Showing posts with label பாராட்டு. Show all posts
Showing posts with label பாராட்டு. Show all posts

Jan 25, 2020

செம்மையா வாழ்வோம் மகேஷ்.


என் பெயருடன் ஈரோடு என ஊர் பெயரைச் சேர்ப்பேன் என்றெல்லாம் 35 ஆண்டுகளில் ஒருபோதும் நினைத்ததில்லை. 2009ல் வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய பிறகு, ஏற்கனவே கதிர்கள் இருந்ததால், வேறுபடுத்திக் காட்டுவதற்காக கதிர், ஈரோடுஎன முதலில் சொல்லி, பிறகு அது எப்படியோ ஈரோடு கதிர்என்றாகிவிட்டது. அதுவே பழகி, இப்போது நானே அப்படியாக என்னை நம்பத் தொடங்கிவிட்டேன்.

ஈரோட்டிலேயே சில நேரங்களில் ஈரோடு கதிர்என்றழைக்கப்படும்போது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். வெளியூர்களில் இது ஊர் மீதான ப்ரியம் என்று நினைத்துக் கொள்வார்கள். அதன் நிமித்தமான பாராட்டுகளும்கூட இணைவதுண்டு. ஊர் பிடிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சற்று மூத்தவர்கள் சில இடங்களில் ஈரோடு கதிர் என்றவுடன், ஈரோடு தமிழன்பன் பெயரை நினைவு கூர்வதுண்டு. ஓரிரு இடங்களில் ஈரோடு சௌந்தர் பெயர் கூட அடிபட்டதுண்டு. தமிழகத்தில் எங்கு சென்றாலும், ஈரோடு என்பது ஊரின் பெயர் என்று அறிந்திருப்பார்கள்.

ஆனால் என் இலங்கைப் பயணங்களில் ஈரோடு கதிர் என்று எங்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும், பெயர் உச்சரிக்கப்பட்டாலும்... ஈரோடு என்பதை என்னவாக எடுத்துக் கொள்வார்கள் என யோசித்ததுண்டு. என் யோசனைகளை நிறுத்தம் வண்ணமாகஈரோடு மகேஷ் தெரியும். டிவியில் கண்டிருக்கோம், உங்களுக்குத் தெரியுமா!?” எனக் கேட்பார்கள். அந்தக் கேள்வியில், அவர்கள்ஈரோடு மகேஷ்தோளில் கை போட்டு உரையாடும் அளவிற்கான ஒரு நெருக்கத்தை உணர்த்துவார்கள். தமிழ் தொலைக்காட்சிகளின் வீரியம் புரிந்தது.

என்னை அவர்கள் அறிமுகப்படுத்திக் கொள்வதே, ஈரோடு மகேஷ் பெயரை நினைவில் மீட்டித்தான், ஆனால் அந்த மகேஷை எனக்கு தெரியாது என்பதுதான் அதிலிருக்கும் முரண். தெரியாது என்றால் யாரென்றே தெரியாது என்றில்லை. தொலைக்காட்சி வழியே நன்கு தெரியும் ஆனால் நேரடியாக எந்த வகையில், எவ்விதமும் தெரியாது என்பதுதான் அந்தக் குறை.

*

கடந்த வாரத்தில் ஒரு நாள் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அழைப்பில்வணக்கம் நான் ஈரோடு மகேஷ் பேசுறேன்என்றது அழைத்த குரல். உண்மையில் அவருக்கு நிகரான வேறு யாரொருவர் பேசியிருந்தாலும், மிக எளிதாக அதை எதிர்கொண்டிருப்பேன். இந்தக் குரலுக்குச் சொந்தக்கார மனிதன் ஒவ்வொரு இலங்கைப் பயணத்தின்போதும் உடனிருப்பவர் என்பதால், ஏதோவொரு நெருங்கி வராத நெருக்கத்திற்குச் சொந்தக்காரர் என்பதால் பெரும் ஆச்சரியத்திற்குள்ளும், மகிழ்ச்சிக்குள்ளும் ஆட்பட்டேன்.

அவரே... அவருடைய வழக்கான, வேகமான பேச்சு நடையில் தொடர்ந்தார்.


உங்க புத்தகமெல்லாம் ஈரோடு புத்தக திருவிழாவில் வாங்கினேன். இப்ப இந்த வேட்கையோடு விளையாடு படிச்சிட்டிருக்கேன்.

“............”

என்ன பிரமாதமா எழுதியிருக்கீங்க...! அட்டகாசமா எழுதியிருக்கீங்கணே... ரொம்ப பிரமாதம்... ரொம்ப எளிமையான உதாரணங்கள்... அப்படியே பக்கத்துல இருந்து அந்த இன்சிடன்ட்ட பாக்கிற மாதிரி இருக்கு... நீங்க எழுதின சில இன்சிடன்ட் எல்லாம்... ரொம்ப நல்லாருக்கு.. ரொம்ப நல்லாருக்குணே...

“............”

நீங்க நிறைய எழுதுங்க... நிறைய எழுதனும்... நிறைய எழுதனும்.... நாங்கெல்லாம் பேசுறமே தவிர எழுதுறதில்ல. என்னை எல்லாரும் சொல்வாங்க... நீங்க நிறைய எழுதனும்...

“............”

எழுத்து வந்து மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். அது என்னால எப்பயுமே ஏத்துக்கொள்ளக்கூடிய உண்மை... சமூகம் ஏத்துக்கொள்ளக்கூடிய உண்மை. புத்தகம் சமூகத்துல யாராவது ஒருத்தரோட கையில போய் நிக்கும், அந்தப் புத்தகமும், அதில் இருக்கும் வரிகளும், வார்த்தைகளும் அவர் மூலமா சமூகத்தில் நிறைய மாற்றங்களை உண்டு பண்ணும்ங்கிறது என்னோட கருத்து.

“............”

நூலகத்திலேயே கவனிக்கப்படாத நிறைய புத்தகம் இருக்கும், எடுத்துப் படிச்சோம்னா அவ்ளோ விசயம் இருக்கும். அந்த மாதிரி ரொம்ப சிறப்பா இருக்குண்ணே... மனம் நிறைந்த வாழ்த்துகள்ணே...


ஆச்சரிய அலைகளுக்குள் ஆட்பட்டிருந்த எனக்கு சொற்கள் கிட்டவில்லை. ஒற்றைச் சொற்களிலேயே பதில் சொல்லி ஒருவாறு உரையாடலை முடித்து, நனைந்திருந்த ஆச்சரியத்தில் நீண்ட நேரம் வெடவெடத்திருந்தேன்.

அடுத்த நாள் இன்னும் பெரிய இன்ப அதிர்ச்சியாக... வாட்சப் வழியே குரல் பதிவொன்றை அனுப்பியிருந்தார்.

இனிய காலை வணக்கம்.

நேத்து திருச்சியில ஒரு பள்ளியினுடைய ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினரா வந்திருந்தேன். ஒரு பதினஞ்சாயிரம் பேரு கூட்டம், பேரன்ஸோட சேர்த்து. அதுல நம்ம புத்தகத்தோட பெயர் சொல்லி, உங்க பெயர் சொல்லி, இந்த மாளவிகா பத்தி எழுதியிருந்தீங்களே வெடி குண்டில் கைகள் இழந்துபோன குழந்தை பத்தி, அந்த இன்சிடன்ட சொன்னேன்.

அத சொல்றதுக்கு முன்னாடி புத்தகம், பேரு, எனக்கு எப்பவுமே அந்தப் பழக்கம். படிச்சதையோ, அடுத்தவங்க கருத்தையோ நான் சொல்ற மாதிரி சொல்ல மாட்டேன், பேரு சொல்லிதான் சொல்வேன். பேரு தெரியலீனா படிச்சே... ஞாபகம் இல்லைனு சொல்லிருவேன். உங்ககிட்ட பேசுனதுங்கிறதால ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சுனு குறிப்பிட்டுச் சொன்னேன். மிகப்பெரிய வரவேற்ப பெற்றுச்சு. கல்வியினுடைய முக்கியத்துவத்தை சொல்றப்ப அது சொல்ல வேண்டிய சூழல் கரெக்டா அமைஞ்சுது. நான் அத பதிவு பண்ணேன். அந்த விசயத்தை எல்லாருமே ரொம்ப பாராட்டுனாங்க.

நான் புத்தகத்த சொன்னேன், எல்லாருமே வாங்கிப் படிங்கனு...

நன்றிணே...

இந்த நாள் சிறப்பா அமையட்டும்.

*

அவருக்கு நன்றி பகிர்ந்ததோடு #வேட்கையோடு_விளையாடு புத்தகத்தோடு ஒரு நிழற்படம் அனுப்பினால் மகிழ்வேன் என வேண்டினேன். தயங்காமல் அனுப்பி வைத்தார்.



பேரன்பும் நன்றிகளும் மகேஷ் அவர்களே... ஸாரி ஈரோடு மகேஷ் அவர்களே! 

புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் நான் எப்போதும் ஒரு வசதியான குறுகிய வட்டத்திற்குள் நிற்பவன். அதை உடைக்க வேண்டும், கைகளை நீட்ட வேண்டும் என்பதை உங்களிடமிருந்து இந்த முறை அழுத்தமாக கற்றுக்கொள்கிறேன்.

வேட்கையோடு விளையாடு உதாரணங்களை பயன்படுத்துகிறீர்கள் என்பதற்காகச் சொல்லவில்லை. நிகழ்கால யதார்த்தங்களை உரையில் கொண்டு வரும் உங்கள் பாங்கு எப்போதும் பிடிக்கும். சமகால படைப்புகளை நானும் பயன்படுத்துகிறேன். இனி இன்னும் கூடுதலாகப் பயன்படுத்துவேன்.

இனி எல்லோரிடமும் ஈரோடு மகேஷ் என் நண்பர் எனச் சொல்வேன் குறிப்பாக அடுத்த இலங்கைப் பயணத்தில் நீங்கள் என் நண்பர் என்பதை பேரன்பும் ப்ரியமும் சூடிச் சொல்வேன்.

வாழ்தல் அறம்.... செம்மையா வாழ்வோம் மகேஷ்.

நன்றி

Sep 9, 2018

உன்னதங்களில் ஒன்று “மேற்குத் தொடர்ச்சி மலை”



“சரி... ‘வியாபாரம்’ செய்யத் தெரிஞ்சவன், பொழைக்கத் தெரிஞ்சவன் யாராச்சும் இப்படி ஒரு படத்தை மெனக்கெட்டு டைரக்ட் செய்வானா? தயாரிப்பானா?” எனும் கேள்வி இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கின்றது. வியாபாரத்தைத் தாண்டி, தான் நேசிக்கும் ஒன்றிற்காக செய்யும் தியாகமே உன்னதங்களைக் கொடுத்திருக்கின்றன. உன்னதங்களில் ஒன்று “மேற்குத் தொடர்ச்சி மலை”
ஜுங்கா படத்திற்காக விஜய் சேதுபதி மேல் அயர்ச்சி கொண்டதும், கிண்டல் அடித்ததுமான அதே மனநிலையோடுதான், அந்த மனநிலைகளுக்கு கொடுத்த ஆற்றலின் ஆயிரம் மடங்கு ஆற்றலோடு விஜய் சேதுபதியை “மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்திற்காகப் பாராட்டத் தோன்றுகிறது.
அந்த ஆயிரம் மடங்கு பாராட்டை இரட்டிப்பாக்கி இயக்குனர் லெனின் பாரதியின் கைகளில் சமர்ப்பிக்கத் தோன்றுகிறது.


அந்த விடியல் மழைக் காட்சிக்கும், காற்றை வலிமையோடு அறுக்கும் அந்த நீள் தகரத்தின் உறுத்தும் ஓசையோடு உச்சிக்கு நகரும் பொட்டல் வெயில் காட்சிக்கும் இடையேதான் எத்தனை கனமானதொரு வாழ்வு.
விரிந்து கிடக்கும் மலையையும் விட கனக்கும் வாழ்வுதான் ரங்கு முதல் கேத்தர வரை அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும். படம் என்னவோ ரங்குவின் வாழ்க்கையைச் சொல்வதாய் இருக்கலாம். ஆனால் மனம் என்னவோ அடிவாரத்துக் கிழவி தொடங்கி, பத்திரிக்கை கொடுக்க மலையேறுபவர், லோகுவின் தக்காளிக் கூடையை ஏற்றிக்கொள்ளும் மாட்டு வண்டிக்காரர், கிறுக்குக் கிழவி, கழுதைக்காரர், வனகாளி, கணக்குப் பிள்ளை, கங்காணி, சாக்கோ, அத்தா, குதிரை பாஞ்சான் மேட்டு காப்பி கடைக்காரர், ஊத்துராசா என அத்தனை பேரின் வாழ்க்கையும் ஏதோ இரண்டு பருவநிலைகளுக்கு இடையே என்னவாக இருக்கும் என ஓட்டிப் பார்க்க வைக்கிறது.
எத்தனையோ மொழி சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். இதோ இந்தக் கணத்தில் இந்த மேற்கு தொடர்ச்சி மலை எதனினும் சிறந்த படம் எனத் தோன்றுகிறது. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் கருதும் ஒன்றாகவும் இது இருக்கலாம். இருக்கட்டுமே! இந்த மனநிலையைக் கரைக்க, இந்த இடத்தைப் பிடிக்க இன்னொரு படம் என்னில் நுழையும் வரை உணர்ச்சிவயப்பட்ட இந்தக் கணத்தை அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொள்கிறேன்.
பார்த்துவிடுங்கள். ஒரு அசல் வாழ்க்கையை பார்த்த... இல்லையில்லை வாழ்ந்த அனுபவம் கிட்டும்.
மிகக் கூடுதலாக நேசிக்கும் அந்த எளிய மனிதர்கள் இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து நம்மை சற்றேனும் மீட்டெடுப்பார்கள். சக மனிதர்கள் மேல் நம்பிக்கை கூட்டுவார்கள். மேலே சொன்ன பாத்திரங்களில் எவர் ஒருவரைப் போலும், இன்னொருவரைக் கண்டாலும் நேசிப்பில் நெகிழ்வீர்கள்.
❤️

Mar 15, 2018

ஒரு பேச்சாளனின் டைரிக் குறிப்பு


உங்க ஸ்பீச் கேட்ட அன்னிக்கு ராத்திரி என்னவோ தூக்கமே வரலைங்க. என்னென்னவோ செய்றேன் தூக்கமே வரல. எனக்குத் தெரிஞ்சு அப்படி ஆனதே இல்லை. ஏன் எதுக்குனும் யோசிக்கிறேன். இப்பவரை தெரியல. ஆனா உங்களோட அந்தப் பேச்சு என்னவோ டிஸ்டர்ப் பண்ணிடுச்சுஎன அந்தப் பள்ளியின் தாளாளர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது நான் குறும்புன்னகையோடு மட்டுமே நின்று கொண்டிருந்தேன். உண்மையில் அப்படியான ஒரு பாராட்டை நான் எதிர்பார்க்கவில்லை. காரணம் பாராட்டப்பட்ட சூழல் அப்படி.

காலை ஒன்பது மணிக்கு துவங்கி தலா இரண்டரை மணி நேரம் என மூன்று அமர்வுகள் பயிலரங்கை முடித்துவிட்டு நிறைவான மனதோடு தேநீர் அருந்திக்கொண்டிருந்த போதுதான் தாளாளர் அவ்விதம் சொன்னார். அருகிலேயே பள்ளியின் செயலரான அவரின் கணவர் மற்றும் ஆசிரியர்களும் உடன் இருந்த தருணத்தில்தான் அப்படிச் சொன்னார்.

அவர்களின் பள்ளி ஆண்டு விழா நிகழ்வில் என்ன பேசினேன் என்பது நினைவில்லை. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என கலந்திருந்த கூட்டம். பந்தல் போட்டிருந்தார்கள். மாலை நிழலில் பந்தலுக்குள் இருந்தோரை என்னால் இனம் காண முடியவில்லை. ஆசிரியர்கள் எங்கே! பெற்றோர்கள் எங்கே! மாணவர்கள் எங்கே என என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனாலேயே சற்று யோசித்தபடியே அங்கும் இங்குமாய் மனதால் தாவித்தாவி பேசி முடித்தேன். பொதுவாக இப்படியான கூட்டங்களுக்குச் செல்லும்போது, காத்திருக்கும் நேரத்தில் முன்னதாகவே கூட்டத்திற்குள் ஒருமுறை வலம் வந்து யார் யார் எங்கெங்கே என்பதை அறிந்து சற்று தெளிவாகத் தயாராகிவிடுவேன். அன்றைக்கு அப்படிச் செய்யாமல் பிழை செய்துவிட்டேன். அந்த உறுத்தல், தடுமாற்றம் எனக்கு மட்டுமே உரித்தானது. வெளியில் தெரிய நியாயமில்லை.

நீங்க அன்னிக்கு பேசிட்டிருக்கும்போதே ஸ்டூடன்ஸ்க்கு ஒரு ட்ரெயினிங்க்கு உங்களைக் கூப்பிடனும்னு சார்கிட்டே சொல்லிட்டிருந்தேன்என அருகாமையில் இருக்கும் ஆசிரியரைச் சுட்டினார் செயலர். மனதை சமநிலையில் வைக்க முயற்சித்தபடி செவி கொடுக்க ஆரம்பித்தேன். அன்றைக்கு என்ன பேசினேன் என்ற யோசனையே மனதிற்குள் ஓடியது.

காலையில் எட்டு மணிக்கு பள்ளிக்குள் நுழையும்போதே செயலர் வரவேற்றார். ஆசிரியர்கள் சீருடையில் இருந்தார்கள். அதே சீருடையில் செயலரும். “என்ன சார் நீங்களும் யூனிபார்ம்ல இருக்கீங்க!?”. ”மண்டே மட்டும் டீச்சர்ஸ்க்கு யூனிபார்ம்ங்க. அவங்களுக்கு எடுக்கும்போது எனக்கும் ஒரு செட் எடுத்துடுவாங்க!” எனப் புன்னகைத்தார்.

பள்ளி, கல்லூரி நிகழ்வுகளுக்கு ஒரு பேச்சாளரைத் தீர்மானிப்பதில் இரண்டு மூன்று வகைகள் உண்டு. நாடறிந்த பேச்சாளரை கௌரவத்தின் அடிப்படையில் நிர்வாகம் தீர்மானிக்கும். ஓரளவு கேள்விப்படும், அறியப்படும் பேச்சாளார்கள் முதல்வர்கள், ஆசிரியர்கள் மட்டத்தில் தீர்மானிக்கப்படும். கல்லூரி நிகழ்வுகளுக்கு சில வேளைகளில் மாணவர்கள் சார்பிலும் தீர்மானிக்கப்படுவதுண்டு. இந்த உரைக்கு நிர்வாகத்தினரின் நண்பரின் வழியாக அழைக்கப்பட்டு சென்றிருந்தேன்

பொதுவாக உரைக்கு அழைக்கப்படுவதில், இந்த நிகழ்வுக்கு இந்த உரைதான் வேண்டும், அதற்கு இந்தப் பேச்சாளர்தான் வேண்டும் எனும் தெளிவு அரிதாகவே அமைகின்றன. அப்படியாக ஒரு பேச்சாளன் தெரிவு செய்யப்பட்டு, மேடை வழங்கப்பட்டால், அந்த மேடைக்காக உயிரைக் கொடுத்து உரை தயாரிக்கலாம் என்பதே என் கருத்து. மேடையை நிரப்புவதற்காக சில தருணங்களில் நாம் அழைக்கப்படுவதும், எது வேணாப் பேசுங்க என பணிக்கப்படுவதும் மனதிற்கு அத்தனை உகந்ததாக அமைவதில்லை. ஆனாலும் வளர வேண்டிய தருணத்தில் அவற்றை மறுக்கவும் முடிவதில்லை.

காலையில் தொடங்கி மாலை வரை தாளாளரும், செயலரும் மாறி மாறி பயிலரங்கில் அமர்ந்திருந்தார்கள். முடிந்தவுடன் பயிலரங்கை குறித்துப் பேசுவதை விடுத்து, ஆண்டு விழாவில் பேசிய உரை குறித்தே பேசிக் கொண்டிருந்தார்கள். நான் ஆண்டு விழாவில் பேசிய அடுத்த இரண்டாம் நாள், அதே குழுமத்தின் மற்றொரு பள்ளி ஆண்டு விழாவிற்கு தமிழகத்தின் பெரும் பேச்சாளர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். தொலைக்காட்சி பிரபலம். சில உரைகளைக் கேட்டிருக்கிறேன். ஒன்றோடு ஒன்று கோர்க்கக்கூட முடியாத அரதப் பழசான நகைச்சுவைத் துணுக்குகளை ஒருவித தொணியில் கோர்த்து தெளிக்கும் அவரின் உரைகள் மீது எந்த ஈர்ப்பும் இல்லை

பேச்சாளர்களில் சிலர் குறித்து விமர்சனங்களும், சிலர் குறித்து அலாதியான மரியாதையும் எனக்கு உண்டு. என்னை யாரோடும் பொருத்திப் பார்க்க மாட்டேன். உண்மையில் எந்தப் பேச்சாளராக இருந்தாலும், அவர்களிடமிருந்து செய்ய வேண்டியது அல்லது செய்யக்கூடாதது என ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ள முயன்று கொண்டேயிருப்பேன்.

நானாக அந்த விழா குறித்துக் கேட்கவில்லை. அவராகவே அந்த விருந்தினர் குறித்துச் சொல்லிவிட்டு, அவருக்கு பதிலா உங்களைக் கூப்பிட்டிருக்கனும்ங்க என்றபோது சரியான பாதையில்தான் பயணிக்கிறேன் ன்பதை மீண்டும் உறுதி செய்து கொண்டேன். அந்தப் பாராட்டைம்ம்ம்... நாம யாரு.. கெத்துல்லஎன எடுத்துக்கொள்ளாமல், பாதையில் வலுவாகப் பயணிக்க இன்னும் என்னைத் தயார்படுத்த வேண்டுமெனத் தோன்றியது.



நான் மிகவும் மதிக்கும் பேச்சாளர், எனக்குச் சொன்ன அறிவுரைஎப்போது 100% பயமேயில்லாமல் ஒரு மேடையில் ஏறுகிறோமோ அன்றோடு பேசுவதை விட்டுவிட வேண்டும்என்பதுதான். ஒவ்வொரு மேடைக்கும் சற்று அழுத்தத்தையும் பயத்தையும் என்னோடு வைத்திருப்பதை ஆரோக்கியமாகவே கருதுகிறேன். எங்கேனும் பிடிபட்ட ஒரு உதாரணத்தை, சம்பவத்தை, செய்தியை என் பாணியில் உரையாக மாற்றுவதற்காக சில பல மணி நேரங்கள் யோசித்து, தேடி அதன்பின்பே ஒரு வடிவமாகக் கொள்கிறேன். ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தித்தான் பேச வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறேன். சமீபத்தில்கூட பயிலரங்கில் ஒரு உதாரணத்தை முன் வைப்பதற்காக மட்டும் ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் தேடினேன். அந்த வகையில் என் தயாரிப்புகள் மீது எனக்கு பெரும் பிரியம் உண்டு.

மேடையில் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டால், அது எனக்கான ஒரு மணி நேரமாகத் தோன்றாது. அரங்கில் ஆயிரம் பேர் இருந்தால் அது ஆயிரம் மணி நேரமாகத் தோன்றும். அந்த ஆயிரம் மணி நேரத்திற்கு நேர்மை செய்ய வேண்டுமெனும் அழுத்தம் எப்போதுமிருக்கும். அதுவே என்னை இயக்குகிறது. உரை என்பது ஒன்றைத் தேடிச் சேகரித்து வந்து கேட்பவரிடம் கடத்தும் காரியம். அதற்கு நியாயம் செய்தே தீர வேண்டும். அந்த நியாத்தில் கேட்போரை குதூகலிக்கச் செய்ய வேண்டும் எனும் சமாதானம் புறந்தள்ளப்பட வேண்டும். ஏதாவது ஒன்றை இடம் பெயர்த்த வேண்டும்.

உரையோ பயிலரங்கோ என்னிடம் கூர்மையாய் இருக்கும் ஒரு நோக்கம், கலந்துகொண்டோரின் உறக்கத்தை அன்றிரவு சில நிமிடங்களுக்கு தள்ளிப் போடவேண்டும் என்பதே. ’என்னவோ அவர் சொன்னாரே!’ எனும் சிந்தனைக்கே அந்த ஓரிரு நிமிடங்கள். பள்ளி விழா உரை குறித்தும், தன் உறக்கமின்மை குறித்தும் சொன்ன பள்ளித் தாளாளரின் பாராட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இன்னும் பொறுப்போடு, இன்னும் உத்வேகத்தோடு இனி வரும் உரைகளுக்கு தயாரிக்க உழைக்க வேண்டிய அங்கீகாரமாகவும் அதைக் கொள்கிறேன்.

Dec 26, 2011

மகத்தான சாதனைக்கு மகிழ்வான பாராட்டு

எதனோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு ஒரு கிராமப் பள்ளி தன்னை உயர்த்திக் கொண்டிருப்பதை ஏற்கனவே கல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி இடுகை வாயிலாக அறிந்திருக்க வாய்ப்புண்டு.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருக்கும் இராமம்பாளையம் பள்ளி இன்றைக்கு தமிழகத்தின் பெரும்பாலான கல்வி அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. சரஸ்வதி மற்றும் ஆசிரியர் திரு.பிராங்கிளின் ஆகியோரின் முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது. எந்தப் பிரதிபலனையும் எதிர்நோக்காமல், கல்வியை வெகு சிறப்பாக அளிக்க நினைத்த இந்த நல்லுல்லங்களை கோவை மாவட்ட நிர்வாகம் சரியான அளவில் அங்கீகரித்திருப்பதை அறியும் போது பெருமகிழ்வாக இருக்கின்றது. பள்ளி குறித்து ஒரு ஆவணப்படம் தயாராகவுள்ளது.

இந்தப் பள்ளியில் உள்ள வகுப்பறைகள் போல், மாவட்டத்தில் பல பள்ளிகளில் வகுப்பறைகளின் தரம் உயர்த்தப்படவேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பதும் இதற்குச் சான்றாகும். அதையொட்டி ஆனைகட்டி மற்றும் பொள்ளாச்சியில் இரண்டு பள்ளிகளை மேம்படுத்த ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. 

”அனைவருக்கும் கல்வி இயக்கம்” இராமம்பாளையம் பள்ளிக்கு கூடுதலாக  கட்டிடம் கட்டவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் நிதி 11 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சியான செய்திகள். சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.ப்ராங்கிளின் அவர்களிடம் வகுப்பறையை சிறப்பாக அமைத்தது குறித்த ஒட்டுமொத்தத் திட்டத்தையும் பெற்று மாநில அரசிடம் அளித்துள்ளார். சிறப்பாகச் செய்திட்ட பணி, மிகச் சரியான நேரத்தில் அதற்கான அங்கீகாரம் பெறுவது மிகுந்த சிறப்புக்குரியது.

இந்நிலையில் எப்போதும் சிறப்பானவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நான் சார்ந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் பள்ளி குறித்த கட்டுரையை சில மாதங்களுக்கு முன் சங்க இதழில் வெளியிட்டிருந்தது. அதையொட்டி கடந்த இயக்குனர்கள் குழுக்கூட்டத்தில் அந்த ஆசிரியப்பெருமக்களை அழைத்து பாராட்டிட முடிவெடுக்கப்பட்டு  15.12.2011 அன்று பாராட்டுவிழா நடத்தப்பட்டது.



பாராட்டுக் கூட்டத்தில் இராமம்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. சரஸ்வதி அவர்களும், ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை அரிமா சங்கத்தலைவர் அரிமா. S.மகேஸ்வரன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். அன்றைய சிறப்பு விருந்தினரான முனைவர் சாரோன் செந்தில்குமார் அவர்கள் ஆசிரியர்கள் இருவரையும் பாராட்டிப்பேசி நினைவுப் பரிசினை வழங்கினார்.



தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தும்போது, கல்விக்கூடம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதின் பெருமை முழுக்க முழுக்க திரு. பிராங்கிளின் அவர்களையே சாரும் என அகமகிழப் பாராட்டினார். மேலும் இதுதான் முதல் பாராட்டு என்றும், அது மகிழ்ச்சி தருவதாகவும், அதே சமயம் இது போன்ற பாராட்டுகளை எதிர்நோக்கி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை என்றும் கூறினார்.



உண்மையில் திரு.பிராங்கிளின் மற்றும் திருமதி. சரஸ்வதி ஆகியோரின் உழைப்பிற்கு, செய்த அரிய சாதனைகளுக்கு முன் எங்கள் சங்கம் நடத்திய பாராட்டுவிழா என்பது என்பது மிகமிகச் சாதாரணமே. அதே சமயம் அவர்களை ஈரோட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான நபர்களிடம் அடையாளப்படுத்தியிருக்கின்றோம் என்பது மிகுந்த மனநிறைவைத் தருகின்றது.

தன்னலம் சிறிதும் பாராது அவர்கள் ஆற்றிய சேவை உண்மையில் போற்றுதலுக்குரியது. மீண்டும் ஒருமுறை என் மனம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திரு.பிராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள... 99424-72672       franklinmtp@gmail.com,  pupsramampalayam@gmail.com 


பள்ளி தொடர்பான சுட்டிகள்:



-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...