Showing posts with label நடை. Show all posts
Showing posts with label நடை. Show all posts

Oct 24, 2013

அது போதும்!



மழை கொட்டித் தீர்த்த விடியல் கொள்ளை அழகு. விடிவதற்கு முன்பே தெருவிளக்கு வெளிச்சத்தில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் தண்ணீரைத் தாண்டி காலை நடைக்காகச் செல்வதில் அலாதி சுகம். வழக்கமான நேரம்தான், வழக்கமான வீதிதான், வழக்கமான நடைதான். எனினும் அதிகாலை நடையின்போது வீதிகள் காட்டும் முகம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமானது.

வீதித் திருப்பத்தில் இருக்கும் மரமல்லி மரத்தைப் பார்த்தபோது, முந்தைய சந்திப்பில் சிதறிக் கிடந்திருக்கும் பவழமல்லியைப் பார்க்கத் தவறியது நினைவுக்கு வந்தது. மல்லி எங்கு கிடந்தாலும் தன் வாசத்தின் மூலம் தான் அங்கேயிருக்கிறேன் எனச் சொல்லி விடுகிறது.

ஒவ்வொரு காலையிலும் மரமல்லி கொத்துக்கொத்தாய் உதிர்ந்து கிடக்கும். தூரத்திலிருந்து பார்க்கும்போதே, சோடியம் விளக்கு வெளிச்சத்தில் மின்னிக்கொண்டு கிடக்கும். பெருக்கப்படாத மரத்தடியில் தினமும் விழும் பூக்கள் குப்பையாய் தேங்கிக்கிடக்க, அதன்மேல் வெள்ளையாய் உதிர்ந்து கிடக்கும் மல்லி என்னை அள்ளிக்கொள் என்றழைக்க, ஒருபோதும் தவறுவதில்லை. என்றைக்காவது சட்டெனக் குனிந்து ஒன்றோ இரண்டோ பூ எடுத்து, நாசியருகே வைத்து மூச்சைஆழ்ந்து இழுப்பதுண்டு. வேகமாய் மூச்சை இழுக்கையில் பெரிதாகப் பூவின் வாசத்தை உணர்ந்துவிட முடிவதில்லை. இயல்பான சுவாசத்தின்போது பூ கசியவிடும் வாசனையே இயல்பாய் ஒரு சுகந்தத்தை தருகின்றது. கடக்கும் கால்களும், வாகனச் சக்கரங்களும் கருணையின்றி மலர்மேல் கடந்து போவதை பலமுறை காண்பதுண்டு. குறைந்த பட்சம், அந்த மரத்தைக் கடக்கையில் எந்தப் பூவையும் மிதித்துவிடாமல் ஒதுங்கிச் செல்வது மட்டுமே, என்னால் சாத்தியமாகிறது.




ஒன்று மிக மிகச் சொற்பமாய் மட்டுமே மரமல்லி உதிர்ந்துகிடந்தன. ஓரளவு தெளிவாயிருந்த மரத்தடியில், இரவு பெய்த மழைத் தண்ணீர் ஓடிய தாரைகள் தெரிந்தன. எத்தனை பூக்கள் என எண்ணிவிடும் அளவுக்கே கிடந்தன. மரமல்லிக்கு எதும் சீசன் இருக்குமோ, இனி உதிர்வது குறையுமோ என்ற சந்தேகம் எழுந்தது. அநேகமாய் இரவு அடித்த மழையில் பூக்கள் கொட்டி அடித்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். அதனால் இப்போது கொஞ்சம் பூக்களே உதிர்ந்திருக்கலாம் எனத் தோன்றியது.

மரத்தை அண்ணாந்து பார்த்தேன். சோடியம் விளக்கு வெளிச்சம் இலையில் பட்டு மின்னிக் கொண்டிருந்தது. அவ்வளவாய் பூக்கள் கண்ணில் படவில்லை. மரத்தைப் பிடித்து உலுக்கிப் பார்க்கலாமா எனத் தோன்றியது. உலுக்குதல் எளிதல்ல என மரத்தின் பருமன் சொன்னது. மரத்தைவிட்டு தேவையான தூரம் கடந்திருந்தேன்.

வெள்ளை ஷூ அணிந்து கதர் வேட்டி சட்டையில் திடகாத்திரமாய் வழக்கமாய்  நடக்கும் அந்தப் பெரியவர் எதிரில் வந்து கொண்டிருந்தார். எவரையும் அண்ணாந்து பார்த்துப் பேசவைக்கும் உயரம் கொண்ட அவருக்கு வயது 70 க்குமேலும், எடை 90 கிலோவிற்கு மேலும் இருக்கலாம். மார்பை நிமிர்த்தியவாறு சீரான வேகத்தில் தொய்வின்றி நடக்கும் அவரைக் காணும்போது நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். நொடிப்பொழுதேனும் கொஞ்சம் விரைப்பாய் நடை போடவைக்கும்.

டவர் லைன் தாண்டும்போது பாலு எதிரில் வந்தார். நீண்ட கால நண்பர். அந்த நீள வீதியில் மட்டுமே திரும்பத் திரும்ப நடப்பவர். ஒவ்வொரு முறையும் எதிர் திசையில் மட்டுமே அவரைக் காண்பதுண்டு. அவர் என்னை ஒதுங்கியோ, நான் அவரை ஒதுங்கியோ அல்லது முன்பின் என ஒரே திசையிலோ நாங்கள் ஒருபோதும் நடந்ததில்லை. தினமும் எதிரெதிரே சந்தித்தாலும் பேசிக்கொள்வதில்லை. கொஞ்சம் தூரத்திலேயே ஒருவரை ஒருவர் கவனித்து விடுவோம். 10 அடி தூரத்தில் இருக்கையில் பெரிய புன்னகையோடு வணக்கம் சொல்லும் பாவனையில் கை உயர்த்திக் கொண்டே இருவருமே கடந்து விடுவதுண்டு.  சொற்கள் தேவைப்படாத சிநேகத் தருணங்கள் ஒருவித அழகு.

தார் சாலையில் மழைபெய்த ஈரம் மட்டுமிருந்தது. பாதளச்சாக்கடைக்கு தோண்டிய, இன்னும் தார் ஊற்றப்படாத வீதிகளில் மட்டும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. அப்படித் தேங்கிக்கிடந்த நீரில் பாட்டி ஒருவர் என்னவோ செய்து கொண்டிருந்தார். தெரு விளக்கு வெளிச்சம் அவர் மீது விழுந்து மொத்தமாய் கொண்டிருந்தது. செம்புலப் பெயல் நீர் தகதகதத்தது. ஒரு பெரிய கேரி பேக்கில் நீரை அள்ளிக் கொண்டிருந்தார். தண்ணீரில் மீன் பிடிக்கிறாரோ எனத் தோன்றியது. நேத்து பெய்த மழையில் எப்படி மீன் இருக்கும் என்றது புத்தி. அகலமான துண்டு அல்லது வேட்டி கொண்டு வாய்க்காலில் மீன் பிடித்த காலமும், பெரிய ஜவுக்காயிதத்தில் தண்ணீரை அள்ளி மீன் கிடைக்குமா எனத் தேடிய நாட்களும் நினைவில் வந்தது.

மலையாளிகள் இருவர் வழக்கம்போல் மலையாளத் தமிழில் உரக்கப் பேசிக்கொண்டே கடந்தார்கள். ஏன் இவர்கள் இருவரும் மலையாளத்தில் பேசிக்கொள்ளாமல் தமிழில் பேசிக்கொள்கிறார்கள் எனப் புரியவில்லை.

நடுத்தர வயதைத் தாண்டிய ஒருவர் பைக்கில் நின்றவாறு, வாசல் கேட்டின் உள்பக்கம் நின்றிருந்த அவர் வயதொத்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். காலை 5 மணிக்கு சாவகாசமான சாயங்கால அரட்டைபோல் அமைந்த அந்தக் காட்சி ஆச்சரியமாய் இருந்தது.

ஒரு வீட்டின் முன்பிருக்கும் செடியில் காவி வேட்டிக்காரர் பூ பறித்துக்கொண்டிருந்து தெரிந்தது. சில வாரங்களுக்குமுன் ஒரு மாலைப் பொழுதில் காலனி பூங்காவில் பெருசுகள் மத்தியில் கொஞ்சம் அதிகாரத் தோரணையோடு பேசிக்கொண்டிருந்தார். புல்வெளியில் ஓடும் குழந்தைகளை அங்கிருந்தே விரட்டிக் கொண்டிருந்தார். காலைப் பொழுதில் தினமும் எதாவது ஒரு வீட்டு செடிகளிலிருந்து சில பூக்களைப் பறித்து தான் வைத்திருக்கும் கேரி பேக்கில் சேகரித்துக் கொண்டேயிருப்பார்.

வீதிகளைக் கடந்து அந்த முக்கிய சாலையில் இணையும்பொழுது, இருவர் சரசரவென என்னை முந்திக்கொண்டு நடந்தனர். அதில் ஒருவர் எதாவது சிக்னலில் தென்படும் போக்குவரத்துக் காவலர். ஏட்டு மட்டத்தில் இருக்கவேண்டும். இன்னும் ஏட்டாக இருப்பாரா அல்லது எஸ்.எஸ்.ஐ நிலைக்கு உயர்ந்திருப்பாரா என நினைக்கையிலேயே அவர்களுக்கும் எனக்குமிடையேயிருந்த இடைவெளி வளர்கிறது. 



’எப்படி அவர்கள் மட்டும் இத்தனை வேகமாய் நடக்க முடிகிறது, நம்மால் முடியாதா?’ என நானும் நடையை எட்டிப்போடுகிறேன். வேகம் கூடியும் இடைவெளி சுருங்கவேயில்லை. வியர்வை புதிதாய்க் கிளைவிடுகிறது. மூக்கில் சுவாசித்தது போதாமல் வாயாலும் சுவாசிக்க வேண்டியிருப்பதை உணர்கிறேன். மூச்சுக்காற்றில் அணிந்திருந்த கண்ணாடியில் ஆவி படர்வது தெரிகிறது. புழக்கப்பட்ட வார்த்தைகளில் சொல்லவேண்டும் நுரை தள்ளிக்கொண்டிருந்த நிலையை உணரத் துவங்கினேன். ’இது தேவையா!?’யென என்னையே கேட்டேன். ”தேவையில்லை”யென என்னிடமே சொன்னேன். இயல்புக்கு வந்தேன். ஆனாலும் இப்போது வேகம் கூடியிருந்தது. வலது பக்க வீதியில் நுழைகிறேன்

முதல் வீடு காவல்துறை கண்காணிப்பாளர் வீடு. கேட் ஓரம் சென்ட்ரி நின்று கொண்டிருக்கிறார். நிற்கும் துப்பாக்கியை ஒரு கையில் பிடித்தவாறு, மறு கையில் மலரொன்றை முகத்தருகே சுழற்றிக்கொண்டிருக்கிறார். அது நந்தியாவட்டை பூவாகயிருக்கலாம். எப்போதோ நந்தியா வட்டை பூவைப் பறித்து அப்பா கண் இமைகளில் அமுக்கி, இது கண்ணுக்கு குளிர்ச்சி எனச்சொன்னது நினைவுக்கு வருகிறது. கையில் கேமரா இருந்திருக்கலாம் எனத்தோன்றியது. மாவட்ட ஆட்சியர் வீட்டு வாசலோரம் ஒருவர் உதிர்ந்துகிடந்த பூக்களைக் கூட்டி சாக்கடையில் தள்ளிக்கொண்டிருக்கிறார். ஆட்சியரின் கேம்ப் ஆபீஸ் வருகிறது. கடந்த ஆண்டு நண்பர் ஆல்பர்ட்டோடு ஆட்சியரை இந்தக் கேம்ப் ஆபிஸில் சந்தித்துப்பேசியது நினைவுக்கு வருகிறது. வளாகத்திற்குள் அவர் வாக்கிங் போய்க்கொண்டிருப்பாரா என எட்டிப்பார்க்கிறேன். உள்ளே அவரின் வெள்ளை ஸ்கார்பியோ நடுச்சாம மழை நீர்த்துளிகளோடு மின்னுகிறது. காரின் மேற்பகுதி முழுதும் மேலேயிருந்து உதிர்ந்திருக்கும் மரமல்லிப் பூக்களால் போர்த்தப்பட்டிருக்கிறது. ’வெள்ளை பூக்கள் போர்த்திய வெள்ளைக்கார்’ என்றொரு வரி மனதில் முளைக்கிறது.

இரண்டாம் திருப்பத்தில் மீண்டும் ஒரு மரமல்லி மரம். ஓரமாய் கொஞ்சம் இடம்விட்டு தெரு முழுக்க பூக்கள் விழுந்து கிடக்கின்றன.  இங்கு மட்டும் எப்படி இத்தனை பூக்களென நினைத்துக்கொண்டே கடக்கிறேன்.

காலை நடை துவங்கிய நாள் தொட்டே முந்தைய நாள் பயணப்பட்ட தடத்தில் முடிந்தவரை செல்லக்கூடாது என்பது தீர்மானம். திருப்பங்களில் மனம் எங்கே திரும்ப பணிக்கிறதோ அதன் வழியில் நீள்வதே அன்றைய பாதை. கிட்டத்தட்ட எல்லா நாளும் ஆறுமணிக்குள் வீடு திரும்பி ஏகாந்தமாய் முதல் மாடியில் இருக்கும் வீட்டு வாசலில் வியர்வையோடு அமர்ந்து வீசும் தென்றலில் உலரும் போதையின் மீது பெருங்காதல்.

வீதியோர அரளிச்செடியில் ஒரு பெண் பூ பறித்துக் கொண்டிருக்கிறார். இருளும் விளக்கொளியும் கலந்த ஒய்யார வெளிச்சத்தினடியில் குழந்தையொன்று நின்று கொண்டிருக்கிறது. ’இவ்வளவு சீக்கிரத்தில் குழந்தை முழிச்சிக்குதே’ ஆச்சரியம் சூழ்கிறது. வீட்டில் மகள் இந்த நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள். பள்ளி நாட்களில் அவளை எழுப்ப குறைந்தபட்சம் அரைமணி நேரப் போராட்டம் தேவைப்படுகிறது. ஆனால் இந்த சின்னப்பிஞ்சு இத்தனை காலையில் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறதே என நினைத்துக்கொண்டே, குழந்தையைப் பார்த்து பெரிதாய் புன்னகைக்கிறேன். என்னைப் பார்த்து தலையை ஆட்டியவாறே இதுவரை கண்ட அனைத்துப் பூக்களையும் ஒன்றாய்க் கோர்த்த அளவில் புன்னகையொன்றை வீசுகிறது. மெல்லிய மின்சாரம் பாய்ந்ததுபோல் உற்சாகம் தோன்றுகிறது. வேகத்தைக் குறைத்து ’வா’ என சாடைகாட்டியபடி கடக்கிறேன். ’மாட்டேன்’ என இடவலமாய் தலையசைத்துச் சிரிக்கிறது. சில அடிகள் கடந்திருப்பேன், குழந்தை பின்னால் ஓடிவருகிறது என்ற உணர்வு தோன்ற திரும்பிப் பார்க்கிறேன். பின் தொடர்ந்து ஓடிவந்துகொண்டிருந்தது. நின்று ’வா’வென கை நீட்டுகிறேன். வந்த வேகத்தில் என் கையில் தட்டிவிட்டு தன் அம்மாவை நோக்கி ஓடுகிறது. அந்த பெண் முகத்தை அப்போதுதான் பார்க்கிறேன் முகமெங்கும் மலர்ச்சியாய் தன்னை நோக்கி ஓடிவரும் பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அந்த மழலை கொடுத்த புன்னகைப் பரிசும், உற்சாகமும் அந்த தினத்திற்கு ரொம்பவே போதுமெனத் தோன்றுகிறது.


-

Feb 1, 2013

ஒரு பாதை இரு பார்வை




டை பிடித்துப்போன ஒன்றாகிவிட்டது. பெரும்பாலும் வெளியூர்ப் பயணங்களுக்கு ரயிலுக்குச் செல்லும்போது இரவுகளில் முடிந்தவரை நடந்தே செல்வது வாடிக்கை. அது பிடித்தமானதும்கூட.

பகலில் ஓடிய மனிதர்களின் ஓட்டம் மெல்ல அடங்கி, இரவு ஆளுமை செய்யத்தொடங்கும் நேரமது. நள்ளிரவுக்கு சற்று முன்பும் பின்பும் எப்பொழுதுமே நகரம் ஒருவித இயல்புக்கு மீறிய அழகினை தன்மேல் பூசிக்கொள்ளத் தவறுவதில்லை. சமீபத்தில் ரயில் பயணங்கள் ஏதும் அமைவதில்லை என்பதாலேயே இம்மாதிரியான இரவு நடைகளும் வாய்ப்பதில்லை.

அன்றைக்கு கொஞ்சம் வேலை அதிகம். அலுலகத்தின் இரும்பு சுருள் கதவை வேகமாக இழுத்துவிட்டு பூட்டுகளை அமுக்கி பூட்டிய கணம் சர்வ நிச்சயமாக உணர்ந்தேன், சாவிகளை உள்ளேயே வைத்து பூட்டிவிட்டேன் என்பதை. அலுவலக சாவிகளோடு, என் பைக் சாவியையும் சேர்த்து!

நேரத்தைப் பார்த்தேன் இரவு 11.34 காட்டியது. எப்பொழுதோ நான் செய்த பாவங்கள் ஒருவிநாடி மின்னல்போல் ஒளிர்ந்து சுட்டுவிட்டு மறைந்தன. வேறு ஏதும் வாய்ப்புகளே இல்லை என்றபோதும் எதாச்சும் வாய்ப்பிருக்கா என யோசித்தேன். மாடிமேல் அலுவலகம் வைத்திருக்கும் நண்பர் ஏற்கனவே சென்றுவிட்டார் எனத் தீர்க்கமாக அறிந்தும் அவர் கதவு திறந்திருக்கிறதா எனப் பார்த்தேன். எல்லாவற்றையும் விட முட்டாள்தனமாக பூட்டிய பூட்டுகளை ஒருவேளை திறக்குமோ என இழுத்தும் பார்த்தேன்.

யாரையாவது போனில் அழைக்கலாமா என யோசித்தபோதே, ”ஓ… நடக்க மாட்டீங்ளோ?” என மனசாட்சி கேட்டது.

பல ஆண்டுகளாக தினம்தினம் வந்துபோன சாலையில் அன்றுதான் முதன்முறையாக நடுநிசியில் நடக்க ஆரம்பித்தேன். பாதையின் ஒவ்வொரு தப்படியும் வித்தியாசமாகத் தோன்றியது. அடிக்கடி தேடி ரசிக்கும் நிலா அன்று எனக்கு தரிசனம் கொடுக்கவில்லை.

ஒரு இருநூறு மீட்டர் தூரம் கடந்திருப்பேன். இருள் நிரம்பிக் கிடந்தது. ”ஓ… இந்த ஏரியா பவர் கட் 11-12 போல எனத்தோன்றியது” மின்சாரம் தொலையும் இரவுகள் வெகுசீக்கிரத்தில் பழகிப்போய்விட்டன. கனிசமாக பனி பொழிந்துகொண்டிருந்தது. சில வீடுகளில் மனிதர்கள் வாசற்படியில் முக்காடிட்டவாறு அமர்ந்திருந்தனர். வீதிமுழுக்க இருள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. ஏதாவது வீட்டின் சன்னலில் கசியும் வெளிச்சத்தில் மட்டும் அவ்வப்போது மிகச் சிறிய அளவிற்குக் கலைந்தது.

இத்தனை ஆண்டுகளாய் வந்துபோன வீதிகளில் இத்தனைவித வீடுகள் இருக்கின்றதா எனும் ஆச்சரியமும் தோன்றியது. பழைய தினமலர், ஜெகநாதபுரம் காலணி, உழவன் நகர் எனக் கடந்து கம்பர் வீதியின் குறுகிய திருப்பத்தில் நுழைந்தபோது நாய் ஒன்று ஓங்கிய குரலில் குரைக்கத் தொடங்கியது. கணீரென்று ஒலிக்கும் குரல் அக்கம்பக்கத்து நாய்களுக்கெல்லாம் உடனே தொத்திக்கொண்டது. ஒன்றாய் ஓங்கிய குரலில் குரைக்கத் துவங்க, மனிதர்களற்ற அந்த இருள் வீதியின் மையத்தில் ஒரு அடர்ந்த கானகத்தை கற்பனை செய்யத்துவங்கினேன். குரைக்கின்ற நாய் கடிக்காது எனும் பழமொழி, பேருந்து பெயர்ப்பலகையில் நகரும் LED எழுத்துக்களாக சிந்தையில் மெல்லிய நடுக்கத்தோடு நகர்ந்தோடியது. நாய்களின் குரைப்பைக் கடந்து நடை வேகத்தைக் கொஞ்சம் கூட்டினேன்.

சட்டைப்பையில் இருந்த கைபேசி லேசாகத் முனகியது. குறுந்தகவல். ”Morning Walking?” என நண்பரிடமிருந்து. “Now Going” எனப் பதிலளித்தேன். மிக நிச்சயமாக அதிர்ச்சியடைந்திருப்பார். அந்த அதிர்ச்சி குறித்து என் இதழில் குறுஞ்சிரிப்பு வழிவதை நானே உணர்ந்தேன். அடுத்த சில விநாடிகளில் ”Now??????? Why???” என வந்ததிலேயே அதில் இருக்கும் பதட்டமும் ஆர்வமும் புரிந்தது. “Tell u tomo” எனப் பதில் அளித்துவிட்டு நாளைக்கு இதற்கு எப்படி கதை, திரைக்கதை அனுப்பலாம் என யோசிக்கத் துவங்கினேன். இப்போது நடந்துவிட்டதால் காலை வாக்கிங் போகவேண்டியதில்லை என்பதே கொஞ்சம் குதூகலத்தைத் தந்தது.

*

ந்த புத்தாண்டு இரவில் 12 மணி வரை புத்தாண்டை வரவேற்க கண் விழிக்காமல் உறக்கத்தை அணைத்ததால், விடியல் உறக்கத்தைப் புறந்தள்ளி வெகு எளிதாக என்னைச் சூழ்ந்தது. மிகச் சுறுசுறுப்பாகக் கிளம்பி நடையை விரைவாக எட்டிப்போடத் துவங்கியபோது காலை 5.15. ஒரு வாரம் முன்பு கட்டாயத்தின் பேரில் நடந்த அதே பாதையை இந்த இளம்காலை நேரத்தில் விருப்பத்தின் பேரில் நடந்து அளக்கலாம் என்பது கூடுதல் உற்சாகத்தைத் தந்தது.

கம்பர் வீதியின் முடிவில் அன்றைய இரவில் அநியாயத்துக்கு குலைத்த அந்த நாய்களில் நான்கைந்து சாலை ஓரமாக சுருண்டு படுத்திருந்த காட்சி ஒரு ஓவியம்போல் தெரிந்தது. பெரும்பாலான வீட்டு வாசல்களில் விதவிதமான கோலமும், கோலத்தின் மேல் பகுதியில் அரைவட்டமாக Happy New Year என கோணல்மாணலாக கோலமிடப்பட்டிருந்தது.

ஒரு புத்தாண்டை மனிதர்கள் எத்தனையெத்தனை விதமாக கொண்டாடுகிறார்கள் என மனது அசைபோடத் தொடங்கியது. அடுத்த நாளுக்காக முந்தையை இரவே ஊரடங்கிய நேரத்தில் கூடுதலாய் கண் விழித்து கோலமிட்டவர்கள், இந்த அதிகாலையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கலாம் எனத் தோன்றியது. நீண்ட வீதியின் மையத்தில் மிகப் பெரிய எழுத்தில் சுண்ணாம்பாலும் எழுதப்பட்டிருந்தது. வாசலில் கோலமிட்டு வாழ்த்துக் கோலமிட்டவர்கள் யாரை நினைத்து கோலமிட்டிருப்பார்கள்?.

சிலரை மனதில்கொண்டு சிலர் கோலமிட்டோ, எழுதியோ இருக்கலாம். பலர் உற்சாகத்தில் ஏதாவது செய்ய வேண்டுமேயென எழுதியும் கோலமிட்டும் இருக்கலாம். அந்த தினத்தின் முன்பாதி நேரத்தில் அந்த வாழ்த்துகளை நூறு அல்லது ஆயிரம் விழிகள் வருடிச்செல்லலாம். ஆனால் விடியும் தருணத்தில் அவ்வளவு தொலைவிற்கு விதவிதமான வாழ்த்துகளை வருடும் கொஞ்சம் விழிகளில் என் விழிகளும் என்பது கூடுதல் இறுமாப்பைக் கொடுத்தது.

நடையை எட்டிப்போட ஆரம்பித்தேன். கட்டாயத்தின் பேரில் முன்பொரு நடுநிசியில் முனகலோடு நடந்து எட்டிய தொலைவினை அந்தக் காலையில் உற்காசமாகத் தீர்க்கத் துவங்கினேன். நால்ரோடு சந்திப்பு வரை நடந்து திரும்பும்போது கவனமாக இன்னொரு வழியைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தேன்.

கடந்து போகும் அந்த வீதிகளிலும் விதவிதமான கோலங்கள், வாழ்த்துகள் என எந்த ஆண்டும் இதுவரைக் காணாத அளவில் கண்களினூடே மனதில் நிரப்பிக்கொண்டே வந்தேன்.

*

ஒரே செயலை கட்டாயத்தின்பேரிலும், விருப்பின்பேரிலும் வேறுவேறு மாதிரி அணுகுவதிலிருந்து, இந்த மனது எப்போது மாறத்துவங்கும் என்பதுதான் இப்போதை மிகப்பெரிய சிந்தனைக் குடைச்சலாக இருக்கின்றது.

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...