Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Jun 8, 2020

கொரானாவை வாழ வைப்பதா நம் இலக்கு!?


அதீத அச்சம் முதல் வித்தியாசமான வாய்ப்புகள் வரை  கொடுத்துள்ள கோவிட்-19 கிருமி பழைய சில சொற்களை புதிய வடிவில் பயன்பாட்டிற்கும் கொண்டு வந்துள்ளது. கோ கரோனா கோ தொடங்கி வீட்டிலிரு, விலகியிரு, சமூக இடைவெளி, புதிய இயல்பு வரை நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றில் முக்கியமான ஒன்று கொரானாவுடன் வாழப் பழகுவோம்.

உலக சுகாதார நிறுவனம் என்ன அர்த்தத்தில் இதை அறிவுறுத்தியது என்பதைவிட, மக்கள் இதை எப்படி அணுகிறார்கள் என்பதுதான் முக்கியம். ஒரே நாளில் நான்கு இலக்கத்தில் தொற்று எண்ணிக்கை என அறிவிக்கப்படும் தலைநகரில் வசிக்கும் ஒருவர்பார்லர் போய்ட்டு வந்துட்டேன்என செல்ஃபிகளைத் தோரணம் கட்ட, ’ஆஹா...ஓஹோ... அழகுஎனப் பின்னூட்டம் இட்ட பலருக்கும் கொரானாவுடன் வாழப் பழகிட்டோம்லஎன்று பதிலளித்துக்  கொண்டிருந்தார்.

நேற்று நடைப்பயிற்சி வழியின் மையத்தில் கும்பலாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள், சப்தமாகச் சிரித்தபடி சொன்னதும்கூடநாங்க கொரானாவோட வாழப் பழகிட்டிருக்கோம்என்பதுதான்.

என் அதிர்ச்சியெல்லாம் கண்ணுக்கே தெரியாத கொரானாவுடன் குடித்தனம் நடத்தும் அளவிற்கு, நம் அறிவும் கண்ணுக்கே தெரியாமல் சுருங்கியிருப்பதை நினைத்துத்தான். எப்போதுதான் நாம் எதையும் அதனதன் உண்மையான பொருளோடு புரிந்து கொண்டிருக்கின்றோம். வெறியூட்டும் உணர்வுப் பூர்வமாக அணுகுகின்றோம் அல்லது எல்லாவற்றையும் பகடி செய்து மழுங்கடிக்கின்றோம்.

முடிவெடுத்தல் மற்றும் மன அழுத்தம் தவிர்த்தல் ஆகியவை குறித்து உரையாடும்போது அழுத்தம் திருத்தமாகச் சொல்வது, ‘பிடிக்காத ஒன்றில் தொடர்ந்து இருக்க வேண்டாம்’. இருக்க வேண்டாம் என்றால் என்ன செய்வது? பிடித்த விதமாக மாற்றிக் கொள்வதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து பாருங்கள், அதற்கு எந்த வாய்ப்பும் கிடைக்காவிடில் அதைவிட்டு வெளியேறி விடுங்கள். ஒருவேளை சரி செய்யவும் இயலாது, வெளியேறவும் வாய்ப்பில்லை என்றால், ஏற்றுக்கொண்டு அதையே தொடருங்கள். மிக முக்கியமானது அப்படித் தொடர்வதாக முடிவெடுத்த பிறகு, அந்த நிலை குறித்து, புகார் எதுவுமின்றி தொடருங்கள் என்பதுதான்.

இதனை தற்போதைய சூழலுடன் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. நோய்த் தொற்று, வேலைதொழில் - வியாபார முடக்கம், பொருளாதார நெருக்கடிகள், எங்கும் போகமுடியாமல் முடங்கிக் கிடக்கும் நிலை. ஆழ்ந்து யோசித்தால் இந்த யாவுமே மனது மற்றும் உடலளவில் நெருக்கடிகளை, தாங்க முடியாமையைத் தொடர்ந்து திணிக்கின்றன. யாருக்கும் அதில் தொடர்ந்து நீடிக்கப் பிடிக்கவில்லை. அதிலிருந்து ஏதேனும் மாற்றங்களை உருவாக்க முடியுமா என்றால், அதற்கான வாய்ப்புகளும் அடைக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

ஆகவே, நோய்த்தொற்று குறித்த அச்சம், தொழில் வேலை வாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் இழப்பு, பொருளாதார நெருக்கடிகள், ஓடிக் கொண்டிருந்த பரபரப்பு வாழ்க்கையில் ஒட்டுமொத்த உள்ளிருப்பு முடக்கம் ஆகியவற்றில் உடனடியாக சரி செய்யக்கூடிய பெரும்பான்மையானவை நம் கட்டுப்பாட்டில் மட்டுமில்லை. இந்தச் சூழலில் நாம் செய்ய வேண்டியது, எது நெருக்கடியைக் கொடுத்ததோ, கொடுத்துக் கொண்டிருக்கிறதோ, இன்னும் கொடுக்குமோ அதை அவ்விதமே ஏற்றுக்கொள் என்பதையேவாழப் பழகிக் கொள்தல்எனக் கருதுகிறேன்.



அனைத்து முடக்கங்களின் பின்னாலும் பிரமாண்டமாய் நிற்கும் எவர் பார்வைக்கும் நேரடியாகத் தெரியாத நுண்கிருமி நமக்கு வேண்டாம்தான். வேண்டாததை வரவிடாமல் தடுக்க தடுப்பூசியும், நலமாக்க சரியான மருந்தும் இல்லை. அது ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை மாற்றிக்கொள்ளும் புதிய தன்மைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே பாதிப்புகளுக்குள் இரையாகாமல் வாழ்ந்துவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு மட்டுமே உரத்துச் சொல்வதுகொரானாவுடன் வாழப் பழகுங்கள்”. மீண்டும் சொல்கிறேன் அது கூடிக்குலாவி இணைந்து வாழ்வதல்ல. கிருமி இங்கே உலவிக் கொண்டிருந்தாலும், உரசிக் கொள்ளாமல், ஒட்டிக்கொள்ளாமல் ஒதுங்கியபடி வாழ்வதே வாழப் பழகுதல்.

உடல் உபாதைகள் இருந்தவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோரை மட்டுமே வீழ்த்தும் என இதுவரை அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது தொற்று அறிகுறி துளியும் இல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருக்கும் இளம் வயதினரையும் எளிதில் வீழ்த்துவதை அறிய நேர்கிறது. ஆனால் தொற்றிய அனைவரையும் அது வீழ்த்திவிடவில்லை. மிக மிக குறைந்த சதவிகிதம் மட்டுமே. வழக்கமான எந்த மரண எண்ணிக்கை சராசரியையும் இது தாண்டிவிடவில்லை.

அரசின் அறிவிப்புகள் முழுக்க உண்மையாகவும், முழுக்க பொய்யாகவும் இருக்க முடியாது. எந்த அடிப்படையில் இயங்குவது? அலையலையாக வரும் வதந்திகளை தெளிவாக ஒதுக்கி, உலகம் உள்ளங்கைக்குள் வசப்பட்டிருக்கும் இந்த நிலையில் சற்று மெனக்கெட்டால் ஓரளவு உண்மை மற்றும் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்க முடியும்.

பாதுகாப்பாக இருப்பதென்பது முழுக்க வீட்டிலேயே முடங்கியிருத்தல் அல்ல. முடங்கியிருக்க வேண்டியதில்லை என்றால் உடனே அழகு நிலையத்திற்கும், நடைப்பயிற்சி தடத்தில் கூடிக் குலாவி அரட்டை அடிப்பதற்கும், வயல் வெளியை சமன் செய்து ஆயிரம் பேரை அழைத்து திருமணம் நடத்துவதும், பேருந்தில் நெருக்கியடித்துப் பயணம் செய்வதும் அல்ல.

முதற்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது ஐநூறு என்றிருந்த தொற்று ஐந்தாம் கட்ட ஊரடங்கு என ஏறத்தாழ 90% தளர்த்தப்பட்டபோது இரண்டு லட்சத்தை நெருங்கியிருக்கின்றது. சாதாரண் சூழலில் அசாதாரணமாக முடங்கியிருந்த நாம், அசாதாரண சூழலில் சாதாரணமாக புழங்கத் தொடங்கிய முரண் தான் புரியவில்லை.  ஊரடங்கு நிரந்தரமாக நோய்த் தொற்றுக்கு வேலியோ, நமக்கு பாதுகாப்பு வலையத்தையோ அமைத்து தர முடியாது. அதுவொரு வாழ்க்கை முறையை பழக்கிக் கொடுத்தது, அவ்வளவே! வீட்டில் இரு, இருப்பதை வைத்து சமாளி, ஓடியோடி ஒன்றுகூடாதே, வெளியே செல்லாதே, தூய்மை பேணு, எதையும் தொடாதே, எவருடனும் நெருங்கி நிற்காதே, அனைவரையும் தொற்றுள்ளவராய் சந்தேகிக்கலாம் ஆனாலும் வெறுத்து ஒதுக்காதே உள்ளிட்ட பாடங்களைத்தான்.

இந்த நிலையில் தளர்வுகள் என்பது, எல்லாம் முடிந்துவிட்டது ஓடி வாருங்கள் ஒன்று கூடலாம் என்பதற்கல்ல. செயலிழந்து கிடைக்கும் சில துறைகளை காலத்தின் நியாயம் கருதி இயக்க வேண்டியிருக்கிறது, எனவே தகுந்த பாதுகாப்போடு அவற்றை நடைமுறைக்கு கொண்டு வருவதவற்கு ஒவ்வொருவரும் விலகியிருந்து ஒன்றிணைந்து செயல்படுவது மட்டுமே தேவையேயன்றி, ஒன்றிணைவதன் மூலம் மிகப் பெரிய சிக்கல்களை வரவழைத்துக் கொள்வதல்ல.

கொரானா உலவும் சூழலில் நாமும் வாழப் பழகுவதுதான் தேவையே தவிர, கொரானாவை வாழ வைப்பது நம் இலக்காக இருக்க வேண்டாம்.

Apr 9, 2015

இந்தப் 'பாவம்' செய்யாதவர்கள் கை உயர்த்துக!

தன்னுடைய பால்ய காலத்தில் கிடைக்காத ஒன்றை தன் பிள்ளைகளுக்கு அளிப்பது அன்பின், பிரியத்தின் ஒருவகையென்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அப்படியான பொருட்கள் அந்தக் குழந்தைகளை ஒருவிதத்தில் மகிழ்ச்சியூட்டினாலும், விதவிதமான பிரச்சனைகளைக் கொண்டு வந்து சேர்க்கவும் தவறுவதில்லை. 

கிட்டத்தட்ட கோடை விடுமுறை துவங்கிவிட்டது. குடியிருப்பு பகுதிகளின் வீதிகளிலிருந்து பத்து பனிரெண்டு வயதுப் பிள்ளைகள் ஹோண்டா ஆக்டிவா (அ) ஹீரோ ப்ளெஸ்ரை வண்டிகளில் சாலைகளில் வந்து நுழைகின்றன. சாலையில் நிதானமாய்ச் செல்லவேண்டும், இடது பக்கம் செல்ல வேண்டும், பின்பக்கக் கண்ணாடி பார்க்க வேண்டும், திருப்பங்களில் ஒலியெழுப்ப வேண்டும், திரும்பும்போது பகல் நேரங்களில் கை காட்ட வேண்டும் எனும் எந்தவிதத் தெளிவும், அறிவும் இல்லாத அந்தப் பிள்ளைகள் வளைந்து நெளிந்து பட்டாம்பூச்சி போலச் செல்வதையெல்லாம் ரசிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. குப்பென அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது. அவர்களில் பலர் தரையின் இரண்டு பக்கமும் கால் ஊன்றும் அளவுக்குக்கூட உயரமாக இருப்பதில்லை. 

அதே சாலைகளில்தான், இரண்டு பக்கமும் கால்களைத் தொங்கப் போட்டவாறு எவ்வித பேலன்ஸும் இல்லாமல், தடுமாறியபடி ஏதோ ஒரு நிதானத்தில், புதிதாக வண்டி ஓட்டும் நடுத்தர வயதுப் பெண்மணிகள் சென்று கொண்டிருக்கின்றனர். நம்ம ஊர் சாலை அமைப்புகளுக்கு எவ்விதமும் பொருந்தாத எருமைக்கிடாய் அளவும், சிறுத்தையின் பாய்ச்சலும் கொண்ட பெரிய பைக்குகளில், ஒல்லியாய் ஒரு தலைமுறை எதையோ நோக்கி 'விர்..விர்'ரென சீறலோடு பாய்ந்து கொண்டிருக்கிறது. சைக்கிள் கேப்பில் ஆட்டோ என்பது மறைந்து, பைக் கேப்பில் மினிடோர் என ஆம்புலன்ஸ்க்கு நிகரான அவசரத்தில் மினிடோர்காரர்கள் பறக்கின்றனர். அவர்கள் பயன்படுத்தும் ஒலிப்பான்களில் அகிலமே அதிர்கிறது. 



இந்த ஆக்டிவா, ப்ளெஸ்ஸர் பிள்ளைகளின் அப்பா / அம்மாவையோ, தாத்தா/ பாட்டியையோ சந்திக்கையில் "எங்க அஸ்வினு / சுவாதி இப்பவே வண்டில என்ன போடு போடுது தெரியும்ங்ளா!?" எனச் சொல்லும்போது அவர்களிடம் வழிந்தோடும் பெருமையை நொய்யல் ஆற்றில் திருப்பிவிட்டால் அத்தனை கழிவுகளையும் கடலுக்கே அடித்துச் சென்றுவிடும். 

வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் சார்பாக, அவர்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்... எல்லாப் பாய்ச்சல்களும், பெருமைப் பீற்றல்களும் எந்தவொரு தீங்கும் நடக்காதவரைதான்... ஒற்றைச் சிறு கவனப்பிசகில், எல்லா ஒளியும் பொய்த்து இருள் சூழும் கொடுங்கணத்தில்... பெருமையாகவும், பொறாமையாகவும் பார்த்த அத்தனை உறவும் நட்பும் ஒத்த குரலில், "விரலுக்கு தவுந்த வீக்கம் வேணும்.... இந்த வயசுல இந்தப் புள்ளைக்கு எதுக்கு வண்டி" எனச் சொல்லும். அந்நிலையில் அவர்கள் அப்படிச் சொல்வது சரியா தவறா என நீதிபரிபாலனை செய்யும் மனநிலையில் நீங்க இருக்கச் சாத்தியமில்லை. காரணம், சூன்யமான வாழ்வின் மிகக் கசப்பான காலகட்டத்தில் இருப்பீர்கள். 

தேவைக்கும், தகுதிக்கும் மீறிய ஒரு பொருளை பெருமையென வாங்கிக் கொடுப்பது அல்லது இயக்கக் கொடுப்பது பாசம், பிரியம், கௌரவம், அந்தஸ்து என நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் உலகில் வேறெதுவும் இல்லை. அப்படி அளிக்கும் ஒன்றின் மூலம் உருவாகும் தீங்கின் அத்தனை பாவமும் கொடுத்தவர்களையே சாரும்! 

-
நன்றி  : தி இந்து

-

Sep 19, 2013

கேரி பேக்


காலை நேரம். கொஞ்சம் மருந்தும் காலைச் சிற்றுண்டியும் கடையில் வாங்க வேண்டிய சூழல். ஒரு பெரிய, இரண்டு சிறிய பாத்திரங்களோடு புறப்பட்டேன். மருந்துக் கடையில் ‘சிரப்’ ஒரு பாட்டிலும், மூன்று மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டு மருந்துக்கு கை நீட்டினேன், மருந்துப் பாட்டில், மாத்திரையோடு ஒரு கேரி பேக்கை அந்தப் பையன் நீட்டினான். 

இப்பொழுதெல்லாம் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினாலும் கூட,”விய்ஷ்க்” என பிய்த்து,”ப்பூ” என ஊதி ஒரு கேரி பேக்கில் போட்டுக் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். 

“தம்பி…. கேரி பேக் வேணாம்” என்றேன். 

“பரவால்ல சார் வாங்கிக்கங்க” என்றான். 

மறுத்து விட்டு மருந்துப் பாட்டில், மாத்திரை மட்டும் வாங்கி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு திரும்பினேன். திடீரென அந்தப் பையனை திரும்பிப் பார்க்கத் தோன்றியது. பார்த்தேன். அருகிலிருந்த பெண்ணிடம் ஏதோ சொல்லி முடித்திருக்க, அந்தப் பெண் கண்கள் சிலிர்க்க சிரித்துக் கொண்டிருந்தார். நான் அவர்களைப் பார்ப்பதை கண்டவுடன், சிரிப்பை நிறுத்தி தங்கள் வேலைகளில் சுறுசுறுப்பாக இருப்பது போல் நகர்ந்தார்கள். 



சிற்றுண்டிக் கடையில் ஆறு இட்லிகள் வேண்டுமென்று கூறி பாத்திரங்களைக் கொடுத்தேன். இட்லிகளை பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டு, சாம்பார் மற்றும் சட்னிகளை தயாராக வைத்திருந்த பாலித்தீன் மூட்டை முடிச்சுகளாக அள்ளிக் கொடுத்தார். 

அதை மறுத்து விட்டு, என்னிடமிருந்த பாத்திரத்தில் ஊற்றித் தருமாறு கேட்டேன். பணியாளர் மறுத்தார். ஏனென்று கேட்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளாகத் தான் கொடுக்கச் சொல்லி தங்களுக்கு உத்தரவென்று சொல்லிவிட்டு என்னை எளிதில் ஒதுக்கிவிட்டு, அடுத்த வாடிக்கையாளரை கவனிக்க, நான் ஒருவித வெறுமை நிறைந்த கோபத்துடன், பணம் கொடுக்குமிடத்தில் இருந்த நபரிடம் “ஏங்க நா கொண்டுவந்த பாத்திரத்தில் ஊத்தித் தராம, பிளாஸ்டிக் பொட்டலமா தர்றீங்க” என சற்றே எரிச்சலோடு கேட்டேன். 

“யார் சார் இப்பல்லாம் பார்சல் வாங்க பாத்திரம் கொண்டு வர்ராங்க! எல்லாரும் பிஸி, வர்ற வேகத்ல சட்னு, கட்டி வச்சிருக்க சாம்பார், சட்னினு ஈஸியாக வாங்கிட்டு போறாங்க, அது தான் எங்களுக்கும் ரொம்ப ஈஸிங்க” எனச் சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளரிடம் “சார் குடுங்க” என்று என்னை எளிதாகப் புறந்தள்ளினார். 

மனது சுருங்கி வெளியில் வந்தேன், அங்கேயே மேசை மேல் வைத்து பொட்டலங்களைப் பிரித்து சாம்பார், சட்னியை பாத்திரத்தில் ஊற்றலாமா என்று நினைத்தேன், எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பார்களோ என வெட்கப்பட்டது வெட்கங்கெட்ட மனது. 

சாலையோரம் இறைபட்டு கிடக்கும் கசங்கிய கேரி பேக்குகள் போல் மனது கசங்கிப் போனது. எந்த நாகரிகம், கேரி பேக்குகளுக்காக மனிதர்களை இப்படி அடிமைப்படுத்தியது. நான்கு கடைகளில் நான்கு பொருட்கள் வாங்கினால் நான்கு கேரி பேக்குகள் இலவசமாய்க் கிடைக்க, நமது கைகள் மகிழ்ச்சியோடு வாங்கி ஊஞ்சலாட்டிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது.

வீட்டுக்கு போனவுடன் கசங்கிய அந்த கேரி பேக் குப்பைத்தொட்டி ஓரத்திலோ, சன்னல் வழியாகவோ தூக்கி வீசப்படுகிறது. சில சமயம் பின்னர் பயன்படுமென்று அரிசி மூட்டை சந்திலே சொருகி வைக்கப்பட்டு கிடக்கிறது. சில நாட்களில் அதுவும் வீதிக்கு வருகிறது. பெரும்பாலும் அந்த நாள் குப்பை கேரி பேக்கில் மூட்டையாகக் கட்டப்பட்டு வாசலில் குப்பை சேகரிப்பவருக்காக வைக்கப்படுகிறது. 

கேரி பேக்குகளுக்கு இணையாக, உபயோகித்தவுடன் தூக்கியெறியும் பிளாஸ்டிக் டம்ளர்களும், பாட்டில்களும், தட்டுகளும் பார்க்கும் இடமெல்லாம் பரவிக் கிடக்கின்றன. பயன்படுத்திய பின் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களில், வெறும் பத்து சதவிகிதம் கூட மறு சுழற்சிக்காக சேகரிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் சாலையோரமும், பயன் படுத்தாமல் கிடக்கும் காலி இடங்களிலும் படர்ந்து பரவிக் கிடக்கின்றன.
காமுகனின் மனதில் ஊறும் வெற்றுக் காமம் போல், மண்ணோடு ஊடுருவிக் கிடக்கிறது. மண்ணில் ஊறிய இந்த பிளாஸ்டிக் சனியன் மண்ணோடு மண்ணாக மட்கிப் போக எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்கும்? மிக எளிதாக பிளாஸ்டிக்கை மண்ணில் கலக்கச் செய்யும் கொலை பாதகத்தை மனித சமுதாயம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்து கொண்டேயிருக்கிறது. 

மழை கொட்டி வெள்ளம் வடிந்த பின் ஒவ்வொரு சாக்கடை பள்ளத்தின் குறுக்கே இருக்கும் குழாய்களிலும் கொத்துக் கொத்தாக பிளாஸ்டிக் குப்பைகள் குட்டிச் சாத்தான்கள் போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மோசமான சாட்சியம் மனித சமூகத்திற்கு மிகப் பெரிய எச்சரிக்கை மணி. சாக்கடைகள் அடைபட்டு கலங்கிய கழிவுநீர் சர்வ சாதாரணமாய் வீடுகளுக்குள் வருவதை சிறு முகச் சுழிப்போடு நகரத்தில் மன்னிக்கவும் நரகத்தில் வாழும் மனித சமூகம் சகித்து வாழப் பழகிவிட்டது. 
அடுத்த பத்து இருபது ஆண்டுகளில் இந்த பிளாஸ்டிக் நகரத்தின் தரை முழுதும் பரவி விடலாம். மழை நீர் மண்ணில் செல்ல வாய்ப்பற்று நிலமெல்லாம் மலடாகிவிடலாம். பெய்யும் நீரும் சாக்கடை அடைப்புகளை மேவி ஆற்றுக்கு ஓடி கடலை எட்டிவிடலாம். நகரத்தின் தாகம் தீர்க்க எங்கிருந்து நீர் கிடைக்கும், 2000 அடி தோண்டுவோமா இல்லை 3000 அடி இல்லையில்லை 10,000 அடி அல்லது பூமிப் பந்தின் மறுபக்கம் வரை தோண்டுவோமா, நம் விஞ்ஞானம் தொண்ட வைக்கலாம், ஆனால் விஞ்ஞானத்திற்கு தண்ணீரை சிதைத்து சீரழிக்கத் தெரியும், புதிதாய் ஒரு சொட்டு தண்ணீரை உருவாக்கத் தெரியுமா? 

கடந்துபோகும் வாகனத்தின் பின்னால் எழுதப்பட்டிருந்த வரி என் கண்ணுக்குள் எரிச்சலோடு தகிக்கிறது... 

“மூன்றாம் உலகப் போர் - தண்ணீருக்காக!” 

-
பொறுப்பி :  மீள் இடுகை சற்றே மாற்றப்பட்ட வடிவில்

-

நன்றி: தி இந்து

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...