டிசம்பர் 28 முதல் டிசம்பர் 28 முடிய

உண்மையில் 2017ம் ஆண்டு எனக்கு ஜனவரி 1ம் தேதி துவங்கவில்லை.

2016 டிசம்பர் 28ம் தேதியே எனக்கான ஆண்டு துவங்கிவிட்டது எனச் சொல்லலாம். தென்காசி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பயிரங்கு நடத்திய நிகழ்விலிருந்துதான் பள்ளி மாணவ மாணவியர்களை நோக்கி கூடுதல் கவனம் கொடுக்க ஆரம்பித்தேன். 2017ன் முதல் நிகழ்ச்சியாக குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் பிரைமரி பள்ளி ஆண்டு விழா எனத் தொடர்ந்த பயணத்தில், இந்த ஆண்டு அதே டிசம்பர் 28ம் தேதி குருமந்தூர் அருகே வெட்டையம்பாளையும் கொமரசாமிக்கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 14ம் ஆண்டு விளையாட்டு விழா 99வது நிகழ்ச்சி. 31ம் தேதி இரவு ஒரு குடியிருப்பு நலச்சங்கத்தின் புத்தாண்டு இரவு நிகழ்ச்சியில் பேசவுள்ளதால் எண்ணிக்கை 100ஐ அடைந்து விடும். எந்த விதத்திலும் திட்டமிடாத்து இந்த 100 எனும் எண்ணிக்கை.

இந்தப் பயணத்தில் பெரு நிறுவனங்கள், பள்ளிக்கல்வித் துறை, பல்வேறு அமைப்புகள் ஆகியவற்றோடு அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், விவசாயக் கல்லூரி, தொழிட்நுட்பக் கல்லூரி, ஆசிரியர்கள் பயிற்சி மையம் என பல்வேறு தரப்பில் இருக்கும் பணியாளர்களையும், மாணவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

இந்த ஆண்டு கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் வாயிலாக சந்தித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 18,000. மாணவர்கள், ஆசியர்கள் சார்ந்த 65 உரை மற்றும் பயிலரங்குகளின் வாயிலாக சந்தித்த மாணவ மாணவியர்கள் சுமார் 13000 பேர், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 850 பேர்.

யாழ்ப்பாணம் தெள்ளிப்பளையில் சந்தித்த ஒன்பது வயது மாணவர்கள் முதல் ஈரோட்டில் ஐம்பத்தைந்து வயதில் ’நான் இப்பொழுதுதான் வாழ்க்கையைத் தொடங்குகிறேன்’ எனச் சொன்ன ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் வரை பல்வேறு வயதில், பல்வேறு நிலையில் இருப்பவர்களை இந்த ஆண்டில் கடந்து வந்திருக்கிறேன். குறிப்பாக யாழ்ப்பாணத்தின் வாழ்வகத்தில் சந்தித்த பார்வைத் திறனற்ற பிள்ளைகள் எனக்குள் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர்கள்.

நிகழ்ச்சிகளின் முடிவில் வெளியில் ஓடி வந்து கை பற்றிக் கொள்ளும் பிள்ளைகள், கால் தொட்டு ஆசிர்வதியுங்கள் என உயிரை நடுங்க வைக்கும் பிள்ளைகள், ஆர்வமாய்ப் பேச ஆரம்பித்து திக்கித் திணறி கண்ணீர் சிந்தும் பிள்ளைகள், இரண்டு நாட்கள் கழித்து யோசித்து யோசித்து கை பேசியில் அழைக்கும் பிள்ளைகள், வாட்சப்பில் வந்து என்ன பேசுவதெனத் தெரியாமல் திணறும் பிள்ளைகள், உங்களை அண்ணாவென அழைக்கட்டுமா எனக் கேட்கும் வால் முளைத்த பட்டாம்பூச்சிகள் என இந்த ஆண்டு எனக்கு பிள்ளைகள் சூழ் சிறப்பு ஆண்டு.

இத்தனைக்கும் மேலாக, நான் படித்த கல்லூரிக்கு 25 ஆண்டுகள் கழித்து பயிற்சியாளராக போன அனுபவம் பெரும் தெம்பூட்டுகிறது.

கல்வி உலகம் தவிர்த்து...

என்னை வளர்த்து ஆளாக்கிய ஜேஸிஸ் இயக்கத்தில், பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மண்டல மாநாட்டிலும், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டிருக்கிறேன்.

மிகப் பெரிய மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு ‘மாற்றத்தை நிர்வகித்தல்’ பயிலரங்கினை நான்கு அமர்வுகளில் நடத்தியது மிக நல்ல அனுபவம்.

உரை, பயிற்சி எனத் தீவிரமானதில் எழுத்து மிகவும் குறைந்து போயிருக்கின்றது. ஆண்டின் துவக்கத்தில் வெளியான “பெயரிடப்படாத புத்தகம்”, “உறவெனும் திரைக்கதை” கட்டுரைகளுக்குப் பிறகு இந்த ஆண்டில் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக எதுவுமே எழுதவில்லை.

மகள் மழலையாக பத்தாண்டுகளுக்கு முன்பு உச்சரித்துக் கொண்டிருந்த அதே காரை இந்த ஆண்டு அவள் பிறந்த நாளன்று சஸ்பென்சாக வாங்கியது, குடும்பத்துடன் வடகிழக்கு இந்தியா, நண்பர்களோடு கர்நாடகா-கேரளா மற்றும் இலங்கை பயணங்கள் என மகிழ்வான தருணங்கள் கொண்ட ஆண்டு.

எங்க ஊர் நட்புகளை ஒன்று திரட்டி “ஈரோடு வாசல்” எனும் வித்தியாசமான வாட்சப் குழுமத்தை உருவாக்கி, அதில் எழுத்து, உடற்பயிற்சி, வாசிப்பு பேச்சு, வாசிப்பு, உரையாடல் என பல்வேறு திறமையாளர்களை இனம் கண்டது நெகிழ்வான அனுபவம்.

எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் பாஸ்போர்ட்டை தவற விட்டதன் மூலம் மிகப் பெரிய பாடம் கற்றுக்கொண்ட ஆண்டு.

நிறைவான அன்பைத் தருவதற்கும், பெற்றுக்கொள்வதற்கும் யோசித்ததேயில்லை. எவர் மீதும் புகார் இல்லை, வெறுப்பு இல்லை, வன்மம் இல்லை. சில தருணங்களில் சிலரிடம் கோபம் உண்டு. ஒருபோதும் அதை திட்டமிட்டு வளர்க்கவோ நீட்டிக்கவோ விரும்பியதில்லை.




எல்லா வகைகளிலும் என்னைச் சுற்றிலும் இருப்பவர்களின் அன்பு மற்றும் நேசிப்போடு இந்த ஆண்டை மகிழ்வோடு நிறைவு செய்கிறேன்... இன்னும் கூடுதல் அன்பினையும் பிரியங்களையும் தேடிக்கொண்டே....

தகிக்கும் இளஞ்சிவப்பு

கல் நேர ரயில் பயணத்தில், பிஞ்சுக் குழந்தையொன்று அழுது கொண்டேயிருந்தது. பசி அழுகை முற்றியபடியே இருந்தது. அடங்குவதாகத் தெரியவில்லை.  முன்பதிவு பெட்டியில் பதிவு செய்யாதவர்களும் நின்றபடி கூட்டமாக. குழந்தையை சமாளிக்க முடியாத அம்மா, அணிந்திருந்த சுடிதாரின் மேலாடையை சுருட்ட ஆரம்பித்திருந்தார். குழந்தையின் அழுகை ஓய்ந்தது!

இதை முன்வைத்து ரயில் பெட்டிகளில், குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக முற்றிலும் மூடப்பட்ட ஒரு இருக்கையேனும் அமைப்பது அறிவுசார் சமூகத்தின் கடமையென ஃபேஸ்புக்கில் எழுதினேன். பாலூட்டும் பெண்களுக்கு இப்படியொரு வசதி தேவைதானே? இப்படி நினைப்பதே சமூகப் பொறுப்பாகவும் கருதப்படுகின்றது.

அந்தப் பதிவின் கீழ், பாலூட்டும் அம்மாக்கள் சுடிதார் அணியக்கூடாது, ஜிப் வைத்த ஆடை அணிய வேண்டும், துண்டு, போர்வை வைத்துக்கொள்ள வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்தனர். ஒரு ஆணாக பதிவெழுதிய எனக்கும், ஆண்களாக கருத்துத் தெரிவித்த அவர்களுக்கும் அதுதான் தீர்வெனத் தோன்றியிருக்கலாம். காரணம் பெண்ணாய் யோசித்தல் ஆணுக்கு அத்தனை சாத்தியமா என்ன?

தனி அறை / மறைவான பகுதினு ஒரு குழந்தை சாப்டறத இவ்ளோ சிரமப்படுத்தனுமா எனும் கேள்வியோடு வெளிநாட்டில் வசிக்கும் லாவண்யா வந்தார். அரசு அலுவலக காத்திருப்பு அறையில் நூற்றுக்கணக்கானோர் மத்தியில் தம் மகளுக்கு பாலூட்டிக்கொண்டே அந்தக் கேள்வியை எழுதுகிறேனெனக் குறிப்பிட்டிருந்தார். அந்த குழந்தை சாப்டறதஎனும் இரண்டு சொற்கள் மனதில் ஓங்கி அறைந்தாற்போல் இருந்தது.

*

மேற்கத்திய நடனக்காரியான மினால், தோழிகள் ஆன்ட்ரியா மற்றும் ஃபலாக் ஆகியோருடன் அடுக்கக வீட்டில் வசிக்கிறாள். தோழிகள் வேலைக்குச் செல்கிறவர்கள். பெற்றோருடன் வசிக்காமல், தோழிகளோடு வசிப்பது மினாலுக்கு சில சுதந்திரங்களைக் கொடுக்கிறது. ஆன்டிரியா மேகாலயா மாநிலத்தைச் சார்ந்தவள். மூவரும் நண்பர்களோடு விருந்துக்குப் போகிறார்கள். விருந்தில் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்த முயன்றவனை மினால் பாட்டிலால் தாக்கிவிடுகிறாள். அடிபட்டவன் அரசியல் பலமுள்ளவன். மிரட்டுகிறார்கள். புகார் கொடுக்கிறாள். பாலியல் ரீதியாக ஆதாயம் தேட, மிரட்ட, அவனைத் தாக்கியதாக கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறாள்.

அவள்களின் அன்றாடங்கள் விசாரனைகளில் வெகுவாய்த் திரிக்கப்பட்டு முறுக்கிப் பிழியப்படுகின்றன. யாரிடமும் அவர்களின் மாநிலம் குறித்துப் பேசப்படாதபோது ஆன்ட்ரியாவின் மாநிலம் குறித்து மட்டும் கேட்கப்படுகிறது. வீதிகளில் எந்தப் பெண் அவமதிக்கப்படுவதைவிடவும் வடகிழக்குப் பெண்ணாகிய தாங்கள் கூடுதலாய் அவமதிக்கப்பட்டிருக்கிறோம் எனும் ஆன்ட்ரியாவின் ஒற்றை வசனமே கூடப் போதும் பொது மனநிலையைக் கூறு போட.

தனி வீடு எடுத்து தங்கியிருப்போர், வடகிழக்கு மாநிலத்துப் பெண், விவாகரத்துப் பெற்றவருக்கு காதலியாக இருப்பவள் என்பதையெல்லாம் வைத்து பெண்ணை எடை போட்டுவிடுவது சமூகத்திற்கு மிக எளிதானது. வீட்டிற்கு தாமதமாகத் திரும்புதல், வீட்டுக்கு நண்பர்கள் வந்து செல்வது, விருந்திற்குச் செல்வது, நடனமாடுவது, மது அருந்துவது, ஆண்களிடம் சிரித்துப் பேசுவது, தொட்டுப் பேசுவது போதும்தானே ஒரு பெண் இப்படிப்பட்டவள்தான் என சமூகம் முடிவெடுக்க.

இப்படிப்பட்டவள் என்பதன் அர்த்தங்களில், தம் உடலை பகிரத் தயாராய் இருப்பவள் என்பதும் அடங்கும். ஒரு ஆணின் வழியே, இந்த சமூகத்தின் பொதுப் பார்வையாய், பைத்தியகாரன்கூட அப்படியான பெண்களோடு இருக்கும்போது பலவந்தப்படுத்த நினைப்பான் எனும் வசனத்தில் உணர்த்தப்படுகிறது.



மினாலுக்காக வாதாடும் தீபக்சேகல் ஒரு பெண் தனியாகத் தங்கியிருந்தால்! அவள் வீட்டுக்கு நட்புகள் வந்து போனால்! அவள் தாமதமாக வீடு திரும்பினால்! அவள் மது அருந்தினால்! அவள் நடனமாடினால்! அவள் ஆண்களிடம் சிரித்துப் பேசினால்! அவள் நண்பர்களைத் தொட்டுப் பேசினால்! அவள் ஒரு ஆணோடு தனித்து இருக்க நேரிட்டால்! அவள் தம் உடலைப் பகிரத் தயாராக இருப்பதாய் அர்த்தமா!?” எனக் கேட்கும் நேரிடைக் கேள்விக்கு, ”இல்லைஎன்று சொல்லும்போதே, “ஆனால்என்று இழுத்துத் தொடரவே விரும்புகிறார்கள். இந்த இல்லைஎனும் பதிலுக்குள் ஆனால்எனும் வார்த்தையைப் போட இடம் கிடையாது என்கிறார் அழுத்தம் திருத்தமாக.

பெண் காசுக்காக தம் உடலைப் பகிர வந்திருந்தாலும், காதலியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், அவளுக்கு விருப்பம் இல்லாதபோது இல்லைஎன்று சொன்னால் அதன் அர்த்தம் இல்லைதான். ”இல்லைஎன்கிற மறுப்புக்கு ஏன் என்பதுள்ளிட்ட எந்தக் கேள்வியையும் கேட்க முடியாது. காரணம்இல்லைஎன்பது ஒற்றைச் சொல்லல்ல. அதுவொரு வாக்கியம், ‘ஏன்?’ என எவரும் கேட்கும் கேள்விகளுக்கான பதிலைஉள்ளடக்கிய ஒரு வாக்கியம் அது.

பொழுதுபோக்கிற்காக, பொருளீட்டுவதற்காக, அதிலிருக்கும் கதாநாயகத் தன்மைக்காக என திரைப்படங்களை நினைப்பதையும், உருவாக்குவதையும் இங்கே யாருக்கும் தடுக்க உரிமையில்லை. ஆனால் பாடங்களாக விளங்கும் சில படங்கள் சவுக்கால் அடித்து உணர்த்தும் தன்மை வாய்ந்தவை. அப்படியானதொரு பாடம்தான் இந்தியில் 2016ல் தாப்சி, அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி, பல ஆனால்களை முனை முறித்துப் போட்ட பிங் (Pink) திரைப்படம்.


*

அந்த குழந்தை சாப்டறதஎனும் இரண்டு சொற்கள் செவிட்டில் அறைந்த கணத்தில் ஒருவர் இன்றைய அன்னையர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதே பெரிய ஆச்சரியம்தான். பெண்களே நாகரீக உடையால் எத்தனை சிரமங்கள்? நம் தமிழ் பாரம்பரிய உடை அணிவது அவமானம் அல்ல அது பல நேரங்களில் அவசியமானது என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றனஎன்றவரின் அறிவுரை லாவண்யாவை சீண்டியதில் பெரும் நியாயமுண்டு.

ஒரு குழந்தை பால் குடிக்கும்போது மறைவாய்ப் போகவேண்டுமெனச் சொல்வோரே, நீங்க பிரியாணியோ பழைய சோறோ சாப்பிடும்போது பெட்சீட் போட்டு மூடிட்டு சாப்டுவீங்களா? இல்ல பசு மாடு பால் கறக்கும்போது உங்களுக்கு மோகம் வருமா?”

குழந்தைக்கு பாலூட்டுதல் என்பது பசி தொடர்பானது மட்டுமல்ல, நம்பிக்கையை, உறவைக் கட்டமைக்கும் செயல். பிறந்த குழந்தையின் கண் பார்வை மார்பிலிருந்து அம்மா முகம் வரை தான் பாக்க முடியும். அம்மாவுடன் மட்டுமே பார்வையால் உறவு வைத்துக் கொள்ள முடியும். அந்த நிலை, வாய்ப்பு, தாய் சேய் இருவருக்குமே முக்கியமானது. குழந்தை தூங்கிவிட்டதா, வேர்க்குமா என்பதெல்லாம் பார்க்க வேண்டும். சற்று பெரிதான குழந்தை பால் குடிக்கும் போது சுற்றிலும் இருப்பதை வேடிக்கை பார்க்கும். உண்டது பிடித்திருந்தால் அம்மாவிடம் சொல்வது போல் சிரிக்கும். இவை யாவும் இயற்கையாக நடக்கின்ற, நடக்கவேண்டிய காரியங்கள். துணி போர்த்தினால் அது இயலாது. மற்றவர்களின் பார்வைக்காக இதைத் துறக்க முடியாது.

நம்மூரில் குழந்தைப் பிறப்பென்பது நியாயமில்லா, சமனில்லாத ஒரு பொறுப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஓடியாடிக் கொண்டிருந்தவள் அம்மாவானதும், குழந்தையோடு அறைக்குள் அல்லது வீட்டிற்குள் முடக்கி அடிக்கடி பாலூட்டு எனச் சொல்கிறோம். பாலூட்டுபவளின் அருகில் அமர்ந்து பேச மனமிருப்பதில்லை. அவளுக்கு தாகம் எடுக்கும். பழச்சாறு கொடுக்க வேண்டும். குடும்பத்தில் உறவுகளோடு அமர்த்தி பாலூட்டச் செய்ய வைத்து, அதை இலகுவாக்க வேண்டும்.

தந்தைகளின் கடமை சம்பாதிப்பது, குழந்தைகளை கொஞ்வதோடு நிறைந்து விடுமா? எத்தனை பேர் தம் பிள்ளை பாலருந்துவதை பார்த்திருக்கப் போகிறார்கள், அதை சங்கடமாக நினைக்க என்ன இருக்கு? எந்நேரமும் பிஞ்சுக் குழந்தையோடு, ஒரு அறைக்குள் முடங்கி, சமூக உறவாடல் இல்லாமல் இருப்பது எளிதானதா? இது குறித்து எந்த பிரஞ்னையும் இன்றி மறைப்பு, புடவை, போர்வை என எத்தனை காலம் சொல்லப் போகிறீர்கள். பாலியல் பண்டமாக பெண்களின் மார்புகளைப் பார்ப்பதைக் கடந்து, எப்போது அது குழந்தையின் உணவின் பாத்திரமாக, குழந்தைக்கும் அம்மாவிற்குமான உறவின் மொழியென உணரப்போகிறீர்கள்?

நான் வசிக்கும் ஐரோப்பாவில் பேருந்து, ரயில், அங்காடிகள், வங்கி என எங்கும் பாலூட்டலாம். ஆனால் இந்திய நண்பர்களைச் சந்திக்கும்போது என்னவோ ஒரு மனத்தடை வருது. நான் அறைக்குள் செல்ல வேண்டும் அல்லது அவர்கள் வெளியில் செல்ல வேண்டும். அதனாலேயே சில நேரங்களில் பாலூட்டுவதைத் தவிர்க்கிறேன்.  தண்ணீர் அல்லது நொறுக்குத் தீனி கொடுக்கிறேன். பிரச்சனை எங்கேயிருக்குனு தெரியுதா!?

இவை லாவண்யாவின் கருத்து மற்றும் என்னோடு நிகழ்த்திய உரையாடல். இவற்றை வாசித்தபோதும், பிங் படத்தின் வழியே பாடம் படித்தபோதும் ஒரு ஆணாக இதுவரையிலுமான என்  முன்முடிவுகளுக்கும், அறியாமைகளுக்கும், தவறுகளுக்கும் வெகுவாய் வெட்கப்பட்டேன்.


இனி நம் எந்தச்செயலும் இம்மாதியாரியான வெட்கத்தைச் சுமப்பதாய் இருக்க வேண்டுமா என்பதைச் சிந்திப்பதே அறிவார்ந்ததாய்க் கருதும் இந்தச்சமூகத்தின் அவசியத் தேவை!

-

”அயல் சினிமா” செப்டம்பர் இதழில் வெளியான கட்டுரை

என்னைக் கட்டிக்குங்க சார்

தொன்மை மன்ற விழாவிற்கு அழைத்தபோது, யார் பங்கேற்பாளர்கள் எனக் கேட்டேன். மாவட்டம் முழுவதிலுமிருந்து 210 வரலாற்று ஆசிரியர்கள் எனச் சொன்னபோது, ”உரை வேண்டாம், பயிலரங்காக வைத்துக்கொள்ளலாமா!?” என்று நான் தான் கேட்டிருந்தேன். காலை 11 முதல் மதியம் 1 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

உண்மையில் ஆசிரியர்களைச் சந்திப்பதில் கொஞ்சம் நடுக்கம் உண்டு. காரணம் அவர்கள் ஆசிரியர்கள். நாம் கருதும் வண்ணமே அவர்கள் இருக்க வேண்டுமென்பதில்லை. பொதுவாக பயிலரங்கு என்றால் 30 பேர் இருப்பதுதான் வசதி. 210 பேரை வைத்துக்கொண்டு உரையாடியபடி கையாள்வது என்பது சற்று ரிஸ்க் தான். அந்த ரிஸ்க் என்பது நேரம் கரைவதுதான்.
துவக்க விழா முடிந்து என்னிடம் அரங்கு வழங்கப்பட்டபோது மதியம் 12 மணி. வேண்டுமானால் அதிகபட்சம் 1.15 வரை எடுத்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லப்பட்டது. நண்பர் ஆசிரியர் பால்ராஜ் அவர்கள் தேர்ந்த ஒரு அறிமுகம் கொடுத்தார்.
உரை என்றால் அப்படி நேரத்தைக் குறைப்பது குறித்துக் கவலையில்லை. முன்பு எவ்வளவு நேரம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இறுதியாக நான் பேச வேண்டிய தருணம் வரும்போது எவ்ளோ நேரத்தில் முடிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு, சொல்லும் நேரத்தில் ஓரிரு நிமிடங்கள் முன்பின் முடித்துவிடுவது வழக்கம்.
ஆனால் பயிலரங்கு என்று வந்துவிட்டு, திட்டமிட்ட நேரத்திற்கு தயாரிப்பை வைத்திருக்கும்போது, அதில் எதையும் கைவிட மனமே வராது. ஆரம்பம் - நடு - இறுதி என ஒரு கோர்வை இருக்கும். இடையில் எதை skip செய்தாலும் திருப்தியின்மை நிரம்பிவிடும்.
பங்கெடுத்திருக்கும் ஆசிரியர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதிலிருந்து அதிகாலையிலேயே கிளம்பி வந்திருப்பவர்கள். விரும்பி வந்தவர்கள், அழைத்து வரப்பட்டவர்கள், இழுத்து வரப்பட்டவர்கள் எனக் கேட்கப்பட்டபோது, இழுத்து வரப்பட்டவர்களுக்கும் கணிசமாக கை உயர்ந்தது மனதில் இருந்தது.


மதியம் 1.12 மணிக்கு அடுத்த ஐந்து நிமிடத்தில் முடித்துவிடத் தயாராகவே இருந்தேன். எல்லாவற்றையும் நகர்த்தி இறுதிப் புள்ளிக்கு நகர்ந்துவிடுவது ஒன்றும் சிரமமில்லை. ஆனால் சட்டென ஒரு ரிஸ்க் எடுக்க முனைந்தேன். “இன்னும் 3 நிமிசத்தில் முடிச்சுக்கனும். முடிச்சுக்கவா இல்லை இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமா!?” என்றேன். சிலர் ஜெர்க் ஆவது புரிந்தது. அந்த ஜெர்க் ‘அய்யய்யோ முடியப்போகுதா!?’ என்பதுதான் என எனக்குப் புரிந்தது. எனக்கு முழுமையாகக் கொடுக்கவேண்டும். ஒருங்கிணைப்பாளர் முனைவர் தனபாக்கியம், “அய்யய்யோ லன்ச்ங்க... எல்லாரும் சாப்பிட்டு வந்து அடுத்த செஷன் இருக்கு” எனப் பதறத் தொடங்கினார்.

கூட்டத்திலிருந்து “செவிக்கு உணவில்லாத போது”, “கன்ட்னியூ பண்ணுங்க”, “எங்களுக்குப் போர் அடிக்கும் வரை போங்க” என்பது போன்ற குரல்கள் வந்தன. தனபாக்கியம் என்னைப் பார்த்து சிரித்தார். “சரி நீங்களே முடிவு செய்ங்க. மூனு நிமிசத்தில் முடிக்கவும் தயார். நேரம் கொடுத்தா தொடரவும் தயார்” என்றேன்.

“சரிங்க... 1.45 வரை எடுத்துக்குங்க!” என்று கூட்டத்திலிருந்தே குரல் வந்தது... எடுத்துக்கொண்டேன். நிறைந்த மனதோடு நிறைவு செய்தேன்.
நிறைந்தவுடன் ஆசிரியர்கள் நிகழ்ச்சி குறித்து தம் கருத்தைச் சொல்ல முன்வந்தார்கள். இறுதி வரிசையிலிருந்து ஒரு ஆசிரியர் ஓடி வந்தார். தம் பாராட்டைக் கூறியவர்... “நான் இந்த மேடையில் உங்கள் அனைவரின் முன்னும் என் நன்றியை வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டு என்னை நோக்கி வந்தார். என்ன செய்யப்போறாரோ என சற்று திடுக்கிடலோடுதான் நின்றிருந்தேன். அருகில் வந்தவர் கைகளை விரித்தபடி “என்னைக் கட்டிக்குங்க சார்!” என்றார். மேடையில் பாராட்டு பெறும் விதமாக ஒரு ஆசிரியரை அணைத்துக் கொண்டது இதுவே முதல் முறை.
கீழே இறங்கி வந்ததும். அடுத்தடுத்து ஆசிரியர்கள் சற்றே உணர்ச்சிவயப்பட்ட நிலைகளில். “இன்னிக்குத்தான் நான் வாழ்க்கையைத் தொடங்குகிறேன்” என்றார் ஒருவர். உண்மையில் நடுங்கிப்போனேன். இப்போதைய நடுக்கம் வேறு விதமானது. ஒரு ஆசிரியை நோட்டை விரித்து வைத்துக் கொண்டு ஒரு “கையெழுத்து போடுங்க” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். “அதெல்லாம் வேணாம்ங்ம்மா!” எனக் கை கூப்பி விடைபெற்றேன்.
பயிற்சித் துறையை கையில் எடுத்தற்கு நெகிழ்ந்து நிறைந்த தருணங்களில் இன்றும் ஒன்று.

Miles to go...

ஏசி தியேட்டரா இருந்தா கொடுக்கும் காசுக்கு அசல் எடுக்கலாம் - தீரன் அதிகாரம் ஒன்று.



கதை என்னங்க!?

கதை என்னங்க பெரிய கதை, ஒரு குழு தொடர்ச்சியா கொலை செஞ்சுட்டு கொள்ளை அடிக்கிறாங்க. அவங்களை ஒரு போலீஸ் அதிகாரி கண்டுபிடிக்கிறார்.

படத்தில் சுவாரஸ்யமா ரொமான்ஸ், காமெடி!?

அய்யோ... காதல் காட்சியெல்லாம் நல்ல்ல்ல்லாத்தான் இருக்கு, ஆனாப் பாருங்க அந்தக் காட்சிகள் வந்தாலே.... ஷ்ஷப்பா....னு ஆயிடுது. காமெடியா... ம்ஹூம்.... சிறுத்தை படத்திலெல்லாம் கார்த்தி காமெடில என்னாமா பிச்சு ஒதறியிருப்பாரு... இதுல.... ம்ஹூம்.... சின்னக் குழந்தைகளைக்கீது கூட்டிட்டுப் போயிறாதீங்க.... மருந்துக்கு கூட காமெடி இல்ல..... சூரி, சந்தானம், விவேக், வடிவேல்.... நோ...நெவர்... காமெடிக்குனு தெரிஞ்ச ஒரே முகம் மனோபாலா மட்டும் தான். அதுவும் இயக்குனர் மனோபாலாவுக்கு செய்திருக்கும் நன்றிக்கடன்னு நினைக்கிறேன்.

சரி... கொடுக்குற காசுக்கு தேறுமா!?

ம்ம்ம்... அதெல்லாம்... தேறும் தேறும்.... ரெண்டே முக்கால் மணி நேரப் படம்... ஏசி தியேட்டரா இருந்தா கொடுக்கும் காசுக்கு அசல் எடுக்கலாம்...

அப்ப பார்க்கிறதா வேண்டாமா!?

அதென்ன பொசுக்குனு கேட்டுட்டீங்க.... கட்டாயம் பார்க்கனும்

யோவ் என்னது கட்டாயம் பார்க்கனுமா? இப்படிச் சொன்னதுக்குப் பிறகும் பார்க்கிறதுக்கு.... நான் என்ன மெண்டலா?

இந்த மாதிரி ஒரு படம் எடுக்க தமிழில் எந்த டைரக்டருக்கு தில் இருக்கு....!? அதுக்காக.... அந்த தில்லுக்காக மட்டுமே நம்மை ‘‘மெண்டலா’ நினைச்சுட்டே படம் பார்க்கலாம்!

அப்படி என்னத்த எடுத்துட்டாரு!?

மாற்று மொழிப்படங்கள் நிறையப் பார்ப்பதால், சினிமாவாக்கப்படும் உண்மைக் கதைகள் மீது கூடுதல் ஆர்வம் உண்டு. அவற்றைப்போல் தமிழில் உண்மைக் கதைகள் படமாக்கப்படவில்லையே எனும் ஏக்கம் எப்போதும் உண்டு. படு பிரபலமான இயக்குனர்களும், மெகா இயக்குனர்களும், பழம் தின்று கொட்டை போட்ட இயக்குனர்களும் கதைகளைத் தேடி, கிடைக்கவே கிடைக்காமல் ஏற்கனவே வந்த படங்களில் சுட்டு, அங்கு தொட்டு, இங்கு தொட்டு, காசைக் கொட்டி வீணடித்து, நாயகனின் உடலைச் சிதைத்து என என்னென்னவோ தம் கட்டி நம்மை மூச்சு முட்ட வைக்கும் சூழலில்...

இயக்குனர் வினோத் தன்னை நிரூபித்திருக்கிறார்.

கொள்ளையர்களைப் பிடித்த போலீஸ் என்பது மிகச் சாதாரணமா ஒரு வரி தலைப்புச் செய்திதானே!? இப்படி பல நூறு செய்திகளை வாசித்துக் கடந்திருப்போம், சிலவேளைகளில் வியந்திருப்போம்... அதன்பிறகு வழக்கம்போல் மொத்தமாய் மறந்திருப்போம். அப்படியான ஒரு வரி தலைப்புச் செய்தியை வைத்துக் கொண்டு, தமிழகத்தில் ஒரு காலத்தில் நிகழ்ந்த ஒரு முக்கியமான தொடர் கொலை, கொள்ளைச் சம்பவத்தை தமிழக காவல்துறை துப்பறிந்து கண்டுபிடித்த உண்மைச் சம்பவத்தை கதையாக்கி, திரைக்கதையாக்கி, அசர வைத்திருக்கும் இயக்குனருக்காக இந்தப் படத்தைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

காவல்துறை மேல் பல தருணங்களில் விமர்சனங்கள் வைத்திருந்தாலும், “கொள்ளையர்கள் கைதுஎனும் ஒரு வரித் தலைப்புச் செய்திகளுக்கு பின்னால் அவர்கள் உழைத்த உழைப்பில்தான் சமூகத்தின் கணிசமான பங்கு ஓரளவு நிம்மதியாகத் தூங்குகிறது. கிராமத்தில் தோட்டத்திற்குள் தனி வீட்டில் வசித்துப் பழகிய எனக்கு, இம்மாதிரியான கொள்ளையர்கள் மீது அப்பொழுதெல்லாம் மிகுந்த பயமுண்டு. அவர்கள் நிகழ்த்தும் கொடூரமான காட்சிகளை திரையில் கண்டு இப்போதும்கூட ஒடுங்கிப் போய்தான் இருந்தேன். அந்தப் பயம் அவசியமற்றது எனும் நம்பிக்கையைக் கொடுத்ததில் காவல் துறைக்கு பெரும்பங்கு இருக்கும். அது அந்தப் பயம் சார்ந்தவர்களுக்கு மிக ஆழமாகப் புரியும்.

அந்த வகையில் என்னளவில் தீரன் அதிகாரம் ஒன்று கண்டு சிலாகிக்கும் சினிமா. சதுங்க வேட்டையில் சாதித்துக் காட்டிய இயக்குனர் வினோத், தீரனில் தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார். அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைக்கலாம் என்றே தோன்றுகிறது.

நேரடியாக குரூப்-1 தேர்ச்சி பெற்று துணை காவல்துறை கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி) பணியமர்கிறவர் சென்ட்ரி முதல் ஆய்வாளர் வரை எல்லாப் படி நிலைகளிலும் பணியாற்ற வேண்டும் என்பது ஆச்சரியமான தகவல். (அது உண்மைதானா!?) இப்படி ஒவ்வொன்றையும் அவர் டீட்டெயிலிங் செய்திருக்கும் விதம், அதற்கான உழைப்பு பாராட்டுக்குரியது. படத்தில் சொல்லப்படும் பவேரியா குழுவின் பின்னணி உள்ளிட்ட குற்றப்பரம்பரை குறித்த விவரனைகள் ஆவணப்படத்திற்கே உரியது என்றாலும், அவைதான் பார்வையாளர்களை படத்தோடு ஒன்ற வைக்கிறது. ”மதராஸி போலீஸ் மதராஸி போலீஸ்” எனும் வில்லனின் புலம்பல் உள்ளிட்ட பலவற்றில் போலீஸ்க்கான இமேஜ்ஜை மிரட்டலாய்  உயர்த்தும் அதே இயக்குனர்தான், உத்திரபிரதேஷ்ல கொள்ளையடிச்சுட்டு லாரில போனா போலீஸ் சுட்டுடுவாங்க, ஆனா தமிழ்நாட்டுல 20 ரூபா வாங்கிட்டு விட்டுடுவாங்க என்பதில் ஒரே கும்மாய் கும்முகிறார்.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும், படத்தின் வேகமும் அசர வைக்கின்றன. அழகுராஜா முதல் சிறுத்தை வரை மொக்கியாகிப் போயிருந்த கார்த்தி... இதில் தன்னை வெகுவாக கூர்மையாக்கியிருக்கிறார்.

படத்தில் ஒரே ஒரு குறை என்றால் காதல் காட்சிகளுக்கு, பாடல்களுக்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கத்தரித்து 43 நிமிடங்களைத் தியாகம் செய்திருந்தால், படம் கச்சிதமாக இருந்திருக்கும். ஒருவேளை அப்படி கத்தரித்து கச்சிதமாக்கப்பட்டால் அந்த அனுபவத்தைப் பெற இன்னொரு முறையும் ”தீரன் அதிகாரம் ஒன்று” பார்க்க தயங்க மாட்டேன்.

இயக்குனர் வினோத்திற்குச் சொல்வது ”வெல்டன் வினோத்!. ஒரு வரிச் செய்திகளுக்குள் உங்களுக்கான, உலகத்துகான கதை இருக்கு. தேடுங்க... கொடுங்க... நாங்கள் பார்ப்போம்... கொண்டாடுவோம்!”


முகம் நனைத்த வெயிலின் தடயங்கள்



என் கனவுகளின்
மீதமர்ந்து பறக்கும்
பட்டாம்பூச்சியின்
பூம் பாதங்களில்
ஒட்டி வருபவை
உன் நாட்களில் படிந்து
மலரத் துவங்கிய தினம்
நினைவில் இருக்கிறதா!

கடைசியாய் நீ மூடிச்சென்ற
அறையின் கதவைத் திறக்கிறேன்
தேங்கியிருந்த காற்றில் மிதக்கும்
பிரியத்தின் வாசனையை
தவிர்ப்பதெப்படி!

கைகளுக்குள் பொதித்துக்
கொடுக்கப்பட்ட
பிரத்யேக கதகதப்பை
தனக்கு வந்த பிரிக்கப்படாத
பரிசுப் பொதியொன்றை
அணைத்துறங்கும் பிள்ளை போல்
வருடிக் கொண்டேயிருக்கிறேன்

வெயிலில் ஊறி
நிழலில் ஒதுங்கையில்
முகம் நனைத்த வெயிலை
கையால்  துடைப்பது போலே
இடைவிடாது துடைத்தும்
முத்தங்களின் தடயங்கள்கூட
போவதாயில்லை!

-

அவளும் அவளும் அணைத்துக் கொண்டிருக்கிறார்கள்



அவளும் அவளும்
அணைத்துக் கொண்டிருக்கிறார்கள்
பிரிவின் மொழியை
ஒருத்தி தம் மென் கரத்தால்
முதுகில் தட்டுவதும்
மற்றொருத்தி உணர்வதுமாய் இருக்கிறார்கள்

அவர்களும் இவர்களும்
முன்னும் பின்னும்
அவள்களைக் கண்டும் காணாமலும்
இடமும் வலமும் கடக்கிறார்கள்
மொழிந்திடத் தெரியாத பிரிவு
அவர்களின் முதுகிலும் கிடக்கலாம்

அவர்களிருவரும் பரிமாறும் பிரிவு
அவர்களுடையது மட்டுமல்ல
உலகம் யாவிலும்
விமான நிலையங்களில்
துறைமுகங்களில்
தொடர்வண்டி நடை மேடைகளில்
பேருந்துப் படிக்கட்டுகளில்
திருமணங்களில்
கல்விக் கூடங்களில்
மருத்துவமனைகளில்
ஆற்றங்கரைகளில்
வீட்டுத் திருப்பங்களில்
படிக்கட்டு வளைவுகளில்
உணர்த்தியும் உணர்த்த முடியாமலும் போன
அத்தனை பேரின் பிரிவுகளையும்
அவள்கள் தம் அணைப்பில் மொழிகிறார்கள்

வெட்கச் சிரிப்போடு
அவர்களை நோக்கும் மழலையொன்று
கடைசியாய் கை அசைத்து வந்த
பாட்டியின் பிரிவையும் சேர்த்தே
அவர்கள் மொழிகிறார்கள்

இதுகாறும் சுமந்துவந்த
பிரிவுச் சுமை யாவற்றையும்
அவர்கள் அணைப்பின் கதகதப்பில்

நானும் இறக்கி வைத்து நகர்கிறேன்.

111% ஜிஎஸ்டி

கனரக வாகன ஓட்டுனராக தேர்ச்சி பெற்ற அந்த இளைஞர், தன் கனவாக “ஐபிஎஸ்” என்றார். “என்ன படிச்சிருக்கீங்க!?” “பத்தாங்கிளாஸ்” “வயசு?” “25” “மேல ஏன் படிக்கல?” “குடும்பச் சூழல்” “சரி... ஐபிஎஸ் எப்படி? எப்போ?” “2018ல் நேரடியா +2 எழுதுவேன் 2021ல் டிகிரி முடிப்பேன். அப்புறம் மூனு வருசம் ப்ரிபேர் செய்து 2024ற்குள் ஐபிஎஸ் ஆகிடுவேன்” - வேறொரு சந்தர்ப்பத்தில் எம்.ஏ இறுதி ஆண்டு படிக்கும் மாணவரிடம் “அடுத்து என்ன செய்யப்போறீங்க!?” “ஐஏஎஸ்” “என்ன காரணம்!?” “அது ஒரு செம்ம கெத்து!” “எப்போ!?” “ எவ்ளோ சீக்கிரம் முடியுமோ!” “ப்ரிப்ரேசன்!?” “இனிமேதான்” அதன்பின் கேட்ட எந்தக் கேள்விக்கும் பொருத்தமான பதில் வரவில்லை. இறுதியாகத் தான் ஒரு உண்மை தெரிந்தது 'TNPSC / UPSC' என்பவற்றைக்கூட அவர் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. * இங்கு பெரும் அச்சுறுத்தலைத் தரும் கேள்வி “அடுத்தது என்ன... எதை நோக்கி!?” என்பதுதான். வாழ்க்கைச் சாலைகளில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். எந்த இடத்தை அடைவதற்கான பயணம் என எந்தத் தீர்மானமும் இல்லாமல், தீரத் தீர பெட்ரோல் நிரப்பி்க்கொண்டு ஓடும் பென்ஸ் கார்களும், சென்னை (அ) பெங்களூர் என இடத்தைத் தீர்மானித்துவிட்டு இரண்டாம் முறை எஃப்.சிக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் பழைய ஃபியட் கார்களும் சென்று கொண்டிருக்கின்றன. என் கவனம் அந்த ஃபியட் கார்கள் அடைய வேண்டிய இடங்களை அடைந்துவிட வேண்டும் அல்லது நெருங்கிவிட வேண்டும் என்பதுதான். அப்போ அந்த பென்ஸ் கார்கள்!? வேறென்ன அவைகளின் பெட்ரோலுக்கு மட்டும் 111% ஜி.எஸ்.டி போடச் சொல்ல வேண்டும்!

தூரத்து கட்டைவிரல்



தயங்கி நிற்கையில்
மென் அழுத்தத்தில்
முன்தள்ளுவதும்
தடுமாறித் துவளுகையில்
தன் திறன் கூட்டி
மேலேற்றுவதும்
மனக் காயங்கள் மீது
மயிலிறகு கொண்டு
மருந்திடுவதும்
திகைத்து விழிக்கையில்
திசை கண்டு
நம்பிக்கையூட்டுவதும்
மேடையில் நிற்கையில்
தூரத்திலிருந்து
கட்டைவிரல் உயர்த்துவதும்
ஒடுங்கி நிற்கும்போது
ஒரு வாய்ப்பளியுங்குள் என
யாசிப்பதும்
நடுங்கும் விரல்களில்
பிரியத்தின்
கதகதப்பைப் பகிர்வதும்
மூழ்கியதிலிருந்து மீள்கையில்
வலித்தும்கூட பற்றிய கை
விடாமலிருத்தலும்
அவர்களே யோசிக்காதபோது
அவர்களுக்காக
யோசிப்பதும்
மிக எளிதுதான்!
யோசித்துச்
சொல்ல வேண்டுமெனில்...
சற்றுக் கடினம் தான்!
இன்னும்....
உண்மையாகச்
சொல்ல வேண்டுமெனில்
நட்பில் அது சாத்தியம் தான்!

சேவலும் கெண்டகி வறுத்த கோழிக்கறியும்

இருள் வடிந்துபோகப் போகிறது
அடுக்ககச் சாளரப் பொத்தல்களில்
ஆங்காங்கே சில வெளிச்ச அருவிகள்
ஒரு சேவல் கூவுகிறது
அடுக்ககத்தில் எங்கனம் இக்குரல்

பிசிறில்லா சேவல் மொழியில்
நேர்த்தியிருந்தென்ன
உயிர்ப்பில்லையே
ஒருவேளை ஏதோ ஒரு வீட்டின்
எழுப்பு மணியாக இருக்கலாமோ
அவ்விதமாயினும் பிழையன்று
சேவலும் கோழியும்
யாருக்கும் அந்நியப்பட்டுவிடவில்லை

இந்த அடுக்ககத்தின்
ஏதோவொரு வீட்டின்
குளிர்ப் பெட்டிக்குள்
நேற்றிரவு மிஞ்சிப்போனதால்
நடுங்கிக் கிடக்கும்
கெண்டகி வறுத்த கோழிக்கறியை
நித்திரையிலிருந்து எழுப்பாமல்
எவ்வளவு வேண்டுமானாலும்
கூவிக்கொள்ளட்டும்!


கிளையிலிருந்து வேர் வரை – நூல் விமர்சனம்

கிட்டத்தட்ட 45 கட்டுரைகள்(!) ஒருசேர தொகுக்கப்பட்டு, டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டில் வந்திருக்கும் ”கிளையிலிருந்து வேர் வரை” என்ற இந்நூல் ஈரோடு கதிரின் எழுத்திற்குக் கிடைத்த மிகச்சிறந்த அங்கீகாரம் என்றே சொல்ல வேண்டும். இந்நூலுக்கு பெருமாள் முருகன், தமிழ் நதி, ஷா நவாஸ், பழமை பேசி, வா.மணிகண்டன், யெஸ்.பாலபாரதி, ராமலஷ்மி, ஷான், தமிழ் அரசி, கோபால் கண்ணன், சக்தி ஜோதி போன்றோர் நறுக்குத் தெறித்தார் போல் சுருக்கமாயும், சற்றே அழுத்தமாயும் அணிந்துரை வழங்கி அலங்கரித்திருக்கிறார்கள்.
அழகியல் தன்மையோடு வடிவமைக்கப்பட்ட அட்டைப் படமும் சரி, கட்டுரையை நகர்த்திச் செல்ல கையாண்டிருக்கும் அழகிய சொல்லாடலும் சரி, யாரையும் எளிதில் சட்டென திரும்பிப் பார்க்க வைத்து விடுகிறது. இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் ஈரோடு கதிர் அவர்களின் வலைப்பக்கத்தில் ஏற்கெனவே வலம் வந்து ஏராளமான ’லைக்ஸ்’களையும், எக்கச்சக்க ஒற்றைவரி ’கமெண்ட்ஸ்’களையும் பெற்றிருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.


தனக்கென ஒரு தனித்துவத்தையும், எளிமையான எழுத்து நடையையும் உள்ளடக்கியிருக்கும் இந்நூலைக் ’கட்டுரைத் தொகுப்பு’ என்று கூறுவதைவிட ‘நினைவுக் குறிப்புகள்’ என்றோ ‘நாட்குறிப்புப் பதிவுகள்’ என்றோ எடுத்தவுடனே சொல்லி விடலாம். ஏனென்றால் இதில் இடம் பெற்றிருக்கும் அத்தனை நிகழ்வுகளும் இந்நூல் ஆசிரியரின் அனுபவமாயும், எண்ண ஓட்டமாயும், ஒரு சிலவற்றைத் தவிற மற்றவை ரத்த உறவுகள் சார்ந்தவர்கள் உடனான நினைவுகளை மீள் ஆய்வு செய்வதுமாய் நகர்கிறது.
நிதானித்து வாசிக்கும்போது நூல் ஆசிரியரின் சுய அனுபவங்களின் தழும்பல் போல் தெரிந்தாலும், கூடவே, வாசிப்பாளர்கள் அன்றாட வாழ்வில் சிலவற்றைக் கவனித்தும் சிலவற்றைக் கவனிக்க நேரமில்லாமலும் கடந்து வந்ததை நினைவு கூர்வதாய் அமைந்திருக்கிறது. இது போதாதென்று, கவித்துவமான வார்த்தைகளும், தத்துவார்த்த வரிகளும் வழி நெடுகிலும் வரிசைகட்டி நின்று வலம் சேர்க்கிறது.
ஒருவேளை, வரிகளை வளைத்து நெளித்து, வார்த்தைகளை வரிசையாய் அடுக்கி, வகைப்படுத்தியிருந்தால் இப்புத்தகம் கவிதைத் தொகுப்பாய்க்கூட மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு வரியும் கவிதை நயம்.
தலைப்பிற்கேற்ற கட்டுரையும், கட்டுரைக்கேற்ற தலைப்பும் பொருந்திப்போக இந்நூலாசிரியர் ஈரோடு கதிர் நெடுநேரம் மெனக்கெட்டு மல்லுக்கட்டியிருப்பது தெளிவாய்த் தெரிகிறது. பேச்சாற்றல் கொண்டவர் என்பதால் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை வாசகருக்கு சலிப்பேற்படாமல் இருக்க, தமிழ் மொழியை சிறுக சிறுக செதுக்கி இருக்கிறார். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
பயணங்களில் பெற்ற அனுபவங்கள் ஒரு புறம் என்றால், குடும்ப உறவுகளுக்குள் நிகழ்ந்த சுக துக்கங்களை எதார்த்தமாய்ப் பகிர்ந்து கொள்கிறார். தன்னம்பிக்கை சார்ந்த விசயங்களுக்கு வியாக்யானம் சொல்லும் அதே வேளையில் இன்றைய இளம் தலைமுறையினர் இப்போது பெற்றுக்கொண்டிருப்பதையும் இழந்து கொண்டிருப்பதையும் கவலை தோய்ந்த குரலில் காட்சிப்படுத்துகிறார்.
அப்படியே போகிற போக்கில், விடுமுறை நாட்களில் இன்றைய விடலைகளின் விவேகமற்ற வேகத்தை வியப்புடன் விவரிக்கிறார். அதை பெருமை என்று அங்கீகரிக்கும் பெற்றோர்களின் பொறுப்பற்ற தன்மைக்குச் செல்லமாய் சூடு வைக்கிறார். 
’எது எப்படிப் போனால் என்ன’ என்று வெறுமெனே இல்லாமல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒரு அதிகாரியின் இறுதி நாளை உணர்வுப் பூர்வமாய் பதிவிட்டு உதிர்ந்து போகும் அதிகார இறகுகளை சேகரித்து எது சரி எது தவறு என்பதை விமர்சிக்கிறார்.
பொருந்தா உறவுகளில் சிக்குண்டு கிடக்கும் தாம்பத்திய உறவுகளுக்கு ”ஏதோ ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு முயற்சி, ஒரு காட்சி, ஒரு நிகழ்வு, ஒரு திரைப்படக் காட்சி போதுமாய் இருக்கிறது புரட்டிப்போட” என்பதைச் சுட்டிக்காட்ட ‘பிரணயம்’ என்ற மலையாளப் படத்தின் மையக்கருவை சாறு பிழிந்து பருகத் தருகிறார். முடிவை வழக்கம் போல் நம்மிடமே விட்டுவிடுகிறார்.
வழக்கொழிந்து கொண்டிருக்கும் ஊர் (தேர்) திருவிழாக்களின் உன்னதத்தை ஏக்கத்துடன் விவரிக்கிறார். அதன் நினைவுகளிலிருந்து மீள்வதற்குள் பள்ளிப் படிப்பிற்குள் பிடித்துத் தள்ளப்படும் பால் மணம் மாறா பாலகனின் பரிதாபத்தையும் சேட்டையையும் இயல்பாய் கடக்கச் செய்கிறார்.
செல் போனில் எளிதாய் வலம் வரும் அபத்தமான ஆபாச சுயபடங்களுக்கு ‘உச்’ கொட்ட வைக்கிறார். அடுத்தடுத்து வரும் கட்டுரைகளில், தொடர் வண்டியில், ஏதோ ஒரு சூழ்நிலையால் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கும் மனிதத் தலைகளையும், அவர்கள் தேடும் மனிதங்களையும் படம்பிடித்துக் காட்டுகிறார்.
அடைமழையின் அழகை எப்படி ரசித்தாலும் தகும் என்பதை அழகியல் தன்மையுடன் வர்ணிக்கும் நூல் ஆசிரியர், பின் வரும் கட்டுரையில் தன் ஆயா (பாட்டி) வுடனான நினைவுகளில் மூச்சு முட்டி மேலெழுந்து வரும் வரை மூழ்கிக் கிடக்கிறார்.
தன் சிங்கப்பூர் பயணத்தில் கண்டு பிரமித்த கூறுகளையும் கட்டுக்கோப்பையும் அழுத்தமாய் பதிவுசெய்கிறார். இது போன்ற கட்டுரைகளை மட்டும் தொகுத்து ’பயணக்கட்டுரை’ என்று தனிப் புத்தகம் வெளியிட முயற்சிக்கலாம். ஏனென்றால் தற்போது தமிழில் பயணக்கட்டுரை எழுதுபவர்களின் இடம் காலியாய் இருக்கிறது.
அவ்வப்போது பள்ளி செல்லும் குழந்தைகளின் உளவியல் சிக்கலுக்குத் தீர்வு தேட முயற்சிக்கிறார். ’தங்கத்தில் செய்தாலும் கூண்டு என்பது சிறைதானே’ என்ற பழைய சொல்லாடலுக்கு புது விளக்கம் தர முயற்சிக்கிறார்.
தான் ஒரு விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவன் என்பதை வரிந்துகட்டிச் சொல்ல ஒற்றைக் கட்டுரை போதுமானதாய் இருக்கிறது. இக்கட்டுரையின் தலைப்பையே புத்தகத்தின் தலைப்பாகவும் தேர்ந்தெடுத்து பெருமை சேர்த்திருக்கிறார். இன்றைய பரபரப்பான நகரத்தின் நடுவில் வயல் வெளியையோ அதன் வாழ்வியல் சுகத்தையோ கண்டிராத இளம் தலைமுறையினருக்கு, கடைகளில் காசு கொடுத்தால் கிடைக்கும் அரிசி, தான் உண்ணும் உணவுத் தட்டுக்கு வருவதற்குள் எத்தனை பேரின் வியர்வைத் துளிகளை சுமந்து வருகிறது என்பதை விலாவாரியாக விவரிக்கிறார்.
நெல் நடவு செய்ய நிலத்தை பாந்தமாய் தயார் செய்வதில் தொடங்கி, ஈரத்தில் உறங்கும் நெல், சூரியனின் ஒளியால் பிறப்பெடுப்பதை விளக்கி, எலிகளை விரட்டி, சேற்று வயலாடி, வரப்புகளைச் செதுக்கிச் சேறு பூசி, நாற்றங்காலில் வேர் அறுபடாமல் பிடுங்கப்பட்ட நாற்றுகளை, சமன் செய்யப்பட்ட சேற்று வயலில் நடவு செய்து, சீரான இடைவெளியில் நீர் பாய்ச்சி, உரம் போட்டு, களை பிடுங்கி, முதலில் கதிர் விடும் நெல்லுக்குள் இருக்கும் பால் அரிசியைக் கண்டு பரவசம் கொண்டு, பச்சை நிற நெல், தங்க நிறமாக மாறும் வரை காத்திருந்து, அறுவடை செய்து, பின், களத்தில் நெல்லையும், வைக்கோலையும் பிரித்தெடுக்க மாடுகட்டிப் போரடித்து என்று சிறுக சிறுக சேகரிக்கப்பட்ட நெல் வீடு வந்து சேரும்வரை நிகழ்த்தப்படும் பொறுமையையும், அதன் பெருமையையும், அழகாகவும் அதன் சாராம்சத்தை ஆழமாயும் பதிவிட்டு இன்றைய இளைஞர்களுக்கு விவசாயத்தின் கூறுகளை பறைசாற்றுகிறார்.
தொடர்ந்து வரும் கட்டுரைகளில் உரையாடலின் மகத்துவத்தையும், நலம் விசாரித்தல் எந்த வகையைச் சாரும் என்பதையும் உற்று நோக்க வைக்கிறார். நுங்கு வண்டி ஓட்டி விளையாடிய பால்ய வயதை நினைவுகூர்கிறார். இருளுக்குள் ஒளிந்து கிடக்கும் அமைதியையும், அதன் ரூபத்தையும் ‘இருட்டு’ என்னும் கவிதையில் ரசிக்கிறார்.
குப்பை பொறுக்கும் பெண்மணி, ஐந்தறிவு ஜீவன் மேல் கொள்ளும் இளகிய மனதை இயல்பாய் சொல்லி வாசிப்பாளர் மனதிற்குள் ஊடுருவி ஈரம் சுரக்க வைக்கிறார்.
இப்படி எராளமாய், நினைவுகளையும், நிஜங்களையும், புனைவுகள் இல்லாமல் எட்ட நின்று, சாட்சி சொல்வது போல் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், உபயோகித்தெறியும் ‘யூஸ் அன் த்ரோ’ பொருட்களின் எச்சத்தை என்ன செய்வதெனக் கேட்டும், மரணத்தின் வலியை உரக்க உணர்த்தியும், அழுகையின் சுகத்தை உலகத்தரத்தோடு ஒப்பிட்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் வேறு வேறு உலகத்திற்குள் மாறி மாறி உலவ வைக்கிறார்.
போகிற போக்கில், எந்தக் கட்டுரை எதை வலியுறுத்துகிறது என்று நிமிர்ந்து நிதானிப்பதற்குள், விழுமியமில்லாமல் வாழும் வாழ்க்கையையும், சமூகத்தின் ஊடே நம் பங்கு என்ன என்பதை வலியுறுத்தியும், வேரிலிருந்து கிளம்பி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கி வளர்ந்து நிற்கும் மரத்தின் கிளைகளைப்போல், ஒவ்வொரு கட்டுரையும், வேறு வேறு நிகழ்வுகளையும், சமகால மனிதர்கள் சந்திக்கும் விதவிதமான வன்மத்தையும் தொகுத்து வெளிவந்திருக்கிறது.
சில இடங்களில் மிகப் பரிட்சையமாய் தெரியும் ஈரோடு கதிரின் எழுத்துக்கள், வார்த்தைகளிலிருந்து வரிகளாய் வழுக்கிச் செல்லும்போது வறண்ட மனங்களை ஈரப்படுத்தியும், காலி நினைவுகளை நிதர்சனத்தால் நிரப்பியும், ஆங்காங்கே படபடப்பை திணித்தும், ஏக்கங்களை எரியவிட்டும், எக்கச்சக்க உணர்வுக் கலவையை உருண்டையாக்கி உருளவைத்தும், பன்முகத் தன்மையின் படிமங்களைக் காட்டியும் செல்கிறது.
ஒருமுறைக்கு இருமுறை வாசித்தும், ‘எப்படி இருக்கிறது இந்நூல்? என்று யாரேனும் கேட்டால் ‘ம்….பரவாயில்லை’ என்றோ ‘ம்….சூப்பராய் இருக்கு’ என்றோ ‘ப்ச்…ஒண்ணும் பெரிசா இல்லப்பா….’ என்றோ ஒற்றைவரியில் சொல்ல முடியவில்லை. ’இந்தாங்க இதை ஒரு முறை வாசித்துப் பாருங்கள். பிறகு சொல்லுங்கள் என்று தப்பித்துக் கொள்ளவே என்னை இப்புத்தகம் செய்ய வைத்திருக்கிறது.
சற்றேரக்குறைய, இப்புத்தகத்திற்கு (இந்தக் கட்டுரைத் தொகுப்பிற்கு) என் பார்வையிலிருந்து விமர்சனம் செய்தால் எப்படி இருக்கும் என்ற பிடிவாத எண்ணத்தில் உதித்து உயிர் பெற்றதுதான் இந்த விமர்சனக் கட்டுரை. அன்பர்களே, ‘கிளையிலிருந்து வேர் வரை’ புத்தகத்தை ஏற்கெனவே வாசித்தவர்கள், முடிந்தால் மேலும் ஒரு விரிவான விமர்சனத்தை முன் வைக்கவும். அது என்னைப் போன்ற ஆர்வலர்களை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல ஏதுவாய் இருக்கும்.

-

கீற்று இணையதளத்தில் திரு. வே.சங்கர் அவர்கள் எழுதிய விமர்சனம்