Showing posts with label நண்பர்கள். Show all posts
Showing posts with label நண்பர்கள். Show all posts

Mar 30, 2015

சிங்கப்பூர் பயணம் - 5



வாசகர் வட்ட ஆண்டு விழா முடிந்து உணவு உண்டுவிட்டு கிளம்பும்போது இரவு 10 மணி இருக்கும். எங்கு செல்கிறோம் என எதுவும் சொல்லாமல் நண்பர்கள் அழைத்துச்சென்றனர். ஹாஜா கார் ஓட்டிக் கொண்டிருந்தார். கோபல் கண்ணன், கருணாகரசு உடன் இருந்தார்கள். 2013ல் நான் சிங்கப்பூர் வந்திருந்தபோது, எனக்கு இவ்வளவு நண்பர்கள் இல்லை. ஊரிலிருந்து என்னோடு வந்திருந்தவர்கள் இந்தோனேஷியா சென்றுவிட நான் மட்டும் தனித்திருந்த ஒரு முழுநாளை உடன் இருந்து, சுற்றித்திரிந்து பயனுள்ளதாக்கியவர் கருணாகரசு. அவரோடு அப்போது தேசிய நூலகமும், மெரினா பே பகுதிக்கும் சென்றது மறக்கமுடியாத ஒரு அனுபவம்.

அறச்சீற்றம் பொங்கும் ஒரு கவிஞனாய் மட்டுமே வலைப்பக்கத்தில் கருணாகரசுவை அறிவேன். உரையாடும்போது பேச்சுவாக்கில் நறுக்குகளாய் விழும் அவரின் நகைச்சுவை துணுக்குகள் அசரடிப்பவை. ஒரு கட்டத்தில் ”கருணாகரசு இனி கவிதை எழுதுறதை நிறுத்திட்டு உரைநடை எழுத ஆரம்பியுங்கள்” எனச் சொல்லுமளவுக்கு அவரின் நகைச்சுவைத் துணுக்குகள் வழியெங்கும் சிதறிக் கொண்டேயிருந்தன.

வண்டி நிற்கும்போதுதான் கடற்கரைக்கு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். அலைகளற்ற தண்ணீரும், தூரத்தில் நிற்கும் பிரமாண்ட கப்பல்களில் மின்னும் விளக்குகளுமாய் கடல் எங்களுக்காக தம் கரையில் கொஞ்சம் இடம் வைத்திருந்தது. நண்பர்கள் குயில்தோப்பு என்ற குழுவாய் இருப்பவர்கள். ஹாஜா, ரமேஷ் ராஜு, தாம் சண்முகம், கண்ணன், கருணாகரசு, பனசை நடராஜன் ஆகியோரோடு நானுமாய் அந்த இரவின் நிமிடங்களைத் தின்ன ஆரம்பித்தேன்.

அவர்களில் கண்ணன், கருணாகரசு தவிர்த்து அனைவருக்கும் நான் மிக மிகப்புதியவன். ஆனாலும் காலம் காலமாய் பழகிய பால்ய நட்புகளின் உரையாடல் போலே, கிண்டலும் கேலியும், தீவிரமான பகிர்வுகளுமென பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டேயிருந்தோம்.



கடற்கரையெங்கும் திட்டுத்திட்டாய் விதவிதமான மனிதர்களின் கூட்டம். இருளும் ஒளியும் கலந்து காற்றாய் வீசும் அந்தக் கடற்கரையில் எவரும் எவரைப் பற்றியும் சிந்தனைகொள்ளாது, அவரவர் அவரவர் நிமிடங்களை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக எவரும் எவர் குறித்தும் அச்சமின்றி, அங்கு இருப்பதே அந்த தேசத்தின் அடையாளம் என்றால் அது மிகையாகாது.

அனுமதி பெற்று, கடற்கரையில் நண்பர்களாக, குடும்பமாக கூடாரம் அமைத்து இரவு முழுக்க தங்கி பேசி, தூங்கிவிட்டுச் செல்லலாம் என அறிகையில் பெருமையாகவும், பொறாமையாகவும் இருந்தது. காலணிகளில் மின்னும் விளக்கோடு இரவிலும் ஸ்கேட்டிங் செல்கிறார்கள் அல்லது ஓடுகிறார்கள். சக்கரங்களில் மின்னும் விளக்கோடு மிதி வண்டிகள் வளைந்து நெளிந்து செல்கின்றன. வாழ்தலின் மிக ரசனையான பக்கங்களை அப்போது அங்கிருக்கும் மனிதர்கள் எழுதியும், வாசித்தும் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. இருக்கும் கொஞ்சம் கடற்கரையை மிக நேர்த்தியாகப் பயன்படுத்தும் அவர்களின் பழக்க வழக்கமும் நமக்கு ஒரு பாடம்தான்.


இலக்கியம், எழுத்தாளர்கள், இந்திய அரசியல், புத்தக வெளியீடுகள், கூட்டங்கள், விழாக்கள் என கலந்துகட்டி உரையாடியதில் நான் அறிந்து கொண்டவை சிங்கப்பூரின் எழுச்சி, சிங்கப்பூரின் தந்தை, சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைமுறை என வித்தியாசமானவை.

-
சிங்கப்பூர் பயணம் - 1

 
சிங்கப்பூர் பயணம் - 2
 

சிங்கப்பூர் பயணம் - 3

சிங்கப்பூர் பயணம் - 4

-

Mar 25, 2015

சிங்கப்பூர் பயணம் - 4



உட்லண்ட்ஸ் நூலகத்தின் அந்த சரிவான அரங்கம் அமைதியாய்க் காத்திருந்தது. இதுவரையிலான எல்லா நிகழ்வுகளுக்கும், உரைகளுக்கும் சாட்சியமாய் அந்த அமைதி தென்பட்டது. வாசகர் வட்ட தோழமைகள் அங்குமிங்குமாய் நிகழ்வின் துவக்கத்திற்காக இயங்கிக்கொண்டிருந்தனர். பொதுவாக எந்த ஒரு நிகழ்வும், துவக்கப் புள்ளி வரைதான் அழுத்தமும், அலை பாய்ச்சலும், பதட்டமும், நெருக்கடியும். துவங்கிய நொடியிலிருந்து ஆற்றில் விழுந்த மழைத்துளிபோல அதன் போக்கில், அது செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்றுவிடும்.

முன் வரிசையில் அமர வைக்கப்பட்டேன். தெரிந்த நண்பர்கள் ஒவ்வொருவராய் வந்து ஆங்காங்கே அமரத் தொடங்கினர். சிலரை நான் அடையாளம் கண்டு கொண்டேன். பலர் அடையாளம் கண்டு பேசினார்கள்.

ஒரு நிறுவன ஒழுங்கோடு நிகழ்ச்சி கச்சிதமாகத் துவங்கியது. நேர நிர்வாகத்தில் உறுதியாக இருப்பார்கள் என முன்பே எனக்கு பல வகைகளில் உணர்த்தப்பட்டிருந்தவாறே நிகழத் தொடங்கியது.

அழகுநிலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொகுப்பாளருக்கான ஆளுமையும், நளினமும் அவருக்கு மிகப் பெரிய பலம். மாணவி ஒருவரின் இறை வணக்கம், மாணவிகளின் நடனம், அனிதாவின் வரவேற்புரை, சித்ரா ரமேஷின் வாசகர் வட்ட நிகழ்வுக் குறிப்புகள், புத்தக அறிமுகங்கள் என ஒவ்வொன்றாய் அதனதனன் அளவுக்குள் நேர்த்தியாக நிறைவேறின. புத்தக வெளியீடுகள், நினைவுப் பரிசுகள் என எல்லாமே கச்சிதம். இது போன்ற கச்சிதமான விழாக்களை நாங்களும் பலமுறை நடத்தியுள்ளதால், ஒவ்வொன்றையும் அதன் இயல்போடும் நேர்த்தியோடும் பொருத்திப் பார்த்துக்கொண்டேன். நேரம் அதிகம் எடுத்துக்கொண்டவரை அழகு நிலா கையாண்ட விதம் சுவாரஸ்யத்துக்குரியது.

புத்தக அறிமுகங்களுக்கு பிறகு, புத்தக விற்பனைக்காக மேடை ஒத்திவைக்கப்பட்டது ஒரு நல்ல செயல் எனப்பட்டது. பொதுவாக விழாவின் இடையில் இடைவெளி விடுதல், தொய்வை ஏற்படுத்தும் என்பது நான் கருதியிருந்த ஒன்று. ஆனால், நிகழ்வின் முக்கிய நோக்கத்தில் குறிப்பிடத்தக்கது புத்தக வெளியீடுகள் எனும்போது அதற்கான நேரம் ஒதுக்கியது நான் கற்றுக்கொண்ட ஒரு செயல். இடைவெளிக்குப் பிறகு வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டேன்.






படைப்பாளிகள் குறித்த ஒரு சிறுகவிதையோடு துவங்கி, ஒவ்வொருவருடைய புத்தகங்களின் உள்ளடக்கங்களை நானறிந்த வரையில் பாராட்டி, ஷானவாஸ் புத்தகத்தை படிக்க ஆவல் கொண்ட நண்பன் குறித்த சம்பவத்தில் நிறுத்தி… ஆழ்கடலையும், அந்த உப்புக்காற்றையும், அடர் மேகங்களையும் கடந்து வந்திருப்பது, வழங்கப்படும் 600 நொடிகளுக்குள் வாழ்த்துரையாற்றிட மட்டுமே என்பதாக இல்லாமல், சற்றே அவர்கள் மனதோடு உரையாட வந்திருப்பதையும் சொன்னேன்.

அங்கு சென்றதிலிருந்து அண்ணா, தம்பி, மாப்ள, நண்பா, சார் என அவரவருக்குப் பிரியப்பட்ட மாதிரி அழைத்த நட்புகளிடமிருந்தது, இவர் ஃபேஸ்புக் நண்பர், வலைப்பதிவர், எழுதுகிறவர் என்பதையெல்லாம் கடந்து, தம் மண்ணிலிருந்து, தம் மண் வாசனையை, தம் வட்டார மொழியை, தாம் சுவாசித்த காற்றை சுமந்து வந்திருக்கிறவர் என்பதாகவே இருந்ததாய் நான் உணர்ந்தேன்.

சிங்கப்பூரென்றால் ஒரு சுற்றுலா தளம், விதிகள் கடுமையானவை, சுத்தமாக இருக்கும் என்பதோடு, வருமானத்தையும், செலவையும் 45 ரூபாயால் பெருக்கி அவரவர் நிலைக்கேற்ப பெருமிதமும், பொறாமையும் கொள்ளும் ஒரு நாடாகவே பெரும்பாலும் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. அத்தோடு சென்னையை சிங்கப்பூராக்குகிறேன் என அரசியல்வாதிகளும், எங்கோ விளைந்துகொண்டிருந்த நிலத்தை விலை நிலமாக்கி அதற்கு சிங்கப்பூர் சிட்டி எனப் பெயர் வைத்த வியாபாரிகளும் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் என்பது வேறொரு தனிக்கதை.

உண்மையான சிங்கப்பூரை நமக்கு அடையாளப்படுத்த வேண்டிய கடமை அங்கிருக்கும் படைப்பாளிகளுக்குத்தான் மிக முக்கியமாய் இருக்கின்றது. நானெல்லாம் எழுத வந்த காலத்தில் வலையுலகத்தை ஆளுமையோடு ஆண்டு கொண்டிருந்த பல வலைப்பதிவர்கள் சமீப காலங்களில் எழுதுவதில்லை என்ற ஆதங்கம் எப்போதுமுண்டு. எழுத்தாளன் செத்துவிட்டதாக அறிவித்த எழுத்தாளரைச் சந்தித்தபோதும்கூட, அவரே முன்பு கூறியிருந்ததை வைத்து, அவர் இன்னும் எழுத வேண்டிய பதினைந்து நாவல்களின் கடன் மிச்சமிருப்பதாகச் சொன்னதை நினைவு கூர்ந்தேன். அதேபோல் ஒவ்வொரு பதிவருக்கும், ஒவ்வொரு படைப்பாளிக்கும், வாசகருக்கும் தாம் எழுதவேண்டிய அளவுக்கான பக்கங்கள் எழுதப்படத் தயாராகவே இருக்கின்றன, அவர்கள் எழுத வேண்டியது மட்டுமே அப்போது அவசியமாய் இருக்கிறதென்பதைச் சொன்னேன்.

ஆயிரம் சொற்கள் எழுதி எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாத நிலையில், இரண்டு வரி நிலைத்தகவலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திட முடியும் என்பதை, நான் சமீபத்தில் தந்தைக்கும் மகளுக்குமான ஒரு நிகழ்வினை, ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாய் எழுதியதையும், அதன் விளைவுகளையும் கூறி, உரை நிறைவு செய்து இறங்கினேன்.

சிறப்புரையாற்றிய எழுத்தாளர் ஜோ.டி.க்ரூஸ், நான் இறுதியாகச் சொன்ன அந்த குழந்தை உதாரணத்தை மிக அழகாக மீனவர்கள், அரசு குறித்து பொருத்தி இரண்டு முறை பேசினார். ஆளுமையும், உடல் மொழியுமாய் மிகச் சிறப்பாகப் பேசிய ஜோ.டி.க்ரூஸ், உரையின் நிறைவில் கேள்வி கேளுங்கள் என்றார். உங்கள் புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற ரீதியில் எழுந்த கேள்விகள் கண்டு ஆச்சரியமாய் இருந்ததைவிட, அயர்ச்சியாய் இருந்தது. சில கேள்விகள் சவாலாய் அமைந்தன.

அன்பிற்குரிய ஏ.பி.ராமன் என்னருகில் இருந்தார். ஒரு பத்திரிக்கையாளருக்கே உரிய கவனத்தோடு குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார். அடுத்த நாள் அது அழகியதொரு பகிர்வாக வந்தபோது, குறிப்பேட்டில் சேகரித்த கிறுக்கல்கள் இத்தனை அழகாய் பூக்குமா என ஆச்சரியப்பட்டேன்.

2008ல் நான் முதன் முதலில் பதிவுலகத்திற்கு வந்திருந்தபோது, பதிவுலகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த நண்பர்கள் கோவி.கண்ணன், குழலி புருஷோத்தமன், வெட்டிக்காடு ரவிச்சந்திரன், கே.வி.ஆர், சிங்கைநாதன், தம்பிகள் முஸ்தபா & வெற்றிக்கதிரவன் ஆகிய மூத்தபதிவர்களின் வருகை கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். அவர்களில் கே.வி.ராஜாவை மட்டும் முதன்முறையாக சந்தித்தேன். கே.வி.ஆருடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சிக்குரியது என்பதற்கு, தனிப்பட்ட காரணமும் உண்டு.

ஹரிகிருஷ்ணன், ஆமருவி தேவநாதன், எம்.கே.குமார், அபிராமி. பழனியப்பன், முனைவர்.தின்னப்பன், புஷ்பலதா நாயுடு, தினமலர் புருஷோத்தமன், நிர்மலா, அமல் ஆனந்த், தியாக ரமேஷ், அன்வர், சரவணன், முத்துக்குமார், நசீர், அதியன், ராம் சந்தானம், லலிதா சுந்தர், ஆறுமுகம், டாம் சண்முகம், கருணாகரசு, கண்ணன், பனசை நடராஜன், ரமேஷ், ஹாஜா, சசிக்குமார் என அன்பு ததும்பும் பலரை ஒரே இடத்தில் சந்தித்தது மிக மகிழ்வான ஒன்று.

உணவு அரங்கில் திகட்ட திகட்டப் பாராட்டினார்கள். அநேகமாக நான் வாழ்நாளில் எதிர்கொண்ட அடர்த்தியான, அதிகமான பாராட்டு அதுவாகத்தான் இருக்கும். ஒரு வகையாய் பாராட்டு அலைகளிலிருந்து சற்றே விலகி நிதர்சனத்திற்குள் நடக்க ஆரம்பித்தேன். இவர்கள் பாராட்டும் அளவிற்கு பேசியிருக்கிறேனா என்ற கேள்வி எனக்குள் குறுக்கும் மறுக்குமாய் ஓடிக்கொண்டேயிருந்தது. பதிவுலக நண்பர்களின் பாராட்டு கூடுதலாய்த் தெம்பு தந்தது. எனினும் வழக்கம்போல் இன்னும் சிறப்பாக பேசியிருக்கலாம் என்பதாய் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இதுவரையிலும் இந்த உரைதான் சிறப்பு, கச்சிதம் என்ற நிறைவினை நான் உணர்ந்ததேயில்லை. யார் எவ்விதம் பாராட்டினாலும், இன்னும் சிறப்பாய் பங்களித்திருக்கலாம் எனும் ஒருவித குறுகுறுப்பு இருந்துகொண்டேதான் இருக்கின்றது. அதே நேரம் வாசகர் வட்ட நிகழ்வில் நான் சிறப்பாக ஏதேனும் செயல்பட்டிருந்ததாக பெருமை கொண்டால், அது அத்தனையும் அனிதாவிற்கும், ஷானவாஸ், சித்ரா ரமேஷ் உள்ளிட்ட வாசகர் வட்ட நண்பர்களுக்குமே சாரும்.

-

நிகழ்ச்சி குறித்த தாளம் நிகழ்ச்சி காணொளி


மேலும் வாசிக்க..


சிங்கப்பூர் பயணம் - 1
சிங்கப்பூர் பயணம் - 2

சிங்கப்பூர் பயணம் - 3

-

Mar 18, 2015

சிங்கப்பூர் பயணம் - 2


சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்பே சிங்கப்பூர் பயணத்திற்கான விமான பயணச்சீட்டுகள் வந்துவிட்டன. பயணம் குறித்து துளியும் சிந்திக்காத அளவுக்கு வேலை நெருக்கடி. வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ரயில். புதன்கிழமை இரவு 11 மணிக்குத்தான் உடைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தேன். பயணம் குறித்து எந்தச் சலனமும், சிலிர்ப்புமின்றி புறப்பட்டது இந்தப் பயணமாகத்தான் இருக்க வேண்டும். காரணங்களும், இலக்குமற்ற எத்தனையோ பயணங்களில் கொண்டிருந்த குறுகுறுப்பும், மனவோட்டங்களும் அற்று, காரணங்களோடும், காரியங்களோடும் கிளம்பிய இந்தப் பயணம் ஏன் சலனமற்ற மனவெளியைத் தந்திருந்தது எனப் புரியவேயில்லை. மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை பெய்த அந்த மாசி மாதத்துப் பெரு மழையை மறக்கவே முடியாது.

என்னோடு அனிதாவின் அம்மாவும் பயணப்பட்டார்கள். நாள் முழுக்கவும், விமானத்தில் கைபேசியை அணைக்கும் வரையிலும் அனிதாவிடமிருந்து திரும்பத் திரும்ப ஒளி(லி)த்தது “அம்மாவ பத்ரமா பாத்துக்க… அம்மாவ பத்ரமா பாத்துக்க”

வெள்ளிக்கிழமை காலை 4.30க்கு சிங்கப்பூரில். நண்பர் மோகன்ராஜ் காத்திருந்தார். வீடு சென்று நிறையப்பேசி, கொஞ்சம் உறங்கி எழுந்தபோது சிங்கப்பூர் வெயிலும், வெளிச்சமும் உரசத் துவங்கியது. 25ம் மாடியில் இருக்கும் வீட்டிலிருந்து அருகாமையில் கடலும், அதில் மிதக்கும் கப்பல்களையும் பார்க்கலாம். 2013ல் இரண்டு நாட்கள் இருந்து அந்தக் காட்சிகளில் உறைந்திருந்த நினைவுகள் மீட்டியது.

மதியம் ஷானவாஸ் வந்தார். சிங்கப்பூர் வாழ்க்கை குறித்தும், அங்கிருக்கும் மனிதர்கள் குறித்தும் உரையாடல் நகர்ந்தது. எப்படிப்பட்ட மனிதர்களையும் சிங்கப்பூர் அதன் தரத்திற்கேற்ப செதுக்கிக்கொள்ளும் எனச் சொன்னபோது அவர் வார்த்தைகளிலிருந்த உறுதியின் கடினத்தன்மை என்னை பெரு வியப்பில் ஆழ்த்தியது. பத்து காசு குறைவாக வைத்துக்கொண்டு ஒரு பொருளை வாங்க தடுமாறிய மலாய்க்காரர் குறித்துச் சொல்லும்போது, மனதார அந்த பத்துக்காசை விட்டுத்தருகிறாயா என கேட்டதாகச் சொன்னது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிங்கப்பூர் குறித்து இந்தக் கேள்விப்படல்கள் புதுவித அனுபவம் எனக்கு. ஷானவாஸ் ஆகச்சிறந்த ஒரு கதை சொல்லியாக இருக்கிறார். ஒரு சில நிமிடங்களுக்கு ஒரு காட்சியை, நிகழ்வை அவர் உணர்வுப் பூர்வமாக விவரிக்கும் விதம் அலாதியானது. அவரோடு கிளம்பினேன்.

கோமளவிலாஸ் உணவகத்தில் கமலாதேவி அரவிந்தன், ஜோ.டி.க்ரூஸ், சித்ரா ரமேஷ், சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் ராம கண்ணபிரான், பாடலாசியர் நெப்போலியன், ராஜேஷ் ஆகியோருடன் மெல்ல ஒன்ற ஆரம்பித்தேன். குழுவாய் அமர்ந்து உரையாடும் மனிதர்களோடு இணைந்துகொள்ளும் போது சொற்களற்று அவர்கள் உரையாடுவதைக் கேட்டுக் கொண்டேயிருப்பது ஒருவித போதையாய் அமைந்துவிடுகிறது.




இடையில் விடைபெற்றுக்கொண்ட ஷானவாஸ் சரவணன் அல்லது கண்ணன் உங்களைக் கவனித்துக்கொள்வார்கள் எனச் சொல்லியிருந்தார். ஜோ.டி.க்ரூஸ் அவர்கள் தங்கியிருந்த அறைக்குத் திரும்பியபோது சரவணன் காத்திருந்தார். அப்போது தெரியாது அவர் எனக்குள் சில சன்னல்களைத் திறந்துவிடப்போகிறார் என்று.

மீண்டும் ஒரு சிறு உரையாடலுக்குப் பிறகு பிரிந்தோம். கண்ணன் வருகை தாமதமானதால் சரவணனுடன் பைக்கில் கிளம்பினேன். பைக்குகள் மிக அரிதாகத் தென்படும் சிங்கப்பூரின் சாலைகளில் சீறும் அவர் பைக்கில் செல்வதே ஒரு அலாதியான அனுபவம்.

எழுத்து குறித்தும், அவர் எழுதாமை குறித்தும், எழுத்தாளர்கள் குறித்தும் ’மெரிலயன்’ சிலையின் பின்பக்கமாய் அமர்ந்து, மிரட்டும் அந்த பெரிய காபி கோப்பையைக் கையில் பிடித்தவாறு பேசுவதும், பருகுவதுமாய் இருந்தோம். எதைச் சொன்னாலும் மறுக்காமல், முடக்காமல், முழுதாய் உள்வாங்கி தன் கருத்தைச் சொல்லும் சரவணன் உரையாடலுக்கு மிக உகந்த நபர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. நிறைய நேரம் பேசிய பிறகு ஒரே ஒரு விசயம் குறித்து நான் நிறையப் பேசிவிட்டேனோ என்ற சங்கட உணர்வும் வந்தது. உரையாடலில் மனம் நிறைந்ததற்கு நிகராய், பெரிய அளவிலான அந்த காபியில் வயிறும் நிறைந்திருந்தது.

கண்ணனும், கடலூரன் ஹாஜா மொய்தீனும் காத்திருந்தார்கள். அவர்களோடு இணைந்தோம். சாப்பிட வேண்டும் என வற்புறுத்தினார்கள். காரிலும், பைக்கிலும் தனித்தனியே புறப்படும் போது டாஸ்மாக் அருகே சந்திப்போம் என்றார்கள். ஏதோ ஒரு மதுக்கடையைக் குறிப்பிடுகிறார்கள் என நினைத்தவனுக்கு, தமிழகத்தின் சாட்சாத் டாஸ்மாக் கடை வடிவிலே டாஸ்மாக் என்ற பெயரோடு, வடிவத்தோடு அந்தக் கடை இருந்தது கண்டு அதிர்ச்சி ஏற்பட்டது. அது ஒரு சாதுர்யமான வியாபார யுக்தியாக இருந்தாலும், பிழைக்க வந்திருக்கும் தமிழர்களை அங்கும் இலக்கு வைத்து ஒரு மதுபானக் கடை அதே பெயரை யுக்தியாக வைத்திருப்பது நெருடலாகப் பட்டது. 



காயத்ரி உணவகத்தில் நண்பர் ஹாஜா தடாலடியாக உணவுகளை தேர்ந்தெடுத்தார். தொண்டைக்குழி வரை நிரம்பியிருந்த காபி என்னால் எதையும் சாப்பிட முடியாது என அறிவிக்கச் சொன்னது. சொல்லியும் பார்த்தேன். அவர் கேட்ட உணவுகள் ஒவ்வொன்றாய் வர, அதன் சுவையில், அவர்களின் அன்பான உபசரிப்பில், அநேகமாக அங்கிருந்த நால்வரில் நான்தான் அதிகம் சாப்பிட்டிருப்பேனாக இருக்கும். 



அந்த இரவுப் பொழுதில் உணவோடு ஒரு தோல்வியையும் ருசித்தேன் என்றே சொல்ல வேண்டும்.


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...