இன்டயில இருந்து உங்களுக்கு ஒரு மகள் கூட இருக்கு சார் Sir.


நீண்ட நேர கடும் பயணத்திற்குப் பிறகான இரவில் கிட்டும் ஆழ்ந்த உறக்கம் அலாதியானது. எத்தனை தூங்கினாலும் சில நொடிகளில் எழுந்தது போலவே இருக்கும். திங்கட்கிழமை இனிதே விடிந்தது. அடுத்த திங்கட்கிழமை வரை நாட்கள் பரபரப்பாக இருக்கும் எனும் மனநிலை சூழ்ந்தது. கடந்த ஆண்டு போல் காலை மாலை என இந்த ஆண்டு நிகழ்ச்சிகளைத் திட்டமிடவில்லை. கடந்த ஆண்டு ஒரே நாளில் இரு நிகழ்ச்சிகள் மற்றும் இடையே பயணங்கள் என்பது மிகுந்த நெருக்கடியைக் கொடுத்திருந்தது.

ஏறத்தாழ ஒராண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கை பாடசாலைப் பிள்ளைகளை சந்திக்கச் செல்கிறேன். முதல் நாள் வழக்கம்போல் மொழிச் சவால் நிறைந்ததாகத்தான் இருக்கும். இருவருக்கும் தமிழ்தான் என்றாலும், நம்ம ஊர் சொற்களுக்கும், அவர்கள் பாவிக்கும் சொற்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அவர்களோடு உரையாடும்போதுதான் நினைவில் உறங்கிக் கிடக்கும் சில சொற்கள் மெல்ல மேலெழும்பி வரும். ஒருவாறாக இலங்கை தமிழ்ச் சொற்களை பயணத்தின் இறுதிக்குள் பழக்கப்படுத்திக் கொள்ளவே முயற்சி செய்வேன்.

*

புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலை.

நான் பாடசாலைக்குள் நுழையும்போதே மாணவிகள் தயாராக அமர்ந்திருந்தனர். அதிபர் அருட்சகோதரி சாந்தி மேரி முகப்பில் நின்று வரவேற்றார். கடந்த ஆண்டு நிகழ்வில் பங்கெடுத்த மூத்த மாணவிகளில் சிலர், இந்த ஆண்டு பங்கெடுக்கும் மாணவிகளிடம் நிகழ்ச்சி குறித்து பகிர்ந்து, எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வைத்திருந்திருந்தார்கள். மிகுந்த உற்சாகத்தோடு இருந்த மாணவிகளின் சிறப்பான பங்கேற்போடு முதல் நிகழ்வே மிகத் திருப்தியாக அமைந்தது.



*

கண்ணன்குடா மகா வித்தியாலயம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில், அந்த வலயத்தின் பல்வேறு பாடசாலைகளில் படிக்கும் மாணவ மாணவிகளில் சிலரைத் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைத்து நடத்தப்படும் பயிலரங்கு. பயிலரங்கிற்குச் செல்லும் வழியில் வலயகக் கல்வி அலுவலகத்தில் நடந்த நவராத்திரி விழா நிகழ்வு பூஜையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

வலயகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் பிரத்யேகமான முயற்சிகள் எடுத்து ஆசிரியர்கள் தம் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர். வலயக மற்றும் மாகாண கல்வித் துறை சார்ந்த உயர் பொறுப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அற்புதமான வரவேற்புடன் நிகழ்வு தொடங்கியது. மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் , ஸுரநுதன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்தனர்.




~

வலயகத்தில் இருக்கும் பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிலரங்கு. நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்திருந்த வலயக கல்வி பணிப்பாளர், வேறு பணிகள் இருப்பதால், நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டு, நிகழ்ச்சி நிறைவடைவதற்குள் வந்து விடுகிறேன் என்றவர், முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தார். இடைவேளையின்போது துவங்கியவுடன் சென்றிருக்க வேண்டும். ஆனால் செல்ல முடியாமல் என்னை இருக்க வைத்துவிட்டீர்கள் என்றபடி, நீங்கள் தொடர்ந்து நடத்துங்கள், நிறைவில் வருகிறேன் என்றார். எனினும் தொடர்ந்து நிகழ்ச்சி முழுக்க அமர்ந்திருந்தார். ஏறத்தாழ தானும் ஒரு பங்கேற்பாளர்போல நிகழ்வில் உற்சாகத்துடன் கலந்தும் கொண்டார். நிறைவடைந்ததும், நிகழ்வின் துவக்கத்திலும் இடையிலும், பணி நிமித்தம் செல்ல நினைத்ததாகவும், நிகழ்ச்சி தன்னை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை எனக் கூறியதை எனக்கான பாராட்டாக எடுத்துக் கொண்டேன்.




*
புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்

பாடசாலையில். தன்னார்வ அமைப்பான CERI ஒரே தினத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். காலை 8 மணி முதல் 10.30 மணி வரை பாடசாலை ஆசிரியர்களுக்கும், 10.45 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை பிள்ளைகளுக்கு பயிலரங்கு நடத்தப்பட்டது. CERI தன்னார்வ பணியாளர்கள் எல்லா விதங்களிலும் உடனிருந்து நிகழ்விற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அமைப்பின் மேலாளர் எபினேசர் மற்றும் பணியாளர்கள் மிகுந்த அன்பிற்கு உரியவர்கள்.



*

வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை

நவராத்திரி பூஜைகள் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்ததால் வழக்கமான அரங்கத்திற்குப் பதிலாக மாற்று அரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் ஒலி / ஒளி அமைப்புகள் மட்டும் சவாலாக இருந்தன. அதை சரி செய்திட அங்கிருந்த ஆசிரியர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி மகத்தானது. எத்தனை சவால்கள் இருந்தாலும் அதனால் என்ன என்பது போல் மாணவிகளின் தரமான பங்களிப்பு பெரிதும் கை கொடுத்தது.


*

ஒரு வார காலத்தில் ஆறு பயிலரங்குகளில் ஏறத்தாழ 250 ஆசிரியர்கள் மற்றும் 850 மாணவ மாணவியர்களைச் சந்தித்து உரையாடிய நிறைவு இந்த முறை ஏற்பட்டது. நகரத்துப் பிள்ளைகள் ஒரு பக்கம், உள்ளடங்கிய கிராமத்துப் பிள்ளைகள் இன்னொரு பக்கம் என மாறி மாறிப் பயணித்து, இரண்டு தரப்புகளோடு கலந்துரையாடி பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன.

ஆசிரியர்களுக்கான அமர்வுகளில் பகிரும் அனைத்தையும் உள்வாங்கும் வேட்கை அவர்களிடமிருந்ததை உணர்ந்தேன். இலங்கையில் பாடசாலைகள் அரசு வசம் தான். இந்தப் பயிலரங்கில் சந்தித்த ஆசிரியர்கள் புத்தகம் வாசிப்பதில் பேரார்வம் காட்டினர். ஒவ்வொரு அமர்விலும் புத்தகங்களை எப்படி பெற்றுக்கொள்வது என ஆர்வமுடன் கேட்டனர். கைவம் வைத்திருந்த #வேட்கையோடு_விளையாடு புத்தகங்கள் அனைத்தையும் வேட்டையாடினார்கள் என்றே சொல்ல வேண்டும்.



ஆண்டு முழுக்க நிகழும் இது போன்ற பயணத்தில், வழி தோறும் நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் கைகள் பற்றிக் குலுக்கி, தமக்கு சரியான கதவுகளைக் காட்டியிருக்கிறீர்கள் என்கிறார்கள்.

"இன்டயில இருந்து உங்களுக்கு ஒரு மகள் கூட இருக்கு சார் Sir. அது நான்தான் .. Thank you so much appa" என்று ஒரு முகம் தெரியாத மகள் எழுதியது தொடங்கி... ஒரு கடிதம் எழுதுங்க என்று 15 நிமிடம் ஒதுக்கிய நேரத்தில், நான் நிறைய எழுத வேண்டும் என அனுமதி வாங்கி 45 நிமிடங்கள் எழுதி, நிகழ்ச்சி முடித்ததும் தன் குடும்பம், அவர்களின் தேவை உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு கதறி அழுதது வரை...
"
பயிலரங்கு நிகழ்வுகள் என்பது, எனக்கு ஒருவரை புதிதாய் சந்திக்கும் அனுபவத்தையும், அவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு நேரமாக இருப்பதாயும் மட்டும் அமைவதில்லை. அது தேவையானவர்களுக்கு சரியான கதவுகளைத் திறந்துவிடும் அதி முக்கியத் தருணம்.

- அக்டோபர் முதல் வாரம்’ 2019

#KathirSLTrip #SriLanka #Batticalo #SLTB


No comments: