Oct 17, 2025

நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான்

நிதானமாக இதை வாசியுங்கள். நிறையப் பேருக்கு இது வருத்தம் தரும் பதிவாகவும் இருக்கலாம். இதன் நோக்கம் வருத்தம் அடையச் செய்ய அல்ல. கிடைத்த வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்துவிட வேண்டும் என்பதற்காக மட்டுமே!

இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையின் சுருக்கம் ...

புற்​று​நோய் முற்​றிய​தால் நேரம் கழிகிறது.  இதுதான் எனக்கு கடைசி தீபாவளி நண்​பர்​களே” - 21 வயது இளைஞர் உருக்​க​மான பதிவு

கடந்த 2023ம் ஆண்டு டெல்லியில் 19 வயது இளைஞர் ஒரு​வருக்கு பெருங்​குடலில் புற்​று​நோய் பாதிப்பு இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. அது முற்​றிய நிலை​யாக நான்காவது நிலைக்கு சென்​றுள்​ளது. மருத்​து​வர்​கள் கீமோதெரபி உட்பட அனைத்து வித​மான சிகிச்​சைகளும் அளித்​துள்​ளனர். எனினும், புற்​று​நோய் முற்​றிய​தால் ஒன்​றும் செய்ய முடியவில்​லை. அவர் ஓராண்டு உயிர் வாழ்​வதே சிரமம் என்று கைவிரித்துள்​ளனர். தற்​போது 21 வயதாகும் அந்த இளைஞர் சமூக வலைதளத்​தில் தன்​னுடைய வலி, கனவு​கள் என உருக்கமான பதிவு ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். அதில்...

/

விரை​வில் தீபாவளி வரு​கிறது. தெருக்​கள் ஏற்​கெனவே விளக்​கு​களால் ஜொலிக்​கின்​றன. அவற்றை நான் கடைசி முறை​யாக பார்க்​கிறேன் என்​பதை நினைக்​கும்​போது மிக​வும் கடின​மாக இருக்​கிறது. இந்த பண்​டிகை கால விளக்​கு​கள், சந்​தோஷம், சிரிப்​பு, சத்​தம் என எல்​லா​வற்​றை​யும் இழக்க போகிறேன்.

நான் சத்​தமில்​லாமல் சிறிது சிறி​தாக சரிந்து கொண்​டிருக்​கும் போது, வாழ்க்கை தொடர்ந்து நகர்வது விசித்​திர​மாக உள்​ளது. அடுத்த ஆண்டு என்​னுடைய இடத்​தில் வேறு யாரோ ஒரு​வர் விளக்கு ஏற்​று​வார். நான் வெறும் நினை​வாக மட்​டுமே இருப்​பேன்.

எனக்கு சுற்​றுலா செல்​வது பிடிக்​கும். தனி​யாக நிறு​வனம் தொடங்க ஆசைப்​பட்​டேன். செல்ல நாய் வளர்க்க நினைத்​தேன். ஆனால், எனது நேரம் கழிந்து கொண்​டிருப்​பது நினை​வுக்கு வரு​கிறது. அதனால் அந்த எண்​ணங்​கள் மங்​கி​விடு​கின்​றன.

நான் வீட்​டில்​தான் இருக்​கிறேன். எனது பெற்​றோரின் முகத்​தில் சோகத்​தைப் பார்க்​கிறேன். இவற்றை எல்​லாம் நான் ஏன் எழுதுகிறேன் என்று கூட எனக்கு தெரிய​வில்​லை. அடுத்து என்ன நடக்​கிறதோ தெரி​யாது. அதில் நான் மறைந்து போவதற்கு முன்பு சத்தமாக சொல்​லி​விட்டு செல்​வதற்​காக இருக்​கலாம்.

/

முதலில், அந்த இளைஞரின் வயதில் இருக்கும் இளைய தலைமுறையினரைப் பார்த்து சொல்ல விரும்புவது, உங்கள் வாழ்க்கை மீது, உங்கள் அன்றாடங்கள் மீது, உங்களுக்கு கிடைத்தவைகள் மீது ஏதேனும் புகார் இருந்தால், புறந்தள்ளிவிட்டு மீண்டுமொரு அந்த இளைஞர் கூறியிருப்பதை வாசியுங்கள்.

அப்படியும் புகார்கள் இருந்தால் சரியான நபருடன் உரையாடுங்கள். இந்த வாரத்தில் அப்படி என்னோடு உரையாடியவர்களின் எண்ணிக்கையும், உரையாடலும் என்னை மலைக்க வைத்துள்ளது. ஏதேதோ இன்மைகள், குறைகள், புகார்கள். மிக முக்கியமான சின்னச் சின்னக் குழப்பங்கள். ஒரு சரியான வழிகாட்டியை, மனதில் இருப்பதை வெளிப்படுத்தினால் கேட்பதற்கான நபரை அவர்கள் கண்டடைந்திருக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

பொதுவாக நம் எல்லோருக்குமே, அந்த இளைஞரின் பதிவினை வாசிக்கும்போது பலவிதமான உணர்வுகள் ஏற்பட்டிருக்கலாம். பலருக்கு அதிர்ச்சியளித்திருக்கலாம். சிலருக்கு அச்சம் தந்திருக்கலாம். இவ்ளோதானா வாழ்க்கை எனும் சலிப்பைத் தந்திருக்கலாம்.... இன்னும்கூட நிறைய இருந்திருக்கலாம். நிச்சயமாக யாரையும் வருத்தப்பட வைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது.

சிலவற்றை எந்த வகையிலும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. அவை முற்றிலும் நம் கட்டுப்பாட்டை மீறி வருகின்றவை.

ஆனால், நாம் அறிந்து நம்மால் தடுக்க, தவிர்க்க இயலுகின்றவற்றை, அவ்வாறு செய்யாமல் நமக்குக் கிடைத்திருக்கும் நேரம், வாய்ப்புகள், வளங்கள், உறவுகள், உடல் நலம், மன நலம் ஆகியவற்றை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்றோமா எனும் கேள்வியை எழுப்பினால் போதும். சரியாக வேண்டியவைகள் மெல்ல மெல்ல சரியாகும்.

வாழ்க்கை நிச்சயமற்றதுதான். ஆனால், நம் யாருக்கும், அந்த இளைஞருக்கு 'தான் இல்லாமல் போகப்போவதுதெரிந்துவிட்ட நிலை போல் இல்லை. அந்த நிறைவுப் புள்ளி தெரியாதது எத்தனை பெரிய வரம் என்பது அது தெரிந்துவிட்டால்தான் தெரியும். அவருக்கு ஒவ்வொரு விடியலும் மரணத்தை நெருங்கும் மைல் கற்கள். எதையும் ’இதைச் செய்து என்ன ஆகப்போகிறது’ எனும் பதிலற்ற கேள்வியோடுதான் செய்ய வேண்டியிருக்கும்.

நமக்கு நாளை இருக்கின்றது, இந்த தீபாவளி இருக்கின்றது, அடுத்த தீபாவளியும் இருக்குமென ஆழமாக நம்புகிறோம், மனதார விரும்புகிறோம். நமக்கு அடுத்த மாதம், புத்தாண்டு, பொங்கல் உண்டு. மாணவர்களுக்கு தேர்வுகள், விடுமுறைகள், திறப்புகள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு கூட்டங்கள், வருமானங்கள், அதிகாரங்கள், தேர்தல்கள் உண்டு. விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகள், வெற்றிகள், பரிசுகள் உண்டு. குடும்பத்தினருக்கு திருமணங்கள், திருவிழாக்கள், குடும்ப விழாக்கள், விருந்துகள் உண்டு.  மனித வாழ்க்கையில் எதெல்லாம் அடிப்படைத் தேவையோ, விருப்பமோ அவையெல்லாம் கிடைக்கும் சாத்தியங்கள் பெரும்பாலும் உண்டு.

அந்த இளைஞராக இப்போதைக்கு நாம் இல்லாதிருப்பது எதெனினும் மிகப் பெரிய பரிசு. நமக்குக் கிடைத்திருக்கும் நேரம், உடல் நலம், மன நலம், உறவுகள், நட்புகள், வாய்ப்புகள், வளங்கள் ஆகியவற்றில் கொஞ்சம் போதாமைகள் இருந்தாலும், இருப்பதை இன்னும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள மனதார கவனம் செலுத்துவோம்.

நான் பல தருணங்களில் சொன்னதுதான் ‘நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான்!’. அந்த வாழ்வு நம் கைகளில் இப்போது இருக்கின்றது அல்லது அந்த வாழ்வின் பிடியில் தற்போது நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம்.

அதனை நன்கு வாழ்ந்துவிடலாம். அந்தத் தீர்மானம் பெரும்பாலும் நம் கைகளில்தான் இருக்கின்றது.

 ~ ஈரோடு கதிர் 

No comments:

நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான்

நிதானமாக  இதை   வாசியுங்கள். நிறையப் பேருக்கு இது வருத்தம் தரும் பதிவாகவும் இருக்கலாம். இதன் நோக்கம் வருத்தம் அடையச் செய்ய அல்ல. கிடைத்த வாழ...