Showing posts with label அங்காடித் தெரு. Show all posts
Showing posts with label அங்காடித் தெரு. Show all posts

Mar 27, 2010

நான் ரசித்த….. அங்காடித் தெரு

ஏழ்மையின் பொருட்டு ஊருவிட்டு ஊரு வந்து நேர்த்தியான சீருடையில் கொத்தடிமையாய்(!!!!) வேலை பார்க்கும் ஒவ்வொரு சாதாரண மனிதர்களுக்கும் பின்னால் இருக்கும் வலியை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததிற்காக வசந்த பாலனுக்கு மிகப் பெரிய வணக்கம்.



பரபரப்பான அந்த பேருந்து நிறுத்தத்தில் தினசரி மிகச் சாதாரணமாக பார்க்கும் இரண்டு முகங்களோடு படம் துவங்குகிறது. துவங்குகிறது என்று
சொல்வதைவிட மனதுக்குள் ஒரு புழு போல் நெண்டி நெண்டி உள் நுழைகிறது என்றே சொல்ல வேண்டும்.

பேருந்து நிறுத்தத்தில் பேருந்து வந்து நின்ற பிறகு ‘பஸ் வந்துருச்சு” என்று ஒரு முறை சொல்லிவிட்டு பேருந்தை நோக்கி ஓடும் போது மட்டுமே அந்த இரண்டு வார்த்தை வசனம் வீணடிக்கப்பட்டதாக உணர்ந்தேன், மற்றபடி படம் முழுக்க வசனம் மிக ஆழமாக ஆட்சி செய்வதை மறுக்க முடிவதில்லை.

பயிற்சி நிமித்தமாக, துணிக்கடையில் வேலை செய்யும் நபர்களை சந்தித்தபோது அவர்களுடைய உலகம் பற்றி ஏற்கனவே அறிமுகம் இருந்திருந்தாலும்... ஒரே வண்ண உடையில், அழகழகாய் கடைகளில் சிரித்து சிரித்து நம்மிடம் எப்படியாவது ஒரு துணியை விற்று விட வேண்டும் என மல்லுக் கட்டும் விற்பனை பிரதிநிதிகளின் சிரிப்புக்கு பின்னே இத்தனை வலி இருக்கும் என்பதை ஒரு போதும் யோசித்ததேயில்லை. இனி அவர்களை பார்க்கும் போதெல்லாம் காலும் கூடவே மனதும் வலிக்கவே செய்யும்.



பையன்களும், பெண்களும் தங்கும் அரங்கில் நெருக்கிக் கொண்டு, குவியலாய் தூங்குவதைப் பார்க்கும் போது, உடலெல்லாம் வெம்மையில் எரிகிறது. அண்ணாச்சிகளின் கடைகளில் நெல்லைத் தமிழோடு உழைத்துக் கொட்டும் சிறுவர்களுக்கு அப்பா இல்லாமல், அக்கா தங்கைக்கு கல்யாணம் செய்யவேண்டும் என்ற வேட்கை என்பதுதான் தகுதி என்பது கசக்கிறது. உண்மை பெரும்பாலும் கசக்கவே செய்கிறது.

சூப்பர்வைஸர் கதாநாயகியை மறைப்புக்குள் தள்ளி அடித்தபின், கன்னிப்போன உதடோடு வெளியே வந்தவளிடம் கதாநாயகன் கேட்க “மாரப் பிடிச்சு கசக்கினான்” என்ற வசனம், கடைசிவரை மார்பில் வலியாகவே தங்கியிருந்தது.

வயதுக்கு வந்த பெண்ணுக்கு நீர் ஊற்றி தீட்டுக்கழிக்க வேண்டிய சிக்கலான நேரத்தில் ”இந்த சாமிக்கு தீட்டுங்குறதே கெடையாது” என்ற வசனம் கேட்கும் போது, அந்த சாமியைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது.

அந்த குள்ள மனிதரின் மனைவி தன் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு பேசும் வசனத்திற்குத் தான் திரையரங்கில் அதிகமான கைதட்டலைக் கண்டேன். ஆனாலும் அந்த உண்மை மிக மோசமாக கசந்தது. அந்த கைதட்டல் நம் ஒவ்வொருவரின் கன்னத்திலும் விழுந்த அறையாகவே பட்டது.

கழிவறைத் தொழிலதிபர் பாத்திரம்... ஆஹா.... போட வைக்கிறது....

ஓயாத அலையாய் மனிதர்கள் பொங்கும் வீதியில், ”மனிதர்களை நம்பி ஆரம்பித்தேன், இது வரை மனிதர்கள் கைவிடவில்லை” என்ற அந்தக் கண் தெரியாத மனிதரின் வசனம் வாழ்க்கையின் பல சிக்கல்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு வரி என்றே சொல்லலாம்.



கதைக்கான பாத்திரங்கள் மிக மிகப் பொருத்தமான தேர்வு. படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் வீணடிக்கப்பட்டதாக உணர முடியவில்லை.

குறிப்பாக கனி – அஞ்சலியைப் பாராட்ட புதிதாய் சில வார்த்தைகளைத்தான் நான் தேட வேண்டும், கருங்காலி – வெங்கடேஷ்... சபாஷ் இனி அவர் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தலாம். பழ.கருப்பையா நிஜ மனிதர்கள் பலரை நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை, அதுவே அந்த பாத்திரத்தின் வெற்றியும் கூட.

மனிதர்களை நம்பி படத்தை இயக்கிய வசந்த பாலனையும், ஐங்கரன் நிறுவனத்தையும் மனிதர்கள் கைவிட மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

______________________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...