நிதானமாக இதை வாசியுங்கள். நிறையப் பேருக்கு இது வருத்தம் தரும் பதிவாகவும் இருக்கலாம். இதன் நோக்கம் வருத்தம் அடையச் செய்ய அல்ல. கிடைத்த வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்துவிட வேண்டும் என்பதற்காக மட்டுமே!
இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையின் சுருக்கம் ...
”புற்றுநோய் முற்றியதால் நேரம் கழிகிறது. இதுதான் எனக்கு கடைசி தீபாவளி நண்பர்களே…” - 21 வயது இளைஞர் உருக்கமான பதிவு
கடந்த 2023ம் ஆண்டு டெல்லியில் 19 வயது இளைஞர் ஒருவருக்கு பெருங்குடலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது முற்றிய நிலையாக நான்காவது நிலைக்கு சென்றுள்ளது. மருத்துவர்கள் கீமோதெரபி உட்பட அனைத்து விதமான சிகிச்சைகளும் அளித்துள்ளனர். எனினும், புற்றுநோய் முற்றியதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் ஓராண்டு உயிர் வாழ்வதே சிரமம் என்று கைவிரித்துள்ளனர். தற்போது 21 வயதாகும் அந்த இளைஞர் சமூக வலைதளத்தில் தன்னுடைய வலி, கனவுகள் என உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
/
விரைவில்
தீபாவளி வருகிறது. தெருக்கள் ஏற்கெனவே விளக்குகளால் ஜொலிக்கின்றன. அவற்றை
நான் கடைசி முறையாக பார்க்கிறேன் என்பதை நினைக்கும்போது மிகவும் கடினமாக
இருக்கிறது. இந்த பண்டிகை கால விளக்குகள், சந்தோஷம், சிரிப்பு,
சத்தம் என எல்லாவற்றையும் இழக்க போகிறேன்.
நான் சத்தமில்லாமல் சிறிது சிறிதாக சரிந்து கொண்டிருக்கும் போது, வாழ்க்கை தொடர்ந்து நகர்வது விசித்திரமாக உள்ளது. அடுத்த ஆண்டு என்னுடைய இடத்தில் வேறு யாரோ ஒருவர் விளக்கு ஏற்றுவார். நான் வெறும் நினைவாக மட்டுமே இருப்பேன்.
எனக்கு சுற்றுலா செல்வது பிடிக்கும். தனியாக நிறுவனம் தொடங்க ஆசைப்பட்டேன். செல்ல நாய் வளர்க்க நினைத்தேன். ஆனால், எனது நேரம் கழிந்து கொண்டிருப்பது நினைவுக்கு வருகிறது. அதனால் அந்த எண்ணங்கள் மங்கிவிடுகின்றன.
நான் வீட்டில்தான் இருக்கிறேன். எனது பெற்றோரின் முகத்தில் சோகத்தைப் பார்க்கிறேன். இவற்றை எல்லாம் நான் ஏன் எழுதுகிறேன் என்று கூட எனக்கு தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கிறதோ தெரியாது. அதில் நான் மறைந்து போவதற்கு முன்பு சத்தமாக சொல்லிவிட்டு செல்வதற்காக இருக்கலாம்.
/
முதலில், அந்த இளைஞரின் வயதில் இருக்கும் இளைய தலைமுறையினரைப் பார்த்து சொல்ல விரும்புவது, உங்கள் வாழ்க்கை மீது, உங்கள் அன்றாடங்கள் மீது, உங்களுக்கு கிடைத்தவைகள் மீது ஏதேனும் புகார் இருந்தால், புறந்தள்ளிவிட்டு மீண்டுமொரு அந்த இளைஞர் கூறியிருப்பதை வாசியுங்கள்.
அப்படியும் புகார்கள் இருந்தால் சரியான நபருடன் உரையாடுங்கள். இந்த
வாரத்தில் அப்படி என்னோடு உரையாடியவர்களின் எண்ணிக்கையும், உரையாடலும்
என்னை மலைக்க வைத்துள்ளது. ஏதேதோ இன்மைகள், குறைகள், புகார்கள். மிக முக்கியமான சின்னச் சின்னக் குழப்பங்கள்.
ஒரு சரியான வழிகாட்டியை, மனதில் இருப்பதை வெளிப்படுத்தினால் கேட்பதற்கான நபரை
அவர்கள் கண்டடைந்திருக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
பொதுவாக நம் எல்லோருக்குமே, அந்த இளைஞரின் பதிவினை வாசிக்கும்போது பலவிதமான உணர்வுகள் ஏற்பட்டிருக்கலாம். பலருக்கு அதிர்ச்சியளித்திருக்கலாம். சிலருக்கு அச்சம் தந்திருக்கலாம். இவ்ளோதானா வாழ்க்கை எனும் சலிப்பைத் தந்திருக்கலாம்.... இன்னும்கூட நிறைய இருந்திருக்கலாம். நிச்சயமாக யாரையும் வருத்தப்பட வைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது.
சிலவற்றை எந்த வகையிலும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. அவை முற்றிலும் நம் கட்டுப்பாட்டை மீறி வருகின்றவை.
ஆனால், நாம் அறிந்து நம்மால் தடுக்க, தவிர்க்க இயலுகின்றவற்றை, அவ்வாறு செய்யாமல் நமக்குக் கிடைத்திருக்கும் நேரம், வாய்ப்புகள், வளங்கள், உறவுகள், உடல் நலம், மன நலம் ஆகியவற்றை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்றோமா எனும் கேள்வியை எழுப்பினால் போதும். சரியாக வேண்டியவைகள் மெல்ல மெல்ல சரியாகும்.
வாழ்க்கை நிச்சயமற்றதுதான். ஆனால், நம் யாருக்கும், அந்த இளைஞருக்கு 'தான் இல்லாமல் போகப்போவது’ தெரிந்துவிட்ட நிலை போல் இல்லை. அந்த நிறைவுப் புள்ளி தெரியாதது எத்தனை பெரிய வரம் என்பது அது தெரிந்துவிட்டால்தான் தெரியும். அவருக்கு ஒவ்வொரு விடியலும் மரணத்தை நெருங்கும் மைல் கற்கள். எதையும் ’இதைச் செய்து என்ன ஆகப்போகிறது’ எனும் பதிலற்ற கேள்வியோடுதான் செய்ய வேண்டியிருக்கும்.
நமக்கு நாளை இருக்கின்றது, இந்த தீபாவளி இருக்கின்றது, அடுத்த தீபாவளியும் இருக்குமென ஆழமாக நம்புகிறோம், மனதார விரும்புகிறோம். நமக்கு அடுத்த மாதம், புத்தாண்டு, பொங்கல் உண்டு. மாணவர்களுக்கு தேர்வுகள், விடுமுறைகள், திறப்புகள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு கூட்டங்கள், வருமானங்கள், அதிகாரங்கள், தேர்தல்கள் உண்டு. விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகள், வெற்றிகள், பரிசுகள் உண்டு. குடும்பத்தினருக்கு திருமணங்கள், திருவிழாக்கள், குடும்ப விழாக்கள், விருந்துகள் உண்டு. மனித வாழ்க்கையில் எதெல்லாம் அடிப்படைத் தேவையோ, விருப்பமோ அவையெல்லாம் கிடைக்கும் சாத்தியங்கள் பெரும்பாலும் உண்டு.
அந்த இளைஞராக இப்போதைக்கு நாம் இல்லாதிருப்பது எதெனினும் மிகப் பெரிய பரிசு. நமக்குக்
கிடைத்திருக்கும் நேரம், உடல் நலம், மன நலம், உறவுகள், நட்புகள்,
வாய்ப்புகள், வளங்கள் ஆகியவற்றில் கொஞ்சம்
போதாமைகள் இருந்தாலும், இருப்பதை இன்னும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள மனதார கவனம் செலுத்துவோம்.
நான் பல தருணங்களில் சொன்னதுதான் ‘நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு
வாழ்க்கைதான்!’. அந்த வாழ்வு நம் கைகளில் இப்போது இருக்கின்றது
அல்லது அந்த வாழ்வின் பிடியில் தற்போது நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம்.
அதனை நன்கு வாழ்ந்துவிடலாம். அந்தத் தீர்மானம் பெரும்பாலும் நம்
கைகளில்தான் இருக்கின்றது.
No comments:
Post a Comment