Apr 12, 2010

அடர்த்தியாய்.....

பேசும் மௌனம் 
விடிந்தது கல்யாண வீடு
அடுக்கும் நாற்காலிகளில்
கனமாய் உட்கார்ந்திருந்தது
பேசித்தீர்த்த கேலியும், கிண்டலும்


காயும் நிழல்
கொதிக்கும் வெயிலில்
குதித்தோடும் குழந்தைகள்
சீண்டப்படாத மரத்தின் கண்ணீர்
தேங்கிக் கிடக்கிறது நிழலாய்.....


முரண்
பசித்தவன் வாரிக்கொள்கிறான்
மிஞ்சியவன் வீசிய சோற்றை
காலியாகிறது குப்பைத் தொட்டி
குப்பையாகிறது சமத்துவம்


எச்சில் வாசம்
பிதுங்கி வழியும் பேருந்தில்
மடிமேல் இருத்தி பின் பறித்துச்சென்ற
மழலை வழியவிட்ட எச்சில்
பயணிக்கிறது காயாமலே

____________________________________

Apr 10, 2010

கோடியில் இருவர்

சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ஓரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று.
மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது... ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ!!!?

கோடியில் ஓருவர் 1
ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரேஎன்று கேட்க ஆரம்பிக்கும் போதே “அட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்கஎன்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.

தன்னுடைய வீட்டிலேயே கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டிருக்கிறார் 56 வயதான திரு. நாகராஜன் (04294-314752 / 94865-20483) அவர்கள். மிக மிகச் சாதாரணமான ஓட்டு வீடு. எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போட்டு விட்டு மிகுந்த சினேகமாக சிரிக்கிறார். 

இந்த மாமனிதர் தனது 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து,  முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது  ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.
ஆரம்பத்தில் தன் செயல்களைக் கண்டு பைத்தியகாரன் என்று ஊரே சொன்னது எனச் சொல்லி சிரிக்கிறார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில் மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் கீச்கீச்சென கத்துகிறது என்று சொல்லும் போது அவரது முகம் மகிழ்ச்சியில் திழைக்கிறது.
பேச்சினிடையே, எவ்வளவோ மறுத்தும் சமையலறைக்குச் சென்று அரிவாள்மனையில் எலுமிச்சம் பழத்தை அரிந்து, சர்பத் தயாரித்துக்கொடுத்து உபசரிக்கிறார். மகள் வயிற்றுப் பேரன் இவரோடு வளர்கிறார், அதோடு அந்தச் சிறுவனும் தற்சமயம் நான்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.
தினமும் காலையிலும், மாலையிலும் மரம் நடுவதையும், அதனைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல. சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் என அவ்வப்போது பல சில்லறை காரணங்களைச் சொல்லி மரங்களை சர்வசாதாரணமாக வெட்டி வீசுகிறார்கள் எனக்கூறும் போது அவருடைய மனதில் உணரும் வலி அப்படியே முகத்தில் வந்து படிகிறது. குறிப்பாக மரத்தின் கிளையை ஒரு நாள் சரக்குக்கும், பரோட்டாவிற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக்கிறார்கள் என அறியும் போது நமக்கே மனது வெம்புகிறது.
ஒவ்வொரு மரத்தையும் தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசன், புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையாய் எட்டு திசையிலும் வளர்த்தெடுத்திருக்கிறார். கடும் கோடையிலும் கூட மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி நீர் பெற்று தண்ணீர் தெளித்து செடிகளை காப்பாற்றியிருக்கிறார்.
காஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி விதவிதமான மரக்கன்றுகளை நடவு செய்து அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மிகுந்த ஆச்சரியமாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று.

கோடியில் ஒருவர் 2
சத்தியமங்களத்திலிருந்து பங்களாபுதூர் வரும் வழியில் இருக்கிறது ஏழூர். ஏழூரிலிருந்து வடக்குத் திசையில் திரும்பி ஒரு மைல் கடந்தால் வருகிறது வேட்டுவன் புதூர். முதலில் வரவேற்கிறது மிகச்சிறிய ஒரு கடை. வெளியூர் ஆட்கள என்று தெரிந்ததுமே தானாகவே கேட்கிறார்களஅய்யாச்சாமி அண்ணன தேடி வந்தீங்களா!...

“இந்த மரம் வளர்த்துறாரே என்று இழுக்க, “அட அய்யாச்சாமியண்ணந்தான்.... இந்த அப்பிடி போங்க.. அந்த ஓட்டு வீடுதான்

ஏழூர் சென்று அவரைச் சந்திக்கிறோம் என்ற தகவலைச் சொன்னபோதே காஞ்சிக்கோவில் நாகராஜன் நம்முடம் கிளம்பிவிட்டார். திரு. அய்யாசாமி பற்றி முரளிகுமார் பத்மநாபன் வலைப்பக்கத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

கொளுத்தும் வெயிலில் அந்த வீட்டை அடைந்தோம். ஏழடி அகலத்தில் பதினைந்தடி நீளத்தில் ஒரு ஓட்டு வீடு. குனிந்து உள்ளே எட்டிப் பார்க்கிறோம். இரண்டு கயிற்று கட்டில்களில் இளைத்த உடம்போடு ஒரு தம்பதி, சத்தம் கேட்டு எழுந்து வாங்க என்று வரவேற்கிறார்.
எலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது.

சுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்கஎன்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார்.

அதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போது “அந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம் என்று சொல்கிறார்.

கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன் புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில் பெரியவர் திரு. அய்யாசாமி நமக்காக காத்திருக்கிறார். விடைபெற்றுக் கிளம்புபோது ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணிக்கிறார். வாகனத்தை இயக்கியபடி அந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சுகிறேன், இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்கிறேன்.

இந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்து, மனதிற்குள் அலையடிக்கிறது. யாரோ சிலரின் தியாகங்களால் தானே இந்த உலகம் யாரால் இயங்குகிறது. யாரோ போட்ட பாதையில் தானே நாம் எளிதாய் பயணிக்கிறோம், ஏதோ பறவையின் எச்சத்தில் விழுந்த மரம் வெளியிடும் ஆக்சிசனைத் தானே சுவாசிக்கிறோம்.

ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது. ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கு சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். வறுமையின் பிடிக்குள் இன்னும் சிக்கித்தவிக்கும் இந்த மனிதர்கள் இந்த பூமிக்கு அர்பணித்தது பலாயிரம் கோடிகள் என்றால் மிகையாகது. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை.

இந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவானது. அவர்களிடம் அனுமதியோடு, எப்பாடுபட்டேயானும் அவர்களின் தியாகம் குறித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்து வரும் காலத்திற்கு பதிவு செய்துவிட்டுப் போக வேண்டும். அடுத்து அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.


முதல் கட்டமாக அவர்களை நான் சார்ந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் வரும் ஏப்ரல் 15ம் தேதி என் மனம் கவர்ந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்களை சிறப்பு விருந்தினராக வைத்து ஒரு பாராட்டு விழாவை நடத்த இருக்கிறது. அடுத்து, வரும் ஜூலை மாதம் பதவியேற்கும் எங்கள் அரிமா சங்க புதிய தலைவர் அரிமா. வீ.குருசாமி (94429-83559) அவர்கள், வரும் ஆண்டில் மரக்கன்றுகள் நடுவதை முக்கியத் திட்டமாக மனதில் வைத்துள்ளார். மழைக்காலத்தை மிகச் சரியாக பயன்படுத்தி மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டு வருகிறோம்.

எல்லாம் ஒரு சிறுபுள்ளியில் தானே ஆரம்பித்திருக்கும், இதோ ஒரு சிறுபுள்ளியில் பசுமைக்கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது.
__________________________________________________

Apr 6, 2010

போச்சே... ரெண்டாயிரம்


ஏழு மாசத்துக்கு முந்தி போன
எம்.எல்.ஏ புண்ணியத்துல
இந்த மாசம் வருதாமே
எங்கூருக்கு எடத்தேர்தலு..

தார்ரோடு போடுவாங்களாம்
தண்ணி நிக்காம வருமாம்
பொசுக்பொசுக்குனு போற கரண்டு
இனி பொழுதுக்கும் எரியுமாம்...

டிவி பொட்டி தருவாங்களாம்
வேட்டி சேல தருவாங்களாம்
துண்டு பீடி குடிச்சவங்கூட
சிகரெட்ட பொட்டியா வாங்குறான்

கெடா விருந்து, கர்நாடகா சரக்கு
ஊரு ஒன்னுகூடி பிடிகொடுக்காம பேசுனா
தலைக்கு ரெண்டாயிரம் ரூவாயாம்
ஊட்டுக்கு அஞ்சு லிட்டர் பெட்ரோலாம்

ஊரே கேளு நாடே கேளுன்னு
எல்லாரும் கொண்டாட இந்த
பாழாப்போன பெருசு இன்னொரு மாசம்
கழிச்சு செத்துருக்கக்கூடாதா!

___________________________________
நன்றி : யூத்புல் விகடன்

___________________________________

Apr 4, 2010

மயிரும், வயிறும் வேணா வளரும்

நான் முப்பது வருடங்களுக்கும் மேலாக பார்த்து வந்த வளமான வயல்காடு அது. பவானியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அந்தியூர் செல்லும் வழியில், என் கிராமத்துக்கு திரும்பும் பிரிவில் இருக்கிறது அந்த நிலம். எப்போதும் செழிப்பாக இருக்கும் பூமி. காலம்காலமாய் நெல்லும், மஞ்சளும், கரும்பும் என தொடர்ந்து செழிப்பான பயிர்களோடு வாழ்க்கை நடத்திய நிலம். மழைக்காலங்களில் அருகில் இருக்கும் பள்ளம் நிரம்பி வழியும், வயல் முழுதும் நீர் அலை அடித்துக் கொண்டிருக்கும். முக்கிய சாலையிலிருந்து கிராமத்துக்கு திரும்பும் போது முதன் முதலில் பார்ப்பது அந்த பூமியைத்தான்.
இன்று காலை கிராமத்துக்குச் செல்ல, வண்டியை திருப்பினேன். காலம் காலமாய் பூத்துக் குலுங்கிய நிலம் செத்துக்கிடந்தது. மொத்த நிலமும் வரப்புகள் அழிக்கப்பட்டு சமமாக விரிந்து கிடந்தது. நடுவில் பெரிதாகவும், குறுக்கே சிறிதாகவும் சாலைகள் வகுக்கப்பட்டு, கட்டம் கட்டமாக பிரிந்து, ”ஏதோ ஒரு நகர்” என பெயர் தாங்கிய பிளக்ஸ் போர்டு பளபளத்தது, நட்ட நடுவே ஒரு கீற்றுக்கொட்டகை தெரிந்தது.
நாசமாப்போன நகர்புறத்து பேராசை, பத்து மைல்தாண்டி தன் ருத்ர தாண்டவத்தை, எல்லாப் போகமும் நன்றாக விளைந்து கொண்டிருந்த நிலத்தில் ஆடத் தொடங்கிவிட்டது. இனி, இது அடுத்தடுத்த மைல்களுக்கு நெருப்பாய் பரவும்.
அதிர்ச்சியோடு அருகில் இருந்த அப்பாவைப் பார்த்தேன்.
”ஏக்கரா 25 லட்சத்துக்கு வித்தாங்க, சைட் போட்டு, இப்போ சென்ட் முன்னால 80, பின்னால 60 ஆயிரத்துக்கு போகுது. பாதிக்குமேல வெலை முடிஞ்சிருச்சாம்.”
உள்ளடங்கிய கிராம நிலங்கள் கூட ஏக்கர் பத்து முதல் முப்பது லட்சத்திற்கு விலை போகிறது. புறநகர் பகுதி விளை நிலங்கள், நெடுஞ்சாலையோரம் இருக்கும் பொட்டல் காடுகள் அறுபது லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை விலை போகிறது. இத்தனை காசு போட்டு வாங்கி யாரால் விவசாயம் செய்ய முடியும். சரி எங்கேயிருந்து வருகிறது இத்தனை பணம்.
வண்டியை நிறுத்திவிட்டு விரக்தியோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
நிலத்தில் ஆங்காங்கே சிறிய சிறிய செங்கல் கூண்டுகள் கட்டப்பட்டிருந்தது.
”அது என்ன செங்கல் வச்சு கட்டியிருக்காங்க”
”பிளாட் போட்டா மரம் நடனுமாமே அதுக்குத்தான் செங்கல்லுல கூண்டு கட்டியிருக்காங்க” என்றார் அப்பா.
என் மனதில் ஓடியதை, பக்கத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெரிசு முனகியது
”க்க்கும், சோறு போட்ட பூமிய, கூறு போட்டு கொன்னு போட்டு, மரம் வளர்த்து கிழிக்கப் போறாங்களாம்… விக்கிறவங்க மயிரும், வயிறும் வேணா வளரும்”


______________________________________________________________

Apr 2, 2010

தண்ணி காட்டும் தண்ணீர்

நகர்புறங்களில் தண்ணீர் (இது குடிநீர் அல்ல என்று எழுதிக்கொண்ட) லாரிகள் தீயாய் பறப்பதை ஒரு வித பயத்தோடு பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.

சொந்தமாக ஒன்று, இரண்டு, மூன்று என நிலத்தை பணத்தால் துளைத்து சக்தி மிகுந்த இயந்திரத்தால் நீரை இறைத்துக்கொள்ளும் வசதி படைத்த மனிதர்களுக்கு கோடைகால வறட்சி ஒன்றும் பெரிதாக சுட்டு விடப் போவதில்லை. அப்படியே ஆழ்துளைக் குழாய் அமைதி காத்தாலும் இருக்கவே இருக்கின்றது, விவசாயத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு தண்ணீர் விற்கும் சில நவீன வியாபாரிகளின் கிணறுகளில் நூறுகளுக்கு வாங்கி, வரும் வழியில் அதை ஆயிரமாக்கி, வீடு தேடி வந்து ஆழமான, அகலமான தொட்டியில் நிரப்பிவிட்டுப் போகும் தண்ணீர் லாரிகள்.

வழக்கம் போல் கோடை காலம் தன்னோடு உறிஞ்சிக் கொண்டு போவது சாமானியர்களுக்கான கங்கையான பொதுவில் போடப்பட்டிருக்கும் குழாய் தண்ணீரையும், அருகில் இருக்கும் ”அமுத்துப் பைப்” தண்ணீரையும் மட்டுமே.

சில வாரங்களுக்கு முன், மீன் கொத்திகள் விளையாடிய ஏரிகளின் மையத்தில் காக்கைகளும், கழுகுகளும் அடிவண்டல் சேற்றில் அழுகிக்கொண்டிருக்கும் மீன்களை கொத்தியெடுக்க முகாமிட்டிருக்கின்றன.

கிராமங்களின் உள்ளடக்கிய தோட்டத்து கிணறுகளை நோக்கி நடுத்தர வயதினரின் இரட்டைக்குட நடை பயணமும், எங்கோ தெரியும் கானல் நீரை நோக்கி நீண்ட கேரியரில் பக்கத்திற்கு இரண்டென நான்கு குடங்களோடு சைக்கிள் பயணமும் துவங்கிவிட்டது.

ஆனால் தொண்டையில் மாட்டிய முள்ளாக தவிப்பது நகர்புறத்தின் நெரிசலில் மாட்டிய லைன் வீடு மற்றும் சாக்கடையோரம் கொசுக்களோடு மல்லாடும் மிகச் சாதரணமான குடும்பத்தினர்தான்.

பணத்தை ஊதாரியாய் செலவு செய்வதை தண்ணியாய் செலவழிக்கிறான் என்பது வழக்கம். ஆனால் தண்ணீரை தண்ணியாய் செலவு செய்ய முடியாத யுகத்தில் பெருமை மிகு வாழ்வு வாழ்கிறோம்.

வசதியும் வாய்ப்பும் இருப்பவர்கள் வீணாக்குவது அவர்களுக்கு சொந்தமானதை மட்டுமல்ல. வசதியும் வாய்ப்பும் கிட்டாத மிகச் சாதாரணமாய் இருக்கும் மனிதர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதைத்தான் தட்டிப் பறித்து வீணடிக்கப்படுகிறது.

இலவசமாய் இயற்கை அள்ளித்தரும் தண்ணீரை காசு இருப்பவன் கையகப்படுத்தும் போது, காசு இல்லாதவன் தனக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய தண்ணீரின் உரிமைக்கே அந்நியப்பட்டுப் போகிறான். காசு கொண்டு கையகப்படுத்தியவன் தண்ணியாய் செலவழிக்கிறான், அது தண்ணியாகவே இருந்தாலும்...

சரி... இந்த ஓலமும், புலம்பலும் எதற்காக என்ற கேள்வி வருகிறதா?

இதற்கு நானும் நீங்களும் என்ன செய்யமுடியும் என்ற கேள்வி வருகிறதா?

மரம் நடுவது, மழைநீர் சேகரிப்பது இன்ன பிற விசயங்களையெல்லாம் இந்தக் கோடையைத் தாண்டி செய்வோம்.......

அதற்கு முன் உடனடியாக நானும் நீங்களும் செய்ய வேண்டியது. நம் வீட்டில் இருக்கும் தண்ணீரை தண்ணியாய் செலவு செய்யாமல், கொஞ்சம் சிக்கனம் கடை பிடிப்போம்...

இன்று நம்மிடம் இருக்கிறதே என்று அலட்சியமாக கொட்டி வீணடிக்கும் தண்ணீருக்காக, எங்கோ ஒரு மனிதன் வறண்ட தொண்டையோடு காத்திருக்கிறான் என்ற சிந்தனை வரட்டும்.
அலட்சியமாய் கவிழ்த்து விடும் நீர், ஒரு செடியின் வறட்சியையோ, ஒரு கால்நடையின் பசியை தீர்ப்பதாய் அமையும் என்பதை உணர்வோம்.

  • கை கழுவ, பல்துலக்கும் பிரஷ்சை கழுவ என அருவியாய் திறந்து விடுவதை
  • நீரில் முகத்தில் நனைத்து விட்டு, சோப்பு போட்டு வரக்கு வரக்கென தேய்த்து முடிக்கும் வரை திறந்து விடுவதை
  • ஷவரில் குளிக்கிறேன் பேர்வழியென மனசாட்சியில்லாமல் பல குடம் தண்ணீரை வீணடிப்பதை
  • வீட்டுத்தோட்டத்தில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி வீணடிப்பதை
  • மேல்நிலைத்தொட்டி வழிந்தோடினாலும் கண்டு கொள்ளாத அலட்சியத்தை

குறைந்த பட்சம் இந்த கோடை கழியும் வரையிலாவது நிறுத்துவோம். முடிந்தால் முற்றிலும் வேரறுப்போம். முடிந்தால்... என்ன முடிந்தால்?. முடியும்.


________________________________________________

Mar 31, 2010

பசலை படர்ந்த பந்தல்












வர்ணங்கள் தேய்ந்து வலியோடு
உதிர்ந்து கொண்டிருக்கிறது
நாம் சந்திக்காத நாட்களின்
நாள்காட்டி காகிதங்கள்....

மெதுவாய் என்னை மூடும்
கனவு வலையின் துளைகளில்
கசிந்து வருகிறது சுகந்தமான
உன் நினைவு வெளிச்சம்...

பளபளவென கூர்தீட்டிய
மௌன கத்திகளின் ரசலில்
அறுந்து தொங்குகின்றது
நம் சந்தோசச் சங்கிலி...

சாலையோர பூக்கடையின்
உறங்காத மல்லிகை வாசம்
வெறுமை கனக்கும் மனதில்
உன்னை நிரப்பிவிட்டுப் போகிறது...
___________________________________________________

Mar 27, 2010

நான் ரசித்த….. அங்காடித் தெரு

ஏழ்மையின் பொருட்டு ஊருவிட்டு ஊரு வந்து நேர்த்தியான சீருடையில் கொத்தடிமையாய்(!!!!) வேலை பார்க்கும் ஒவ்வொரு சாதாரண மனிதர்களுக்கும் பின்னால் இருக்கும் வலியை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததிற்காக வசந்த பாலனுக்கு மிகப் பெரிய வணக்கம்.



பரபரப்பான அந்த பேருந்து நிறுத்தத்தில் தினசரி மிகச் சாதாரணமாக பார்க்கும் இரண்டு முகங்களோடு படம் துவங்குகிறது. துவங்குகிறது என்று
சொல்வதைவிட மனதுக்குள் ஒரு புழு போல் நெண்டி நெண்டி உள் நுழைகிறது என்றே சொல்ல வேண்டும்.

பேருந்து நிறுத்தத்தில் பேருந்து வந்து நின்ற பிறகு ‘பஸ் வந்துருச்சு” என்று ஒரு முறை சொல்லிவிட்டு பேருந்தை நோக்கி ஓடும் போது மட்டுமே அந்த இரண்டு வார்த்தை வசனம் வீணடிக்கப்பட்டதாக உணர்ந்தேன், மற்றபடி படம் முழுக்க வசனம் மிக ஆழமாக ஆட்சி செய்வதை மறுக்க முடிவதில்லை.

பயிற்சி நிமித்தமாக, துணிக்கடையில் வேலை செய்யும் நபர்களை சந்தித்தபோது அவர்களுடைய உலகம் பற்றி ஏற்கனவே அறிமுகம் இருந்திருந்தாலும்... ஒரே வண்ண உடையில், அழகழகாய் கடைகளில் சிரித்து சிரித்து நம்மிடம் எப்படியாவது ஒரு துணியை விற்று விட வேண்டும் என மல்லுக் கட்டும் விற்பனை பிரதிநிதிகளின் சிரிப்புக்கு பின்னே இத்தனை வலி இருக்கும் என்பதை ஒரு போதும் யோசித்ததேயில்லை. இனி அவர்களை பார்க்கும் போதெல்லாம் காலும் கூடவே மனதும் வலிக்கவே செய்யும்.



பையன்களும், பெண்களும் தங்கும் அரங்கில் நெருக்கிக் கொண்டு, குவியலாய் தூங்குவதைப் பார்க்கும் போது, உடலெல்லாம் வெம்மையில் எரிகிறது. அண்ணாச்சிகளின் கடைகளில் நெல்லைத் தமிழோடு உழைத்துக் கொட்டும் சிறுவர்களுக்கு அப்பா இல்லாமல், அக்கா தங்கைக்கு கல்யாணம் செய்யவேண்டும் என்ற வேட்கை என்பதுதான் தகுதி என்பது கசக்கிறது. உண்மை பெரும்பாலும் கசக்கவே செய்கிறது.

சூப்பர்வைஸர் கதாநாயகியை மறைப்புக்குள் தள்ளி அடித்தபின், கன்னிப்போன உதடோடு வெளியே வந்தவளிடம் கதாநாயகன் கேட்க “மாரப் பிடிச்சு கசக்கினான்” என்ற வசனம், கடைசிவரை மார்பில் வலியாகவே தங்கியிருந்தது.

வயதுக்கு வந்த பெண்ணுக்கு நீர் ஊற்றி தீட்டுக்கழிக்க வேண்டிய சிக்கலான நேரத்தில் ”இந்த சாமிக்கு தீட்டுங்குறதே கெடையாது” என்ற வசனம் கேட்கும் போது, அந்த சாமியைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது.

அந்த குள்ள மனிதரின் மனைவி தன் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு பேசும் வசனத்திற்குத் தான் திரையரங்கில் அதிகமான கைதட்டலைக் கண்டேன். ஆனாலும் அந்த உண்மை மிக மோசமாக கசந்தது. அந்த கைதட்டல் நம் ஒவ்வொருவரின் கன்னத்திலும் விழுந்த அறையாகவே பட்டது.

கழிவறைத் தொழிலதிபர் பாத்திரம்... ஆஹா.... போட வைக்கிறது....

ஓயாத அலையாய் மனிதர்கள் பொங்கும் வீதியில், ”மனிதர்களை நம்பி ஆரம்பித்தேன், இது வரை மனிதர்கள் கைவிடவில்லை” என்ற அந்தக் கண் தெரியாத மனிதரின் வசனம் வாழ்க்கையின் பல சிக்கல்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு வரி என்றே சொல்லலாம்.



கதைக்கான பாத்திரங்கள் மிக மிகப் பொருத்தமான தேர்வு. படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் வீணடிக்கப்பட்டதாக உணர முடியவில்லை.

குறிப்பாக கனி – அஞ்சலியைப் பாராட்ட புதிதாய் சில வார்த்தைகளைத்தான் நான் தேட வேண்டும், கருங்காலி – வெங்கடேஷ்... சபாஷ் இனி அவர் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தலாம். பழ.கருப்பையா நிஜ மனிதர்கள் பலரை நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை, அதுவே அந்த பாத்திரத்தின் வெற்றியும் கூட.

மனிதர்களை நம்பி படத்தை இயக்கிய வசந்த பாலனையும், ஐங்கரன் நிறுவனத்தையும் மனிதர்கள் கைவிட மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

______________________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...