ஏந்தான் இவனக் கட்டிக்கிட்டனோ?


உழவன் நகர் வழியே ஒரு குறுகிய சந்தில் புகுந்து வலது பக்கம் திரும்பி, இடது பக்கம் திரும்பினால் டீச்சர்ஸ் காலனி வந்துவிடும். மதியம் 3.30 ஆகிவிட்டது. கடும் பசி. டீச்சர்ஸ் காலனிக்கு திரும்பும் இடத்தில் பார்த்தேன். ஒரு சிவப்பு கலர் சுசுகி பைக் நின்று கொண்டிருந்தது. ஒடிசலான ஒரு பையனும் பெண்ணும் உரத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்தான் பேசிக்கொண்டிருந்தாள். பார்த்தவுடனே தெரிந்துவிட்டது சண்டை என்பது. இருவருக்கும் வயது 20-25 க்குள் இருக்கலாம். அக்கம் பக்கம் யாரும் இருக்கிறார்களா எனப் பார்த்தேன். வலது பக்க காலி இடத்தில் நாலைந்து சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

எப்போதாவது இதுபோல் காண்பதுண்டு. பெரும்பாலும் அக்கம்பக்கம் ஆட்கள் இருப்பார்கள். பெரும்பாலும் நான் கடந்துபோய் விடுவதுண்டு. நின்று ஒருமுறை கூட வேடிக்கை பார்த்ததில்லை. இன்றைக்கும் கடந்துபோய்விட்டேன். கடக்கும்போது

”என் பையனைக் குட்றா நீ” என அந்தப் பெண் கத்திக் கொண்டிருந்தாள்.

அந்தக் குரல் ஏதோ இம்சைப் படுத்தியது. ஒரு பத்து பதினைந்தடி கடந்துவிட்டேன். ’நிற்கலாமா? போலாமா?’ என மனது ஊசலாடியது. அந்த நொடிகளில் இரண்டு வண்டிகள் திரும்பிப் பார்த்துக்கொண்டே கடந்தன. நின்றுவிட்டேன். மீண்டும் சுற்றிலும் பார்த்தேன் அந்த சிறுவர்களைத் தவிர யாருமில்லை. அப்படியே நின்றுகொண்டு அவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த ஆள் பைக்கில் உட்கார்ந்த்து கிளம்ப முயற்சி செய்துகொண்டிருக்க, அந்தப் பெண் அந்த ஆளை இழுத்துக் கொண்டிருந்தாள். நான் நின்று கொண்டு வேடிக்கைப் பார்ப்பதைப் பார்த்தோ என்னவோ, இன்னும் இரண்டு வண்டிகளும் நின்றன. அவர்களைச் சுற்றி ஃ வடிவில் இப்போது மூன்று வண்டிகளில் சண்டையை கவனிக்கத் துவங்கிவிட்ட மாதிரி தோன்றியது.

யாரும் அருகில் வரவோ, என்ன ஏது என்றோ விசாரிக்க முற்படவில்லை. அந்தப் பெண் அந்த ஆளை உலுக்கிக் கொண்டிருந்தாள். சட்டென பைக்கை சைடு ஸ்டேட்ண்ட் போட்டவன், ”நீயே வண்டிய வெச்சுக்க” எனச் சொல்லிவிட்டு அவளின் பிடியிலிருந்து இழுத்துக்கொண்டு நடக்க முற்பட்டான். அவள் சட்டையைப் பிடித்து இழுக்க பட்டன்கள் கழன்று வந்தன. திரும்பி அவளைப் பிடித்து தள்ளினான். பின்வாங்கிய அவள் அவன் மீது பாய்ந்தாள். திருப்பி அவன் அடித்தால் அவள் தாங்கமாட்டாள் எனத் தோன்றியது. சட்டென என் பைக் சாவியை எடுத்துக்கொண்டு அவர்களை நோக்கி நடந்தேன். என்னைக் கவனித்த அந்த ஆள் கொஞ்சம் நிதானித்தான். நான் அவர்களை நோக்கி நகர்வதைக் கண்ட மற்ற இரண்டு பைக் ஆட்களும் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அருகில் வரத்துவங்கினர். இதுதான் மனித சைக்காலஜி போல எனத் தோன்றியது.

“ஏப்பா... என்ன பிரச்சனை. ஏன் இங்கே சண்டை போடுறீங்க” என்றேன்

”நாங்க என்ன பண்ணினா, உனக்கென்ன?” என அந்த ஆள் கேட்டுவிடுவானோ என்றும் மனதில் ஓடாமல் இல்லை.

அவன் அப்படிக் கேட்கவில்லை.

”எம் பையன வெச்சுகிட்டு தரமாட்டங்றானுங்ண்ணா?” என அழுதுகொண்டே அந்த ஆளை இழுத்துக்கொண்டிருந்தாள்.

”அந்த ஆள் உனக்கென்னம்மா வேணும்?”

”அந்தாளு என் பொண்டாண்டிங்க” என்றாள் பதட்டத்தில்

கணவன் மனைவி எனப் புரிந்தது.

”வீடு எங்கப்பா?”

”பாசூர்ங்க” என முனகினான்

”சரி இங்கே ஏன் சண்டை போடுறீங்க”

”என் பையன வெச்சிக்கிட்டு தரமாட்டேங்கிறாங்ண்ணா... எம் பையனக் குட்றா நான் போயிடுறேன்” அழுதுகொண்டேயிருந்தாள்

”ஒன்னோட வீடு எங்கம்மா”

”கரூர்ங்க”

கரூரா, அவரு பாசூர்ங்கிறாரு... அப்புறம் இங்கே என்ன பண்றீங்க”

“கரூர் இல்லை... இங்கே சூரம்பட்டிதான்” என்றான் அந்தப் பையன்

”யோவ் அடிக்கடி உங்களப் பார்க்கிறேன்... வீட்டுக்கு வண்டியை விடுய்யா” என்றார் பின்பக்கம் இருந்துவந்த பைக்காரார்.

“அப்பா, அம்மா எல்லாம் எங்க இருக்காங்க?”

“எல்லாத்தையும் வுட்டுட்டு இவங்கூட ஓடியாந்தேனுங்க. ஏந்தான் இவன கட்டிக்கிட்டனோ? எம் பையனக் குடுத்துட்டான்னா நான் போயிறுவேன்”

”வா.... உன்னை தொலைச்சுக் கட்டிடுறேன்” என்றவாறு பைக்கை ஸ்டார்ட் செய்தான் அந்தப் பையன்.

”உங்கூட எவ பொழைப்பா, என் பையனைக் குடு, நான் நிம்மதியா இருந்துக்குறேன்” என்றவாறு பைக்கின் பின்னால் இரண்டு பக்கம் கால் போட்டு அமர்ந்த நொடியில் பைக்கை சீறவிட்டான். அந்த பைக்காரர் அவர்களை விடாமல் துரத்தினார். சில நொடிகளில் கண்களிலிருந்து மறைந்து போயினர்.

இது கொஞ்சம் நேரிடையாக பொதுவிடத்தில் கண்ட உதாரணம். ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் எத்தனையெத்தனை உரசல்கள் இப்பொழுதெல்லாம். சமீபத்தில் கணவன்-மனைவிக்கிடையேயான சண்டையின் உக்கிரத்தில் தகித்த ஒரு குழந்தை எடுத்த முடிவு குறித்த என் கவிதையை வாசித்துவிட்டு இது அனுபவமா என ஒரு கேட்டபோது சிரித்துக்கொண்டே ”வீட்டுக்கு வீடு வாசப்படி” என மொக்கையாகவும் தத்துவமாகவும் சொல்லி நகர்ந்தேன்.

படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது


எப்போதோ எழுதிய “ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் பிடிக்கின்றது. கணவனுக்கு மனைவியையும், மனைவிக்கு கணவனையும்தான் பிடிப்பதில்லை பாவம்!” எனும் வரிகள் நினைவிற்கு வந்துபோகிறது.

மனிதனுக்கு ஒரு காலத்தில் விலங்குகளே அச்சமூட்டுபவையாக இருந்தன. அதற்காகவே ஆயுதங்களைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கலாம். காலம் மலையேறிவிட்டது. மனிதனுக்கு மனிதன் எதிரியாக மாறிய காலமும் கடந்து, காதல் கொண்டு கசிந்துருகி, நேசித்து, கலவி கொண்டு, எல்லாம் தந்து, எடுத்து எனப்பவும் கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் எதிரிகளாக மாறிவிட்ட காலத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வளர்ந்ததாக மெச்சிக்கொள்ளும் சமூகம் எதையெதையோ சரிசெய்ய அறிவியலின் உதவியால் கருவிகள் படைக்கத் துடித்து, தவித்து, செய்து கொண்டிருக்கிறது. உறவுகளை உடைத்துப்போடும் சாத்தானைத் தகர்த்துவிட ஒரு கருவி செய்ய முனைந்திடவில்லையா அல்லது விரும்பவில்லையா என்பது புரியவில்லை.

உறவுகளின் அருமையை யாரும் உணராமல் இல்லை. அதேசமயம் உறவுகளில் முறுக்கி முறுக்கி ஒரு கட்டத்தில் உடைத்துக்கொள்வதில் என்ன சாதிக்கப்போகிறோம் என்றும் தெரியவில்லை. இது ஒரு மேலோட்டமான பார்வைதான். மிக மேலோட்டமான அலசல்தான். இல்லையென மறுக்கவில்லை.

அவரவர் முடிவு அவரவர்க்கு. அவரவர் வலி அவரவர்க்கு. ஆயினும் இனம்புரியா கேள்விகள் ஆயிரமாயிரம் துளைத்துக் கொண்டேயிருக்கின்றது. விடைதேடுதல் புத்திசாலித்தனமா? முட்டாள்தனமா? என்பதும் அவரவர் முடிவே.


-

பொதிகைக்குப் போயிருந்தேன்

நான் கவியரங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நீண்ட வருடங்களாகிவிட்டது. கலந்துகொண்ட என்றால் வேடிக்கை பார்த்து என மட்டுமே பொருள் கொள்ளவேண்டும். அந்த நிலையில் கடந்த ஆண்டு ஈரோடு CKK அறக்கட்டளை நடத்திய கவியரங்கத்தில் கவிஞர் சக்திஜோதி கலந்துகொள்ள வந்திருந்தார். நிகழ்ச்சிக்கு முந்தையநாள் இரவு சிவரஞ்சனி ஓட்டலில் தங்கியிருந்த அவரைச் சந்திக்கச் சென்றபோதுதான்மரபின்மைந்தன்” முத்தையாவையும், ”இசைக்கவி” ரமணன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. சில நிமிட சந்திப்புதான்.

 
பார்த்தவுடன் முத்தையா கேட்டார்உங்களை எங்கேயே பார்த்திருக்கேனே!?”
சிரித்துக்கொண்டேஃபேஸ்புக்லங்க. உங்க ஃப்ரெண்ட் லிஸ்ட்ல நானும் இருக்கேன்என்றேன்

அருகில் இருந்த ரமணன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிய சில நொடிகளில் உணர்த்திய உற்சாகத்தினை நான் கவனிக்கத் தவறவில்லை. அடுத்த நாள் கவியரங்கத்தில்வெளிப்படும் வேளை’ என்றும் தலைப்பில் வேவ்வேறு நிலைகளை உணர்த்தி எல்லோரும் கவிதைகள் வாசித்தார்கள். ரமணன் அவர்கள் கவிதை வாசிக்கும் முன் பாடியகூடு செதஞ்சிருச்சே, குருவி பறந்துடுச்சேபாடல் ஒட்டுமொத்த கூட்டத்தையும் உறைய வைத்தது.
நீண்ட நாட்கள் அந்த அழுத்தமான பாடலின் உருக்கும் சூழல் மனதில் உலவிக்கொண்டேயிருந்து. மாதங்கள் நகர்ந்தன. ஒருநாள் இசைக்கவி ரமணன் அவர்களையும் ஃபேஸ்புக்கில் இனம் கண்டேன். நானும் ஒரு நட்பாக இணைந்துகொண்டேன். எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

சமீபத்தில் போட்டிருந்த ஒரு சிறு கவிதைக்கு பின்னூட்டமாகவிரைவில் சந்திப்போம் தயாராக இருங்கள்எனப் பின்னூட்டமிட்டிருந்தார். எதற்காக அந்தப் பின்னூட்டம் எனப் புரியவில்லை. நானும் வழக்கம்போல்(!) அந்தப் பின்னூட்டத்திற்கும் ஒரு like போட்டுவிட்டு கடந்துவிட்டேன்.

சிலநாட்கள் கழித்து, பொதிகை தொலைக்காட்சியில் நடக்கும்கொஞ்சம் கவிதை, கொஞ்சம் தேநீர்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டார். விபரக் குறிப்புகளையும் அனுப்பக் கேட்டார். பின்னர் நிகழ்ச்சி தேதி சொல்வதாகவும் சொன்னார். Youtubeல் ஏற்கனவேகொஞ்சம் கவிதை, கொஞ்சம் தேநீர்நிகழ்ச்சியைக் கண்டிருந்தாலும், அவர்கள் அனைவருமே ஓரளவு அறிந்த கவிஞர்களாக இருந்தார்கள். புத்தகம் வெளியிட்டவர்களாகவும் இருந்தார்கள். சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேச அழைத்தபோதுகூட அங்கு சந்தித்த நண்பர் ஒருவர்எத்தனை புத்தகங்கள் போட்டிருக்கீங்க?எனக் கேட்டார். “”புத்தகம் எதுவும் போடலைங்கஎன நான் சொன்னது ஏமாற்றத்தையோ, ஆச்சரியத்தையோ உருவாக்கியிருந்ததை அவர் உடல்மொழியில் கண்டுணர்ந்தேன். அதனால் புத்தகங்கள் வெளியிட்டுள்ளதாகச் சொல்லும் படைப்பாளர்களுடன் இருக்கையில், புத்தகங்கள் போடாத ஒரு ஆளாக இருப்பதில் பொதுவாகவே சிறிய ஒவ்வாமையாக நிலவுவதை உணர்ந்திருக்கிறேன்.

”26ம் தேதி பொதிகையில் ஒளிப்பதிவு நடைபெறவுள்ளது, நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்”, என்னென்ன கொண்டு வரவேண்டும் எனும் விபரங்களையும் தெளிவாக தெரிவித்தார் ரமணன்.

நிகழ்ச்சிக்காக பொதிகை நிலையத்திற்குள் நுழையும்போதுதான் தெரிந்தது. என்னோடு இன்னும் சில கவிஞர்களும் கலந்துகொள்கிறார்கள் என்று. நுழைவில் இருந்த பட்டியலில் பார்த்தால் உமாநாத் செல்வன் பெயர் மட்டும் தெரிந்த பெயராக இருந்தது. ஒரு மாதத்திற்கான நான்கு நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

ஒளிப்பதிவு துவங்கும் முன் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது, ஈரோடு CKK அறக்கட்டளை நிகழ்வில் ரமணன் அவர்கள் பாடியது குறித்து நான் பேசிய நொடியில் அவர் பாடலை மீண்டும் பாடிக் காட்டியது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.



எனக்கு முதல் அமர்வில் விழியன்() உமாநாத் உடனும், மூன்றாவது அமர்வில் முத்துக்குமார் உடனும், நான்காவது அமர்வில் கலைவாணி தாசன் அவர்களுடன் பங்கேற்கும் வாய்ப்பும் அமைந்தது. இரண்டாம் அமர்வில் முத்துக்குமரனும், அருள்நிதியும் பங்கேற்றார்கள்.

வாழ்க்கையில் முதன்முறையாக ஒளிப்பதிவிற்காக மெலிதாக ஒப்பனை செய்யவேண்டிய நொடிகளில் புதிதாய் வெட்கம் வந்துபோனது.

ஒவ்வொரு அமர்விலும் மிக அழகான பாடலுடன் துவங்கும் ரமணன், மிக எளிதாக கவிதை வாசிப்பவர்களுடன் ஊடுருவுகிறார். அந்த ஊடுருவல் ஒரு கலை போல் நிகழ்கிறது. உற்சாகமாய் புன்னைகையோடு கவிதை சொல்ல அழைக்கிறார். கவிதை குறித்த சிறு விளக்கங்களோடு கவிதைகளை வாசிக்க வாய்பளிக்கப் படுகிறது. மூன்று பேரையும் கேமாராக்கள் குறிவைத்திருப்பதை மறந்து, நிமிடங்கள் கரைவதை மறந்து நிகழ்ச்சியில் எளிதாக ஆழ்ந்துவிட இட்டுச் செல்கிறார். இடையில் தேவைப்படும் இடங்களில் தனது கவிதையாலும், பாடல் வரிகளாலும், மேற்கோள்களாலும் மிக அழகாக சமன் படுத்துகிறார். எந்த சூழலில் மிக எளிதாக கவிதையைப் பாடலாக பாடும் அவரின் வல்லமையும், நிகழ்ச்சியை மிகமிக இயல்பாக நடத்தும் திறனும் போற்றுதலுக்குரியது.

30 நிமிடங்கள் நிகழ்ச்சி என்பது கிட்டத்தட்ட ஒரு நேரலை போன்றே தீவிரமாக ஒளிப்பதிவு செய்யப்படுகிறது. தொடங்கிய நொடியிலிருந்து 30 நிமிடங்களுக்கு இடைவெளியின்றி நகர்கிறது. ஏற்கனவே எனக்கு ஜெயா தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சியிலும், சன் நியூஸ் நேரலை விவாதமேடையிலும் கலந்துகொண்ட அனுபவம் உண்டு. அவ்விரு நிகழ்ச்சிகளிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வரும் இடைவேளை நம்மை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவும். இங்கு 30 நிமிடங்களும் தொடர்ந்து நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என்பது எப்படியென மலைப்பாக இருந்தது, சில நிமிடங்களியே மறந்து போய், எப்போது 30 நிமிடங்கள் தீர்ந்தன என்ற உணர்வைத் தந்தது.
என்னோடு அடுத்தடுத்த அமர்வுகளில் கவிதைகள் பகிர்ந்த விழியனும், முத்துக்குமாரும் சிறிய கவிதைகளால் தங்கள் பங்களிப்பை இயல்பாகச் செய்துவிட நான் நீள் கவிதைகளால் நேரத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு கவிதையில் தொடங்கி ஏதேதோ கவிதைகளில் பயணப்பட்டு, ஏதோ கவிதையில் நிறைவு செய்யும் போக்கும் ஒரு வித்தியாசமான அனுபவமே!

எல்லோரும் மதிய உணவினை அவரவர் வீட்டிலிருந்து கொண்டுவந்திருக்க, சந்தித்த சிலமணி நேரத்தில் மிகுந்த நட்புணர்வோடு எல்லோர் உணவையும் கலந்து உண்டு மகிழ்ந்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.
நிகழ்ச்சியின் முதலில் இருந்து இறுதிவரை எங்களோடு, உடன் இருந்த பொதிகை செய்திவாசிப்பாளர் தோழி. திருமதி. அருள்மொழி அவர்களின் வருகை பெருமகிழ்வைத் தந்தது.

எனக்கு நினைவு தெரிந்து 10 வகுப்பு முடித்தபோதே கவிதை என்ற பெயரில் எழுதத் தொடங்கியிருந்தேன். கல்லூரி முடியும் வரை ஏதேதோ கிறுக்கிக்கொண்டிருந்த எல்லா எழுத்துகளும் அடுத்த 15 ஆண்டுகள் எதுவுமே எழுத மறந்து, மறுத்துப் போயிருந்த சூழலில் ஒட்டுமொத்தமாய் காணாமல் போய்விட்டன. 

கல்லூரி நாட்களில் கவிதைக்கென்று சில பரிசுகள் வாங்கியதாக மங்கிய நினைவு சொல்கிறது. 2008ன் இறுதியில் ஒரு விபத்துபோல் வலைப்பக்கம் துவங்கிய பின்தான் ’எதாச்சும் எழுதனுமே’ எனும் மனப்போக்கில் எழுதியதில் கொஞ்சம் கவிதைகளும் சேர்ந்திருக்கின்றன. என்னிடம் நீங்கள் கவிஞரா? எனக்கேட்டாலோ அல்லது யாராவது கவிஞர் எனக்சொன்னாலோ ஒரு வெட்கம் பூத்துவிடும் எனக்குள். 

நிகழ்ச்சி முடிந்து மகிழ்வோடு, புதிய உற்சாகத்தோடு, தொலைக்காட்சி நிலையத்தை விட்டு வெளியே வருகையில் எனக்குள் ஒரு குரல் சூழ்ந்தது “வாழ்க்கையில மொத மொத இன்னிக்குத்தானே நீ கவிதை படிச்சிருக்கே!?”
”அட ஆமாம்ல…. வேற எங்கையாச்சும் கவிதை படிச்சிருக்கமா?” என என் நினைவுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கத் துவங்கினேன்.

பற்பல மேடைகளில் உரையாற்றிய அனுபவமும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வேறு வேறுவிதமாய் பங்கேற்ற அனுபவமும் ஆகியவை இருந்தபோதிலும், இதுதான் முதன் முதலாய் கவிதையை வாசித்தது என என் நினைவு அடுக்கு சொன்னது.
அப்படித்தான் போலும்.


-
குறிப்பு : நான் பங்கெடுத்த நிகழ்ச்சி ஜூலை மாதம் 7,21,28 ஆகிய தேதிகளில் (ஞாயிறு) ஒளிபரப்பு ஆகுமென நம்புகிறேன்!


-