Showing posts with label ஏதோ ஒரு நகர். Show all posts
Showing posts with label ஏதோ ஒரு நகர். Show all posts

Apr 4, 2010

மயிரும், வயிறும் வேணா வளரும்

நான் முப்பது வருடங்களுக்கும் மேலாக பார்த்து வந்த வளமான வயல்காடு அது. பவானியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அந்தியூர் செல்லும் வழியில், என் கிராமத்துக்கு திரும்பும் பிரிவில் இருக்கிறது அந்த நிலம். எப்போதும் செழிப்பாக இருக்கும் பூமி. காலம்காலமாய் நெல்லும், மஞ்சளும், கரும்பும் என தொடர்ந்து செழிப்பான பயிர்களோடு வாழ்க்கை நடத்திய நிலம். மழைக்காலங்களில் அருகில் இருக்கும் பள்ளம் நிரம்பி வழியும், வயல் முழுதும் நீர் அலை அடித்துக் கொண்டிருக்கும். முக்கிய சாலையிலிருந்து கிராமத்துக்கு திரும்பும் போது முதன் முதலில் பார்ப்பது அந்த பூமியைத்தான்.
இன்று காலை கிராமத்துக்குச் செல்ல, வண்டியை திருப்பினேன். காலம் காலமாய் பூத்துக் குலுங்கிய நிலம் செத்துக்கிடந்தது. மொத்த நிலமும் வரப்புகள் அழிக்கப்பட்டு சமமாக விரிந்து கிடந்தது. நடுவில் பெரிதாகவும், குறுக்கே சிறிதாகவும் சாலைகள் வகுக்கப்பட்டு, கட்டம் கட்டமாக பிரிந்து, ”ஏதோ ஒரு நகர்” என பெயர் தாங்கிய பிளக்ஸ் போர்டு பளபளத்தது, நட்ட நடுவே ஒரு கீற்றுக்கொட்டகை தெரிந்தது.
நாசமாப்போன நகர்புறத்து பேராசை, பத்து மைல்தாண்டி தன் ருத்ர தாண்டவத்தை, எல்லாப் போகமும் நன்றாக விளைந்து கொண்டிருந்த நிலத்தில் ஆடத் தொடங்கிவிட்டது. இனி, இது அடுத்தடுத்த மைல்களுக்கு நெருப்பாய் பரவும்.
அதிர்ச்சியோடு அருகில் இருந்த அப்பாவைப் பார்த்தேன்.
”ஏக்கரா 25 லட்சத்துக்கு வித்தாங்க, சைட் போட்டு, இப்போ சென்ட் முன்னால 80, பின்னால 60 ஆயிரத்துக்கு போகுது. பாதிக்குமேல வெலை முடிஞ்சிருச்சாம்.”
உள்ளடங்கிய கிராம நிலங்கள் கூட ஏக்கர் பத்து முதல் முப்பது லட்சத்திற்கு விலை போகிறது. புறநகர் பகுதி விளை நிலங்கள், நெடுஞ்சாலையோரம் இருக்கும் பொட்டல் காடுகள் அறுபது லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை விலை போகிறது. இத்தனை காசு போட்டு வாங்கி யாரால் விவசாயம் செய்ய முடியும். சரி எங்கேயிருந்து வருகிறது இத்தனை பணம்.
வண்டியை நிறுத்திவிட்டு விரக்தியோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
நிலத்தில் ஆங்காங்கே சிறிய சிறிய செங்கல் கூண்டுகள் கட்டப்பட்டிருந்தது.
”அது என்ன செங்கல் வச்சு கட்டியிருக்காங்க”
”பிளாட் போட்டா மரம் நடனுமாமே அதுக்குத்தான் செங்கல்லுல கூண்டு கட்டியிருக்காங்க” என்றார் அப்பா.
என் மனதில் ஓடியதை, பக்கத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெரிசு முனகியது
”க்க்கும், சோறு போட்ட பூமிய, கூறு போட்டு கொன்னு போட்டு, மரம் வளர்த்து கிழிக்கப் போறாங்களாம்… விக்கிறவங்க மயிரும், வயிறும் வேணா வளரும்”


______________________________________________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...