வலிக்கும் நியதி


வலி
றித்த சிவப்பு ரோஜாவின்
காம்பில் ஈரமாய்க் கிடக்கிறது
இரத்தம் நிறமிழந்து


உறவு
டிமாட்டுக்கு லாரி ஏறிய
மடிவற்றி மாட்டின் தலக்கயிறு
கனவில் இறுக்குகிறது கழுத்தை




நியதி
பூ மட்டுமா உதிர்கிறது
தேடிவரும் தேனீயின்
நம்பிக்கையும் தானே




முகம்
த்தனை திருத்தியும்
ஏனோ நிறைவில்லை
சகிக்காத கண்ணாடியின் சாபம்


  ____________________

மறுபடியும்

தமிழ், மலையாளம், தெலுங்கு, அஸ்ஸாம் என கதம்பமாய் கோர்த்த மாலைபோல் பலதரப்பட்ட மொழி பேசும் மாணவ, மாணவியர்கள் நிரம்பிய வகுப்பறை அது. மாணவர்கள் ஆறு அணிகளாக பகுக்கப்பட்டு, அவர்களுக்காக ஒரு பணி இடப்படுகிறது. ஒதுக்கப்பட்ட பதினைந்து நிமிடங்களுக்குள், அந்த வகுப்பறை அமைந்துள்ள கட்டிடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் கிடை(ட)க்கும் பொருட்களை சேகரித்து வரவேண்டும்.

பரபரப்பாக கட்டிடத்தைச் சுற்றியும், மைதானத்திற்குள் இரை தேடும் பறவையாக பறந்தோடினர். குழுவாக செயல்படுவதில் சிரிப்பும், குதூகலமும், கும்மாளமும் கொட்டிக் கிடந்தது. ஒரு வழியாய் நேரம் முடிவதற்குள் அவர்களை ஒன்று திரட்டி, தாங்கள் சேகரித்த பொருள் குறித்து நல்லவிதமாக (Positive) கருத்துகள் பகிரவேண்டும் என்பது நிபந்தனை

உண்மையாய் சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் சேகரித்து வந்ததில் 90% வெறும் குப்பைகள் மட்டுமே. உதாரணத்திற்கு காலி சிகரெட் பெட்டி, தேங்காய் சிரட்டை, தென்னைமரத்திலிருந்து விழுந்த பன்னாடை, தென்னை ஈர்க்குச்சி, பிளாஸ்டிக் டம்ளர், பாட்டில் மூடி, உடைந்த பிளேடு, ரப்பர், நூல்.......... இது போல் பற்பல பொருட்கள். இவையெல்லாம் உபயோகப்படுத்தி அல்லது இயற்கையாய் விழுந்து இனி இது பயனில்லை என நினைத்த குப்பை வகைகளே.

ஒவ்வொரு அணியாய் தாங்கள் சேகரித்த பொருட்களைப் பற்றி நல்லவிதமாக சொல்லவேண்டும் என்ற நிர்பந்தத்தால் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு, தற்சமயம் இருக்கும் நிலையில் இருந்து, அதை மீண்டும் பயன் படுத்த முடியும் என்பது போல் உதாரணத்திற்கு...

காலி சிகரெட் பெட்டியின் உள் பக்கம் - அவசரத்திற்கு ஏதாவது குறித்து வைத்துக்கொள்ள உதவும்.

காலி தீப்பெட்டி அட்டையை மடித்து லேசாய் ஆடும் மேசைக்கு அடியில் வைக்கலாம்.

பாட்டிலின் காலி மூடியை சுத்தம் செய்து மீண்டும் உபயோகப்படுத்தலாம்

தேங்காய் சிரட்டையை தேய்த்து, உடைந்த பிளேடு மூலம் வித்தியாசமான படம் ஒன்றை செதுக்கலாம்.... என்பது போல், வித்தியாசமான சிந்தனைகளோடு தாங்கள் எடுத்து வந்த பொருள் குப்பையே ஆகினும், சற்றும் விட்டுக் கொடுக்காமல் அது குறித்து சிலாகித்து பேசியதைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஒரு நிர்பந்தம், போட்டி என்று வந்தால் நாமோ அல்லது பிறரோ உபயோகித்து, குப்பை என்று தூக்கி எறிந்த பொருளைக்கூட கொண்டாட முடிகிறது.

ஒன்றை தூக்கி எறிவதற்கும், ஒரு நிர்பந்தம் வந்தால் கொண்டாடுவதற்கும் அந்த பொருளின் தன்மை மட்டுமே காரணமா? அல்லது நம் மனதும் காரணமா? அந்த நிகழ்வு ஒரு விதையாக, ஒரு நெருப்பு கங்காக மனதில் விழுந்தது.

வாழும் காலம் முழுதும் நாமும் குப்பைகளை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். சில சமயம் பொருட்களில், சில சமயம் மனித உறவுகளில். தாய், தந்தை, கணவன், மனைவி, பிள்ளைகள், உறவு மற்றும் நட்பு இதில் ஏதோ ஒன்றை சட்டென எதன் பொருட்டோ, ஏதோ ஒரு சூழ்நிலையில் நம்மை விட்டு குப்பை போல் தூக்கி எறிந்திருந்திருப்போம்.

ஒன்றைத் தூக்கி எறியக் காரணமாயிருப்பது அதன் தன்மையாவும் இருக்கும், சில சமயம் நம் மனதாகவும் இருக்கும்!!!!

நிர்பந்தம் வந்தால் தூக்கி எறிந்த ஒரு குப்பையைக் கூடக் கொண்டாடக்கூடிய மனிதனால், இரத்தமும், சதையுமான இன்னொரு உறவை, ஒரு காலத்தில் நம்மோடு இருந்த உறவை, கொண்டாடமுடியாதா என்ன? கொண்டாட முடியாவிட்டாலும் கூட, படிந்திருக்கும் பகை உணர்வையாவது சற்றே துடைத்தெறிய முடியாதா?

தூக்கி எறியும் பொருட்களுக்குப் பதிலாக அதற்கு நிகராகவோ, கூடக் குறையவோ மாற்றுப் பொருளைப் பெற்றுவிட முடிகிறது, ஆனால் மனிதர்களுக்கு மாற்று பெறுவது கடினமாகவே இருக்கிறது. காரணம் மனிதர்கள் கைரேகைகளைப் போலவே, ஒருவரோடு ஒருவர் வித்தியாசப் பட்டே இருக்கின்றனர்.
________________________________________

பயணங்கள்


பயணம் 1:
அவசரமான உன் வெளியூர்ப் பயணம்
பயணச்சீட்டு, பணம், பற்பசை, சீப்பு,
சோப்பு, பவுடர், பூட்டு, சார்ஜர், கண்ணாடி
போர்வை, எதற்கும் கூடுதலாய் உடை
திரும்ப திரும்ப நினைவூட்டுகிறேன்
அலுத்துக்கொள்கிறாய் எல்லாம் இருப்பதாய்
வண்டி நகர்ந்த பின் வெற்று மார்பில் உணர்கிறேன்
நினைவூட்டாமலே நீ எடுத்துப்போனதை

பயணம் 2:
நியாயங்களின் இயலாமைகளும்
அநியாயங்களின் களிப்புகளும்
சன்னலோரப் பயணத்தின்
எதிர்காற்று கலைக்கும் கேசமாய்
வளைத்து ரசிக்கிறது நம்பிக்கை நாணலை...
ஒரு போதும் கவலையில்லை
வளைந்த வேகத்தில் நிமிரும் நாணலுக்கு...

பயணம் 3:
நேசம் தொலைந்த நெருக்கத்தில்
உராய்வின் எரிச்சல் வியர்வை ஈரத்தில்
மூன்றாம் வகுப்பு பெட்டிப் பயணத்தில்
உருவாகும் பொதுவுடமைத் தத்துவம்
யாரோ எழ யாரையோ தள்ளித்தாவிய
சன்னலோர இருக்கையில்
கட்டியணைக்கும் காற்றின் காதலில்
சட்டெனெ காணாமல் போவதேனோ?

______________________________________

பகிர்தல் (17.02.2010)

அடப்பாவிகளா!!!:

வழக்கம் போல் சாலையோரம் நடப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனர்தான் என அலட்சியத்தோடு அந்த மண்டபத்தின் முன் கடந்து கொண்டிருந்தேன். ஒரு கட்சியின் தலைவர் தன் மனைவியோடு கையில் தாம்பூலத் தட்டுடன் நிற்கும் படம். குறு நகைப்போடு கடந்த எனக்கு அந்த வாசகம் சுறுக்கெனத் தைத்தது.

//எங்கள் தங்கத் தலைவன் XYZ-ன் நல்லாசியுடன்....
பூப்பெய்திய எங்கள் செல்ல மகளுக்கு
பூப்பு நன்னீராட்டு விழா... //
என்ற வாசகங்களோடு...

அடப்பாவிகளா.... இந்த குழந்தை பூப்பு அடைந்ததும், அந்த தலைவன் நல்லாசியோடுதானா!!!?

நல்லாக் காட்டுறீங்கய்யா... உங்க விசுவாசத்த!!!

பாவம் அந்தச் சிறுமி...

#######

வெ(ற்)றி நடை:

ஆதித்யா சேனல் மட்டும் தான் சன் குழுமத்தில் நகைச்சுவை சேனல் என்று நினைத்தால் அது தவறு. வெள்ளிக்கிழமை பதினொரு மணிக்கு சன் பிக்சர்ஸ் படம் வெளிவந்தால், 11.15 மணிக்கே தமிழகமெங்கும் வெற்றி(!!!) நடை போடும் என்று பந்தாவாக போட்டு எல்லாச் சேனலிலுல் தமாஷ் செய்கிறார்கள்

விளம்பரம் மூலம் வெறுப்பேற்றி, ஒரு படத்தைக் கூட பார்க்க விடாமல் செய்த சன் தொலைக்காட்சியின் அத்தனை சானல்களுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். ஒரு வேளை இத்தனை விளம்பரம் வராமல் இருந்திருந்தால், சில படங்களையாவது தியேட்டருக்குப் போய் பார்த்தாலும் பார்த்திருந்திருப்பேன்...

#######

பென்சில் நதி:

பெரும்பாலும் பத்து வார்த்தைக்குள் தான் இருக்கும் இவரின் கவிதைகள். ஆனால் நீண்ட நேரம் தனக்குள்ளே அமிழ்த்தி வைத்திருக்கும் படைப்பாளி. ஒவ்வொரு முறையும், ஆசையோடும் ஆச்சரியத்தோடும் இவர் தளத்திற்குச் செல்வேன். ஒரேயொருமுறை கூட ஏமாற்றியதில்லை இவரின் கவிதைகள்.

பென்சில் நதி என்ற வலைப்பூவில் எழுதிவரும் ராஜா சந்திரசேகரின் கவிதைகளை

நீங்களும் வாசித்துப்பாருங்கள்

#######

பள்ளிக் கட்டணம்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வாகனங்களின் தரத்தை உறுதி செய்யுமாறு அரசாங்க உத்தரவாம். இது வரை மாதம் ரூ.400 (11x400=4400) கொடுத்துப் பள்ளி சென்று கொண்டிருந்த என் மகளின் அடுத்த ஆண்டு வாகனக் கட்டணம் மட்டும் வருடத்திற்கு ரூ. 10500. பெற்றோரே தன் சொந்த வாகனத்தில் கொண்டு வந்து விட வேண்டும் அல்லது பள்ளி நிர்ணயித்திருக்கும் வாகனத்தில் மட்டும் தான் அனுப்ப வேண்டும். இன்னும் அடுத்த ஆண்டு பள்ளிக் கட்டணத்திற்கான ஓலை வரவில்லை. மணியோசை மட்டும் வந்திருக்கிறது, யானை வரும் பின்னே!

#######

ஒரு கேமராவும், ஓவர் பில்டப்பும்

நீண்ட நாட்களாக ஒரு கேமரா வாங்கனும் ஆசை. ஆசைப்பட்டதெல்லாம் செரி, ஆனா அதுக்கு காசு வேணுமேன்னு நானும் சும்மா இருந்தேன். அதுவும் வலையுலகத்துக்கு வந்தபிறகு ஆளாளுக்கு போட்டோ போடுறதப் பார்த்துட்டு செரி நாமளும் ஒரு கேமரா வாங்கிடாலாம்னு ஒரு நாள் பேச்சுவாக்குல, நண்பர் சிங்கப்பூர் பிரபாகரிடம் “பிரபா ஒரு கேமரா வாங்கனும், ஏதாவது ஐடியா கொடுங்கன்னு கேட்டேன்”.

“பொறுங்க கதிர், நான் இங்கேயிருந்து உங்களுக்காக நல்லதா ஒன்னு வாங்கி அனுப்புறேன்”னு சொன்னார், கிட்டத்தட்ட நான் அத மறந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட நேரத்துல, (அட இப்போதான் மூனாவது டேர்ம் பீஸ் கட்டிமுடிச்சம்ல).

நான்கு நாட்களுக்கு முன் போன் செய்த பிரபாகர் ”கதிர் உங்களுக்காக ஒரு கேமரா வாங்கியிருக்கேன், பிரண்டுகிட்டே கொ்டுத்து அனுப்புறேன், சென்னையில வானம்பாடி அய்யாகிட்ட கொடுக்கச் சொல்றேன், நீங்க கலக்ட் பண்ணிக்குங்க”.

”பிரபா அமௌண்ட் எங்க அனுப்பட்டும்”

“ஒரு பார்ட் பிரண்டோட அக்கவுண்ட் நெம்பர் தர்றேன் அதுல கட்டிடுங்க, மீதிய நான் உங்கள பாக்கும்போது கலக்ட் பண்ணிக்கிறேன்” என்றார்.

சரிடா... கைப்புள்ள பணத்த ரெடி பண்ணுன்னு ரெண்டு நாளா, என்னை நானே தயார் படுத்தும் போது... வானம்பாடிகிட்டே இருந்து ஒரு மெசேஜ் “மெயில் பாருங்கன்னு”

மெயில் பார்த்தா “சில்வர் கலரு ஜிங்குச்ச்சான்னு” கேமராவோட படத்தையும், அதோட விபரங்களையும் அனுப்பி.... சாமி சாமான் வந்துருச்சு... பணத்தை ரெடி பண்ணிக்கோங்க“ என்றிருந்தது.

இனி தவிர்க்க முடியாது, தப்பிக்க முடியாதுங்கிற நிலமையில “பிரபா, பாலாண்ணா கேமராவ வாங்கிட்டாராம், அக்கவுண்ட் நெம்பர் குடுக்கவே மாட்டேங்கிறீங்க(!!!!) கொடுத்தாத்தானே பணம் அனுப்ப முடியும், எப்படியாவது ஒன் வீக்ல அக்கவுண்ட குடுங்க பிரபா... அப்போதானே அமௌன்ட் ட்ரேன்ஸ்பர் பண்ணமுடியும்னு (எப்படியும் ஒருவாரம் கழிச்சுத்தான் அக்கவுண்ட் நம்பர் தருவாருன்னு (பிரபாகரை என்ன மாதிரி சோம்பேறின்னு நினைச்சு)) பந்தா காட்ட, இருங்க இப்போ அக்கவுண்ட் டீடெய்ல்ஸ் தர்றேன்னு சட்டுன்னு அனுப்பிட்டாரு.... அடக் கெரகமே ஜிமெய்ல் இவ்வ்வ்வளவு வே..க...மாவ்வ்...வா இருக்குது !!!... நாங்க டிசைன் பண்ணி புரூப் அனுப்பினா மட்டும் வரவேயில்லைனு பலதடவ  பிரச்சனையாகும், ஆனா பாருங்க, நாம பணம் கட்டனும்னா மட்டும் பொசுக்குன்னு உடனே வந்துருது”.

பிரபாகர் சொன்ன கணக்குல பணத்த டிரான்ஸ்பர் பண்ணிட்டு, சதாவுக்கு லவ் லட்டர் கொடுத்துட்டு நெஞ்ச நிமுத்தி நடந்த அந்நியன் விக்ரம் மாதிரி தொப்பையோட உதவியால நெஞ்ச நிமுத்தி வானம்பாடிக்கு போன போட்டு ”அண்ணா, இன்னிக்கு வண்டியில கொடுத்து விட்டுறீங்களான்னு (அது ஒரு ரகசிய சர்வீஸ், ரயிலு வண்டி டிரைவர் மூலமா பண்ற வேலை) ஆசையாய் கேட்க!! (அதுதான் காசு அனுப்பிட்டம்ல... அனுப்பிட்டம்ல)

”இல்லீங்க, ஞாயித்துக்கிழமை வைஃபும், தம்பியும் ஒரு வேலையா ஈரோடு வர்றாங்க அவங்ககிட்ட கொடுத்துவிடறேன்” என்றார். அவரோட தம்பி ஒரு இன்ட்ரஸ்டிங் கேரக்டர், அவர சந்திக்கிறது ரொம்ப சந்தோசம் கூடுதலா

இதுக்குள்ள இந்த கேமரா வாங்குற மேட்டர வீட்ல ப(நொ)ந்தாவ சொல்லிருந்ததால ஸ்கூல்ல இருந்து வந்தவுடனே நாலு நாலா, பாப்பா போன் பண்ணிகேட்க... இன்னிக்கு வந்துடும்டா குட்டின்னு சமாளிச்ச சோகம் எனக்குத்தானே தெரியும்...

எப்படியும் ஞாயித்துக்கிழமைதான் கேமரா வரப்போகுது, நாமதான் அவசரப்பட்டு 48 மணிநேரம் முன்னாடி பணத்த அனுப்பிட்டோம்ங்கிற சோகத்த தணிக்க ”என்ஜாய்! நோ தங்கமணி” திட்டத்தின் கீழ்(!!!! 2 ம்ணி வரைக்கும்), ஞாயித்துக்கிழமை காலையில 9 மணி வரைக்கும் தூங்கிட்டு எந்திரிச்சு பார்த்தா ஏழெட்டு மிஸ்டு கால், திருப்பி யாருண்ணு கூப்பிட்டா, நம்ம வானம்பாடியோட தம்பி...

ஆஹா... கேமரா வந்துடுச்சேன்னு அரைத் தூக்கத்துலேயே ஆர்வமா பேசினா, நாங்க இப்போ வெளியில இருக்கிறோம், மத்தியானம் கூப்பிடறோம் நீங்க வந்து வாங்கிக்கங்கன்னு சொன்னார்....

புஸ்ஸ்ஸ்ஸுன்னு காத்துப்போன பலூனா... மத்தியானம் வரைக்கும் ஆபிஸ் வேல பார்த்துட்டு, மாமியார் வீட்ல காத்துகிட்டிருக்கிற கோழிக்கறியா இல்ல கேமாராவான்னு பட்டிமன்றம் நடத்தினதுல கோழிக்கறி ஜெயிக்க (அவங்க எப்படியும் நைட் ட்ரெயினுக்குத்தான் கிளம்புவாங்கங்கிற தைரியத்துல) அங்க எஸ்கேப் ஆகிட்டேன். அங்கபோனா இடுப்புல கைய வச்சிகிட்டு கேமராவ வரவேற்க எங்க பாப்பா தயாரா நின்னுக்கிட்டிருந்திச்சு...

”இல்லடா குட்டி, வீட்டுக்கு போகும் போது வாங்கிக்கலாம்”னு ஒரு வழியா சமாளிச்சு, நல்ல்ல்ல்ல்லா சாப்பிட்டுட்டு, அரைத் தூக்கத்துல் ஆழ்ந்திருக்கும்போது போன், ”நாங்க நைட் கிளம்பனும், அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஷாப்பிங் இருக்கு நீங்க எதுக்கும் கேமராவ ஆறரை மணிக்குள்ள வந்து வாங்கிக்கங்க”னு சொல்ல, அவசர அவசரமா தூங்கிக்கிட்டிருந்த பாப்பாவ தூக்கி வண்டியில போட்டுக்கிட்டு பாதியில வரும்போது “ஏம்பா.. என்ன தூக்கத்துலயே தூக்கிட்டுப் போறீங்கன்னு கேட்க”

”குட்டிம்மா கேமரா வாங்கப்போறோம்டா”னு சொல்ல.... ”ஹைய்யா”னு வண்டிக்குள்ளேயே பாப்பா குதிக்க ஆரம்பிச்சது..

வரும் வழியில் வீடு, ”சரி ரெண்டு பேரையும் வீட்ல ட்ராப் பண்ணிட்டு நான் போய் கேமரா வாங்கிட்டு வர்றேன்”னு சொல்ல ”அதெல்லாம் முடியாது நானும் வருவேன்”னு பாப்பா அடம்பிடிக்க. காரிலேயெ ரெண்டு பேரையும் காத்திருக்கச் சொல்லிட்டு அவங்க தங்கியிருந்த அறைக்குப் போய் கேமராவா பாக்ஸை வாங்கிட்டு காருக்கு வந்து சேர

பரபரப்பா காத்துக்கிட்டிருந்தா பாப்பா... அவசர அவசரமா பாக்ஸ பிரிச்சு ஒவ்வொண்ணா எடுத்துச்சுச்சு... ”அப்பா என்னென்னமோ இருக்கு கேமராவ காணோம்”

“ஏய்... இருக்கும் குட்டி, நல்லாப் பாரு”

”அப்பா, சி.டி இருக்கு, என்னமோ புக் இருக்கு, ஒயரெல்லாம் இருக்கு.... ம்ம்ம்ம்.. இருங்க இன்னொன்னு இருக்கே... இதுதான் கேமராவா!!!??”

”என்னங்க இது, மைசூர் சேண்டல் சோப் சைஸ்ல இருக்கு கேமரா” பத்தாததுக்கு ஊட்டுக்காரம்மாவோட டயலாக்.... நாலுநாளா குளிக்க சோப்பு வாங்கி வைக்க துப்பு இல்ல, இதுல சோப்பு மாதிரியாம்....

”அப்பா... இதுதான் கேமராவா”

”ஆமாங்குட்டி”

”இது உங்களுக்கே ஓவராத் தெரியல, இந்த கேமராக்குத்தான் சிங்கப்பூர், பிளைட்டு, மெட்ராசு, ட்ரெய்ன்னு..... இத்தன நாளா இந்த பில்டப் உட்டீங்களா? இதுல..... என்ன தூக்கத்துல வேற தூக்கிட்டு வந்தீங்களாக்கும்,

டமால்னு வெடிச்சமாதிரி இருந்துச்சு... அட இப்போத்தானே டயர் மாத்தினோம்னு அவசரமா கார் டயர பார்த்தா அங்க ஒன்னுமே ஆகல, அப்புறம்தான் தெரிஞ்சுது என்னோட இடது பக்க நெஞ்சுல வந்த புகையும், கருகல் வாசமும்

பொறுப்பி: பிரபாகர், வானம்பாடி ஏதாவது டேமேஜ் ஆகியிருந்தா பொறுத்தருள்க.  பிரபாகர் அனுப்பிய Panasonic DMC FS-42 கேமரா மிக சிறியதாக, அழகாக உள்ளது. படமும் தெளிவாக இருக்கிறது.

_____________________________________________________

கசக்கும் இனிப்பு

தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாய் கரும்புச் சர்க்கரை மாறிவிட்ட நேரத்தில். சடசடவென உயரும் சர்க்கரை விலை மிகப் பெரிய கசப்பு அனுபவமாக மாறியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு மூன்று ரூபாய்க்கு இருந்த தேநீர் விலை இப்போது ஆறு ரூபாய்.

யாரிடம் முறையிட....
தேநீர்க் கடை நடத்துவோரையா, சர்க்கரை மண்டி வியாபாரிகளையா, சர்க்கரை ஆலைகளையா அல்லது கரும்பு விவசாயிகளையா..... அல்லது நம்மை வழிநடத்தும்(!!!) மந்திரிகளையா? யாரை நோக்கி விரல் சுட்ட!!!?

மனதின் ஓரத்தில் ஒரு ஈனக்குரல் எழும்புகிறது... கரும்பு விளைச்சல் இல்லாததற்கு அரசாங்கத்தையும், சம்பந்தப்பட்ட துறை மந்திரிகளை எப்படிக் குறை சொல்வது.... ஆனால் அதுதான் நிஜமா?

நடுத்தர குடும்ப அலட்சியம் மிக இயல்பாக இதைக் கடந்து போகிறது, எல்லாம் விலையேறுகிறது, நம் கையில் என்ன இருக்கு? நாம் என்ன செய்ய முடியும் என தாராளமான சகிப்புத் தன்மையோடு.

ஓராண்டுக்கு முன் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் சர்க்கரை இறக்குமதி குறித்த செய்தியில், வெளிநாட்டு விவசாயி ஒருவர் “இரண்டு வருடமாக நாங்கள் எத்தனால் தயாரிப்பை நிறுத்திவிட்டு, முழுக்க முழுக்க சர்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். 2009 பிற்பாதியில் இந்தியாவில் சர்க்கரைத் தேவை அதிகம் இருக்கும் என எதிர்பார்த்து இதைச் செய்கிறோம்” என்று பேட்டியளித்தார்.

(*சென்ற வருடம் தான்... கரும்பிலிருந்து வரும் மொலாசிஸ் மூலம் கிடைக்கும் எத்தனால் எரிபொருளை 10% மற்ற எரிபொருட்களுடன் கலந்து இந்தியாவில் பயன்படுத்த நமது அரசாங்கம் அனுமதியளித்தது. மனிதர்களின் உணவுப்பொருளை எரிசக்திக்கு மாற்றாக பயன்படுத்த ஆரம்பித்தால் மிகப் பெரிய தவறாக முடியும் என்ற கருத்தும் உண்டு.)

மூன்று வருடங்களுக்கு முன்பு, கரும்பைக் கொள்முதல் செய்ய யாரும் வராததால் அப்படியே காட்டில் தீ வைத்து கொளுத்திய கொடுமையும் நடந்த காலகட்டத்தில்தான் வெளிநாட்டு விவசாயத்துறை தங்கள் விவசாயிகளை எத்தனால் தயாரிப்பதை நிறுத்திவிட்டு இந்தியாவுக்கு சர்க்கரையை தயார் செய் என்று அறிவுரை வழங்குகிறது.

இங்கே கொள்முதல் செய்யப்படாமல் கொளுத்தப்பட்ட கரும்புக்கு வெறும் 1000 நாட்களில் வேறு நாடுகளில் கையேந்தும் அவல நிலையில் இருக்கிறோம். ஏன் இத்தனை முரண்பாடு... விவாசாயிகளை அதிகம் கொண்டிருக்கும் இந்த தேசத்தின் வேளாண்மைத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது.

மத்திய வேளாண்துறை மந்திரி, இதற்கு பிரதமரும், மத்திய அமைச்சரவையும் தான் காரணம் என்கிறார். அவர் சார்ந்துள்ள கட்சிப் பத்திரிக்கை அவரை ஆதரித்து செருப்பில் அடிப்பது போல் ஒரு அறிக்கை விடுகிறது ”சர்க்கரை சாப்பிடாவிட்டால் செத்தா போய்விடுவார்கள்” என்று.... அதோடு மட்டுமா... மிகுந்த அறிவுபூர்வமாக அறிவுரை வழங்குகிறார்கள் சர்க்கரை சாப்பிடுவதால்தான் நீரிழிவு நோய் வருகிறதாம்.

இன்னொரு புதிய கண்டுபிடிப்பு, ஆறாவது ஊதியக் கமிசன் பரிந்துறையின் பேரில் உயர்த்தப்பட்ட ஊதியத்தை ஒப்பிடும் போது, இந்த விலைவாசி உயர்வு குடும்பங்களின் பட்ஜெட்டில் மிகப் பெரிதாக ஒன்றும் செய்துவிடாதாம் ....

கேட்க நியாயமாகத் தோன்றுகிறது, ஆனால் சொன்னவர்கள் மிக அநியாயமானவர்கள்.

ஊதியக் கமிசன் பரிந்துறையில் ஊதிய உயர்வு பெற்று பட்ஜெட் போடும் குடும்பம் இந்த தேசத்தில் 1% இருக்குமா... தினம் தினம் சில்லரைக் காசு பொறுக்கி கொஞ்சம் சர்க்கரையும், டீத்தூள் பொட்டலமும் வாங்கி டீ போட்டுக் குடிச்சு வயித்தை நிரப்புகிற மக்கள் தானே இந்த தேசத்தில் 50% பேர் இருக்கின்றனர். கூலி வேலைக்குப் போகின்றவர்களில் முக்காவாசிப் பேர் டீத் தண்ணியில் தானே பசியாருகிறார்கள். மூனு ரூபாக்கு விற்ற டீ இன்னிக்கு ஆறு ரூபாய். வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கிறவர்களுக்கு எந்த ஊதியக் கமிசனின் பரிந்துறை உதவப்போகின்றது.

தேசத்தின் வேளாண் உற்பத்தியை விட, இந்த தேசத்தின் 110 கோடி மக்களை பசியில் இருந்து மின்னல் போல் மீட்டெடுக்கும் கிரிக்கெட் விளையாட்டை கொண்டாடுவதிலும், அது குறித்து சிந்திப்பதுமே முக்கியமாக இருக்கும் மத்திய உணவுத்துறை அமைச்சருக்கு எதையும் சொல்ல உரிமை இருக்கிறது.

மாண்புமிகு மத்திய வேளாண்துறை மந்திரி இந்திய கிரிக்கெட் போர்டு பதவியில் உழைத்து (!!!) திழைத்துக் கொண்டுருந்த போது, உலக வரை படத்தின் ஏதோ ஒரு மூலையில் குட்டி குட்டியாய் இருக்கும் தேசத்தினர் நமக்கு விற்க சர்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டார்கள்.

அந்த இனிப்பு நாவில் அழுத்தமாகக் கசக்கிறது....

விவசாயத்திற்கு நல்லவழி காட்டாத அரசாங்கம்
மக்களின் பசி பற்றி அறியாத அரசாங்கம்...
அதை வழி(லி) நடத்தி வரும் அரசியல் கட்சிகள்....

....... அடுத்து தங்களை தயார் படுத்தி வருகின்றனர்

* அரிசிக்கும் தட்டுப்பாடு வரும் போது, அரிசி தின்றால் கார்போஹைட்ரேட் அதிகமாகும், பசியாற மண்ணை சாப்பிடுங்கள் எனச்சொல்லவும்

* பால் தட்டுப்பாடு வரும்போது கால்நடைகளின் பாலை குடிப்பது பாவம், கள்ளிப்பால் குடியுங்கள் எனச்சொல்லவும்....

நாமும் நம்மை தயார்படுத்திக் கொள்வோம், எல்லாவற்றையும் அடர் மவுனத்தோடு கடந்துபோக....

________________________________________________________________

அசையும் சிறகு

உயிர்...
கோணல்மாணல் கோடுகள்
வட்டங்கள் வர்ணங்கள்
அழகோ அழகாம் படத்தில்....

யாருக்கும் தெரியவில்லை
வேடிக்கைபார்க்கும் சிறுமி மனதில்
சிறகடிக்கும் பட்டாம் பூச்சி

%%%%%%

வாசனை..
பழைய துணி வாசத்தில்
பாட்டியின் முந்தானையில்
உயிர்வாழ்ந்த கதைகள்....

அழகான படுக்கை விரிப்புகளில்
பாட்டிகளோடு செத்துக்கிடக்கிறது
சுத்தத்தின் வாசத்தோடு...

%%%%%%

மௌனமாய்த் தேடுகிறேன்




இன்னும் எத்தனை விடியல்தான்
கசங்காத அடர்த்தியான போர்வைக்குள்
முயல் குட்டியாய் சுருண்டு எனக்கான
வெப்பத்தை நானே தேடுவேன்

போர்வை விலகிய வலது பாதத்தின்
சுண்டு விரல் வழி நுழைந்த குளிர்
எலும்புக்குள்ளும் நரம்புக்குள்ளும்
இன்னும் கூடுதல் இம்சையாய்

நீ கையோடு எடுத்துச் சென்று விட்ட
உன் சதைகளில் கசியும் வெப்பத்திற்கு
கைகளை நீட்டி நடுங்கும் உடலோடு,
உதறும் மனதோடு வாடுகிறேன்

மண்டிக்கிடக்கும் புதர்களைத் தாண்டி
உன் கைகள் நீளமுடியாத தொலைவில்
தன்னந்தனியாய் வாடுகிறேன் வாசமும்
வண்ணமும் உணரப்படாத மலராய்

துளியும் குறையாமல் காய்ந்து கனக்கிறது
அள்ளியெடுக்க நீ இல்லாமல்
பருவத்தில் எனக்குள் வெடித்துச்சிதறி
மனதில் மலையாய் குவிந்த காதல்

நீ தேட மறந்த நாளன்று எனக்குள்
நானே தொலைந்துபோனேன்
ஆனாலும் மௌனமாய்த் தேடுகிறேன்
அடையாளம் சிதைந்த என்னை....

___________________________________________