஆதரிக்கிறது - நித்தியானந்தா # யோவ், உனக்கு தில் இருந்தா “என் ஆதரவில்தான் அதிமுக இருக்கு’னு சொல்லிப்பாருய்யா! /உசுப்பேத்து/

*
சிக்னல்களில் ஓரிரு நிமிடங்கள் நிற்க தடுமாறும் நம் நிலையைவிட, தகிக்கும் அனலில் தவிக்கும் போக்குவரத்துக் காவலர் நிலமை பலமடங்கு பரிதாபம் :(

*

”ஊட்ல பொண்டாட்டி இல்லனா, அன்னிக்கு ஊறுகாய் கூட அமிர்தம் தாண்டா“ எனக்கு நானே சொன்னது # வேற வழி

*

புரிந்து கொண்டதைவிட புரிந்து கொள்ளாதாது ஏராளம் #பொதுவா

*

நித்தியானந்தாவோடு ரஞ்சிதா இருக்கிறார் - ஜெயேந்திரர் / 1987ல் ஜெயேந்திரர் ஒரு பெண்ணோடு ஓடிப்போனவர் - மதுரை ஆதீனம் # சபாஷ் சரியான போட்டி!

*

கசங்கிய காகிதத்தில் ஓராண்டு சாதனைனு 25 கோடிக்கு விளம்பரம் செய்ததுக்கு பதிலா ’ஓராண்டு சாதனை புற்றுநோய் மருத்துவமனை”னு ஒண்ணு கட்டியிருக்கலாம்

*

தாகத்தில் தண்ணீர் குடிக்க நினைக்கையில், தண்ணீர்க் குடுவையை அருகில் வைத்து நகரும் மகள் அளவில்லாத ஆனந்தத்தைப் புகட்டிவிட்டுச் செல்கிறாள்.

*



போட்டி போட்டு மது அருந்தியதில் பவானியில் இருவர் சாவு # அரசுக்கு அதிக வரு’மானத்தை’ ஈந்திட முனைந்த தியாகிகளுக்கு அரசு சிலை வைக்குமா?

*

பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர ராஜீவ்காந்தி விரும்பினார் -கருணாநிதி #ஆதீனம் கனவுல சிவன் வரப்போ, இவரு கனவுல ராஜீவ் வரமாட்டாரா?

*