அதகளமாய் நிலங்களைக் கையகப்படுத்தி, எல்லாவற்றையும் இடித்துச் சிதைத்து, எல்லாவற்றிலும் மண் நிரப்பி, எந்திரங்களால் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை இரண்டு பெரிய, இரண்டு சிறிய பட்டைக் கோடுகளாக நீண்டு கிடக்கிறது. எங்கள் பகுதியில் சேலத்திலிருந்து துவங்கிய தேசியநெடுஞ்சாலை 47 செங்கப்பள்ளிவரை 100 கி.மீ தூரத்திற்கு நீண்டு விரிந்து கிடக்கிறது ஒரு பசியெடுத்த பாம்பு போல. காலம்காலமாய் புழங்கியவனைக்கூட அந்நியப்படுத்திவிட்டு, அவன் புழங்கவும் காசு கேட்க நவீனத் தடுப்பு, கணினி துப்பும் துண்டுச் சீட்டு என சுங்கம் வைத்து சுகமாய் வசூலித்துக்கொண்டு சுறுசுறுப்பாய் ஓட்டச் சொல்லி அடிமைப் படுத்துகிறது மிகப் பெரிய நிறுவன முதலைகள்.
சமீபத்தில் அமைக்கப்பட்ட நான்குவழிச் சாலையில் கேவலமான ஒரு வடிவமைப்பு என்றால், யோசனைகள் இன்றி 47ம் எண் தேசிய நெடுஞ்சாலைக்கு விருது கொடுக்கலாம். சேலத்தில் முறுக்குச் சுத்துவது போல் சுற்றி மேற்கு நோக்கி துப்பும் தேசிய நெடுஞ்சாலையின் முதல் கோணலாய் திருச்செங்கோட்டுக்குப் பிரியும் வீரபாண்டிப் பிரிவில் மேம்பாலம் இன்றி எமனின் சமையல் கூடமாய் விரிந்து கிடக்கிறது. அடுத்தடுத்து ஊர்களுக்கு அருகே அமைக்கப்பட்டிருக்க வேண்டிய பக்கவாட்டுச் சாலைகள் ஆங்காங்கே கட்டமைக்கப்படாமல் அல்லது அமைக்கும் திட்டமே அற்று குழப்பத்தோடு கிடக்கிறது.
குறிப்பாக சங்ககிரிக்குப் பிரியும் இடத்தை ஒரு பொடக்காலி சந்துபோல்,, போனால் போகிறதென்று எந்த இடத்தில் பிரிகிறது என்றே தெரியாமல் அமைத்திருக்கும் பெருமையை என்னவென்று சொல்வது. பக்கவாட்டுப் பிரிவுச் சாலைய கவனிக்கத் தவறினால் சங்ககிரி, ஈரோடு பிரிவு என எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு ஏழெட்டு கி.மீ தாண்டிதான் சங்ககிரியைத் தொலைத்த நினைவே வரும்.
அடுத்து காவிரி ஆற்றுப்பாலம் அருகில் குமாரபாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் வலது பக்கம் திரும்ப பக்கவாட்டு இணைப்புச் சாலை இல்லாததால் சேலம் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்று உயிரைக் கையில் பிடித்து வலது பக்கம் அரைவட்டமாகத் திரும்பி, அதன் பின் இடதுபக்கச் சாலையில் தடம் பதித்து வருவதற்குள் சேலம் நோக்கிச் செல்லும் வாகனத்தில் பட்டுச் சிதறாமல் இருந்தால் அது உங்கள் தலைமுறை செய்த புண்ணியம்.
அடுத்து லட்சுமி நகர் வட்டச் சந்திப்பைக் கடந்து பாலம் ஏறும் முன் இடதுபக்கமாய் ஈரோட்டுக்குப் பிரிய முட்டாள் தனமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒற்றைச் சாலையில் பிரியத் துணியும் வாகனங்களில் உரசாமல், தப்பித்து பாலம் ஏறினால்தான் கொஞ்சம் சுகமாய் சுவாசிக்க முடியும். அதே இடத்தில் ஈரோட்டிலிருந்து அக்ஹரகாரம் வழியாக வரும் வாகனங்கள் எதும் கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தங்களை இணைத்துக்கொள்ள பக்கவாட்டு இணைப்புச் சாலை இல்லை. அப்படியே இணைய வேண்டிய தேவை இருப்பின் ரொம்ப தூரம் மேட்டூர் பிரிவுச் சாலையில் சென்று லட்சுமி நகர் வட்டத்தில் சுற்றி மீண்டும் வருவதற்குள் தோன்றும் “இந்த மசிருக்காடா, ரோடு போட்டு காசு புடுங்கறீங்க”ன்னு
இந்தப்பெருமைக்குரிய சாலையை அமைத்த புண்ணியவான்கள் IVRCL நிறுவத்தினர். இவர்களேதான் இப்போது செங்கப்பள்ளியிலிருந்து வாளையார் வரை சாலை அமைக்கும் பணியில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். IVRCL நிறுவனம் 47ம் எண் தேசிய நெடுஞ்சாலையில் அமைத்தது போன்ற அயோக்கியத்தனம் வேறு ஏதும் நாற்கரச் சாலைகளில் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. பவானி லட்சுமி நகர் அருகே இருக்கும் இரண்டு மேம்பாலம், காவிரியில் ஒரு பாலம் என IVRCL நிறுவனத்திற்காக பாலங்களை அமைத்தது ஆந்திராவைச் சார்ந்த KNR Construction நிறுவனம். இதில் ஈரோடு சாலை இணைப்பிற்காக காளிங்கராயன் வாய்க்கால் அருகே அமைக்கப்பட்ட பாலம் நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்குகளால் காலம் தாழ்ந்து இறுதியாக சுங்கச் சாவடிகள் அமைத்து வசூல் துவங்கி பிறகு அவசர அவசரமாய் அமைக்கப்பட்டது.
ஏனோதானோவென்று அமைத்ததின் பலன் வெறும் ஓராண்டுக்குள் தெரிந்துவிட்டது. கடந்தவாரம் அந்தப் பாலத்தில் விழுந்த ஒரு பெரிய பள்ளத்தையொட்டி பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதனால் பால முகப்பில் ஏனோதானோவென்று தடுப்புகள் வைத்து வெறும் அம்புக்குறிகள் மூலம் ஈரோடு பிரிவு ஒற்றைச் சாலையில் திருப்பிவிடப்பட்டு, மீண்டும் பாலத்தின் அடியில் புகுந்து எதிர்பக்கச் சாலையில் இணைந்து பாலத்தைக் கடந்து, இடது பக்கச் சாலையில் இணைகிறது. இதற்காக எதிர்ப்பக்கச் சாலையும் அதேபோல் அம்புக்குறி பலகைகளால் மூடப்பட்டு, வரும் வாகனங்கள் அருகில் இருக்கும் அரசு போக்குவரத்து பணிமனையொட்டிய பக்கவாட்டு ஒற்றைச் சாலை மூலம் நெடுஞ்சாலையில் இணைக்கப்படுகிறது.
ஏனோதானோவென்று அமைத்ததின் பலன் வெறும் ஓராண்டுக்குள் தெரிந்துவிட்டது. கடந்தவாரம் அந்தப் பாலத்தில் விழுந்த ஒரு பெரிய பள்ளத்தையொட்டி பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதனால் பால முகப்பில் ஏனோதானோவென்று தடுப்புகள் வைத்து வெறும் அம்புக்குறிகள் மூலம் ஈரோடு பிரிவு ஒற்றைச் சாலையில் திருப்பிவிடப்பட்டு, மீண்டும் பாலத்தின் அடியில் புகுந்து எதிர்பக்கச் சாலையில் இணைந்து பாலத்தைக் கடந்து, இடது பக்கச் சாலையில் இணைகிறது. இதற்காக எதிர்ப்பக்கச் சாலையும் அதேபோல் அம்புக்குறி பலகைகளால் மூடப்பட்டு, வரும் வாகனங்கள் அருகில் இருக்கும் அரசு போக்குவரத்து பணிமனையொட்டிய பக்கவாட்டு ஒற்றைச் சாலை மூலம் நெடுஞ்சாலையில் இணைக்கப்படுகிறது.
பழுதடைந்த பாலம் மூடப்பட்டதாலே நெடுஞ்சாலையில் காசும் கொடுத்துப் பயணப்படும் தங்களை காவு கொடுக்கும் நிலை நடந்து கொண்டேயிருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன், ஓசூரிலிருந்து திருப்பூர் நோக்கிப் பத்தாயிரம் செங்கற்களுடன் வந்த பெரிய சரக்குந்து, பழுதடைந்த பாலத்தின் முகப்புவரை வேகமாய் வந்து அம்புக்குறியிட்ட பலகையைக் கண்டு அதிர்ந்து இடதுபக்க ஒற்றைச் சாலைக்குத் திரும்ப, திரும்பிய வேகத்தில் வலதுப்பக்கமாய்ச் சரிய தப்பிக்கலாம் என நினைத்து குதித்த ஓட்டுனர், செங்கல் இறக்க வண்டி மேல் உட்கார்ந்திருந்த தம்பதி என மூன்று பேர் செங்கற்களுக்குள் சிக்கி நசுங்கி மரணம். அவர்களோடு வந்த சிறுவன் மட்டும் தாய் தந்தையரை இழந்து அனாதையாய் மாறிப்போனான் அந்த 11 மணி இரவு நேரத்தில்.
எல்லா விபத்துகளும் சாவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து சுவாரஸ்யங்களின் அடர்த்தி கொண்ட சம்பவங்களாக மாறிப்போன சமகாலத்தில் தேசிய நெடுஞ்சாலை அகோர உயிர்ப் பசியோடு காத்திருப்பது, சாகும் தருணம் வரை தெரிவதேயில்லை.
நகரத்திற்காக உருவாக்கப்பட்ட புறவழிச் சாலைப் பகுதி கிராமத்து மக்கள், தங்கள் ஒற்றைச் சாலையின் குறுக்கே ஆங்காரமாய் நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலையைக் கடக்கும் வித்தை தெரியாமல் தொடர்ந்து தொடந்து செத்துக் கொண்டேயிருக்கின்றனர். நாற்கரச் சாலையின் முகப்பில் ஏறும் வாகனங்களுக்கு இறக்கைகளும், கொம்புகளும் முளைத்துக் கொள்கின்றன.
சுங்கச் சாவடியில் காசு கொடுத்த பின் கூடுதல் வன்மம் அந்த சாலைமேல் உருவாகிறது, ”இது எங்கப்பனூட்டு ரோடுடா” என்பது போல், குறுகிய சாலைகளுக்குள் நெரிசலில் அறுபட்ட அழுத்தமும், போய்த்தான் பார்போமே என வேக முடுக்கியை அழுத்தும் ஆர்வமும் வேக காட்டியில் இருக்கும் அதிகபட்ச எண்ணைத்தொட தூண்டத்தான் செய்கிறது.
இந்திய வாகனங்களுக்கு, இந்தியர்களின் இங்கிதமற்ற வேகத்திற்கு ஈடுகொடுக்கும் பிடிமானத்தோடு அமைக்கப்பட்டிராத சாலைகளில் மிக மிக எளிதாக விபத்துகள் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. நாற்கரச் சாலைகளில் 200கி.மீ தூரம் நீங்கள் பயணித்தால் குறைந்தது ஐந்து இடங்களில் வாகனம் அடிபட்டோ, உருண்டு சிதைந்தோ கிடப்பதை அறிய முடியும். இத்தனைக்கும், சுங்கம் வசூலிக்கும் நிறுவனம், தாங்கள் வசூலிக்கும் சாலையில் அடிப்பட்டுக் கிடக்கும் வாகனத்தை உடனுக்குடன் அப்புறப்படுத்தியும் கூட எப்போதும் அந்தச் சராசரியான 5 வாகனங்கள் அகோரமாய் கிடந்துகொண்டேதான் இருக்கின்றன.
யாருடைய நிலத்தையோ கையகப்படுத்தி, யாரோ பணக்கார நிறுவனங்கள் மூலம், மேல்தட்டு தொழில் வியாபாரிகள் விரைவாக நகர தேசமுழுதும் சாலையமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்திற்கு தினம் தினம் அடிபட்டு சிதைந்து, ஒட்டுமொத்தக் குடும்பத்தை சிதைத்தெடுக்கும் மரணங்கள் வெறும் பெட்டிச் செய்தியாகவே போய்விடுகின்றன.
பொறுப்பி : படங்கள் வெவ்வேறு தருணங்களில் எடுக்கப்பட்டது
-0-