நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத் தேவைகள் கடந்து ஒவ்வொருவரும் நிறைய செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். அவசியமானது போக, ஆசைக்கும், ஆடம்பரத்திற்கும், சாகசத்திற்கும் அவரவர் விரும்பிய வகையில் நிறைய செய்கின்றோம். செய்யும் அனைத்துமே இந்த வாழ்வுக்கானதுதான் என ஆழமாக நம்பினாலும், உண்மையில் அனைத்துமே அதற்கானதாக இருந்துவிடுவதில்லை என்பதுதான் அதிலிருக்கும் நகை முரண். அவற்றில் விபத்துகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு.
வாழ்வின் தடமெங்கும் விபத்து சார்ந்த இழப்புகளை ஒவ்வொருவரும் சந்தித்தும், கேட்டும், கண்டும் வந்திருப்போம். அவற்றில், சாலை விபத்துகளைத்தான் அதிகம் கேள்விப்படுகின்றோம். பணியிட விபத்துகள், வீட்டில் நிகழும் விபத்துகள், சுற்றுலா விபத்துகள், இயற்கைப் பேரிடர் விபத்துகள், நீர்நிலை விபத்துகள், விமான விபத்துகள், ரயில் விபத்துகள், படகு, கப்பல் விபத்துகள், விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு விபத்துகள் என விபத்துகளின் களங்கள் நிறைய உண்டு.
அடிக்கடி புழங்கும் சாலைப் பிரிவில் இரண்டு பேருக்கான அஞ்சலிப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டு பேரும் மத்திம வயதினராகத் தெரிந்தனர். அந்தப் பதாகைகள் இருந்த இடத்திலிருந்து 50 அடி தொலைவில், கனரக வாகனங்களை கழுவும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது.
அன்றைய தினம் சாயப்பட்டறை ஆசிட் எடுத்துச்செல்லும் டேங்கர் லாரி சுத்தம் செய்யப்படுவதற்காக வந்திருக்கிறது. மூடியைத் திறந்து சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய நபர் மூச்சுத் திணறலால் மயங்கி விழுந்திருக்கின்றார். அவரைக் காப்பாற்றுவதற்காக முதலாளியும், இன்னொருவரும் பதட்டத்தில் இறங்க அவர்களுக்கும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்திருக்கின்றனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் இறந்துபோன இரண்டு பேர்தான் பதாகைகளில் இருந்தவர்கள். முதலாளியும் இறந்துபோன சூழலில், வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் வெறுமையாக மயான அமைதியோடு இருக்கின்றது. எத்தனையோ முறை இதுபோன்ற டேங்கர்களைக் கழுவியதுண்டு எனும் நம்பிக்கையோ, ஆசிட்டின் கொடூரம் குறித்த அறியாமையோ அந்த அரிய உயிர்களைக் கொய்து போயிருக்கலாம்.
ஒவ்வொரு நாளும் இதுபோன்று எத்தனையோ விபத்துகளைக் கேள்விப்படுகின்றோம். விபத்துகள் பெரும்பாலும் தவிர்க்க முடியாதது எனும் மனநிலை பலருக்கும் உண்டு. ‘நம்ம கையில் என்ன இருக்கு? தினமும் எத்தனையோ நடந்துட்டுத்தானே இருக்கு!’ என்றெல்லாம் சமாதானப்படுத்திக் கடந்து விடுகின்றோம். சற்று சிந்தித்தால், நாம் அறிந்த பல விபத்துகள் ஏறத்தாழ தவிர்த்திருக்கக் கூடியவைதான்.
ஒரு விபத்து மற்றவர்களுக்கு பெட்டிச் செய்தி. ஆனால் உற்றவர்களுக்கு, வாழ்நாள் முழுமைக்குமான மிகப் பெரிய துயரம். அது ஒருபோதும் பாடம் ஆவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை.
விபத்துகளை எளிதாக இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று தம் கட்டுப்பாட்டில் இருப்பது. மற்றொன்று தம் கட்டுப்பாட்டில் இல்லாதது. அதிகமாக நிகழ்வது தம் கட்டுப்பாட்டில் இருக்கும் விபத்துகள்தான். அந்த விபத்துகளுக்கான மிக முக்கியமான காரணங்களாக சிலவற்றைப் பட்டியலிடலாம். அதீத நம்பிக்கை, அசட்டுத் தைரியம், விழிப்புணர்வு இல்லாதது, தவிர்க்க வேண்டியதை தவிர்க்காதது, கவனக் குறைவு, அலட்சியம், உடல்நிலை உள்ளிட்டவை அதில் அடங்கும்.
நட்புகளோடு சுற்றுலா செல்லும்போது சூழல் அறியாமல், பலரும் நீர் நிலைகளில் இறங்குவதுண்டு. அவர்களில் சிலருக்கு நீச்சல் தெரிந்திருக்கலாம். நீச்சல் பழகிய நீர்நிலைக்கும், அங்கிருக்கும் நீர்நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாமும் ஒன்றுபோல் தெரியும். ஆனால் அனைத்து நீர்நிலைகளும் ஒன்றல்ல. ஒவ்வொன்றுக்கும் தனித்த வடிவங்கள், போக்குகள் மற்றும் தன்மைகள் உண்டு. சிலருக்கு நீர்நிலைகள் குறித்த அனுபவமோ, பழக்கமோ துளியும் இருக்காது. எனினும், நட்புகளுடன் இருக்கும் துள்ளல் மனநிலையில் இறங்கி ஆபத்தை வரவழைத்துக் கொள்வதுண்டு. குறிப்பாக கோடை விடுமுறைக் காலங்களில், ஆர்வமிகுதியில் நீர்நிலைகளுக்குச் செல்வோர் இதுபோன்ற விபத்துகளில் சிக்கிக் கொள்வதை அதிகமாகக் காண முடியும்.
சரியான வழிகாட்டுதல் இன்றி மலையேற்றம் செல்வோர் வழி தவறி காணாமல் போவதுண்டு. திடீரெனப் பெய்யும் பெருமழைகளில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புண்டு. உடல்நிலைப் பொருட்படுத்தாது மலை ஏறி ஆபத்தை வரவழைத்துக் கொண்டவர்களும் உண்டு. தமிழகத்தையே உலுக்கிய குரங்கனி தீ விபத்தின் பின்னால், அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் மலை குறித்த அறியாமை இருந்தது. எதிர்பாராதவிதமாக காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். முறையான அனுமதி, தொடர்புடைய வழிகாட்டுதல்கள் இல்லாததால் அவர்களுக்கு உதவிகள் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை.
சாகச மனநிலைக்காக, வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவதற்காக, ரீல்ஸ் எடுப்பதற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக பாதுகாப்பு அம்சங்களை பாராமல், அணைகளில் ஏறுவது, படகில் பயணிப்பது, பாரா க்ளைடிங்கில் பறப்பது, பைக்கில் சீறிப்பாய்வது, ரேஸ் விடுவது என எத்தனையோ செயல்கள் விபத்துகளாக மாறுவதைக் கண்டுகொண்டேதான் இருக்கின்றோம். இவைகளுக்கு ஈரம் உலராத உதாரணங்கள் நம்மிடையே நிச்சயம் இருக்கும்.
சூழல்கள் பல நேரங்களில் நமக்கு மிகப் பெரும் பாடங்களை கற்றுக் கொடுத்திருந்தாலும், அவற்றையெல்லாம் வாழ்வின் பரபரப்பில் எளிதில் மறந்துவிடும் பலவீனம் கொண்டவர்கள்தான் நாம்.
நம்முடைய சாலைப் பயண தேவைகளும், விகிதங்களும் ஆய்வுக்குட்படுத்த வேண்டியவை. ‘சும்மா வெளியில் போய்ட்டு வருவோம்!’ என சில நூறு கிமீ தூரம் கார் ஓட்டிச்செல்வது பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. ‘டீ குடிக்க, சாப்பிட’ என நெடுந்தொலைவு சென்று வருவது தொடர்ந்து இயல்பாகிக் கொண்டிருக்கின்றது. ‘ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்துச்சு, அதனால ஒரு ட்ரைவ் போயிட்டு வந்தேன்!’ என சிலர் சொல்வதுண்டு.
என்னுடைய பயிலரங்கில் ஒருவர், வீட்டில் கணவருடன் ஏற்பட்ட சிறு சண்டைக்கான எரிச்சலில், வீட்டில் சொல்லாமல் காரை எடுத்துக்கொண்டு சுமார் நூறு கி.மீ தூரம் ஓட்டியபிறகுதான் மனம் ஆறியதாகக் கூறினார். அவர் பயணித்தது மழை பெய்யும் சாத்தியம் கொண்டு ஓர் இரவு நேரத்தில். மிக முக்கியமானது அவருக்கு ஓரளவுதான் கார் ஓட்டத் தெரியும்.
நான் அறிந்த ஒரு ஓட்டுநர், மிகக் கடுமையான உழைப்பாளி, நல்ல மனிதர். தினமும் சென்னைக்கு இரவு முழுக்க லாரி ஓட்டிக் கொண்டிருந்தார். நீண்ட காலமாக ஓட்டுகின்ற, மிகுந்த அனுபவம் மிக்கவர். ஒருநாள் முதலாளியின் குடும்பத்தினருடன் தென்மாவட்டத்திற்குச் செல்ல இவர்தான் ஓட்டிச் சென்றிருந்தார். இரவு திரும்பி வரும்போது, அவர்களுடைய ஊரை நெருங்கும் தருணத்தில் ஏற்பட்ட விபத்தில் கார் முற்றிலுமாக உருக்குலைந்துபோனது. அவரும், கல்லூரியில் படிக்கும் இளம் பெண்ணும் அந்த விபத்தில் மரணமடைந்தனர். மிகச் சமீபத்தில் சுமார் 150 கிமீ தொலைவிற்குள், வெவ்வேறு இடங்களில் மூன்று உயர் ரக கார்கள் நொறுங்கி உருக்குலைந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் சுங்கவரி செலுத்தும் நெடுஞ்சாலைகளில் விபத்து நடந்த சில மணி நேரங்களில் அவை அப்புறப்படுத்திவிடுவதுண்டு.
இரவு பகலாக தொலை தூரத்திற்கு லாரி ஓட்டும் அனுபவம் வாய்ந்த ஓட்டுநருக்கு, கார் ஓட்டுவது எளிதானதாகத் தெரியலாம். அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் நீண்ட காலம் ஒன்றில் பழகியவருக்கு, அதையொத்த ஆனால் வேறு வடிவத்தில், வேறு திறன் கொண்டிருப்பது சட்டனெ ஒரு கணத்தில் சவாலானதாக மாறிவிடலாம். அந்த ஒரு கணம் போதாதா!
பல ஆண்டுகளாக ஓட்டுகிறேன், பல லட்சம் கி.மீ தொலைவு ஓட்டியிருக்கின்றேன் என்பதுபோன்ற அதீத நம்பிக்கை மற்றும் பெருமைகளோடு மட்டும் வண்டியை இயக்கிவிடக்கூடாது. எப்போதுமே அதீத நம்பிக்கை யதார்த்தங்களை மறைக்க முயற்சி செய்யும். போதுமான ஓய்வு எடுக்காமல் வாகனம் இயக்குவது, பின்னிரவுகளில் தூக்கம் வந்தாலும் சீக்கிரம் இடம் சென்றடைந்துவிடலாம் என முயற்சிப்பது, சாலை நன்றாக உள்ளது, வண்டி சீறுகின்றது என வேகத்தைக் கூட்டுவது உள்ளிட்ட எதைச் செய்தாலும் ஆபத்தை நோக்கி பயணிக்கின்றோம் என்றே பொருள். மது போதைப் பயணங்கள் குறித்தெல்லாம் எதுவும் தனியே எழுத வேண்டிய தேவையில்லையென நினைக்கிறேன்.
சாலை விபத்துகள் எண்ணிகையின் பின்னாலும் ஒரு தோராயமான கணக்கு இருக்கத்தான் செய்யும். எடுத்துக்காட்டாக, நூறு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆயிரம் வண்டிகள் ஒரு நாளைக்கு பயணிக்கின்றன என்றால், அதில் சுமார் பத்து விபத்துகள் நடப்பதாக வைத்துக்கொண்டால், அதன் சராசரியை இரண்டு விதமாகக் கணக்கில் கொள்ளலாம். ஒரு லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் பத்து விபத்துகள் நடக்கலாம் அல்லது 1000 வண்டிக்கு பத்து விபத்துகள் நடக்கலாம். எதற்கெடுத்தாலும் வண்டியை எடுத்துக்கொண்டு, பறக்க முற்படுபவர்களிடம் சொல்வது. ஒரு லட்சம் கிமீ தொலைவிற்குள், 1000 முறை வண்டியை இயக்குவதற்குள் சுமார் பத்து முறை சிறிதாகவோ பெரிதாகவோ, எங்காவது இடிக்கலாம், விபத்துகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம்.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் தூரத்தை வெளிநாடுகளில் நேர அளவீட்டில் சொல்வதுண்டு. காரணம் அவர்களின் சாலை அமைப்பு மற்றும் போக்குவரத்து தன்மை அவ்விதமானது. ஆனால் நம் ஊர்களில் நேர அளவினை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொருமுறையும் பயணிப்பது மிகுந்த ஆபத்தானது. காரணம், இங்கு எப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும், எப்போதும் சாலை செப்பனிடப்படும் என்பதையெல்லாம் நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கூகுள் மேப் காட்டும் சராசரி நேரத்தைவிட முன்கூட்டியே சென்றடைவதை ஒருவித வெற்றியாகக் கருதுவோரும் இங்குண்டு.
நமக்கு அனுபவம் உள்ளது, நமக்கு எதும் நடக்காது, சரி செய்துதான் பார்ப்போமே என்பது போன்ற நம்பிக்கைகள்தான் பல தருணங்களில் பெரும் துயரினைக் கொண்டுவந்துள்ளன. இது சாலை விபத்துகள் முதல் சாகச விபத்துகள் வரைப் பொருந்தும்.
யாருடைய உரையாடல் என்று நினைவில்லை. சமீபத்தில் கேட்டதில் ஆழப்பதிந்த உரையாடல் அது. ”எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது. அந்த வாழ்வில் சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் செய்வேன். ஆனால் ஒருபோதும் சாகசம் என்ற பெயரில் ரிஸ்க் எடுக்கமாட்டேன்!” இது பலருக்குமான பாடம் என்றால் மிகையல்ல.
விபத்துகளினால் உறவு மற்றும் நட்புகளில் இழப்புகளைச் சந்தித்தவர்களை கணிசமாக நாம் அறிந்திருப்போம். அந்தக் குடும்பங்களின் நிலை விபத்துக்கு முன், விபத்துக்குப் பின் என மாறியிருப்பதையும் கண்டிருப்போம். அந்த மாற்றம் ஒருபோதும் கற்பனை செய்திடாதது. விபத்துகள் உயிர்களைக் கொய்திடும்போதே, துயரங்களை விதைத்து விடுகின்றது.
நாம் அறிந்த விபத்துகளின் பட்டியலை எடுத்து அதன் தன்மைகளை மேலோட்டமாகப் பார்வையிட்டாலே, அவற்றில் மிகப் பெரும்பான்மையானவை மிக நிச்சயமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
எல்லாருக்குமே தாம் செய்யும் தவறு தெரியாமலோ, புரியாமலோ இல்லை. ஆனாலும் அதனைத் தொடர்ந்து செய்வதற்கு, அவர்களிடம் சில காரணங்கள் இருப்பதுண்டு. அவற்றில் மிக முக்கியமான காரணம் ‘நான் அப்படித்தான் செய்வேன்!’ எனும் மனோபாவம். அந்த மனோபாவத்திற்கு ‘நான் இப்படித்தான்!’ என தன்னை தவறாக வரையறுத்துக்கொள்வதும் ஒரு காரணம். சூழலுக்கும், காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ப என்னை தகவமைத்துக்கொள்வேன் என்றில்லாமால், நான் என்றால் இப்படித்தான் என வரையறுத்தல் வெறும் வீம்பு மட்டுமே. வீம்பு செழித்து வாழும் இடங்களில், ஒருபோதும் அறிவு உயிர்ப்புடன் இருப்பதில்லை.