செம்மையா வாழ்வோம் மகேஷ்.


என் பெயருடன் ஈரோடு என ஊர் பெயரைச் சேர்ப்பேன் என்றெல்லாம் 35 ஆண்டுகளில் ஒருபோதும் நினைத்ததில்லை. 2009ல் வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய பிறகு, ஏற்கனவே கதிர்கள் இருந்ததால், வேறுபடுத்திக் காட்டுவதற்காக கதிர், ஈரோடுஎன முதலில் சொல்லி, பிறகு அது எப்படியோ ஈரோடு கதிர்என்றாகிவிட்டது. அதுவே பழகி, இப்போது நானே அப்படியாக என்னை நம்பத் தொடங்கிவிட்டேன்.

ஈரோட்டிலேயே சில நேரங்களில் ஈரோடு கதிர்என்றழைக்கப்படும்போது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். வெளியூர்களில் இது ஊர் மீதான ப்ரியம் என்று நினைத்துக் கொள்வார்கள். அதன் நிமித்தமான பாராட்டுகளும்கூட இணைவதுண்டு. ஊர் பிடிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சற்று மூத்தவர்கள் சில இடங்களில் ஈரோடு கதிர் என்றவுடன், ஈரோடு தமிழன்பன் பெயரை நினைவு கூர்வதுண்டு. ஓரிரு இடங்களில் ஈரோடு சௌந்தர் பெயர் கூட அடிபட்டதுண்டு. தமிழகத்தில் எங்கு சென்றாலும், ஈரோடு என்பது ஊரின் பெயர் என்று அறிந்திருப்பார்கள்.

ஆனால் என் இலங்கைப் பயணங்களில் ஈரோடு கதிர் என்று எங்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும், பெயர் உச்சரிக்கப்பட்டாலும்... ஈரோடு என்பதை என்னவாக எடுத்துக் கொள்வார்கள் என யோசித்ததுண்டு. என் யோசனைகளை நிறுத்தம் வண்ணமாகஈரோடு மகேஷ் தெரியும். டிவியில் கண்டிருக்கோம், உங்களுக்குத் தெரியுமா!?” எனக் கேட்பார்கள். அந்தக் கேள்வியில், அவர்கள்ஈரோடு மகேஷ்தோளில் கை போட்டு உரையாடும் அளவிற்கான ஒரு நெருக்கத்தை உணர்த்துவார்கள். தமிழ் தொலைக்காட்சிகளின் வீரியம் புரிந்தது.

என்னை அவர்கள் அறிமுகப்படுத்திக் கொள்வதே, ஈரோடு மகேஷ் பெயரை நினைவில் மீட்டித்தான், ஆனால் அந்த மகேஷை எனக்கு தெரியாது என்பதுதான் அதிலிருக்கும் முரண். தெரியாது என்றால் யாரென்றே தெரியாது என்றில்லை. தொலைக்காட்சி வழியே நன்கு தெரியும் ஆனால் நேரடியாக எந்த வகையில், எவ்விதமும் தெரியாது என்பதுதான் அந்தக் குறை.

*

கடந்த வாரத்தில் ஒரு நாள் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அழைப்பில்வணக்கம் நான் ஈரோடு மகேஷ் பேசுறேன்என்றது அழைத்த குரல். உண்மையில் அவருக்கு நிகரான வேறு யாரொருவர் பேசியிருந்தாலும், மிக எளிதாக அதை எதிர்கொண்டிருப்பேன். இந்தக் குரலுக்குச் சொந்தக்கார மனிதன் ஒவ்வொரு இலங்கைப் பயணத்தின்போதும் உடனிருப்பவர் என்பதால், ஏதோவொரு நெருங்கி வராத நெருக்கத்திற்குச் சொந்தக்காரர் என்பதால் பெரும் ஆச்சரியத்திற்குள்ளும், மகிழ்ச்சிக்குள்ளும் ஆட்பட்டேன்.

அவரே... அவருடைய வழக்கான, வேகமான பேச்சு நடையில் தொடர்ந்தார்.


உங்க புத்தகமெல்லாம் ஈரோடு புத்தக திருவிழாவில் வாங்கினேன். இப்ப இந்த வேட்கையோடு விளையாடு படிச்சிட்டிருக்கேன்.

“............”

என்ன பிரமாதமா எழுதியிருக்கீங்க...! அட்டகாசமா எழுதியிருக்கீங்கணே... ரொம்ப பிரமாதம்... ரொம்ப எளிமையான உதாரணங்கள்... அப்படியே பக்கத்துல இருந்து அந்த இன்சிடன்ட்ட பாக்கிற மாதிரி இருக்கு... நீங்க எழுதின சில இன்சிடன்ட் எல்லாம்... ரொம்ப நல்லாருக்கு.. ரொம்ப நல்லாருக்குணே...

“............”

நீங்க நிறைய எழுதுங்க... நிறைய எழுதனும்... நிறைய எழுதனும்.... நாங்கெல்லாம் பேசுறமே தவிர எழுதுறதில்ல. என்னை எல்லாரும் சொல்வாங்க... நீங்க நிறைய எழுதனும்...

“............”

எழுத்து வந்து மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். அது என்னால எப்பயுமே ஏத்துக்கொள்ளக்கூடிய உண்மை... சமூகம் ஏத்துக்கொள்ளக்கூடிய உண்மை. புத்தகம் சமூகத்துல யாராவது ஒருத்தரோட கையில போய் நிக்கும், அந்தப் புத்தகமும், அதில் இருக்கும் வரிகளும், வார்த்தைகளும் அவர் மூலமா சமூகத்தில் நிறைய மாற்றங்களை உண்டு பண்ணும்ங்கிறது என்னோட கருத்து.

“............”

நூலகத்திலேயே கவனிக்கப்படாத நிறைய புத்தகம் இருக்கும், எடுத்துப் படிச்சோம்னா அவ்ளோ விசயம் இருக்கும். அந்த மாதிரி ரொம்ப சிறப்பா இருக்குண்ணே... மனம் நிறைந்த வாழ்த்துகள்ணே...


ஆச்சரிய அலைகளுக்குள் ஆட்பட்டிருந்த எனக்கு சொற்கள் கிட்டவில்லை. ஒற்றைச் சொற்களிலேயே பதில் சொல்லி ஒருவாறு உரையாடலை முடித்து, நனைந்திருந்த ஆச்சரியத்தில் நீண்ட நேரம் வெடவெடத்திருந்தேன்.

அடுத்த நாள் இன்னும் பெரிய இன்ப அதிர்ச்சியாக... வாட்சப் வழியே குரல் பதிவொன்றை அனுப்பியிருந்தார்.

இனிய காலை வணக்கம்.

நேத்து திருச்சியில ஒரு பள்ளியினுடைய ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினரா வந்திருந்தேன். ஒரு பதினஞ்சாயிரம் பேரு கூட்டம், பேரன்ஸோட சேர்த்து. அதுல நம்ம புத்தகத்தோட பெயர் சொல்லி, உங்க பெயர் சொல்லி, இந்த மாளவிகா பத்தி எழுதியிருந்தீங்களே வெடி குண்டில் கைகள் இழந்துபோன குழந்தை பத்தி, அந்த இன்சிடன்ட சொன்னேன்.

அத சொல்றதுக்கு முன்னாடி புத்தகம், பேரு, எனக்கு எப்பவுமே அந்தப் பழக்கம். படிச்சதையோ, அடுத்தவங்க கருத்தையோ நான் சொல்ற மாதிரி சொல்ல மாட்டேன், பேரு சொல்லிதான் சொல்வேன். பேரு தெரியலீனா படிச்சே... ஞாபகம் இல்லைனு சொல்லிருவேன். உங்ககிட்ட பேசுனதுங்கிறதால ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சுனு குறிப்பிட்டுச் சொன்னேன். மிகப்பெரிய வரவேற்ப பெற்றுச்சு. கல்வியினுடைய முக்கியத்துவத்தை சொல்றப்ப அது சொல்ல வேண்டிய சூழல் கரெக்டா அமைஞ்சுது. நான் அத பதிவு பண்ணேன். அந்த விசயத்தை எல்லாருமே ரொம்ப பாராட்டுனாங்க.

நான் புத்தகத்த சொன்னேன், எல்லாருமே வாங்கிப் படிங்கனு...

நன்றிணே...

இந்த நாள் சிறப்பா அமையட்டும்.

*

அவருக்கு நன்றி பகிர்ந்ததோடு #வேட்கையோடு_விளையாடு புத்தகத்தோடு ஒரு நிழற்படம் அனுப்பினால் மகிழ்வேன் என வேண்டினேன். தயங்காமல் அனுப்பி வைத்தார்.



பேரன்பும் நன்றிகளும் மகேஷ் அவர்களே... ஸாரி ஈரோடு மகேஷ் அவர்களே! 

புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் நான் எப்போதும் ஒரு வசதியான குறுகிய வட்டத்திற்குள் நிற்பவன். அதை உடைக்க வேண்டும், கைகளை நீட்ட வேண்டும் என்பதை உங்களிடமிருந்து இந்த முறை அழுத்தமாக கற்றுக்கொள்கிறேன்.

வேட்கையோடு விளையாடு உதாரணங்களை பயன்படுத்துகிறீர்கள் என்பதற்காகச் சொல்லவில்லை. நிகழ்கால யதார்த்தங்களை உரையில் கொண்டு வரும் உங்கள் பாங்கு எப்போதும் பிடிக்கும். சமகால படைப்புகளை நானும் பயன்படுத்துகிறேன். இனி இன்னும் கூடுதலாகப் பயன்படுத்துவேன்.

இனி எல்லோரிடமும் ஈரோடு மகேஷ் என் நண்பர் எனச் சொல்வேன் குறிப்பாக அடுத்த இலங்கைப் பயணத்தில் நீங்கள் என் நண்பர் என்பதை பேரன்பும் ப்ரியமும் சூடிச் சொல்வேன்.

வாழ்தல் அறம்.... செம்மையா வாழ்வோம் மகேஷ்.

நன்றி

HR Role in Disruptive Technological Environment


பற்பல சவால்கள் முன் நிற்கும் தொழில்நுட்ப சூழலில் நிறுவனங்களில் மனிதவளத்துறையின் பங்கு. (HR Role in Disruptive Technological Environment).

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) Confederation of Indian Industry (CII) ஈரோடு அமைப்பில் இணைந்திருக்கும் நிறுவனங்களின் மனிதவளத் துறையினருக்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எல்லைகளுக்கு சவால் விடுவோம் எனும் தலைப்பில் பேச ஒப்புக் கொண்டிருந்தேன். தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியகள் மத்தியில் இயங்கிக் கொண்டிருந்த எனக்கும், இம்மாதிரியான ஒரு கூட்டம் தேவைப்பட்டது. நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், மனிதவளத்துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரியில் படிக்கும் MBA மாணவர்கள் பங்கெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் உரையாற்ற ஒப்புக்கொண்டதில் இருந்து எனக்குள் கனத்துக் கொண்டிருந்த முதல் சவால் ஈரோட்டில் பேச வேண்டும் என்பதுதான். எனினும் CEO / HR என்பதால் என் தயாரிப்பில் அதீத கவனம் செலுத்திக் கொண்டேயிருந்தேன்.

துவக்கவிழாவிற்கு பிறகு 11.30 மணிக்கு தொடங்கும் முதல் அமர்வு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நான் செல்லும்போது துவக்கவிழா நடந்து கொண்டிருந்தது. URC தேவராஜன் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஈரோடு குறித்தும், இங்கு நிறுவனங்கள் வளர வேண்டிய தேவை மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பேசினார்.

துவக்க விழா நிறைந்தவுடன் தேநீர் இடைவேளை விடப்பட்டது. பங்கேற்பாளர்களை நோக்கினால் கணிசமாக நண்பர்கள். அதுவும் 10-20 வருடங்களாகப் பழகி வருகின்றவர்கள். இன்ப அதிர்ச்சியின் உட்சபட்சமாக என் எதிர் வீட்டுக்காரரும் பங்கேற்பாளராய். உள்ளூர் என்பதுதான் சவால் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் நெருக்கமாய் பல்வேறு மட்டங்களில், பல ஆண்டுகளாக அறிந்து பழகியவர்கள் என்பது கடும் சவாலாய் மாறிப்போனது.

முதலில் கூறப்பட்டதுபோல நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மனிதவளத்துறை அதிகாரிகள் மட்டுமில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். இளம் தொழில்முனைவோர், பள்ளி ஆசிரியர்கள், நிறுவனப் பணியாளர்கள், பயிற்சியாளர்கள் என்றிருந்தவர்களை மனதில் நிறுத்தி தயாரிப்பில் இருந்த பலவற்றை மாற்றி ஏற்கனவே அறிந்தவர்களுக்குமான உரையாக மாற்றிக் கொண்டேன். என்னுடைய அமர்விற்கு திரு.ரமேஷ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.

*


Disruptive Technological Environment என்பதை நேரடியாக பொருள் கொண்டால், நிலை குலையச் செய்யும் தொழில்நுட்ப சூழல் என்றுதான் புரிந்து கொள்ள முடிகிறது. Disruptive என்கின்ற சொல்லுக்கு நிலை குலைதல் / சீர் குலைதல் என நேரடிப் பொருள் கொள்ளாமல், நேர்மறையாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது காரணம், அதைத் தவிர்க்க முடியாது. அது நமக்கு ஏராளமான எளிமைகளைக் கொண்டு வந்திருக்கின்றது.

‘Disruptive தொழில்நுட்பம்என்பது புதிதாக அறிமுகமாகும் ஒன்று. யாருக்கும் போட்டியாக வராது. ஏற்கனவே இருப்பவற்றின் ஒரு மாதிரியாக எளிமைப்படுத்துவதற்காக வரும். தனக்கென்று பிரத்யேக வழிமுறைகள், செயல்திட்டங்கள் வைத்திருக்கும். திடீரென பிரமாண்டம் காட்டும், ஒருகட்டத்தில் ஏற்கனவே ஆழமாய் காலூன்றி, தவிர்க்க முடியாததாக இருந்த அனைத்தையும் தகர்த்து, தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்ளும். இதை வாசிக்கும்போதே அப்படி எளிமையாக, புதுமையாக வந்து ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்த தொழில்கள், தொழில் நுட்ப கருவிகள் மனதிற்குள் நிழலாடுமே.

உதாரணத்திற்கு செல்போன் மற்றும் கிண்டில் மின் நூல் வாசிப்பை மட்டும் குறிப்பிட்டேன்.

ஒரு புத்தகத்தை வாசிக்க, எங்கோ ஒரு மரம் வெட்டப்பட்டிருக்க வேண்டும். வெட்டுக்கூலி, குத்தகை கொடுக்கப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டு, காகித ஆலைக்கு வந்து, அங்கு பலரிடம் பல கட்ட வேலைக்காரர்களிடம் வேலை வாங்கி, வெளுக்கப்பட்டு காகிதமாக மாறி, லாரியில் ஏறி பல நிலைகள் மாறி கடைக்கு வந்து, அச்சகத்துக்கு வந்தடையும் காகிதம்தான் புத்தகத்தின் மூலம். அடுத்து அந்தப் புத்தகத்தை வடிவமைத்த பிறகு, அச்சிடுவதற்கு ஃப்லிம்-ப்ளேட் என்ற நிலைகள் உண்டு. அச்சகம் எனும் மிகப்பெரிய, நவீன வசதி தேவை. காகிதம் வந்தது போலவே, அச்சிடும் மை வந்தடையும் வரலாறும் நீளமானது. எல்லாம் இணைந்து அச்சகத்தில் அச்சிட்டு, பைண்டிங் யூனிட்டில் மடித்து, தைத்து / ஒட்டி, கத்தரித்து, கடைகளுக்கு அனுப்பி, அங்கிருந்து ஒரு வாசகனை சென்றடைவது என்பது மிகப் பெரிய உழைப்பு மற்றும் பணம் உள்ளிட்ட பல்வேறு செலவு, செயல்களை உள்ளடக்கியது. இதே புத்தகத்தை மின்-புத்தகமாக நாம் வாசிப்பதன் பின்னே, வடிவமைப்புக்கான உழைப்பு தவிர அத்தனையும் தேவையற்றதாகிவிடுகிறது. அச்சு ஊடகத்தின் எதிரியாக மின் நூல் வரவில்லை. இதுவொரு புது வாய்ப்பாக, வித்தியாசமாக வந்தது. எளிமையானதாக இருந்தது. ஒருகட்டத்தில் மேலே குறிப்பிட்டவற்றில் 90 சதவிகத உழைப்பு, செயல்களை தகர்த்து வருகிறது. இன்னும் தகர்க்கும். இதுதான் Disruptive Technological Environment. இதை நாம் எதிர்க்க முடியாது. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முழுக்க வந்துவிடுமா? தெரியாது. ஆனால் இதன் வளர்ச்சியை தடுக்க முடியாது. தடுப்பது அறமும் அன்று. இது கபளீகரம் செய்யும் இடத்தில் நாம் இருந்தால், இதனைச் சமாளிக்க நாம் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? இதேபோல் செல்போன் உதாரணத்தையும் விரிவாகப் பகிர்ந்திருந்தேன். இந்த 20 ஆண்டுகளில் செல்போன் மட்டும் குறைந்தபட்சம் 25 வகைப் பொருட்களை இல்லாமல் ஆக்கியிருக்கின்றது. இதுவும் தவிர்க்க முடியாது.



இப்படியான போட்டியாகத் தெரியாத ஒரு நவீனம் மிகப் பெரிய போட்டியாக வரும் சூழலில் நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டியவற்றில் மனிதவளத் துறை சார்ந்து நான் எடுத்துக்கொண்ட மூன்று புள்ளிகள்.

1. ஆட்கள் நியமனத்தில் மாற்றம்
2. பணியில் இருக்கும் மூத்தவர்களை நிர்வகிப்பது.
3. கட்டாய அலுவலகப் பணி எனும் வழக்கத்தை கேள்விக்குட்படுத்துவது
...ஆகியவை குறித்து விரிவாகப் பேசினேன். நிறுவனத்தில் அதிகாரம் செலுத்தக்கூடிய மனிதவளத்துறை அதிகாரிகளுக்கு இவை யோசிக்க வேண்டிய ஒன்றாக அமைந்திருந்திருக்கலாம். சிறு நிறுவனத்தினர், தொழில் முனைவோருக்கு இது எவ்வளவு தூரம் சாத்தியம் என சொல்லத் தெரியவில்லை.

Disruptive Technological Environment குறித்து மேலும் சிந்திபது மற்றும் அதைச் சமாளிக்க திட்டமிடுவது குறித்து தொடர்ந்து உழைக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு - வேட்கையோடு விளையாடு


அடுத்த புக் எப்போ? புது புக் எதும் வந்திருக்கா?” எனும் கேள்விகளைப் பலமுறை கேட்டிருந்த நிலையில்தான், வேட்கையோடு விளையாடு புத்தகம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்யும் தருணமும் வந்தது. அதையொட்டி ஆண்டு நிறைவை ஒரு தேநீர் சந்திப்போடு கடந்தால் என்ன?’ எனத் தோன்றியது. உண்மையில் அதுவொரு நன்றியறிவிப்புத் திட்டமும் கூட.



2018ல் புதிய தலைமுறை கல்வி இதழ் தொடர் எழுத வாய்ப்பளிக்க, ஒவ்வொரு வாரமும் எப்படியாவது(!) கட்டுரை கொடுத்தாக வேண்டும் எனும் நிர்பந்தத்தில் மகாராஷ்ட்ரா பயணம் சென்ற வாரம் மட்டும் கட்டுரை கொடுக்க முடியாமல் போக, தொடர்ச்சியில் ஒரு வாரம் துண்டிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. அப்போதே முயற்சி செய்திருந்திருந்தால், அந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிட்டிருக்கலாம். தொடர் பணிகளால் தாமதிக்க, நாட்கள் ஓடின, வாரங்கள் ஓடின... திரும்பிப் பார்த்தால் மாதங்களும் ஓடியிருந்தன. டிசம்பர் முடியும் தருவாயில், ‘இப்போதும் வெளியிடாவிட்டால், இனி எப்போது?’ எனும் கேள்வி வந்ததால், அவசர அவசரமாக புத்தகத் தயாரிப்பு நடந்து, 2019 ஜனவரி 6ம் தேதி புத்தகம் வெளியானது.

நெருக்கமான தனிப்பட்ட அனுபவங்களை, கொண்டு சேர்க்க வேண்டிய இடங்கள் குறித்த சில தெளிவுகள் இருந்ததால், சொந்தப் பதிப்பாகவே கொண்டு வர முடிவு செய்திருந்தேன். அச்சிட்ட புத்தகங்களை ஓரிரு ஆண்டுகளில் விற்றுவிட வேண்டும் என நினைத்திருக்க, முப்பது நாட்களில் 50% புத்தகங்கள், அடுத்த ஐந்து மாதத்தில் மீதி 50% புத்தகங்கள் விற்பனை என, 2019ம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின்போது இரண்டாம் பதிப்பிற்குள் நுழைந்திருந்தது வேட்கையோடு விளையாடு. இரண்டாம் பதிப்பில் 80% தீர்ந்துள்ள நிலையில் புத்தகத்தின் ஆண்டு நிறைவு வந்தது. இந்த ஓராண்டு காலம் உடன் பயணித்தவர்களுக்கு, உதவியவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாகவே ஆண்டு நிறைவைக் கருதினேன், ஓரளவு அனுபவம் உள்ளவர்களுக்குத் தெரியும், ஒரு புத்தகம் வெளியாவது என்பது அவ்வளவுவொன்றும் பெரிய செயல் அல்ல. அனுபவம் இருப்பின் அடுத்தடுத்து தலைப்புகளில் வெளியிட்டுக் கொண்டேயிருக்கலாம். அப்புறம் ஏன் ஒரு புத்தகத்தோடு நின்று கொண்டு ஆண்டு நிறைவை கணக்கு வைத்துக் கொண்டாட வேண்டும்

உண்மையில் #வேட்கையோடு_விளையாடு தொடர் முடித்த பிறகு இதுவரை பெரிதாக எதுவுமே எழுதவில்லை. எழுதியிருப்பதைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் வேட்கையோடு விளையாடு ஒரு குறிப்பிட்ட இடத்தை எட்ட வேண்டும் என்பதாலும், இருப்பவற்றைத் தொகுக்கவோ, முனைந்து எழுதவோ முற்படவில்லை.

சரி... ஆண்டு நிறைவு... எதற்காக...!?

எழுதிய நான் கட்டுரைகளை எளிமையாக எடுத்துக் கொண்டிருந்தாலும், வாசித்தவர்களால் அது எடுத்துக்கொள்ளப்பட்ட விதம் வேறானது. மனதில் கனத்துக் கொண்டிருந்த அனுபவங்களை, அவ்வப்போது சில வரிகளில் சமூக வலைதளத்தில் இறக்கி வைத்துக் கொண்டிருந்த தருணத்தில், புதிய தலைமுறை கல்வி ஆசிரியர் அண்ணன் பெ.கருணாகரன் தொடராக எழுத வேண்டினார்.

சில வரிகளில் கடந்து போய்க்கொண்டிருந்த ஒன்றை முறைப்படுத்தப்பட்ட வடிவத்தில், அளவு திட்டமிட்டு எழுதுவது என்பது மனதிலிருந்து இறக்கி வைத்துவிடும் ஆசுவாசத்தை மட்டும் தந்துவிடும் செயலன்று. அதுவொரு பணி. உதாரணங்களைத் தேடிக் கோர்த்து, அவற்றை நியாயப்படுத்துவது. தானாய் வடியும் எழுத்தல்ல, செய்யும் எழுத்து. செய்யும் எழுத்தை, அதிலிருக்கும் ருசிக்காகக் கொண்டாடப்பட்டாலும், வாசமற்ற பூவின் மீது மல்லிகை வாசனையைத் தெளித்துவிட்ட மாதிரியும் சில நேரங்களில் உணர்ந்ததுண்டு. முகர்ந்து பார்க்கிறவர்களுக்கு தெரியாமல் போனாலும்கூட, தெளித்து விட்டவர்களுக்குத் தெரியும்தானே!

புத்தகம் முதலில் நட்புகளின் கை சேர்ந்தது. கதிருக்காக என வாசித்தவர்கள் மெல்ல கட்டுரைகளின் வழியே இறக்கி வைத்திருந்த என் அனுபவங்களையும், சில உதாரணங்களையும் தங்களோடு பொருத்திப் பார்க்க ஆரம்பித்தனர். அவற்றைப் பேச ஆரம்பித்தனர். அதன் வழியே, தான் கை சேரும் எல்லைகளை மெல்ல வேட்டையாடத் தொடங்கியது. தங்களுக்கான எழுத்து எனக் கருதிய நட்புகள் தன் வட்டத்தில் உள்ளோருக்கு புத்தகத்தை ஒரு பரிசுப் பொருளாக மாற்றினர். நட்புகள், அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் பரிசளிப்பதை விருப்பத்தோடு செய்தார்கள். அதன் நிமித்தமாகவே, இரண்டாம் பதிப்பில் பரிசளிப்பிற்கென இரண்டாம் பக்கம் தயாரிக்கப்பட்டது.

எட்டிய இடமெல்லாம் நேசிப்பிற்குரியதாக வேட்கையோடு விளையாடு மாறிக் கொண்டிருப்பதை உண்மையில் நான் தாமதமாகத்தான் உணர்ந்தேன். மீள் வாசிப்பு குறித்த பகிர்வுகள் பார்வைக்கு வந்தன. குழந்தைகள் வளரும் வரை பத்திரமாக வைத்திருந்து பரிசளிப்பேன் என்ற இளம் அம்மா முதல், மூத்த வயதும் - துறை அனுபவமும் கொண்டவர் நான் முன்பே படித்திருந்தால் எங்கியோ போயிருப்பேன்!எனக் கூறியது உட்பட ஆச்சரியமான கருத்துப் பகிர்வுகள் அவ்வப்போது வந்து கொண்டேயிருந்தன. முகமறியாத சிலரின் அழைப்பு அதிர வைத்தன. முதல் கட்டுரை உள்ளிட்ட சில குறிப்பிட்ட கட்டுரைகளை வாசித்துவிட்டு, தன் பெயர் கேட்கக் கூடாது, தன் எண்ணை சேமிக்கக்கூடாது என்கின்ற நம்பிக்கை வாக்குறுதிகளோடு மனதைக் கொட்டியவர்கள் உண்டு. படிக்க முடியலைனா செத்துடுவேன்எனும் மாணவி தொடர்பான கட்டுரையை வாசித்துவிட்டு இனி குடிக்க மாட்டேன் என உறுதியளித்தவரும் உண்டு.

மிகுந்த மன நெருக்கடியில் இருக்கிறேன், மனநல ஆலோசகரைச் சந்தித்தேன். உங்களிடம் பேச முடியுமா!எனச் சொன்னவரிடம் மட்டுமே நானாக வலிந்து, ’இந்த புக் ட்ரை பண்ணிப் பாருங்களேன்என முதன்முறையாக ஒரு தீர்விற்கான வாய்ப்பாக பரிந்துரை செய்தேன். அதையும் அவர் ஒரு விற்பனை நிலையத்திலிருந்து இணையத்தின் வழியேதான் வாங்கினார். எந்தக் கட்டுரை, எந்த வரி அவருக்கான தீர்வாக இருக்குமென்றெல்லாம் எனக்குத் தெரியாது. அதற்கு பொருத்தமான புத்தகமும்கூட கிடையாதுதான். 150 ரூபாயில் என்ன இழந்துவிடப் போகிறார், ஒருவேளை ஏமாற்றம் தந்தால், அதையும் ஏற்றுக்கொள்வோம் என்ற நினைப்பிலேயே பரிந்துரை செய்தேன். நானே நம்ப முடியாத மாற்றங்களை அவருக்கு கட்டுரைகள் தந்திருந்தன.

இந்தப் புத்தகம் தன்னம்பிக்கை வழங்குவதாகவோ, முன்னேற்றத்திற்கான உந்துதலைத் தரும் புத்தகமாகவோ அடையாளப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். என் அனுபவங்களைத் தம் அனுபவமாகக் கருதுவோரை சற்று சிந்திக்க வைக்கவோ அல்லது சிந்தனையில் இருந்து மற்றொரு முனைக்கு இழுத்து விடவோ செய்தால் போதும் என்பதே என் எதிர்பார்ப்பாக இருந்தது. அவ்விதமாகவே பெரும்பாலும் கருதப்பட்டது.



புத்தகம் குறித்து வரும் பல்வேறு கருத்துக்களை முழுவதும் நம்பத் தொடங்கினேன். அதற்கென தனியே தொடங்கப்பட்டிருந்த வேட்கையோடு விளையாடு ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகள் யாவையும் பகிரப்பட்டன. குறிப்பாக ஜெயலலிதா காளீஸ்வரன் அவர்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஏறத்தாழ, கட்டுரை அளவில் விமர்சனம் எழுதத் தொடங்கியதெல்லாம் வித்தியாசமான அனுபவம். அவற்றையே ஒரு தொகுப்பாக கொண்டுவரலாம் போல் தோன்றுகிறது.

எனக்கு நினைவு தெரிந்து, யாரிடமும் கருத்துக்களை கேட்டுப் பெற்றதில்லை. ஒரிருவரைத் தவிர, படி என யாரையும் வலியுறுத்தியதில்லை. அன்பின் நிமித்தம் மிகச் சிலருக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள் பிரிக்கப்படவேயில்லை என்பதையும் அறிவேன். மிக எளிய கணக்குதான், பிரித்து படித்திருந்தால் தொடர்பு கொண்டு பேசியிருப்பார்கள்.

புத்தகம் வெளியாகி ஓராண்டினை நிறைவு செய்யும் தருணத்தில், கல்லூரி மாணவ, மாணவியர்களிடமிருந்து தொடர்ச்சியாக வரும் கருத்துகள் இன்னொரு பக்கம் அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன. வாழ்வின் மிகக் கடினமான தருணங்களை மிகக் குறுகிய காலத்தில் கடந்ததை ஒரே மூச்சில் நாற்பந்தைந்து நிமிடங்கள் பேசி, நிறைவாக இப்போது தனிமையின் தோழனாக வேட்கையோடு விளையாடு இருக்கிறது என முடித்தது அதிர்வை ஏற்படுத்தியது.

இந்த ஒரு ஆண்டில் வேட்கையோடு விளையாடு புத்தகத்திற்கென்று பிரத்யேக விமர்சனக்கூட்டம் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அதற்கான சூழலும் அமையவில்லை. திருவையாறு நகரில் நான்கு புத்தகங்களுக்கு நடத்தப்பட்ட கூட்டத்தில் மட்டுமே வேட்கையோடு விளையாடு இடம் பெற்றிருந்தது. தனித்த விமர்சனக்கூட்டம், அறிமுகக்கூட்டம் என்பது குறித்து யோசனைகளும் எழவில்லை. ஆனால் நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டு நிறைவைக் கொண்டாடத் தோன்றியது.

அதற்கான எளிய அழைப்பிதழ் ஒன்று நிகழ்வு திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 48 மணி நேரம் முன்பாக ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப் வாயிலாக பகிரப்பட்டது.



எவ்வளவு குறுகிய கால அவகாசம் எனினும், ஒரு நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்யலாம் எனும் தைரியத்தை ஈரோடு வாசல் அமைப்பு தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கின்றது. வேட்கையோடு விளையாடு குறித்து பேச விரும்புவோர் பெயர்கள் கேட்டிருந்தேன். ஏழு பேர் முன் வந்தனர். சிறப்பு விருந்தினர், சிறப்பு பேச்சாளர் என்று தனியே திட்டமிடவில்லை. இந்த ஏழு பேரும் விரும்பிய வண்ணம் பேசட்டும் என்பதே எண்ணம்.

அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த ஜனவரி 5ம் தேதி மாலை 5.30 மணிக்கு சரியாக நிகழ்வு துவங்கியது. நட்புகள் காதர், ப்ரவீணா, கவிஞர் கோவை சசிக்குமார், மாணவி ஸ்ரீநிதி கார்த்திகேயன், பேராசிரியர் விஜி ரவி, ஜேஸி. தென்றல் நிலவன், ராஜி ஆகியோர் புத்தகம், கட்டுரைகள் குறித்து தொகுப்பாகவும் தனித்தனி அனுபவங்களாகவும் பேசினார்கள்.

* நண்பர் காதர் மிக முக்கியமான தருணத்தில் தன் நட்பு குடும்பத்தில் மரணத் தருவாயில் இருந்தவரிடம் கொடுத்து, அவர் மகன் வாசித்து மாற்றம் கண்டிருந்ததைக் குறிப்பிட்டு பேசி, மனம் கனக்கச் செய்தார்.

* ப்ரவீணா கனமான தருணமொன்றில் புத்தகம் பேசும் குறிப்பிட்ட ஒரு விசயத்தை தான் உண்மையில் உணர்ந்து கடந்து வந்தது குறித்து பேசினார்.

* கவிஞர் சசிக்குமார் புத்தகம் குறித்து சுமார் பத்து நிமிடங்கள் பேசுவதற்காக கோவையிலிருந்து வந்திருந்தார். இத்தனைக்கும் நாங்கள் இதற்கு முன்பு சந்தித்ததுகூட இல்லை. சில மாதங்களுக்கு முன்பு புத்தகம் கிடைக்கப் பெற்றிருந்தவர், அதை வாசித்துவிட்டு என்னிடம் பேசியிருந்தார். இந்த நிகழ்விற்காக பயணித்து வந்து நெகிழச் செய்தார். புத்தகம் குறித்த தம் கருத்துக்களை மிக அழகாக எடுத்து வைத்தார்.

* ஸ்ரீநிதி கார்த்திகேயன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி. சமீபத்தில் ஒரு பள்ளி ஆண்டு விழாவில் திடீரென என்னைச் சந்தித்து சில கேள்விகளால் அதிர வைத்தவர். மிக முக்கியமான ஒரு கேள்விக்கு என்னோடு இருந்த நண்பரும் பள்ளி முதல்வருமான சுரேஷ்குமார் அவர்களைக் கோர்த்துவிட்டு தப்பித்ததெல்லாம் வேறு கதை. அதன்பிறகுதான் ஸ்ரீநிதி நண்பர் கார்த்திகேயன் அவர்களின் மகள் எனத் தெரிய வந்தது. இந்த நிகழ்வில் அவரும் பேச விருப்பம் தெரிவித்து, மிக அழகாகவும் பேசினார். தம் வயதில் இருப்போருக்கு புரியும்படி சொற்களை எளிமைப்படுத்தி எழுதவும் எனும் வேண்டுகோளையும் வைத்தார்.

* பேராசிரியர் விஜி ரவி வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தம் வகுப்புகளில் கட்டுரைகளில் இருக்கும் உதாரணங்களைக் கொண்டு சேர்ந்ததைப் பகிர்ந்தார். அவருடைய துறையில் பயிலும் இரண்டு பேர் என்னிடம் நட்பு பாராட்டவும் காரணமாக இருப்பவர்.

* ஏற்கனவே ஐந்து பேர் புத்தகத்தை தலைகீழாகப் புரட்டியிருந்த நிலையில், தான் நினைத்த பலவற்றையும் சுட்டிக்காட்டிவிட்டார்களே என்றபடி திருச்செங்கோட்டிலிருந்து வந்திருந்த நண்பர் தென்றல் நிலவன் புத்தகம் குறித்துப் பேசினார்.

* இறுதியாக ராஜி தன்னுடைய சமீபத்திய உரை நிகழ்வுகளுக்கு புத்தகம் தூண்டுதலாக இருப்பதைச் சுட்டிப் பேசினார்.



பட்டியலில் இருந்த பேச்சாளர்கள் முடித்ததும், நிகழ்விற்கு வந்திருந்தவர்களில் விருப்பம் இருந்தவர்கள் பேசத் தொடங்கினர்.

* தம் மகனின் தூண்டுதலால் #வேட்கையோடு_விளையாடு புத்தகங்களை தம் நட்புகளுக்கு பரிசளித்ததாக ஜனார்த்தன சேனாபதி கூறினார்.

* நண்பர் சதீஷ், ஆசிரியர் ரவி முத்து ஆகியோர் என்னோடு கொண்டிருந்த நட்பைச் சுட்டிப் பேசினார்கள்.

* கருங்கல்பாளையம் நூலகர் ஷர்மிளா அவர்கள், புதிய தலைமுறை கல்வி இதழில் வெளியான காலத்தில் வாசித்த நினைவுகளைப் பகிர்ந்தார்.

* கொங்கு கலை அறிவியல் கல்லூரி முன்னாள் தாளாளர் திரு.இளங்கோ அவர்கள் கல்லூரி ஆசியர்கள் அனைவருக்கும் பரிசளித்தது குறித்தும், அணிந்துரை வழங்கியது குறித்தும், புத்தகத்துடனான தமது நெருக்கமான பிணைப்பு குறித்தும் விரிவாகப் பேசினார்.

* தொடர்ந்து தம் மாணவர்களுக்கு புத்தகத்தைப் பரிசாக வழங்கிவரும் ஜப்பானிய மொழி பயிற்றுவிக்கும் பயிற்சி மைய நிர்வாகி தம்பி குமார், புத்தகத்தை பரிசளிப்பதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

* நண்பர் ஜேஸி. நந்தகுமார் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவரும் தம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

* நிறைவாக நண்பர் ஆரூரன் அவர்கள் ஆழமானதொரு நிறைவுரை வழங்கினார்.

* அண்ணன் மருத்துவர் சோமு அவர்கள் பாடல் ஒன்றை பாடி மகிழ்வித்தார்.

* நிகழ்விற்கு முன்னதாக முதல் அன்பாக, சிங்கப்பூரில் இருக்கும் முத்துக்குமார்-ஜெயசுதா தம்பதியினரின் மகள் ஜீவந்திகா காணொளியில் பேசிப் பகிர்ந்திருந்தார். சிங்கப்பூர் தமிழில் அழகியதொரு அங்கீகாரம் அது.

முதலாம் ஆண்டு நிறைவினைக் கொண்டாட அரங்கு அளித்ததோடு நிகழ்வின் சிறப்பிற்கு பெரிதும் காரணமாக அமைந்த நூலகர் திருமதி ஷீலா மாரப்பன் அவர்களும், நூலகப் பணியாளர்களுக்கும் மிகுந்த நன்றிக்குரியவர்கள்.

ஒரு புத்தகத்திற்கு எதற்கு ஆண்டு விழா எனும் கேள்விகளுக்கெல்லாம், நிகழ்வின் மகிழ்வில் பதில் கிட்டியதாய் மனது நிரம்பியிருக்க, அடுத்த அன்புப்புயல் ஈரோடு வாசல் குழுமத்தில் துவங்கியது. வாசல் வாசிக்கிறது எனும் வெற்றிகரமான திட்டம் எங்களிடம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தத் திட்டத்தில் 2019ம் ஆண்டு முழுக்க ஏறத்தாழ 40-50 பேர் தலா 30-50 புத்தகங்கள் வரை வாசித்து, வாசித்த புத்தகம் குறித்து ஒவ்வொரு வாரமும் தம் கருத்தை குரல் பதிவாக பகிர்ந்து வருகின்றனர். அதே பாணியில் வேட்கையோடு விளையாடு குறித்து சிறப்பு பகிர்வொன்றினை பகிருமாறு மலர் செல்வம் அவர்கள் கேட்க, பகிரப்பட்ட சில கனமாக பதிவுகள் நிறைய யோசிக்க வைத்தன.

* வாசல் குழுமத்தில் அப்துல் ஹக்கீம் புத்தகம் குறித்து பாராட்டு சாசனம் வாசித்தார்.

* அதைத் தொடர்ந்து சகோதரி யசோதா அவர்கள் தன்னை யோசிக்க வைத்த புத்தகத்தின் மிக முக்கியப் புள்ளியைப் பகிர்ந்திருந்தார்.

* நண்பர் சக்திவேல் அவர்கள் முதல் கட்டுரையில் நெகிழ்ந்ததைப் பகிர்ந்தார். கூடுதல் சிறப்பாய் 143 பக்கம் என்பதை பேரன்பின் அடையாளமாய் குறிப்பிட்டிருந்தது அழகியல்.

* மஞ்சு கண்ணன் புத்தகத்தில் இருந்து, தன்னை தேடத் தொடங்கியிருப்பதையும், முன்பே கிடைக்கவில்லை எனும் ஏக்கத்தையும் பகிர்ந்தார்.

* பேராசியர் அன்புமணி அவர்கள் தம் தாளாளர் வழியே புத்தகம் தன்னை வந்தடைந்தது தொடங்கி, நட்பாகி இன்று வாசலில் இணைந்தது வரையிலான பயணத்தை குறிப்பிட்டார். மிக ஆச்சரியமானது புத்தகத்தில் இடம் பெற்றிருந்தவர்களை கூகுளில் தேடி முகம் பார்த்தது.

* தம்பி கோடீஸ்வரனின் விமர்சனப் பார்வை எனக்குப் பிடித்திருந்தது. கட்டுரையின் பாத்திரங்கள் எதை நோக்கிப் போகிறது என்பதைத் தேடிக் களைத்து, ஒருகட்டத்தில் நத்தை உதாரணத்தின் வழியே உள்நுழைந்து பின்னும் முன்னும் பயணித்ததை தெளிவாக பகிர்ந்திருந்தார்.

* நிகழ்விலும் பிறகு இங்கும் ஈரோடு காதர் அவர்கள் பகிர்ந்த, புத்தகத்தால் நண்பர்கள் இருவருக்கு ஏற்பட்ட அனுபவம் மிகுந்த நெகிழ்வாக இருந்தது.

* வாசலில் இந்த பகிர்வுகளுக்கு முன்னெடுத்ததோடு, தனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து மலர் செல்வம் அவர்கள் பகிர்ந்ததை ஆச்சரியம் பதிந்த மனதோடு கேட்க முடிந்தது. ஒரு காலத்தில் அவருடைய உரை கேட்க தேடிப் பயணித்தது நினைவிற்கு வந்து போகின்றது.

* புத்தக வெளியீடு அன்று கட்டுரையில் இருக்கும் தமது மாணவியுடனான வாசிப்பு அனுபவம் குறித்துப் பேசி நெகிழ வைத்திருந்த தாளாளர் உமா சிவக்குமார் அவர்கள், மீள் வாசிப்பிற்கான புத்தகமாக இதைத் தொடர்ந்து கருதுவதாகக் கூறியதை பெருமைக்குரியதாக கருதுகிறேன்.

* தம்பி தனபால், இந்த புத்தகம் சேர்ந்திருந்த இடங்கள் குறித்து பேசியதோடு, சேர வேண்டிய இடங்கள் குறித்துப் பேசியது யோசிக்க வைத்திருக்கின்றது. விரைவில் அதற்கான ஒரு திட்டத்தை முன்னெடுக்க விரும்புகிறேன்.

நிறைவாக...
அலையலையாய் வந்து மோதும் மற்றும் சூழும் பாராட்டுகள் அனைத்தும் மொத்தமாக என்னை மட்டுமே சாருமா...!? நிச்சயம் கிடையாது!
ஒரு பக்கத்தில் குவிந்து கிடந்த உண்மைகள், உதாரணங்கள், அனுபவங்கள் மற்றும் பார்த்தது , கேட்டது, உணர்ந்தது என என் கை சேர்ந்ததை குறிப்பிட்ட அந்த ஆறு மாத காலத்திற்குள் சொற்களால் சூடி இறக்கி வைத்ததைத் தவிர, வேறொன்றும் நான் பெரிதாக செய்துவிடவில்லை. ஒருவகையில் அந்தக் கட்டுரைகள் எனக்கான விடுதலைக் களம்.

கட்டுரைகள் குறித்த பாராட்டுகள் அனைத்தும், அந்தக் கட்டுரைகளுக்குள் இருக்கும் உண்மை உதாரணங்களின் தலையில் கை வைத்து தடவி வாழ்த்துவதாக மட்டுமே பகிர்வோரின் அருகில் நின்று நானும் ப்ரியமாய் கருதிக் கொள்கிறேன். மிக முக்கியமாக அந்தக் கட்டுரைகளில் அடையாளம் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் மாணவ, மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி நிறுவன நிர்வாகிகள் மற்றும் உதாரணங்களில் உயர்ந்தோங்கி நிற்கும் பல ஆளுமைகள், சாதனையாளர்கள் அனைவருக்கும் பங்குண்டு. மிக முக்கியமாக என்னை எழுத வைத்த புதிய தலைமுறை கல்வி இதழுக்கும் பங்குண்டு.

அனைவரின் அன்பிற்கும் தலை வணங்குகிறேன். கண்ணாடி போல் நின்று, நிகரான ப்ரியம் தோய்ந்த அன்பை பிரதிபலிக்கவே விரும்புகிறேன். தொடர்ந்து பயணிப்போம்.

*



2019 டூ 2020


ஒரு புத்தாண்டைக் கொண்டாட என்ன இருக்கிறது? அன்றைக்கு முக்கியமாகச் செய்ய வேண்டியவை இரண்டுதான் ஒன்று நாட்காட்டியை மாற்றுவோம், அடுத்து தேதி குறிப்பிடும்போது கவனமாக புதிய ஆண்டை குறிப்போம்.

சரி, நினைவுகள் அற்ற ஒரு ஆண்டினை எப்படி நினைவு வைத்துக்கொள்வீர்கள்?

ஆச்சரியமாக இருக்கின்றது. இரண்டு நாட்களாக மார்கழி மத்திக்கே உண்டான குளிர் இல்லை. ஆனால் 2019 ஆண்டின் பிறப்பு என்பது கடும் குளிர் சூழ்ந்ததாக இருந்தது. கூடவே ஆண்டின் துவக்கம் வேட்கையோடு விளையாடு புத்தகத்தை அச்சிற்கு அனுப்பிவிட்டு வெளியீட்டு விழா திட்டமிடலுக்கு காத்திருந்த நேரத்தில் அமைந்தது. இந்த இரண்டு நாட்களாக வேட்கையோடு விளையாடு முதல் ஆண்டு நிறைவு குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

உண்மையில் கடந்த ஒரு வருடத்தைத் திரும்பிப் பார்த்தால் பெரிய நினைவுகள் ஏதுமில்லை. நினைவுகளே இல்லையா எனும் ஆச்சரியமும்,  நினைவுகள் ஏன் இல்லையெனும் கேள்வியும் எழுகிறது. எதன் அடிப்படையில் நினைவுகள் தங்குகின்றன? பொருளீட்டுவதை வைத்தா? புகழ் சேர்ப்பதிலா? நிறைய திட்டங்கள் நிகழ்த்தியா? ஆம் என்றால் இவை யாவற்றிலும் குறையேதும் இல்லை. எனினும் நினைவுகள் கனக்காத எடையற்ற ஆண்டாகவே நான் 2019ஐ வழியனுப்பி வைத்தேன்.

எதனால் அப்படி ஆனது என யோசித்துக் களைத்ததில் ஒன்றைப் புரிந்து கொண்டேன், 2019 குடும்பம் சார்ந்த மற்றும் நண்பர்கள் சூழ்ந்த பயணங்கள் ஏதுமில்லாத ஆண்டாக அமைந்து போனது. அதுவே நினைவு வறட்சிக்குக் காரணமாக இருக்கலாம். பயணங்கள் இல்லை என்பதைவிடவும் மிக முக்கியமானது, 2019ல் நான் எதுவுமே எழுதவில்லை. இந்த தசாப்தத்தில் எதுவும் எழுதாமல் ஏமாற்றிய ஆண்டு இதுவாகத்தான் இருக்கும். தொடந்து கட்டுரைகளே எழுதியதில் ஏற்பட்ட சலிப்பு மனநிலை, முற்றிலுமாக முடக்கியிருக்கலாம். அலச வேண்டிய தருணத்தில் இருக்கிறேன். ஆக பயணங்களும், எழுத்தும் இல்லாததே இதற்கான காரணமாகத் தீர்ப்பெழுதிக்கொண்டு...



மற்றபடி 2019 மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை. மிகுந்த வாஞ்சையே மிளிர்கிறது. அற்புதமான நட்புகளை இனங் கண்டிருக்கிறேன். திட்டமிடல்களை தெளிவாக மேற்கொண்டிருக்கிறேன். உரை மற்றும் பயிலரங்குகளில் மிகுதியான உணர்வுப்பூர்வமாக மனம் திறந்த மனிதர்களை குறிப்பாக பிள்ளைகளைச் சந்தித்திருக்கிறேன்.

2019ல் மனம் திருப்தியடையும் அளவிற்கு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருந்திருக்கிறேன். சுமாராக 220 மணி நேரம் பேசியிருப்பதாக என் நிகழ்ச்சிப் பட்டியல் சொல்கிறது. தமிழகத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தென்காசி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் இலங்கையில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியா என்று உரை மற்றும் பயிலரங்குகளில் கலந்து கொண்ட சுமார் 38000 பேரில் சுமார் 26000 பேர் மாணவ, மாணவிகள் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. நிகழ்ச்சிகளின் நிறைவில் பிள்ளைகள் நெகிழ்ந்து, மனம் திறந்து சிந்திய கண்ணீரெல்லாம் உணர்வில் கலந்து உயிரோடு பிணைந்ததாகவே கருதிக் கடக்கிறேன்.

நட்புகளின் புத்தகங்களை வெளிக்கொண்டுவர வாசல் படைப்பகம் துவங்கப்பட்டது. முதல் வெளியீடாக பொன்னி, ஆதலினால் தேடல் செய்வீர் வெளியிட்டது மற்றும் புதிய எழுத்தாளர்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரியது.

இந்து தமிழ் திசை அரைப்பக்கத்திற்கு வெளியிட்ட, மாற்றத்தை ஏற்படுத்திய மந்திரம் எனும் அறிமுகக் கட்டுரை பெரும் கவனத்திற்குள் என்னை நிறுத்தியது.

எல்லாவற்றிற்கும் மேலாக #வேட்கையோடு_விளையாடு மிகப்பெரியதொரு மாயம் செய்தது. கட்டுரைகள் எழுதி முடித்து ஏறத்தாழ நான்கு மாதங்கள் கிடப்பில் போட்டு, அப்படியே தேங்கிவிடுமோ என்ற அச்சத்தில் தொகுத்து, வடிவமைத்து, சொந்தமாக வெளியிட்டிருந்தேன். ஓராண்டு நிறைவடையும் தருணத்தில் இரண்டாம் பதிப்பும் தீர்ந்து போகும் நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது.

விரும்பி வாங்கியதோ, பரிசாக வழங்கப்பட்டதோ, எப்படி ஒருவரைச் சேர்ந்திருந்தாலும், அவர்களில் 80% பேர் அதை வாசித்திருக்கின்றனர் என்பத மனதார அறிவேன். அப்படி வாசித்தவர்களில் பல நூறு பேர் என்னைத் தொடர்பு கொண்டு தம் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர், தொடர்ந்து தற்போதும் வெளிப்படுத்தி வருகின்றனர். எழுத்து என்னவெல்லாம் செய்யும் என்பதை வேட்டைகோடு விளையாடு வாசித்துவிட்டு உணர்வுப்பூர்வமாக உரையாடியவர்களின் வாயிலாக அறிந்து பிரமித்திருக்கிறேன். உண்மையில் எழுதும் காலத்தில் ஒவ்வொரு வாரமும் எழுதவேண்டும், ஒரே கோட்டினை மையமாக வைத்து எழுத வேண்டும் என்ற நிலையில் நான் சுணங்கியதும்கூட உண்டு. ஆனால் ஒவ்வொருவரின் உணர்வுப் பகிர்வும், இன்னும் கவனம் கொடுத்து முழு உத்வேகத்தோடு எழுதியிருக்கலாமோ என்று பலமுறை யோசிக்க வைத்திருக்கிறது.

புத்தாண்டை கவனத்தில் கொள்ள வேண்டுமா, கொண்டாட வேண்டுமா? இது வெறும் காலண்டர் மாற்றும் தினம் மட்டும்தானா எனும் கேள்வி வரும்போது, நான் சொல்ல விரும்புவது, நமக்கு எல்லாமே காலம்தான். நாம் எதையும் காலத்தின் அடிப்படையில், இன்னும் நேரடியாகச் சொல்ல வேண்டுமெனில் ஆண்டின் கணக்கிலேயே கவனத்தில் எடுக்கிறோம். எப்போது பிறப்பு, எப்போது பத்தாம் வகுப்பு, எப்போது கல்லூரி, எப்போது திருமணம், எப்போது குழந்தை, எப்போது, எப்போது, எப்போது எனக் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும், 1989, 1994, 2002 என்பது மாதிரி முதலில் நாம் ஆண்டின் எண்ணிக்கையையே கணக்கில் வைத்துக் கொள்கிறோம், அதற்கு அடுத்ததுதான் வயது உள்ளிட்ட மற்ற எந்த ஒப்பீடு, உதாரணங்களுமே. ஆகவே, 2019 என்றால் அது வேட்கையோடு விளையாடு-வின் ஆண்டு. வேட்கையோடு விளையாடு-வின் காலம் எதுவென்றால் அது 2019 என்பதாகவே இனி எனக்கு எப்போதும் அழுந்தப் பதிந்திருக்கும்.

2019 அழுத்தம் திருத்தமாக பயணிக்க வேண்டும், எழுத வேண்டும் என்பதை எனக்கு விட்டுச் சென்றிருப்பதாக கருதி 2020ல் நுழைந்திருக்கிறேன். இந்த வருடத்திற்கென்று பட்டியலிருக்கும் ஆசைகளை காலத்தின் வேகத்தில் மறந்து போய்விடாமல் கனவுகளாக்கி எட்டிவிட வேண்டுமென உறுதியாக விரும்புகிறேன்.

இந்த ஆண்டு நிறைய மனிதர்களைச் சந்திக்க வேண்டும். சந்தித்தவர்களோடு, இணைந்தவர்களோடு அன்பும் நட்பும் இன்னும் கூடுதலாக உணர வேண்டும். அனைவருடனும் இணைந்து பயணித்து, நிறைய நினைவுகளைச் சேகரிக்க வேண்டும்.

வாழ்தல் அறம்.