Showing posts with label இரவு. Show all posts
Showing posts with label இரவு. Show all posts

Mar 30, 2015

சிங்கப்பூர் பயணம் - 5



வாசகர் வட்ட ஆண்டு விழா முடிந்து உணவு உண்டுவிட்டு கிளம்பும்போது இரவு 10 மணி இருக்கும். எங்கு செல்கிறோம் என எதுவும் சொல்லாமல் நண்பர்கள் அழைத்துச்சென்றனர். ஹாஜா கார் ஓட்டிக் கொண்டிருந்தார். கோபல் கண்ணன், கருணாகரசு உடன் இருந்தார்கள். 2013ல் நான் சிங்கப்பூர் வந்திருந்தபோது, எனக்கு இவ்வளவு நண்பர்கள் இல்லை. ஊரிலிருந்து என்னோடு வந்திருந்தவர்கள் இந்தோனேஷியா சென்றுவிட நான் மட்டும் தனித்திருந்த ஒரு முழுநாளை உடன் இருந்து, சுற்றித்திரிந்து பயனுள்ளதாக்கியவர் கருணாகரசு. அவரோடு அப்போது தேசிய நூலகமும், மெரினா பே பகுதிக்கும் சென்றது மறக்கமுடியாத ஒரு அனுபவம்.

அறச்சீற்றம் பொங்கும் ஒரு கவிஞனாய் மட்டுமே வலைப்பக்கத்தில் கருணாகரசுவை அறிவேன். உரையாடும்போது பேச்சுவாக்கில் நறுக்குகளாய் விழும் அவரின் நகைச்சுவை துணுக்குகள் அசரடிப்பவை. ஒரு கட்டத்தில் ”கருணாகரசு இனி கவிதை எழுதுறதை நிறுத்திட்டு உரைநடை எழுத ஆரம்பியுங்கள்” எனச் சொல்லுமளவுக்கு அவரின் நகைச்சுவைத் துணுக்குகள் வழியெங்கும் சிதறிக் கொண்டேயிருந்தன.

வண்டி நிற்கும்போதுதான் கடற்கரைக்கு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். அலைகளற்ற தண்ணீரும், தூரத்தில் நிற்கும் பிரமாண்ட கப்பல்களில் மின்னும் விளக்குகளுமாய் கடல் எங்களுக்காக தம் கரையில் கொஞ்சம் இடம் வைத்திருந்தது. நண்பர்கள் குயில்தோப்பு என்ற குழுவாய் இருப்பவர்கள். ஹாஜா, ரமேஷ் ராஜு, தாம் சண்முகம், கண்ணன், கருணாகரசு, பனசை நடராஜன் ஆகியோரோடு நானுமாய் அந்த இரவின் நிமிடங்களைத் தின்ன ஆரம்பித்தேன்.

அவர்களில் கண்ணன், கருணாகரசு தவிர்த்து அனைவருக்கும் நான் மிக மிகப்புதியவன். ஆனாலும் காலம் காலமாய் பழகிய பால்ய நட்புகளின் உரையாடல் போலே, கிண்டலும் கேலியும், தீவிரமான பகிர்வுகளுமென பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டேயிருந்தோம்.



கடற்கரையெங்கும் திட்டுத்திட்டாய் விதவிதமான மனிதர்களின் கூட்டம். இருளும் ஒளியும் கலந்து காற்றாய் வீசும் அந்தக் கடற்கரையில் எவரும் எவரைப் பற்றியும் சிந்தனைகொள்ளாது, அவரவர் அவரவர் நிமிடங்களை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக எவரும் எவர் குறித்தும் அச்சமின்றி, அங்கு இருப்பதே அந்த தேசத்தின் அடையாளம் என்றால் அது மிகையாகாது.

அனுமதி பெற்று, கடற்கரையில் நண்பர்களாக, குடும்பமாக கூடாரம் அமைத்து இரவு முழுக்க தங்கி பேசி, தூங்கிவிட்டுச் செல்லலாம் என அறிகையில் பெருமையாகவும், பொறாமையாகவும் இருந்தது. காலணிகளில் மின்னும் விளக்கோடு இரவிலும் ஸ்கேட்டிங் செல்கிறார்கள் அல்லது ஓடுகிறார்கள். சக்கரங்களில் மின்னும் விளக்கோடு மிதி வண்டிகள் வளைந்து நெளிந்து செல்கின்றன. வாழ்தலின் மிக ரசனையான பக்கங்களை அப்போது அங்கிருக்கும் மனிதர்கள் எழுதியும், வாசித்தும் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. இருக்கும் கொஞ்சம் கடற்கரையை மிக நேர்த்தியாகப் பயன்படுத்தும் அவர்களின் பழக்க வழக்கமும் நமக்கு ஒரு பாடம்தான்.


இலக்கியம், எழுத்தாளர்கள், இந்திய அரசியல், புத்தக வெளியீடுகள், கூட்டங்கள், விழாக்கள் என கலந்துகட்டி உரையாடியதில் நான் அறிந்து கொண்டவை சிங்கப்பூரின் எழுச்சி, சிங்கப்பூரின் தந்தை, சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைமுறை என வித்தியாசமானவை.

-
சிங்கப்பூர் பயணம் - 1

 
சிங்கப்பூர் பயணம் - 2
 

சிங்கப்பூர் பயணம் - 3

சிங்கப்பூர் பயணம் - 4

-

May 29, 2013

இரவு







இரவின் அழுக்கை

விடியவிடிய வெளுத்ததில்

வெளுக்கிறது கீழ்வானம்



-



நீண்டு பயணிக்கும் இரவு

தான் விரும்பும் ஒரு கணத்தில்

பகல்மீது தடம் புரளலாம்



-



இரவில் நனையும் தினம்

பகலில் காயும்

வேறொன்றும் புதிதில்லை



-



ஏகாந்தமாய்

விளையும் இரவில்
எவர் பசி தீரும்



-


Feb 1, 2013

ஒரு பாதை இரு பார்வை




டை பிடித்துப்போன ஒன்றாகிவிட்டது. பெரும்பாலும் வெளியூர்ப் பயணங்களுக்கு ரயிலுக்குச் செல்லும்போது இரவுகளில் முடிந்தவரை நடந்தே செல்வது வாடிக்கை. அது பிடித்தமானதும்கூட.

பகலில் ஓடிய மனிதர்களின் ஓட்டம் மெல்ல அடங்கி, இரவு ஆளுமை செய்யத்தொடங்கும் நேரமது. நள்ளிரவுக்கு சற்று முன்பும் பின்பும் எப்பொழுதுமே நகரம் ஒருவித இயல்புக்கு மீறிய அழகினை தன்மேல் பூசிக்கொள்ளத் தவறுவதில்லை. சமீபத்தில் ரயில் பயணங்கள் ஏதும் அமைவதில்லை என்பதாலேயே இம்மாதிரியான இரவு நடைகளும் வாய்ப்பதில்லை.

அன்றைக்கு கொஞ்சம் வேலை அதிகம். அலுலகத்தின் இரும்பு சுருள் கதவை வேகமாக இழுத்துவிட்டு பூட்டுகளை அமுக்கி பூட்டிய கணம் சர்வ நிச்சயமாக உணர்ந்தேன், சாவிகளை உள்ளேயே வைத்து பூட்டிவிட்டேன் என்பதை. அலுவலக சாவிகளோடு, என் பைக் சாவியையும் சேர்த்து!

நேரத்தைப் பார்த்தேன் இரவு 11.34 காட்டியது. எப்பொழுதோ நான் செய்த பாவங்கள் ஒருவிநாடி மின்னல்போல் ஒளிர்ந்து சுட்டுவிட்டு மறைந்தன. வேறு ஏதும் வாய்ப்புகளே இல்லை என்றபோதும் எதாச்சும் வாய்ப்பிருக்கா என யோசித்தேன். மாடிமேல் அலுவலகம் வைத்திருக்கும் நண்பர் ஏற்கனவே சென்றுவிட்டார் எனத் தீர்க்கமாக அறிந்தும் அவர் கதவு திறந்திருக்கிறதா எனப் பார்த்தேன். எல்லாவற்றையும் விட முட்டாள்தனமாக பூட்டிய பூட்டுகளை ஒருவேளை திறக்குமோ என இழுத்தும் பார்த்தேன்.

யாரையாவது போனில் அழைக்கலாமா என யோசித்தபோதே, ”ஓ… நடக்க மாட்டீங்ளோ?” என மனசாட்சி கேட்டது.

பல ஆண்டுகளாக தினம்தினம் வந்துபோன சாலையில் அன்றுதான் முதன்முறையாக நடுநிசியில் நடக்க ஆரம்பித்தேன். பாதையின் ஒவ்வொரு தப்படியும் வித்தியாசமாகத் தோன்றியது. அடிக்கடி தேடி ரசிக்கும் நிலா அன்று எனக்கு தரிசனம் கொடுக்கவில்லை.

ஒரு இருநூறு மீட்டர் தூரம் கடந்திருப்பேன். இருள் நிரம்பிக் கிடந்தது. ”ஓ… இந்த ஏரியா பவர் கட் 11-12 போல எனத்தோன்றியது” மின்சாரம் தொலையும் இரவுகள் வெகுசீக்கிரத்தில் பழகிப்போய்விட்டன. கனிசமாக பனி பொழிந்துகொண்டிருந்தது. சில வீடுகளில் மனிதர்கள் வாசற்படியில் முக்காடிட்டவாறு அமர்ந்திருந்தனர். வீதிமுழுக்க இருள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. ஏதாவது வீட்டின் சன்னலில் கசியும் வெளிச்சத்தில் மட்டும் அவ்வப்போது மிகச் சிறிய அளவிற்குக் கலைந்தது.

இத்தனை ஆண்டுகளாய் வந்துபோன வீதிகளில் இத்தனைவித வீடுகள் இருக்கின்றதா எனும் ஆச்சரியமும் தோன்றியது. பழைய தினமலர், ஜெகநாதபுரம் காலணி, உழவன் நகர் எனக் கடந்து கம்பர் வீதியின் குறுகிய திருப்பத்தில் நுழைந்தபோது நாய் ஒன்று ஓங்கிய குரலில் குரைக்கத் தொடங்கியது. கணீரென்று ஒலிக்கும் குரல் அக்கம்பக்கத்து நாய்களுக்கெல்லாம் உடனே தொத்திக்கொண்டது. ஒன்றாய் ஓங்கிய குரலில் குரைக்கத் துவங்க, மனிதர்களற்ற அந்த இருள் வீதியின் மையத்தில் ஒரு அடர்ந்த கானகத்தை கற்பனை செய்யத்துவங்கினேன். குரைக்கின்ற நாய் கடிக்காது எனும் பழமொழி, பேருந்து பெயர்ப்பலகையில் நகரும் LED எழுத்துக்களாக சிந்தையில் மெல்லிய நடுக்கத்தோடு நகர்ந்தோடியது. நாய்களின் குரைப்பைக் கடந்து நடை வேகத்தைக் கொஞ்சம் கூட்டினேன்.

சட்டைப்பையில் இருந்த கைபேசி லேசாகத் முனகியது. குறுந்தகவல். ”Morning Walking?” என நண்பரிடமிருந்து. “Now Going” எனப் பதிலளித்தேன். மிக நிச்சயமாக அதிர்ச்சியடைந்திருப்பார். அந்த அதிர்ச்சி குறித்து என் இதழில் குறுஞ்சிரிப்பு வழிவதை நானே உணர்ந்தேன். அடுத்த சில விநாடிகளில் ”Now??????? Why???” என வந்ததிலேயே அதில் இருக்கும் பதட்டமும் ஆர்வமும் புரிந்தது. “Tell u tomo” எனப் பதில் அளித்துவிட்டு நாளைக்கு இதற்கு எப்படி கதை, திரைக்கதை அனுப்பலாம் என யோசிக்கத் துவங்கினேன். இப்போது நடந்துவிட்டதால் காலை வாக்கிங் போகவேண்டியதில்லை என்பதே கொஞ்சம் குதூகலத்தைத் தந்தது.

*

ந்த புத்தாண்டு இரவில் 12 மணி வரை புத்தாண்டை வரவேற்க கண் விழிக்காமல் உறக்கத்தை அணைத்ததால், விடியல் உறக்கத்தைப் புறந்தள்ளி வெகு எளிதாக என்னைச் சூழ்ந்தது. மிகச் சுறுசுறுப்பாகக் கிளம்பி நடையை விரைவாக எட்டிப்போடத் துவங்கியபோது காலை 5.15. ஒரு வாரம் முன்பு கட்டாயத்தின் பேரில் நடந்த அதே பாதையை இந்த இளம்காலை நேரத்தில் விருப்பத்தின் பேரில் நடந்து அளக்கலாம் என்பது கூடுதல் உற்சாகத்தைத் தந்தது.

கம்பர் வீதியின் முடிவில் அன்றைய இரவில் அநியாயத்துக்கு குலைத்த அந்த நாய்களில் நான்கைந்து சாலை ஓரமாக சுருண்டு படுத்திருந்த காட்சி ஒரு ஓவியம்போல் தெரிந்தது. பெரும்பாலான வீட்டு வாசல்களில் விதவிதமான கோலமும், கோலத்தின் மேல் பகுதியில் அரைவட்டமாக Happy New Year என கோணல்மாணலாக கோலமிடப்பட்டிருந்தது.

ஒரு புத்தாண்டை மனிதர்கள் எத்தனையெத்தனை விதமாக கொண்டாடுகிறார்கள் என மனது அசைபோடத் தொடங்கியது. அடுத்த நாளுக்காக முந்தையை இரவே ஊரடங்கிய நேரத்தில் கூடுதலாய் கண் விழித்து கோலமிட்டவர்கள், இந்த அதிகாலையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கலாம் எனத் தோன்றியது. நீண்ட வீதியின் மையத்தில் மிகப் பெரிய எழுத்தில் சுண்ணாம்பாலும் எழுதப்பட்டிருந்தது. வாசலில் கோலமிட்டு வாழ்த்துக் கோலமிட்டவர்கள் யாரை நினைத்து கோலமிட்டிருப்பார்கள்?.

சிலரை மனதில்கொண்டு சிலர் கோலமிட்டோ, எழுதியோ இருக்கலாம். பலர் உற்சாகத்தில் ஏதாவது செய்ய வேண்டுமேயென எழுதியும் கோலமிட்டும் இருக்கலாம். அந்த தினத்தின் முன்பாதி நேரத்தில் அந்த வாழ்த்துகளை நூறு அல்லது ஆயிரம் விழிகள் வருடிச்செல்லலாம். ஆனால் விடியும் தருணத்தில் அவ்வளவு தொலைவிற்கு விதவிதமான வாழ்த்துகளை வருடும் கொஞ்சம் விழிகளில் என் விழிகளும் என்பது கூடுதல் இறுமாப்பைக் கொடுத்தது.

நடையை எட்டிப்போட ஆரம்பித்தேன். கட்டாயத்தின் பேரில் முன்பொரு நடுநிசியில் முனகலோடு நடந்து எட்டிய தொலைவினை அந்தக் காலையில் உற்காசமாகத் தீர்க்கத் துவங்கினேன். நால்ரோடு சந்திப்பு வரை நடந்து திரும்பும்போது கவனமாக இன்னொரு வழியைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தேன்.

கடந்து போகும் அந்த வீதிகளிலும் விதவிதமான கோலங்கள், வாழ்த்துகள் என எந்த ஆண்டும் இதுவரைக் காணாத அளவில் கண்களினூடே மனதில் நிரப்பிக்கொண்டே வந்தேன்.

*

ஒரே செயலை கட்டாயத்தின்பேரிலும், விருப்பின்பேரிலும் வேறுவேறு மாதிரி அணுகுவதிலிருந்து, இந்த மனது எப்போது மாறத்துவங்கும் என்பதுதான் இப்போதை மிகப்பெரிய சிந்தனைக் குடைச்சலாக இருக்கின்றது.

-

Oct 31, 2011

இருள்


சட்டென தொலைந்த மின்சாரத்தில், மிதந்துகொண்டிருந்த ஒளியும், கசிந்து கொண்டிருந்த ஒலியும் தீர்ந்துபோனது. எங்கு நோக்கினும் அடர் இருள். சாலையில் கால் பதித்தபோது, நடுஇரவிலும் பரபரப்பாய் இயங்கும் நகரத்தின் மற்றொரு முகமாய் அமைதி நீண்டு கிடந்தது. நிலவில்லாத வெளுத்தவானம். குறை இயக்கத்தில் இருக்கும் நீண்ட சாலையைப் பார்க்கும்போது அந்த அமைதி சலனமில்லாமல் உறங்கும் ஒரு குழந்தையைப் போலிருந்தது.

ஓசை போன்றே வெளிச்சமும் அமைதியைத் தின்றுவிடுவதாகத் தோன்றியது. வெளிச்சம் மிகு இடத்தைவிட குறை வெளிச்சத்தில் அதிக அமைதியை உணரமுடிவதாகத் தோன்றியது. அது மனதுக்குள் தோன்றுவது மட்டும்தான், உண்மையாக இருக்க முடியாது. வெளிச்சம் இருக்கும் இடத்தில் பரபரப்பு மிகுவதால் மட்டுமே அமைதி இருப்பதில்லை என்பதை புத்தி திரும்பத் திரும்பச் சொன்னாலும் மனதிற்குள் மட்டும் அப்படியே தோன்றிக்கொண்டிருந்தது. ஆனாலும் அடர்த்தியான இருளே பெரும்பாலும் அமைதியை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இருள் எப்போதும் மிரட்சியை கொடுக்கிறது, அதே இருள்தான் அற்புதமான தனிமையையும் கொடுக்கிறது.

பரபரக்கும் சாலையும், என்னேரமும் இடமும் வலமும் மனிதர்களாலும், வாகனங்களாலும் மிதிபடும் வீதியும் தன்மேல் மென்மையைப் போர்த்திக் கொண்டதுபோல் தோன்றியது. சட்டென மின்சாரம் தொலையும் பொழுதுகளில், மனிதர்கள் சுதாரித்து தங்கள் இயக்கத்தைத் தொடரும் வரையிலான அமைதியென்பது அலாதியானது, கனமானது, சிற்சில நேரம் பயமூட்டுவதும் கூட. மின்சாரம் தொலைந்த பின்னிரவு நேரத்து நகர்புறத்தின் அமைதி அழுத்தமானது.

வாகன வெளிச்சத்தில் மட்டும் எப்போதாவது முகம்பார்க்கும் அந்தச் சாலையில் திரும்பினேன். இருபக்கச் சாலையின் ஒருபக்கத்தில் தடுப்பு வைத்து மூடி, ஒருபக்கச் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டிருந்தன. சிறிது தூரம் கடந்தபின் புரிந்தது, மூடப்பட்டிருந்த சாலையில், சாலை செப்பனிடும் பணி விறுவிறுப்பாய் நடந்து கொண்டிருந்தது. மின்சாரம் தொலைந்ததின் சுவடு ஏதுமில்லை அங்கு. சரக்குந்தின் முகப்பு வெளிச்சத்தில் பரபரப்பாய் இயந்திரங்களும், மனிதர்களும் எல்லோரிடமிருந்தும் தனித்து, இருளிலிருந்து வெகுதூரம் தங்களைப் பிரித்து, தங்களுக்கான உலகத்தில் வெகுவாய் இயங்கிக் கொண்டிருப்பதாகப் பட்டது.



பயமுறுத்தும் இருளை விடிய விடிய ஒளியேற்றி பசியாற்றிக் கொண்டேயிருக்கின்றோம். இருளில் சுழலும் மர்மங்களும் சளைக்காமல் ஒளியைத் தின்று தீர்க்கின்றது. இருள் நிரந்தரமானது, அவ்வப்போது ஒளி தோன்றுகிறது அல்லது எதாவது ஒரு வகையில் ஏற்றிக்கொண்டிருக்கிறோம் என மனதிற்குப்பட்டது.

நினைவோ, புனைவோ எதை எழுத்தில் கொண்டுவர நினைத்தாலும், அதற்கு இரவுகள் பெரும்பாலும் உகந்த நேரமாக அமைந்துவிடுகின்றன. முன்னிரவிலிருந்து படியும் இருள் தன்னோடு அமைதியையும் துளித்துளியாய் படியச்செய்கிறது. அமைதி தவழ்ந்தோடும் மனதில் சிந்தனைகள் ஆனந்தமாய் விளையாடத்துவங்கும். விளையாடும் எண்ணங்கள், மனதிற்குள் தளும்பித்தளும்பி விரல்கள் வழியே எழுத்தாகச் சிந்துகிறது.

அதே சமயம் இரவுகளில், உறக்கம் சூழும் தருணத்திற்குச் சற்றுமுன்பாக பளிச்செனத் தோன்றி, காலையில் எழுதிக்கொள்ளலாம் என தன்னம்பிக்கையோடு(!) எழுதாமல், குறிக்காமல் விட்டு, உறக்கம் தின்றதில் இழந்த அற்புதமான வரிகள் நிறைய உண்டு. விடிந்து எழுந்து யோசிக்கும்போது, இரவு தோன்றியதன் சுவடுகள் அற்றுக்கிடக்கும்.

இருளில் தொலைவதுமுண்டு, மீள்வதுமுண்டு. தொலையத் தூண்டிய இருள் மிரட்டி மீட்டுக்கொடுத்த சுவாரசியமும் உண்டு. ஏதோ ஒரு மனநெருக்கடி எரிக்கும் துன்பத்தில், சுற்றங்களிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள ஓடமுயல்கிறார். அடர்த்தியாய் சூழ்ந்திருந்த இருள், தனக்குள் பதுக்கி வைத்திருக்கும் அச்சப் பேய்கள் மூலம் எழுப்பிய ஓசையில், மிரண்டு புறப்பட்ட இடத்திற்கே திரும்புகிறார். எந்த இருள் தன்னைச் சுற்றம் நட்பிலிருந்து தனித்துக்கொள்ளத் தூண்டியதோ, அதே இருள்தான் வேறொரு ரூபத்தில் மீட்டும் கொடுத்திருக்கிறது.

இருள் குறித்து அடர்த்தியாய்ச் சிந்திக்க, எப்போதோ எழுதிய இருட்டு கவிதையொன்று நினைவிற்கு வருகிறது.

பழகிச் சலித்த இடமெனினும்
கோரப்பல் கூரிய நகமென
எதையாவது மனக்குகையில்
நிரப்பித்தான் வைக்கிறது
புதிதாய் புகுந்தாளும் இருள்...

மெதுவாய் பாதம் பாவி
கலைக்காமல் கைகள் துழாவி
இருளில் சுற்றும் மாயப்பிசாசை
கண்கள் தின்று தீர்க்க
கரைகிறது அச்சக்குன்று...

இருளே ஆதியும் அந்தமும்
கருவறையோ கல்லறையோ
உடனிருப்பது இருளேயெனினும்
இடைவந்த வெளிச்ச மோகம்
இருளைத் தின்று வாழ்கிறது!

இருளைப் புரிந்துகொள்ள, பழகிப்பார்க்க, அனுபவிக்க, ஓடியலைந்து தேடித்திரிய வேண்டியதில்லை. இன்று இரவு நிச்சயம் இருள் வரும். வந்த இருளை வரவேற்க ஏற்றிய விளக்கை எட்டி அணைத்துவிட்டால் போதும். இருள் இறுக அணைத்துக்கொள்ளும். இருளோடு கூடலாம், கொஞ்சலாம், சண்டையிடலாம், சவால் விடலாம், விழித்திருக்கலாம், உறங்கலாம், சிந்திக்கலாம், சிரிக்கலாம்.

இன்னும் சில மணிகளில் இன்றைய தினத்தின் இருள் ஒட்டுமொத்தமாக வடியப்போகிறது. இரவை உறங்கித் தீர்க்கும் நாமும் இன்னொரு தினத்திற்கு இன்னொருமுறை விழிப்பை நோக்கி நகரலாம். நகர்தல் வெளிச்சத்திலும் நிகழும். எவ்வளவு நகர்ந்தாலும் அது அந்த தினத்தின் இருளை நோக்கித்தான்.

நகர்வோம்.


~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
நன்றி திண்ணை

 .

Aug 26, 2011

பல இரவுகளில் ஓர் இரவு



இரவின் நிறம் கூடக்கூட அழுத்தமும் கூடத்தொடங்கியது. ஏன் உடைந்ததென்று தெரியவில்லை, அந்தக்கணத்தில் அது உடைந்திருக்கலாமாவென்றும் தெரியவில்லை. ஆனாலும் மனது சுக்கு நூறாய் உடைந்து சிதறிக் கிடந்தது. தோல்வி தோல்வி தோல்வி என எல்லாவற்றிற்கும் மனது அரற்றிக் கொண்டேயிருந்தது.

இதுவரை அணிந்திருந்த முகமூடிகள் மீது சொல்லொணா வன்மம் வந்து குடியேறியது. எப்படியேனும் முகமூடியை அணிந்து, யாரும் அறியாவண்ணம் முடிச்சிட்டு நேர்த்தியாய் மறைத்த உழைப்பு மறந்துபோனது. அப்படியே கூரிய நகங்களை இருபக்க கன்னப்பகுதியில் அழுத்தி முகமூடியை பிய்த்தெறியும் வெறியோடு இழுத்தான். சற்றும் முகமூடி அசையவில்லை, நகங்களை அழுந்த அனுமதிக்க மறுத்து கெட்டித்துக்கிடந்தது. நகங்கள் மட்டும் மடங்கி, நகக்கண்ணில் வலி பூத்தது.

முகத்தை அழுந்த தடவிப்பார்த்தான், கொஞ்சம் சுருக்கம் பாய்ந்திருந்தது. என்ன வேடம் இப்போது அணிந்திருக்கிறோமென்று புரிபடவில்லை. பூண்ட வேடங்களும், அணிந்த முகமூடிகளும் ஒன்றா இரண்டா!? எந்தக்கணத்தில் சுயம் தொலைந்ததென்பது மறந்துபோயிருந்தது. எப்போதிலிருந்து முகமூடிகள் சுயத்தை சிதைக்கத் துவங்கின என்பதும் மறந்துபோய்விட்டது. முகத்தைத் தடவிய விரல்களில், இப்போது எந்த வேடம் புனைந்திருக்கிறொமென்பதை உணரமுடியவில்லை. நெற்றி ஒரு வேடத்தை, புருவம் ஒரு வேடத்தை, கன்னம் மூக்கு மூக்கு பிரிதொரு வேடத்தை நினைவூட்டியது. கண் இமைகள் இமைக்க மறந்துபோய் விரைத்திருந்தது. உதடுகளிலொரு நிரந்தரச்சிரிப்பு அப்பிக்கிடந்தது. சிரிக்கும் உதடுகளை விரல்கள் கடக்கும் போது, உள்ளுக்குள் இருந்து பொங்கிவந்தது ஒரு குமட்டல். உள்ளுக்குள் சொல்லொணாத் துயரோடு சுமக்கும் ரணங்களில் வழியும் சீழ் குமட்டி வெளிவந்து, நிரந்தரமாய் பொய்யாய் சிரிக்கும் உதடுகளில் வழிந்தது. சீழின் நாற்றமும், உதடுகளில் படிந்திருக்கும் சிரிப்பின் போலிப்புரட்டும் சேர்ந்து அதீத அயற்சியைப் புகட்டியது.

”வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற வாசகம் ஒரு கணம் மனதிற்குள் வந்துபோனது. ”எவண்டா இதச் சொன்னது” என்ற ஓங்காரக் கோபம் வந்தது. ”வாழ்வேமாயம்” என்ற வாசகம் மனதிற்குள் வந்து ”வாழ்க்கை வாழ்வதற்கே” வாசகத்தை துரத்தியடித்தது. ஏன் இப்படியொரு வாழ்க்கை வாழவேண்டும் எனத்தோன்றியது, உடன் இலவச இணைப்பாக ”ஏன் வாழக்கூடாது” என்ற கேள்வியும் வந்தது. இரண்டுமே செயற்கைத்தனமான கேள்விகளாகத்தோன்றியது. சினிமாவும் இன்னபிற பொழுதுபோக்குகளும் இது போன்ற நாடகத்தனமான பல சொற்றொடர்களை, கேள்விகளை தனக்குள் திணித்திருப்பதை உணரும் போது, எது நிஜம், எது நாடகத்தனம் என்பதே குழப்பமாய் இருந்தது.

எதை நோக்கிய பயணம் இந்த வாழ்க்கை என்பதில், ஒன்றேயொன்று மட்டும் விடையாகத் தெரிந்தது. அது மரணம். மரணம் என்பதை நினைக்கும்போதே அது அபசகுணம் என்ற உணர்வு வந்தது. அது எத்தனை நிஜமாய் இருந்தாலும் அது பற்றிச் சிந்திக்க மனதில் வலுவிருப்பதில்லை. விருப்பமுமிருப்பதில்லை. மரணிப்பதற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்று நினைக்கும்போதே வறட்டுப் புன்னகையொன்று உதட்டில் வந்துபடிந்தது.

மரணத்தை நோக்கிய பயணத்திற்காக மட்டுமே பிறக்கிறோம், அதை நோக்கி கடிகாரத்தின் நொடிமுள்போல், ஒவ்வொருநொடியும் ’டிக்டிக்’கென நகர்ந்து கொண்டிருக்கிறோம் எனத்தோன்றியது. இப்படித் தோன்றுவதும்கூட நாடகத்தனமோ எனவும்பட்டது. அவன் மேலேயே அவனுக்கு சொல்லொணாக்கோபம் கொப்பளித்து. ’எதுதாண்டா நிஜம்’?, ’எல்லாமே நாடகமோ?’ எனத் தோன்றியபோது அவன்மேலேயே அவனுக்கு அயற்சியும் அலுப்பும் கூடியது.




சிந்தனைகள் பின்னிக்கிடந்த மூளை எதையும் புதிதாய் சிந்திக்கமறுத்தது. எதைச் சிந்திக்கத் முனைந்தாலும் சிந்தனை சிக்கலையும், மரணத்தையுமே மையப்படுத்தியது. வாழ்வது வீணென்று சொன்னமனதே சாவதும் எளிதன்று எனவும் சொன்னது. மூளைக்குள் ஏதோ ஒன்று நெளிவது போலவும், அந்த ஒன்று இரண்டாகி நான்காகி எட்டாகி பதினாறாகி என நினைக்கும்போது இதுதான் பைத்தியத்தின் முதல்கட்டமென்றோ எனவும் தோணியது. சிந்தித்து சிந்தித்து மூளை களைத்துப்போய், சிந்தனைகளைத் தொலைத்து மௌனித்துக்கிடந்தது. மௌனம் சூழ்ந்திருக்கிறதென நினைக்கும்போது விழிப்புத்தட்டியது. விழிப்பெது, சிந்தனை தொலைந்த உறக்கமெது எனவும் குழப்பம் குடிபுகத் தொடங்கியது!

சிந்தனை ஊறல்கள், விழிப்பு எரிச்சல், உறக்க மௌனம் என ஒவ்வொன்றாய்க் கடந்து, வெதுவெதுப்பும், வெளிச்சமும் படியப்படிய அது விடியல் எனத்தோன்றியது. எப்போது தூங்கினோம், என்ன நடந்தது, இன்னும் உயிரோடுதான் இருக்கிறோமா, பைத்தியம் பிடித்துவிட்டதா என்ற குழப்பத்தோடு கண்ணில் கட்டியிருந்த பூளையைத் துடைக்க, விழிகள் விடுதலையடைந்தது போன்ற உணர்வு படிந்தது.

மெதுவாய் எழுந்து கதவு திறக்க, காற்றும் வெளிச்சமும் குபீரெனப் புகுந்தது. வீதி அதன்போக்கில் கிடந்தது, தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அவரவர் போக்கில் நடமாடிக்கொண்டிருந்தனர். அடிக்கடி கண்ணில்படும் ஒற்றைக்கால் இல்லாத அந்த தெருநாய் ஒரு ரிதத்தோடு ஓடிக்கொண்டிருந்தது. முதன்முறையாக அந்த நாய்க்கு சாப்பிட எதாவது போட வேண்டும் என அவனுக்குத் தோன்றியது.

--------------------------------------------------------------------------------------------------


 வல்லமைhttp://www.vallamai.com/blog/archives/7148/ மின்னிதழில் வந்த இடுகை. நன்றி வல்லமை.

Aug 9, 2011

எச்சங்கள்


மூச்சுத்திணறத் தழுவி தளரும் இருள்
தொலைத்த காதலை மீட்டும் பிறைநிலா
பாசமாய்ப் பிணைந்து பிரியும் குளிர்காற்று
எங்கெங்கோ தெரியும் சில வெளிச்சப்புள்ளிகள்
கைபேசி குறைசப்தத்தில் வழியும் இளையராஜா
ஏதோ தெருவில் தன் இருப்பை உ(கு)ரைக்கும் நாய்
உலகையே இரண்டாய்வெட்ட முயலத் துடிக்கும் இடி
உச்சியில் பொட்டென விழுந்து சிதறும் ஓர் மழைத்துளி
எப்போதாவது ஊரை வெளிச்சத்தில் குளிப்பாட்டும் மின்னல்
எங்கிருந்தோ கரைந்துவந்து காதுகளில் தீரும் ஒலிப்பான் ஒலி
ஏதோவொரு சன்னலில் மெதுவாய்க் கசியும் மழலையின் சிணுங்கல்
மின்சாரம் தொலையும் நள்ளிரவுகளின் மொட்டைமாடி உலாத்தல்களில்
மிதந்துகொண்டேயிருக்கிறது வாழ்க்கையின் சில எஞ்சிய கொண்டாட்டங்கள்

-0-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...