Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

Oct 29, 2025

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா...’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரளவு அறிந்திருப்போம்.


ஆனால், 'இந்தக் காலத்துப் பசங்க புள்ளைங்களுக்குஇன்னொரு பக்கமும் இருக்கலாம். நாம் ஆச்சரியப்படும் அல்லது அயர்ச்சியுறும் அவர்களின் முகங்கள், செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளின் பின்னே நாம் அறியாத இன்னொரு பக்கம் இருக்கின்றது. அப்படியானதொரு பக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


சமீபத்தில் ஆங்கிலத்தில் அனுப்பட்ட மடல் இது. நேரடி இணையவழி தமிழாக்கம் என்பதால் சில சொற்கள் வித்தியாசமாகத் தோன்றலாம்

*

வணக்கம்,


நேற்று உங்கள் அமர்வில் கலந்துகொண்ட பிறகு, என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு சிறிய பகுதியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆழமான உந்துதல் ஏற்பட்டது - அது எனக்கு வலிமை, பொறுமை, மற்றும் தன்னம்பிக்கையைக் கற்றுக்கொடுத்த ஒரு கதை.


நான் ஒரே பள்ளியில் 14 ஆண்டுகள் படித்தேன், அந்தக் காலகட்டம் முழுவதும் நான் பெரும்பாலும் தனிமையில்தான் இருந்தேன். எனக்கு நண்பர்கள் என்று யாரும் பெரிதாக இல்லை. என்னைச் சுற்றியிருந்த பலரும் மோசமான, toxic தன்மையுடையவர்களாக இருந்தனர் - நான் அடிக்கடி கேலிக்கும், உடல்ரீதியான அவமதிப்புக்கும் (body shaming) ஆளானேன்.


ஆயினும்கூட, எங்கள் மாவட்டத்தில் அதுதான் சிறந்த பள்ளி என்று என் பெற்றோர் நம்பியதால், நான் அங்கேயே தொடர்ந்தேன். அவர்கL கவலை வரவோ அல்லது அவர்கள் மனம் புண்படவோ கூடாது என்பதற்காக, அது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை நான் ஒருபோதும் அவர்களிடம் சொல்லவில்லை.

இவை அனைத்தின் மத்தியிலும், நான் தொடர்ந்து கடினமாகப் படித்து, என் பள்ளியில் முதல் 5 மாணவர்களுக்குள்ளேயே இருந்தேன். ஆனால், 12ஆம் வகுப்பின்போது, நான் மனதளவில் மிகவும் சோர்வடைய ஆரம்பித்தேன். குறிப்பாக practical மற்றும் public exam-களுக்கு முன்பு கவனம் செலுத்தவே முடியவில்லை.

வெறும் பத்து நாட்களில் முழுப் பாடத்திட்டத்தையும் படித்து, 600-க்கு 526 மதிப்பெண்களைப் பெற்றேன். நான் JEE Mains தேர்வையும் எழுதினேன், அதில் 93 சதவிகிதம் (percentile) மதிப்பெண் பெற்றேன். ஆனால், அப்போது எதைத் தேர்ந்தெடுப்பது என எனக்குத் தெரியாததால், நான் NIT-யில் சேரவில்லை.


பின்னர், நான் இரண்டு ஆண்டுகள் NEET-க்காகத் தயாரானேன், ஆனால் அந்த கட்டம் மனதளவிலும், உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் கடினமானதாக இருந்தது - நான் மீண்டும் தோல்விகளையும், தனிமையையும் அதிகம் சந்தித்தேன். 720-க்கு 530 மதிப்பெண்கள் எடுத்தேன், MBBS கிடைப்பதற்கு வெறும் 30 மதிப்பெண்கள் குறைவாக இருந்தது. நிதி நெருக்கடிகள் காரணமாக, நான் பொறியியல் படிக்க முடிவு செய்து இங்கு சேர்ந்தேன்.


இங்கேயும் கூட, என்னால் நம்பகமான நட்புகளை உருவாக்க கடினமாக இருக்கிறது. தனிமை என்னை சில நேரங்களில் தொடர்ந்து துரத்துகிறது. ஆனால் ஐயா, நேற்று நீங்கள் நடத்திய பயிலரங்கு அமர்வு உண்மையிலேயே கண்களைத் திறப்பதாக இருந்தது. நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கையைப் பற்றி ஆழமான உண்மைகளை தாங்கி வந்தது - அது வெறும் கல்வி அல்லது வெற்றியைப் பற்றியது அல்ல; நாம் யார் என்பதையும், வாழ்க்கையில் உண்மையிலேயே எது முக்கியம் என்பதையும் புரிந்துகொள்வது பற்றியதாக இருந்தது.


என் வாழ்க்கை ஒரே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நகர்கிறது - நம் மனநிலைதான் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது (Our mindset decides our life)” அந்த மனநிலை மட்டுமே என்னை இன்று இங்கே கொண்டு வந்துள்ளது, மேலும் உங்கள் அமர்வு அந்த உண்மையை இன்னும் ஆழமாக வலுப்படுத்தியது.

உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், அந்த அமர்வின் போது நான் உங்களுடன் பேச மிகவும் விரும்பினேன், ஆனால் என் introvert nature என்னைத் தடுத்து நிறுத்தியது. ஆயினும்கூட, நாம் நமது பயத்தினைக் கடக்கும்போதே வளர்ச்சி தொடங்குகிறது என்பதை உங்கள் வார்த்தைகள் எனக்கு உணர்த்தின. நான் உங்கள் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன், ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த மனநிலையை வெளிப்படுத்துகிறது. நேற்று முதல், வித்தியாசமாகச் சிந்திக்க, அர்த்தமுள்ளதாக வாழ, மற்றும் தைரியமாக என்னைப் வெளிப்படுத்த, நான் உங்களை என் role model - ஆகக் கருதுகிறேன்.


நேற்று, நான் வெறுமனே ஒரு அமர்வில் கலந்துகொள்ளவில்லை… “நான் யார்?” என்ற கேள்விக்கு ஒரு பதிலைக் கண்டுபிடித்தேன்.


*

சமீபத்தில் என்னை நன்கு அறிந்த ஒரு பள்ளியின் முதல்வர், அவர்களுடைய நிகழ்ச்சி ஒன்றில் என்னை அறிமுகப்படுத்தும்போது, என்னைக் குறித்த விபரங்கள் பலவற்றை விரிவாகத் தெரிவித்துவிட்டு, ”இதையெல்லாம் தாண்டி, இந்த நிகழ்விற்கு இவரை அழைக்க ஒரு முக்கியக் காரணம் உள்ளது. அது, இவர் எப்போதும் பிள்ளைகளின் பக்கம் மட்டுமே நிற்பார். நாம் பிள்ளைகள் குறித்து ஒரு கவலை அல்லது புகார் உள்ளிட்ட எதைப் பகிர்ந்தாலும், அந்தக் கவலை, புகார் பெற்றோர் பக்கத்தில் இருந்து வந்ததாக இருந்தாலும் சரி அல்லது ஆசிரியர் பக்கத்தில் இருந்து வந்ததாக இருந்தாலும் சரி, 'அதெல்லாம் இருக்கட்டும்ங்க, அந்தப் பையன் - பொண்ணு சைடுலா எதாவது ஒரு காரணம் இருந்திருக்கலாம், அதையும் என்னவென்று பார்ப்போம்என்பார்எனக் குறிப்பிட்டார்.


அதைக் கேட்டதும், எனக்கும் 'அட... ஆமாம்தானே...எனத் தோன்றியது. உண்மையில் அப்படியொரு இயல்பு, நிலைப்பாடு என்னிடம் இருப்பதை நானே உணர்ந்த தருணம். அதுவரை எதுவானாலும் பிள்ளைகள் பக்கம் நான் நிற்க விரும்பியதைநானே அவ்வளவாக, தெளிவாக உணர்ந்திருக்கவில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டதில்லை. நம்மிடம் இருக்க வேண்டிய குணம், பண்பு அல்லது நிலைப்பாடு என்பது ஏதோவொரு புள்ளியில் தானாக வந்து நம்மிடம் இணைந்துவிடுகின்றன. சிலவற்றை எப்போது, எதன் நிமித்தம் வந்து சேர்ந்த்து என அடையாளம் கண்டுவிட முடியும். பலவற்றை அப்படி இனம் காண முடிவதிலை.


மேலே இருக்கும் மடல் வந்து சில வாரங்கள் ஆகியிருந்தாலும், ’பதின்வயதில் பலருக்கும் எளிதாக வாய்க்கும் ஒன்றை எட்ட, எத்தனையெத்தனை தடைகளைத் தாண்டி ஒரு பிள்ளை வர வேண்டியிருந்திருக்கின்றதுஎன்பது மட்டும் மனதில் அலைந்துகொண்டேயிருந்தது. அந்த மடலுக்கு விரிவாக பதில் அனுப்பியிருந்தேன். அடுத்தமுறை அவருடைய கல்லூரிக்குச் செல்லும்போது தேடி, சந்தித்து பேசிவிட்டு வரவேண்டும் எனவும் நினைத்திருக்கிறேன்.

இம்மாதிரியான அவர்களின் இன்னொரு பக்கம்இப்படி மடல்களாக நீளும், உரையாடல்களாக எட்டும், சில வேளைகளில் வெறும் ஓரிரு வரிகளிலும்கூட வந்தடையும்.


எது வந்தாலும் பிள்ளைகள் பக்கம் நிற்க விரும்புவதன், நிற்க முற்படுவதன் பின்னே, அவ்வளவு எளிதில் வெளிப்படாத, நம்மால் அவ்வளவாக வாசிக்கப்படாத அந்தப் பக்கங்களில் கனத்திருக்கும், உண்மைகளே காரணமாக இருக்க முடியும் என்பதை ஆழமாக உணர்கிறேன்.


Dec 31, 2019

கே.ஜி.மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோபி - ஆண்டு விழா

இந்த ஆண்டின் நிறைவுக்கூட்டம், ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அடுத்த ஆண்டின் முதல் கூட்டமாகவும் இதை பட்டியலில் இணைத்துக் கொள்ளவே விரும்புகிறேன்.

இதே டிசம்பர்-28ல் முதன்முறையாக பொதுத் தேர்வு மாணவர்களுக்கான பயிற்சியாளராக 2016ல் களம் இறங்கினேன். அதே டிசம்பர்-28ல்தான் 2017ல் இந்தப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா சிறப்பு விருந்தினராகப் பேசினேன். இந்த ஆண்டு அதே டிசம்பர்-28, அதே பள்ளியில் ஆண்டு விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறேன்.



கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆறு அமர்வுகளில் ஏறத்தாழ 50 மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சியளித்த நிலையில், ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டபோது தயக்கமும், தடுமாற்றமும் இருந்தது. எனவே ஆண்டு விழாவில் பெற்றோர்களை என் இலக்காக வைத்துக் கொண்டேன்.



உள்ளடங்கிய கிராமத்துப் பள்ளி, திருவிழாவிற்கு வந்தது போன்ற மனநிலையில் குவிந்திருந்த கூட்டம் வித்தியாசமான அனுபவமே. மதியம் (Atal Tinkering Lab) ஆய்வகத்தை திறந்து வைத்தது முதல் பின்னிரவு கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுறும்வரை முழுவதும் பங்கெடுத்திருந்தேன். மாணவ, மாணவிகள் பலருடன் உரையாடும் வாய்ப்பும் அமைந்தது.

*

கோவையில் உயர்கல்வி பயின்று வரும், பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தாளாளரின் வழியாக என்னிடம் பேச வேண்டும் என வந்தார். #வேட்கையோடு_விளையாடு தொகுப்பின் வாசகி என அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். தமது ஏழு ஆண்டு கால கல்வி வாழ்க்கை குறித்து ஒரு சொல் தடுமாற்றமின்றி ஏறத்தாழ 40 நிமிடங்கள் பகிர்ந்துகொண்டார். அதிர்ச்சியும் ஆச்சரியங்களும் நிறைந்த மிகக் கனமான, சவாலான வாழ்க்கை. காலம் விடுத்த சவால்களை அந்தந்தப் புள்ளியில் வென்றெடுத்திருக்கிறார். பொருளாதார நெருக்கடியால் படிக்க வைக்க முடியாது என்று கூறிய தந்தையை எதிர்த்து சண்டையிட்டு தமது கல்வியைத் தொடர்ந்திருக்கிறார். காலம் கடந்திருந்தாலும், அப்படி சண்டையிட்டது தவறோ எனும் குற்ற உணர்வு மட்டும் இருந்து கொண்டேயிருந்திருக்கிறது.

சமூகத்தில் நல்ல அறிமுகத்தோடு இருக்கும், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த மகன், திடீரென விவசாயம் செய்கிறேன் என சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். அப்பா மனம் ஒப்பாமல், அந்த முடிவை குறையாகக் கருதி ஒத்துழைப்பு தராமல் இருந்திருக்கிறார்.

உரையின் மையம், பிள்ளைகள் தாம் உருவாக்கிய சிறகுகளின் துணையோடு அவர்கள் விரும்பிய எல்லை வரை பறக்க அனுமதியுங்கள் என்பதும், பெற்றோர்களிடம் நல்ல கல்விக்காக எவ்வளவு வேண்டுமானாலும் சண்டையிடுங்கள் என்பதுவும்தான்.

அந்த மாணவி “பயங்கர குற்றவுணர்ச்சில இருந்தேன். இப்ப புரியவச்சிட்டீங்க தேவையானதுக்குத்தான் சண்ட போட்ருக்கேன். தப்பில்ல!” என்றும், அந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் “அது பையனோட வாழ்க்கைங்க, அவன் விரும்பினதைத்தான் செய்துக்கட்டுமே, இனிமே அவனுக்கு சப்போர்ட் பண்ணப்போறேன்” என்றும் கூறியதே இந்த ஆண்டின் நிறைவில் எனக்குக் கிடைத்த பெரும் பரிசு என்பேன்.

22 வயதாகும் மகளுக்கு ‘கல்யாணம் பண்ணி வச்சுடுறேன் அப்புறம் என்ன வேணா பண்ணிக்கோ!’ என வற்புறுத்திக் கொண்டேயிருந்த ஒரு தாய், “இனி கல்யாணம்னு கட்டாயப்படுத்தப் போறதில்லை, மக விரும்பினதை படிச்சுட்டு வரட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்” என்றார்.

*



இந்த மாதிரி அனுபவங்களே என்னை #வேட்கையோடு_விளையாடு தொகுப்பு எழுத வைத்தது. கேஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள் இரண்டு பேர் தொகுப்பின் இரண்டு கட்டுரைகளின் நாயகிகள் என்பது, அன்று வரை எனக்கும், நிர்வாகத்திற்கும், அந்த மாணவிகளுக்கும், புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட சிலருக்கும் மட்டுமே தெரியும். ஆண்டு விழா உரையில் அவர்களின் பெயர், அடையாளத்தைத் தெரிவிக்காமல் அவர்களையே உதாரணமாகக் காட்டிப் பேசினேன்.

கலை நிகழ்ச்சிகள் பார்த்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் மலர்ந்த முகத்தோடு “சார்.... நா......” என்று தன் பெயர் சொன்னபோது ஒருகணம் சிலிர்த்துப் போனேன். 2018ம் ஆண்டு பிப்ரவரியில் அந்தப் பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட வகையில் கலங்கடித்தவள். இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு கூட்டங்களில் அந்தப் பெண்ணை உதாரணமாக முன்னிறுத்திப் பேசியிருக்கிறேன். குட்டி உருவமும், கூர்மையான கண்கள் மட்டுமே நினைவில் இருந்தன. முகம், நிறம், அடையாளம் என எதுவும் நினைவில் இல்லை. வேறு எங்கேனும் சந்தித்திருந்தாலும் எனக்கு அடையாளம் தெரிந்திருக்க சாத்தியமில்லை. ஆயிரக்கணக்கானோர் இருந்த அந்த கூட்டத்தில் அந்த மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரும் இருந்திருக்கிறார்கள் என்பது எனக்கு கலவையான ஒரு மனநிலையைக் கொடுத்தது.

புதிய தலைமுறையில் தொடராக எழுதியபோது, தொகுப்பாக வெளியான பிறகு என அந்தப் பெண் வாசித்திருந்தாலும், நாங்கள் இப்போதுதான் பேசுகிறோம், சந்திக்கிறோம். இருவருக்கும் இடையே இருந்த பரவசத்திற்கு நிகராக, ஒருவித கனமும் ஒளிந்திருந்தது. என்னை எளிதாக்குவது போல், “எங்க காலேஜ் சிலபஸ்ல உங்க கவிதை இருக்கு சார், அதில் கவிஞர்னு உங்களைப் பத்தி அறிமுகப்படுத்தும்போது, எனக்குத் தெரியும், என்னைப் பத்தியும் எழுதியிருக்கார்னு பெருமையா இருக்கும் சார்” என்றாள். என் குடும்பத்தை அறிமுகப்படுத்தி, செல்ஃபி எடுத்துக் கொண்டு, எண் கொடுத்து தொடர்பில் இரு எனச் சொல்லி விடை பெற்றேன்.

*

இந்த ஆண்டு விளையாட்டு விழா சிறப்பு விருந்தினராக, ஈரோடு வாசலில் இருந்து மூன்றாவது கல்வி விளையாட்டு விழா வாய்ப்பாக பாலமுரளி பங்கெடுத்ததுவும் மகிழ்ச்சிக்குரியது.



அருமையான தருணத்தை வழங்கிய பள்ளியின் செயலர் திரு.சிவக்குமார், தாளாளர் திருமதி. உமா சிவக்குமார், என் மனைவியிடம் திருஷ்டி சுத்திப் போடுங்க என வாழ்த்திய நிறுவனத் தலைவர் திரு. வி.கே.சின்னசாமி மற்றும் நட்பிற்குரிய பள்ளியின் அனைத்து ஆசிரியத் தோழமைகளும் மிகுந்த அன்பிற்குரியவர்கள்.

2017ல் அறிமுகப்படுத்தியதோடு, இந்த ஆண்டும் நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர் வெற்றிவேல், ஈரோடு வாசலில் இருந்து நிகழ்வில் பங்கெடுத்த தாளவாடி கேசிடி பள்ளி தாளாளர் முதல்வர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், சாஹர் மேல் நிலைப்பள்ளி முதல்வர் திருமதி ராதா மனோகரன், தம்பி மூர்த்தி மற்றும் முதன்முறையாக பங்கெடுத்த என் குடும்பத்தினருக்கும் அன்பு கலந்த நன்றிகள்.

.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...