பொய் வாசம்





அவர்கள் இருவருமே
தனித்தனியாக அழைத்தார்கள்

கேட்டிருக்க வேண்டியதில்லை
ஆனாலும் கேட்டார்கள்

சொல்லியிருக்க வேண்டியதில்லை
ஆனாலும் சொன்னேன்

கேட்கவேண்டுமே எனக் கேட்டார்கள்
சொல்லவேண்டுமே எனச் சொன்னேன்

உண்மையா பொய்யாவென ஆராயும்
அவசியம் அவர்களுக்கில்லை

உண்மையைக் கொன்றேன்
பிணமாய் உயிர்ந்தெழுந்தது பொய்

ஊர்ந்து வந்த பொய்
ஓரமாய் பாய் விரித்தது மனதில்

நேரம் நகர நெருங்கிப் படுத்த
பொய்யின் கனம் பிணமாய் கனத்தது!

எட்டிப்பார்க்க மயக்கம் சூடியது
ஏராளமாய்க்கிடந்த பொய்களின் வீச்சத்தில்

பிணமாய் அலையும் பொய்களைக் கொல்ல
பிறிதொரு ஆயுதம் தயாரிக்க வேண்டும்.

-

கீச்சுகள் - 14




ஊர்ல உலகத்துல அங்கங்க ”நாலு பேரு” நம்மள படுத்துற பாடு பெரும்பாடு. ஆனா அந்த “நாலு பேரு” கருப்பா செவப்பா, நெட்டையா குட்டையானு கூட தெரியறதில்ல!

*


சாலையோரம் போதையில் கிடந்த குடிமகனை மானசீகமாக வணங்கிக் கடந்தேன், சாலை போட நான் அளிக்கும் வரி(!)யை விட அவனே அதிகம் பங்களிக்கிறான்.

*

“அன்பு / காதல் / கோபம் / இன்பம்.......etc” எனும் உணர்வுகளுக்கான வரையறைகள், அவரவர் மனதுப்படி மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன.

*

மின்சாரம் தொலையும் இரவுகள் உணர்த்துகின்றன, வானத்தில் நட்சத்திரங்களும் இருக்கின்றன என்பதை  
#நகரம்

*

மறதி ஓர் விடுதலை!

*

சிரிப்பே வராத மாதிரி ‘ஜோக்’கை சொல்லிட்டு, நாம சிரிக்கலையேனு ஏக்கமா பார்க்கிறவங்களைப் பார்க்கும் போதுதான் சிரிப்பு பொத்துக்கிட்டு வருது.

*

சமூக இணையதளங்களில் நம்மை தொடர்பவர்களின் / நட்பில் இருப்பவர்களின் எண்ணிக்கையை எண்ணி(!) நாம் கொள்ளும் கர்வம் அல்பத்தனமாக இருக்கின்றது! :(

*

அவளை அவனுக்குள் தொலைத்தான் / அவனை அவளுக்குள் கண்டெடுத்தாள் # புரியலதானே!? எப்பவுமே அவ’ள்’தான் புத்திசாலி! # புரியுதுதானே!? :)

*

கழுத்த சாய்ச்சு செல் பேசிட்டு ஒருகைல வண்டி ஓட்டுறவங்கள விட்டு, ஒழுங்கா ஓட்டுறவங்கள குறிபார்த்து விழுகுறாங்களே! அவங்க நல்லவங்களா கெட்டவங்களா?

*

வார்த்தையால் வாங்கும் அடிக்கு அன்பால் திருப்பி அடித்தால் ஊடல் முடியப்போகிறதென அர்த்தம்.

*

இத்தன தண்டச்செலவு செய்ததற்குப் பதிலா, 3-இடியட்ஸ்க்கு தமிழில் ”SUB TITLE” மட்டும் போட்டிருக்கலாம் # கடுப்பேத்தும் ‘நண்பன்’

*

’முக்கியமான மேட்டர் பேசனும்’னு பீடிகையோட பீதியைக் கிளப்பிட்டு, உப்புச்சப்பில்லா மேட்டர் பேசுறவங்கள யாருகிட்டே புடிச்சுக்குடுக்கலாம்?

*

வயது கூடக்கூட முதுமையோடு சுயநலமும் கூடுகிறது!

*

”தவறாகப் புரிந்துகொள்வதில்” மிகச் சரியாக இருக்கின்றோம் பல நேரங்களில்!

*

ஜல்லிக்கட்டை நிறுத்தச்சொல்லிப் போராடுறவங்க மாடு துன்புறுதேன்னு போராடுறாங்ளா? இல்ல சகமனிதனை இரத்தக்காவு கொடுக்குறமேன்னு போராடுறாங்ளா?

*

கடவுளை அதீதமாய் நம்புபவனின் ஆச்சரியங்களில் ஒன்று ”கடவுளை நம்பாதவனுக்கும், எப்படி நல்லது நடக்கிறது!?”


*

பீத்தப் பிடிவாதங்கள் சில நேரங்களில் பெரும் பாடுபடுத்துகின்றன.
உதா’ரணம்’: “குளிர் காலத்திலும் பச்சத் தண்ணியிலதான் குளிப்பேன்”

*

பிரதமர் அலுவலகம் ’ட்விட்டரில்’ இணைந்தது. அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அறுவாளாம் #பழமொழி

*

எதைக் கேள்வியுற்றாலும், ஏதாவது ஒரு நிலைப்பாடு எடுக்கத் துடிக்கிறோம்.

*

ரூ.1000 கடனைத் திருப்பிக்கேட்ட அண்ணன் தம்பி இருவர் படுகொலை. 32 & 26 ரூவா வறுமைக்கோடுனு இருக்குற நாட்ல 1000 ரூவா ரொம்ப பெரிய தொகைதானே :(

*

ஜனவரி 26-ஐக் கூட நம்ம விருப்பத்துக்கேத்த மாதிரி வெள்ளிக்கிழமைல வரவெச்சு 3 நாள் விடுமுறை கொண்டாட நமக்கு உரிமையில்லை. இதுல என்ன குடியரசோ போங்க :)

*

கொள்ளையடிக்கப்பட்ட சென்னை வங்கியில் கண்காணிப்பு கேமரா இல்லை. # துணி மாத்துற ரூம்ல, கழிவறைல கூட கேமரா இருக்கு. பாவம் வங்கி ரொம்ப ஏழை போல!

*

கோபங்கள் தேயும் இடங்களில் அன்பு வந்து நிரம்புகின்றது

*

நம்மைப்பற்றி நமக்குத் தெரிந்ததையே வேறொருவர், வேறு வார்த்தைகளில் சொல்ல உணர்ச்சி வயப்படுகிறோம் #பாராட்டு / விமர்சனம்

*

வகைதொகை இல்லாம எல்லார் வீட்லேயும் 2012 படம் பார்க்கிறதப் பார்த்தா.... ஒருவேளை 2012ல் உலகம் அழிஞ்சுதான் போயிடுமோனு தோணுது :)

*
புன்னகையை உணர்த்திட வார்த்தைகள் போதாது, உதடுகளில் விரிவடையும் வரிகள் அவசியம்!

*


எல்லாம் புரிந்துகொண்டு, நம்மை அப்படியே ஏற்றுக்கொண்டிட ஓர் உறவு வேண்டும் எனும் சுயநலத்தில் ஒருவனும் இதுவரை வென்றதில்லை

*

இந்த சினிமாவுல மட்டும்தான் கொட்டும் மழையில பிணத்தை அடக்கம் பண்றது / டூயட் பாடுறது / சண்டை போடுறது எல்லாம் நடக்குது!

*

நம்ம ஊர்ல ”இந்த சிவப்பழகு / ஏஜ் மிராக்கிள் க்ரீம்” விக்கிற வெண்ணைங்க, ஏன் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் போய் யேவாரத்த பெருக்கக்கூடாது!?

*

நிழற்படங்களை வைத்தே பலரை முற்றிலும் புரிந்துகொள்ள முயல்கின்றோம்!

*

மனிதன் தனது கீழ்மைகளுக்கு, தன்னை விலங்கோடு ஒப்பிடுகிறான் என்பது, எப்போதாவது விலங்குகளுக்கு புரிஞ்சுட்டாப் போதும், அன்றோடு சோலி சுத்தம்:)

*


பழிவாங்கும் உணர்வின் அடர்த்தியை பெரும்பாலும் எதிராளியே தீர்மானிக்கின்றான்

*

யாருமே நமக்காக இல்லையென்று மனதில் வெற்றிடம் தோன்றும்போது, யாருக்காகவும் நாமும் இல்லையோ என்பதை உணர்ந்தால், மனதில் ஏதோ நிரம்பும்!

*

தெரிந்தவர்களைச் சந்திக்கும்போது எப்படியிருக்கீங்க எனக்கேட்க “கிரேட்”னு சொல்பவர்களில் பாதிப்பேர் ”கிரேட்”ஆக இல்லைனு அவங்க கண்ணு சொல்லிடுது

*

மேதை படம் 10 ஆண்டுக்கு முன்னே வந்திருந்தா பாடமாம்.
தினத்தந்தியில் விமர்சனம் எழுதியவரின் கைகளை கண்களில் ஒத்திக்கத் தோணுது! # டீகடை

*

எப்பொழுதாவது உண்மையை ஒப்புக்கொள்வதின் போதை அபரிதமானது!

*

கல்வியை வணிகப் பொருளாக்கக் கூடாது - கலாம்.
கல்யாண ஜூவல்லர்ஸ்க்கு பிரபு நடத்துற புரட்சிப் போராட்டம் மாதிரியே இருக்குங்கய்யா!

*

ஒருவன் உருவாக்குவதை, இன்னொருவன் எளிதில் தட்டிப்பறிக்கிறான் # சந்தை

*

இணையத்தில் பெண்கள் ஆண்களை எளிதாக பெயர் சொல்லி அழைக்கின்றார்கள். ஆண்கள் பெண்களை அவ்வளவு எளிதில் பெயரிட்டு அழைப்பதில்லை # நிஜமாவா!?

*

பிச்சைக்காரர்களைப் பார்த்து பரிதாபப்பட்டு அருகிலிருக்கும் நண்பரை அழைத்து “பாவம் 5 ரூவா போடுங்க”னு சொல்றீங்களே! அம்புட்டு நல்லவனாய்யா நீங்க?

*

பூக்கள் பூக்கும் தருணம்



நீயும் படிக்கவில்லை
நானும் படிக்கவில்லை
விரல் நுனி உரசலில்
வேதியல் மாற்றம் நிகழுமென்பதை

நோக்கும் நொடியிலெல்லாம்
புது மலராய் பூத்து நிற்கிறாய்
மடி சாய்கையில் மட்டும்
மல்லிகைச் சரமாய் வாடுகிறாய்…

வார்த்தைகளைத் தேடுகிறேன்
உன் இதழ்களில்
வரிகளைத் தருகிறாய்
விழியசைவில்…

அன்பு ஆர்பரிக்கும் தருணங்களில்
அணையிலிட்டுத் தேக்கி
திகட்டிய அன்பைக் கொஞ்சம்
ஆவியாக்கி ஊடல் பூணுகிறோம்

அன்பு கனத்த கரு மேகம்
கிழிந்து பொழிகிறது
புத்தம் புது அன்பு
புதுவேகம் பூணுகிறது

கற்ற மொழிகளெல்லாம் தீர்ந்து
கரைந்த மௌனப் பொழுதில்
உடலும் ஒரு மொழி என்பதை
உன்னை வாசிக்கையில் அறிகிறேன்

மௌனங்களின் வரிகளை வாசிக்கவும்
கற்பனையில் வாசனையை நுகரவும்
கனவுகளில் வர்ணங்களைக் காணவும்
கற்கிறேன் காற்றாய் உனை சுவாசிக்கையில்

-

குடிமகனே…. பெருங்குடிமனே!

பகல் நேரத்தில் பேருந்துகளில் பயணித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. இப்பொழுதெல்லாம் ஏனோ, அதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக் கொள்வதேயில்லை. அன்று பேருந்திலேயே செல்லலாம் என முடிவெடுத்தேன். பவானி பேருந்து நிலையத்தை அடைந்தபோது, நான் செல்ல வேண்டிய ஊர் வழியே செல்வதற்காக B20 அரசுப்பேருந்து மட்டும் நின்று கொண்டிருந்தது. அது மைலம்பாடி வழியே ரெட்டிபாளையம் வரை செல்லும் என்பது நினைவுக்கு வந்தது.

படம் உதவி.. கூகுள்


வெயில் உச்சந்தலையில் ஊசி போல் குத்திக்கொண்டிருந்தது. இருக்கைகள் நிரம்பி, பலர் நின்று கொண்டிருந்தனர். பேருந்து கிளம்பும்போது ஏறிக்கொள்ளலாம் என பேருந்தின் ஓரத்தில் சோம்பலாய் உறங்கிக்கொண்டிருந்த நிழலில் ஒதுங்கினேன். நிழல் போதவில்லை. பாதி உடலை வெயில் சுட்டெரித்தது. 15 நிமிடப்பயணம் தானே, அனுசரித்துப் போய்விடலாம் என நினைத்துக் காத்திருந்தேன்.

ஒருவாறு ஆடி அசைந்து வந்த ஓட்டுனர், இருக்கையில் அமர்ந்து, கதவை அடித்துச் சாத்தினார். பேருந்து பின் பக்கம் வருவதற்காக, நடத்துனர் இரட்டை விசில் கொடுக்க ஆரம்பித்தார். பின்பக்க படியில் ஏறிக்கொண்டேன். வண்டி முழுதும் நெருக்கமாக நின்றவாறு பலர். வாரநாட்களில் மதியத்தில் ஒரு நகரப்பேருந்தில் இவ்வளவு பேரா என ஆச்சரியமாகவும் அயர்ச்சியாகவும் இருந்தது.

பேருந்து மெல்ல ஊர்ந்து வேகத்தடைகளையெல்லாம் கடந்து மேட்டூர் சாலையில் திரும்பியது. கூட்டம் அதிகமாக இருந்ததால் நடத்துனர் பயணச்சீட்டு கொடுக்க ஏதுவாக, ஓட்டுனர் மெதுவாக நகர்த்திக்கொண்டிருந்தார். பின்பக்க படி அருகே கிடந்த கூடுதல் டயர் மீது சில மூட்டை முடிச்சுகள் கிடந்தன. கூடவே ஒரு குடிமகனும் சரிந்து கிடந்தார். அந்த ஆள் இடைவிடாமல் ஏதோ பேசிக்கொண்டேயிருந்தார். பேச்சு என்பதைவிட கெட்ட கெட்ட வார்த்தைகள் உதிர்ந்து கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.

கடைசி இருக்கையின் வலது ஓரம் அமர்ந்திருந்த பெண்மணி, தன் முகத்தில் முந்தானையைப் போட்டு தூங்குவதுபோல் பாவனையிலிருந்தார். பேருந்தின் இயக்கத்தில் அந்த ஆள் உளறுவது விட்டுவிட்டு கேட்டுக்கொண்டிருந்தது.

முதல் நிறுத்தமான குருப்பநாயக்கன்பாளையம் வந்தபோதும் நடத்துனர் பின்பக்கம் வந்து சேரவில்லை. பேருந்து நிற்க முன்பக்கம் சிலர் இறங்கினார்கள், பின்பக்க படியில் ஒருவர் இறங்கினார். பின்பக்கம் இறங்கியவர், அவர்பாட்டுக்கு நகர முற்பட நடுப்பேருந்தில் நின்றிருந்த நடத்துனர் வேகமாக பயணிகளை, இடித்தவாறு பின்பக்கம் வந்துகொண்டே “டிக்கெட், அல்ல்ல்லோ சார், டிக்கெட்” என இறங்கிய நபரை சத்தமான வார்த்தையால் சிறைபிடித்தார்.

“டிக்கெட்ட வாங்குங்க சார், டிக்கெட் என்ன லட்ச ரூபாயா இருக்கப்போவுது, வெறும் 3 ரூவாதான் சார்” என சொல்லிக்கொண்டே ஒரு டிக்கெட்டை அனுப்பினார். கீழே இருந்த ஆள் இருண்ட முகத்தோடு சில்லறைகளைக் கொடுக்க, நடத்துனர் டபுள் விசில் கொடுத்தார். 

“3 ரூவா டிக்கெட்டு இப்படிப் ஓடப்பாக்குறாரே, இதுல பேண்ட் சட்டை இன் பண்ணிட்டு வேற வந்திருக்காங்க” என முனகினார் நடத்துனர்.

நெண்டிமுண்டி படிக்கட்டு அருகே வந்தார் நடத்துனர். நிற்கும் ஆட்களை ஒதுக்கி டயர் மேல் கிடந்த மூட்டை முடிச்சுகளுக்கு லக்கேஜ் போட்டார். கடைசி இருக்கையில் பெண்மணி அருகே இருந்த நபர், டிக்கெட்-லக்கேஜ் எல்லாம் வாங்கினார்.

குடிமகன் குனிந்துகொண்டே முனகிக் கொண்டேயிருந்தார். நடத்துனர் கூட்டத்துக்குள் தன்னை ஒருவாறு சாய்த்துக்கொண்டு, அந்த ஆளின் தோளைத்தொட்டு, “டிக்கெட்ட்ட்ட்…. எங்க போவனும்” எனக் கேட்டார்.

தலையை உலுக்கிச் சிலுப்பிய அந்தக் குடிமகன் வாயிலிருந்து கெட்ட வார்த்தைச் சுனாமி அடித்தது.

அந்த ஆளைவிட்டு நிமிர்ந்த நடத்துனர், சில விநாடிகள் இடைவெளி விட்டு, ”அண்ணா கொஞ்ச நவுருங்” என வாகாக இடம் ஏற்படுத்திக்கொண்டு கொஞ்சம் பக்கத்தில் நகர்ந்து, அந்த ஆளின் சட்டைக் காலரைப் பிடித்து “என்னய்யா சொன்னே!” என்றார்.

மீண்டும் வார்த்தைச் சுனாமி வீசியது.

”ச்சட்டீர்… ச்சட்டீர்…” என அந்தக் குடிகாரனின் கன்னத்தில் அறைந்தார் நடத்துனர்.

எனக்கு என்னவோ, போலீஸ் என்கவுண்டர் செய்ததுபோல் தோன்றியது.

’ஒரு அரசு ஊழியன், அதும் ஒரு நடத்துனர், எந்த அதிகாரத்தை வைத்து பயணியை இப்படி அடிக்கிறார்’, என எனக்குள் ஏதேதோ மனித உரிமைக் கருத்துகள் ஓடியது. இங்கு ஒரு மனித உரிமை ஆர்வலர் இருந்திருந்தால் இப்போது என்ன நடக்கும் என யோசித்தேன். நான் உட்பட அங்கே ஒரு கூமுட்டைக்கும் மனித உரிமைகள் குறித்துப்பேச, நெரிசலும், வியர்வையும் இடம் கொடுக்கவில்லை என்றும் தோன்றியது. ஆனாலும் அப்போது தோன்றிய  நினைப்புகள் அனைத்தும் அபத்தமானது, அப்பட்டமான செயற்கைத்தனமானது எனவும் தோன்றியது.

”உன்ன என்றா கேட்டேன், டிக்கெட் எடுனுதானே சொன்னேன். பொம்பள உக்காந்திருக்கிறது தெரியாதா உனக்கு, என்ன வேணும்னாலும் பேசுவியா? சோத்துக்கு வதலா எதப்போட்டாலும் திம்பியா நீ” என பொளேரென்று இன்னொன்று விட்டார்.

அடிவாங்கிய வேகத்தில் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த ஆளின் கால் மீது சரிந்து விழ, அவரும் முதுகில் ரெண்டு போட்டார்.

“அய்யோ, சாமி, நா ஒன்னுமே பேசலீங்களே” அதுவரை அருவியாய் கொட்டிக்கொண்டிருந்த அந்த குடிகாரனின் வாய் வற்றிப்போனது.

”எங்க போவனும்? காசக்குடு” என நடத்துனர் கேட்க
”மைலம்பாடிண்ணா”

“ஆறு ரூவா குடு”

சட்டைப்பைக்குள் மணிக்கட்டு வரை கை திணித்துத் தேடி, ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும், “இந்தாண்ணா” என முனகியவாறே நீட்ட

“ஓ.. ஒரு ரூவாயை வெச்சுக்கிட்டுத்தான், இந்த ஆட்டம் போட்டியா” என நீண்ட விசில் கொடுக்க, பேருந்து குலுங்கி நின்றது.

“இந்தா…. எறங்கு மொதல்ல, உன்ன ஒரு ரூபாய்க்கு கொண்டு உடுறதுக்கு ஒன்னும் கவருமெண்ட்ல வண்டி உடல, எறங்கு நீ” என விரட்ட
அந்த ஆள் டயர் மேல் அப்படியே கிடக்க, எழுந்து இறங்கும் வாய்ப்பில்லையெனத் தெரிந்தது.

அப்படியே சட்டையைப் பிடித்து இழுத்த நடத்துனர், படி வழியே வெளியே தள்ள, கூட்டம் ஒதுங்கி வழிவிட்டது. படி வழியே சரிந்து தள்ளாடி நின்று, முன்னும் பின்னும் ஆட்டம் போட்டார் குடிமகன்.

“டேய் தேவிடியா பையா! என்னைய எறக்கியுட்டுட்டு, வண்டி ஓட்டீருவியாடா நீ!?” என தள்ளாடியவாறே பேருந்தைப் பிடிக்க முயலும்போது பேருந்து நகர்ந்திருந்தது.

முன்னும் பின்னும் ஆடியவாறே கை நீட்டி, கத்திக்கொண்டிருப்பது பின்பக்க கண்ணாடி வழியே ஊமைப்படமாய் தெரிந்தது.

நடத்துனரையும், குடிமகனையும் இரண்டு தட்டுகளில் வைத்து மனசு என்னென்னவோ ஊசலாட்டம் நடத்திக் கொண்டிருந்தது. குடிகாரன் பெண்குறியையொட்டிய வார்த்தைகளை வாந்தியெடுத்தபோதோ, நடத்துனர் அடித்தபோதோ, ஐந்து ரூபாய் இல்லையென நடு வழியில் இழுத்து இறக்கியபோதோ, எதாச்சும் செய்திருக்க வேண்டுமோ அல்லது ஆணியே புடுங்காமல் இப்படியே கடந்து போவதுதான் நல்லதோ என சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்போதே….

“எப்பிடியும் ரெண்டு கோட்டரு போட்ருப்பானுங்க” என்றார் பக்கத்தில் நின்றிருந்த ஆள்

ரெண்டு கோட்டர் எவ்ளோ இருக்கும் என மனசு கணக்கிடும்போதே…

அரசாங்கத்தின் டாஸ்மாக்-க்கு சுமார் 150 ரூபாயை  கொடுத்த ஒரு கொடைவள்ளலை, வெறும் ஐந்து ரூபாய் இல்லையென அவமானப்படுத்தி, இறக்கிவிட்டுவிட்டு வரலாற்றின் பக்கத்தில் கரும்புள்ளியை பதித்துக் கொண்டோமே எனும் எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி அந்த B20 அரசுப்பேருந்து ஊராட்சிக்கோட்டையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

-0-

கீச்சுகள் - 13


ஐஐடி மாணவர்களின் விந்தணு தேவை. ரூ.20000 தரப்படும் - சென்னைத் தம்பதி.
அட பாருய்யா, ரொம்ப நல்லாப் படிச்சா இதுக்கும்கூட காசு கெடைக்கும்போல!

*

கோழைகள்தான் சாகப் பயந்துகொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் :)

*

படைப்பாளன் வாசகனிடம் காட்டும் கர்வத்தை, தெரியாத்தனமாக வாசகனே உருவாக்கி தந்துவிடுகிறான்.

*

மூடநம்பிக்கை மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையை ”மூடநம்பிக்கை”யென உணர்த்திடுதல் எளிதல்ல!

*

தூக்கம் வரும் பகற்பொழுதுகளைவிட, தூக்கம் தழுவாத இரவுகள் கொடுமை!

*

நாம காசு போட்டு வாங்குற பேனாவை விட, யாராச்சும் மறந்துபோய் நம்மகிட்ட விட்டுட்டுப்போற பேனா நல்லாவே எழுதுது மச்சி!

*

குதூகலத்தை மீட்டெடுத்து உயிரின் அறைகளை நிரப்பிவிடுவதில் பொங்கல் பண்டிகைக்கும், உள்ளூர் மாரியம்மன் நோம்பிக்கும் சிறப்பிடமுண்டு

*

இழுத்து இழுத்து கடைசியாக ஒரு வேலையை முடித்த பிறகு புரிந்தது.. இதை எப்பவோ முடிச்சிருந்திருக்கலாம் என்று! #புத்திக் கொள்முதல்

*

ஹேப்பி பொங்கல் & ”கவ்” பொங்கல்னு ஒரு பய வாழ்த்துது. யோவ், உங்க இங்கிலீசு பாசத்துக்கு அளவே இல்லையா?

*

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்துப் படுங்க - செய்தி
# யாரோட இடது பக்கம்னு சொல்லுங்கய்யா! :)

*


ஜல்லிக்கட்டுக்கு வழக்கு போடுறவங்க இன்னும் சில வருசம் பொறுங்க. ஊர் பக்கம் மாடும், அடக்க மனுசனும் இருக்கமாட்டாங்க கொம்பில்லா சிந்துமாடுதான்

*

நன்றாக இல்லாதபோது ’நன்றாக இருந்தது’ நன்றாக இருக்கின்றது.

*

மீறவேண்டிய தேவையையும், ஆவலையும், கட்டாயத்தையும் பல நேரங்களில் விதிகளே உருவாக்குகின்றன

*

மேசை முனைகளில் முழங்காலை இடித்துக்கொள்ளும் கணங்களில் நரகம் எப்படியிருக்கும் என்பதை தற்காலிகமாக உணர்கிறோம் #ஓவர் பில்டப்பா இருக்கோ!? :)

*

சமூகவலைதளங்களில் தொடர / நட்பு ஏற்படுத்த பெரிதும் காரணங்கள் இருப்பதில்லை. துண்டித்துக்கொள்ள காரணங்கள் இருக்கின்றன #கண்டுபிடிப்பு :)

*

ஊட்டச்சத்து குறைபாடு தேசிய அவமானம் - மன்மோகன் வேதனை. வெட்கமேயில்லாமல் வேதனைப்படுவது எப்படி? - இங்கிட்டு கற்றுத்தரப்படும்!

*

சிக்னலில் சிவப்புவிளக்கு எரியும்போதே பின்னாலிருந்து ’ப்பீய்ங்..ப்பீய்ங்”னு ஹார்ன் அடிக்கும் ஆட்களுக்கு நடுரோட்ல சிலை வைக்கலாம்னு தோணது!

*

மாயாவதி சிலையை துணிபோட்டு மறைத்தனர். போட, போர்த்த துணியில்ல, ஆனா சிலை வைத்து-துணி போட்டு மறைக்க செலவழிக்கும் இந்தியா எங்கேயோதான் போகுது

*

ஒவ்வொரு முறையும் கேள்வியுறும் மரணச்செய்தியில் கொஞ்சம் நிம்மதி ஒளிந்திருக்கிறது, அது தன்னைக்குறித்து இல்லை என்பதாலும்!

*

தேடும்பொழுது மட்டுமே, தேடுவது அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.

*

”இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்கிறது - பிரணாப்” இவங்க எல்லாம் தங்களை மட்டுமே முழு இந்தியானு நினைச்சுக்குவாங்க போல!

*

தனிப்பட்ட முறையில், தனக்குப் பிடித்ததா இல்லையா என்பதையொட்டியே விமர்சனங்கள் அமைகின்றன.


*

ஒழுங்கா வண்டி ஓட்டுவோருக்கு சவால் விடுவதில் திறமைசாலிகள் மினிடோர் ஓட்டுனர்கள், ஆக்டிவா/ஸ்கூட்டி ஓட்டும் நடுத்தரவயது பெண்களே #முடியல :(

*

விடாமல் துரத்திக்கடிக்கும் கொசுவை, ஒரு வாய்ப்பு கிடைத்து போட்டுத்தள்ளும்போது இருக்கும் சுகமே அலாதிதான் #சிதறுவது நம் இரத்தமே எனினும்:)

*

காமம் பல இடங்களில் காமமாகவே இருக்கின்றது. வெகுசில இடங்களில் மட்டுமே அன்பின் மொழியாக தெரிகின்றது

*

எவர் குறித்தும் குறை சொல்லவும், பெருமையாகச் சொல்லவும் சில வார்த்தைகளை இருப்பில் வைத்திருக்கின்றோம்

*

குரைப்பதை.... குறைக்கனும் #நானும்

*

போறபோக்கைப் பார்த்தா நடிகர் ”தனுஷ்”க்கு எதிர்காலத்துல ”முதலமைச்சர்” ஆகுறதுக்கான எல்லாத் தகுதியும் இருக்குது போல! #நோட் பண்ணுங்கப்பா! :)

*

இயற்கைச் சீற்றத்தில் தாக்கப்படும் பகுதி சுற்றுலாத் தலமாகவும், பாதிக்கப்படும் மனிதர்கள் காட்சிப் பொருட்களாகவும் #இந்திய அரசியல் விளையாட்டு :(

*

Facebook-ல் Tag செய்வது என்பது காதல் கடுதாசி மாதிரி, யார், யாருக்கு வேணா கொடுக்கலாம். தடுக்க முடியாது, வந்த பிறகு கிழிச்சுப் போடலாம் :)

*

சச்சின் 100வது சதம் அடிக்கிறதுக்குள்ளே, எதிர் அணியில நூறு பேரு சதம் அடிச்சிருவாங்க போல! :)

*

போறபோக்கப் பாத்தா, ”ஒய் திஸ் கொலவெறி” மெட்டுல அடுத்த சீசனுக்கு அய்யப்பனுக்கும் பாட்டு போட்றுவாங்க போல!

*

நம்மைக் குறித்து நமக்குள்ளே நாம் கட்டமைத்துக்கொண்ட பிம்பத்திற்காகத்தான் இத்தனை போராடுகிறோம்

*


யார் மீதாவது, எதன் மீதாவது சாய்ந்து கொள்வதைத்தான் மனம் பெரிதும் விரும்புகின்றது.

*

கேப்மாரி / நாதாரி ஆகியவை சாதிப்பெயர் எனத்தெரியாமல், அர்த்தமும் தெரியாமல் கெட்ட வார்த்தையாகப் பயன்படுத்துவதில் தமிழன் கில்லாடி போல :(

*

”கேப்மாரி” என்பது ஒரு தகாத வார்த்தையென்று நினைத்திருந்தேன். அது ஒரு சாதியின் பெயர் என்று நேற்றுத்தான் படித்தேன் #என்ன கொடுமையிது!


*
முதல்வன் விஜய் நடித்திருக்க வேண்டிய படம் - ஷங்கர். # அப்போ இந்தியன் சிம்புவும் / எந்திரன் தனுஷ்ம் நடிச்சிருக்கவேண்டிய படமோ!

*


பல படங்களில் கதாநாயகிகளைவிட அவர்களோடு வரும் பெண்கள் கூடுதல் அழகாய்த் தெரிகிறார்கள். #கண்ணாடியை மாத்தனுமோ!? :)))

*