கீச்சுகள் தொகுப்பு - 71


என்ன செய்ய... ஒப்பனை அன்பு பேரழகுதான்!

*

நினைவில் உறங்கும் முத்தம் விழிக்கும் தருணம் இரவு!

*
எந்த ஈகோவும் பார்க்காமல், “எனக்கு இன்னிக்கு பர்த் டே... விஷ் பண்ணுங்கஎனக் கேட்பவர்கள் தம் வாழ்க்கையை மிகவும் நேசிக்கிறவர்களாக இருக்க வேண்டும்!

*
பதில்களுக்கென்ன தேவை!? கேள்விகளிலேயே இளைப்பாறுகையில்...!

*

இரைச்சலை நிறுத்து இல்லையேல் இடம் விட்டகல்... எவ்வளவு நேரம் காதுகளைப் பொத்துவாய்!?

*

ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கின்றதா...? கையில் இருப்பதை கீழே வைத்துவிடு!

*

'என்னைத் தெரியாதா!?' என்றாய். மௌனமாய் இருந்தேன்! 'உன்னைத் தெரியாதே!' என்கிறாய் மௌனமாய் இருக்கத் துவங்குகிறோம்!

*

எதிர்காலத்தை மட்டுமே யூகித்து திட்டமிடுவது மட்டுமேயல்ல வாழ்க்கை. நிகழ்காலத்தில் உணர்ந்ததை உணர்ந்தவித்ததில் வாழ்ந்துவிடுவதும் தான்!

*

நீங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருங்கள். உடம்பையும் உறவுகளையும் பத்திரமா வச்சுக்குங்க. அதிகாரத்தின் உச்சம் ஒன்று படுக்கையில் நோய்மையில் ஒரு குழந்தைபோல் குலைந்து கிடைப்பதைப் பார்க்க நோகுகிறது.

*

விழிப்பு கூட அரிதாக கொடியதுதான். காரணமேயின்றி உறக்கம் பிடிக்கா ஒரு இரவில்தான் அது தெரிய வரும்.

*
மனிதர்களிடையே 143உணர்வு மங்கும்பொழுது 144தடையுத்தரவு தேவைப்படுகிறது!

*

நரகம் என்பது மரணத்திற்கு பிறகு மட்டுமே வருவதல்ல. வாழும்போதே நேசிப்புக்குரியோரை வதைக்கும் துன்பத்தில் உதவ முடியாமல் போகும் தருணமும்தான்.

*

உடற் பிணியென்பது பெரும்பாலும் என் பிணக்கின் மொழி கேள்என உடல் கொள்ளும் ஊடலே!

*
சொல்வதால், எழுதுவதால் அது சொல் ஆகிறதா! சொல்லாத, எழுதாத 'சொல்லிற்குப் பெயர் என்ன?

*

வாழ்க்கைப் பயணத்தின் மைல் கற்கள் ஆண்டுகள் அல்ல, 'மனிதர்கள்'

*

ஒரு பிரச்சனையை முடித்து வைக்க 'மன்னிப்பு கோருதல்எளிய தீர்வாக இருக்கின்றது. இதில் இருக்கும் நகை முரண் என்னவென்றால், மன்னிப்பு கோரியதும் முடித்துக்கொள்ளத் தயாராகும் எதிர் தரப்புக்கு அந்த மன்னிப்பை வைத்துக் கொண்டு என்ன செய்வதெனத் தெரியாது என்பதே!

*

மூச்சுணரும் அருகாமையில் பேச்சு எதற்கு!

*

சிங்கத்தின் பசி மட்டுமே மானினுடைய பிரச்சனையாக இருக்க முடியாது. வாழும் அளவிற்கு ஓடாமல் இருப்பதுவும் மானின் பிரச்சனையாக இருக்கலாம்.

*

எதுவுமே பேசிக்கொள்ளாத தினங்களிலும் உறவு, நட்புகளில் 'குட் நைட் / குட் மார்னிங்' மட்டும் சொல்லும் சம்பிரதாயமும் ஒருவித போலித்தனம்தான்!

*

பிரச்சனை என்னவென்றே புரியாமலிருப்பதுதான் பல நேரங்களில் பெரும் பிரச்சனை!

*


கீச்சுகள் தொகுப்பு - 70


மழையால் எப்படி இந்த இருளைக் கரைக்க முடியும்!

*

நிதானம்... பல நேரங்களில் மெதுவாக செயல்படுகிறோமே எனும் சந்தேகத்தை அளிக்கும். ஆனால் நிதானம் நின்று 'நிதானமாய்வென்று விடுகிறது.

*

நீங்கள் அறிமுகப்படுத்தும் எதுவுமே 'நீங்கள் அறிந்தவரையில்' மட்டுமேயானது.

*

யாருக்கெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத பெரும் சவால்களை வாழ்க்கை வழங்குகிறதோ, அவர்களிடம் ஒரு கூடுதல் திறமையையும் அதே வாழ்க்கை வழங்கிவிடுகின்றது.

*

ரகசிய அன்புதான் தித்திக்கும் என்றில்லை. தித்திக்கும் அன்பை ரகசியமாகப் பகிர காலம் பணித்திருக்கலாம். ;)

*

நிலம் குளிர்ந்தென்ன விதைகளைத் தகிக்காமல் இருக்கச் சொல்லுங்கள்!

*

பெய்ய மறுக்கும் மழை இலையின் பச்சையைத் தின்று கொழுக்கிறது!

*

நினைவில் உழலும் உறையா முத்த ஈரம் அமுதா, நஞ்சா....!

*

வதந்திமற்றும் 'வாந்திஆகிய இரண்டு சொற்களும் பங்காளிகளாகத்தான் இருக்க வேண்டும்

*

கல்யாண வீடுனா மாப்பிள்ளையா, எழவு வீடுனா பொணமாஇருக்கனும்ங்கிறது வெறும் ஆசை மட்டுமில்ல பாஸு, குணப்படுத்த விரும்பாத ஒரு பெரும் வியாதி!


*

ஒருவரோடு ஒருவர் அன்பு பாவித்தலில் இன்னொருவருக்கு வெறுப்பு கூடும் மன வேதியியல், எப்போதுமே புரிந்துகொள்ள முடியாத ஒரு மர்மம்தான்.

*

உற்சாகம் என்பது வரம், நிலை என்பதுள்ளிட்ட எதுவுமல்ல. தான் உற்சாகமாய் இருக்கவேண்டுமென நொடிப்பொழுதில் மனதிற்குள் எடுக்கும் தீர்மானமே!

*

தப்பித்துக்கொள்ளும் முன் தெரிந்து கொள்ளவில்லைஎன்பதை ஒப்புக்கொள்கிறேன்

*

உரையாடல்களில், விவாதங்களில், நல விசாரிப்புகளில் நாம் ஒன்றை மட்டும் மிகக் கவனமாய்த் தவிர்க்கிறோம். . . . . . . . அதன் பெயர் "உண்மை".

*

ஆழ் உறக்கத்திற்குள் ஆட்படும் அடர் இரவில் கையில் அகப்படும் இந்த வெளிச்சப் பரிசை என் செய்வேன்!

*

எதிர்பார்த்திட முடியாத ஒரு கதை எல்லோரிடம் இருக்கின்றது. அந்த எல்லோரிடமும் சொல்ல விரும்புவது, "முதலில் உன்னை பாதுகாத்துக்கொள்!"

*

எது கோழைத்தனம்....! அதிகாரத்தை வைத்து மிரட்டுவதா? மிரட்டலுக்கு பயந்து அடங்கிப்போவதா?

*

வெற்றிகளுக்கு காரணமாய் அமைந்த பெரும்பான்மையான முடிவுகளின் பின்னால் ஒரு ஆரோக்கியமான கோபம் இருந்திருக்கும்.

*

முத்த வாசனையென்பது உயிர்க் காற்றின் மணம்.

*

சன்னல்களைத் திறந்து ஒரு கையில் கடலையும் மறுகையில் மேகத்தையும் தொட கனவில் அனுமதியுண்டு.

*

வெறும் பாறை மேல் பெய்யும் பெருமழை எதையும் இடம் பெயர்த்தி விடுவதில்லை. ஆனால் மண் எப்போதும் தன்னை இடம் பெயர்த்திக்கொள்ள அனுமதிக்கிறது.

*

உயர்ந்திருத்தல் என்பது மற்றவர்களிலிருந்து விலகி நிற்றல் அல்ல, மற்றவர்களின் மத்தியில் உறுதுணையாய் நம்பிக்கையாய் நிற்றலே!

*

என் கனவில் புத்தன் வந்து சொல்லும் வரை பேராசையோடு காத்திருப்பது குறித்து கவலையேதுமில்லை.

*

உங்களை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். உங்களிடம் திறமை இருக்கிறதென இன்னொருவர் நம்பிவிட்டால் அதற்காகவேணும் உங்களை நம்ப ஆரம்பித்து விடுங்கள்!

*

கடவுள் இருக்கிறார்!என்பதை நீங்கள் உணர்ந்த தருணங்களைவிட, “அய்யோ.. கடவுளே நீ இருக்கியா!?” எனத் தேடிய தருணங்களே அதிகம்!

*

மூலத்தை அறியாத வரைக்கும் அப்போது அறிந்துகொள்வதே மேம்பட்டதாய் இருக்கிறது.

*

நினைவு எனும் காட்டாறு!

*

"மரணம்" எனும் பரிசுத்தமான உண்மையை எத்தனை பேருக்கு உண்மையில் பிடிக்கிறது இங்கு!

*

எல்லோருக்கும் உண்மை வேண்டுமாம்! உண்மையைச் சொல்வதும், கேட்பதும் உண்மையில் அத்தனை எளிதா!?

*

பகையின் வேரில் வெம்மை பாய்ச்ச ஒரு பெரு மழை போதும்.

*

மழையெல்லாம் வேண்டுதல் வச்சு விளம்பரம் தேடுறதுல வர்றதில்ல... அதுவா மனமிரங்கி பெருங்கருணையோட வந்திறங்கணும்...

*

கூடல் கைகூடிடா முதிர் மோகப்பொழுதொன்றில் முத்தங்கள் தின்று பசியாறுவது போலே அந்த அருவியில் எத்தனை முறைதான் நனைந்து வெம்புவதோ!?

*

ஈர விடியலில் மனம் முளைக்கும்!

*

சில புறக்கணிப்புகள் நமக்கும் தேவை, உண்மையில் அவர்களுக்கும் அவசியமான தேவை!

*

கற்றுக்கொள்தல் மிக எளிது, அறிவின் அத்தனை கண்களும் திறந்திருப்பது போதும்.

*

கற்றுக்கொள்வதை ஒதுக்க ஆரம்பிக்கிற தருணத்திலிருந்து வாழ்க்கை மெல்ல புளிப்பேறத் துவங்குகிறது.

*
மகிழ்ச்சியும் ஒரு மொழியே! :)

*


சிறைச்சாலை கைதிகளோடு சிறிது நேரம்...


நூலக வார விழாவினையொட்டி, ஈரோடு கிளை சிறைச்சாலை கைதிகளிடம் உரையாடும் ஒரு வாய்ப்பு. நிகழ்ச்சி திட்டமிட்டத்திலிருந்தே மனதிற்குள் 'என்ன பேசுவது, எவ்விதம் அவர்களை அணுகுவது?’ என்பதுள்ளிட்ட குறுகுறுப்பு.
மாவட்ட நூலகர் திரு.மாதேஸ்வரன், மத்திய மற்றும் கிளை நூலகர்கள், நவீன நூலக நூலகர் திருமதி.ஷீலா, இளவல்கள் ஜெகதீஷ், சரிதா உள்ளிட்ட பலரும் உடன் கலந்து கொண்டனர்.

அறிவுரையெல்லாம் எடுபடாது, ஆலோசனை தரும் அளவிற்கு அவர்களை, குற்றங்களை, அதற்கான நிர்பந்தங்களை அறிந்ததில்லை. இறுதியாக இதுவரை வாசிக்காமல் தள்ளிப்போட்டிருந்த திருடன் மணியன் பிள்ளைபுத்தகத்தை நேற்று வாசிக்கத் தொடங்கினேன். அது வேறொரு உலகத்திற்குள் இட்டுச் சென்றது. இன்னும் சொல்லப்போனால் இரவில் உறக்கம் முழுக்க மணியன் பிள்ளை உடனிருந்தார். அவர்களைச் சந்திக்கும் மனநிலையைக் கொடுத்தது.

ஈரோடு கிளை சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் அனைவரும் கொலை முயற்சிக்கும் குறைவான பிக்பாக்கெட், வழிப்பறி, சிறு ஊழல் உள்ளிட்ட சிறு குற்றங்களில் சிக்கியவர்கள். வழக்கமாக 25-30 பேர் என இருக்கும் எண்ணிக்கை தீபாவளி சீஸன் என்பதால், 52 பேராக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் டிப்ளமோ முதல் எம்.காம் (சி.ஏ) வரையிலான படித்தவர்களும் உண்டு.

மைனர் பெண்ணைக் காதல் திருமணம் செய்ததால் ஒரு இளைஞன் போக்ஸோ சட்டத்தில் கைதாகியிருக்கிறான். 30-40% பேர் திரும்பத் திரும்ப வருகின்றவர்கள். அவர்களிடம் ஏன் திரும்ப வருகின்றீர்கள் எனக் கேட்டால், வேறு வழி தெரியவில்லை என்கிறார்கள். பிணையில் எடுக்க யாரும் இல்லாதவர்களும் அங்குண்டு. மூன்று நாட்களுக்கு முன்பு பிணையில் வெளியில் சென்ற ஒரு இளைஞன் ஆடு திருடிய வழக்கில் வேறொரு ஊரில் கைது ஆகியிருப்பதாக செய்தித்தாளைக் காட்டி சிறை அதிகாரிகள் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.



பெரியார் நகர் கிளை நூலகம் ஒன்றின் சார்பில் கணிசமான புத்தங்களோடு ஒரு சிறு நூலகம் அங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. ஐம்பது பேர்களில் பத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து வாசிப்பில் இருக்கிறார்கள்.

வெளியில் இருக்கும் பலருக்கும், உள்ளே இருக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான். குற்றம் வெளியில் தெரிவது - தெரியாமல் இருப்பது, சட்ட வரம்பிற்குள் உட்படுவது - உட்படாதது, சிக்கிக் கொண்டது - தப்பித்துக் கொண்டது, பலம், செல்வாக்கு - பலமின்மை, செல்வாக்கின்மை என அந்தக் கோட்டிற்கு பல பெயர்கள் உண்டு.

திருடன் மணியன் பிள்ளை புத்தகத்தை உரையில் சுட்டிக் காட்டிருந்தேன். அந்தப் புத்தகத்தின் விறுவிறுப்பு குறித்துப் பேசுகையில், அடுத்தடுத்த கட்டுரைகள் படிக்கும்போது மணியன் பிள்ளையின் திருட்டுகளின் மீது ஒரு சுவாரஸ்யம் ஏற்பட்டு, ஒரு திருட்டைச் செய்து பார்த்தால் என்ன எனும் ஆர்வம்கூட வந்துவிடலாம் எனச் சொல்லிவிட்டேன். உரை முடிந்ததும், ஒருவர் அந்தப் புத்தகம் வாசிக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார். திருந்தக் கேட்டாரா, திட்டமிடக் கேட்டாரா என்பதுதான் யோசனையா இருக்கின்றது!!! 😂😂

மு.கு:
மற்ற நிகழ்வுகளில் பங்கேற்பாளர்களை, பார்வையாளார்களைப் படம் எடுப்பது போல், இவர்களை எடுக்கவேண்டாம் என முடிவு செய்திருந்தேன்.


ஒருவழிப்பாதை


நுழைவு மறுக்கப்படும்
ஒருவழிப்பாதையின்
முகப்பு மீது
திகட்டாத  தீண்டுமின்பம் நமக்குண்டு

யாரோ கூடித் திட்டமிட்டு
நமக்காகவே மறுக்கப்படுகிறதெனும்
நினைப்பு கூடிக் கனக்கும்

நுழைய விட்டால்
அந்த வழி நம்மை
விரைந்து சேர்க்குமெனும்
நம்பிக்கையுண்டு

அங்கே காவல் இருந்து
தடுப்பவர் மீது
தீராத வன்மமொன்று முளைக்கும்

ஏமாற்றத்தோடு திரும்புகையில்
வாழ்வின் எல்லாச் சிக்கல்களுக்கும்
வளைந்து இட்டுச் செல்லும் பாதையே
காரணமெனும் மின்னல் வெட்டும்

தடை மீறியோ தவறிப்போயோ
தடுக்கப்பட்ட முனை வழியே
நுழைகின்றவர்கள் மீது
அந்தச் சாலைக்கு ஒருபோதும்
பகையேதும் துளிர்ப்பதில்லை!


கீச்சுகள் தொகுப்பு - 69



உறவு முறித்தது போதும்... பகை முறி!
                       

என்ன அடைந்தோம் என்பது முக்கியம்தான். அதைவிட முக்கியமானது நாம் என்னவெல்லாம் செய்தோம் என்பதுதான். அடைந்தது மறந்துபோகும். செய்தவை வாழ்நாள் முழுக்க துணை நிற்கும்!

*


தொடர்ந்து தோற்றுக் கொண்டேயிருப்பதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. தொடர்ந்து தன்னையே ஏமாற்றிக் கொல்வதை விடவா தோல்வி வெட்ககரமானது!?
'ல்பிழையன்று!

*

நம் பலம் நமக்கே புரியும் தருணம் என்பது... சாத்தியமில்லை என நாம் நினைக்கிற ஒன்று, நம்மாலேயே சாத்தியப்படும் கணம்.

*

குழப்பத்தை தெளிவாகப் பார்!

*

மண்ணை நனைக்காத, உடையை மட்டும் நனைக்கும் மழைக்கு 'மானங்கெட்ட மழைஎனப் பெயர் சூட்டினேன்.  'மரம் நடாதவங்களுக்கு மானம் என்ன வேண்டியிருக்கு!?’ என்றது மழை!

*

கோபத்தின் உக்கிரத்தில் தெறிக்கும் சொற்களுக்கு பொருள் சொல்ல இன்னும் டிக்‌ஷ்னரி கண்டுபிடிக்கப்பட வில்லை!

*

'போதுமெனத் தோன்றுகிறது' என்றெழுதிவிட்டு முற்றுப்புள்ளிக்குப் பதிலாக காற்புள்ளி வைத்தல் தகுமோ!?

*


ரயில் தடமெங்கும்
கலங்கி நின்று
காற்றில் கையசைக்கும்
ராத்திரியில் பெய்தோய்ந்த
ரகசிய மழை நீரின்
பிரியத்திற்கு ஈடேது!

*

சாரல் பொழியும்
ரயில் பயணத்தில்
வழிவிட்டுக் காத்திருக்கும்
சிறு நிலையத்தில்
ஆவி பறக்கும் 
சுக்குக் காப்பியொன்றும்
அத்தனை ருசியில்லைதான்
ஆயினும் அச்சூட்டின் கதகதப்பில்
நினைவில் தளும்பும்
முத்தமொன்றின் தடயமுண்டு!


*

கவிழ்ந்து தொங்கும் 
கரு மேகம்
இந்த நகரைத்
தீண்டி விழுங்குமோ!?

*

நினைவில் துயிலும்
பெரு நெல்லி முத்தம்!

*

தேய்ந்து கொண்டிருக்கும்
சிரிப்பொன்றை
புன்னகையாய் 
சேமிக்கத் துவங்குகிறேன்!


நமக்கென்று ஒரு விலையில்லை என்பது... 
கர்வத்தில் சேருமா!? அறியாமையில் சேருமா!?

*

உனக்கு இதெல்லாம் தேவையா!?” - சில இடங்களில் கேட்க மறந்த கேள்வி, பல இடங்களில் தாங்குவதற்குத் தடுமாறும் கேள்வி! 

*

எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளாமல் இருப்பது அறியாமை ஆகாது. சிலவற்றைத் தெரிந்துகொள்வதற்காக, பலவற்றைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது.

*

மனிதம் என்பது தன் போக்கில் எதையும் ஆகச்சிறந்ததாய் இயக்குதல். அறிவோடு மனதையும் பிணைத்து உலகை ஆக்குதல்.

*

அதீத மன இக்கட்டில் இருக்கும் யாரோ ஒருவருக்கு உங்களை அழைத்துப் பேசத் தோன்றுகிறதா!? தேர்ந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

*

சுவையான தேநீர் பருக வேண்டுமென்பது வயிற்றின் தேவையன்று, மனதின் தேவையே!

*

இக்கட்டிலிருந்து 'மீள்வேன்', சோதனையில் வென்று 'தொடர்வேன்' என ஒருவர் சொல்வதை தன்னம்பிக்கை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர 'திமிர்' என்று சொல்வது பக்குவமின்மை!

*

ஏதோ ஒரு நிறைவுறாத் தன்மை இருக்கின்றதா!? அது அவ்விதமே இருக்கட்டும். அதுதான் வாழ்க்கையை தொடர்ந்து இயக்கும் நிர்பந்தம்!

*

எல்லாப் பார்வைகளிலிருந்தும் 
எளிதாய் ஒளிந்து கொள்கிறேன்
இமைகளுக்குள்ளிருக்கும் 
விழிகளிடம் என்ன செய்ய!?

*

கோபத்தை நெகிழ்வான குரலில், மென்மையான சொற்களில் பகிரும் வித்தை தவிர்த்து, வேறென்ன வரம் வேண்டும்!

*

யாரையும் எதிர்கொண்டுவிட முடிகிறது.  'அப்பா-அம்மா இருவரும் இல்லை' என சன்னமான குரலில் அடையாளம் காட்டப்படும் பிள்ளைகளைத் தவிர!

*

அறியாமை ஒரு பாவம் என்றால் அரைகுறையாய் அறிந்து கொண்டிருப்பது பெரும்பாவம்.

*

ஒதுங்கியோ ஒளிந்தோ நிற்பதால் கடந்த காலம் பொய்யாகிவிடுமா!?

*

மௌனப் பஞ்சுப் பொதி...
சொற்களால் நனைகிறது.

*

மூச்சின் வெம்மைக்குள் இருப்பது மழையின் வாசனை!

*

தேவையில்லாத ஆணிகள்னு தெரிஞ்சும் பிடுங்கிட்டே இருக்கிறதுக்கு பேரு தியாகம், உழைப்பு கிடையாது... அதுவொரு குற்றம்!

*

மாற்றத்திற்கும் மாற்றமின்மைக்கும் இடையே ஒரு மெல்லியகோடுதான்.... அந்தக் கோட்டிற்கு நம்பிக்கை என்றும் ஒரு பெயர் உண்டு.

*

மௌனம், அது வாய்க்கும் இடங்களைப் பொறுத்து வடிவம் கொள்கிறது.


இன்டயில இருந்து உங்களுக்கு ஒரு மகள் கூட இருக்கு சார் Sir.


நீண்ட நேர கடும் பயணத்திற்குப் பிறகான இரவில் கிட்டும் ஆழ்ந்த உறக்கம் அலாதியானது. எத்தனை தூங்கினாலும் சில நொடிகளில் எழுந்தது போலவே இருக்கும். திங்கட்கிழமை இனிதே விடிந்தது. அடுத்த திங்கட்கிழமை வரை நாட்கள் பரபரப்பாக இருக்கும் எனும் மனநிலை சூழ்ந்தது. கடந்த ஆண்டு போல் காலை மாலை என இந்த ஆண்டு நிகழ்ச்சிகளைத் திட்டமிடவில்லை. கடந்த ஆண்டு ஒரே நாளில் இரு நிகழ்ச்சிகள் மற்றும் இடையே பயணங்கள் என்பது மிகுந்த நெருக்கடியைக் கொடுத்திருந்தது.

ஏறத்தாழ ஒராண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கை பாடசாலைப் பிள்ளைகளை சந்திக்கச் செல்கிறேன். முதல் நாள் வழக்கம்போல் மொழிச் சவால் நிறைந்ததாகத்தான் இருக்கும். இருவருக்கும் தமிழ்தான் என்றாலும், நம்ம ஊர் சொற்களுக்கும், அவர்கள் பாவிக்கும் சொற்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அவர்களோடு உரையாடும்போதுதான் நினைவில் உறங்கிக் கிடக்கும் சில சொற்கள் மெல்ல மேலெழும்பி வரும். ஒருவாறாக இலங்கை தமிழ்ச் சொற்களை பயணத்தின் இறுதிக்குள் பழக்கப்படுத்திக் கொள்ளவே முயற்சி செய்வேன்.

*

புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலை.

நான் பாடசாலைக்குள் நுழையும்போதே மாணவிகள் தயாராக அமர்ந்திருந்தனர். அதிபர் அருட்சகோதரி சாந்தி மேரி முகப்பில் நின்று வரவேற்றார். கடந்த ஆண்டு நிகழ்வில் பங்கெடுத்த மூத்த மாணவிகளில் சிலர், இந்த ஆண்டு பங்கெடுக்கும் மாணவிகளிடம் நிகழ்ச்சி குறித்து பகிர்ந்து, எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வைத்திருந்திருந்தார்கள். மிகுந்த உற்சாகத்தோடு இருந்த மாணவிகளின் சிறப்பான பங்கேற்போடு முதல் நிகழ்வே மிகத் திருப்தியாக அமைந்தது.



*

கண்ணன்குடா மகா வித்தியாலயம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில், அந்த வலயத்தின் பல்வேறு பாடசாலைகளில் படிக்கும் மாணவ மாணவிகளில் சிலரைத் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைத்து நடத்தப்படும் பயிலரங்கு. பயிலரங்கிற்குச் செல்லும் வழியில் வலயகக் கல்வி அலுவலகத்தில் நடந்த நவராத்திரி விழா நிகழ்வு பூஜையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

வலயகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் பிரத்யேகமான முயற்சிகள் எடுத்து ஆசிரியர்கள் தம் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர். வலயக மற்றும் மாகாண கல்வித் துறை சார்ந்த உயர் பொறுப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அற்புதமான வரவேற்புடன் நிகழ்வு தொடங்கியது. மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் , ஸுரநுதன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்தனர்.




~

வலயகத்தில் இருக்கும் பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிலரங்கு. நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்திருந்த வலயக கல்வி பணிப்பாளர், வேறு பணிகள் இருப்பதால், நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டு, நிகழ்ச்சி நிறைவடைவதற்குள் வந்து விடுகிறேன் என்றவர், முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தார். இடைவேளையின்போது துவங்கியவுடன் சென்றிருக்க வேண்டும். ஆனால் செல்ல முடியாமல் என்னை இருக்க வைத்துவிட்டீர்கள் என்றபடி, நீங்கள் தொடர்ந்து நடத்துங்கள், நிறைவில் வருகிறேன் என்றார். எனினும் தொடர்ந்து நிகழ்ச்சி முழுக்க அமர்ந்திருந்தார். ஏறத்தாழ தானும் ஒரு பங்கேற்பாளர்போல நிகழ்வில் உற்சாகத்துடன் கலந்தும் கொண்டார். நிறைவடைந்ததும், நிகழ்வின் துவக்கத்திலும் இடையிலும், பணி நிமித்தம் செல்ல நினைத்ததாகவும், நிகழ்ச்சி தன்னை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை எனக் கூறியதை எனக்கான பாராட்டாக எடுத்துக் கொண்டேன்.




*
புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்

பாடசாலையில். தன்னார்வ அமைப்பான CERI ஒரே தினத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். காலை 8 மணி முதல் 10.30 மணி வரை பாடசாலை ஆசிரியர்களுக்கும், 10.45 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை பிள்ளைகளுக்கு பயிலரங்கு நடத்தப்பட்டது. CERI தன்னார்வ பணியாளர்கள் எல்லா விதங்களிலும் உடனிருந்து நிகழ்விற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அமைப்பின் மேலாளர் எபினேசர் மற்றும் பணியாளர்கள் மிகுந்த அன்பிற்கு உரியவர்கள்.



*

வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை

நவராத்திரி பூஜைகள் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்ததால் வழக்கமான அரங்கத்திற்குப் பதிலாக மாற்று அரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் ஒலி / ஒளி அமைப்புகள் மட்டும் சவாலாக இருந்தன. அதை சரி செய்திட அங்கிருந்த ஆசிரியர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி மகத்தானது. எத்தனை சவால்கள் இருந்தாலும் அதனால் என்ன என்பது போல் மாணவிகளின் தரமான பங்களிப்பு பெரிதும் கை கொடுத்தது.


*

ஒரு வார காலத்தில் ஆறு பயிலரங்குகளில் ஏறத்தாழ 250 ஆசிரியர்கள் மற்றும் 850 மாணவ மாணவியர்களைச் சந்தித்து உரையாடிய நிறைவு இந்த முறை ஏற்பட்டது. நகரத்துப் பிள்ளைகள் ஒரு பக்கம், உள்ளடங்கிய கிராமத்துப் பிள்ளைகள் இன்னொரு பக்கம் என மாறி மாறிப் பயணித்து, இரண்டு தரப்புகளோடு கலந்துரையாடி பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன.

ஆசிரியர்களுக்கான அமர்வுகளில் பகிரும் அனைத்தையும் உள்வாங்கும் வேட்கை அவர்களிடமிருந்ததை உணர்ந்தேன். இலங்கையில் பாடசாலைகள் அரசு வசம் தான். இந்தப் பயிலரங்கில் சந்தித்த ஆசிரியர்கள் புத்தகம் வாசிப்பதில் பேரார்வம் காட்டினர். ஒவ்வொரு அமர்விலும் புத்தகங்களை எப்படி பெற்றுக்கொள்வது என ஆர்வமுடன் கேட்டனர். கைவம் வைத்திருந்த #வேட்கையோடு_விளையாடு புத்தகங்கள் அனைத்தையும் வேட்டையாடினார்கள் என்றே சொல்ல வேண்டும்.



ஆண்டு முழுக்க நிகழும் இது போன்ற பயணத்தில், வழி தோறும் நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் கைகள் பற்றிக் குலுக்கி, தமக்கு சரியான கதவுகளைக் காட்டியிருக்கிறீர்கள் என்கிறார்கள்.

"இன்டயில இருந்து உங்களுக்கு ஒரு மகள் கூட இருக்கு சார் Sir. அது நான்தான் .. Thank you so much appa" என்று ஒரு முகம் தெரியாத மகள் எழுதியது தொடங்கி... ஒரு கடிதம் எழுதுங்க என்று 15 நிமிடம் ஒதுக்கிய நேரத்தில், நான் நிறைய எழுத வேண்டும் என அனுமதி வாங்கி 45 நிமிடங்கள் எழுதி, நிகழ்ச்சி முடித்ததும் தன் குடும்பம், அவர்களின் தேவை உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு கதறி அழுதது வரை...
"
பயிலரங்கு நிகழ்வுகள் என்பது, எனக்கு ஒருவரை புதிதாய் சந்திக்கும் அனுபவத்தையும், அவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு நேரமாக இருப்பதாயும் மட்டும் அமைவதில்லை. அது தேவையானவர்களுக்கு சரியான கதவுகளைத் திறந்துவிடும் அதி முக்கியத் தருணம்.

- அக்டோபர் முதல் வாரம்’ 2019

#KathirSLTrip #SriLanka #Batticalo #SLTB