நாங்க யாருன்னு...

அப்போது நான் சுயமுன்னேற்ற வகுப்பு பயிற்சியாளராகவும் பயிற்சியளித்துக் கொண்டிருந்தேன். ஒரு வருடம் தமிழகம் முழுதும் இருக்கும் மகளிர் காவல் துறையினர்க்கு பயிற்சி வகுப்பெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எங்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் மகளிர் காவல் பிரிவினர், அதாவது கிரேட் 1, 2 காவலர்கள், எழுத்தர், தலைமைக் காவலர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள். ஒவ்வொரு வாரமும் இவர்களில் எல்லா நிலைகளிலும் இருந்து சுமார் நூறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அசோக் நகர் காவலர் பயிற்சி கல்லூரியில் பயிற்சியில் கலந்துகொள்ள அனுப்பப்பட்டனர்.

அதற்காக ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை சென்னை அசோக் நகர் காவலர் பயிற்சி கல்லூரியில் வகுப்பெடுக்க வருவது வழக்கம். அப்படி ஒரு புதன்கிழமை, காவலர் பயிற்சி கல்லூரி முதல்வரிடம் பயிற்சி அறையின் இருக்கைகளை வேறு மாதிரி அமைத்துத் தருமாறு கேட்டோம்.

அடுத்த சில நிமிடங்களில் காக்கி அரைக்கால் சட்டையும், வெள்ளை பனியனுமாய் சில இளைஞர்கள் தடதடத்து வந்தனர். பரபரவென நாற்காலிகளை அகற்றி, மற்றொரு அறையில் இருந்து வேறு விதமான நாற்காலிகளை போட்டு நாங்கள் கேட்ட மாதிரி அமைத்துக் கொடுத்தனர்.

அந்த இளைஞர்களில் ஒரு முகம் மிகப் பழகியதாக இருந்தது. ஒட்ட வெட்டப் பட்ட முடி, பனியன், அரைக்கால் சட்டை என சட்டென அடையாளம் தெரியவில்லை. நான் உற்றுப் பார்த்த போது என்னைப் பார்த்து புன்னகைத்தார் அவர், நானும் புன்னகைத்தேன்.

சற்று நெருங்கி வந்து “என்னடா... மாப்ள, தெரியலையா?” என்ற போது

தெரிந்து விட்டது அது... அவன்... குமணன். நன்கு பழக்கப்பட்ட நண்பன். ஆனால் பார்த்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருக்கும், அதே சமயம் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை.

“ஏய் குமணனா... என்னடா இங்க... ட்ரெயினிங்லே இருக்கியா?”

“எஸ்.ஐ ட்ரெயினிங்ல இருக்கேன்டா மாப்ள” என்றான்.

அந்த இருக்கைகளை எடுத்துப் போட்டவர்கள் அனைவரும் உதவி ஆய்வாளருக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருப்பவர்கள் என்பது அப்போதுதான் புரிந்தது,,

பரஸ்பரம் சிறிது நேரம் உரையாடி விட்டு கிளம்பும் போது உதிர்த்த வார்த்தைகள் தான் என்னவோ செய்தது.

“என்னடா... இவன் சேர் எல்லாம் எடுத்துப் போடறானேனு நினைச்சியா, எப்படியிருந்தாலும் நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” என்றான்...

மிகக் கடுமையான காவல் அதிகாரிகளைப் பார்க்கும் போது, கேள்விப்படும் போது ஏனோ குமணன் என் நினைவிற்கு வருவது தவிர்க்க முடியாததாகிறது.

இலவசம்


திருடன் ஒரு வீட்டில் திருடுவதற்காக வருகிறான், வீட்டில் யாரும் இல்லை, நாய் மட்டுமே இருக்கிறது. நாய் திருடனையும், திருடன் நாயையும் மாறிமாறிப் பார்க்கிறார்கள். திருடன் யோசிக்கிறான் “குரைக்கிற நாய் கடிக்காது, முறைக்கிற நாய் கடிக்காமல் இருக்காது”. நாய் குரைக்காமல் முறைக்கிறது, தான் மறைத்து வைத்திருந்த வருத்த கோழிக் கறித் துண்டை போடுகிறான்.

நாய் கோழிக்கறித் துண்டை முகர்ந்து பார்த்துவிட்டு, அவன் மேல் பாய்ந்தது. இருவரும் கட்டிப்பிடித்து உருண்டபோது...

“நாயே... நானும் பார்த்தேன், நீயும் பார்த்தே அதோட நிறுத்தியிருக்கலாம். நீ எங்கே விழுந்து கடிச்சிருவியோன்னு கோழிக்கறித்துண்டை போட்டேன். மோந்து பார்த்தே தின்றிருக்கலாம் அல்லது திங்காம இருந்திருக்கலாம் அது உன் இஷ்டம், ஆனால் மோந்து பார்த்துட்டு மேல விழுந்து கடிக்கிறியே...... இது நியாயமா?” என்று திருடன் கேட்கிறான்.

அப்போது “எனக்கு லஞ்சமாக, எனக்கு இலவசமாக ஒரு கோழிக்கறித் துண்டை தருகிற வரையில் நீ மனிதனா திருடனா என என்னால் தீர்மானிக்க முடியவில்லை. எப்போது நீ லஞ்சமாக, இலவசமாக ஒரு கோழிக் கறித்துண்டு போட்டாயோ அப்போது தீர்மானித்துவிட்டேன் நீ திருடன். இனியும் உன்னை விட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்து கடிக்கிறேன்” என்று நாய் சொல்கிறது.

நூறு வருடங்களுக்கு முன் மாமேதை லியோ டால்ஸ்டாய் குழந்தைகளுக்காக எழுதிய கதை. (பாரதிகிருஷ்ணகுமார் அவர்களின் உரையில் கேட்ட கதை)


அதன் பின்...
திருடன்(ர்கள்) ஒரு போதும் மாறவேயில்லை.

நாய்கள் மாறிவிட்டன...

நாய்கள் மட்டுமா........!!!???



----------------------------------------------------------------

ஒட்டடை படிந்து ஓரமாய்

உலகின் மிக அழகான ஓவியம் அவரவர் முகமே. யாரும் இல்லாத நேரத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி கொடுக்கப்பட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வித்தியாசமான கோணங்களில் நம் முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அதே போல் மிக அழகான சொல் அவரவர் பெயரே.

ஒரு முறை எங்களிடம் திருமணப் பத்திரிக்கை அச்சிட வந்த ஒரு அரசியல் கட்சிக்காரர் பத்திரிக்கையின் ஒரு முக்கிய இடத்தில்

“அய்யா படம் வரணுங்க”னு சொல்லிட்டு போயிட்டார்,

நாங்களும் அவரோட அய்யா (அப்பா) படத்தை கொண்டுவந்து தருவார் போல இருக்குனு கொஞ்சம் மெத்தனாம இருந்துட்டோம், அடுத்த நாள் வந்து கேட்டபோது

“இன்னும் உங்க அய்யா படம் தரல, அது கொடுத்தீங்கனா வேலை முடிஞ்சிடும்னு” எதேச்சையாகச் நம்ம வடிவமைப்பாளர் சொல்ல, உடன் வந்த அல்லக்கைக்கு வந்ததே கோபம்

“என்ன... அய்யா படம் இல்லாம பிரஸ் நடத்தறீங்களா”னு எகிர,

“இவரோட அய்யா படத்த நாங்க எதுக்குங்க வச்சிருக்கோம்னு” நம்மாளு வெள்ளந்தியாச் சொல்ல

அவங்க கூட புதுசா சேர்ந்திருந்த கைத்தடி ஒன்னு எக்கச்சக்கமாக எகிறி “என்னது வட்டத்தோட அய்யாவா, நாங்க இந்த தமிழ்நாட்டோட அய்யாவச் சொல்றோம்” னாரு

அப்பப் போயி “அதாருங்க வட்டம்” னு இன்னொரு கேள்வி கேட்கத் தோனியது கூடவே புரிஞ்சு போச்சு நம்ம கட்டம் சரியில்லைனு.

அந்த தொண்டர் படையில் இருந்த ஒரு புண்ணியவான் கொஞ்சமா விளக்கினார், வட்டம்னா என்ன, மாவட்டம்னா என்ன, அய்யானா என்னவென்று.

அப்பவும் கொஞ்சம் அப்பாவியா மனசுக்குள்ளேயே கேட்டுக்கிட்டான் நம்ம ஆளு “ஏங்க இவங்களுக்கெல்லாம் உண்மையாவே ஒரு பேரு இருக்கும்தானேனு”

பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது, பல சமயங்களில் மிகுந்த சுவாரசியமான ஒன்று. நேரம், நாள், நட்சத்திரம், நியூமராலாஜி, இன்னோரு வெங்காயம் நேமாலாஜி எல்லாம் பார்த்து வைக்கும் பெயரை, பல நேரங்களில் பெயர் சொல்லி விளிப்பது மரியாதைக் குறைவான ஒன்றாக கருதப்படுவது எதனால்? எங்கே இந்த விதி பிறந்தது.

கலைஞர், அம்மா, அய்யா, சின்ன அய்யா, கேப்டன் என எல்லோருக்கும் வைக்கப்பட்ட பெயருக்குப் பதில் இந்த வார்த்தைகளால் மட்டுமே அழைக்கப்படுவது மட்டும்தான் மரியாதையான ஒன்றா? அதுவும் இவர்களின் சார்பு தொலைக் காட்சிகளில் இவர்களின் உண்மையான பெயர்கள் ஒருபோதும் உச்சரிக்கப் படுவதேயில்லை.

பெயர் சொல்லி அழைப்பது மிகப் பெரிய குற்றம் என்பது போலவே தலைவர்களும், அவர்களைச் சுற்றியுள்ள தொண்டர்களும் முழுக்க முழுக்க மாறியது எதனால்? முக்கியக் காரணம் வயது, அந்தஸ்து குறைவானர்கள் நம்மை பெயர் சொல்லி அழைத்தாலே மரியாதைக் குறைவாக எண்ணுவது தமிழகத்தில் அதிகம் என்று நினைக்கிறேன். உண்மையான பெயர் சொல்லி அழைப்பது எதன் அடிப்படையில் மரியாதைக் குறைவாக இருக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

அதாவது வேட்டி அல்லது கோவணம் கட்டியவர் டவுசர் போட்டவரையும், டவுசர் போட்டவர் பேண்ட் போட்டவரையும், பேண்ட் போட்டவர் பேண்ட் போட்டு சட்டையை பேண்டில் இன் செய்திருப்பவரையும் “சார்” என்றே அழைக்கின்றனர். தம்மை விட அந்தஸ்தில், படிப்பில் உயர்வாய் இருப்பவர்களை யாரும் அவர்களுடைய பெயர்களைச் சொல்லி அடையாளப் படுத்த பெரிதும் தயங்குகின்றனர்.

கிராமங்களில் பெயர் சொல்லி அழைப்பதைவிட சாதியைச் சொல்லி அழைக்கும் அசிங்கமே கௌரவமாக வேறு பார்க்கப்படுகிறது.

சிலகாலம் துபாயில் (விவேகானந்தர் தெருவில் இருந்தவரானு கேட்கக்கூடாது) இருந்து திரும்பிய நண்பர், “இங்கு மட்டும்தான் யாரப் பார்த்தாலும் சார்... சார்னு கூப்பிடறோம், அங்கெல்லாம் யாராக இருந்தாலும் பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்கள்” என்று சொன்னபோது எனக்கும் “அட ஆமாம்ல” என்றே தோன்றியது.

அதன்பிறகு இப்பொழுதெல்லாம் வயதில் பெரியவர்களை மிக எளிதாக அவர்கள் பெயரோடு அண்ணா என்றோ, அக்கா என்றோ அழைத்துக் கொள்வது பழகிப்போயிருக்கிறது. நீண்ட நாட்களாக அழைத்துவிட்ட காரணத்தால், சிலரை மட்டும் “சார்” என்று அழைப்பதிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. எல்லோரையும் வெறுமென பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் முழுதாய் வரவேயில்லை.

பல நேரங்களில், பல இடங்களில் அழைக்கப்படாமலே இருக்கும் பெயர்கள் ஒட்டடை படிந்து ஓரமாய் கிடக்கிறது, என் பெயரும் உட்பட...

-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

காக்கை கூட்டமும் கண்தானமும்


இன்னும் நகரத்து சாயல் அதிகம் படியாத கிராமம், நகரத்தில் மகன் வீட்டிற்கு சென்ற பாட்டி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதால், நகரத்தில் அடக்கம் செய்ய விருப்பமில்லாமல், தன் சொந்த கிராமத்திற்கே உடலைக் கொண்டு வர முடிவு செய்திருந்தார்கள்.

இறந்தவுடன் தகவல் வந்தது கண்தானம் செய்ய விரும்புவதாக. உடனே கண்வங்கி பிரதிநிதிகளுடன் விரைந்து சென்றோம். இன்னும் உடல் வந்து சேரவில்லை. இரவு பதினொரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது, கிட்டத்தட்ட நூறு பேருக்கும் மேல் அந்த கிராமத்தைச் சார்ந்த மக்கள் அங்கே குழுமியிருந்தனர். பத்து ஆண்டுகளாக நகரத்து வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுப்போன மனதிற்கு ஆச்சரியமாக இருந்தது.

சில இளவட்டங்கள் சட சடவென அந்த வீட்டை சுத்தம் செய்யவும்,

“பந்தல் காரனுக்கு சொல்லப்பா”

“இருபது லிட்டர் பால் வேணும்னு சொல்லீறு”

“ஏப்பா.. லைட்டுக்கு சொல்லீட்டீங்களா?”

“சமையக்காரனுக்கு சொல்லிட்டேன், காத்தால டிபனுக்கு”

என உரிமையோடு ஆளுக்கு ஒரு வேலையாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர்.

நாங்கள் மட்டும் அந்த சூழலுக்கு கொஞ்சம் புதுமையாக தெரிந்தோம். “யார் என” விசாரித்து “கண் தானம் பெற வந்திருக்கிறோம்” என்றவுடன், எங்களைச் சுற்றி ஒரு கூட்டம் நிற்பதும், தங்களுக்குள் மெலிதாக பேசுவதுமாக இருந்தனர்.

சிறிது நேரத்தில் பாட்டியின் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போது கிட்டத்தட்ட இருநூறு பேருக்கு மேல் ஆண்களும், பெண்களுமாக கூட்டம் பிதுங்கியது. ஒருவழியாக உடலை வீட்டினுள் வைத்து சில பூசைகள் செய்த பின் கண்களை எடுக்க அனுமதித்தனர். செவிலியர்கள் தங்கள் சீருடையுடன் செல்வதைப் பார்த்ததும் எல்லோர் பார்வையிலும் ஒரு ஆச்சரிய மின்னல்

“அட கண்ண தானம் பண்றாங்கப்பா”

“அட நாளைக்கு சாம்பலா போற ஆயா கண்ணு, இன்னொருத்தருக்குத்தான் பிரயோசனப்பட்டுட்டு போகட்டுமே”

“ஏனுங்க நான் எம்பட கண்ண தானம் பண்றதுன்னா என்ன பண்ணனுங்க”

“ஏ... மாமா அவசரப்படறே... நீ செத்துப்போனா நாஞ் சொல்லியுடறேன் அவிகளுக்கு”

இப்படி ஆச்சரியமும், கொஞ்சம் நகைப்புமாக கூட்டம் கலகலத்தது.

வயதானவர்களின் மரணம் ஒரு விடுதலையாக பார்க்கப்படுகிறது. கீழே விழுந்தோ அல்லது நோய் கண்டு கட்டிலில் கிடந்து சிரமப்படாமல் வரும் மரணம் கடவுளின் பரிசாக, நல்ல சாவாக பார்க்கப்படுகிறது.

“ஆத்தாவுக்கு நல்ல சாவுப்பா... கண்ண வேற கொடுத்திட்டுப் போகுது பாரேன்”
இது மாதிரியான பேச்சுகள் மெலிதாய் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

ஒரு வழியாக கண்களை தானம் எடுத்துக்கொண்டு புறப்படும் போது,

“சார்... உங்க செல் நெம்பர் கொடுத்துட்டு போங்க, ஊர்ல இருக்கிற, எல்லாம் பெருசுக கண்ணையும் புடுங்கிக் கொடுத்திடறோம், முதல்ல எங்க பெரிய பாட்டி கண்ணுதான்” ஒரு குறும்பு பிடித்த இளசு

“அய்யோ... எங் கண்ண குடுக்கமாட்டேன், மேல் லோவத்துக்குப் போன கண்ணு தெரியவேணுமில்ல” மறுக்கும் பாட்டி

“அட கிறுக்குப் புடிச்ச கெழவி, செத்தப்பறம்... நீ என்ன சொல்றது, உம் பசவ புள்ளைவ செரின்னு சொன்னா, அவிங்க வந்து எடுத்துட்டு போயிருவாங்க, நீ கண்ணுக் குடுத்தீனா... உம்பட பிள்ள குட்டிவீளுக்கு புண்ணியஞ் சேரும்” அதே வயதொத்த பாட்டி உரிமையாகச் சொல்ல...

நாங்கள் கிளம்பும் போது கிட்டத்தட்ட நள்ளிரவு பனிரென்டு மணியிருக்கும், கூட்டம் வந்து கொண்டேயிருந்தது. பந்தல் போட குழிகள் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. நாற்காலிகள் பரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.

மரணம் நிகழ்ந்த வீடு, பரபரப்பாக இருந்தது, விடிய விடிய அந்த கூட்டம் கலைவதாக தெரியவில்லை. எண்ணற்ற கிண்டல்கள், நகைப்புகள், கதைகள் விடிய விடிய பேசித் தீர்க்கப்படும். துக்க நிகழ்வுகளை தங்கள் வீட்டு துக்கமாக பார்த்து, கலந்து கொண்டு உடன் இருக்கும் அந்த கிராமத்து மனிதர்களின் சீண்டலும், விளையாட்டுப் பேச்சும் மனதிற்குள் மெலிதாக இனித்தது.

படித்தவர்கள் மத்தியிலேயே கண்தானத்திற்கு பல சொத்தை மறுப்புக் காரணங்கள் இருக்கும் நிலையில் “வீணாகப் போவது இன்னொருவருக்கு பயன்படட்டுமே” அல்லது “புண்ணியமா இருக்கட்டுமே” என்ற எண்ணத்தில் கண்தானம் கொடுக்க ஆர்வமாக இருக்கும் கிராமத்து மக்கள் வணக்கத்திற்குரியவர்கள்

(கடந்த ஆண்டு முதல் எங்கள் அரிமா சங்கத்தின் கண் தானக் குழுத் தலைவராக இது வரை 68 நபர்களின் கண்களை தானமாக பெற்றுக் கொடுத்திருக்கிறேன். இதில் 55க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்ட கண்கள் நகரத்து வாசனை இன்னும் அதிகம் படராத உள்ளடங்கிய கிராமங்களிலிருந்துதான்)


அந்த கிராமத்து மக்களைப் பார்த்தபோது, உணவு கிடப்பதைக் கண்டோ அல்லது ஒரு காகம் இறந்து கிடப்பதைக் கண்டோ, ஒரு காகம் கரைந்தவுடனே பலநூறு காக்கைகள் அந்த இடத்தில் சட்டென ஒன்று கூடுவதுபோல் உணர்ந்தேன்.


விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு உச்சமான அலைபேசியின் மின் காந்த அலைகளால் நகர்ப்புறங்களில் காக்கைகள் அற்றுப் போய்விட்டதாக சமீபத்தில் படித்ததாக நினைவு..............
காக்கைகள் மட்டுமா...!!!




-------------------------------------------------------------------------


இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

மெலிதாய் கிளர்ந்து மெதுவாய் சுரண்டி



கிறக்கமாய் கசிய விட்ட காதலும்
மறந்து விட்டுப்போன உன் வாசமும்
வெற்றிலைக் கொடியாய் படர்ந்து
என்னை இறுக்கிச் சுற்றும் பரவசம்...

சொடுக்கெடுக்கும் என் விரல்களின்
நகக்கண்ணில் உறங்கும் துளி அழுக்கை
மெலிதாய் கிளர்ந்து மெதுவாய் சுரண்டி
உன் சுண்டு விரல் நகம் ஊட்டும் சிலிர்ப்பு...

ரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில்
என் தோள் இறுகப்பற்றி நெருங்கி அமர்ந்து
எதிர்காற்றில் நீ உதிர்த்ததில் எஞ்சியிருக்கும்
இரண்டொரு வார்த்தைகள் காது புகும் சுகம்...

கரப் பேருந்தின் சன்னலோரத்திலிருந்து
நளினமாய் சப்தமிட்டதை யார்யாரோ பார்க்க
எனக்காய் ஆட்டிச்சென்ற கைகளிலிருந்து
சொட்டுச் சொட்டாய் சேகரித்த காதல் துளிகள்...

ன் சிரிப்பில் என்னுயிர் புதிதாய் சுரக்கிறது
உரிமையில் என் இதயம் பெரிதாய் நெகிழ்கிறது
ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் நாட்களாய்
என் ஒவ்வொரு விடியலும் உனக்காய் புலர்கிறது...

கூச மறுக்கும் கோபம்

உங்களுக்கு கோபம் வருமா....?
உங்க‌ளின் முத‌ல் கோப‌ம் நினைவிருக்கிற‌தா?

அப்போது 10 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்த சமயம், அம்மா என்னிடம் ஏதோ வேலை சொல்ல, முதன் முதலாய் சுள்ளென்று கோபத்தை காட்டினேன்.

வந்திருந்தவர்கள் என் கோபத்தை அறுவெறுப்பாக பார்க்கவில்லை, துரதிருஷ்டவசமாக ஆச்சரியமாக பார்த்தார்கள். "ஆஹா இந்த வயசில எப்பிடி கோபம் வ‌ருது பாருங்க" என்ற வார்த்தைகள் நச்சு விதையாய் விழுந்தது. என் கெட்ட நேரம் அது கோபத்திற்கு கிடைத்த வெகுமதியாய் அப்போது தோன்றியது....

நான் வளர, வளர கோபமும் வேகமாய் வளர்ந்தது. ப‌ள்ளிகளில், க‌ல்லூரியில், ப‌ணி புரிந்த‌ இட‌த்தில், தொழிலில்... கோப‌ம் வித‌ வித‌மாய் ந‌ட‌ன‌மாடிய‌து. கோபம் ந‌ட‌ன‌மாடிய‌ ப‌ல‌ மேடைகளில் அழுகிய முட்டையில் அடி வாங்கியதை கோபப்படாமல் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

பொதுவாகவே பெரும்பாலான‌ ம‌னித‌ர்களை அடையாளப் ப‌டுத்தும் போது அவ‌ர் மிகப் பெரிய‌ கோப‌க்காரர் என்று பெருமையாக‌ (!!!???) சுட்டிக் காட்டப்ப‌டுகிறார்கள். “அவ‌ருக்கு ம‌ட்டும் கோப‌ம் வ‌ந்திச்சினா அவ்வ‌ள‌வுதான்” என்ற‌ பெருமையும் கூடுதலாக....

ஒரு க‌ச‌ப்பான‌ உண்மை (ஏன் உண்மை ம‌ட்டும் எப்போதும் க‌ச‌ப்பாக‌வே இருக்கிற‌து) கோப‌த்தை நாம் எல்லாரிட‌த்திலும் காட்ட ‌முடிவ‌தில்லை. கோப‌த்தை யார் எல்லாம் சகித்து கொள்கிறார்க‌ளோ, அவ‌ர்க‌ளிட‌ம் ம‌ட்டும் தான் காட்ட ‌முடிகிற‌து. அது பெற்றவ‌ர்க‌ளாக‌ இருக்க‌லாம், ம‌னைவியாக‌ இருக்க‌லாம், குழ‌ந்தையாக‌ இருக்க‌லாம், கீழே ப‌ணி புரிப‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌லாம்.

கோப‌த்திற்கான எல்லைக‌ள் வியப்பானவை. நாம் யார் மேல் கோபப் படுகிறோமோ, அவர் அதை அவர் எவ்வளவு தூரம் சகித்துக் கொள்கிறாரோ அது வரைக்கும் நம் கோபத்தின் எல்லைக்கோடு நீளும்.

பெரிதும் கோபம் இயலாமையின் வெளிப்பாடாகவே வருவதை கோபம் கொள்ளும் வீரர்கள்(!!!) அனைவருமே அறிவோம், ஆனாலும் கோபம் என்பது வீரமான குணமாக பனிப்புகையாய் மனதிற்குள் படர்ந்திருக்கும். வாழ்க்கையில் நிகழ்ந்த பல தவறுகளின் பின்னால் கோபம் ஒரு நிழல் போல் படர்ந்திருக்கும்.

கோபத்தை காட்டும் பொழுது அதற்காக‌ வெட்கப்பட மறந்து போகிறோம். கோபம் தீயின் நாக்கு போல் அவர்களை தீண்டும் பொழுது சிறிதும் கூச்சப்படாமல் இருக்க முடிகிறது.

முதல் கோபத்திற்கு தவறுதலாய் குதூகலப்பட்ட மனது, கடைசியாய் கோபப் பட்டபோது கூச்சப்படவில்லை.

ரௌத்திரத்திற்கும் கோபத்திற்கும் வெகுதூரம் என்பது நமக்கு தெரிவதில்லை.

புலிகளிடம் நேரிடையாக கோபப்பட முடிவதில்லை... வீட்டில் தயிர்சாதம் தின்று எலி பிடிக்கும் பூனையிடம் மிக எளிதாக கோபத்தைக் காட்டமுடிகிறது.


________________________________________
பொறுப்பி: மீள் இடுகை

தற்காலிகமாக



வறி விழுந்தது தார்க்குச்சி
இனி
எவ்வளவு மெதுவாய் இழுத்தாலும்
அடியில்லை
, குத்தில்லை
மகிழ்ந்து
நடைபோட்டது மாடு

-0-

வ்வொரு பல்லாய் உதிர்கிறது
முதுகுமேல்
தவ்வி கழுத்தில் கடிக்கும்
செல்ல
மகளின் முன் வரிசைப்பல்
முளைக்கும்
வரை வலியில்லை

 

-0-

றண்டு போன சிந்தனைக் காம்புகளை
வருத்திக்
கறந்தாயிற்று வார்த்தைகள் தேடி
சிரிக்கும்
மழலையின் பொக்கைவாயில்
சிதறி
விழுகிறது சிலவரிகள் அழகாக!

-0-

சினிமாவும் மூச்சுத்திணறலும்

ஒரு சினிமா நடிகை விபச்சாரம் செய்ததாக கைது செய்யப் படுகிறார், அதையொட்டி ஒரு பத்திரிக்கை இன்னும் சில நடிகைகளை குறித்து செய்தி வெளியிடுகிறது... அடுத்த அடுத்த நாட்களில் ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதிக்கின்றன. சினிமா நடிகர்களின் சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது, ஆளாளுக்கு வீர வசனம் பேசுகிறார்கள், பத்திரிக்கைகள் இனி சினிமா குறித்து செய்தி வெளியிட மாட்டோம் என அறிக்கை விடுவார்கள் அல்லது விட்டிருப்பார்கள்.. ஒரு மாதிரி அந்த நாடகங்கள் முடிந்து விட்டன.

சரி இதில் புத்திசாலிகள் யார்...

  • வீராவேசமாக சபதமிடும் சினிமாக்காரர்கள்
  • ஊடகங்கள் (பத்திரிக்கை / தொலைக்காட்சி)
  • அரசியல்வாதிகள் (குறிப்பாக ஆளும் கட்சி)

சரி இதில் முட்டாள்கள் யார்...

  • இந்தக் கருமாந்திரங்களையெல்லாம் விரும்பியும், விரும்பாமலும் பார்த்த, காதுகளில் வாங்கிய, இது குறித்துப் பேசிய அல்லது இது குறித்து சிந்தித்த நீங்களும் நானும்...



தங்களிடம் ஆதாரம் இருப்பதாக கூறி செய்தி வெளியிட்ட ஊடகங்களே உங்கள் மனச் சாட்சியைத் (அப்படி ஒன்று இருந்தால்) தொட்டு சொல்லுங்கள், நீங்கள் எப்போதுமே உண்மையின் பக்கம்தான் நிற்கிறீர்களா. நடிகையின் விம்மிய மார்போ, தொடையோ, இடுப்போ இல்லாத அட்டைப்படத்துடனோ அல்லது அவர்களைப் பற்றிய கிசுகிசுவோ இல்லாமல் பத்திரிக்கையை நடத்தும் தைரியம் உங்களிடம் இருக்கிறதா? நடிகை என்றாலும் அவளும் ஒரு பெண்தானே என்ற பார்வை உங்களிடம் ஒரு நாளேனும் இருந்திருக்கிறதா?

ஏதோ ஒரு காலகட்டத்தில் உழைத்த மக்கள், தங்கள் உழைத்த களைப்பை அகற்றிக் கொள்ளத்தானே பாட்டையும், வசனத்தையும் கூத்து வடிவில் கொண்டு வந்திருப்பார்கள். அது கொஞ்சம் மெருகேறி நாடகமாக, அதன்பின் அறிவியல் வளர்ச்சியில் நாடகம் என்பது ஒன்றினுள் பதிவு செய்யப்பட்டு, வேறொரு இடத்தில் வெளியிடப்பட்டதுதானே திரைப்படமாக இருக்கவேண்டும். அதை இன்னும் சுவை கூட்டத்தானே இசையும், வண்ணமும் என இணைந்திருக்கவேண்டும். காலப்போக்கில் இன்று சினிமா என்பது ஒரு தொழிலாகவே மாறிவிட்டதுதானே. அதில் தவறேதும் இல்லை.

அப்படிப்பட்ட பொழுது போக்கு அம்சமாக பார்க்க வேண்டிய சினிமாவில், திரும்பத் திரும்பப் நல்லவன் போல் வேஷம் போடுபவனை பார்த்து நல்லவன் என்றே நம்பினோம். சரி அவர்கள் அப்படி என்னதான் சாதித்துவிட்டார்கள், சேற்றில் இறங்கி உழவு ஓட்டியது போல், வீதி கூட்டியது போல், மூட்டை தூக்கியது போல், எல்லையில் தேசத்திற்காக சண்டையிட்டது போல், நேர்மையின் அடையாளம் போல், ஊழலை ஒரே நாளில் ஒழித்தது போல், நியாயத்தை நிலை நாட்டியதுபோல் நடித்தார்கள். நடித்தார்கள் அவ்வளவே... ஆனாலும் அதை நிஜம் என்பது போலவே ரசித்தோம், நம்பினோம்...


நம்பியதோடு நில்லாமல் ரசிகர் மன்றம் வைத்தோம், தலைவனாக்கினோம், சிலை வைத்தோம், பச்சை குத்தினோம், பால் அபிஷேகம் செய்தோம், மொட்டை போட்டோம், கோயில் கட்டினோம், ஓட்டு போட்டோம், சொன்னவர்களுக்கு ஓட்டுப் போடச் சென்றோம். எல்லாம் அவர்களுக்காகத்தானே செய்தோம், ஆகவே அவர்களிடம் ஓட்டு வங்கி இருக்கிறது என்று கட்சியில் இணைத்து பொறுப்பு கொடுத்து வளர்த்துவிட்டு, அரசியல்வாதிகள் அவர்களை பூஜிக்கத் துவங்கினார்கள்.


சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம்தானே? பொழுது போகாமல்தானா நீங்களும் நானும் உட்கார்ந்திருக்கிறோம்? அசைக்கமுடியா இடத்தை அவர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ கொடுத்தோம், விளைவு ஊடகங்கள் சினிமாவை நேசித்து, சுவாசித்து, குடித்து, தின்று கொழுத்து பிரமாண்டமாக உயிர்வாழ்கிறது. சினிமாத் துறை தும்மினால் கூட நலம் விசாரிக்க அரசாங்க இயந்திரம் அவசரமாக ஓடுகிறது.

விளைவு...


சினிமாக்காரார்களுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், சதையை மட்டுமே வியாபாரப் பொருளாக்கி அதிகப்படியான ஆபாசப் படங்களில் நடித்த நடிகை உட்பட (பெயர் சொல்லி உங்களை சுவாரஸ்யப் படுத்துவது என் நோக்கமல்ல) அணி திரண்டு வந்து ஒரு மாநிலத்தின் முதல்வரை எளிதாக சந்தித்துவிட முடிகிறது.

ஏதாவது ஒரு சொத்தைக் காரணத்தை வைத்துக் கொண்டு, கலை நிகழ்ச்சி அல்லது விருது வழங்கும் விழா என்று நடத்தி கவர்ச்சியாக நடனமாடி ஊடகங்கள் வழியாக அதை வியாபாரப்படுத்திட முடிகிறது. அதற்கும் தமிழக முதல்வரை அழைத்து வந்து அமர்த்தி வைத்திட முடிகிறது.

ஒரு நடிகனுக்கு ரசிகன் என்று சொல்லி, அந்த நடிகனின் திரைப்படம் வெளியாகும் வரைக் காத்திருந்து, அந்தத் திரைப்படம் வெற்றிபெற பிரார்த்தனை செய்து, வெளியானால் கொண்டாடும் அல்லது விமர்சனம் எழுதும் ரசனை மிகுந்த ரசிகனே...

  • ஒரு மனிதனின் உயிர் வாழ, மிக அத்தியாவசியத் தேவையான உணவைத் தயாரிக்க, இயற்கையை நம்பி, அரசாங்கத்தை நம்பி, தெய்வத்தை நம்பி பயிரிடும் விவசாயி...

  • இரவு முழுதும் கண்விழித்து தினம் தினம் பலநூறு மைல்கள் குண்டும் குழியுமான சாலைகளில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்க்கும் நெடுந்தொலைவு பேருந்தின் ஓட்டுனர்கள்

  • அரசாங்கமே மது விற்கும் நாட்டில், தென்னை, பனை மரங்களில் கள் இறக்க பல வருடங்களாக போராடும் பனைத் தொழிலாளி...

  • தினமும் திடீர் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் நடக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டோடு சிறு தொழில் செய்வோர்...

  • இரசாயனம் கலந்து மலடான பொட்டல் காட்டின் மத்தியில், குடிக்க சொட்டுத் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் சாமானியன்...

  • பனிரெண்டு மணி நேரம் வேலை செய்து, ஆண்டு முழுதும் கடன் அடைக்க முடியாமல் கந்துக்கு வாங்கி தேய்ந்து போய்க் கிடக்கும் தினக்கூலி...

  • சாலைகளின் பிரிவில் திரும்பும், பாரமேற்றிய லாரியில் ஓடிப்போய் தொற்றி, அது சேரும் இடத்தில் முதுகு எலும்பு வலிக்க மூட்டைகளை இறக்கி ஏற்றும் சுமை தூக்குபவன்...

  • தினம் தினம் நாற்றம் பிடித்த நம் வீதிகளில் முகம் சுழிக்காமல் சாக்கடை அள்ளியெடுக்கும் துப்புரவு தொழிலாளி...

இவர்களில் யாரேனும் ஒரு சினிமா நடிகன் போலவோ, அல்லது நடிகை போலவோ தங்கள் குறையைச் சொல்ல முதல்வரை இப்படிச் சந்தித்திட முடியுமா?

நம் காசை, கனவைச் சுரண்டாமல் நமக்காக உழைப்பவன் நன்றாக இருக்கட்டும் என ஒரே ஒரு முறையேனும் மனதார வேண்டிக்கொள்ள முடிகிறதா நம்மால்? அல்லது நாம் தான் இவர்களைக் கொண்டாடுகிறோமா?

ஐம்பது ஆண்டுகளாக காவி ஏறிய கோமணத்தோடு காட்டில் வேலை செய்பவனுக்கு பொன்விழா எடுக்கவோ,

தினம் தினம் சாக்கடை அள்ளுபவனுக்கு சுத்தத்தின் சொந்தக்காரன் என்று விருது கொடுக்கவோ,

எண்பது-தொன்னூறு வயதாகியும் வெறும் எலும்புக் கூடாய் உழைக்கும் கிழவனுக்கொ, கிழவிக்கோ வாழ்நாள் உழைப்பாளி என்று விருது கொடுக்கவோ

இங்கு ஒரு நாதியும் இல்லை.

-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

பாவம், இந்த நாய்!


பாவம்

இந்த நாய்க்கு

ஏதாவது

சொல்லீட்டு

போங்க


அவ்வளவுதான்...!



டிஸ்கி: மின்னஞ்சலில் வந்த புகைப்படம், அதில் குறிப்பிட்டிருந்த தகவல்......... இது தென் தமிழகத்தில் நடந்ததாகவும், அந்த மனிதனின் பெயர் செல்வக்குமார்(33) எனவும், நாயின் பெயர் செல்வி என்றும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது மின்னஞ்சலில் வந்த புகைப்படம். யாருக்குப் பரிதாபப் படுவது.

ஒரு பிடி சோறு

பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அறைகூவல் விடுத்த போதும்...

கொஞ்சம் தாமதமாகவேனும் காவிரித்தாய் கடைக்கண் காட்ட... போனமுறை ஊருக்குச் சென்ற போது, நெல் நாற்று விடப்பட்டிருந்தது, இந்த முறை போன போது ஊர் முழுதும் வயல்கள் நடவு முடிக்கப்பட்டு நாற்று இளம்பச்சையிலிருந்து அடர் பச்சை மாறும் வண்ணம் வேர் பிடிக்கத் துவங்கிருந்தது.

எங்கு நோக்கினும் பச்சைப் பசேலென விரிந்து கிடந்தது விவசாய பூமி. இந்த வருடம் நம் பக்கத்து மக்கள் தப்பித்துக் கொள்வார்கள் என மனதிற்கு மிக ஆறுதலாக இருந்தது.

தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்த போது ‘பரவால்ல இந்தத் தடவை தண்ணி வந்திருச்சு, ஆனா ஆளு அம்புதான் கெடைக்கிறதேயில்லை” என்று வருத்தப்பட்டார்

அடுத்துச் கேட்டதுதான் அதிர்ச்சியின் உச்சம் ‘தண்ணி வந்து என்ன பண்றது, ஆளுதான் கிடைச்சு என்ன பண்றது, யாரு இனி விவசாயம் பண்ணப் போறாங்க, உங்கப்பாவோட சரி, நீ வந்து விவசாயமா பண்ணப்போற!?’

என் தந்தை இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் பணி புரிந்து விருப்ப ஓய்வில் வந்துவிட்டவர். பணி புரிந்த காலத்திலும், இப்போதும் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டேயிருப்பவர்.

என் தாத்தா கேட்டதற்கு சரியான பதிலைச் சொல்லத் தெரியவில்லை. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் வரை எனக்கு தோட்டத்து வேலைகள் மிக இயல்பான ஒன்று, அதன் பின் விடுதி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, வேலை, தொழில் என மாறியபோது, எங்கள் தோட்டத்தில் என்ன பயிர் செய்திருக்கிறார்கள் என்பது கூட தெரிவதில்லை. எப்போது விதைப்பு, எப்போது அறுவடை எல்லாம் தொடர்பற்றுப் போனது.

* இன்று எங்கள் கிராமத்தில் சுமார் 45-50 வயதுக்கு குறைவான யாரும் விவசாயத்தில் இல்லை.
* விவசாய நிலம் வைத்திருக்கும் குடும்பங்களிலிருந்து 35 வயதிற்குட்பட்ட எவர் ஒருவரும் இன்று விவசாயத்தில் இல்லவே இல்லை. ஒன்று படித்து வெளியூரில், வெளிநாட்டில் வேலையில் இருந்து நன்றாக பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லது பக்கத்து நகரங்களில் விவசாயம் தொடர்பில்லாத வியாபாரம், தொழிலில் இருக்கிறார்கள்.



* இன்று விவசாயம் நிலம் வைத்திருப்பவர் அல்லது விவசாய நிலத்தில் உழைப்போரின் ஒரே இலக்கு தன் பிள்ளைகளை எப்படியாவது நன்றாகப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் அல்லது ஒரு தொழில் ஆரம்பித்திட வேண்டும்.



*விளைவித்த தக்காளி கிலோ நாலாணாவிற்கு விற்க வேதனைப்பட்டு, கூடை கூடையாய், வருடா வருடம் நடுச் சாலையில் கொட்டி அழிக்கப்படும் அவலம் இன்றும் இருக்கத்தானே செய்கிறது. எந்த அரசாங்கம் அக்கறையோடு தேவையறிந்து, விவசாயிக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது அல்லது உதவியிருக்கிறது?
*எப்போது தேவை அதிகமாகும், எப்படி ஏற்றுமதி செய்வது அல்லது எப்படி அதை பதப்படுத்திப் பாதுகாத்து சரியான நேரத்தில் விற்பது என்று?
(2009 ஆம் ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் சர்க்கரைத் தட்டுப்பாடு வருமென்று, நிறைய வெளிநாட்டு விவசாயிகள் முன்னரே அறிந்து, அதிக விளைச்சலை உருவாக்கி, நமக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றனர்)


*கடந்த பத்து ஆண்டுகளில் துவக்கப்பட்ட பொறியியல் கல்லூரி மற்றும் வியாபார மேலாண்மை படிப்புகளின் எண்ணிக்கையில் ஒரே ஒரு சதவிகிதமாவது விவசாயக் கல்லூரிக்கோ அல்லது விவசாயம் குறித்த படிப்புகளுக்கோ கவனம் கொடுக்கப் பட்டிருக்கிறதா?






இப்போது நிலம் வைத்திருப்போர் அல்லது உழைப்போரின் உழைக்கும் திறன் இன்னும் அதிகபட்சம் 15-20 ஆண்டுகளில் மங்கித்தானே போய்விடும். அதன்பின் அந்த நிலங்களில் யார் விவசாயம் செய்வது?


எங்கள் ஊரில் கிட்டத்தட்ட 500 ஏக்கர் நிலத்தில், இந்த வருடம் நெல் பயிரிடப் பட்டுள்ளது. எப்படி கணக்குப் போட்டாலும் பெரிதாய் நோய் தாக்காமல் இருந்தால் இந்த பருவத்தில் கிடைக்கும் அரிசி 2,50,000 கிலோ. எதிர்காலத்தில் இது என்ன ஆகப்போகிறது.


சமீபத்தில் கண்டமேனிக்கு திறக்கப்பட்டது பொறியியல் கல்லூரிகளே. சிவில் படித்தார்கள், சாரம் போட்டு வருடக்கணக்கில் கட்டியதை, இன்று எங்கேயோ செய்து பத்திரமாக எடுத்து வந்து கிரேன் வைத்து தூணின் மேல் ஏற்றி அழகாகப் பொருத்தி விட்டுப் போய்விடுகிறார்கள். ஆச்சரியமான ஒன்றுதான், தவறேதுமில்லை. இது போல் ஒவ்வொரு துறை பிரிவிலும் படித்தவர்கள் பிரமிக்கக்கூடிய அதிசயத்தை விநாடி நேரத்தில் நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன என்னவோ படிப்பென்று சொல்லி, எத்தனை எத்தனையோ கல்லூரிகளைத் திறக்கப்பட்டதே... வளர்ச்சி என்ற அடிப்படையில், விவசாய பூமியை விலகிச் சென்ற மனிதர்களால் தங்கள் விஞ்ஞானத்தால், அரசியலால் அல்லது ஏதோ ஒரு தொழிலால் ஒரே ஒரு நெல் மணியை உருவாக்க முடியுமா?

ஐக்கிய நாடுகள் சபை சொன்னதாக தலைப்புச் செய்தியில் படித்தேன் இன்னும் நாற்பது வருடங்களில் இந்தியாவிலும், சீனாவிலும் தங்கள் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாவிடில் மிகப் பெரிய உணவுத் தட்டுப்பாடு வருமென்று. எனக்கென்னமோ அதற்கு நாற்பது வருடங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

காடுகளை அழிப்பதில் சிறிதும் குற்ற உணர்வில்லாத நாம், பருவ மழை பொய்த்துப் போவதைப் பற்றி என்றாவது, ஒரு விநாடி மனம் கலங்கியிருகிறோமா?

காமராஜருக்குப் பின் தமிழ்நாட்டில், யாராவது அணை கட்டியிருக்கிறார்களா?

சாகடிப்பட்ட அணைகள் ஒன்றா, இரண்டா? சாமாதி கட்டப்பட்ட ஏரிகள், குளங்கள் எத்தனை ஆயிரம் இருக்கும்?



இது பற்றி எந்தச் சிந்தனையும் இல்லாதவர்களைத் தானே மாற்றி மாற்றி ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிறோம்

விவசாயத்தை, விவசாயிகளை வஞ்சித்த உலகம் அதன் பலன்களை அனுபவிக்கப் போவது மிக அருகாமையில் தான் இருக்கிறது.

அப்போது பசிக்கும் வயிற்றுக்கு யார் வந்து சோறு போடுவது.
-------------------------------------------------------------------------
தொடர்புடைய இரண்டு இடுகைகள்
1. தண்ணீரும் சோறும் தந்த மண்ண விட்டு...
2. நான் நிறுத்த வேண்டும்

-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.





வாழ்த்துகள் - பழமை பேசி


பதிவுலகில் நுழைந்து
495 நாட்களில்
பதிந்த இனிய வலைப்பதிவர்
எழிலாய் பழமை பேச
பழமை பேசி அவர்களுக்கு
என் மனம் கனிந்த நல்வாழ்த்துகள்.


வலையுலகம் எனும் கடலில்
ஏதோ ஒரு தைரியத்தில் நீச்சலடிக்க குதித்து
கொஞ்சம் கொஞ்சமாய் நீச்சலித்துக் கொண்டிருந்தபோது
“மாப்பு நல்லா நீஞ்சறீங்க” னு
கொங்குத் தமிழில் பாசத்தோடு
கை பிடித்து, தட்டிக் கொடுத்து,
அவ்வப்போது நீந்தும் இடம் சரிதானா என வழிகாட்டி,
உடன் நீச்சலடிக்கும் நண்பர்களை
எனக்கு அறிமுகம் செய்து வைத்து,
என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து
தவறு செய்யும் போது தலையில் குட்டி
தொடர்ந்து ஊக்கம் தரும் இனிய
நண்பருக்கு நன்றிகள் பல


... ... ... அறிவோம் நம் பழமை பேசி அவர்களை ... ... ...
புனை பெயர்: பழமைபேசி

இயற்பெயர்: மெளன. மணிவாசகம்

ஊர்: அந்தியூர், உடுமலைப் பேட்டை

இருப்பிடம்: சார்லட், வடக்கு கரோலைனா, ஐக்கிய அமெரிக்க மாகாணங்கள்

படிப்பு: இயந்திரவியல் மற்றும் கணனி அறிவியல்

வேலை: மென்பொருள் கட்டுமான மேலாண்மை

பெருமையாக நினைப்பது: முடிந்த வரை தமிழில் பேசுவதும், எழுதுவதும்

குறையாக நினைப்பது: கடந்த காலத்தில் இருந்த, புத்தகங்கள் வாசிக்காத பழக்கம்

சாதிக்க நினைப்பது: தமிழை மேலும் கற்றுக் கொள்வது, எளிமை பேணுவது

பிடித்த‌ ப‌ழ‌மொழி: எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையனும்! வாழ்க தமிழினம்!!!

அனுப‌வ‌ம்: கிராம‌ங்க‌ளில் ஓடித் திரிந்து, வேளாண்மை செய்த‌து; கிராம‌ப்புற‌ ப‌ள்ளிக்கு தின‌மும் நான்கு மைல் தூர‌ம் விவ‌சாய‌ வ‌ழித் த‌ட‌ங்க‌ளின் ஊடாக‌ ந‌ட‌ந்து சென்று க‌ல்வி க‌ற்ற‌, அந்த‌ இனிமையான‌ நாட்க‌ள்; ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளின் வீடுக‌ளில் த‌ங்கி இருந்து படித்து, யார்க் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தில் ப‌ட்ட‌ம் பெற்ற‌து; த‌ற்போது அமெரிக்காவில், சார்ல‌ட் ந‌வ‌ச‌க்தி த‌மிழ் ப‌ண்பாட்டுக் குழுவில் அங்க‌த்தின‌ராக‌ இருந்து த‌மிழ்ப் ப‌ண்பாடு பேணுவ‌தும், அடுத்த‌ த‌லை முறையின‌ருக்கு இய‌ன்ற‌ அள‌வு த‌மிழ் க‌ற்பிப்ப‌தும்.

வாழ்த்துவோம்

தொடர்ந்து வாசிப்போம்

நல்லாத்தானே வச்சிருக்கோம் நரகாசுரனை


போனசு புத்தாடை
பட்டாசு மத்தாப்பு பலகாரம்
அரைப்பவுனு தோடு அடுத்த நாள்
ஆட்டுக்கறி, கோழிக்கறி

போட்டி போட்டுக்கொண்டு
ஒளிபரப்பாகும் புதுப் படங்கள்
தின்பதையெல்லாம் சீரணிக்க
இன்னும் ரெண்டு நாள் விடுமுறை

தீபாவளியைக் கொண்டாட
எத்தனையோ காரணம் இங்கே
நரகாசுரனைக் கொன்றதாய் பொய் சொல்லி
நாடு முழுதும் பட்டாசு வெடிக்கிறோம்

ழத்தமிழனின் உதிரம் தோய்ந்த
நீளமான சிவப்புத் துண்டோடு..
அள்ளிக் கொடுத்து ஆயுதம் கொடுத்து
நல்லாத்தானே வச்சிருக்கோம் நரகாசுரனை


ன்ன நியாயம் இருக்கு
என்ன தேவை இருக்கு
இரத்தம் காயுமுன்னே
இங்கு தீபாவளி கொண்டாட

காடிழந்து வீடிழந்து கற்பிழந்து
கம்பிவேலி தாண்ட முடியாமல்
காய்ந்து போன பச்சிளம் குழந்தையை
கண்ணீர் கோடுகளோடு கையில் ஏந்தி

நாம் வெடிக்கும் பட்டாசு நவுத்துப் போகட்டும்
உடுத்தும் புத்தாடைகள் கிழிந்து போகட்டும்
தின்னும் பலகாரம் கசந்து போகட்டுமென”
வயிறெரிந்து சபிக்கமாட்டாளா வாழ்விழந்தவள்

வள் ஈழத்துத் தாய் ஆகவே சபிக்கமாட்டாள்
ஆனாலும் இந்தத் தீபாவளியில்
இனிப்புகளை ஒதுக்கி புத்தாடை துறந்து
ஈழத்தை நெஞ்சில் சுமப்போம்

வாழ்கிறோம்

திகாரிகளுக்கு அள்ளிக்கொடுத்தாயிற்று
தீபாவளிக்கு சல்யூட் செய்யும் கூர்க்காவுக்கும்,
சாக்கடை அள்ளுபவனுக்கும் மட்டும்
வீட்டில் இல்லைனு சொல்லிடு...

தொடர் வண்டி பயணத்தில்
கொட்டாங்குச்சியோடு கரகரக்கும்
குருட்டுப் பிச்சைக்காரானின் ஒற்றைக் குரல்
காசுக்கு கை நீட்டாத வரை இனிக்கிறது...

குழந்தைகள் குரோட்டன்ஸ் செடிகளா?

என் மகள் படிக்கும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு. (ஒன்னாப்பு தானுங்க படிக்குது) கடந்த மாதம் காலண்டுத் தேர்வுகள் முடிந்த பின், அதில் பெற்ற மதிப்பெண்களை வைத்து பிள்ளைகளின் தரத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வு.

முதலில் வகுப்பாசிரியையோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு, அடுத்து சோசியல் பாடம் எடுக்கும் ஆசிரியை சந்திக்கச் சென்றபோது, அந்த வகுப்பில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சரி மற்ற ஆசிரியைகளைப் பார்த்து விட்டு பின்னர் அவரைச் சந்திக்கலாம் என நினைத்து, மற்ற ஆசிரியைகளிடம் சில சில நிமிடங்களைச் செலவழித்து விட்டு கடைசியாக வந்த போதும், அந்த அறை கூட்டமாகவே இருந்தது.

சரி வேறு வழியில்லையென்று கூட்டத்தோடு நின்று கவனிக்கும் போது தெரிந்தது. கிட்டத் தட்ட எல்லாப் பெற்றோர்களும்
* எப்பா பார்த்தாலும் விளையாட்டு
* அடங்காத குறும்பு
* வீட்டிலே படிக்கிறதேயில்லை
* சீக்கிரம் தூங்கறதில்லை
என அந்த ஆசிரியையைச் சுற்றி நின்று கொண்டு ஒவ்வொருவராக புகார் சொல்லிக் கொண்டேயிருந்தனர்.

என் மகள் என் கையை இறுகப் பிடித்துக் கொண்டு, அடிக்கண்ணால் என்னைப் குறுகுறுப்பாக பார்த்தது.

என் மகள் குறும்பு என்ற புகார் எப்போது என்னிடம் இருந்ததில்லை. நாற்காலியில் நான் உட்கார்ந்து இருக்கும் போது, பெரும்பாலும் என் கால்களின் மேலேயேதான் நின்று கொண்டிருக்கும், சில சமயம் பக்கவாட்டில் ஏறி கழுத்து மேல் உட்கார்ந்து சரிந்து சறுக்கல் விளையாடுவதும் நடக்கும்.

எல்லோருக்கும் ஒரு புன்னைகையோடு அந்த ஆசிரியை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார். “இதுகெல்லாம் குழந்தைங்க, குழந்தைங்னா விளையாடத்தானே செய்யும். தயவுசெய்து குறும்பு செய்யும் குழந்தையை மிரட்டி மிரட்டி அடக்கி வைக்காதீங்க. நீங்க வீட்டில் அதைத் தொடாதே, அங்க போகாதேனு தொடர்ந்து மிரட்டினா, எதற்கெடுத்தாலும் அந்த குழந்தைக்கு பயம் வர ஆரம்பிக்கும் அல்லது அங்கே அடக்கி வைத்ததெல்லாம் பள்ளியில் வந்து வெளிப்படுத்த முயலும். நான் 40 நிமிட வகுப்பில் 25 நிமிடங்களுக்கு மேல் பாடம் நடத்துவதில்லை. மீதி 15 நிமிடங்கள் கட்டாயம் கதை பேசுவேன்” என்றார்.

இது போல் தொடர்ந்து நிறைய பகிர்ந்து கொண்டேயிருந்தார்...

மனது விட்டேத்தியாக இருந்தது. ‘ஏன் குழந்தைகள் பற்றி பெற்றோரிடம் இத்தனை புலம்பல்கள்’

*சமீபகாலமாக குழந்தைகளை அதிகமாக பொத்திப் பொத்தி வளர்க்கிறோமோ?
அதிக தூரம் நடக்க பழக்குவதில்லை
*வீட்டு வாசலிலிருந்து வாகனத்தில் அழைத்துச் செல்ல வசதி செய்து கொடுத்திருக்கிறோம்
*வீட்டிற்கு வெளியே விளையாடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை அல்லது அனுமதிப்பதில்லை
*நமக்கு சிரமம் கொடுக்கும் நேரங்களில் ஒன்று மிரட்டி தூங்க வைக்கிறோம் அல்லது தொலைக்காட்சி பார் என ஒதுக்கி வைக்கிறோம்.

நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட குடும்பங்களில் குழந்தைகளை அழகாகவும், சொகுசாகவும் குரோட்டன்ஸ் செடி போல் வளர்க்க ஆரம்பித்து விட்டோமோ என அச்சம் வருகிறது.

-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

ஏமாற இந்தக் காரணம் போதும்



ரண்டு நாட்களாய் எங்கள்
வீட்டு தொலைக்காட்சிகளின்
முக்கியச் செய்திகளில் உங்கள்
பெயர்கள் மின்னியாயிற்று...

கொளுத்தும் வெயில் அறியா
குளிர்காரில் வந்திறங்கி
கசங்காத உடையோடு
கட்சிக்காரர்கள் புடைசூழ...

கேமாரக்களின் ஒளியில் நனைந்து
சம்பிரதாயமாக உதடுகளைப்
பிரித்து ஓரிரு வார்த்தைகளை
உதிர்த்து விட்டு...

த்துப் பேர் கொண்ட படை
பந்தாவாகப் புறப்பட்டுவிட்டது
ஈழத்துக்கு உண்மையாய் குரல் கொடுத்தவன்
எவன் ஒருவனும் இல்லாமல்...

ரவேற்க கொஞ்சம் கசங்கிய
வண்ணக் கம்பளத்தோடு
காத்திருப்பான் காடையன்
காயாத இரத்தக் கறையோடு

பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...

வாடி வதங்கிப்போய் வாழ்விழந்த
மனிதக் கூடுகளோடு கட்டாயம்
புகைப்படம் பிடித்து வாருங்கள்
பயணக்கட்டுரை எழுத வேண்டும்...

ரும்போதாவது கண்டிப்பாக
முகத்தைக் கொஞ்சம் வாட்டமாக
வைத்திருங்கள்... இன்னும் ஒருமுறை
ஏமாற இந்தக் காரணம் போதும்

பட்டியலில் ஒரு வரியாக


இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற போது நண்பரின் தந்தை அடிபட்டு அவசரப் பிரிவில் கவலைக்கிடமான முறையில் இருப்பதாக தகவல். அது நகரத்தின் மையத்தில் இருக்கும் பிரபல மருத்துவமனை. நண்பரும், அவரைச் சார்ந்தவர்களும் கவலை தோய்ந்த முகத்தோடு சோர்ந்து போய் அமர்ந்திருக்கின்றனர்.



மருத்துவமனை பரபரப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளிகளில் உயிரை அறுக்கும் ஓசையோடு ஆம்புலன்ஸ் வண்டிகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலும் விபத்தில் அடிபட்டவர்கள்தான் கொண்டு வரப்படுகின்றனர். விபத்தில் சிக்கி வருபவர்களில் பெரும்பாலும் தலையில் அடிபட்டுத்தான் வருகின்றனர். அவர்கள் வரும்போது உடன் வரும் நண்பர்களின் பதறும் முகமும், உறவினர்களின் கண்களில் தெரியும் கலக்கமும் நமக்கும் தொற்றிக் கொள்கிறது.


விபத்துகளில் அதிகமாய் சிக்குபவர்கள் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளாகத்தான் இருக்கின்றனர். இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் பெரிதும் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். விபத்தில் சிக்கியவர் குடும்பத்தின் முக்கிய நபராக இருக்கும் பட்சத்தில், அவசரப் பிரிவின் முன்பக்கம் அவர்கள் குடும்பத்தினர் தவிக்கும் தவிப்பையும், எதிர்காலத்தை எப்படி சந்திக்கப் போகிறோம் என்னும் வெளுத்த முகத்தையும் பார்க்கும் போது, வார்த்தைகளில் வடிக்க முடியாத ஒரு சோகம் நம் மனதைக் கவ்விக்கொள்ளும். அந்த சோகத்தை தாங்கி நிற்கும் மனிதர்களிடம் என்ன சொல்லி ஆறுதல் கூறுவது என்பது இன்னும் கடினமான ஒன்று.

எந்தச் சமாதானமும், ஆறுதலும் அவர்களைத் தேற்றாது எனத் தெரிந்தாலும், எதையாவது பகிர்ந்து கொண்டு ஒரு அடர் மௌனத்தோடு புழங்குவது வேதனையான ஒரு நிகழ்வுதான். ஒவ்வொரு முறையும் விபத்து நிகழ்ந்த பின் அது குறித்து, யாராவது ஒருவர் சிலாகித்து, அது எப்படி நடந்தது அல்லது நடந்திருக்கும் என்று விவரித்துக் கொண்டிருப்பது சகிக்க முடியாத கொடூரம்.

பெரும்பாலும் விபத்து வேகத்தினாலோ, கவனக் குறைவினாலோ அல்லது மது போதையினாலோதான் நடக்கிறது. இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் போது அதுவும் தலையில் அடிபடும்போது, அது மரணத்தை நோக்கி எளிதாக நகர்த்திச் செல்கிறது.

மற்றவர்களுக்கு நடக்கும் விபத்துகள் முதலில் ஒரு அதிர்ச்சியான சம்பவமாக தொடங்கி, பின் கடினமான சூழலாக மாறி, கடைசியாக பட்டியலில் ஒரு வரியாக படிந்து விடுகிறது. ஆனால் அந்தக் குடும்பத்திற்கு... வாழ்நாள் முழுதும் ஆற்ற முடியாத வலியாக, மறக்க முடியாத வடுவாக வாழ்ந்து கொண்டேயிருக்கிறது.

பொறுமையும், கவனமும் உயிர்காக்கும் அதைவிட பல இடங்களில் நாம் விரும்பாத ஹெல்மெட் எனப்படும் தலைக்கவசம் கட்டாயம் உயிர்காக்கும்.


பொறுப்பி:
வெறும் இரண்டு மைல் தொலைவு தான் அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் என்று என்னிடம் இருக்கும் தலைக்கவசத்தை அணிவதில்லை. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் விழுந்து உதட்டில் பலத்த அடி வாங்கினேன். ஆனாலும் திரும்பவும் அணிவதில்லை. நகரத்தை விட்டு தாண்டி இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிகிறேன்.


-------------------------------------------------------------------------


இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

கொள்ளி - கொஞ்சம் தள்ளி நில்லு


-------------------------------------------------------------------------

இயற்கையாய் வரும் மரணம் வரம். யாரும் எதிர்பாராத கணத்தில் இயற்கைச் சீற்றத்தால் வரும் மரணம் தடுக்க, தவிர்க்க இயலாத ஒன்று. விபத்தில் வரும் மரணத்தில் கூட இன்னொருவனின் தவறு இருக்கிறது.

அன்றெல்லாம் எங்கேயோ, புற்று நோயால் இறந்து போய் விட்டாராம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. இன்று... நண்பன் இறந்தான், நண்பனின் நண்பன் இறந்தான், ஒன்று விட்ட சித்தப்பாவின் நெருங்கிய உறவில் இறந்தார் என்பது வாடிக்கை...

தனக்குத் தானே கொள்ளி வைத்துக் கொண்டு செத்துப் போவதில் என்னதான் சுகமோ?

சராசரியாக நூறில் ஒருவருக்கு புற்று நோய் தாக்கி வருகிறது என்பது, அதிர்ச்சிகரமான தகவல்.

கடந்த ஐந்து வருடத்தில் இரண்டு நண்பர்களை புற்று நோய்க்குப் பலி கொடுத்திருக்கிறேன். ஒருவருக்கு சிறுநீரகத்தில் புற்று, இன்னொருவருக்கு தொண்டையில் புற்று (தொடர்ச்சியாக இவர் பான்பராக்-ஐ உட்கொண்டதுதான் காரணம்). இருவருக்குமே வயது முப்பதுகளின் சமீபத்தில். ஒருவருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை, இன்னொருவருக்கு திருமணமாகி ஆறு மாதம்.

இருவருமே, புற்று நோய் என்று தெரிந்த பின் தங்கள் மரணம் வரை தவித்த தவிப்பும், மரணத்தை தவிர்க்க போராடிய போராட்டமும், தவிர்க்க முடியாது என்றான பின் தள்ளிப்போட பதை பதைத்ததும், ஹீமோ தெரபி சிகிச்சை எடுத்து உடல் உபாதையில் பரிதவித்ததும் என்றும் மறக்கவே முடியாத துன்பம்.

ஒரு கட்டத்திற்கு மேல், வலியின் கொடுமை தாளாமல், இந்த விநாடியே மரணம் வந்து விடக்கூடாதா என்று கண்ணீரோடு கதறியதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

“சிகரெட் பிடிக்காதவனும், பாக்கு போடாதவனும் செத்துப்போகிறான் தானே” என்ற சப்பை வாதத்திற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால் புகை, பாக்கு பழக்கம் உள்ளவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு பல்லாயிரம் மடங்கு அதிகம்.

வாழ்க்கை என்பது ஒருமுறை கிடைத்திருக்கும் அதிசயம். மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. அதில் பிதுங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் வலி சாதாரணமானது இல்லை. நலமாக இருக்கும் வரை அந்த வலி உணரப்படுவதில்லை. ஒருமுறை கொடிய நோய் தாக்கினால், மீள்வது மிகக் கடினம்.


நீங்கள் புகை பிடிப்பவரானால் அடுத்து பிடிக்க எடுக்கும் முதல் சிகரெட்டை உடைத்து எறியுங்கள். உங்கள் நண்பர் புகை பிடிப்பவரானால், அவர் அடுத்து பிடிக்க எடுக்கும் சிகரெட்டை பிடுங்கி உடைத்து எறியுங்கள்...

-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

கலைந்துபோன கடுதாசி

கடிதம் எழுதி எத்தனை நாள் இருக்கும்?

.... ம்ஹூம்....... சத்தியமாய் மறந்துவிட்டது. ஏன் இப்போதெல்லாம் கடிதமே எழுதவே முடிவதில்லை.....

அது ஒரு காலம்......பையன் படித்து பெரிய ஆளா வருவான்னு நம்பிக்கையோடு (மூட நம்பிக்கைக்கு நானெப்படி பொறுப்பாக முடியும்) எங்கப்பா என்னை உடுமலைப்பேட்டை அருகே கரட்டு மடத்தில் உள்ள காந்தி கலா நிலையம் ஹாஸ்டலில் தங்க வைச்சு படிக்க வைச்சாரு..... அப்போவெல்லாம் இப்போ மாதிரி செல் போன் கிடையாது, ஒரே ஒரு கருப்பு போன் வார்டன் ரூம் ஜன்னல் பக்கம் இருக்கும்...... நெருங்கின சொந்தத்திலே யாராவது செத்துட்டா மட்டும் அந்த போனுக்கு தகவல் வரும், அதுவும் பியூன் தான் சொல்லுவார்.....

மற்றபடி பதினைந்து நாளுக்கு ஒருமுறைதான் அப்பாவிடம் இருந்து கடிதம் வரும். அன்புள்ள மகனுக்கு அப்பா எழுவது என்று ஆரம்பிக்கும்..... என்ன செய்வது நமக்கெல்லாம் கடிதம் எழுதுவதற்கென்றே "நலம் நலம் அறிய ஆவல்" என்ற பார்முலா உண்டு...... அதுவும் அப்படிதான் ஆரம்பித்து, வீட்டில் உள்ளவர்கள், பக்கத்து வீட்டுக்காரர், கொஞ்சம் தூரத்து உறவு ஆகியோர் நலம், மழை பெய்த விபரம், தோட்டத்தில் நடந்த அறுவடை, விதைப்பு பற்றி கொட்டை எழுத்தில் கடிதம் முழுவதும் வரிகளாக நிறைந்து இருக்கும்.... கடைசியாக "நன்றாக படிக்கவும், உடம்பை பார்த்துக்கொள்ளவும்" போல் இருக்கும்.....

சில‌ச‌ம‌ய‌ம் ஹாஸ்ட‌ல் வார்ட‌ன் பிரித்து ப‌டிக்கும் ஆப‌த்தும் உண்டு. என‌வே ச‌ம்பிராத‌ய‌ வ‌ரிக‌ள் தான் அதிக‌ம் இருக்கும். பெரும்பாலும் எல்லா கடிதங்களுமே மேலே சொன்ன மாதிரி தான் இருக்கும்..... ஆனாலும் ஒவ்வொரு கடிதமும் இனம் புரியாத சிலிர்ப்பினை மனதில் உருவாக்கியது சத்தியம்..... கடிதம் இன்றைக்கு வந்து விடாதா என்று சில நேரம் ஏக்கமாக இருக்கும்.

வகுப்பு முடிந்து விடுதிக்கு வரும்போது முன்பக்க பலகையில் அன்று வந்த கடிதங்கள் சொருகப்பட்டிருக்கும், போகிற போக்கில் "டேய் உனக்கு லட்டர்" என்ற குரல் கேட்கும்..... உடனே மனசு மத்தாப்பு போல பூக்கும்..... நீல நிற இன்லேன்ட் லட்டர் தபால் பலகையில் செருகப்பட்டிருக்கும்... கடிதத்தை எடுக்கும் போதே மனசு சிலிர்க்கும்.... முகவரி பகுதியில் அப்பாவின் கையெழுத்து அழுத்தமாக, அடர்த்தியாக தெரியும்..... மனசு பட்டாம் பூச்சியாய் குதூகலிக்கும்....

ஒட்டிய பகுதியை விரல் வேகமாய் பிரிக்கும்....ஒரே மூச்சில் ப‌டித்தால்தான் நிம்ம‌தி. ஆனால் வ‌ரிக‌ள் வ‌ழ‌க்க‌மாகவே இருக்கும்..... லேசாக‌ ச‌ப்பென்றிருக்கும்... என்ன‌ செய்வ‌து... நம்ம‌ அப்பா என்ன‌ ஜ‌வ‌ஹ‌ர்லால் நேருவா..... க‌டித‌ம் எழுதுவ‌தில் நிபுண‌த்துவ‌ம் காண்பிக்க‌.....ஆனாலும் முறையாக வெளிப்ப‌டுத்த‌த் தெரியாவிட்டாலும், ஒவ்வொரு வார்த்தையும் அன்பையும், அக்க‌றையையும் அற்புத‌மாக‌ காட்டிக்கொடுக்கும்...உட‌னே பதிலுக்கு ஒரு கடிதம் எழுதாவிட்டால் மண்டை வெடித்துவிடும்.....(ஏங்க இதுவரைக்கும் யாருக்காவது மண்டை வெடித்திருக்கிறதா?). ஹாஸ்ட‌ல் ரூமில் க‌டித‌ம் எழுதுவ‌தே பெரிய‌ த‌வ‌மாக‌ ந‌ட‌க்கும். பெரும்பாலும் சுவ‌ர் ப‌க்க‌ம் பார்த்து உட்கார்ந்துதான் எழுதுவ‌து வ‌ழ‌க்கம். க‌டித‌ம் எழுதும் வ‌ரை அப்பா அம்மாவுட‌ன் பேசுவ‌து போன்றே ஒரு உண‌ர்வு ம‌ன‌து முழுதும் ஆட்டிப்ப‌டைக்கும்.

க‌ச‌ங்கி கிழியும் வ‌ரை ச‌ட்டைப்பைக்குளேயே க‌டித‌ம் கிட‌க்கும். இர‌ண்டு நாட்க‌ளில் க‌டித‌த்தின் பாதிப்பு பெரிதும் குறையும்....ஒவ்வொரு 15 நாள்க‌ளுக்கொரு முறையும் க‌டித‌ம் வ‌ருவ‌தும், போவ‌தும் வ‌ழ‌க்க‌மாய் ந‌ட‌க்கும்....

கால‌ம் ந‌க‌ர‌ ந‌க‌ர‌ நானும் வ‌ள‌ர்ந்தேன்.... ஹாஸ்டல் லைப் முடிந்தது. க‌டித‌ம் தேய்ந்த‌து..... டெலிபோன் வ‌ந்த‌து, கேபிள் டிவி வந்தது...... கடைசியாய் செல்போன் வ‌ந்த‌து..... காலப்போக்கில் க‌டித‌த்தில் ஒளிந்திருந்த‌ க‌ண்ணுக்கு தெரியாத‌ பாச‌மும் தேய்ந்த‌து......

................................................ நானும் எப்ப‌டியாவ‌து ஒரு க‌டித‌ம் எழுத‌வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம்.... அப்பா மிஸ்டு கால் கொடுத்து விடுகிறார்.......
குறிப்பு: மீள் இடுகை
-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

பெங்களூரு மாடுகளும், அழுக்குப் பாலும்

எனக்கு பெரு நகரங்கள் அவ்வளவாக பழக்கமில்லை. பெங்களூரு மட்டும் அடிக்கடி செல்லும் வழக்கம் இருப்பதால் காட்டன் பேட்டை பகுதியில் இருக்கும் நெரிசல் கொஞ்சம் பழகிப்போயிருந்தது...

அன்று காலையிலிருந்தே மழை சிணுங்கிக் கொண்டிருந்தது. அதுவே நம் ஊராக இருந்தால் சிணுங்கும் மழைக்கு ஊரே அடங்கிப் போயிருக்கும், ஆனால் அங்கு இயல்பு வாழ்க்கை சிறிதும் பாதிக்கப்படவில்லை. வேகமாய் மழை துளிர்க்கும் நேரங்களில் மட்டும் மக்கள் நடமாட்டம் சிறிது குறையும், மழை குறைந்தால் மீண்டும் வீதிகளில் நெரிசல் அதிகரிக்கும், இது போல் காலை முதல் மாலை வரை இயல்பாக மனிதர்கள் புழங்கிக் கொண்டிருந்தனர்.

தொழில் நிமித்தமாகப் போன நான், இரவு வரை இருக்க வேண்டிய காரணத்தால் மழையையும், மனிதர்களின் நெரிசலையும் மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தீன். மழையிலும் நெரிசலிலும் நிறைய சுவாரஸ்யங்கள் நடந்து கொண்டேயிருந்தது.

அவ்வளவு நெரிசலிலும் இரண்டு, மூன்று மாடுகள் வீதியில் முன்னும் பின்னும் வந்து போய்கொண்டிருந்தன. அது வட இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி, சிலர் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்கும் மாட்டின் பின் பக்கத்தை தொட்டுக் கும்பிடுவதும், அவர்கள் தொடும் போது மாடு வாலால் அடிப்பது சகஜமாக நடந்து கொண்டிருந்தது.

மாலை நான்கு மணியிருக்கும், சுமார் பதினைந்து வயதிருக்கும் ஒரு சிறுவன் பெரிய இரும்பு வாளியோடு வந்தான், நடு வீதியில் ஒரு மாட்டின் காலடியில் உட்கார்ந்தான், மாட்டிக் காம்புகளை லேசாக கசக்கினான். மாடு அசால்டாக நின்றது (எனக்கு சின்ன வயதில் பால் கறக்கும் மாட்டின் காம்புகளைத் தொட்டு உதை வாங்கியது நினைவிற்கு வந்தது)

மழை பெய்து அந்த இடம் சேறும் சகதியுமாக இருந்தது. இரண்டு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் அடுத்தடுத்து வேகமாக வருவதும், போவதுமாக இருந்தன. அடுத்த சில நிமிடங்களில் அந்த சிறுவன், இரும்பு வாளியில் “சர்சர்” என பாலைக் கறக்க ஆரம்பித்தான். கவனிக்க வேண்டிய விசயம் அவன் மாட்டின் காம்புகளை கழுவவேயில்லை. வேகமாக செல்லும் வாகனம் சிதறியடித்த சேற்றுத் துளிகளும் அந்த வாளியில் தொடர்ந்து விழுந்து கொண்டேயிருந்தது. அதைப் பற்றி அந்தச் சிறுவன் துளியும் கவலைப் படுவதாக தெரியவில்லை. மாடும் நடு வீதியில் பாலைத் தருவதும், பசியில் போஸ்டரைத் தின்பதும், ஓராமாய் கிடக்கும் குப்பையில் மீந்து போன காய்கறிகளைத் தேடுவதும் என “இதெல்லாம் சகஜம் பாஸ்” என்பது போல் சாவகாசமாக நின்று பால் கொடுத்துக் கொண்டிருந்தது.

கிராமத்தில் பச்சைப்புல்லும், வைக்கோலும் தின்று, வாகன ஓசைக்கு மிரளும் தோட்டத்து மாடுகளும், காம்புகளைச் சுத்தமாகக் கழுவி, மிகச் சுத்தமான பாத்திரத்தில் பால் கறக்கும் விவசாயிகளும் மனதிற்குள் கிண்டலாக சிரிப்பதுபோல் ஒரு விநாடி தோன்றியது.



-------------------------------------------------------------------------

இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

சிதையும் உண்மைகள்

ஒரு வருடத்திற்கு முன்பு நானும் என் மகளும் முன்னிரவு நேரத்தில் காரில் சென்று கொண்டிருந்தோம், எங்களுக்குப் பின்னால் ஒரு வாகனத்தின் சைரன் ஒலி கேட்டது,உடனே என் மகள் "அப்பா அது ஆம்புலன்சா" என கேட்டாள், பின்னால் திரும்பி பார்த்தபோது ஒரு காவல் துறை வாகனமும், ஒரு அமைச்சரின் வாகனமும் வந்தன. நான் "இல்லை அது போலீஸ் வண்டி" என்றேன், உடனே அவள் "முதல் வண்டி போலீஸ், அதற்கு பின்னால் வருவது யார்" என்றாள், அப்போது அவள் வயது 5, நான் அமைச்சரின் வாகனம் என்று சொன்னாள் புரியுமா எனும் சந்தேகத்தோடு அவளிடம் "அது மினிஸ்டர் கார், மினிஸ்டர் வந்தால் போலீசும் கூட வரும்" என்று சொன்னேன், அடுத்த விநாடி அவள் "மினிஸ்டர்னா கெட்டய்விங்க, கொலகாரய்ங்க" என்று சொன்னபோது அதிர்ச்சியின் உச்சத்தில் சட்டென வாகனத்தை நிறுத்தினேன். அதிர்ச்சி மிகுந்த குரலில் "ஏய்.. என்ன குட்டி சொல்றே, யார் உனக்கு இப்படி சொன்னது, உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்" என்றேன், "ம்ம் நான் டிவியில் பார்த்தேன்" என்றாள், "அப்படியெல்லாம் இல்லை, அப்படி சொல்லக்கூடாது" என்ற சொத்தை சமாதானத்தோடு, இறுகிய மனதோடு வாகனத்தை கிளப்பினேன்....


சமீபத்தில் ஒரு பெண் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சமீப காலமாக குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது பற்றி நிறைய கற்றுக்கொடுத்து வருகிறார். குழந்தைகளின் நுண்ணறிவு பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மேற்குறிப்பிட்ட நிகழ்வை கூறினேன். அப்போது அவர் கூறியதை கேட்ட பொழுது இன்னும் அதிர்ச்சியாய் இருந்தது...சில வருடங்களுக்கு முன்பு ஒரு அரசியல் தலைவர் பற்றி தன் மகனிடம் சொல்லும் போது, அவர் நிறைய ஊழல் செய்கிறார், மக்கள் மேல் கவனம் இல்லை என்று எதிர்மறையான உண்மைகளை சொல்லியிருக்கிறார். சில நாட்கள் கழித்து அவர் மகன் தொலைக்காட்சி பார்க்கும்பொழுது அந்த அரசியல் தலைவரின் கால்களில், அதே கட்சியைச் சார்ந்த பெரிய, பெரிய தலைவர்கள் கடவுளை போல் சுற்றி வந்து காலில் விழுந்து கும்பிடுவதை பார்த்திருக்கிறான். அந்த நிகழ்வின் உச்சகட்டமாக அவர்களின் உறவினரும், அந்த பகுதியைச் சார்ந்த ஒரு அமைச்சர் ஒருவர் அந்த தலைவரின் காலில் விழுவதை கண்டு அதிர்ச்சியோடு தன் அம்மாவை பார்த்து ஒரு கேள்வி கேட்டிருக்கிறான்... "ஏம்மா.... நீ அந்த தலைவர் மிக மோசம் என்றாய், ஆனால் இத்தனை பேர் அவர் கால்களில் விழுந்து வணங்குகிறார்கள், அதுவும் நம்ம சொந்தக்கார தாத்தா நல்லவர்தானே, அவரும் கூட காலில் விழுந்து கும்பிடும் போது, நீ சொன்ன மாதிரி அந்த தலைவர் எப்படி மோசமானவராக இருக்க முடியும். நீதான் தப்பு தப்பாக எனக்கு சொல்லிக்கொடுக்கிறாய்" என்று வருத்தப்பட்டிருக்கிறான். என்ன சொல்வதென்று தெரியாமல் இவரும் விழித்திருக்கிறார்.


குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க முனையும் போது பெற்றவர்களுக்கு விழிபிதுங்குகிறது. புறக்கூறுகள் வேகமாக, வித்தியாசமாக நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றன. சில நேரம் சரியாக, பல நேரம் தவறாக.... குழந்தைகள் கேட்கும் அசாத்தியமான கேள்விகள் பல நேரம் அடி வயிற்றில் பயத்தை கிளப்புகின்றன. சில நேரம் ஆச்சரியத்தை கிளப்புகின்றன.


பல நேரம் நாம் சொல்லும் உண்மை அவர்களுக்கு பொய்யாக தெரிகிறது, அவர்கள் சொல்லும் உண்மை நமக்கு பொய்யாக தெரிகிறது.




குறிப்பு: மீள் இடுகை


-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.