கருவிக்குள் கட்டுண்ட கவிதை

சமீபத்தில் ஒரு தொடர்வண்டிப் பயணத்தில் சேலம் தொடர்வண்டி நிலையம் அருகே நிழற்படக் கருவிக்குள் சிக்கிய கவிதை இது.







படங்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், உருவெடுக்கும் உணர்வுகளின் வண்ணங்கள் மனது முழுதும் ஒன்றன்மேல் ஒன்றாய்ப் படிந்து பாரத்தைக் கூட்டவே செய்கின்றன. கூடவே அந்த பாட்டியின் மீதும் பிள்ளையின் மீதும் ஏதோ ஒரு இனம்புரியா பாசத்தை விதைக்கவும் செய்கின்றது.

தொட்டில் கட்ட வாய்ப்பில்லாத வெட்டவெளியில், ஒற்றைக் கம்பு ஒருபக்கமாய் சாய்ந்து ஒரு பிள்ளையின் உறக்கத்தைத் தாங்கிப்பிடிக்கிறது.

பால், மருந்து, தண்ணீர் என குடுவைகள் தவம் இருக்கின்றன அந்தப் பிள்ளையின் விழிப்பிற்காக!

ஒற்றைச் சிணுங்களைக் கண்ணுறும் பாட்டி ஓடி வந்து இசைக்கும் தாலாட்டில் தூக்கம் தொடர்கிறது.

அவர்கள் போராடிப் பூட்டும் தண்டவாளத்தில், அவர்களுக்கு ஒரு சொகுசுப் பயணம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை

எங்கும், யாரோ படைக்கிறார்கள், உருவாக்குகிறார்கள், செய்கிறார்கள் பிறருக்காக மட்டுமே கூலியைவிட கூடுதலாக !

தியாகங்களால் மட்டுமே உலகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது
-0-

ஒரு நல்ல எடமாப்பார்த்து நிக்கக்கூடவா தெரியாது!?

விடிந்தும் கூட வெளிச்சக் கீற்றுகள் வேகமாய்ப் பரவாத பவித்ரமான அதிகாலை அது. சுவாசிக்கும் மூச்சில் கனமாய் உணரமுடிந்தது காற்றில் மிதக்கும் பனியின் குளுமையை. சம்பத் நகரின் அந்த குறுகிய வீதியின் திருப்பத்தில் உழவர் சந்தையின் மறுபுற வழி வழியே மக்கள் உட்செல்வதும் வெளிவருதும் என ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. கருணாநிதி இது வரை உருவாக்கியதில் என்றும் நினைத்துப் பார்க்கவேண்டிய ஒரு திட்டம் உழவர் சந்தை என்பதில் எனக்கு ஒருபோதும் மாற்றுக் கருத்து இல்லை.

திருப்பத்தின் இரு பக்கமும் குப்பைத் தொட்டி என்ற பெயரில் தரகப் பெட்டிகள் நிரம்பி கிடந்தன. வழியும் பெட்டிகளுக்கு பக்கவாட்டில் அடர்த்தியாய் கிடந்தன அள்ளப்படாத குப்பைகள். குப்பைகளின் நீள் உறக்கம், அவை இன்றோ நேற்றோ அல்ல, பலநாட்களாய் அங்கே படுத்திருப்பதை உணர்த்தியது. சந்தையின் அந்த வழிப் பக்கம் நிறைய இரு சக்கர வாகனங்கள் நிற்பதும், கிளம்பும் வாகனத்துக்கு நிகராய் மீண்டும் அந்த இடங்களை நிரப்புவதுமென பரபரப்பாக இருந்தது. சந்தையின் உள்ளிருந்து வெளிவந்து வாகனங்களை நிமிர்த்துபவர்கள் தூக்கி வரும் காய்கறி மூட்டைகளை நோக்கும் போதே தெரிந்தது, நிச்சயம் அவர்கள் தங்கள் மளிகைக் கடைகளுக்காகத்தான் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர் என்பது.

இணையத்தில் சுட்ட படம்

நிற்க ஆரம்பித்த சில நிமிடங்களில் வேட்டியை மடித்துக் கட்டி, கக்கத்தில் பை இடுக்கிய அந்த மனிதர் என் கவனத்தை முழுதும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். சிறிது நேரத்தில் புரிந்தது, அங்கே நிற்கும் இருசக்கர வாகனங்களை கவனித்துக் கொண்டு அதற்கு தலா ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது. பெரும்பாலான நபர்களை அவருக்கு மிகுந்த பரிச்சயம் இருப்பது அவருடைய நடவடிக்கையில் புரிந்தது. வாகனங்களை நிறுத்தும் அனைத்து மனிதர்களிடமும் மிக இயல்பாக நட்பாக பேசிக் கொண்டேயிருந்தார்.

முன்பக்கமும் பின்பக்கமும் மூட்டை முடிச்சுகளோடு வண்டியைக் கிளப்பிக் கொண்டிருந்த ஒருவரிடம் மட்டுமே கொஞ்சம் கடிந்த நிலையில் பேசுவதைக் கவனிக்க முடிந்தது. ஒரு வழியாய் அந்த நபர் வண்டியோடு நகர்ந்த பிறகு, இன்னொருவரிடம் பேசியதிலிருந்து 47 நாட்களுக்கு இதுவரை 28 ரூபாய் மட்டுமே அந்த நபர் தந்திருப்பதாகவும், அதற்குதான் அந்த கடிந்த பேச்சு எனவும் புரிந்தது.

முகம் கூட கழுவாத, இலகுவான இரவு உடையோடு மேலே ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வெகு இயல்பாய் அருகாமைப் பெண்கள் கையில் ஒரு பையோடு உள்நுழைவதும், காய்கறிகளோடு கீரை, கறிவேப்பிலை வகைகள் பை நிறைந்திருக்க வெளியேறுவதுமென அதன் போக்கில் இயங்கி கொண்டிருந்தனர். பருமனான வயதுப் பெண்கள் உள்வளைந்த கால்களோடு இடவலமாய் அசைந்தசைந்து நகர்வதைப் பார்க்க கொஞ்சம் வேதனையாய் இருந்தது. நோய்வாய்ப்படும் முதுமை ஒரு நரகம்தான். கண்ணாடி அணிந்த சுருள்முடிப் பெண் அந்த அதிகாலை நேரத்திலேயே தன் அலைபேசியில் கலகலவென சப்தமாக சிரித்துக்கொண்டே கடந்தார்.

நடை பயிற்சிக்கு சென்ற மெதுமெது காலணிகளோடு, நகரத்தின் அடையாளம் தெரிந்த முக்கியஸ்தர்கள் சிலரும் காய்கறி வேட்டைக்கு உள்ளே செல்வதையும், கையில் தொட்டிலாடும் பருத்த ஒரு பிளாஸ்டிக் கேரி பேக்குடன் வெளியேறுவதையும் காண முடிந்தது.

கனக்கும் மூட்டைகளோடு வேகமாய் நடந்து வந்து, சாய்ந்து நிற்கும் வாகனத்தின் இருக்கைமேல் வைத்து மூச்சு வாங்கிக் கொண்டு, பெரும்பாலானோர் வாகன கவனிப்பாளரிடம் ”தீப்பெட்டி குடுண்ணா” என சிநேகமாய் கேட்டு, பீடியையோ, சிகரெட்டையோ பற்ற வைத்து, விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதிலேயே, புகையை மிக நிதானமாய் அனுபவித்து உள்ளிழுத்து சுயமாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள்,. வாகன கவனிப்பாளரும் சிநேகச் சங்கிலியின் முடிச்சாய் “ஆமா, இன்னிக்கு வெங்காயம் எப்படி, தக்காளி எப்படி” என ஏதாவது கேட்டுக் கொண்டேயிருந்தார். சிற்சில நிமிடங்களுக்கென அவர்களுக்குள் நடக்கும் உற்சாகமான பேச்சு அதிகாலை வெயில் போல் கொஞ்சம் கதகதப்பாகவே இருந்தது.

வெளிச்சம் மிக அடர்த்தியாய் பரவத் தொடங்கியது. உழவர் சந்தையின் அந்தச் சுவரோரம் அதுவரை கவனிப்பில் சிக்காமல் உறங்கி கொண்டிருந்த அந்த ஆள் எழும்போதுதான் கவனத்தை ஈர்த்தான். வெறும் முப்பதடி தூரத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்த நபரை இது வரை எப்படி கவனிக்காமல் இருந்தேன் என ஆச்சரியமாக இருந்தது. எழுந்தவன் கசங்கிப்போய், கையில் தொடமுடியாத அழுக்கோடு கிடந்த தன் துணிகளை ஒருவாறு சுருட்டி வைத்தான். நிதானமாய் எழுந்து அருகில் கிடந்த தன் இரண்டு பாட்டில்களை எடுத்துக் கொண்டு உழவர் சந்தைக்குள் நுழைந்தான். தண்ணீர் பிடிக்கப் போகிறான் என்பதை உணர முடிந்தது. அணிந்திருந்த துணியின் வர்ணம் அழுக்கால் மூடிக் கிடந்தது. எண்ணை காணாத தலை காய்ந்த சக்கையாய் முள்முள்ளாய், தாறுமாறாய்க் கிடந்தது. மனிதர்களின் உலகத்திலிருந்து இன்னொரு வட்டத்திற்குள் எதன் பொருட்டோ ஒதுக்கப்பட்ட அல்லது ஒதுங்கிவந்த மனிதன் என்பது புரிந்தது. மனநிலை பிறழ்ந்து நகரத்தில் ஆங்காங்கே சுற்றித்திரியும், அடிக்கடி காணும் மனிதச் சித்திரங்கள் மனதுக்குள் வந்து போனது.

சிந்தனைகள் ஒரு மாதிரி இறுகிக் கொண்டிருக்கும் போது, ஒரு இரு சக்கர வாகனம் சீரான வேகத்தில் என்னைக் கடக்க, பட்டென ஒரு சத்தமும், என் கால்களில் ஏதோ ஈரமாய்ப்படுவதையும் உணர்ந்தேன். என்ன என குனிந்து பார்க்கும் போது மஞ்சள் வர்ணத்தில் குழம்பாய் பாதத்திலும் செருப்பிலும் வழிந்து கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் என்னவென்று தேட, யாரோ வீசியெறிந்த சாம்பார் பாக்கெட் பார்சல் அப்போதுதான் கடந்து சென்ற இரு சக்கர வாகனத்தின் புண்ணியத்தில் உடைந்து, அக்கம் பக்கம் தன் மூச்சை பரவவிட்டு உயிர் துறந்து கொண்டிருந்தது.

யாரை நோக, அதை அலட்சியமாய்ப் போட்டுவிட்டுப் போன புண்ணியவானையா?, மிகச் சரியாய் அதைக் கொலை செய்த இருசக்கர ஓட்டியையா? அல்லது அங்கே பராக்குப்பார்த்து நின்று கொண்டிருந்த என்னையா? என்ற பட்டிமன்றத்தின் இடைவேளையாய், அதை எப்படித் துடைக்கலாம் அல்லது கழுவத் தண்ணீர் குழாய் தென்படுகிறதா என எனக்குள் போராடிக் கொண்டிருந்த போது, காய்கறிப்பையை வண்டியின் இருக்கைமேல் வைத்துவிட்டு இடுப்பில் கை வைத்துக் கொண்டு மனைவி நின்று கொண்டிருந்தார்.

ஒரு திடுக்கிடலோடு நான் பார்த்ததே காட்டிக் கொடுத்திருக்க வேண்டும்!

”கால்ல என்னங்க அது”

உயிர் வடிந்து சாலையில் வதங்கிக் கிடந்த சாம்பார்ப் பையைக் காட்டினேன்.

தலையில் அடித்துக் கொண்டு “ஒரு நல்ல எடமாப்பார்த்து நிக்கக்கூடவா தெரியாது!?” என முனகியது, காதில் மிகச் சப்தமாகவே விழுந்தது.

அதுவரை அவதானித்த அத்தனை விசயங்களும் கீச்மூச்..கீச்மூச்வென எனக்குள் ரீவைண்ட் ஆகும் படமாய் வேகமாய் பின்னோக்கி ஓடத்துவங்கியது.

-0-

வண்ண வெடிப்புகளுக்கிடையே


அழகான தங்கத்திருவோடு
வாங்கும் வறுமைக்கு
அட்சய பாத்திரத்தில்
மலம் கழித்த பெருமையும்…

வீச்சத்தை மறைக்க
வாசம் வழியும் பூவை
வலிக்கவலிக்க மேலும் கசக்கி
போர்தொடுக்கும் கலவியும்…

பச்சைப்பிள்ளை பசியில்வாட
பால் கனக்கும் மார்புக்காம்புகளில்
கண்ணைப்பறிக்கும் வர்ணமென
விஷம் பூசும் விபரீதமும்…

விளக்குகளில் குளிர்காய்ந்து
இரவுகளைப் பகல்களாக்கி
எலும்புகளுக்குள் நோய்புகுத்தி
இற்றுப்போகும் மனதுகளையும்...

எழுதிச் சலித்து விட்டது
வெளுத்துச் சாயமிட்ட விஷத்தில் 
மாண்டுபோன நிலங்களின் 
வண்ண வெடிப்புகளுக்கிடையே!

-0-

பகிர்தல் (21.02.2011)

விபத்துகள்:

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளில் பெரும்பாலும் நான்கு ஐந்து நபர்கள் என்ற எண்ணிக்கையில் இறந்துபோவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. ஒட்டுமொத்தக் குடும்பம் ஒரே வாகனத்தில் பயணித்து பெரியவர்கள் இறந்து குழந்தைகள் மட்டும் பிழைத்திருக்கும் செய்திகள், அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தையொட்டி மிகப் பெரிய கலக்கத்தை உருவாக்குகின்றன. வேகம் வாழ்க்கையை வேகமாக முடித்துக்கொள்ளச் சொல்கிறது.

பார்வதி அம்மாளுக்கு அஞ்சலிகள்:

முதுமையில் உடன் இணையும் பிணி என்பது மரணத்தை நோக்கிய பயணம் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. சில காலமாக அது எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வுதான். எனினும், மருத்துவ தஞ்சம் கேட்டு வந்த அவரை அலைக்கழித்த இந்திய அரசியல் பாவம் மனதில் கனமாய்க் கிடக்கிறது. அந்தப் பாவக்கறையை அவ்வளவு எளிதில் அழித்திட முடியாது. நல்ல தொரு பிள்ளையப் பெற்றெடுத்த மனநிறைவோடு அவரின் ஆத்மா அமைதி கொள்ளப் பிரார்த்திப்போம்.

விசாரணை:

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை விசாரணை உண்மையிலேயே வெகு சிரத்தையோடுதான் நடைபெற்று வருவதாக உணரமுடிகிறது. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஈரோட்டில் ஒரு அரிமா மாநாட்டிற்கு ஜெகத்காஸ்பரை பேச்சாளராக அழைத்தையொட்டி, அவர் அலுவலகத்தில் சோதனை நடந்த தருணத்தில், அந்த மாநாட்டின் பொறுப்பாளராக இருந்த அரிமாசங்கத்தைச் சார்ந்த ஒரு தலைவரை அழைத்து மத்தியப் புலனாய்வுத் துறை “எந்த அடிப்படையில் ஜெகத்காஸ்பரை அழைத்தீர்கள், உங்களுக்கும் அவரோடு என்ன தொடர்பு” என்பது வரை விசாரித்திருக்கிறார்கள்.


சஞ்சய் திருமணம் – பதிவர்கள் கூடல்:

தர்மபுரி அருகே மொரப்பூரில் பதிவர் சஞ்சய்காந்தியின் திருமணம் சிறப்பாக நடந்தது. மணமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைப் பதிவு செய்துகொள்கிறேன்.

ஈரோட்டிலிருந்து நான், ஆரூரன், கார்த்திக், ஜாபர் சென்றிருந்தோம். திருமணம் மிகச்சிறப்பானதொரு பதிவர்களின் கூடலாகவும் இருந்தது.  

வாசு, ஆரூரன், மணிஜீ, ஜாக்கிசேகர்
வானம்பாடி, எறும்பு, கதிர்,கேபிள்

லக்கி, ஜாக்கி, கார்த்தி, மணிஜீ, வாசு, அதிஷா





சஞ்சய், வெண்பூ, ஜோசப், கார்த்திக், நந்து, ஜீவ்ஸ், ஜாபர், ஆரூரன்


















திருமணத்தில் நந்து, வானம்பாடிகள் பாலா, எறும்பு ராஜகோபால், தமிழ்மணம் காசி, லதானந், தமிழ்பயணி சிவா, மரு.புருனோ, ஆதி, கார்க்கி, விஜி, தாரணிப்பிரியா, சக்தி செல்வி, வடகரைவேலன், ரம்யா, லக்கி, அதிஷா, கேபிள்சங்கர், அகநாழிகை வாசு, தண்டோரா  மணிஜீ, மயில்ராவணன், ஜாக்கிசேகர், வெங்கி, உண்மைத்தமிழன், வெயிலான், பரிசல், நிகழ்காலத்தில் சிவா, சாமிநாதன், செந்தில், முரளிகுமார், கும்க்கி, ஜோசப்பால்ராஜ், சென், வெண்பூ, ரங்க்ஸ், ஜீவ்ஸ், ரோகிணிசிவா என பதிவர்கள் பட்டாளத்தைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. தாமதமாய் போனதில் சில பதிவர்களைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது.

மின்சாரம்:

தினந்தோறும் இரண்டு மணி நேர மின்நிறுத்தம் என்ற கேவலத்தைச் தொடர்ந்து தொடர்ந்து சகித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இந்தக் கேவலம் தமிழகம் போல் ஆண்டு முழுதும் அரங்கேறுகிறதா என்பது சந்தேகம்தான். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் என பணிவிடை செய்யும் தமிழக அரசு, மாநிலம் முழுதும் தினமும் இரண்டு மணி நேர மின் நிறுத்தம் குறித்து சிறிதும் வெட்கம் கொள்ளவில்லை. அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்போது மூன்று மணி நேரமாக நீட்டிக்கப்பட்ட பெருமை வேறு. 

தர்மசங்கடம்:

ரசிக்கத் தெரியாதவர்கள் முன் எந்தவொரு அற்புதக் கலையும் உயிர்பெறுவதில்லை. முன்னாள் குடியரசுத் தலைவரோடு சேர்ந்து கிட்டத்தட்ட அனைவரும் ஆழ்ந்து ரசிக்கும் நேரத்தில் அவருக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் பாதுகாப்பு அதிகாரி படும்பாடு பாவமாய் இருக்கிறது. முகத்தைத் தடவி, கைகளைக் கட்டி, அக்கம்பக்கம் பார்த்து, நிமிர்ந்து அமர்ந்து, ஒரு வழியாய் கொட்டாவியை வாய்க்குள்ளே காற்றுக் குமிழ்களாகச் சேமித்து என ரொம்ப தர்மச்சங்கடப் படுகிறார் பாவம்.



-0-

இல்லாமல் இருக்காது


விரல் நுனிவரை வழிந்த கவிதையொன்றை
எழுதும் முன் எங்கோ தொலைத்துவிட்டேன்
தொலைத்த கவிதையை அங்கிங்கென
அலைந்து திரிந்து தேடிச்சலித்தும்விட்டேன்

தொட்டிலில் உறக்கத்தில் சிரிக்கும்
உங்கள் பக்கத்து வீட்டு மழலையின்
நெற்றியில் பூத்து நிற்கும்
வியர்வைத் துளிகளுக்குள் இருக்கலாம்

சிறகொடிந்து சிறைப்பட்டு
சில நெல்மணிகளுக்காக
சீட்டெடுக்க மட்டும் விடுதலையாகும்
ஒரு அடிமைக் கிளியிடம் இருக்கலாம்

ஒவ்வொரு சீண்டலுக்கும்
வெட்கப்பூ பூக்கும் உங்கள்
காதலியின் வியர்வையில் கசங்கிய
கைக்குட்டைக்குள் இருக்கலாம்

சமிக்ஞைகளில் சட்டை பிடித்திழுத்து
வறண்ட தலையோடு கை நீட்டும்
அழுக்கு அப்பிய குழந்தையின்
களைத்த கண்களுக்குள் இருக்கலாம்

சடசடவென அடிக்கும் மத்தியான மழைக்கு
அடி மரத்தோரம் அணைந்து கிடக்கும்
சாலையோர இளநீர்க்கடைப் பெண்ணின்
வறண்ட விழிகளில் இருக்கலாம்

இழுத்துச் செருகிய சேலையோடு
பரபரப்பாய் வீதியைத் தட்டியெழுப்பும்
எதிர் வீட்டுப்பெண்ணின்
ஈரக் கொலுசில் இருக்கலாம்

பருவம் தப்பிய மழைக்கு
வாடிய பயிரோடு வதங்கிய மனதோடு
அல்லாடும் விவசாயிகளின்
விலா எலும்புகளில் இருக்கலாம்

அதிசயமாய் எப்போதும்
அழகாய் மட்டும் தெரியும்
இன்னொருவன் மனைவியின்
இடுப்பு மடிப்புகளில் இருக்கலாம்

சமிக்ஞையில் சிவப்பு பூத்தும்
சீறித் தாண்டுபவனின்
முதுகைச் சுட்டெரிக்கும்
உங்கள் விழிகளில் இருக்கலாம்
 
கரைவேட்டி தரைபுரளத்
தலைவன் புகழ்மட்டும் பாடும்
ஒரு பச்சோந்தியின்
பழைய நிறத்தில் இருக்கலாம்

கொஞ்சம் விசாலமாய்த் தேடிப்பாருங்கள்
கிடைத்தால் எழுதிவிட்டுச் சொல்லுங்கள்
வாசித்து விட்டுப்போகிறேன்
உங்கள் கவிதையாகவே!

-0-

கீச்சுகள்

ஒருவரின் நெருடல், மற்றொருவருக்குச் சாதகமானது. மற்றொருவருக்குச் சாதகமானது இன்னொருவருக்கு நெருடல். # மனுசனாப் பொறந்திருக்கக் கூடாதோ!?

-0-

வார்த்தைகளுக்குள் அடங்குவதா காதல்? # கொசு@பிப்14.காம்

-0-
 
எந்த அரிப்பும் ஒற்றைச் சொறிதலில் அடங்கிவிடுவதில்லை. சொறியச்சொறிய இன்னும் கொஞ்சம் எனக் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது

-0-

ஆறுகளைச் சாக்கடைகளாக மாற்றிவிட்டு அதையே வடிகட்டி, சுத்திகரித்துக்(!) குடிக்கும் மேம்பட்ட தலைமுறை நாம்!

-0-

வெறும் தகவல்களைத் தாங்கும் எழுத்தை விட உணர்வுகளைத் தாங்கும் எழுத்தின் ஆயுள் நீளமானது.

-0-

சிக்னலில் நிற்கும்போது மட்டும் எல்லோருக்கும் ஒரே மாதிரி அவசரம் இருப்பது எப்படி

-0-
ஆயிரம், பத்தாயிரம், ஐம்பதாயிரம் ரூபாய் என்பதெல்லாம் நிலைமைகளைப் பொறுத்து பெரிய தொகை என்று தெரிகிறது. ஆனால் 300 கோடி, 2000 கோடி, 40000 கோடி என்பதெல்லாம் சர்வசாதாரணாமா சொல்ல வருது... # என்னாச்சு எனக்கு? எனக்கு மட்டும்தான் இப்படியா?

-0-

எல்லாவற்றிலும் புதுசு வேணும்னு நினைச்சாலும், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவ மட்டும் ஏன் 10 வருசமா மாற்றாமல் வெச்சிருக்கிறோம். # யூ டூ!?

-0-
 
தொலைத்த இடத்தில் தேடுவதைவிட, கிடைக்காத இடத்தில் தேடுவது பல நேரங்களில் காரணம் சொல்லித் தப்பிக்க உதவுகிறது # ஆமா நான் ஏன் இப்படி ஆயிட்டேன்?

-0-
 
உள்ளடங்கிய ஒரு கிராம விவசாய நிலம் ஏக்கர் 40 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவரின் கருப்புப்பணம் வெளுக்கப்படுகிறது.

-0-

ஒரே ஒரு நாளைக்காவது எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிம்மதியா தூங்கப்போகனும் # கனவு

-0-

இணையத்தில் எழுதுவதாலேயே கூடுதல் சமூகப் பொறுப்பு வந்திடுச்சா!? இணையத்தில் எழுத வராமலிருந்தால் அறச்சீற்றத்தை எங்கே கரைத்திருப்போம்?

-0-

மக்களைப் பற்றிச் சற்றும் சிந்திக்காமல் கூட்டணிக்காக மட்டுமே மானங்கெடும் இந்த அரசியல் தலைகள்தான் நாளையும் இந்த நாட்டை ஆளவேண்டுமா?

-0-
 
மனிதர்களைப் புரிந்து கொள்ளச் சிரமப்படும்போது நாம் மனிதர்கள் அல்லவோ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.

-0-

எல்லா மக்களையும் சமமாக நடத்தி, சுறுசுறுப்பாக மக்களுக்காகவே இயங்கும் ஒரே அரசுத் துறை(!) டாஸ்மாக்

-0-

எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரே ஒற்றுமை வெள்ளைச் சட்டை, மற்றும் மாசுபட்ட மனசு

-0-

ங்கொய்யாலே..... எம்.ஜி.ஆரு ஒரு ஆளு மட்டும்தான் முழுக்கைச் சட்டை, தழையக் கட்டிய வெள்ளை வேட்டியோடு ஏர் ஓட்டமுடியும் போல # உரிமைக்குரல்
-0-
 
அரசியல் சார்பு எடுத்ததின் விளைவாக மட்டுமே அடிப்படை மனிதநேயம், மாண்பு, மனிதத்தன்மை செத்தொழிவது ஏன்? எல்லாமே காசுதானா?

-0-

பொறுப்பி: அவ்வப்போது ’ட்விட்டரில்’ கிறுக்கிய ’கீச்சுகள்’. அங்கேயே படித்து நொந்தவர்கள் பொறுத்தருள்க (இத மட்டும் சின்ன எழுத்துல போட்டுடுவோம்)

-0-