Apr 26, 2025

விதைக்கப்படும் துயரங்கள்

 நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத் தேவைகள் கடந்து ஒவ்வொருவரும் நிறைய செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். அவசியமானது போக, ஆசைக்கும், ஆடம்பரத்திற்கும், சாகசத்திற்கும் அவரவர் விரும்பிய வகையில் நிறைய செய்கின்றோம். செய்யும் அனைத்துமே இந்த வாழ்வுக்கானதுதான் என ஆழமாக நம்பினாலும், உண்மையில் அனைத்துமே அதற்கானதாக இருந்துவிடுவதில்லை என்பதுதான் அதிலிருக்கும் நகை முரண். அவற்றில் விபத்துகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு.


வாழ்வின் தடமெங்கும் விபத்து சார்ந்த இழப்புகளை ஒவ்வொருவரும் சந்தித்தும், கேட்டும், கண்டும் வந்திருப்போம். அவற்றில், சாலை விபத்துகளைத்தான் அதிகம் கேள்விப்படுகின்றோம். பணியிட விபத்துகள், வீட்டில் நிகழும் விபத்துகள், சுற்றுலா விபத்துகள், இயற்கைப் பேரிடர் விபத்துகள்,  நீர்நிலை விபத்துகள்,  விமான விபத்துகள், ரயில் விபத்துகள், படகு, கப்பல் விபத்துகள், விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு விபத்துகள் என விபத்துகளின் களங்கள் நிறைய உண்டு. 

அடிக்கடி புழங்கும் சாலைப் பிரிவில் இரண்டு பேருக்கான அஞ்சலிப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டு பேரும் மத்திம வயதினராகத் தெரிந்தனர். அந்தப் பதாகைகள் இருந்த இடத்திலிருந்து 50 அடி தொலைவில், கனரக  வாகனங்களை கழுவும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. 

அன்றைய தினம் சாயப்பட்டறை ஆசிட் எடுத்துச்செல்லும் டேங்கர் லாரி சுத்தம் செய்யப்படுவதற்காக வந்திருக்கிறது. மூடியைத் திறந்து சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய நபர் மூச்சுத் திணறலால் மயங்கி விழுந்திருக்கின்றார். அவரைக் காப்பாற்றுவதற்காக முதலாளியும், இன்னொருவரும் பதட்டத்தில் இறங்க அவர்களுக்கும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்திருக்கின்றனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் இறந்துபோன இரண்டு பேர்தான் பதாகைகளில் இருந்தவர்கள். முதலாளியும் இறந்துபோன சூழலில், வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் வெறுமையாக மயான அமைதியோடு இருக்கின்றது. எத்தனையோ முறை இதுபோன்ற டேங்கர்களைக் கழுவியதுண்டு எனும் நம்பிக்கையோ, ஆசிட்டின் கொடூரம் குறித்த அறியாமையோ அந்த அரிய உயிர்களைக் கொய்து போயிருக்கலாம்.  

ஒவ்வொரு நாளும் இதுபோன்று எத்தனையோ விபத்துகளைக் கேள்விப்படுகின்றோம். விபத்துகள் பெரும்பாலும் தவிர்க்க முடியாதது எனும் மனநிலை பலருக்கும் உண்டு. ‘நம்ம கையில் என்ன இருக்கு? தினமும் எத்தனையோ நடந்துட்டுத்தானே இருக்கு!’ என்றெல்லாம் சமாதானப்படுத்திக் கடந்து விடுகின்றோம். சற்று சிந்தித்தால், நாம் அறிந்த பல விபத்துகள் ஏறத்தாழ தவிர்த்திருக்கக் கூடியவைதான். 

ஒரு விபத்து மற்றவர்களுக்கு பெட்டிச் செய்தி. ஆனால் உற்றவர்களுக்கு, வாழ்நாள் முழுமைக்குமான மிகப் பெரிய துயரம். அது ஒருபோதும் பாடம் ஆவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை. 

விபத்துகளை எளிதாக இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று தம் கட்டுப்பாட்டில் இருப்பது. மற்றொன்று தம் கட்டுப்பாட்டில் இல்லாதது. அதிகமாக நிகழ்வது தம் கட்டுப்பாட்டில் இருக்கும் விபத்துகள்தான். அந்த விபத்துகளுக்கான மிக முக்கியமான காரணங்களாக சிலவற்றைப் பட்டியலிடலாம். அதீத நம்பிக்கை, அசட்டுத் தைரியம், விழிப்புணர்வு இல்லாதது, தவிர்க்க வேண்டியதை தவிர்க்காதது, கவனக் குறைவு, அலட்சியம், உடல்நிலை உள்ளிட்டவை அதில் அடங்கும்.

நட்புகளோடு சுற்றுலா செல்லும்போது சூழல் அறியாமல், பலரும் நீர் நிலைகளில் இறங்குவதுண்டு. அவர்களில் சிலருக்கு நீச்சல் தெரிந்திருக்கலாம். நீச்சல் பழகிய நீர்நிலைக்கும், அங்கிருக்கும் நீர்நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாமும் ஒன்றுபோல் தெரியும். ஆனால் அனைத்து நீர்நிலைகளும் ஒன்றல்ல. ஒவ்வொன்றுக்கும் தனித்த வடிவங்கள், போக்குகள் மற்றும் தன்மைகள் உண்டு. சிலருக்கு நீர்நிலைகள் குறித்த அனுபவமோ, பழக்கமோ துளியும் இருக்காது. எனினும், நட்புகளுடன் இருக்கும் துள்ளல் மனநிலையில் இறங்கி ஆபத்தை வரவழைத்துக் கொள்வதுண்டு. குறிப்பாக கோடை விடுமுறைக் காலங்களில், ஆர்வமிகுதியில் நீர்நிலைகளுக்குச் செல்வோர் இதுபோன்ற விபத்துகளில் சிக்கிக் கொள்வதை அதிகமாகக் காண முடியும்.

சரியான வழிகாட்டுதல் இன்றி மலையேற்றம் செல்வோர் வழி தவறி காணாமல் போவதுண்டு. திடீரெனப் பெய்யும் பெருமழைகளில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புண்டு. உடல்நிலைப் பொருட்படுத்தாது மலை ஏறி ஆபத்தை வரவழைத்துக் கொண்டவர்களும் உண்டு. தமிழகத்தையே உலுக்கிய குரங்கனி தீ விபத்தின் பின்னால், அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் மலை குறித்த அறியாமை இருந்தது. எதிர்பாராதவிதமாக காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். முறையான அனுமதி, தொடர்புடைய வழிகாட்டுதல்கள் இல்லாததால் அவர்களுக்கு உதவிகள் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை.

சாகச மனநிலைக்காக, வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவதற்காக, ரீல்ஸ் எடுப்பதற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக பாதுகாப்பு அம்சங்களை பாராமல், அணைகளில் ஏறுவது, படகில் பயணிப்பது, பாரா க்ளைடிங்கில் பறப்பது, பைக்கில் சீறிப்பாய்வது, ரேஸ் விடுவது என எத்தனையோ செயல்கள் விபத்துகளாக மாறுவதைக் கண்டுகொண்டேதான் இருக்கின்றோம். இவைகளுக்கு ஈரம் உலராத உதாரணங்கள் நம்மிடையே நிச்சயம் இருக்கும்.

சூழல்கள் பல நேரங்களில் நமக்கு மிகப் பெரும் பாடங்களை கற்றுக் கொடுத்திருந்தாலும், அவற்றையெல்லாம் வாழ்வின் பரபரப்பில் எளிதில் மறந்துவிடும் பலவீனம் கொண்டவர்கள்தான் நாம்.

நம்முடைய சாலைப் பயண தேவைகளும், விகிதங்களும் ஆய்வுக்குட்படுத்த வேண்டியவை. ‘சும்மா வெளியில் போய்ட்டு வருவோம்!’ என சில நூறு கிமீ தூரம் கார் ஓட்டிச்செல்வது பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. ‘டீ குடிக்க, சாப்பிட’ என நெடுந்தொலைவு சென்று வருவது தொடர்ந்து இயல்பாகிக் கொண்டிருக்கின்றது. ‘ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்துச்சு, அதனால ஒரு ட்ரைவ் போயிட்டு வந்தேன்!’ என சிலர் சொல்வதுண்டு.  

என்னுடைய பயிலரங்கில் ஒருவர், வீட்டில் கணவருடன் ஏற்பட்ட சிறு சண்டைக்கான எரிச்சலில், வீட்டில் சொல்லாமல் காரை எடுத்துக்கொண்டு சுமார் நூறு கி.மீ தூரம் ஓட்டியபிறகுதான் மனம் ஆறியதாகக் கூறினார். அவர் பயணித்தது மழை பெய்யும் சாத்தியம் கொண்டு ஓர் இரவு நேரத்தில். மிக முக்கியமானது அவருக்கு ஓரளவுதான் கார் ஓட்டத் தெரியும்.

நான் அறிந்த ஒரு ஓட்டுநர், மிகக் கடுமையான உழைப்பாளி, நல்ல மனிதர். தினமும் சென்னைக்கு இரவு முழுக்க லாரி ஓட்டிக் கொண்டிருந்தார். நீண்ட காலமாக ஓட்டுகின்ற, மிகுந்த அனுபவம் மிக்கவர். ஒருநாள் முதலாளியின் குடும்பத்தினருடன் தென்மாவட்டத்திற்குச் செல்ல இவர்தான் ஓட்டிச் சென்றிருந்தார். இரவு திரும்பி வரும்போது, அவர்களுடைய ஊரை நெருங்கும் தருணத்தில் ஏற்பட்ட விபத்தில் கார் முற்றிலுமாக உருக்குலைந்துபோனது. அவரும், கல்லூரியில் படிக்கும் இளம் பெண்ணும் அந்த விபத்தில் மரணமடைந்தனர். மிகச் சமீபத்தில் சுமார் 150 கிமீ தொலைவிற்குள், வெவ்வேறு இடங்களில் மூன்று உயர் ரக கார்கள் நொறுங்கி உருக்குலைந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் சுங்கவரி செலுத்தும் நெடுஞ்சாலைகளில் விபத்து நடந்த சில மணி நேரங்களில் அவை அப்புறப்படுத்திவிடுவதுண்டு. 

இரவு பகலாக தொலை தூரத்திற்கு லாரி ஓட்டும் அனுபவம் வாய்ந்த ஓட்டுநருக்கு, கார் ஓட்டுவது எளிதானதாகத் தெரியலாம். அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் நீண்ட காலம் ஒன்றில் பழகியவருக்கு, அதையொத்த ஆனால் வேறு வடிவத்தில், வேறு திறன் கொண்டிருப்பது சட்டனெ ஒரு கணத்தில் சவாலானதாக மாறிவிடலாம். அந்த ஒரு கணம் போதாதா!

பல ஆண்டுகளாக ஓட்டுகிறேன், பல லட்சம் கி.மீ தொலைவு ஓட்டியிருக்கின்றேன் என்பதுபோன்ற அதீத நம்பிக்கை மற்றும் பெருமைகளோடு மட்டும் வண்டியை இயக்கிவிடக்கூடாது. எப்போதுமே அதீத நம்பிக்கை யதார்த்தங்களை மறைக்க முயற்சி செய்யும். போதுமான ஓய்வு எடுக்காமல் வாகனம் இயக்குவது, பின்னிரவுகளில் தூக்கம் வந்தாலும் சீக்கிரம் இடம் சென்றடைந்துவிடலாம் என முயற்சிப்பது, சாலை நன்றாக உள்ளது, வண்டி சீறுகின்றது என வேகத்தைக் கூட்டுவது உள்ளிட்ட எதைச் செய்தாலும் ஆபத்தை நோக்கி பயணிக்கின்றோம் என்றே பொருள். மது போதைப் பயணங்கள் குறித்தெல்லாம் எதுவும் தனியே எழுத வேண்டிய தேவையில்லையென நினைக்கிறேன்.

சாலை விபத்துகள் எண்ணிகையின் பின்னாலும் ஒரு தோராயமான கணக்கு இருக்கத்தான் செய்யும். எடுத்துக்காட்டாக, நூறு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆயிரம் வண்டிகள் ஒரு நாளைக்கு பயணிக்கின்றன என்றால், அதில் சுமார் பத்து விபத்துகள் நடப்பதாக வைத்துக்கொண்டால், அதன் சராசரியை இரண்டு விதமாகக் கணக்கில் கொள்ளலாம். ஒரு லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் பத்து விபத்துகள் நடக்கலாம் அல்லது 1000 வண்டிக்கு பத்து விபத்துகள் நடக்கலாம். எதற்கெடுத்தாலும் வண்டியை எடுத்துக்கொண்டு, பறக்க முற்படுபவர்களிடம் சொல்வது. ஒரு லட்சம் கிமீ தொலைவிற்குள், 1000 முறை வண்டியை இயக்குவதற்குள் சுமார் பத்து முறை சிறிதாகவோ பெரிதாகவோ, எங்காவது இடிக்கலாம், விபத்துகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் தூரத்தை வெளிநாடுகளில் நேர அளவீட்டில் சொல்வதுண்டு. காரணம் அவர்களின் சாலை அமைப்பு மற்றும் போக்குவரத்து தன்மை அவ்விதமானது. ஆனால் நம் ஊர்களில் நேர அளவினை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொருமுறையும் பயணிப்பது மிகுந்த ஆபத்தானது. காரணம், இங்கு எப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும், எப்போதும் சாலை செப்பனிடப்படும் என்பதையெல்லாம் நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கூகுள் மேப் காட்டும் சராசரி நேரத்தைவிட முன்கூட்டியே சென்றடைவதை ஒருவித வெற்றியாகக் கருதுவோரும் இங்குண்டு. 

நமக்கு அனுபவம் உள்ளது, நமக்கு எதும் நடக்காது, சரி செய்துதான் பார்ப்போமே என்பது போன்ற நம்பிக்கைகள்தான் பல தருணங்களில் பெரும் துயரினைக் கொண்டுவந்துள்ளன. இது சாலை விபத்துகள் முதல் சாகச விபத்துகள் வரைப் பொருந்தும்.




யாருடைய உரையாடல் என்று நினைவில்லை. சமீபத்தில் கேட்டதில் ஆழப்பதிந்த உரையாடல் அது. ”எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது. அந்த வாழ்வில் சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் செய்வேன். ஆனால் ஒருபோதும் சாகசம் என்ற பெயரில் ரிஸ்க் எடுக்கமாட்டேன்!” இது பலருக்குமான பாடம் என்றால் மிகையல்ல.

விபத்துகளினால் உறவு மற்றும் நட்புகளில் இழப்புகளைச் சந்தித்தவர்களை கணிசமாக நாம் அறிந்திருப்போம். அந்தக் குடும்பங்களின் நிலை விபத்துக்கு முன், விபத்துக்குப் பின் என மாறியிருப்பதையும் கண்டிருப்போம். அந்த மாற்றம் ஒருபோதும் கற்பனை செய்திடாதது. விபத்துகள் உயிர்களைக் கொய்திடும்போதே, துயரங்களை விதைத்து விடுகின்றது.

நாம் அறிந்த விபத்துகளின் பட்டியலை எடுத்து அதன் தன்மைகளை மேலோட்டமாகப் பார்வையிட்டாலே, அவற்றில் மிகப் பெரும்பான்மையானவை மிக நிச்சயமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

எல்லாருக்குமே தாம் செய்யும் தவறு தெரியாமலோ, புரியாமலோ இல்லை. ஆனாலும் அதனைத் தொடர்ந்து செய்வதற்கு, அவர்களிடம் சில காரணங்கள் இருப்பதுண்டு. அவற்றில் மிக முக்கியமான காரணம் ‘நான் அப்படித்தான் செய்வேன்!’ எனும் மனோபாவம். அந்த மனோபாவத்திற்கு ‘நான் இப்படித்தான்!’ என தன்னை தவறாக வரையறுத்துக்கொள்வதும் ஒரு காரணம். சூழலுக்கும், காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ப என்னை தகவமைத்துக்கொள்வேன் என்றில்லாமால், நான் என்றால் இப்படித்தான் என வரையறுத்தல் வெறும் வீம்பு மட்டுமே. வீம்பு செழித்து வாழும் இடங்களில், ஒருபோதும் அறிவு உயிர்ப்புடன் இருப்பதில்லை.

Apr 6, 2025

முதியதோர் உலகு





அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி வரும் வழியில் அமர்ந்திருந்தார். அவரைக் கடக்கும்போது கவனித்தேன். அவரும் என்னைப் பார்த்த நொடியில் புன்னகைத்தார். புன்னகையை எப்படிப் புறந்தள்ள முடியும். நானும் புன்னகைத்தேன். 

அந்தப் புன்னகைக்குக் காத்திருந்தவர்போல் எழுந்தார். ஏதோ கேட்க, சொல்ல வருகிறார் எனப் புரிந்தது. என் வேகத்தைக் குறைத்தேன். சிரித்த முகம். சிலருக்குத்தான் அப்படி இயல்பாக வாய்க்கும். சிலர் தன்னை அப்படி அமைத்துக் கொண்டதும் உண்டு. அவர் ஏதோ பேசத் தொடங்கியிருந்தார். காதில் இருந்த இயர்பட்ஸில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ‘சொல்லுங்க!’ என்றேன்.

”உங்களை அடிக்கடி பார்க்கிறேன். பேசனும்னு நினைப்பேன். காதில் அதைப் போட்டுட்டு வேகமாப் போவீங்க. தொந்தரவா இருக்குமோனு பேசாம போய்டுவேன். இன்னிக்குத்தான் பேச முடிஞ்சிருக்கு!” என்றபடி என்னோடு நடையில் இணைகிறார்.

அவரைக் கவனித்திருக்கிறேனா? உண்மையில் நினைவில்லை. கவனித்திருக்கலாம், மனதில் பதிந்திருக்கவில்லை. நடக்கும் வழியில் அப்படி யாரிடமும் பேசத் தோன்றியதில்லை. ஓரிரு தலையசைப்புகள் எப்போதாவது உண்டு. மற்றபடி காலை நடை என்பது எனக்கான தவ வேளை. பெரும்பாலும் ஏதாவது கேட்டபடி, எனக்குள் உரையாடியபடி நடப்பேன். 

“அப்டீங்ளா.... ஸாரி நான் கவனிச்சதில்ல... சொல்லுங்க!”

எங்கிருந்து வருகிறேன் எனக் கேட்டார். அப்படியான கேள்விகளை விரும்புவதில்லை. அங்கே என திசையை மட்டும் காட்டினேன். தம் வீடு இருக்கும் இடத்தைச் சொன்னார். சாலையின் முடிவில் நான் திரும்பும் திசைக்கு எதிர்பக்கம் அவரின் பகுதி. 

அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணி நிறைவு செய்திருக்கிறார். மகன் மருத்துவர். மகள் பட்டயக் கணக்காளர். பிள்ளைகளின் வயது சொல்கிறார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. சமீப ஆண்டுகளில் படிப்பு முடித்து பணிக்கு சென்றிருக்க வேண்டும். அடுத்தடுத்து அவரே சொல்லிக்கொண்டிருக்க, முடிவாக என்ன சொல்ல வருகிறார் என என்னால் இனம் காண முடியவில்லை. இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

“சரிங்க... இன்னொரு நாள் பார்க்கலாம்!” என நடையை வேகப்படுத்தியிருக்க முடியும். சரி என்னதான் சொல்ல வருகிறார் எனும் சிந்தனையோடு அவருடன் தொடர்கிறேன். என்னைவிட சற்று உயரம் குறைவானர் மற்றும் வயதானவர் என்பதால் என் நடை வேகத்திற்கு அவர் சிரமப்படுவது புரிந்தது. வேகத்தைக் குறைக்கிறேன். 

அவர் குறித்த அறிமுகம் நிறைவடைந்த நிலையில், நான் என்ன செய்கிறேன் எனக்கேட்கிறார். மேலோட்டமாகச் சொன்னதும், ”நீங்க வெளியில் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போக முடியுமா? நானும் அதில் எதுவும் செய்ய முடியுமா?” 

இத்தனைக்கும் நான் செய்வதாகச் சொன்னதில், பள்ளி எனக் குறிப்பிடவும் இல்லை இல்லை. பேசத் துவங்கி சில நிமிடங்கள்கூட ஆகியிருக்கவில்லை. அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? என வரிசையாகக் கேள்விகள் துளிர்க்க, கட்டுப்படுத்திக்கொண்டு, “எதுக்காக நீங்க வர நினைக்கிறீங்க?” என்கிறேன்.

”வந்தா எதாவது அடிஷனல் இன்கம் கிடைக்குமேனு!” என்றார். ஆச்சரியத்தைவிட சற்று அதிர்ச்சியாக இருந்தது.

“பென்சன் இருக்குமே உங்களுக்கு, மகனும் மகளும் நல்ல நிலையில் இருக்கிறதாச் சொன்னீங்கதானே!?”

“பென்சன் வருது. ஆனா ரொம்ப செலவு பண்ணி பழகிட்டோம். முன்ன சம்பளம் வந்தப்ப நிறைய வெளியே போறது, போன இடத்தில் காஸ்ட்லியா தங்குறது, பெருசா செலவு செய்றதுனு பழக்கமாகிடுச்சு. இப்பவும் அப்படியேதான் செலவாகுது. அதில்லாம வீட்டு லோன் போய்ட்டு இருக்கு. எதிலுமே செலவைக் குறைக்க முடியல”

இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு பெரிதாக யோசிக்க மனம் வரவில்லை. அவர் சொன்னதை கேட்க மட்டுமே செய்தேன். 

“எனக்கு சொந்த ஊர் திருச்சி பக்கம். ஃபர்ஸ்ட் போஸ்டிங் திருவண்ணாமலைல, அங்க இங்கனு சுத்தி கடைசியா இங்கே வந்துட்டோம். வொய்ஃப்க்கு இந்தப் பக்கம்தான் நேட்டிவ். முன்ன ஸ்கூல், வேலைனு எப்பவும் வெளியே போய்ட்டேன் பிரச்சனையில்ல. எனக்கும் அவங்களுக்கும் 13 வருட வித்தியாசம். முன்னெல்லாம் நல்லாதான் இருந்தாங்க. இப்ப வீட்லையே இருக்கிறதால, ரொம்ப திட்டிட்டே இருக்காங்க. இன்கமும் பாதியாகிடுச்சு. அதான் எதாச்சும் செய்யனும்னு பார்க்கிறேன்”

“என்ன வயசு உங்க ரெண்டு பேருக்கும்?”

“எனக்கு 66, அவங்களுக்கு என்னைவிட 13 வயசு குறைவு. நல்லாப் படிச்சிருக்காங்க. நான்தான் வேலைக்கெல்லாம் போக வேணாம்னு சொல்லிட்டேன். எதாச்சும் செய்யனும்னு இப்ப சொல்லிட்டே இருக்காங்க. மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் மாதிரி சிலதெல்லாம் ட்ரை பண்ணினாங்க. எல்லாம் ஃபெயிலியர் ஆகிட்டு. அதில நிறைய பணம் போயிடுச்சு”

வேறு என்னவெல்லாம் செய்தார்கள் எனக் கேட்கவில்லை. தம்மால் அதைச் செய்ய முடியுமா, முடியாதா எனத் தெரியாமல் ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்புவோர் பலர் உண்டு. தடாலடியாக முடிவெடுப்பார்கள், எவரையும் நம்புவார்கள், எடுத்துக்கொண்ட ஒன்றை மிகைப்படுத்தி புகழ்வார்கள், அதைச் செய்யும் அறிவும், திறனும் உண்டா என்று சிந்திக்க மாட்டார்கள். எதையாவதைச் செய்து பலர் சிறிதாகவும், சிலர் பெரிதாகவும் இழப்பினைச் சந்திப்பதுண்டு. 

“எது சரி வருமோ, பார்த்து செய்ங்க!”

“நீங்க போறபக்கம் என்னையும்....” என இழுத்தார். நறுக்கென கத்தரித்துவிட்டு நான் நகர்ந்திருக்கலாம். ‘நிதானமா இரு!’ என எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.

”போகும்போது சொல்றேனு உங்ககிட்ட பொய் சொல்லிட்டுப் போய்டலாம். அதெல்லாம் சரி வராதுங்க. என்னையும் உங்களுக்குத் தெரியாது. யார் எது செய்தாலும், அது இன்னொருவருக்கு சரியா வரனும்னு இல்லை. முதல்ல உங்களுக்கு என்னென்ன பிரச்சனை இருக்கோ அதைத் சரி செய்யப் பாருங்க. உங்க மகன், மகள்கிட்ட பேசுங்க. அவங்ககிட்ட இத எப்படி சொல்றது, ஆலோசனை கேட்கிறதுனு நினைக்காதீங்க. படிச்சிருக்காங்க. புரிஞ்சுக்குவாங்க. உங்க வைஃப் எதுக்கு திட்டுறாங்கனு அமைதியா யோசிங்க. அவங்க மனசுல என்ன இருக்குனு கேளுங்க. படிச்சிருந்தும் அவங்க வேலைக்குப் போகாதது, சொந்தக் காலில் நிற்கமுடியாததுகூட மனக்குறையா இருக்கலாம். மற்றபடி செலவு செய்றது, மணி மேனேஜ்மெண்ட் எல்லாம் நீங்க நாலு பேரும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். பார்த்துக்கோங்க” என்றபடி சற்று வலுக்கட்டாயமாகத்தான் விடை பெற்றேன்.

அவர் என்னைப்போல் பலரிடமும், முன்பின் அறியாதவர்களிடமும்கூட இதுபோல் கேட்டிருக்கலாம். உண்மையான தேவைக்காக கேட்கிறாரா அல்லது ஏதேனும் உளவியல் சவால் இருந்து அதைக் கையாளத் தெரியாமல் இப்படி வெளிப்படுத்துகிறாரா என்று தெரியவில்லை. இனியொருமுறை நான் அவரை சந்திக்காமல் போகலாம். சந்தித்தாலும் தலையசைப்போடு கடந்து, காலப்போக்கில் அதுவும் தேய்ந்து போகலாம். 

நான் அவரை மறந்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளில் கவனமாகியிருக்க வேண்டும். ஆனால் மனதின் ஏதோவொரு ஓரத்தில் அவர் மெல்ல நடந்து கொண்டேயிருந்தார். அது அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதன் பொருட்டு இல்லை. ஏன் ஒரு மனிதர் இப்படியாகிறார் எனும் என்னுடைய புரிதலுக்கான அலசல்தான்.

படித்து ஆசிரியர் ஆனவர். பல ஆண்டுகள் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர். திறக்கப்படாத பல கதவுகளைத் திறப்பதுதானே கல்வியின் நோக்கம்.  நன்கு படித்த மனைவிக்கு திறக்கப்பட்டிருக்க வேண்டிய கதவுகளை, திறக்க உதவி செய்யாதது ஒருபக்கம் இருக்கட்டும், அந்தக் கதவுகளை இவரே அடைத்ததன் காரணம் என்னவாக இருக்கும்.

வீட்டில் இருக்கும் ஒரு பெண் கோபப்பட்டால், ஏன் கோபம் வருகின்றது என ஆராயப்படுவதேயில்லை. படித்தும் வேலைக்கு அனுமதிக்கப்படாத மற்றும் 13 வயது குறைவான மனைவியின் மனப்போராட்டத்தை, அவருடைய நிலையிலிருந்து புரிந்துகொள்ள மறுத்து,  நான் வீட்டில் இருப்பதால், வேலையில்லாமல் இருப்பதால், வருமானம் பாதியாகக் குறைந்துவிட்டதால் சண்டை வருகிறது எனக் கருதிக்கொள்வது சிக்கலை மேலும் பெரிதாக்கவே செய்யும். 

பிள்ளைகளுக்கு என்ன தெரியும் எனும் பிற்போக்குத்தனம் பல பெற்றோர்களிடம் உண்டு. ‘பிள்ளைகளுக்கு நிறையத் தெரியும். அவர்கள் நம்மைப் போன்றவர்கள் அல்ல. நம் காலம் போன்று அவர்கள் காலம் இல்லை!’ என்பதனை ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டும். வீட்டில் ஏற்படும் பிணக்குகளுக்கு, சிக்கல்களுக்கு, முரண்பாடுகளுக்கு அவர்களிடம் அப்பா-அம்மா எனும் அதிகாரத்தைச் செலுத்தாமல், உன்னை மதிக்கின்றேன் என்பதை உணர்த்தி அவர்களின் கருத்தைக் கேட்டால் பெரு ஆச்சரியங்கள் நிகழும். ‘இதுல எப்படிண்ணே எரியும்!’ என பெட்ரமாக்ஸ் லைட் மேண்டிலை செந்தில் உடைப்பதுபோல, ‘இதுக்கு எதுக்கு இவ்ளோ யோசிக்கிறீங்க!’ என பெரியவர்களின் குழப்பத்தை பொசுக்கென உடைத்துவிடும் திறன் வாய்ந்தவர்கள் இந்தத் தலைமுறையினர். அவர்களிடம் தீர்வுகள் தேடினால் நிச்சயம் கிடைக்கும்.

சம்பளம் வாங்கிய காலத்தில் இருபது முப்பது ஆண்டுகாலம் பெரிய அளவில் செலவு செய்து பழகிவிட்டால், பென்சன் வாங்கும் காலத்தில் வருமானம் பாதியாக குறையும் சூழலில் செலவுகளை எப்படிக் குறைக்க முடியும்? வயது முதிரும் காலத்தில் மருத்துவ செலவுகள், போக்குவரத்து செலவுகள், பிள்ளைகளுக்கான செலவுகள் என்று கூடத்தானே செய்யும். நிதி குறித்த அடிப்படை புரிதல் மற்றும் நிதி மேலாண்மையில்லாத பலரும் ஏதோவொரு தருணத்தில் பொருளாதார நெருக்கடியில் எளிதாக ஆட்பட்டுவிடுவதுண்டு.

எது சிக்கனம், எது கஞ்சத்தனம், எது அவசியமான செலவு, எது ஆடம்பரமான செலவு, எது ஊதாரித்தனம் என ஒவ்வொருவரும் தெளிவடைதல் முக்கியம். வசதி படைத்தவர்கள் ஆடம்பரமாக, ஊதாரித்தனமாக செலவு செய்வதை பண சுழற்சிக்கு நல்லது என நான் தனிப்பட்ட முறையில் கருதுவதுண்டு. ஒருவர் ஆடம்பரமாக, ஊதாரித்தனமாக செலவு செய்தால் அதை வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர, தாமும் அதுபோல் செய்யலாம் என நினைத்தால், என்றேனும் ஒருநாள் நிதி நெருக்கடிகள் அதிகரிக்கவே செய்யும்.

பணி ஓய்வு பெறுகின்றவர்களுக்கென சில உளவியல் சவால்கள் உண்டு. உண்மையில் அது பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. இருபது முப்பது ஆண்டு காலம் ஒரே மாதிரியான வேலையைச் செய்தவர்கள், அதிகாரம் செலுத்தியவர்கள், பல்வேறு பலன்களை அனுபவித்தவர்கள், திடீரென ஒருநாள் அங்கிருந்து பிய்த்து எடுக்கப்பட்டு, ஓய்வு காலம் எனும் நிர்பந்தத்தில் ஆட்படுத்தப்படுகின்றனர். வெகு எளிதாக தனித்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. அதை அனைவராலும் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வீடுதானென்றாலும், அதன்பிறகு அது புதிய சூழல்தான். பொருத்திக்கொள்வது மிகச் சவாலானது. அந்த நிலையில் அவர்கள் தம்முடனே முரண்படுவர், அதைவிட மோசமானது குடும்பத்தில் இருக்கும் அனைவருடனும் ஏற்படும் முரண்கள். இதில் யாரையும் தனித்து குறை சொல்ல முடியாது. அறியாமைதான் காரணம். ஓய்வுகாலம் எனும் சூழலுக்கு தயார்படுத்துவது இருதரப்பிலும் மிகவும் முக்கியம். 

வாழ்வின் பயண வழித்தடமெங்கும் சேகரிக்கும் அனுபவங்கள் முதுமையில் உதவுவதாக இருக்க வேண்டும். எந்த அனுபவங்களையும் சேகரிக்காத, அனுபவங்களைப் பாடமாக எடுத்துக்கொள்ளாதோர் முதுமை மிகவும் பலவீனமாகவே அமையும். பலவீனமான தருணங்களில் தெளிவாக சிந்திக்கவியலாது. முதுமை உடலை வேண்டுமானால் பலவீனப்படுத்தலாம். ஆனால், அறிவு மற்றும் மனதை எந்தவகையிலும் பலவீனப்படுத்தக்கூடாது.

வாழ்தல் என்பது முதுமைக்கும் தன்னை தயார்படுத்துவதுதான். தன்னைப் பாதுகாத்தல் என்பதும் தன்னை நேசித்தலின் ஓர் அங்கம். 

~ ஈரோடு கதிர்

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...