Showing posts with label தி இந்து. Show all posts
Showing posts with label தி இந்து. Show all posts

Oct 23, 2019

மாற்றத்தை ஏற்படுத்திய மந்திரம் - இந்து தமிழ் திசை கட்டுரை

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் சொன்ன ஒரு மந்திரம்தான் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. வாய்ப்புகளைத் தவறவிடாதே என்பதுதான் அந்த மந்திரத்தின் உட்பொருள். நம் வாழ்க்கை உயர இதுபோன்ற ஒரு சொல், ஒரு செயல் போதும்” என்கிறார் எழுத்தாளர், பேச்சாளர், மனிதவளப் பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட ஈரோடு கதிர் (எ) கதிர்வேலு பழனிசாமி.

பள்ளி, கல்லூரிகள், இலக்கியக் கூட்டங்கள், புத்தகத் திருவிழாக்களில் இவர் தவிர்க்க முடியாத ஆளுமை. இவர் எழுதியவை நான்கு புத்தகங்கள். அவற்றில் இரண்டு பிரபல வார இதழ்களில் தொடராக வெளிவந்தவை. இவைதவிர, இணையத்திலும் 850 படைப்புகள் எழுதியுள்ளார்.

தமிழகம் முழுக்க பேச்சாளராக அறியப் பட்டுள்ள இவர், தமிழகம் மட்டுமின்றி, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உரையாற்றியுள்ளார். பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் சிறப்பு அழைப்பாளராக, மனிதவளப் பயிற்சியாளராகவும் தொடர்கிறார். தொலைக்காட்சி, வார, மாத இதழ்கள், பண்பலை என பெரும்பாலான ஊடகங்களிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஈரோடு அருகேயுள்ள சின்னியம்பாளையம்தான் கதிரின் ஊர். அரசு ஆரம்பப் பள்ளியில் தொடங்கி, ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி வரை கல்விப் பயணம். எழுத்தாளராக, பேச்சாளராக மாற கதிருக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது அவர் நடத்திவரும் ‘சிகரம்’அச்சகம். ஏறத்தாழ 19 ஆண்டுகள் அச்சகப் பணியில் இருந்துவிட்டு, 2008-ல் இணையத்துக்கு மாறினார். அவரிடம் பேசினோம்.

“ஈரோட்டை விட்டு விலகிய, உள்ளடங்கிய கிராமத்தில், அரசுப் பள்ளியிலேயே படித்து, நகர்ப்புறத்துக்கு இடமாற்றம் செய்வது அத்தனை எளிதானதல்ல. பார்வையில்படும் எதுவுமே மிரட்சியூட்டும். இயல்பாகவே மொழி, பழக்கவழக்கம், அனுபவம், தகவல்கள், அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் தன்னம்பிக்கை தளர்ந்திருக்கும். அப்படியான பின்னணியில் இருந்து நகரத்துக்குள் நுழைந்து, எழுத்தாளராக, பேச்சாளராக தகவமைத்துக்கொள்ள முயன்றவன் நான்.



சமூகவலைதளங்களில் தொடங்கிய பயணம்...
மனித வாழ்க்கையில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளும், சில எதிர்பாராத மாயங்களை நிகழ்த்திவிடுகிறது. கல்லூரி நாட்களில் துணுக்கு, கவிதை என கிறுக்கிக் கொண்டிருந்தாலும், ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஒரேயொரு வரிகூட எழுதாத சூனிய வெளியில் இருந்த எனக்கு, 2008-ல் இணையத்தின் வாயிலாக எழுத முடியும் என்பது தெரிய வந்தது.

என்னைச் சுற்றி நடப்பதை பகிரத் தொடங்கிய பயணம், இன்று பலரது வாழ்க்கையை செழுமைப்படுத்தும் புத்தகம் வரை தொடர்கிறது.
உணர்வுகளையும், மனதில் தேங்கிய காட்சிப் படிமங்களையும் சொற்களாக மாற்றிப் பதியத் தொடங்கியதுதான் எழுத்துத் துறையின் ஆரம்பம். இதில், பெரிய வாய்ப்புக் களமாக அமைந்தவை சமூக வலைதளங்களான ப்ளாக், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை.

இப்படி சமூக வலைதளங்களில் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த எனக்கு `நம் தோழி’ மாத இதழில் தொடர் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதில் வெளியான, உலகத் திரைப்படங்கள் குறித்த கட்டுரை, என்னை வெளியுலகுக்கு அறிமுகம் காட்டியது. தொடர்ந்து, குங்குமம் வார இதழில் ‘உறவெனும் திரைக்கதை’ என்ற தலைப்பில் 25 வாரங்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

மாணவ, மாணவிகளை சந்திக்கும் வாய்ப்பு மற்றும் அனுபவங்களை முன்வைத்து, பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கான, ‘வேட்கையோடு விளையாடு’ கட்டுரைத் தொடர் புதிய தலைமுறையின் கல்வி வார இதழில் வெளிவந்தது. கிளையிலிருந்து வேர் வரை, பெயரிடப்படாத புத்தகம், உறவெனும் திரைக்கதை, வேட்கையோடு விளையாடு ஆகிய நான்கு புத்தகங்களுமே இரண்டாம் பதிப்பைக் கண்டுள்ளன. குறிப்பாக, ‘வேட்கையோடு விளையாடு’ வெளியான 5 மாதங்களில் இரண்டாம் பதிப்பைக் கண்டது.

ஓராண்டில் 25 ஆயிரம் மாணவர்கள்...
எழுத்தாளர் என்ற நிலையைத் தொடர்ந்துகொண்டு, பேச்சாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளராக மாறினேன். ஓராண்டில் சராசரியாக 25 ஆயிரம் மாணவ, மாணவிகளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் கிடைத்த அனுபவங்களே ‘வேட்கையோடு விளையாடு’ கட்டுரைத் தொடர்கள். பதின் பருவ மாணவி தொடங்கி, 50 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் மகப்பேறு மருத்துவர் வரை பலரையும் இந்தப் புத்தகம் ஆழ்ந்து யோசிக்கவும், தன்னை உணர்ந்து கொள்ளவும் வைத்துள்ளது.

புத்தக திருவிழாக்கள், பொது அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்கள் என பல்வேறு மேடைகளில் பேசி வருகிறேன்” என்கிற கதிர், இன்றைய கல்விச்சூழல், இளைய தலைமுறையின் எதிர்மறை எண்ணங்கள், சமூகத்தை அவர்கள் அணுகும் முறை, பெற்றோருடனான உறவு-முரண் ஆகியவை குறித்து அதிகம் கவலைப்படுபவராக உள்ளார்.

இதற்காக, பிள்ளைகள் மீது பெரும் நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கான பல்வேறு பயிலரங்குகளை நடத்தி வருகிறார். இளைய தலைமுறையை நெறிப்படுத்த, அவர்களது சூழலைப் புரிந்துகொண்டு, அவர்களோடு இணைந்து, அவர்களை மாற்ற வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு வலியுறுத்துகிறார்.

“பயிலரங்குகளில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்தாலும், உண்மையில் பெற்றோரிடமே உரையாட வேண்டிய தேவையே அதிகம் உள்ளது. கல்வி என்பதே வாழ்வின் ஆதாரம் என்று மாறிவிட்ட இக்காலத்தில், முழுப் பொறுப்பையும் ஆசிரியர்கள், பிள்ளைகள் மீது மட்டுமே சுமத்திவிட்டு, செலவு செய்வது மட்டுமே தமது பொறுப்பு என்பதே பெற்றோரின் மனநிலையாக உள்ளது. பிள்ளைகளை வடிவமைப்பதில், தயார்படுத்துவதில் பெற்றோர்களும் முன்நிற்க வேண்டும்” என்கிறார் கதிர்.

சமூக வலைதளங்களை நேர்மறையாக பயன்படுத்தும் வகையில், நண்பர்களுடன் இணைந்து ‘ஈரோடு வாசல்’ எனும் வாட்ஸ்அப் குழு வாயிலாக இரண்டு ஆண்டுகளில் பலரையும் பேச்சாளராக, எழுத்தாளராக, படைப்பாளியாக, கதை சொல்லியாக, வாசிப்பாளராக மாற்றியிருக்கிறார்.

“இந்த மாற்றங்களுக்குப் பின்னால் இருப்பது, 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சக பயிற்சியாளர் சொன்ன மந்திரம்தான். `ஒரு வாய்ப்பு வரும்போது முடியாது என்று நீ கை விட்டால், வேறு யாரும் அதை செய்யாமல் இருக்கப்போவதில்லை. அந்த வாய்ப்பை யாரோ ஒருவர் செய்யத்தான் போகிறார். அந்த யாரோ ஒருவராக நீயே ஏன் இருக்கக் கூடாது’ என்பதுதான் அந்த மந்திரம். ஏதோ ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு செயல் போதும். உடைவதற்கும்... உயர்வதற்கும்...” நம்பிக்கையுடன் கூறி விடை கொடுத்தார் ஈரோடு கதிர்.

-எஸ்.கோவிந்தராஜ்

Sep 29, 2016

இரு கலவரங்களும் தற்காலிக கொள்ளையர்களும்!


இது பெருநகரங்களுக்கு ஆகாத காலம் போன்று தோன்றுகிறது. கடந்த ஓர் ஆண்டுக்குள் தென் மாநிலங்களின் தலைநகரங்களை வெள்ளம் அடுத்தடுத்து ஆட்டிப் படைத்திருக்கின்றது. முதலில் சென்னை பின்னர் பெங்களூரு இப்போது ஹைதராபாத். இயற்கைப் பேரிடரைச் சமாளிக்க முற்படலாம், ஆனால் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது.

ஆனால் தடுக்கவும், தவிர்க்கவும் கூடிய கலவரங்களைச் சமாளிக்க முடியாமல் நாம் திணறுவதை என்னவென எடுத்துக்கொள்வது. 1991ற்குப் பிறகு காவிரியை மையப்படுத்தி நிகழ்த்தப்பட்ட கோரமான கலவரத்தை பெங்களூருவும், 1998ற்குப் பிறகு மக்களை மிரள வைத்த கலவரத்தை கோவையும் ஒரே மாதத்தில் சந்தித்திருக்கின்றன.  இரு நகரங்களிலும் வசிக்கும் பரவலான மக்கள் பயமாய் இருக்கு எனச் சொல்லும் வகையில் கலவரக்காரர்கள் தங்கள் நோக்கத்தில் வென்றிருக்கின்றனர்.

பெங்களூர் கலவரத்தின் உண்மையான நோக்கம், காவிரி நீர் தங்களுக்குக் கிட்டாமல் போய்விடுமே என்பதையும் தாண்டி தமிழர்களின் சொத்துகளுக்கு இழப்பு ஏற்படுத்த வேண்டும் எனும் வெறி மட்டுமே இருந்தது. அன்றைய தினத்தில் கர்நாடகாவிற்குள் நுழைந்த தமிழக வாகனங்களையும், பிரபலமாயிருந்த தமிழர்களின் நிறுவனங்களையும் குறிவைத்து தாக்கியுள்ளனர். ஓட்டாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துகளை தேடிச்சென்று திட்டமிட்டு ஒட்டுமொத்தமாய் கொளுத்தும் அளவிற்கு, சொத்துகளை அழிக்க வேண்டும் என்ற அநியாய வன்மம் அதனுள் இருந்தது. அந்த எரிப்பும், அதன் மூலமாய் தரும் அழிவும், விடுக்கும் எச்சரிக்கையும் காவிரித் தண்ணீரோடு எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருப்பவை அல்ல என்றாலும், சொத்துக்களை அழிப்பதன் மூலம் ஒரு கொண்டாட்டம் எய்துவதை வன்ம மனம் விரும்பியிருக்கலாம்.

பெங்களூரு கலவரத்தின் இழப்புகள் யாவை என்பதை உணர்ந்தும் உணராமலும் மீள்வதற்குள் கோவையில் கலவரம். மதச்செயற்பாட்டாளார் ஒருவர் கொலையுண்டதற்காக தமிழகத்தின் மிக முக்கிய நகரமான கோவை நகரமே ஸ்தம்பிக்க வைக்கப்படுகிறது. ஊர்வலம் என்ற பெயரில் கலவரம் கட்டவிழ்த்துவிடப் படுகிறது.

பொதுவாகக் கலவரங்களின் காரணங்களாய், பாதிக்கப்பட்ட மனிதர்களின் கொந்தளிப்பான மனநிலை அமைந்திருக்கும்பாதிக்கப்பட்ட வலி அதில் கசியும். ஆனால் இந்த இரு கலரவங்களையும் பார்க்கும்போது பாதிக்கப்பட்ட உணர்வுகளைவிட, அரசியல் மற்றும் மதத்தின் சார்பில் போதிக்கப்பட்ட உணர்வுகளின் கொந்தளிப்பே கனன்று கொண்டிருந்ததை அறிய முடியும். 

இப்படியான பெருநகரங்களைக் குறி வைக்கும் கலவரங்கள் வெறும் உணர்ச்சி வயமானது என்பதையும் தாண்டி எங்கோ, எவ்விதமோ விரும்பி, வடிவமைக்கப்பட்டு வளர்ந்து நின்று அறிவியல் தொடர்புகளின் வழி விதைக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது. இந்தக் கலவரங்கள், மனதிற்குள் அந்த நகரங்களின் மீது, அவைகளின் வளர்ச்சி மீது அங்கேயே வசிப்பவர்களுக்கு முரணாய் எழுந்து உள்ளுக்குள் தேங்கியிருக்கும் நீண்ட கால வன்மம் மற்றும் பொறாமையின் வெளிப்பாடா என்பதை ஆராய வேண்டும்.

நகரத்தின் வளர்ச்சியில் நகரத்தில் இருக்கும் எல்லோருக்கும் பங்கு கிடைத்து விடுவதில்லை. சிலர் வளர்கிறார்கள். சிலர் அந்தந்த நிலைகளில் அப்படியே சமாளிக்கிறார்கள். சிலர் தேய்கிறார்கள். தேய்கிற நிலையில் உள்ள சிலருக்கு வளர்கிறவர்கள் மீதும், சமாளிக்கிறவர்கள் மீதும் ஆச்சரியம் இருப்பதைவிடப் பொறாமை மேலோங்கியிருக்கலாம். அப்படிப்பட்ட மனநிலை கொண்டோருக்கு, இம்மாதிரியான தருணங்கள் மிகப்பெரிய வடிகாலாக அமைகின்றன. தனித்து இருக்கும்போது உள்ளபடியே இருக்கும் அமைதியும், அச்சமும் மற்றவர்களோடு ஒன்று கூடும்போது பொங்கியெழுகிறது.

பெரிய தலைவர்களின் மரணங்களின்போது உணர்ந்த அதீதப் பதட்டம் நினைவுக்கு வருகின்றது. அந்த மாதிரியான பதட்ட காலத்தின் பாதிப்புகளில் ஒன்று, கடைகளை உடைத்து பொருட்கள் திருடப்படுவது. திருடப்படுவது என்பதைவிடக் கொள்ளையடிக்கப்படுவது என்பதுதான் சரியான சொல்லாக இருக்கும். எம்.ஜி.ஆர் இறந்தபோது ஏற்பட்ட பதட்டத்தைப் பயன்படுத்தி சென்னையில் பெரிய பெரிய கடைகளில் புகுந்து அதிலிருந்த டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கொள்ளையடித்து குறைந்த விலையில் விற்கப்பட்டதை ஒரு கதைபோல் வெகு சுவாரஸ்யமாக சென்னையைச் சார்ந்த நண்பர் ஒருமுறை விவரித்தார். சென்னை அளவிற்குப் பதட்டம் மற்றும் பாதிப்புகளை மற்ற நகரங்கள் அப்போது உணர்ந்ததாய் நினைவில்லை.




கோவைக் கலவரத்தில் கடையில் புகுந்து கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டு ஓடும் கூட்டம் அதை நினைவுபடுத்துகிறது. காணொளியில் காட்டப்படும் அந்த செல்போன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த அனைவருமே தயக்கமின்றிக் கொள்ளையடிக்கின்றனர். கூட்டத்தோடு உணர்ச்சிப் பெருக்கில் உள்ளே நுழைகையில் அவர்கள் அனைவருக்கும் திருட்டு எண்ணம் இருந்திருக்குமா எனத்தெரியவில்லை. ஆனால் உள்ளே புகுந்தவுடன் சிறிதும் மனக்கூச்சமும், தயக்கமுமின்றி வெறியோடு கொள்ளையை நிகழ்த்துகிறார்கள். எதுவும் கிடைக்காத ஒருவன் மேசைக் கண்ணாடியை தள்ளிவிட்டு நொறுக்குகிறான். கண்ணில் பட்டதை எடுக்கும் கணப்பொழுதில் தாம் திருடனாய் மாறிவிட்ட ஆபத்தை, அவர்களே அந்தக் காணொளியைக் காணும் போதாவது உணர்வார்களா?

அந்தக் கூட்டத்தினரின் சராசரி வயது இருபதிலிருந்து முப்பதுக்குள் இருக்கலாம். அவர்களின் பெரும்பாலானோர் திருமணம் செய்து வாழ்வின் அடுத்த கட்டத்திற்குள் நுழையாதவர்களாக இருக்கலாம். ஒரு கலவரத்தைப் பயன்படுத்தி அல்லது கலவரத்தை உருவாக்கிக் கொள்ளையடிக்கலாம் என்ற மனோபாவம் அவர்களுக்கு எங்கிருந்து அறிமுகமாகியிருக்கும் என்பதே ஆச்சரியமாக இருக்கின்றது. இம்மாதிரியான தருணங்களில்தாம் திருடியது எவ்விதத்திலேனும் கதாநாயக மனோபாவத்தைக் கொடுத்தால் அதுவே கொடும் சாபம்.

அந்தக் காணொலியின் பிறிதொரு ஆபத்தாக நான் உணர்வது, இனி கலவரத்திற்கான வாய்ப்புக் கிடைத்தால், அதன் மூலம் கொள்ளையை ஏகபோகமா நிகழ்த்தலாம் அல்லது கொள்ளையடிப்பதற்காகவே கலவரத்தில் பங்கெடுக்கலாம் என்பதும் தான்.

வாழ்க்கையைத் தொடங்கும் முன்பே தான் ஒரு கொள்ளைக்காரனாக மாறிப்போகும் அளவிற்குதான் அங்கு திருடிய ஒவ்வொருவரும் தம் மீது சுய மதிப்பு கொண்டிருந்திருக்கிறார்கள் எனக் கருத வேண்டியும் வருகிறது. கலவரத்தில் கொள்கையும் நோக்கமுன்றி அழிவு மட்டுமே நோக்கமென வேட்டையாடும் அவர்களை காலம் தன் பங்கிற்கு குற்றவாளியாக்கி வேட்டையாடுகிறது என்பது அவர்களுக்கு புரிய, அவர்களுக்கு வாழ்க்கை என்பது எதுவெனப் புரிதல் அவசியம்.

-

நன்றி :  தி இந்து

Feb 17, 2016

டேஷ் இன் இந்தியாவும் விவசாயிகளை வேர் அறுத்தலும்!


ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையில் கார் பறந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் நண்பர், “அடேங்கப்பா... ஊரெல்லாம் சுத்தமாக மாறிடுச்சு. செம டெவலப்மெண்ட் போல” என்கிறார் ஒரு கசப்பான புன்னகையை வழியவிடுகிறேன். 

உண்மையிலேயே இது வளர்ச்சியா!? தன் இருப்பிலிருந்து மாறுவது எல்லாமே வளர்ச்சியாகிவிடுமா?. ஒரு குழந்தை வளர்வது, உயரத்திற்கேற்ற பருமன் கூடுவது வளர்ச்சி. உடலில் ஏதாவது ஒரு பகுதி மட்டுமே பெரிதாவது வளர்ச்சியா? பொதுவாக இங்கே வீக்கம் வளர்ச்சிபோல் உணர்த்தப்படுகிறது. புற்றுநோய் கட்டியும் கூட தன் இயல்புநிலையில் இருந்து கூடுதலாய் வளர்வதுதான். இது வீக்கம், இது புற்று என வகைப்படுத்தத் தெரியாத சமூகம் வேறுவழியின்றி அதை வளர்ச்சி என்றே சொல்லிக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறது.

50 கி.மீ தூரத்திற்கு ஒருமுறை பணம் செலுத்திவிட்டு அந்தச் சாலையே நமக்குச் சொந்தம் எனும் நினைப்பில் 160 கி.மீ வேகம் வரை விரைகின்றீர்களே, அந்தச் சாலைகளின் புவியியல் நமக்குத் தெரியலாம். ஆனால் அதன் வரலாறு தெரியுமா?

சாலை எங்கெல்லாம் தன்னை விரிவுபடுத்தி, நளினப்படுத்திக்கொள்ள முனைகிறதோ, அங்கெல்லாம் முதலில் காவு கேட்பது சாலைகளின் இருமருங்கிலும் வரிசையாக நின்றிருந்த மரங்களை. நெடுஞ்சாலைகளின் இருமருங்கிலும் ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவிற்கும் 200-300 புளியமரங்களோ, வேப்பமரங்களோ இருந்தன. இன்றைக்கு நாற்கரச் சாலையில் ஒரே ஒரு மரத்தைக்கூட காணமுடியவில்லை.

அடுத்து காவு கேட்பது அந்தப்பகுதியில் காலம்காலமாய் வாழ்ந்து வந்தவர்களின் வேர்களைத்தான். ஒரு ரௌடியின் மனோபாவத்தோடு விரிவாக்கத்திற்காகவும், நகரங்களைச் சுற்றிச் செல்லும் புறவழிச்சாலைகளை அமைப்பதற்காகவும் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அதற்காக எந்த வகையிலும் பொருந்தாத தொகை ஒன்று வழங்கப்படுகிறது. அதோடு ”நீ காலம்காலமாகப் பயன்படுத்திய நிலம் இனி உனக்கு சொந்தமல்ல” என வெளியேற்றிவிட்டுச் சொல்கிறது, ”இனி என் சாலையில் கால் வைத்தால் காசு கொடுக்க வேண்டும்”.

சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டால் விபத்துகள் குறையும் என்றார்கள். முன்பெல்லாம் 100 கி.மீ தூர பயணத்தில் சராசரியாக 5 விபத்துகளுக்கான அடையாளங்களைக் காணலாம். ஆனால் இப்போது அப்படிக் காண முடிவதில்லை. ஆகவே விபத்துகளே நடப்பதில்லையா?. உண்மையில் முன்பைவிடக் கூடுதலாகவே விபத்துகள் நடக்கின்றன. முன்புபோல் வாகனங்கள் நாள் கணக்கில் அகற்றப்படாமல் கிடப்பதில்லை. சில மணி நேரங்களில் அக்கற்றப்பட்டுவிடுகின்றன. சாலையைக் கடக்க முனையும் உள்ளூர்வாசிகள், சாலையின் அகலம், அதில் சீறி வரும் வாகனங்களின் வேகம் பற்றிய அறிந்திராததால் இழக்கும் உயிர்களை, உடல் உறுப்புகளை நினைத்தால் நடுங்குகிறது.

நெடுஞ்சாலைகளில் 90% சாலையோரப் பகுதி விவசாய நிலமாக இருந்தவை. கால்வாய்ப் பாசனம் இருந்தால் நன்செய், கிணறு மட்டும் இருந்தால் புன்செய், மழையை நம்பியிருந்தால் மானாவாரி. விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் 90% நிலங்கள் விவசாயத்தைத் தொலைத்துவிட்டன. ஆவின் பால், உணவகம், இட்லி தோசையுடன் பாயாசமும் தரும் பஞ்சாபி உணவகம், தொழிற்சாலைகள், வீட்டு மனைகள், பள்ளி கல்லூரிகள், இடம் வாடகைக்கு என்ற பலகை தாங்கிய காலி இடங்கள், வாகனப் பணிமனை, பெட்ரோல் நிலையங்கள், விடுதிகள், செடிப்பண்ணை, திருமண மண்டபங்கள் என ஏதேதோ நிரம்பியிருக்கின்றன.

அங்கிருந்த விவசாயம் என்ன ஆனது? அந்த விவசாயிகள் எங்கே போனார்கள்? அந்த விவசாயத்தின் கூலிகளாய் இருந்தவர்கள் என்ன ஆகியிருப்பார்கள்? நிலத்தை விற்றவர்கள் முதலாளிகளாக, நிதிநிறுவன அதிபர்களாக அவதாரம் எடுத்தனர். கூலிகளாக இருந்தவர்கள் நகரங்களுக்குப் புலம்பெயர்கின்றனர், அதில் பலர் நிறுவனங்களில், ஏடிஎம்-களில் செக்யூரிட்டிகளாகவும், வீட்டு வேலை செய்யும் பெண்களாகவும் மாறுகின்றனர்.

வளரும் நாடுகளில் திணிக்கப்படும் வளர்ச்சித் திட்டங்களில் உலக வங்கியும், வெளிநாட்டு நிறுவனங்களும் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றன. அவர்களுக்கு இங்கிருக்கும் சாலைகள் விரிவாக்கம் பெறுவதின் மேல், நீர்நிலைகள் பாதுகாக்கப்படுவதன் மேல் ஏன் இத்தனை அக்கறை என்பது அவ்வளவு எளிதில் புரிந்துவிடாத ஒன்று. பெரும்பாலும் விரிவாக்கப்படும் சாலைகள் அந்தந்தப் பகுதி மக்களுக்கு அதிகப் பயன் தருகின்றன என்பதைவிட, எங்கோ இருக்கும் ஒரு பெருநிறுவனத்தின் பொருட்களை, நாட்டின் இன்னொரு பகுதிக்கு அதிவிரைவில் எடுத்துச்செல்லும் வகையிலான சாலைகளை முன்னுரிமை கொடுத்து கட்டமைக்கப்படுகின்றன. 

இந்தியா போன்று தன் விழுமியங்களை பாதுகாக்க முனையும், ஒட்டு மொத்த உலக தட்பவெப்பத்திற்கு, மண்ணிற்கு, விளைச்சலுக்கு சவால் விடும் சூழல்களை கொண்டுள்ள வளர்ந்து வரும் ஒரு நாட்டின் மீது கார்ப்பரேட் எனப்படும் மாஃபியாக்களுக்கு ஒரு பெரிய கண் உண்டு. அவர்கள் சொந்த நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் தாதாவாகவோ, வளர்ந்த நாடுகளில் இருந்து வளரும் நாடுகளின் அரசியல் சதுரங்கக் காய்களை நகர்த்தும் தாதாக்களாகவோ இருக்கலாம். அவர்களின் முதல் நோக்கம் வளர்ச்சி என்பதான ஒரு மாயை குறித்த ஒரு ஏக்கத்தைத் தூண்டிவிடுவது. அடுத்து வளரும் நாடுகளில் காலம் காலமாக சுயசார்போடு, கட்டுக்கோப்போடு, நிலைத்த தன்மையோடு வாழும் மக்களை, அவர்களை அறியாமலேயே கொஞ்சம் ஆழத்தில் இறங்கி அவர்களின் முக்கிய வேர்களை அறுத்துவிடுவது.

கையகப்படுத்திய நிலத்திற்குச் சொந்தமானவனையும், அதில் வேலை செய்தவனையும் நேரடியாக வேர் அறுத்து உடனடியாக வெளியேற்றினார்கள். சாலையோரம் நிலம் வைத்திருப்பவனை, அவனையறியாமல் “காசு, பணம், துட்டு.. மணி..மணி” எனும் மாயையில் அவன் காலம்காலமாக செய்து வந்ததை நூதனமாக நிறுத்தச்செய்து அவனை மெல்ல வெளியேற்றும் திட்டத்தோடு வேரை மட்டும் அறுத்துவிட்டார்கள். இனி கொஞ்சம் கொஞ்சமாக அவனும் உதிர்வான். பணம், வாய்ப்பு இல்லாதாலும் தன் பூர்வீகத்திலிருந்து ஒருவன் வெளியேறலாம், கூடுதல் பணம், கூடுதல் வாய்ப்பு என்றும் ஒருவனை வெளியேற்றலாம்.

100 கிமீ தொலைவிற்கு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டால், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5000 ஏக்கர் நிலங்கள் விவசாயத்தைக் கைவிடுகின்றன. 5000 ஏக்கர் நிலம் சார்ந்த விவசாயிகள், விவசாயக் கூலிகளின் வேர்கள் அறுக்கப்பட்டுவிட்டதை அவர்கள் உணர்வதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

*

ஈரோடு மாவட்டத்தை மேட்டூர் வலதுகரை, காலிங்கராயன், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ் பவானி கால்வாய்கள் பெரிதும் வளப்படுத்துபவை. இதில் அகலமான, மிக நீளமான கீழ்பவானி கால்வாய் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்டது. காலிங்கராயன் கால்வாய் 730 வருடங்களுக்கு முன்பு பவானி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு காவிரி ஆற்றுக்கே சவால் விடும் வகையில் ஆற்றைவிட உயரமான ஆற்றை ஒட்டிய வறண்ட நிலங்கள் பயன்பெறும் வகையில் வெட்டப்பட்டது.

காலிங்கராயன் கால்வாயில் சாய, தோல் கழிவுகள் கலக்கின்றன எனச் சொல்லி கரைகள், தளம் கான்க்ரீட்டால் நிரப்பப்பட்டுள்ளது. கடைமடைக்கு தண்ணீர் போவதில்லை, நீர் கசிந்து வீணாகின்றன என்ற காரணங்களால் கீழ்பவானி வாய்க்காலுக்கு கான்கிரீட் சுவரும் தளமும் அமைக்க 1200 கோடிக்கு மேல் உலகவங்கி செலவு செய்ய பல வருடங்களாக தயார் நிலையில் இருக்கின்றது.

மேலோட்டமாகப் பார்த்தால் நீர் வீணாவதைத் தடுக்கவும், கடைமடைக்கு தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்தவும் கான்க்ரீட் அவசியம் என்ற வாதம் சரியாகப்படலாம். ஆனால் 200 கி.மீ தொலைவு இருக்கும் கால்வாயின் கரைகள் கான்க்ரீட் ஆக்கப்பட்டால், அந்தக் கரைகளில் இருக்கும் 2 லட்சம் மரங்கள் என்னவாகும், அதை நம்பிய பறவைகள் பூச்சிகள் என்ன செய்யும் என்பதற்கு பதிலுண்டா? நீர் கசிந்து வீணாகின்றன என்பதைப் போன்ற முட்டாள்தனமான வாதம் உலகில் வேறொன்றுமில்லை. கால்வாயில் ஓடும் நீர் மண் உறிஞ்சப்படுவதால் வீணாகின்றன எனச் சொன்னால், இனி ஆற்றுக்கும், அணைக்கும் கூட கான்க்ரீட் போட்டுவிடுவதுதானே நல்லது.

கீழ்பவானி கால்வாயில் நேரடியாக இரண்டு லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறதென்று சொன்னால், மறைமுகமாக நிலத்தடி நீர் உயர்வதின் வாயிலாக, கசிவுநீர்க் குட்டைகள் நிரம்புவதன் மூலமாக மூன்று லட்சம் ஏக்கர் பயன் பெறுகின்றன. கால்வாய் கான்க்ரீடாக்கப்பட்டால், சில ஆண்டுகளில் அந்த மூன்று லட்சம் ஏக்கர் நிலமும் முற்றிலும் மானாவாரி நிலமாக மாற்றப்படும். விவசாயம் முழுதும் நலிந்துபோகும். அந்த நிலங்களை நம்பியிருந்த விவசாயிகள், விவசாயக் கூலிகள் வேறு வழியின்றி மனம் வெதும்பி வெளியேறவேண்டி வரும். நிலங்கள் வீட்டுமனைகளாக்கப்படும். ஒட்டுமொத்தமாக நிலங்கள் ஏதாவது கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்கேற்ப ஒரு  தொழிற்பேட்டையாக கையகப்படுத்தப்படலாம்.



*


இதோ இப்போது கெய்ல் நிறுவனம் மாட்சிமைதாங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை கையில் வைத்துக்கொண்டு தயாராக நிற்கிறது. அநேகமாக தமிழகத் தேர்தல்வரை கள்ளமௌனம் காக்கும் என எதிர்பார்க்கலாம். அதன்பின் தன் அசுரபலத்தை விளைநிலங்களின் மீது எந்தவித கருணையுமின்றி பாய்ச்சும். மக்கள் அடர்த்தி மிகுந்த இந்த தேசத்தில், விவசாயத்தை முன்னிறுத்தும் இந்த தேசத்தில் மக்களைக் குறித்தோ, விவசாயம் குறித்தோ எந்தவிதக் கவலையும், கவனமுமின்றி தன் கோரத்தனத்தை செயல்படுத்தும்.

குழாய்கள் பதிக்கப்படும் நிலமனைத்தும் அதை நம்பி வாழ்வோரிடமிருந்து அந்நியப்படுத்தப்படும். அவர்களுக்கே கடும் நிபந்தனைகள் விதிக்கப்படும். ஒட்டுமொத்த சுதந்திரமும் பறிக்கப்படும். அந்த நிலத்தின் பயன்பாடு, விலை காயடிக்கப்படும். மிக எளிதாக விவசாய சமூகம் முடமாக்கப்படும்.

அந்த நிலத்தில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால், பாதிக்கப்பட்டவனே குற்றவாளி என சட்டம் பாய்ச்சப்படும். அசம்பாவிதங்களில் அவன் பாதிக்கப்பட்டால் நிறுவனம் கள்ளமௌனம் சாதிக்கும். மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள்.

அப்போ, வளர்ச்சியே தேவையில்லையா? எல்லாவற்றுக்கும் முட்டுக்கட்டை போடுவது சரியா? ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெறமுடியும், ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, நகர விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டபோது என எல்லா நேரங்களிலும் இப்படியான எதிர்ப்புக் குரல் எழும்பும், பின்னர் அடங்கிவிடும் என புத்திசாலித்தனமாக வஞ்சனைகள் நிரப்பி, நினைத்த ஒவ்வொன்றையும் நிறைவேற்றிவிடுவது ஒன்றும் சிரமமில்லைதான்.

ஆனால்… இதெல்லாம் உண்மையிலேயே யாருக்காக செய்கிறீர்கள்!?

பூர்வகுடிகளின் வேர்களை அறுத்துவிட்டு மெல்லமெல்ல அவர்கள் குழம்பி, மனம் வெதும்பி, நொந்து, இயலாமைக்கு ஆட்பட்டு சிதைந்துபோவதை உறுதிப்படுத்துவதற்குப் பெயர் வளர்ச்சி என்றால், அது வளர்ச்சியில்லை… அழுத்தமாகச் சொல்லவிரும்புவது “அது புற்றுநோய்க்கு நிகரான ஒன்றுதான்”

இந்தப் போக்குக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை. எனவே, இப்போதைக்கு 'டேஷ் இன் இந்தியா' என்று சொல்லி கோடிட்ட இடங்களை நிரப்பக் கோருகிறேன்.

-

நன்றி : தி இந்து

-

Feb 5, 2016

ஒரு கல்லூரி மாணவியின் குமுறல் எழுப்பும் பல கேள்விகள்!




அது கிராமப் பகுதியில் அமைந்திருக்கும் அரசு கலை, அறிவியல் கல்லூரி. பெரும்பாலானோர் வசதி குறைந்த ஏழ்மையான குடும்பத்திலிருந்து சார்ந்தவர்கள், தன்னம்பிக்கை குறைவாகவே இருப்பார்கள் என என்னை அழைத்தவர் சொல்லியிருந்தார். மற்ற கல்லூரி மாணவர்களிடையே பேசுவது போன்றேதான் இங்கேயும் பேசினேன்.

தற்போது அவர்களுக்கு கிடைத்திருக்கும் கல்வி வாய்ப்பு, இதற்காக சமூகமும், பெற்றோர்களும் செய்திருக்கும் தியாகங்கள் குறித்துத் துவங்கி, அவர்களின் இலக்கை இனங்காணுதல், அதை நோக்கிய பயணத்தில் தன்னம்பிக்கையோடு செயல்படுதல் குறித்துப் பேசினேன்.

நிகழ்ச்சி குறித்து பங்கேற்பாளர்களின் கருத்துக்கேட்பு நடந்தது. அப்போது கூட்டத்தின் கடைசி வரிசையிலிருந்து ஒரு மாணவி எழுந்து வந்தார். ஒருங்கிணைப்பாளர் ஒலிவாங்கியை அவரிடம் கொடுக்க முனைந்தார். அவர் மறுத்து முன்னோக்கி வந்தார். நிறுத்தி ஒலிவாங்கியைக் கொடுக்க முற்பட "நான் மைக்ல பேசல, தனியா பேசணும்" என்றபடி என்னை நோக்கி வந்தார்.

"நீங்க குடிகாரங்களப் பத்தி சொன்னீங்ல்ல… நெறய பிரச்சனைங் சார்… எங்கப்பா தெனமும் குடிக்கிறாரு… நான் சாவணும்… இல்லீனா கொல பண்ணனும் சார்" எனத் திக்கித்திணறி உடைந்த சொற்களாக உதிர்க்கும்போதே, கண்கள் நிரம்பிவிட்டன. மொத்தக் கூட்டத்தின் கவனமும் அங்கு திரும்பியது.

"மீட்டிங் முடியட்டும்மா… நாம பேசுவோம்… உறுதியா கூப்புட்டு பேசுவேன். இப்ப உக்காருங்க…" என்ற சமாதானத்தை ஏற்றுக்கொண்டவராய் தன் இடத்திற்குத் திரும்பினார். மேலும் மாணவ, மாணவிகள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

*

ஈரோடு மாவட்டத்தில் ஒரு குடிகாரக் கணவர் வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களையும் விற்றுக் குடிக்கிறார். 5, 2 வயதுகளில் குழந்தைகள். மனைவி வேலைக்குச் செல்வதால் அடுப்பெரிகிறது. 2 வயது கைக்குழந்தை வேலைக்குச் செல்வதற்கு இடைஞ்சலாக இருக்கும் சூழலில், வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரையும் விற்று ஒருநாள் குடித்துவிட்டு வருகிறார். சண்டை முற்றுகிறது. சண்டையின் உச்சத்தில் ஏற்பட்ட கோபத்தில் வேலைக்குச் செல்வதற்கு இடைஞ்சலாக இருக்கிறதே என குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுகிறார் தாய். வழக்கு நடக்கிறது. ஏழு வருடங்கள் தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக செய்தி.

*

மதுரையில் கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்கிறாள் மனைவி. கணவன் குடித்துவிட்டு வீட்டில் ரகளை செய்ததாகவும், மகளிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் ஏற்கனவே புகார் இருக்கின்றது. சம்பவத்தன்றும் குடி போதையில் மகளிடம் தகாத முறையில் நடக்க முற்பட கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொள்கிறார் மனைவி. நேரடியாக விசாரித்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அந்தப்பெண் மீது வழக்கு தொடுக்காமல் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்கிறார்.

*

மேற்கண்ட இரண்டு வழக்கு உதாரணங்களை உரையின் நடுவே நான் குறிப்பிட்டுப் பேசியிருந்ததுதான், அத்தனை பேர் மத்தியிலும் அந்தப் பெண்ணை என்னிடம் பேசத் தூண்டியிருக்கிறது என்பது புரிந்தது.

அடுத்த கூட்டத்துக்காக அருகில் உள்ள பள்ளியில் அரையாண்டுத் தேர்வு எழுதிய மாணவர்கள் காத்திருக்க, மேலும் தாமதம் செய்ய முடியாத சூழல். வாக்குறுதி கொடுத்ததுபோல் ஓரிரு நிமிடங்களேனும் பேசியாக வேண்டும் எனப் பேராசிரியரிடம் கூறி அந்த மாணவியை அழைக்கக் கோரினேன். அந்தப் பெண் வந்தார்.

"சார் லைஃப்ல ஏகப்பட்ட பிரச்சனைங் சார். கூட்டத்தில் நீங்க பேசின எதையுமே கேக்காமத்தான் ஒக்காந்திருந்தேன். குடிகாரங்க பத்தி நீங்க சொன்னப்புறம்தான் கவனிச்சேன். அதுதான் உங்ககிட்ட பேச வந்தேன் சார்" என்றார். கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது.

அருகில் பலர் நின்று கொண்டிருந்த சூழலும், பள்ளியில் மாணவர்கள் காத்திருப்பதும் தொடர்ந்து பேசும் மனநிலையைத் தரவில்லை.

"என்னம்மா படிக்கிறே!?"

"தேர்ட் இயர் சார். அம்மா செத்துட்டாங்க சார். அப்பா குடிகாரர். அசிங்கமா திட்டுவார். என் பிரச்சனைக்கு… நான் ஒண்ணு செத்துப் போகணும் சார்… இல்லீனா எப்படியாச்சும் கொலை பண்ணீறனும் சார்."

கதறி அழுதுவிடுவாரோ என்ற அச்சம் வந்தது.

"ம்ம்ம்ம்… புரியுதும்மா… உம் பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கும். என்னால முடிஞ்ச உதவி செய்றேன். இப்ப தப்பா நினைச்சுக்காதே. உண்மையாவே இப்ப நேரம் இல்ல. இந்தச் சூழலிலும் இதப் பேச வேணாம். எல்லாரும் உன்னையே பார்த்துட்டு இருக்காங்க. உங்கிட்ட செல்போன் இருக்குதானே? என்னோட நெம்பர் தர்றேன். நாளைக்கு எனக்கு ஒரே ஒரு போன் பண்ணு. இல்லைனா இங்க இருக்கிற மேடம்கிட்ட சொல்லி உன்கிட்ட பேசச் சொல்றேன்."

நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தவரிடம், "அந்தப் பொண்ணுக்கு என்னவோ பிரச்சனை இருக்கு. ஒரு எமோஷன்ல என்கிட்ட பேசியிருக்கு. அநேகமா நாளைக்கு என்கிட்ட பேசாமகூடப் போகலாம். நீங்க அந்தப் பொண்ணுகிட்டப் பேசி, என்னனு கேட்டு உதவமுடியுமானு பாருங்க" என அறிவுறுத்தினேன்.

*

சமீப நாட்களில் மாணவ, மாணவியர்களை மரணம் பெருந்தாகத்தோடு தீண்டத் துவங்கியுள்ளதை காண முடிகிறது. வகுப்பறையில் ஆசிரியையைக் கொலை செய்த மாணவர், ஒன்றாம் வகுப்பு மாணவரை அடித்துக் கொலை செய்த ஆறாம் வகுப்பு மாணவர் என மாணவர்களே கொலையில் நேரடியாகப் பங்கெடுப்பதையும் கண்டு வருகிறோம். அடுத்தடுத்துக் காண்கையில், இதுவும் சாதாரணம்தான் என பழகிப்போகும் ஆபத்துண்டு.

தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் தெளிவற்ற அடையாளங்களோடு நிகழ்ந்திருக்கும் மாணவிகளின் மரணங்கள் மிகப்பெரிய மிரட்டலை விடுத்திருக்கின்றன. அரசும், சமூகமும் இந்த அச்சுறுத்தலை எவ்விதம் கையாள்கிறது என்பதில் தெளிவில்லை. கையாள்கிறதா அல்லது அடுத்த பரபரப்பில் கை கழுவிக் கடந்து போகிறதா!? தன்னையே மாய்த்துக்கொள்ளும் தற்கொலைகளில், அதில் பலியாகும் பிள்ளைகள் மட்டுமே பொறுப்பாகிவிட முடியாது.

மாணவப் பருவமென்பது படிப்பதற்காக மட்டுமே என்பது எழுதப்படாத சட்டமாக நடைமுறைப் படுத்தப்படுகின்றது. போட்டியும் அழுத்தமும் மதிப்பெண்களைத் தாண்டி சிந்திக்க அனுமதிக்காமல் தொடர்ந்து சிக்கல்களை உருவாக்குகிறது. பெற்றோர், உற்றார், சேவையாற்றும் ஆசிரியர்கள், வணிகமாக நடத்தும் கல்விக்கூட முதலாளிகள் ஆகியோரில் பெரும்பாலானவர்கள் பள்ளி, கல்லூரிகளின் வாயிலாக தாம் விரும்பும் வகையில் அல்லது தனக்கு பயன்கிட்டும் வகையில் பிள்ளைகளை மாணவர்களாக, மாணவிகளாக தொடர்ந்து கட்டமைக்கிறார்கள். அந்த நோக்கம் மிகத் தெளிவானதாகவோ, நியமானதாகவோ இருக்கிறதா இல்லையா என்பதும் தெரியவில்லை. கல்வி தவிர்த்து பிள்ளைகளிடம் சொல்லவோ, கேட்கவோ ஒன்றுமேயில்லை என ஒட்டுமொத்தமாக அனைவருமே தீர்மானித்ததுபோல் தான் நடந்துகொள்கிறோம்.

மாணவ, மாணவிகளின் உலகம் ஒரு பிள்ளையின், ஒரு உயிரின், ரத்தமும் சதையுமான ஒரு மனிதப் பிறவியின் உலகமாகக் கருதப்படாமல், மாணவ உலகமாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. மாணவ மனதோடு அவர்கள் எடுக்கும் முடிவு மற்றும் செய்யும் செயல்பாடுகளுக்கும், ஒரு மனிதப் பிறவியாக அவர்கள் எடுக்கும் முடிவு, செய்யும் செயல்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். அதை எங்கே, எப்படி, யார் அவர்களிடம் சேர்க்க அல்லது புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறோம்.

நினைத்தது போலவே அந்த மாணவி என்னைத் தொடர்புகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அந்தக் கல்லூரியில் அந்த மாணவியை அழைத்து பேச்சு கொடுக்கிறார்கள். அம்மா இல்லாத வீடு. அப்பா பயங்கர குடி. வீடு திரும்ப நடுநிசி ஆகிறது. வந்தாலும் வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் அசிங்கமான திட்டு. ஒரு நாள் இரவு தனியே வீட்டில் இருந்த பெண்ணிடம் தவறாக நடக்கும் நோக்கத்தோடு இரண்டு பேர் வீட்டுக்குள் புகுந்துவிட, அவள் கத்தியதில் ஓடிவிட்டனர். அப்பாவை திருத்தவே முடியவில்லை. நாளுக்கு நாள் சிக்கல் அதிகரிக்கிறது. இப்போதை மனநிலை ஒன்று அப்பாவைக் கொன்று விடவேண்டும் அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பதுபோல் அவளுக்கு இருக்கின்றது.

நான் பேசிய உரையில் இருந்த இரண்டு சம்பவங்கள்தான் அந்தப் பெண்ணை உடையச் செய்திருக்கிறது. அதன் மூலமே அவர் தன்னை வெளிப்படுத்தும் வாய்ப்பை அடைந்திருக்கிறார். அதன் வழியே இப்போதைக்கு தன் பிரச்சனையை பகிர்ந்து கொள்ள ஒருவரையும், அதோடு உதவிகளை எட்ட, பாதைகளை இனம் காணும் வாய்ப்பினை அடையும் சாத்தியம் நிகழ்த் துவங்கியிருக்கிறது. கடைசியாக கிடைத்த தகவல்படி, அந்தப் பெண்ணுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்களின் உரிய அரவணைப்பில் இருப்பதாகவும் அறிந்தேன்.

*

மேலே குறிப்பிட்ட அவ்விரு கொலைச் சம்பவ உதாரணங்களை நான் மூன்று நான்கு கூட்டங்களில் பகிர்ந்ததாக நினைவு. சுமார் ஆயிரம் பேர் வரை கேட்டிருக்கலாம். ஆயிரம் பேரில் ஒரே ஒரு பெண்ணின் ஓடு மட்டுமே அந்த உதாரணத்தால் உடைந்திருக்கிறது, அல்லது உடைந்ததை ஒருத்தி மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார். பல நூறுபேருக்கு அதுபோன்ற பிரச்சனைகளே இல்லாமல் இருக்கலாம். சில நூறு பேருக்கு ஓடு உடையாமலோ, வெளிப்படுத்தும் மனம் இல்லாமலோ இருக்கலாம்.

நாம் பகிர்ந்திடாத சில உதாரணங்களையும், அவர்கள் பகிர்ந்துகொள்ளாத பல பிரச்சனைகளையும் எவ்வாறு ஒன்றிணைக்கப் போகிறோம். ஏதோ ஒரு தலைப்பில் பேசும்போது ஏதோ ஒரு சொல், சொற்றொடர், உதாரணம் அவர்களின் ஓட்டினை உடைக்குமென உத்திரவாதம் தரமுடியாது. அவ்வாறு ஓட்டினை உடைப்பது என் போன்றவர்களின் கூரிய நோக்கமாகவும் இருப்பதில்லை. சாத்தியமும் கிடையாது. பல நேரங்களில் காக்கை உட்கார பனம்பழம் விழும் கதைதான்.

மாணவர்களை கல்வி அல்லது மாணவ நிலை என்பதையும் தாண்டி அவர்களும் நம்மைப்போல் ரத்தமும் சதையுமாய், மகிழ்ச்சியும், சிக்கல்களும், பிரச்சனைகளும், உளைச்சல்களும் கொண்ட வாழ்வைத்தான் கடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அதை எவ்விதம் கையாள வேண்டும் என்பதற்கான கண்டறிதல், ஆலோசனைகள் அளித்தல்கள்தான் அவர்களை தம் பிரச்சனைகளிலிருந்து சரிசெய்ய உதவும்.

பொதுவாக மாணவக் கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் பின்னால் அவரவர் நிலை, சூழல் மற்றும் தேவைக்கேற்ப அழுவது, கலங்குவது, பொங்குவது அல்லது அரசியலாக்குவதுதான் நிகழ்கிறது.

அது சரி… ஏன் நாம் "வரும் முன் காப்போம்" என்ற வரிகளை மறந்து போனோம்!?

-

நன்றி : தி இந்து

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...