Showing posts with label மரம் வளர்ப்பு. Show all posts
Showing posts with label மரம் வளர்ப்பு. Show all posts

Sep 16, 2011

ஒரு மனிதர் 10 ஆயிரம் மரங்கள்

நீங்களும் நானும் வைத்த மரங்கள் தரும் காற்றையா சுவாசிக்கிறோம்? நீங்களும் நானும் நாம் போட்ட பாதையிலா பயணிக்கிறோம்? நீங்களும் நானும் நாம் வெட்டிய குளத்திலா நீர் அருந்துகிறோம்?. இந்தக் கேள்விக்கான ஒரே பதில் இல்லை என்பதுதான். யாரோ ஒருவர்  எதன்பொருட்டோ பிரதிபலன் பாராமல் செய்த நல்லகாரியங்களில்தான் இன்று நலமாய் நம் நாட்களை நகர்த்துகிறோம். இந்த பூமி கனிம வளங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை விட, தியாகங்களால் கட்டமைக்கப்பட்டது எனச் சொல்வதே பொருத்தம். தேசம் முழுதும் ஆங்காங்கே அற்புதமான தியாக மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம் எண்ணற்ற காரணங்களுக்குப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், இன்னும் புதிதுபுதிதாய் பெருமைப்படுத்தும் காரணங்கள் விளைந்துகொண்டுதான் இருக்கின்றது. அப்படி ஈரோடு பெருமிதம் கொள்ளும் ஒரு நபர்தான் நாகராஜன். சுற்றுச்சூழல் மேல் அளப்பரிய காதல் கொண்டவர்களுக்கு நிச்சயம் இவரை அடையாளம் தெரிந்திருக்கும். ஈரோடு அருகேயிருக்கும் காஞ்சிக்கோவில் நகருக்குள் நுழைந்து “நாகராஜன்” எனப் பெயர் சொன்னால் முக மலர்ச்சியோடு வழி காட்டுகிறார்கள்.


தனது 17-வது வயதிலிருந்து கடந்த 40 வருடங்களாக செடி நடுவதை வேள்வியாகக் கொண்டிருக்கும் நாகராஜனால் இப்பகுதியில் வளர்ந்து நிற்கும் மரங்களின் எண்ணிக்கை ஆச்சரியமூட்டக்கூடியது. விதைகளை தெரிவு செய்து,  பையில் முளைக்க வைத்து, செடியாக்கி, சரியான இடம் தேடி செடி நட்டு, பெரிதாகும் வரை பலமுறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து அதைக் காப்பாற்றிவரும் இவரது முயற்சியால் வளர்ந்து நிற்கும் விருட்சங்களின் எண்ணிக்கை ஒன்றல்ல இரண்டல்ல 10 ஆயிரத்திற்கும் அதிகம்.

“சிறு வயதிலிருந்தே எனக்கு மரம் வளர்க்க வேண்டும், இருக்கும் மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உண்டு. முதன் முதலாக என்னுடைய 17வது வயதில் மரம் நட ஆரம்பித்தேன். தினமும் காலை மாலை என இருவேளையும் நேரம் ஒதுக்கி சாலை ஓரங்கள், பொட்டல்கள், புறம்போக்கு என்று கண்ணில்படும் எல்லா இடங்களிலும் குழி தோண்டி செடிகளை நட்டு வைப்பேன். ஆல், அரசு, புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை போன்ற மரங்கள் எல்லா மண்ணிலும் வளரும் தன்மையுடையவை. அதிகம் தண்ணீரும் தேவைப்படாத ரகங்கள். ஆள் உயர அளவிற்கு செடிகள் வளரும் வரை அவற்றை வேலி கட்டி, தண்ணீர் ஊற்றி பராமரிப்பேன். அதற்குப்பின் அவை தானே பிழைத்துக்கொள்ளும்.

மழைக்காலத்தைப் பொறுத்தவரை தண்ணீர் பிரச்சனை இல்லை, ஆனால் கோடைக்காலத்தில் எல்லா செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றுவதுதான் கஷ்டமான காரியம். தேங்காய் நார்களை சேகரித்துவந்து செடியைச் சுற்றிப் போட்டு அதன்மேல் தண்ணீர் தெளிப்பேன். காஞ்சிக்கோவில் மலைக்கோயிலைச்சுற்றி வைத்த செடிகளுக்காக மலையின் மேல் ஏறி, அங்கே பாறை இடுக்குகளில் தேங்கி இருக்கும் நீரை எடுத்து வந்து ஊற்றியதால் இன்று அந்த இடமே பசுஞ்சோலையாக மாறிவிட்டது.

ஆரம்பத்தில் நான் மரம் நடுவதைப்பார்த்த பலரும் என்னை பைத்தியகாரன் வெட்டி வேலை பார்க்கிறான் என்று கிண்டல் செய்தார்கள். ஆனால் நான் அவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தொடர்ச்சியாக இந்தப் பணியை செய்து வந்தேன். இன்று அவர்களது வாரிசுகள் நான் வைத்த மரங்களின் நிழலையும், பலன்களையும் அனுபவிக்கின்றனர். தூய காற்றை சுவாசிக்கின்றனர். இதுதான் நான் அவர்களுக்கு சொல்லும் பதில்” என்று தான் பொறுமைகாத்த கதையைச் சொல்லும் நாகராஜனுக்கு, மக்களிடமும், அரசிடமும் மரம் வளர்ப்பி குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கிறது என்ற ஆதங்கம் இருக்கிறது.


“காடுகளில் தன்னிச்சையாக உருவாகி வளரும் மரங்கள் தீயசக்திகளால் அழிக்கப்பட்டுவரும் வேளையில், மனிதனால் வைக்கப்படும் மரங்கள் மக்களாலேயே அழிக்கப்படுகிறது என்பது கவலைப்பட வேண்டிய விஷயம். குறிப்பாக சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களை சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் போன்றவர்கள் சில சில்லறை காரணங்களுக்காக சர்வ சாதரணமாக வெட்டி வீழ்த்திவிடுகின்றனர். மேலும் விறகுக்காகவும், விற்பதற்காகவும் மக்களே மரங்களை வெட்டும் அவலமும் நடைமுறையில் இருக்கிறது.

மழைநீர் சேகரிப்பு திட்டம் எப்படி கட்டாயமாக்கப்பட்டதோ அதே போல் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கவேண்டும், இருக்கும் மரங்களை எக்காரணம் கொண்டும் வெட்டக்கூடாது என்பதை இந்தியா முழுவதும் கட்டாய சட்டமாக இயற்றவேண்டும். அப்போதுதான் அடுத்துவரும் தலைமுறையினர் தண்ணீருக்காகவும், சுத்தமான காற்றுக்காகவும் அல்லாடாமல் இருக்கும் நிலைமையை உருவாக்கமுடியும்” என்று தொலைநோக்கு சிந்தனையுடன் சொல்லும் நாகராஜனை பல அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் பாராட்டி விருதுகள் வழங்கியிருக்கின்றனர்.

ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கும் சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். நம்மிடமே சுரண்டி பணத்தை பதுக்கி வைக்கும் பதுக்கல் பேர்வழிகள் நிறைந்திருக்கும் இந்த நாட்டில் தனக்கு தீங்கு செய்யும் மனிதருக்கும் சுவாசிக்க சுத்தமான காற்றை வாரி வழங்கும் பரந்த மணம் கொண்ட மரங்களை பாதுகாக்கும், வளர்க்கும் சிந்தனை நமக்கு எப்போது வரப்போகிறது.
-------
பொறுப்பி : 11.09.2011 மதுரை திருச்சி தினமலர் சண்டே ஸ்பெஷலில் வெளிவந்த கட்டுரை
நன்றி : தினமலர். மற்றும் கார்த்தி கர்ணா


நாகராஜன் குறித்து மேலும் சில செய்திகள்:
நெசவு தொழிலை அடிப்படையாகக் கொண்டிருந்த நாகராஜன் அவர்கள், தனது குடும்ப பொருளாதார சூழலின் காரணமாக தற்சமயம் மாதம் முழுதும் ஒரு சைக்கிள் ஸ்டாண்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். மிகுந்த பொருளாதார சிக்கலும், உடல்நலக் குறைவு இருந்தாலும் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் மாதத்திற்கு ஒருநாள் கட்டாய விடுப்பு எடுத்துக்கொண்டு அந்த நாளைப் பயன்படுத்தி மரம் நடுவதை வேட்கையாகக் கொண்டிருக்கிறார். எத்தகைய சூழலிலும் தங்களது சுய உழைப்பு மூலம் மட்டுமே, தங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் அவருடைய மனைவி திருமதி. பிரேமா நாகராஜன். 


அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இவர்கள் வீட்டில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டிவைத்திருக்கிறார். அக்கம்பக்கம் மழைநீர் சேகரிப்புக் குறித்து கடுமையான பரப்புரையை மேற்கொண்டிருக்கிறார் நாகராஜன். மழைநீர் சேகரிப்பை இந்திய அளவில் கடுமையான சட்டமாக்கவேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார். இயற்கை குறித்து, மழை நீர் சேகரிப்பு குறித்து எங்கு அழைத்தாலும் கூட்டங்களில் அதுகுறித்த விழிப்புணர்வுக்காக பேசவும் தயாராக இருக்கிறார்.

நல்ல மனிதர்களை போற்றுவதும், காப்பதும், அவர்கள் வழி நடப்பதும் புண்ணியம் என்பதையும் மனதில் கொள்வோம். நாகராஜன் அவர்களின் தொடர்பு எண் : 04294–314752, 98652-47910 

***

திரு. நாகராஜன் மற்றும் அமரர். அய்யாசாமி அய்யா குறித்து ஏற்கனவே எழுதிய கட்டுரை கோடியில் இருவர்
***
திரு. நாகராஜன் மற்றும் அமரர். அய்யாசாமி அய்யா ஆகியோருக்கு நடத்திய பாராட்டு விழா மரங்களின் தந்தைகளுக்கு மகத்தான விழா

-0-



Apr 16, 2010

மரங்களின் தந்தைகளுக்கு மகத்தான விழா

மதியமே, சிறப்பு விருந்தினரான நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எத்தனை மணிக்கு வருவார் என்று விசாரித்தபோது, தவிர்க்க இயலாத தன் சொந்த அலுவல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். எப்படியும் வந்து விடுவார் என்ற தகவல் மிகப் பெரிய பீதியை கிளப்பியது. ஆனாலும் கடைசியாக 7.45 மணிக்கு நாமக்கல் வந்து சேர்ந்து, ஒரு வழியாக ஈரோடு கிளம்பிவிட்டார் என்ற செய்தி மகிழ்ச்சியான செய்தியோடு, குறித்த நேரத்தில் கூட்டத்தை துவக்கி விட்டோம்.



சட்டை அணியும் பழக்கமில்லாததால் வேட்டியும் துண்டும் மட்டும் அணிந்து வெற்று மேலோடு வந்திருந்த பெரியவர் திரு. அய்யாசாமி அரங்கத்தில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தினார். உடன் மகள் வயிற்றுப் பேரனை அழைத்து வந்திருந்தார்.


திரு. நாகராஜன் தன் மனைவி திருமதி. பிரேமா மற்றும் பேரனுடன் வருகை புரிந்தார்.
ஆட்சியர் வருகை தாமதமானதையடுத்து, வந்திருந்த மரங்களின் நாயகர்களோடு கலந்துரையாடலை ஏற்படுத்தி அந்த நேரத்தை மிக உபயோகமாக பயன்படுத்திக் கொண்டோம்.
குறிப்பாக திரு. அய்யாசாமி சொன்ன தகவல் மரம் வளர்த்த செடியாக நட்டு வளர்ப்பதைவிட, விதையாக ஊன்றி விட்டால், அது செடியாக முளைத்து வந்த பின் அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய வேலை இல்லை என்ற தகவல் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

எந்த மரம் சிறந்தது என்ற கேள்விக்கு திரு. நாகராஜன் புங்கை மரம்தான் சிறந்தது, அதுதான் அதிகப்படியான ஆக்சிஜனைத் தருகிறது என்றார்.

உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் கூட தன் உறுதியை விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து மரக் கன்றுகள் நட்டுவருவதாகக் கூறும் போது கூட்டத்திலிருந்தோர் மனமெல்லாம் சிலிர்த்தது. தான் மரம் நடப்போகும் சமயங்களில், அந்த இடங்களுக்கே உணவு, தண்ணீர் யார் மூலமாவது கொடுத்து அனுப்பும் மனைவியைப் பெற்றது வரம் என்று நெகிழ்ச்சியோடு திரு. நாகராஜன் பகிர்ந்து கொண்டார்.

மிக நீண்ட பயணத்திற்கு பிறகு கொஞ்சம் களைப்போடு வந்தாலும் கலெக்டர் திரு. சகாயம் அவர்கள் மிக உற்சாகமாகவே இருந்தார். மரங்களின் நாயகர்கள் இருவரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார், கூடவே மிக எழுச்சியாக உரை நிகழ்த்தத் தொடங்கினார்.

பயணக் களைப்பாக இருப்பதால் ஒரு பதினைந்து நிமிடத்தில் முடித்து விடுவாரோ என்ற பயத்தை தவிடு பொடியாக்கி முப்பது நிமிடங்களுக்கு மேலாக உரை நிகழ்த்தி அசத்தினார். உரை முழுதும் சிறிதும் விழாவுக்கு தொடர்பானதை விட்டு விலகாமல்,முழுக்க முழுக்க மரங்களின் பிதாக்களை பாராட்டி கௌரவிப்பதையும், மரங்கள் வளப்பது குறித்த தனது அனுபவத்தையும்,அரிமா சங்கம் மரம் நடுவதை தனது இலக்காக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் திரும்பத் திரும்ப மிக எழுச்சியோடு எடுத்துக் கூறினார்.






அதன் தொடர்ச்சியாக மரங்களின் பிதாக்களான திரு. நாகராஜன் மற்றும் திரு. அய்யாசாமி ஆகியோருக்கு திரு. சகாயம் அவர்கள் மூலம் நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
  அடுத்து கடந்த மாதத்தில் கண் தானம் அளித்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு திரு. சகாயம் சான்றிதழ் வழங்கினார்.


இந்த நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான பெருமை மிகு விழாவில் பதிவுலக நண்பர்கள் கேபிள் சங்கர், பாலாசி, அகல்விளக்கு ராஜா, காலப்பயணி வசந்த்குமார் மற்றும் திருப்பூர் பதிவர் நிகழ்காலத்தில் சிவா தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


மிகச் சிறந்த மனிதர்களான திரு. சகாயம் ஐ.ஏ.எஸ், திரு. அய்யாசாமி, திரு. நாகராஜன் ஆகிய மூன்று பேரை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி மகத்தான விழா எடுத்த, என்னுடைய ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கங்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்பதை மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன்.

வாழ்நாளில் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொருவிதமாக கழிந்திருக்கின்றன. வீணாக கழிந்த பொழுதுகளும் உண்டு, பொன்னான காரியங்களை, நினைவுகளை பதித்து விட்டுப் போன பொழுதுகளும் உண்டு. நேற்றைய பொழுது என் வாழ்நாளில், ஒரு மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்திப்போன பொழுது. எல்லாம் நிறைவடைந்து படுக்கையில் சாய்ந்த போது, நீண்ட நேரம் பிடித்தது மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்து உறக்கத்தை கைக்கொள்ள.




திரு சகாயம் I.A.S. அவர்களின் பாராட்டுரை





Get this widget

Track details
eSnips Social DNA

Apr 14, 2010

கோடியில் இருவர் - பாராட்டு விழா

நான் சார்ந்திருக்கும்
ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்
சார்பில் 15.04.2010 வியாழன் இரவு 8.00  மணிக்கு
ஈரோடு சிவில் இன்சினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங்கில்
மரம் வளர்ப்பதை வேள்வியாகக் கொண்ட




 திரு. அய்யாசாமி
மற்றும்
  

திரு. நாகராஜன்
ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்கள்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவும்

அரிமா. தூ.சு.மணியன்
பட்டயத் தலைவர், நாமக்கல் அரிமா சங்கம்
வாழ்த்துரை வழங்கவும் இசைந்துள்ளனர்.



பதிவர்கள், வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை விழாவில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றேன். கலந்து கொள்ள விரும்புவோர் தயவுசெய்து என்னுடைய அலைபேசி எண்ணில் (98427-86026) தகவல் தெரிவித்துவிட்டு வருகை தர அன்புடன் வேண்டுகிறேன்.


_______________________________

Apr 10, 2010

கோடியில் இருவர்

சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ஓரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று.
மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது... ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ!!!?

கோடியில் ஓருவர் 1
ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரேஎன்று கேட்க ஆரம்பிக்கும் போதே “அட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்கஎன்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.

தன்னுடைய வீட்டிலேயே கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டிருக்கிறார் 56 வயதான திரு. நாகராஜன் (04294-314752 / 94865-20483) அவர்கள். மிக மிகச் சாதாரணமான ஓட்டு வீடு. எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போட்டு விட்டு மிகுந்த சினேகமாக சிரிக்கிறார். 

இந்த மாமனிதர் தனது 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து,  முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது  ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.
ஆரம்பத்தில் தன் செயல்களைக் கண்டு பைத்தியகாரன் என்று ஊரே சொன்னது எனச் சொல்லி சிரிக்கிறார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில் மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் கீச்கீச்சென கத்துகிறது என்று சொல்லும் போது அவரது முகம் மகிழ்ச்சியில் திழைக்கிறது.
பேச்சினிடையே, எவ்வளவோ மறுத்தும் சமையலறைக்குச் சென்று அரிவாள்மனையில் எலுமிச்சம் பழத்தை அரிந்து, சர்பத் தயாரித்துக்கொடுத்து உபசரிக்கிறார். மகள் வயிற்றுப் பேரன் இவரோடு வளர்கிறார், அதோடு அந்தச் சிறுவனும் தற்சமயம் நான்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.
தினமும் காலையிலும், மாலையிலும் மரம் நடுவதையும், அதனைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல. சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் என அவ்வப்போது பல சில்லறை காரணங்களைச் சொல்லி மரங்களை சர்வசாதாரணமாக வெட்டி வீசுகிறார்கள் எனக்கூறும் போது அவருடைய மனதில் உணரும் வலி அப்படியே முகத்தில் வந்து படிகிறது. குறிப்பாக மரத்தின் கிளையை ஒரு நாள் சரக்குக்கும், பரோட்டாவிற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக்கிறார்கள் என அறியும் போது நமக்கே மனது வெம்புகிறது.
ஒவ்வொரு மரத்தையும் தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசன், புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையாய் எட்டு திசையிலும் வளர்த்தெடுத்திருக்கிறார். கடும் கோடையிலும் கூட மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி நீர் பெற்று தண்ணீர் தெளித்து செடிகளை காப்பாற்றியிருக்கிறார்.
காஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி விதவிதமான மரக்கன்றுகளை நடவு செய்து அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மிகுந்த ஆச்சரியமாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று.

கோடியில் ஒருவர் 2
சத்தியமங்களத்திலிருந்து பங்களாபுதூர் வரும் வழியில் இருக்கிறது ஏழூர். ஏழூரிலிருந்து வடக்குத் திசையில் திரும்பி ஒரு மைல் கடந்தால் வருகிறது வேட்டுவன் புதூர். முதலில் வரவேற்கிறது மிகச்சிறிய ஒரு கடை. வெளியூர் ஆட்கள என்று தெரிந்ததுமே தானாகவே கேட்கிறார்களஅய்யாச்சாமி அண்ணன தேடி வந்தீங்களா!...

“இந்த மரம் வளர்த்துறாரே என்று இழுக்க, “அட அய்யாச்சாமியண்ணந்தான்.... இந்த அப்பிடி போங்க.. அந்த ஓட்டு வீடுதான்

ஏழூர் சென்று அவரைச் சந்திக்கிறோம் என்ற தகவலைச் சொன்னபோதே காஞ்சிக்கோவில் நாகராஜன் நம்முடம் கிளம்பிவிட்டார். திரு. அய்யாசாமி பற்றி முரளிகுமார் பத்மநாபன் வலைப்பக்கத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

கொளுத்தும் வெயிலில் அந்த வீட்டை அடைந்தோம். ஏழடி அகலத்தில் பதினைந்தடி நீளத்தில் ஒரு ஓட்டு வீடு. குனிந்து உள்ளே எட்டிப் பார்க்கிறோம். இரண்டு கயிற்று கட்டில்களில் இளைத்த உடம்போடு ஒரு தம்பதி, சத்தம் கேட்டு எழுந்து வாங்க என்று வரவேற்கிறார்.
எலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது.

சுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்கஎன்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார்.

அதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போது “அந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம் என்று சொல்கிறார்.

கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன் புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில் பெரியவர் திரு. அய்யாசாமி நமக்காக காத்திருக்கிறார். விடைபெற்றுக் கிளம்புபோது ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணிக்கிறார். வாகனத்தை இயக்கியபடி அந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சுகிறேன், இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்கிறேன்.

இந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்து, மனதிற்குள் அலையடிக்கிறது. யாரோ சிலரின் தியாகங்களால் தானே இந்த உலகம் யாரால் இயங்குகிறது. யாரோ போட்ட பாதையில் தானே நாம் எளிதாய் பயணிக்கிறோம், ஏதோ பறவையின் எச்சத்தில் விழுந்த மரம் வெளியிடும் ஆக்சிசனைத் தானே சுவாசிக்கிறோம்.

ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது. ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கு சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். வறுமையின் பிடிக்குள் இன்னும் சிக்கித்தவிக்கும் இந்த மனிதர்கள் இந்த பூமிக்கு அர்பணித்தது பலாயிரம் கோடிகள் என்றால் மிகையாகது. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை.

இந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவானது. அவர்களிடம் அனுமதியோடு, எப்பாடுபட்டேயானும் அவர்களின் தியாகம் குறித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்து வரும் காலத்திற்கு பதிவு செய்துவிட்டுப் போக வேண்டும். அடுத்து அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.


முதல் கட்டமாக அவர்களை நான் சார்ந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் வரும் ஏப்ரல் 15ம் தேதி என் மனம் கவர்ந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்களை சிறப்பு விருந்தினராக வைத்து ஒரு பாராட்டு விழாவை நடத்த இருக்கிறது. அடுத்து, வரும் ஜூலை மாதம் பதவியேற்கும் எங்கள் அரிமா சங்க புதிய தலைவர் அரிமா. வீ.குருசாமி (94429-83559) அவர்கள், வரும் ஆண்டில் மரக்கன்றுகள் நடுவதை முக்கியத் திட்டமாக மனதில் வைத்துள்ளார். மழைக்காலத்தை மிகச் சரியாக பயன்படுத்தி மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டு வருகிறோம்.

எல்லாம் ஒரு சிறுபுள்ளியில் தானே ஆரம்பித்திருக்கும், இதோ ஒரு சிறுபுள்ளியில் பசுமைக்கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது.
__________________________________________________

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...