எங்கே வெளையாடிக்கிட்டிருந்தாலும்
”மலர்ர்ர்ரூ”னு கூப்பிட்ட கொரலுக்கு
போவாட்டி மண்ட வீங்கிப்போயிடுது
படீர்னு கொட்ற கொட்டுல
தங்கக்கட்டி என் செல்லக்கட்டின்னு
அம்மா பாசமா இருந்ததும்
அப்பா அம்மாவும் சேர்ந்து சிரிச்சதும்
எப்போன்னு மறந்தே போச்சு
குடிச்சுப்போட்டு வர்றன்னிக்கு மட்டும்
போத மாதிரியே அப்பனுக்கு மீறுன பாசம்
சவுக்காயித்தில சுருட்டின கார முறுக்க
தின்னு தின்னுனு வாயில திணிப்பாரு
குப்னு அடிக்கிற நாத்தத்துல
கொமட்டிக்கிட்டு வந்து வேணாம்னு சொன்னா
அட தின்னுன்னு இடிக்கிற கன்னத்துல
வெடியவரைக்கும் நிக்கிறதில்ல எரிச்சல்
பாழாப்போறவனெ இன்னிகாச்சும்
காசு கொண்டாந்தியா இல்ல
எவகிட்ட வுட்டுட்டு வந்திட்டியான்னு
ஒடுங்குன போசிய தூக்கி வீசுவா
எச்சி ஒழுக தொங்குன தலையோட
திண்டாடுற அப்பன் விருட்டுன்னு
எட்டி ஒதைக்கிற ஒதையில
ஓரத்துல பொத்துனு வுழுவுறா
ஒதைக்க வர்ற அப்பங்காலப் புடிச்சு
பொத்துன்னு வுழுந்த அம்மாவ இழுத்து
வுழுந்து பொறண்டதுல கசங்கிக்கெடந்த
பொஸ்தக பைய அவசரமா சரிபண்ணி
தமிழ் பொஸ்தகத்த தடக்குனு உருவி
முப்பதேழாம் பக்கம் தொறந்தா
முருகேசன் கொடுத்த மயில் எறகு
அழாகாத் தூங்குது கொழந்தையாட்டம்
இந்த அப்பாம்மாக்கு பொறந்ததுக்கு பதிலா
முருகேசமூட்ல ஒரு மயில் எறகா பொறந்திருந்தா
இன்னேரம் பொஸ்தகத்துள்ள தூங்கியுமிருக்கலாம்
எந்தக் கவலையும் இல்லாம
குட்டியும் போடாம…..
_____________________________
Aug 28, 2010
Aug 25, 2010
ஓரம்போ.. ஓரம்போ.. ருக்குமணி வண்டி வருது
கிராமங்களில் எல்லாப் பருவத்திலும் விளையாட ஏதோ ஒன்று கிடைத்துக் கொண்டேயிருக்கும். அதில் கிடைக்கும் நிறைவு இதமான ஒன்று. ஒவ்வொரு விளையாட்டுப் பொருளையும் உருவாக்க ஒரு குறிப்பிட்ட யுக்தியும், உழைப்பும் தேவைப்படும்.
வெயில்காலம் துவங்கும் காலத்திற்கு முன்பே, பனை மரங்களில் குறும்பைகள் விடத் துவங்கியிருக்கும். அப்போதே ஆளாளுக்கு இது என் மரம், இது உன் மரம் என்று நானும் அண்ணனும் பங்கு பிரித்துக்கொள்வோம். அடிக்கடி பார்த்துப் பார்த்து எத்தனை குலை விடுகிறது என்பது குறித்து தோராயமாக ஆராய்ச்சி நடக்கும்.
நாட்கள் நகர ஒரு சுபயோக சுப ஞாயிற்றுக்கிழமை நொங்கு வெட்ட நிர்ணயிக்கப்படும். காலையிலிருந்தே கூடையோடு பரபரப்பாக காத்திருந்து, ஆள் மேலே ஏறி வெட்டிப்போடும் போது தூரமாய் ஒதுங்கி நின்று, கீழே விழுந்தவுடன் குலையிலிருந்து சிதறியோடும் நொங்குளைப் பொறுக்கி, இப்படியாக ஒவ்வொரு குலைக்கும் சிதறிய காய்களை கூடையில் சேர்க்க, பெரியவர்கள் குலைகளைச் சுமந்து வர, அதிக குலை, இளம் நொங்கு என யார் மரம் சிறந்தது என்று ஒரு தீர்ப்பு வழங்கப்படும்.
வாகாய் ஒரு இடத்தில் எல்லாவற்றையும் குவித்து, பளபளவென தீட்டிய அரிவாளால்,பதமான நொங்கை எடுத்து, சரக்கென சீவித் தர, கைகள் பரபரக்கும். கட்டை விரலால் வேகமாய் பளபளக்கும் நொங்கை குத்த வெதுவெதுப்பா தண்ணீர் பீச்சியடிக்கும் முகம் முழுதுக்கும். அப்படியே உதட்டோடு ஒட்டி உறிஞ்சி, அடுத்த சில மணி நேரங்களில் வயிறு கனக்க அடுத்த பணி ஆரம்பிக்கும்.
சீவிப் போட்டு, உறிஞ்சி வீசிய காய்களில் ”இது உனக்கு, இது எனக்கு” கையகப்படுத்துவதில் போட்டி நிலவும். ஒரு வழியாய் வட்டமாய், அழகாய் சீவப்பட்ட நொங்கை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு, அரிவாளாடு நொச்சி மரத்துக்கோ, கொய்யா மரத்துக்கோ ஓடி ஒரு நீளமான, அதுவும் மிக நேர்த்தியாக கிளை பிரியும் குச்சியை வெட்டி அதை அழகாக கத்தரித்து, கூடவே ஒரு அடி நீளத்திற்கு ஒரு குச்சியை வெட்டி எடுத்துக்கொண்டு வருவோம்.
அடுத்து வண்டி தயாரிக்கும் பணி சிரத்தையாக நடைபெறும். சமமான அளவில், ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு காலி நொங்கு காய்களை எடுத்து, அந்த ஒரு அடி குச்சியை அச்சாக வைத்து இரண்டு நொங்குகளின் முதுகில் இரு சிறு துளை போட்டு, அச்சின் இரண்டு பக்கமும் சக்கரமாக பொருத்தப்படும்.
அடுத்து கவட்டியாக இருக்கும் நீண்ட குச்சியின் தலையில் ஒரு நொங்கு ஸ்டியரிங்காக பொறுத்தப்படும். அடுத்து ஸ்டியரிங் பொறுத்தப்பட்ட குச்சியின் மறுமுனையிலிருக்கும் கவட்டி அச்சின் மையத்தில் வைக்கப்பட்டு, கவட்டி பிரியாமல் இருக்க சின்ன கம்பியின் துணையோடு கட்டப்பட்டவுடன் நொங்கு வண்டி தயாராகிவிடும்.
அடுத்த விநாடி முதல் வீடு, வாசல், காடு மேடு, களத்து மேடு என எங்கு சென்றாலும் நொங்கு வண்டி முன்னே செல்ல, பின்னால்தான் பயணம். சில சமயம் வீட்டில் கிடக்கும் பழைய இரும்பு முறத்தையோ அல்லது தகரத்தையோ முறம் போல் வளைத்து ஒரு கம்பியால் கட்டி வண்டிக்கு ட்ரெய்லர் செய்வதும் உண்டு.
வீட்டில் எப்போதும் வேலை சொன்னால் பிடிக்காது, ஆனால் நொங்கு வண்டி செய்த பின் வண்டியோடு சென்று செய்யும்படியான வேலைகள் மிகவும் பிடித்ததாக மாறிவிடும். நொங்கு வண்டியின் வாழ்நாளும் சில நாட்கள்தான். அடுத்த சில நாட்களில் நொங்கு காய்கள் சுருங்க ஆரம்பிக்க, அச்சில் இருந்து சக்கரம் கழண்டு போக ஆரம்பிக்கும். மனம் தளராத விக்கிரமாதித்தனாக அடுத்த வாரம் வெட்டப்படும் நொங்கிற்காக காத்திருக்க ஆரம்பிக்கும்..
நொங்கு வண்டியைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. வெறும் ஒரு பிம்பமாக மட்டுமே நினைவில் புகைபடிந்த உருவமாய் இருக்கின்றது. கிராமத்தில் குலையாய் வெட்டி வந்து சீவிச்சீவி வயிறு புடைக்க நொங்கு தின்று எத்தனை வருடம் ஆகிறது என்பதுவும் நினைவில் இல்லை.
நெடுஞ்சாலைகளில் சாலையோரம் கேரி பேக்குகளிலோ அல்லது பச்சை பனை ஓலைகளிலோ தொல்லியோடு (நொங்கு ஓடு) தோண்டி எடுத்து விற்பனையாகும், முற்றிய நிலையில் இருக்கும் கடுக்காய் நொங்குகளை வாங்கித் தரும் போது, ஒரு மாதிரியாக சுவைத்துத் தின்னும் குழந்தையை பார்க்கும் போது, கொஞ்சம் குற்ற உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
வண்ணத்தால் ஈர்க்கப்பட்டு, ஆசையாய் வாங்கி அடுத்த சில நாட்களில் திகட்டிப் போகும் விளையாட்டுப் பொருட்களைக் காணும் போதெல்லாம் சுயமாய், இயந்திரவியலோடு உருவாக்கி விளையாடி மகிழ்ந்த நொங்கு வண்டிகள் மனதுக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடி விளையாடுவதை என்ன செய்தாலும் நிறுத்த முடிவதில்லை.
Aug 21, 2010
வலைப்பூ கருத்தரங்கு – கொங்கு பொறியியற் கல்லூரி, பெருந்துறை
தினமும் கனிணியிலும், இணையத்திலும் புழங்கும் மாணவர்கள் கூட, இணையம் அளிக்கும் உன்னதமான வாய்ப்புகளை பல சமயம் ஏதோ சில காரணங்களால் தவறவிட்டு விடுகின்றனர். இதைச் சற்றே மாற்றவும், மாணவர்களை வலைப்பூக்களை பயன்படுத்த வைக்கவும் நடத்திய ”வலைப்பூக்கள் துவங்குதல் – கருத்தரங்குகள்” நிகழ்வையொட்டி, மாணவர்களிடம் வலைப்பக்கங்களை எடுத்துச் செல்லும் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மீண்டும் ஒரு வாய்ப்பு பெருந்துறை கொங்கு கல்லூரியில் வழங்கப்பட்டது.
மாணவர்கள் தங்கள் திறனை முழுதும் வெளிப்படுத்த வலைப்பக்கங்களை எப்படி பயன் படுத்துவது என்பது குறித்தும்…..
வலிமை வாய்ந்த வெகு ஜன ஊடகங்கள் தொடர்ந்து தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விட்டொதுக்கும், நம்மைச் சுற்றி நடக்கும் அரிய விசயங்களை வலைப்பக்கங்கள் மூலம் ஆவணப்படுத்துவது குறித்தும்…
இணையத்தில் தமிழில் வெளிவரும் பத்திரிக்கைகளை வாசிப்பதும், அதுகுறித்த வெட்டி, ஒட்டி வரும் கருத்துக்களைப் பதிவு செய்வது குறித்தும்….
இணையத்தில் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மனதிற்குள் தோன்றும் கருத்துக்களை இணையத்தில் பயன்படுத்துவது குறித்தும் நாற்பது நிமிடங்களை உரை நிகழ்த்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, Power Point உதவியுடன் வலைப்பக்கம் துவக்குதல், இடுகைகள் எழுதுவது, பின்னூட்டம் இடுவது, திரட்டிகளை பயன்படுத்துதல், தமிழ் எழுதிகளை நிறுவுதல் ஆகியவை 50 நிமிடங்கள் மிக விரிவாக விளக்கப்பட்டது.
பல்வேறு தளங்களில் சமூகத்திற்கும், பொதுமக்களுக்கும் பயன்பட்டு வரும் வலைப்பக்கங்கள் உதாரணத்துடன் விளக்கப்பட்டது.
மிக ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்களைக் காணும் போது, மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
மாணவர்களுக்கு நல்ல விசயங்களை பகிர வாய்ப்பளித்த துறைத்தலைவர் முனைவர். பிரியகாந்த், மூத்த விரிவுரையாளர்கள் திருமதி.கலைச்செல்வி, திரு.வெங்கடேஷ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து என்னைத் தொடர்பு கொண்டு நிகழ்வை வெற்றிகரமாக நடத்த துணையிருந்த மாணவியர்கள் பிரிவு செயலர் செல்வி.பவித்ரா அவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வழக்கத்திற்கு மாறான கூடுதல் குளுமையோடு விடிந்த இன்றைய பொழுது, நாள் முழுதும் மகிழ்ச்சியை மனதிற்குள் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டேயிருந்தது. அந்த விடியலின் குளுமையை நிகழ்வு நிறைந்த போது இன்னும் கூடுதலாக இதயத்திற்குள் உணர முடிந்தது.
இன்னும் விதைகளைத் தொடர்ந்து விதைப்போம், ஒரு நாள் விருட்சங்கள் நம்மை சுற்றி நிற்கும்.
மேலும் நன்றிக்குரியவர்கள் பதிவர்கள் பழமைபேசி, ச.செந்தில்வேலன், கார்த்திகை பாண்டியன் மற்றும் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்.
___________________________________
Aug 18, 2010
என்ன சொல்ல?
உடல் முறுக்கி உயிர் வலிக்க
எதையோ புரட்டுகையில்
பூக்கும் வியர்வைத்துளியில்
புரளும் காற்றின் சிலுசிலுப்பில்
சுகமாய்ப் பிறக்கும் இதமான கவிதை…
வெண் காகிதம் வழுக்கும் எழுதுகோல்
மணக்கும் தேநீர் மயக்கும் மாலை இருந்தும்
உயிர்ப்பதில்லை பலசமயம்
===========
அடர் வீச்சமாய் அடிக்கிறது
வெட்டப்பட்ட மரத்தின் வாசம்
பூரித்து நீந்திய வேர்கள்
புழுங்கித் தவிக்கிறது
துளைத்துத் துளைத்து
சுவைத்த மண்ணுக்கும்
தேடித்தேடி உறிஞ்சிய நீருக்கும்
எழுத்துகளில்லா பதில்களோடு…
எதையோ புரட்டுகையில்
பூக்கும் வியர்வைத்துளியில்
புரளும் காற்றின் சிலுசிலுப்பில்
சுகமாய்ப் பிறக்கும் இதமான கவிதை…
வெண் காகிதம் வழுக்கும் எழுதுகோல்
மணக்கும் தேநீர் மயக்கும் மாலை இருந்தும்
உயிர்ப்பதில்லை பலசமயம்
===========
அடர் வீச்சமாய் அடிக்கிறது
வெட்டப்பட்ட மரத்தின் வாசம்
பூரித்து நீந்திய வேர்கள்
புழுங்கித் தவிக்கிறது
துளைத்துத் துளைத்து
சுவைத்த மண்ணுக்கும்
தேடித்தேடி உறிஞ்சிய நீருக்கும்
எழுத்துகளில்லா பதில்களோடு…
===========
Aug 17, 2010
ரயில் பயணங்களில்
உறக்கத்தின் துவக்கத்தில்
கிழக்கு நோக்கி தொடங்கிய
தொடர்வண்டிப் பயணம்
இடவலமாய் மாறிமாறி நிறைகிறது
இடையிடையே விழிக்கும் மனதில்
இறுதிவரை நிகழவேயில்லை
திசை மாற்றம்
பயணத்தின் துவக்கத்தில்
இருக்கையின் மேல்
துளிர்க்கும் பாசமும் பிடிப்பும்
பற்றுதலும் பிரியமும்
இறங்கும் போது
முற்றிலும் நீர்த்துப்போகிறது
எந்தச் சலனமுமின்றி
<><><><><><><><>
எல்லாப் பயணத்தின் நிறைவிலும்
இறங்குவதில் பரபரப்பு வியாதியாய்
இந்த முறையாவது எல்லோரும்
இறங்கியபின் இறங்கவேண்டும்
சங்கல்பம் நினைவிற்கு வருகிறது
சங்கல்பம் நினைவிற்கு வருகிறது
வழக்கம்போல் முட்டி மோதி
இறங்க யத்தனிக்கும் நேரத்தில்
<><><><><><><><>
Aug 15, 2010
பாவம் சுமக்கும் சந்ததி
நாளுக்கு நாள் கரைபுரளும் பொருளாதாரத்தின் நீட்சியாக, தனிமனித விழாக்கள் வண்ணமயமாக, வெறித்தனமான ஆடம்பரத்தோடு கொண்டாடப்படுவதை கண்டும் காணாமலும் ரசித்தும் ரசிக்காமலும் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றோம். அதேசமயம் இத்தனை ஆடம்பரம் தேவைதானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
நடுத்தரக் குடும்பங்களில் கூட சர்வசாதரணமாக மூன்றாயிரம் நபர்களை ஒரு திருமணத்திற்கு அழைப்பதை கௌரவமாக நினைக்கின்றனர். மேல் தட்டு மக்களின் திருமணக் கூட்டத்தை சொல்லவே வேண்டியதில்லை.
அவர்களின் தனிப்பட்ட சொந்த ஆடம்பரங்களைக் கண்டு கொஞ்சம் முகம் சுழித்து சகித்துக் கடந்தாலும், சகிக்க முடியாமல் போகும் சந்தர்ப்பம், விருந்துகளில் ஒவ்வொரு இலையிலும் குடிப்பதற்காக தனித்தனியாக தண்ணீர் பாட்டில்களை வைக்கும் விபரீதங்களைக் காணும் போதுதான்.
எவ்வளவு பேரை அழைத்தோம் என்ற எண்ணிக்கையை கௌரவமாக நினைப்போர், தாங்கள் உணவுக்கூடத்தில் வழங்கும் பிளாஸ்டிக் டம்ளர் அல்லது பிளாஸ்டிக் பாட்டில் மூலம் பல ஆயிரக்கணக்கான சதுர அடி நிலத்தை மலடாக்குவது குறித்து சற்றும் குற்ற உணர்வு கொள்வதேயில்லை. இது எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் அல்லது என்ன நடந்தால் எனக்கென்ன என கண்டும் காணாமல் போகும் மனப்போக்கின் விபரீதம்.
கடந்த பத்து ஆண்டுகளுக்குள் தான் இந்த பிளாஸ்டிக் பூதம் வெறித்தனமாக நிலத்தின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துள்ளது. அதுவரை விருந்துகள், விழாக்களில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர்கள் மட்டுமே முழுக்க, முழுக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரு பந்தி முடிந்தவுடன் எடுத்து, கழுவி மீண்டும் அடுத்த பந்திக்கு வைக்கும் வழக்கம் சிதைந்தது, எளிது, சுகாதாரம்(!) என்ற அற்ப காரணங்களையொட்டி யூஸ் அன் த்ரோ டம்ளருக்கு புலம் பெயர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக இலைக்கு இலை குட்டி தண்ணீர் பாட்டிலை வைப்பது வாடிக்கையாகிப் போனது. இது நாகரிகத்தின்(!) அடையாளமாகவும், விழா நடத்துவோரின் அந்தஸ்த்தை(!) வெளிக்காட்டும் ஒரு வித மனவியாதியாகவே மாறிப்போனது.
இன்னும் சில விழாக்களில் விருந்து கூடத்திற்கு வெளியே தண்ணீர் வைத்திருக்கும் இடத்தில் மையமாக நின்று கொண்டு சுற்றிலும் இருக்கும் மேசைகள் மேல் டம்ளர்களை அடுக்கி, ஒரு ஆள் தொடர்ந்து தண்ணீர் நிரப்பிக் கொண்டிருப்பார். தண்ணீர் குடிக்கச் செல்பவர் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டு, காலி டம்ளரை அருகிலிருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, அடுத்த டம்ளரை எடுத்து குடிப்பார், இப்படியாக ஒரே நேரத்தில், ஒரே ஆள் மூன்று நான்கு டம்ளர்களை நசுக்கி எறியும் போது, பூமியின் ஜீவாதார நரம்புகள் நசுங்கிப்போவது குறித்து விருந்துக்கு செலவு செய்பவருக்கும், ஊற்றுபவருக்கும், குடிப்பவருக்கும் என யாருக்குமே துளியும் கவலையேயில்லை.
விருந்துகளில் இலைகளில் பரிமாறப்படும் 300 மி.லி தண்ணீர் பாட்டிலை உடைத்து விரித்தால், ஏறத்தாழ ஒரு சதுர அடி பரப்பு அளவுக்கு விரியும். விழாவில் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களில் சராசரியாக நாற்பது சதவிகிதம் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக பயன்படுத்தப் படுவதில்லை. மீதி யாவும் குப்பைகளோடு குப்பைகளாக கள்ள மௌனத்தோடு மண்ணை தொடர்ந்து தொடர்ந்து மலடாக்கும் பணியினை செவ்வனே செய்து வருகின்றது.
திருமணங்களின் நோக்கம் பலவாக இருந்தாலும், சந்ததிகளும் ஒரு முக்கியக் காரணம். ஒரு திருமணத்தால் விதைக்கும் பிளாஸ்டிக் விருட்சத்தை வேரறுக்கும் பாரத்தையும் வருங்கால சந்ததிமேல் சுமத்துகிறோம் என்ற எண்ணம் மெலிதாய் அடிமனதில் குறுகுறுக்க ஆரம்பித்தாலே, மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கும் ஒரு விழா, மண்ணின் கருவறைக்கு சாவு மணியடிப்பதை நிறுத்திட முடியும்.
____________________________________________________
Aug 13, 2010
சாணென்ன மொழமென்ன?
அடங்காப் பசியிலும் அவிச்சு திங்காம
கைபடாம காத்துப்படாம பத்திரப்படுத்தி
அடைகாத்த வெதப்பயறு
ஆடி மாசம் வராத தண்ணியால
பூச்சி புழுவுக்கு சோறாப்போச்சு...
வாரக்கணக்குல கருக்கிய மானம்
வழியவுட்ட ஒத்த மழைய நம்பி
ஏமாந்து வெதச்ச சோளம்
மறு மழை பேயாம போனதுல
மண்ணோட புழுங்கிப்போச்சு...
தப்பித் தவறி மொளைச்சு கிளைச்சு
தழைச்சு நின்னு தலைநிமிர்ந்து சிரிக்கையில
ஐப்பசியில வந்த அடைமழை
பேய் மழையா நின்னு பேஞ்சதுல
மூழ்கி அழுகிப்போச்சு...
வெள்ளைக்காரன் போடற துணிக்கு
வெளிநாட்டுக்கார் வாங்குன முதலாளி
வெளியேத்துன சாயத்தண்ணியில
கொஞ்ச நெலமும் செத்துப்போச்சு
குடிதண்ணியும் வெசமாச்சு...
தலைக்கு மேல அட சாணென்ன மொழமென்ன
போனது போவட்டும் நடப்பது நடக்கட்டும்
எல்லா ஊருக்கும் கொடுத்துட்டாங்களாமே
கரியில்லாத கேஸ் அடுப்பும் கலர் டிவியும்
எப்படா கொடுப்பாங்க நம்மூருக்கு?
___________________________________________
Subscribe to:
Posts (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
க ண்ணுக்குத் தெரியாத மின் காந்த அலைகளினூடாக பின்னப்பட்ட வலைத்தளம் இணைத்து வைத்த உறவுகளை பெரும்பாலும் வாசிப்பிலும், பின்னூட்டங்களிலும் சில ச...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...
