Showing posts with label முதுமை. Show all posts
Showing posts with label முதுமை. Show all posts

Apr 6, 2025

முதியதோர் உலகு





அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி வரும் வழியில் அமர்ந்திருந்தார். அவரைக் கடக்கும்போது கவனித்தேன். அவரும் என்னைப் பார்த்த நொடியில் புன்னகைத்தார். புன்னகையை எப்படிப் புறந்தள்ள முடியும். நானும் புன்னகைத்தேன். 

அந்தப் புன்னகைக்குக் காத்திருந்தவர்போல் எழுந்தார். ஏதோ கேட்க, சொல்ல வருகிறார் எனப் புரிந்தது. என் வேகத்தைக் குறைத்தேன். சிரித்த முகம். சிலருக்குத்தான் அப்படி இயல்பாக வாய்க்கும். சிலர் தன்னை அப்படி அமைத்துக் கொண்டதும் உண்டு. அவர் ஏதோ பேசத் தொடங்கியிருந்தார். காதில் இருந்த இயர்பட்ஸில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ‘சொல்லுங்க!’ என்றேன்.

”உங்களை அடிக்கடி பார்க்கிறேன். பேசனும்னு நினைப்பேன். காதில் அதைப் போட்டுட்டு வேகமாப் போவீங்க. தொந்தரவா இருக்குமோனு பேசாம போய்டுவேன். இன்னிக்குத்தான் பேச முடிஞ்சிருக்கு!” என்றபடி என்னோடு நடையில் இணைகிறார்.

அவரைக் கவனித்திருக்கிறேனா? உண்மையில் நினைவில்லை. கவனித்திருக்கலாம், மனதில் பதிந்திருக்கவில்லை. நடக்கும் வழியில் அப்படி யாரிடமும் பேசத் தோன்றியதில்லை. ஓரிரு தலையசைப்புகள் எப்போதாவது உண்டு. மற்றபடி காலை நடை என்பது எனக்கான தவ வேளை. பெரும்பாலும் ஏதாவது கேட்டபடி, எனக்குள் உரையாடியபடி நடப்பேன். 

“அப்டீங்ளா.... ஸாரி நான் கவனிச்சதில்ல... சொல்லுங்க!”

எங்கிருந்து வருகிறேன் எனக் கேட்டார். அப்படியான கேள்விகளை விரும்புவதில்லை. அங்கே என திசையை மட்டும் காட்டினேன். தம் வீடு இருக்கும் இடத்தைச் சொன்னார். சாலையின் முடிவில் நான் திரும்பும் திசைக்கு எதிர்பக்கம் அவரின் பகுதி. 

அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணி நிறைவு செய்திருக்கிறார். மகன் மருத்துவர். மகள் பட்டயக் கணக்காளர். பிள்ளைகளின் வயது சொல்கிறார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. சமீப ஆண்டுகளில் படிப்பு முடித்து பணிக்கு சென்றிருக்க வேண்டும். அடுத்தடுத்து அவரே சொல்லிக்கொண்டிருக்க, முடிவாக என்ன சொல்ல வருகிறார் என என்னால் இனம் காண முடியவில்லை. இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

“சரிங்க... இன்னொரு நாள் பார்க்கலாம்!” என நடையை வேகப்படுத்தியிருக்க முடியும். சரி என்னதான் சொல்ல வருகிறார் எனும் சிந்தனையோடு அவருடன் தொடர்கிறேன். என்னைவிட சற்று உயரம் குறைவானர் மற்றும் வயதானவர் என்பதால் என் நடை வேகத்திற்கு அவர் சிரமப்படுவது புரிந்தது. வேகத்தைக் குறைக்கிறேன். 

அவர் குறித்த அறிமுகம் நிறைவடைந்த நிலையில், நான் என்ன செய்கிறேன் எனக்கேட்கிறார். மேலோட்டமாகச் சொன்னதும், ”நீங்க வெளியில் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போக முடியுமா? நானும் அதில் எதுவும் செய்ய முடியுமா?” 

இத்தனைக்கும் நான் செய்வதாகச் சொன்னதில், பள்ளி எனக் குறிப்பிடவும் இல்லை இல்லை. பேசத் துவங்கி சில நிமிடங்கள்கூட ஆகியிருக்கவில்லை. அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? என வரிசையாகக் கேள்விகள் துளிர்க்க, கட்டுப்படுத்திக்கொண்டு, “எதுக்காக நீங்க வர நினைக்கிறீங்க?” என்கிறேன்.

”வந்தா எதாவது அடிஷனல் இன்கம் கிடைக்குமேனு!” என்றார். ஆச்சரியத்தைவிட சற்று அதிர்ச்சியாக இருந்தது.

“பென்சன் இருக்குமே உங்களுக்கு, மகனும் மகளும் நல்ல நிலையில் இருக்கிறதாச் சொன்னீங்கதானே!?”

“பென்சன் வருது. ஆனா ரொம்ப செலவு பண்ணி பழகிட்டோம். முன்ன சம்பளம் வந்தப்ப நிறைய வெளியே போறது, போன இடத்தில் காஸ்ட்லியா தங்குறது, பெருசா செலவு செய்றதுனு பழக்கமாகிடுச்சு. இப்பவும் அப்படியேதான் செலவாகுது. அதில்லாம வீட்டு லோன் போய்ட்டு இருக்கு. எதிலுமே செலவைக் குறைக்க முடியல”

இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு பெரிதாக யோசிக்க மனம் வரவில்லை. அவர் சொன்னதை கேட்க மட்டுமே செய்தேன். 

“எனக்கு சொந்த ஊர் திருச்சி பக்கம். ஃபர்ஸ்ட் போஸ்டிங் திருவண்ணாமலைல, அங்க இங்கனு சுத்தி கடைசியா இங்கே வந்துட்டோம். வொய்ஃப்க்கு இந்தப் பக்கம்தான் நேட்டிவ். முன்ன ஸ்கூல், வேலைனு எப்பவும் வெளியே போய்ட்டேன் பிரச்சனையில்ல. எனக்கும் அவங்களுக்கும் 13 வருட வித்தியாசம். முன்னெல்லாம் நல்லாதான் இருந்தாங்க. இப்ப வீட்லையே இருக்கிறதால, ரொம்ப திட்டிட்டே இருக்காங்க. இன்கமும் பாதியாகிடுச்சு. அதான் எதாச்சும் செய்யனும்னு பார்க்கிறேன்”

“என்ன வயசு உங்க ரெண்டு பேருக்கும்?”

“எனக்கு 66, அவங்களுக்கு என்னைவிட 13 வயசு குறைவு. நல்லாப் படிச்சிருக்காங்க. நான்தான் வேலைக்கெல்லாம் போக வேணாம்னு சொல்லிட்டேன். எதாச்சும் செய்யனும்னு இப்ப சொல்லிட்டே இருக்காங்க. மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் மாதிரி சிலதெல்லாம் ட்ரை பண்ணினாங்க. எல்லாம் ஃபெயிலியர் ஆகிட்டு. அதில நிறைய பணம் போயிடுச்சு”

வேறு என்னவெல்லாம் செய்தார்கள் எனக் கேட்கவில்லை. தம்மால் அதைச் செய்ய முடியுமா, முடியாதா எனத் தெரியாமல் ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்புவோர் பலர் உண்டு. தடாலடியாக முடிவெடுப்பார்கள், எவரையும் நம்புவார்கள், எடுத்துக்கொண்ட ஒன்றை மிகைப்படுத்தி புகழ்வார்கள், அதைச் செய்யும் அறிவும், திறனும் உண்டா என்று சிந்திக்க மாட்டார்கள். எதையாவதைச் செய்து பலர் சிறிதாகவும், சிலர் பெரிதாகவும் இழப்பினைச் சந்திப்பதுண்டு. 

“எது சரி வருமோ, பார்த்து செய்ங்க!”

“நீங்க போறபக்கம் என்னையும்....” என இழுத்தார். நறுக்கென கத்தரித்துவிட்டு நான் நகர்ந்திருக்கலாம். ‘நிதானமா இரு!’ என எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.

”போகும்போது சொல்றேனு உங்ககிட்ட பொய் சொல்லிட்டுப் போய்டலாம். அதெல்லாம் சரி வராதுங்க. என்னையும் உங்களுக்குத் தெரியாது. யார் எது செய்தாலும், அது இன்னொருவருக்கு சரியா வரனும்னு இல்லை. முதல்ல உங்களுக்கு என்னென்ன பிரச்சனை இருக்கோ அதைத் சரி செய்யப் பாருங்க. உங்க மகன், மகள்கிட்ட பேசுங்க. அவங்ககிட்ட இத எப்படி சொல்றது, ஆலோசனை கேட்கிறதுனு நினைக்காதீங்க. படிச்சிருக்காங்க. புரிஞ்சுக்குவாங்க. உங்க வைஃப் எதுக்கு திட்டுறாங்கனு அமைதியா யோசிங்க. அவங்க மனசுல என்ன இருக்குனு கேளுங்க. படிச்சிருந்தும் அவங்க வேலைக்குப் போகாதது, சொந்தக் காலில் நிற்கமுடியாததுகூட மனக்குறையா இருக்கலாம். மற்றபடி செலவு செய்றது, மணி மேனேஜ்மெண்ட் எல்லாம் நீங்க நாலு பேரும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். பார்த்துக்கோங்க” என்றபடி சற்று வலுக்கட்டாயமாகத்தான் விடை பெற்றேன்.

அவர் என்னைப்போல் பலரிடமும், முன்பின் அறியாதவர்களிடமும்கூட இதுபோல் கேட்டிருக்கலாம். உண்மையான தேவைக்காக கேட்கிறாரா அல்லது ஏதேனும் உளவியல் சவால் இருந்து அதைக் கையாளத் தெரியாமல் இப்படி வெளிப்படுத்துகிறாரா என்று தெரியவில்லை. இனியொருமுறை நான் அவரை சந்திக்காமல் போகலாம். சந்தித்தாலும் தலையசைப்போடு கடந்து, காலப்போக்கில் அதுவும் தேய்ந்து போகலாம். 

நான் அவரை மறந்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளில் கவனமாகியிருக்க வேண்டும். ஆனால் மனதின் ஏதோவொரு ஓரத்தில் அவர் மெல்ல நடந்து கொண்டேயிருந்தார். அது அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதன் பொருட்டு இல்லை. ஏன் ஒரு மனிதர் இப்படியாகிறார் எனும் என்னுடைய புரிதலுக்கான அலசல்தான்.

படித்து ஆசிரியர் ஆனவர். பல ஆண்டுகள் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர். திறக்கப்படாத பல கதவுகளைத் திறப்பதுதானே கல்வியின் நோக்கம்.  நன்கு படித்த மனைவிக்கு திறக்கப்பட்டிருக்க வேண்டிய கதவுகளை, திறக்க உதவி செய்யாதது ஒருபக்கம் இருக்கட்டும், அந்தக் கதவுகளை இவரே அடைத்ததன் காரணம் என்னவாக இருக்கும்.

வீட்டில் இருக்கும் ஒரு பெண் கோபப்பட்டால், ஏன் கோபம் வருகின்றது என ஆராயப்படுவதேயில்லை. படித்தும் வேலைக்கு அனுமதிக்கப்படாத மற்றும் 13 வயது குறைவான மனைவியின் மனப்போராட்டத்தை, அவருடைய நிலையிலிருந்து புரிந்துகொள்ள மறுத்து,  நான் வீட்டில் இருப்பதால், வேலையில்லாமல் இருப்பதால், வருமானம் பாதியாகக் குறைந்துவிட்டதால் சண்டை வருகிறது எனக் கருதிக்கொள்வது சிக்கலை மேலும் பெரிதாக்கவே செய்யும். 

பிள்ளைகளுக்கு என்ன தெரியும் எனும் பிற்போக்குத்தனம் பல பெற்றோர்களிடம் உண்டு. ‘பிள்ளைகளுக்கு நிறையத் தெரியும். அவர்கள் நம்மைப் போன்றவர்கள் அல்ல. நம் காலம் போன்று அவர்கள் காலம் இல்லை!’ என்பதனை ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டும். வீட்டில் ஏற்படும் பிணக்குகளுக்கு, சிக்கல்களுக்கு, முரண்பாடுகளுக்கு அவர்களிடம் அப்பா-அம்மா எனும் அதிகாரத்தைச் செலுத்தாமல், உன்னை மதிக்கின்றேன் என்பதை உணர்த்தி அவர்களின் கருத்தைக் கேட்டால் பெரு ஆச்சரியங்கள் நிகழும். ‘இதுல எப்படிண்ணே எரியும்!’ என பெட்ரமாக்ஸ் லைட் மேண்டிலை செந்தில் உடைப்பதுபோல, ‘இதுக்கு எதுக்கு இவ்ளோ யோசிக்கிறீங்க!’ என பெரியவர்களின் குழப்பத்தை பொசுக்கென உடைத்துவிடும் திறன் வாய்ந்தவர்கள் இந்தத் தலைமுறையினர். அவர்களிடம் தீர்வுகள் தேடினால் நிச்சயம் கிடைக்கும்.

சம்பளம் வாங்கிய காலத்தில் இருபது முப்பது ஆண்டுகாலம் பெரிய அளவில் செலவு செய்து பழகிவிட்டால், பென்சன் வாங்கும் காலத்தில் வருமானம் பாதியாக குறையும் சூழலில் செலவுகளை எப்படிக் குறைக்க முடியும்? வயது முதிரும் காலத்தில் மருத்துவ செலவுகள், போக்குவரத்து செலவுகள், பிள்ளைகளுக்கான செலவுகள் என்று கூடத்தானே செய்யும். நிதி குறித்த அடிப்படை புரிதல் மற்றும் நிதி மேலாண்மையில்லாத பலரும் ஏதோவொரு தருணத்தில் பொருளாதார நெருக்கடியில் எளிதாக ஆட்பட்டுவிடுவதுண்டு.

எது சிக்கனம், எது கஞ்சத்தனம், எது அவசியமான செலவு, எது ஆடம்பரமான செலவு, எது ஊதாரித்தனம் என ஒவ்வொருவரும் தெளிவடைதல் முக்கியம். வசதி படைத்தவர்கள் ஆடம்பரமாக, ஊதாரித்தனமாக செலவு செய்வதை பண சுழற்சிக்கு நல்லது என நான் தனிப்பட்ட முறையில் கருதுவதுண்டு. ஒருவர் ஆடம்பரமாக, ஊதாரித்தனமாக செலவு செய்தால் அதை வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர, தாமும் அதுபோல் செய்யலாம் என நினைத்தால், என்றேனும் ஒருநாள் நிதி நெருக்கடிகள் அதிகரிக்கவே செய்யும்.

பணி ஓய்வு பெறுகின்றவர்களுக்கென சில உளவியல் சவால்கள் உண்டு. உண்மையில் அது பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. இருபது முப்பது ஆண்டு காலம் ஒரே மாதிரியான வேலையைச் செய்தவர்கள், அதிகாரம் செலுத்தியவர்கள், பல்வேறு பலன்களை அனுபவித்தவர்கள், திடீரென ஒருநாள் அங்கிருந்து பிய்த்து எடுக்கப்பட்டு, ஓய்வு காலம் எனும் நிர்பந்தத்தில் ஆட்படுத்தப்படுகின்றனர். வெகு எளிதாக தனித்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. அதை அனைவராலும் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வீடுதானென்றாலும், அதன்பிறகு அது புதிய சூழல்தான். பொருத்திக்கொள்வது மிகச் சவாலானது. அந்த நிலையில் அவர்கள் தம்முடனே முரண்படுவர், அதைவிட மோசமானது குடும்பத்தில் இருக்கும் அனைவருடனும் ஏற்படும் முரண்கள். இதில் யாரையும் தனித்து குறை சொல்ல முடியாது. அறியாமைதான் காரணம். ஓய்வுகாலம் எனும் சூழலுக்கு தயார்படுத்துவது இருதரப்பிலும் மிகவும் முக்கியம். 

வாழ்வின் பயண வழித்தடமெங்கும் சேகரிக்கும் அனுபவங்கள் முதுமையில் உதவுவதாக இருக்க வேண்டும். எந்த அனுபவங்களையும் சேகரிக்காத, அனுபவங்களைப் பாடமாக எடுத்துக்கொள்ளாதோர் முதுமை மிகவும் பலவீனமாகவே அமையும். பலவீனமான தருணங்களில் தெளிவாக சிந்திக்கவியலாது. முதுமை உடலை வேண்டுமானால் பலவீனப்படுத்தலாம். ஆனால், அறிவு மற்றும் மனதை எந்தவகையிலும் பலவீனப்படுத்தக்கூடாது.

வாழ்தல் என்பது முதுமைக்கும் தன்னை தயார்படுத்துவதுதான். தன்னைப் பாதுகாத்தல் என்பதும் தன்னை நேசித்தலின் ஓர் அங்கம். 

~ ஈரோடு கதிர்

Jan 6, 2017

எச்சூஸ்மீ மிஸ்டர் முதுமை!

மனிதர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கையை நடத்துவது குறித்து இருக்கும் பயம், ஒரு கட்டத்தில் மெல்ல தம் மீது படரும் முதுமை மீதானதாகத் திரும்பி விடுகிறது. முதுமையை எதிர்கொள்ள அவர்கள் வைத்திருக்கும் இரண்டு வழிகள், ஒன்று தனக்கு வயதாகிவிட்டது என்பதை அடிக்கடி ஒப்புக்கொள்வதன் வாயிலாக அதையொட்டி ஏதேனும் சலுகையோ, பரிதாபமோ தேடிக்கொள்வது. மற்றொன்று, பல்வேறுபட்ட ஒப்பனைப் பொருட்கள், ஆடைகள் மூலமாய் தன் வயதை மறைக்கப் பிரயத்தனம் எடுப்பது.

இந்த அனுதாபம் தேடிக்கொள்ளும் முயற்சி, தன் இயல்பான வேகத்தைக் கூட்டி முதுமையை நோக்கி அவர்களை இழுத்துச் சென்று விடுகிறது. அறிந்தோ அறியாமலோ அதையே திரும்பத் திரும்பச் சொல்வதால், அவர்கள் விரும்புவதும் அதுவாகவே அமைகின்றது. ஒப்பனைகள் மூலம் இளமையாக தங்களை உலகுக்கு மட்டுமே காட்ட முயல்வதும்கூட ஒருவித ஏமாற்றுதானே!?. அது தற்காலிகமாக தன்னம்பிக்கை தருவதாகத் தோன்றினாலும், திடீரென ஒரு புள்ளியில் எல்லாவற்றையும் சட்டெனக் கலைத்து விடுவதாக, முறித்துப் போடுவதாக அமைந்துவிடுகிறது. அதிலிருக்கும் போலித்தன்மையே ஒரு கட்டத்தில் மிகப் பெரிய ஒவ்வாமையக் கொடுத்துவிடுகிறது.

இந்த இரண்டிலும் ஆட்படாத வெகு சிலரின் செயல்பாடுகள் மட்டுமே - வயதை மறைக்க முயலாமல், அனுதாபம் தேடாமல் - தன்னைக் கவ்வும் முதுமையை எதிர்கொள்ள மனம் மற்றும் உடலளவில் ஆரோக்கிய வழியில் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதாக இருக்கின்றன. அவர்கள் தங்களால் இயன்ற எல்லா வழிகளிலும் வயதை பொருட்படுத்தாமல் இருப்பதற்கான காரியங்களை மேற்கொள்ளத் துவங்குகின்றனர். இதன் மூலம் முதுமையை மறைப்பது அவர்களின் நோக்கமாக இருப்பதில்லை. முதுமையின் ஆளுமைக்கு எதிராகத் தங்களை வலுப்படுத்தி நிறுத்திக் கொள்வது மட்டுமே.

வயது கூடக்கூட இளமை தீர்வதையும்ம், முதுமை சேர்வதையும் மிக இயல்பாக நாம் உணர்கிறோம். நினைத்த மாத்திரத்தில் ஒரு இடத்தில் தாண்டிக் குதிக்கவோ, சட்டென ஒரு இடத்தில் ஏறிப் பார்க்கவோ, ஓடவோ, எதையேனும் இழுக்கவோ, தூக்கவோ தயக்கம் ஏற்படுகிறது. இப்படியான செயல்களைச் செய்கையில் உணரும் தடுமாற்றங்களை இளமை தீர்வதற்கான அறிகுறி எனக் கொள்கிறோம். ஆனால் எல்லாமுமே பயிற்சியில் சாத்தியம் என்பதையும், தொடர்ந்து பழகுவதை நிறுத்தும்போதுதான் பெரும்பாலும் அது இயலாததாக மாறுகிறது என்பதையும் மறந்து விட்டதும் இம்மாதிரியான முடிவுக்கு ஒரு காரணம்.





ன்னுடைய இளம் பருவம் முழுவதும் கிராமத்தில் - அதுவும் விவசாய நிலத்தில் இருந்ததால், எல்லாக் காலமும் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து உழைப்பைச் செலுத்தியே ஆகவேண்டிய நிர்பந்தம் இருந்தது. பல சமயங்களில் ஆர்வத்தினாலும், சில நேரங்களில் நிர்பந்தத்தினாலும், விவசாயப் பணிகளில் ஈடுபடுவோருடன் இணைந்து சரி சமமாக நின்று கடினமான உடல் உழைப்பு வேலைகளைச் செய்த அனுபவம் உண்டு. கிராமங்களில் எல்லா வயதினரும் தங்களால் இயன்ற அளவு உழைத்தே தீர வேண்டிய நிர்பந்தம் இயல்பாகவே அமைந்த ஒன்று.

ஒரு கட்டத்தில் காலம் நகர்ப்புற வாழ்க்கைக்கு நகர்த்துகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், பிள்ளையின் கல்வி எனும் காரணங்களை முன்வைத்து முழுதாய் நகரத்தின் பிடிக்குள் பிணைத்துக் கொண்டாயிற்று. எல்லாவிதமான பசபசப்புகளோடு நகரமும் தனக்குள் பிடித்து வைத்துக் கொண்டது. நகரம் வேறு மாதிரியான சுழற்சியை மிக சீக்கிரத்தில் கற்றுக் கொடுத்து விட்டது. வெயில் ஒத்துக் கொள்வதில்லை. மழை சிரமம் கொடுக்க ஆரம்பித்தது. குளிர் ஒவ்வாமையைக் கொண்டு வந்தது. இரவு பகல் எல்லாவற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.

பின்னிரவுப் பொழுது வரை ஊரும், வீடும் அடங்குவதில்லை. ஒன்பது மணிக்குள் ஒரு தூக்கம்தூங்கி விடுவோம் என்றிருந்த நிலை மாறி, ’சராசரியாக பத்து முதல் பதினொரு மணிக்குள் தூங்கினால் போதும்என்ற மனநிலையைத் திணித்து விட்டது. விடியல் ஐந்து மணியாக இருந்த காலம் மாறி, ஏழு மணிக்கு எழுவதொன்றும் ஆச்சரியமானதாக இல்லை. சில வீடுகளில் பிள்ளைகள் எழுந்து, குளித்து, உடையணிந்து, உணவு உண்டு பள்ளிக்குக் கிளம்பும் நேரத்திலும்கூட தந்தைகள் கூச்சமற்றுத் தூங்குவதை வெகு எளிதாகக் காணவியலும்.

நகரம் தந்திருக்கும் இன்னொரு மாய வாய்ப்பு, ஓய்வுக்கும் உழைப்பிற்கும் வித்தியாசம் இல்லாதது போன்றதொரு வாழ்க்கை முறையை அனுமதித்திருப்பது. வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என வாழ்க்கை சுருங்கச் சுருங்க, சொகுசு கூட ஆரம்பித்துவிட்டது. உடல் உழைப்பே இல்லாமல், உணவில் நேர்த்தி இல்லாமல், உறக்கத்தில் ஒழுங்கு இல்லாமல் ஒவ்வொரு வயதாகத் தீர்க்கும்போது, இரண்டு மடங்காய் உடல் குறித்தும், ஆரோக்கியம் குறித்தும் அச்சம் எழுகிறது. விளைவாகஇனிமேலாச்சும் எதாச்சும் செய்யனும்எனும் வரியை, ஆசையைச் சொல்ல ஆரம்பிக்கின்றோம். ஆனாலும் அப்படி எதாச்சும் செய்வது” ஒன்றும் அவ்வளவு எளிதானதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

அப்படி எதாச்சும் செய்யணும்’ என்ற முயற்சியில்தான் உடற்பயிற்சிக் கூடம் செல்வது, யோகா கற்றுக்கொள்வது, நடைப்பயிற்சி செய்வது, மிதிவண்டி ஓட்டுவது உள்ளிட்டவை தொடங்குகின்றன. இப்படியானவற்றைச் செய்யத் தொடங்கியவர்களில், தொடர்கிறவர்களைவிட கைவிட்டவர்களே மிக அதிகம் என்கின்றது வரலாறு.

தினசரி மதுபானக் கடைகளைத் தேடிச்சென்று, வரிசையில் நின்று, காசு கொடுத்து மது அருந்துபவர்களின் எண்ணிக்கையைவிட, காலைப் பொழுதில் விரைந்து எழுந்து, குறைந்தபட்சம் உடலுக்காக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். எத்தனை வரி விதித்தாலும், விலையேற்றம் நிகழ்ந்தாலும், அது குறித்துக் கவலைப்படாமல் புகைப்பதில் மாயச் சுகம் உணர்பவர்களைவிட, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களுக்கு கவனம் கொடுப்பவர்களும், செலவு செய்பவர்கள் மிகக் குறைவுதான்.

எதைச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்எனக் கேட்பது எத்தகையதொரு நகைமுரண். ஒவ்வொரு முறையும் இரண்டரை அங்குல நாக்கு இன்னும் இன்னும்எனக் கேட்டு விடுகிறது. வருத்தப்பட்டு பாரம் சுமப்பதென்னவோ வயிறுதான். நாக்கின் அடிப்பகுதியைக் கடந்து விட்டால் ருசியை நாம் அறிவதில்லையெனும் தெளிவு வந்துவிட்டாலே, பசி தணிந்த பிறகும் ருசி தூண்டுகிறதே என்பதற்காக உணவுப் பண்டங்களை வயிற்றில் திணிப்பது குறைந்துபோகும்.

திரைப்படம், தொலைக்காட்சி, இணைய அரட்டைகள் என இரவுகளைக் கருணையின்றி கரைப்பது ஒரு வியாதியாகிப் போய்விட்டதுஅவையனைத்துமே சொல்லொணாச் சுகம் தரும் அடங்காப் போதையூட்டிகள். அந்தச் சுகமும், போதையும் நம்மைக் கிறங்கடிப்பவை. போகப்போக கூடுதல் அழுத்தத்தையும், அதிலிருந்து அச்சத்தையும் ஊட்டுபவை. ஆழ்ந்துபோய் சிக்கிவிட்டால் ஒருபோதும் அவை தம் அரக்கப் பிடியிலிருந்து நம்மை விடுவிக்க விரும்புவதில்லை.

முதுமையும், முதிர்வும் காலத்தின் கட்டாயம். அதை எவ்விதமும் மறுப்பதோ, புறக்கணிப்பதோ இயலாத ஒன்று. அதை அதன் போக்கில் அனுமதிப்பதென்பது எவ்வகையிலும் தவறானதோ, குற்றமானதோ இல்லை. ஆனால் அதை நம் சோம்பல், உணவுப் பழக்கம், வேறு ஒவ்வாத பழக்கம் ஆகிய காரணங்களினால் முன்கூட்டியே சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதென்பது எந்த வகையில் நியாயமாகும்!?.

பொதுத்துறை நிறுவனமொன்றில் பணியாற்றும் என் நண்பரின் மேலதிகாரி ஓய்வு பெறும் வயதை நெருங்கி விட்டவர். ஆனால் ஒருபோதும் முதுமை ஆளுமை செய்வதை அனுமதிக்காதவர். ஆம், இன்றளவும் அவர் தினசரி 35 கி.மீ தூரம் ஓடுகிறார். அதுவும் காலணிகளின்றி வெறும் கால்களில். இளமையாக, திடகாத்திரமாக இருக்கும் பலரும் அருகிலுள்ள கடைக்குச் செல்வதற்குக்கூட வாகனங்களைப் பயன்படுத்தியே தீருவேன் என்ற அளவிற்கு சோம்பியிருக்கும் இக்காலத்தில் அறுபதுகளை நெருங்கும் ஒருவர் வெறும் கால்களில் தினந்தோறும் ஓடுகிறார் என்பது, பத்தோடு பதினொன்றெனக் கடந்து போகும் செய்தியன்று.

வயது கூடுவதை அனுபவிக்க நாம் கம்பீரமானதொரு உடலைத் தயாரித்து வைத்துக் கொள்வது எதனினும் முக்கியமானது. உடல் மீது நாம் செலுத்தும் எந்த வன்முறையையும் உடனடியாக உடல் புறந்தள்ளி விடுவதில்லை. ’இதில் ஏதேனும் நியாயங்கள் இருக்குமாஎன ஆராய்கின்றது. ஏதேனும் இருப்பின் ஏற்றுக்கொள்ள முனைகின்றது. ‘முடியவே முடியாது, கூடவே கூடாதுஎன்பதைத்தான் புறக்கணிக்க முடிவு செய்யும். முதலில் முரண்டு பிடிக்கும், பின் ஒத்துழைக்க மறுக்கும், இறுதியாக எச்சரிக்கை செய்யும், அதையும் மதிக்காவிட்டால் சிதைவைத் தொடங்கும்.

வழங்கப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். அந்த வாழ்க்கையைச் செலுத்தும் லகான் பெரும்பாலும் நம் கைகளிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. அதை எவ்விதம் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நம் மனமும், உடலும் நம்மோடு ஒத்துழைக்கும்.

உடலினை உறுதி செய்திட உதவும் செயல்களைத் தொடர்வோம். அப்படியேதும் இல்லையெனில் இப்பொழுதே ஏதேனும் ஒன்றைத் தொடங்குவோம். அதை புத்தாண்டின் உறுதிமொழியாய் பழகுவோம்.

இப்போதும், எப்போதும் உறுதியாக நம்புவது.... ‘நம்மால் இயலும்’!

-

நம்தோழி ஜனவரி 2017




May 24, 2011

அறிந்தும் அறியாமல்


பெருநகரத்தின் தழும்புகளான லைன் வீட்டுக்குள்
விதியால் வீழ்த்தி முடக்கிப்போடப்பட்ட
கிராமத்தின் வாடை இன்னும் வடியாத
வெள்ளைப் புடவைக்கு இணையாய் நரைகூடிய
அந்தக் கிழவி வாசலைப் பெருக்குகிறாள்
நிமிடத்துக்கு நிமிடம் பொறுமை தீர்ந்து

வாழ்க்கை தின்று தீர்த்ததில் வறண்டு தொங்குகின்றன
பருவ காலத்தில் எவரெவரோ கொண்டாடிய மார்புகள்
வெற்றுநெஞ்சின் நடுவே சுருண்டுபுரளும் மாராப்பு தாண்டி

படியும் பார்வையைவிட மேலதிக அழுக்குப் படிந்த
கண்ணாடியின் சட்டங்களில் எண்ணைப்பசையேறிய
நூல்சுருளில் உறங்கும் சிக்கு வாடை மறத்துப்போய்விட்டது.

எப்போதாவது விழும் மழைத்தூறலில் உயிர்த்தெழும்
தார்சாலையில் உரசித்தேய்ந்த டயர்களின் எச்சக்கவிச்சி பழகிப்போய்விட்டது
விதி வெக்கை புழுக்கம் புழுதி வெறுமையென எல்லாமே
அவளின் முனகலுக்குள் சுருண்டு பசியாறுகின்றன

தார் சாலையில் தலைவைத்துத் தூங்கும் தன் வாசலை
குறிப்பிட்ட இடைவெளியில் குனிந்து குனிந்து கூட்டுகிறாள்
எவரொருவரும் தன் வாசலில் குப்பையைத் தொலைப்பதை
நிறுத்தப் போவதில்லை என்பதை அறிந்திருந்தும்!

-0-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...