Showing posts with label நம்தோழி. Show all posts
Showing posts with label நம்தோழி. Show all posts

Sep 16, 2017

அடைபடும் வழித்தடங்கள்

எது வாழ்க்கைஎனும் ஒற்றைக் கேள்விக்கு, இங்கு ஆயிரமாயிரம் பதில்கள் உண்டு. அவையனைத்தும் பொருத்தமான பதில்களாகவும், சரியான பதில்களாகவும் இருக்க வெண்டுமா என்ன? சரியான பதில்கள்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதாய் வைத்துக் கொள்வோம். அப்படியான சரியான பதில்களை மட்டுமே வைத்து திருப்தியடைந்து விடமுடியுமா? ஒருவேளை தவறான பதில்கள் வரும்பட்சத்தில் என்னென்ன தீங்குகள் அல்லது இழப்புகள் நிகழ்ந்துவிடும்?

மரணித்துப்போகத் தேவையான அளவிற்கு தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு, கூடுதல் உறுதிக்கு கை மணிக்கட்டு நரம்பை அறுத்துக் கொண்டு, அதுவும் போதாதென்று இருபதுகளில் இருக்கும் ஒருவர் மாடியிலிருந்து கீழே குதித்த செய்தியொன்று மனதிற்குள் கோரமானதொரு இம்சை செய்து கொண்டிருக்கிறது. இப்படியான செய்திகளை அவ்வப்போது பலவிதங்களில் கேட்டுக் கடப்பதொன்றும் புதிதில்லை. அப்படியானவர்களில் யாரேனும் நமக்கு தொடர்புடையவர்களாய் இருப்பின், அது கூடுதல் கலக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

தன்னைக் கொல்வதற்காக இந்த மூன்று காரியங்களையும் செய்தவரை எனக்குத் தெரியும்; அல்லது அவருக்கு என்னைத் தெரியும். தம் உயிர் மீது அவர் நிகழ்த்திய கொடூரத்திற்கு பெரிய காரணம் ஒன்றுமில்லை. சொன்னால் அட இதுக்காகவா?’ என்று கேள்வி மிக எளிதாய் எழும். வெகு எளிதான அந்தக் காரணத்தின் பெயர் காதல். ‘அட காதல் தானா?’ என ஒற்றைச் சொல்லில் நாம் கடந்து போகப் பார்க்கலாம். காரணம் நம் அகராதியில் காதல் எனும் பதத்திற்கு கிடைக்கும் அர்த்தமும், அவர் அகராதியில் காதல் எனும் பதத்திற்கு கிடைக்கும் அர்த்தமும் வெவ்வேறானவை. கடக்க முடியாததாகக் கருதப்பட்ட தோல்வியோ, சுமக்க முடியாத ஒரு துரோகமோகூட காதலின் அர்த்தமாக இருந்திருக்கலாம். சரி அதற்காக தன்னைக் கொலை செய்துவிடுவது என்பது மட்டுமே நியாயமான பதிலா!?

எது வாழ்க்கைஎனும் கேள்விக்கு, சில வேளைகளில் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியூட்டும் பதில்கள் வந்துவிடும். இன்னும் சில தருணங்களில் ஏதேனும் ஒரு பதில் கிடைத்துவிட்டாலே  போதுமென்றும் தோன்றிவிடுகிறது. அப்படியான விரும்பும் பதில்கள் மற்றும் வந்துவிழும் பதில்களின் மத்தியில், நான் நினைக்கும் பதில் வேறு. ‘வாழ்க்கை என்பது எதிலிருந்தேனும் தொடர்ந்து கற்றுக்கொண்டே ருப்பதுன்பதாகவே அது இருக்கும்.



கற்பித்தல், கற்றுக்கொள்ளல் என்பது பள்ளி, கல்லூரி, பணியிடம் மற்றும் தேவை சார்ந்த துறைகளையொட்டியது எனும் ஒரு எண்ணத்தை தெரிந்தோ தெரியாமலோ வலுவாய் வடிமைத்துக்கொண்டுள்ளோம். ‘கற்றல்என்றாலே கரும்பலகை முதற்கொண்டு நவீன வடிவத்தில் இருக்கும் கற்பித்தல் முறை வரை மனதில் படமாய் ஓடுகிறது. ‘கற்றுக்கொள்ளல்என்பது ஒரு கட்டத்தோடு நிறைவடைந்து விடுவதாய் கருதும் மூட நம்பிக்கையும் நம்மிடம் உண்டு. வெகுசிலரே தாம் காணும் எல்லாவற்றிலிருந்தும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டு, கற்றுக்கொண்டதை வாழ்வில் செயல்படுத்தும் குணமும், திறனும் உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் சலிப்பும் புகார்களும் குறைவு.

திரைப்படங்களில் சிறிய பெண்ணாய் தோற்றத்தில் இருந்த அந்த நடிகை திருமணம் செய்து கொள்கிறார். சில ஆண்டுகள் கழித்து மடியில் குழந்தையோடு தன் படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடுகிறார். உருவத்தில் பருத்திருக்கிறார். அவருடைய தற்போதைய தோற்றத்தை வைத்து இணைய வெளியெங்கும் ’நகைச்சுவை’ எனும் போர்வையில், கேலிகளும் கிண்டல்களும் வெடித்துச் சிதறுகின்றன. அப்படிச் செய்பவர்களில் யாரும், எவ்வகையிலும் அந்த நடிகையோடு தொடர்புடையவர்களும் கிடையாது. பொதுவெளியில் இருக்கும் யாரையும், எதற்கும், எவ்விதமும் தீண்டலாம் எனும் மனவெளிப்பாடு. ‘அந்த உருவ மாற்றம் என்பது தாய்மையின் விளைவு’ எனும் நிதர்சனம் யாருக்கும் புரியாத புதிரல்ல. அத்தனை கிண்டல், கேலிகளுக்கும் பதிலளிக்கும் வகையில்தாய்மையே மகிழ்ச்சி, குழந்தைக்கு அமுதூட்டுவது மகிழ்ச்சிஎன குழந்தையோடு இருக்கும் மற்றொரு படத்தை புதிதாக வெளியிடுகிறார். அவர் வெளியிட்ட படம் கிண்டல் செய்தவர்களுக்கான பதில் அல்ல; பாடம்.

எதிலிருந்தெல்லாம் கற்றுக் கொள்ளலாம், கற்றுக்கொள்வதின் அவசியம் என்ன?’ போன்ற கேள்விகள் வெகு இயல்பாகவே எழுவதுண்டு. எங்கு எவ்விதம் இந்த வாழ்க்கையை கற்றுக்கொண்டோம் என நினைத்துப் பார்த்ததுண்டா? கல்வி என்பதுதான் கற்றுக்கொடுக்கிறது எனக் கருதினால், அதுதான் ஆபத்தான பதிலாக இருக்கும். மனிதனின் சராசரி ஆயுளில் தோராயமாக நான்கில் ஒரு பங்கு காலம், கல்விக்காகவே மட்டுமே அர்ப்பணிக்கப்படுகின்றது. ஆழ்ந்து யோசித்தால் அந்தப் பருவத்தில் கற்றுக்கொள்வதும்கூட வாழ்வதற்கு என்பதைவிட பொருளீட்டுவதற்கு என்றே சொல்ல வேண்டும். அந்தக் கல்வி ஆயுட்காலம் முழுமைக்கும் வாழ்ந்துவிடும் வழிகளைத் தந்துவிடுகிறதா என்ன?

யாரோ எதன் நோக்கிலோ தயாரித்த பாடத்திட்டங்களை மையப்படுத்திய கல்வி, பல தருணங்களில் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுஎன்பதாகத்தான் உள்ளது. வாழ்க்கைக்கான கல்வியை நாம் சந்திக்கும் சூழல்களே பெரும்பாலும் கற்றுக்கொடுக்கின்றன. கிடத்தப்பட்டிருக்கும் பச்சிளங் குழந்தையொன்று குப்புற விழுவதற்கு எடுக்கும் முயற்சியில் தொடங்கி, 94ம் வயதிலும் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஜான் குடெனஃப் அவர்களின் வாழ்க்கை வரை எல்லாவற்றிலிருந்தும் கற்றுக் கொள்ள ஆயிரமாயிரம் இருக்கின்றன. அம்மாதிரியான கற்றுக்கொள்ளல்களில் வழியே வாழ்வதுதான் வாழ்க்கை. ”இயற்பியல் துறையில் சாதிப்பதற்கான வயதையெல்லாம் தாண்டிவிட்டீர்கள்என 25 வயதில் பல்கலைக் கழகத்தில் ஒதுக்கப்பட்ட ஜான் குடெனஃப், தம் 57ம் வயதில் லித்தியம் பேட்டரியை கண்டுப்பிடித்ததும், 94ம் வயதில் மற்றொரு வகை பேட்டரிக்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்திருப்பதும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தானே!?



ஒரு அப்பாவும் மகளும் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். வலது பக்க சாலை ஓரமாய் காரொன்று முன்பக்கம் நசுங்கி நிற்கிறது. கூட்டம் பரபரப்பாக கூடிக்கொண்டிருக்கிறது. காரின் பின் பக்கம், சுமார் நூறு மீட்டர் தொலைவில் ஒரு பைக் சிதறிக் கிடக்கிறது. அருகில் மடியில் ஒரு இளைஞனின் தலையைத் தாங்கியபடி இன்னொரு இளைஞர் கதறிக் கொண்டிருக்கிறார். அந்த அப்பாவும் மகளும் தங்கள் அவசரத்தையொட்டி கடந்து செல்கிறார்கள். சிறிது நேரத்தில் எதிரிலிருந்து 108 ஆம்புலன்ஸ் ஒன்று விரைந்து கடக்கிறது.

அதே அப்பாவும் மகளும் சில நாட்கள் கழித்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுப் பேருந்து ஒன்று தாறுமாறாய்த் திரும்பி நிற்கிறது. கூட்டத்தின் கவனம் பேருந்தின் மீது பதிந்திருக்கிறது. கடக்கும்போது முன் சக்கரத்திற்கும் பின் சக்கரத்திற்கும் இடையே தலை நசுங்கிய ஒரு முதியவர் கிடக்கிறார். விபத்தின் விபரீதம் புரிந்தது. அந்த இடத்தையும் மௌனமாய்க் கடக்கிறார்கள். அதிர்ச்சி மெல்ல மெல்லத் தேய்கிறது.

அன்றிரவு மகள் சொல்கிறாள்அப்பா இனிமே அந்த மாதிரி ஆக்ஸிடெண்ட் எதும் பார்த்தா, ஹெல்ப் பண்றமோ இல்லையோ ஒரு ரெண்டு நிமிசம் நின்னு, யாரு, என்ன, ஏதுனாச்சும் பார்த்துட்டு போலாம்பா!” ஒரு விபத்து நடந்த இடத்தில் சற்று கூட்டம் கூடியதுமே, ‘அதுதான் கூட்டம் கூடிவிட்டதே... நாம் மட்டும் என்ன செய்துவிடப்போகிறோம்? நமக்கு முக்கிய வேலை இருக்கிறது, நமக்கு நேரமில்லைஎனப் பல்வேறு காரணங்கள் மற்றும் சமாதானங்களை முன்வைத்து நழுவிவிடும் மனநிலைக்கு, சுருக்கெனத் தைக்கும் விதத்தில் அந்த சிறிய பெண்ரெண்டு நிமிசம் நின்னுட்டு போலாமேஎன்ற வேண்டுகோளின் மூலமாக ஆயிரமாயிரம் விசயங்களை உணர்த்திவிடுகிறாள்.

எல்லாம் எனக்குத் தெரியும்’, ‘இன்னும் புதிதாக என்ன இருந்துவிடப்போகிறது’, ‘சிலதெல்லாம் அப்படித்தான் இருக்கும்என்பது மாதிரியான மனநிலைகள் ஆபத்தானவை. ஒரு ஏரியோ, குளமோ தனக்கு வரும் நீர் வழித்தடங்களை தாமே அடைத்துக் கொள்வதற்கு ஒப்பானது இது. ஏரி, குளங்கள் ஓரிரு கால்வாய்களை மட்டுமே நம்பியிருப்பதில்லை. அந்தப் பகுதிகளில் பெய்யும் மழை நீரை தன்னை நோக்கிக் கொண்டுவரும் பல்வேறு நீர் வழித்தடங்களையும் நம்பித்தான் இருக்கின்றன. பெருங்கால்வாய்கள் நீரைக் கடத்திவர தவறும் தருணங்களிலெல்லாம் சிற்சிறு நீர் வழித்தடங்களில் கிட்டும் நீரைக் கொண்டு அவை உயிர்ப்புடன் இருக்கும். வழித்தடங்களை தொலைக்கும் ஏரி குளங்களுக்கு வாழ்வேது?. தம்மில் இருந்த நீரை ஆவியாதலில் தொலைக்கும், மாசுகளை மௌனமாய் ஏற்றுக்கொள்ளும், தன்னையே தகுதியற்றதாய் மாற்றிக்கொள்ள அனுமதிக்கும். ஒன்றுக்கும் உதவாததாய் மாறியும் போகும்.

கற்றுக்கொள்ளலை ஒதுங்க ஆரம்பிக்கின்ற தருணத்திலிருந்து வாழ்க்கை மெல்ல புளிப்பேறத் துவங்குகிறது. புளிப்பேறத் துவங்கிவிட்ட வாழ்க்கையில், உன்னத ருசியை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. வாழ்க்கையைக் கற்றல் என்பது திட்டமிடப்பட்ட பாடத்திட்டம் சார்ந்தன்று. கற்பித்தல் என்பது தூணிலிருந்தும், துரும்பிலிருந்தும் நிகழலாம். கற்றுக்கொள்தல் மிக எளிது, அறிவின் அத்தனை கண்களும் திறந்திருப்பது போதும்

-

நம்தோழி ஜூலை 2017ல் வெளியான கட்டுரை

Jul 3, 2017

உடல் நேசக்காரனின் ஒப்புதல் வாக்குமூலம்

டல் குறித்து பேச விழையும் போது ஆரோக்கியமும், நோய்மையும் மாறி மாறி மனதில் அறையத் தொடங்கிவிடுகின்றது. உடல் ஆரோக்கியம் மட்டுமே உணர்வுகள், மனநிலை, செயல்பாடுகள், பேச்சு, நினைப்பு என எல்லா மட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றது. அதிகமாக நாம் துவண்டுபோவதும் கூட நோய்மை சூழும் கணங்களில்தான். வாழ்வின் ஆகப்பெரும் சாபம் என்பது நோய்மையாகத்தான் இருக்க முடியும். நோய்மையாக உணரும் எல்லாத் தருணங்களிலும் நம்மை ஆழ்த்தியிருப்பது நோயாக இருப்பதில்லை என்பதுதான் உடல் எனும் பேரதிசயத்தில் இருக்கும் இருக்கும் உண்மை.

உலகின் பேரதிசயங்களின் பட்டியலில் உடலையும் சேர்த்துவிடுவதுதான் நியாயமான தேர்வாக இருக்கும். உடல் என்பது இரத்தமும், சதையும், எலும்புமான தொகுப்பாய் தன் மேல் தோல் போர்த்திய ஒன்றாகத் தோற்றமளித்தாலும். உள்ளுக்குள் புதைந்திருக்கும் பேரதிசயங்கள் உணரும் தருணம் வியப்பு மிகுந்தது. தெரிந்தோ தெரியாமலோ வெளியில் தோற்றமளிக்கும் உடல் அமைப்பிற்கு நாம் தரும் கவனம், உள்ளுக்குள் தரப்படுவதில்லை.

சமீபத்தில் ஒரு நாள் மூச்சை இழுக்கும் போதும் வெளிவிடும் போதும், தும்மும் போதும் வலது புற மார்பிலும், அதற்கு நேர் பின்னே முதுகிலும் சுருக்கெனத் தைக்கும் வலியை உணர்ந்தேன். அந்த வலி ஒருவேளை இடது புறமாக இருந்திருந்தால் நிலவரம் கலவரம் ஆகியிருந்திருக்கும். ஏற்கனவே நீண்ட கால சளித் தொந்தரவு இருந்ததால், வலியை சுவாசம் தொடர்புடையது என நானே கருதிக்கொண்டேன். இருக்கவே இருக்கிறது கூகுள். வலி அறிகுறிகளைக் குறிப்பிட்டுத் தேடியதில், கூகுள் நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் அல்லது கட்டி ஏதேனும் ஏற்பட்டிருக்காலம் என்பவையே கூகுள் அளித்த விடைகள். தொற்று, கட்டி, நுரையீரல் தொடர்பானவற்றில் சற்றே கற்பனையைத் தெளித்துவிட்டால் உணர்வுப்பூர்வமான ஒரு யோக நிலையை எய்துவிட முடியும். மெல்ல மேக மூட்டம் சூழ்ந்துவிடும். எதுவும் மெதுவாகச் செல்வதாக தோற்றமளிக்கும். அமைதி கூடிப்போகும், அனைவரிடமும் அன்பு செலுத்தும் பாங்கு வாய்க்கும். வாழ்வே மாயம் பாடல் மனதிற்குள் ஹம்மிங் ஆகும்.

கற்பனைகளை உதறி நுரையீரல் சிறப்பு மருத்துவரிடம் நேரம் பெற்று, சந்தித்து அறிகுறிகளெல்லாம் சொல்லி மனக்கோட்டைக்கு என்ன வர்ணம் பூசுவார் என ஆவலோடு காத்திருக்க, எக்ஸ்ரே, ஈசிஜி, ப்ளெட் டெஸ்ட் எடுத்துவிட்டு, நுரையீரல் குறித்து எதுவுமே பேசாமல், நீங்கள் அமர்ந்திருக்கும், அடிக்கடி நிற்கும் நிலைகளால் இப்படி வலி ஏற்பட்டிருக்கலாம். சரியாகிவிடும், ரொம்பவும் தொந்தரவு இருந்தால், தேவைப்படும் எனின் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவரை அணுகுமாறு சொல்லி அனுப்பிவிட்டார்.

அவ்வப்போது உரையாடும் மருத்துவரை அழைத்து வலி, கூகுள் தேடல், சிறப்பு மருத்துவர், பல்பு ஆகிய கதைகளைக் கூறினேன். கடைசியா ஒரு கேள்வி கேட்டுக்கிறேன் என இடைமறிக்காமல் எல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, இறுதியாக அந்த இடத்தில்தான் நுரையீரல் இருக்கிறதென யார் சொன்னது!?” எனக் கேட்டார். அவர் கேட்ட தொணியே கழுவி ஊத்துவதன் ஒருவகையெனப் புரிந்துவிட்டதால், அதையும் கூகுளிலேயே கண்டெடுத்தது குறித்து மூச்சு விடவில்லை. அறியாமை ஒரு பாவம் என்றால் அரைகுறையாய் அறிந்துகொண்டிருப்பது பெரும்பாவம். அரைகுறை அறிதலை வைத்துக் கொண்டு, உடல் தொடர்பாக நாம் உருவாக்கிக்கொள்ளும் கற்பனைத் திறனுக்குத்தான் முதன்முதலில் வைத்தியம் பார்க்க வேண்டும் என்பது இங்கிருக்கும் எண்ணற்றவர்களின் அனுபவத் தெளிவு.

ஒன்னரை வருடங்களுக்கு முன்பு ஒருமுறை மூளை, உடல் மீது வைத்திருக்கும் பெருங்காதலை உணரும் சூழல் வாய்த்தது.  இலங்கையில் பதினோரு நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு வீட்டையடைகிறேன். பயணத்தில் பலவித உணவுகள் கிடைத்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல், நாவில் உறைந்து கிடக்கும் வீட்டுச் சாப்பாட்டின் ருசி அலைக்கழிக்கவே செய்யும். வீட்டில் நிறைய உண்டு, நிறைவாய் உறங்கி விழித்ததிலிருந்து, இடது பக்க அடி வயிற்றில் ஏதோ ஒரு இம்சை மின்னல் தொடங்கியிருந்தது.
சுளுக்கிக் கொண்டது போல் இனம் புரியா வலி. வலி மின்னல் போல் உயிரெங்கும் சுழற்றியடிக்கிறது. அவசரத்திற்கு மருத்துவத்தோடு தொடர்பில் இருக்கும் நண்பர்களிடம் விசாரித்தேன். சிறுநீரகக்கல், குடல் இறக்கம், நோய்த்தொற்று என ஒவ்வொருவரின் சந்தேகமும் கூடுதல் அச்சத்தைப் புகட்டின. எப்படியோ அந்த நாளைக் கடந்திருந்தேன். மின்னல் போல் வலி வெட்டி வெட்டி இழுத்தபடியே இருந்தது. தொடர்ந்து எல்லா நேரமும் இருக்கும் வலியல்ல. விட்டுவிட்டு தாக்கும் வித்தியாசமான வலி.

இரவுக் குளியலில், இடது கையை, வலது கையால் தேய்க்கும்போதுதான் வலியையும் வலியின்மையும் பிரித்தறிந்தேன். ஆராய்ந்தபோது இடது மணிக்கட்டு அருகே, கடிகாரம் கட்டும் இடத்தைத் தொட்டால் மட்டுமே வலித்தது. தொட்டால் என்பதில் அந்த இடத்தில் நீர், காற்று, வெப்பம், முழுக்கை சட்டைத் துணி, கடிகாரம், போர்வை, கைக்குட்டை நுனி உரசல் என எது உணரப்பட்டாலும் வயிற்றில் வலி மின்னலடித்தது. ஆராய்ச்சியின் விளைவாய் மனது கொஞ்சம் தெளிவடைந்தது. மருத்துவ நண்பரிடம் சென்றேன். வயிற்றில் இருக்கும் வலியை மட்டும் சொன்னேன். அதையொட்டிய கேள்விகளுக்குள் அவரால் கண்டறிய முடியவில்லை. கையில் ஒரு புள்ளியைத் தொட்டால் மட்டும் வலி தெறிப்பதைத் தெரிவித்தேன். என்ன நடந்தது என்றார்.

சில வாரங்கள் முன்புதான் புதிய கைக்கடிகாரம் வாங்கியிருந்தேன். சற்று தளர்வாக இருந்த அந்தக் கடிகாரத்தின் டயல் பகுதி மணிக்கட்டின்  வெளிப்புறத்தில் தங்கிவிடும். இலங்கைப் பயணத்தின் கடைசி நாள் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிய இடை நிற்காக நீள் இரவுப் பயணம். மட்டக்களப்பில் வண்டியின் பின் இருக்கையில் படுத்தவன் ஏழெட்டு மணி நேரங்களுக்குப் பிறகு கொழும்பில் தான் விழித்திருந்தேன். தளர்வாய் இருந்த கடிகாரத்தின் டயல் மணிக்கட்டின் பக்கவாட்டில் அந்தப் பயணம் முழுக்க அழுந்தியிருந்திருக்க வேண்டும் என்பதைக் கூறியவுடன், அந்த பாதிக்கப்பட்ட பகுதியை மிகச் சரியாக கண்டு பிடித்து வட்டமிட்டார். அந்த இடத்தில் வட்டமிட்டால் வலியை வட்டமாக உணர்ந்தேன். மேலிருந்து, குறுக்கே, கீழிருந்து என எவ்விதம் கோடு இழுக்கிறோமோ, அதேபோல் வலியும் உணர்ந்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சரியம்தான். இதற்கொன்றும் வைத்தியம் தேவையில்லை சரியாகிவிடும் என்றார். ஆச்சரியத்தோடும், வியப்போடும், கேள்விகளோடும் அவரை ஏறிட்டேன்.

குறிப்பிட்ட அந்த இடத்தில் டயல் பகுதி மணிக்கணக்கில் அழுந்தியதால் அந்த இடத்தின் நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கும். ஆகவே மூளை அந்த இடத்தில் மீண்டும் எதுவும் படாமல் இருக்கவேண்டுமென வயிற்றுக்குள் ஒரு மாய வலியை உணர்த்தி எச்சரிக்கை செய்கிறது. வலி உணரப்படும் இடத்தில் எதும் பிரச்சனையில்லை, சில நாட்களில்  வலி இல்லாது போய்விடும்  கவலைப்படாது போகலாம் என அறிவுறுத்தினார். அவ்விதமே சரியாகிப்போனது.

ஒருவேளை அந்த மணிக்கட்டுப் பகுதியைத் தீண்டினால்தான் வலி வருகிறது என்பதை நான் கண்டறியாமல் போயிருந்திருந்தால், பெரிய அளவிலான சோதனைகள் செய்திருக்க வேண்டியதை மறுப்பதற்கில்லை. எதுவென்றே கண்டுபிடிக்கப்படாமல் எப்படியோ சரியாகிவிட்டது என்றும் ஒரு கட்டத்தில் நிறைவடைந்திருக்கும் சாத்தியமுமுண்டு.

அடிவயிற்றில் வலித்த அந்த பொய் மின்னல் வலியை மூளை இதயம் இருக்கும் இடத்தில் வழங்காமல் இருந்து ஆசிர்வதித்தற்காக கோடானு கோடி நன்றிகளைச் சொல்லுங்கள் என அந்த மருத்துவர் சொன்னபோது கற்பனைகளின் விபரீதம் மின்னல் போல் வெட்டி மறைந்தது.


ட்டுவதை ஒரு விழியென வகைப்படுத்தினால், ஈட்டியதை அல்லது இருப்பதை தக்கவைத்தல் மறு விழியென வகைப்படுத்தலாம். இங்கே ஈட்டுவதிலும், தக்க வைத்தலிலும் சிலருக்கு பொருள் முதன்மைப்படும், சிலருக்கு பெயர், புகழ் இன்னும் சிலருக்கு உடல் நலம் முதன்மைப் படும். பொருள், புகழ், பெயரில் பெரும்பாலும் புறக்காரணிகள் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் உடல் நலத்தில் உட்காரணிகளும், தனிப்பட்ட செயல்பாடுகளுமே ஆதிக்கம் செலுத்தும்.

எதுவுமே நன்றாக இருக்கும்வரை, நமக்கு இடைஞ்சலோ, இழப்புகளோ தராதவரை அதனுடைய நலம், பாதுகாப்பு குறித்து அச்சமும் கவனமும் கொள்வதில்லை. அதற்கான காரணம்அதுதான் நல்லாருக்கே!” என்பதுதான். நம் அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு கருவிக்கும், நம் உடலில் இருக்கும் உறுப்புகளுக்கும் இது சாலப் பொருந்தும்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் படைக்கப்பட்ட காரணமும், அவற்றை மூளை இயக்கும் விதமும் எத்தனை அழகிய வியப்பென்பது அதை உற்று நோக்குவோருக்கு மட்டுமே புரியும். அந்தப் புரிதல் ஏற்படும்போது நமக்காக இயங்கும் ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயல்போடு, கொடூரமான சிரமங்கள் தராமல் கையாளும் நிதானமும் பக்குவமும் வந்துவிடும்.

புகைத்தல், மது, உறக்கம் தொலைத்தல், அதிகமாக உண்ணுதல், பொருந்தா உணவுகளை உண்ணுதல் உள்ளிட்ட ஒவ்வாத செயல்கள் மூலம் உடலின் பல அங்கங்களை, உறுப்புகளை வதைப்போரிடம் உங்களுக்காக உழைக்கும் உறுப்புகளுக்கு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” எனும் வினாவைத் தொடுத்தால் என்ன பதில் தருவார்கள்?.

-

நம்தோழி ஜூன் இதழில் வெளியான கட்டுரை
.


May 15, 2017

தண்ணீரின் நியாயங்கள்

உறக்கம் கலைகிறது. தண்ணீர் லாரி வந்து நின்ற அந்த ஓசையில்தான் உறக்கம் கலைந்திருக்க வேண்டும். பேச்சுக்குரல்களையும் பரபரப்பையும் உணர முடிகிறது. எல்லாம் கனவில் நிகழ்வது போல் தெரிந்தது. மீண்டும் உறக்கம் தழுவுகிறது, திடீரென பெருமழை கொட்டும் சப்தம். அருவியின் இரைச்சலுக்கு நிகரானதொரு ஓசை. திடுக்கிட்டு எழுந்து, திறந்திருக்கும் சன்னல் வழியே ஆவலோடு பார்க்கிறேன். தண்ணீர் லாரி நின்ற சப்தமும், பேச்சுக்குரல்களும் நினைவிற்கு வருகின்றன. அந்த அருவி ஓசை, அண்டை வீட்டு தரைத்தள தண்ணீர் தொட்டியில் கொட்டும் நீரின் ஓசையெனத் தெளிவாகிறது. இந்தத் தண்ணீர் எங்கிருந்து வந்திருக்குமெனும் யோசனை உறக்கத்தைத் துண்டிக்கிறது.

இப்போது இருக்கும் வீட்டிற்கு குடி வந்த புதிதில், ‘கோடையில் தண்ணீர் வாங்க வேண்டியிருக்கும்என்று சொன்னபோது காசுக்கு தண்ணி வாங்கிப் புழங்க வேண்டிய நிலையை மிகமிகக் கசப்பாகவே ஏற்றுக்கொண்டதை  மறுப்பதற்கில்லை. ஆனால், காலம் வெகு வேகமாய் அந்தக் கசப்பைப்  புகட்டியது.

ஊரில் விளைந்து வெட்டி எடுப்பதற்கு ஈரமின்றி வாடிக் கிடக்கும் மஞ்சள் வயல் மனதில் நிரம்புகிறது. ஒரு வழியாய் தம்கட்டி விளைய வைத்ததை மண்ணிலிருந்து வெட்டியெடுக்க தண்ணீர் போதவில்லை. வயலில் லாரித் தண்ணீர் விட்டேனும், வெட்டியெடுக்க வேண்டும் என ஊரிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்னது நினைவுக்கு வருகிறது. நகரத்தில் லாரி தண்ணீர் வாங்கிப் புழங்கவேண்டி வந்ததையே கசப்பாக எதிர்கொண்டவனுக்கு, விவசாய நிலத்திற்கு லாரித் தண்ணீர் என்பதை எவ்வகையிலும் ஜீரணிக்கவே முடியாது. நள்ளிரவுக் குளுமையையும் தாண்டி கூடுதலாய் வியர்க்கிறது. உறக்கம் முழுக்கத் தொலைந்து போகிறது.

அணையில், ஆற்றில், ஏரி குளங்களில் என எங்கும் நீரில்லாத கடுங்கோடை இது. நகர்ப்புற வசிப்பிட மற்றும் தொழில்களுக்கான நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய அவசரமாய் செய்வது, அக்கம் பக்கமிருக்கும் தண்ணீரை லாரிகள் வாயிலாக கொண்டு வந்துவிடுவது. விவசாயத்தை விட நீரை விற்பனை செய்வது புத்திசாலித்தனமானதொரு செயலாக சில விவசாயிகளால் பின்பற்றப்படுகிறது. அது குடியிருப்புகளுக்கு மட்டுமல்லாது, அநியாயமாய் நீர் வீணாகும் தொழிற்சாலைகளாக இருந்தாலும், நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?.

நூற்றாண்டுகள் காணாத வறட்சிஎன யார் யாரோ ஏதேதோ அடிப்படையில் தரவுகளைக் கொண்டு விளக்கங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். நூறாண்டுகள் என்பதுள்ளிட்ட  தரவுகளைப் பேசிப் பேசி என்ன செய்யப் போகிறோம்? அம்மாதிரியான தரவுகளை வைத்துக் கொண்டு மேகக் கூட்டத்திடம் எதுவும் சமரசம் பேசவா முடியும்? கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடக்கும் நிலம் பொட்டலாய்க் கிடக்க, தன்னந்தனியாய் இருக்கும் வீட்டோரத்தில் ஓரிரு தென்னைகளும் வேம்பும் மட்டும் மிஞ்சியிருக்கின்றன. நாள்தோறும் இரவுகளில் பளிச்சென நட்சத்திரம் பூத்திருக்கும் வானத்தை ஆற்றாமையும், இயலாமையும் இனியென்ன செய்வதுஎன்கிற பயமேறிய கேள்வியுமாய் வெறித்துப் பார்க்கும் விவசாயி எவரையேனும் கண்டதுண்டா? அவரிடம் இது இந்த யுகம் காணாத வறட்சிஎனும் தரவுகளை வைத்துக் கொண்டு என்ன சமாதானம் பேசிவிட முடியும்.

நூற்றாண்டுகள் காணாத வறட்சிஎன்பதைவிட, ஒவ்வொருவருக்கும் தெளிவாகப் புரிந்திருப்பது, ‘இது தம் வாழ்நாளில் கண்டிராத வறட்சிஎன்பதுதான். விவசாயம் என்பதைக் கைவிட்டு பல மாதங்கள் ஆகின்றன. நிலமெங்கும் வெயில் மட்டுமே விதையாய் விழுந்து முளைத்துக் கொண்டேயிருக்கிறது. கிணறு தூர்ந்து, திணறித் திணறி உமிழ்ந்து கொண்டிருந்த ஆழ்துளைக் குழாய்க் கிணறும் ’என் மடியில் ஒன்றுமில்லைஎன உதறி விட்டுவிட்டது. வீட்டைச் சுற்றியிலிருக்கும் செடி கொடிகளுக்கும் தண்ணீர் இல்லை. கட்டுத்தரையில் இருக்கும் எருமைகளுக்கு தீவனம் குறைந்து கொண்டேயிருக்கும் ஆபத்தைவிட, அவைகளுக்கான குடிநீருக்கும் அலைய வேண்டிய அவலம்.

ஆங்காங்கே வறட்சியில் வாடும் கரும்பினை வெட்டச் சொல்லி சர்க்கரை ஆலைகளை விவசாயிகள் மன்றாட, வெட்டப்படும் கரும்பின் நுனிப்  பகுதியானகோந்தாழைக்கு போட்டியோ போட்டி. பொதுவாக இந்தக் கோந்தாழை துளியும் சீண்டப்படாதது. சீண்டப்படாமல் கிடந்த ஒன்றிற்கு பல மைல்கள் தூரம் ஓடி, கட்டு பத்து ரூபாய், பதினைந்து ரூபாய் எனக் கொள்முதல் செய்து எடுத்து வந்து, தம்மிடம் இருக்கும் எருமை, மாடுகளை காப்பாற்றியே ஆக வேண்டிய நிர்பந்தம்.

கொஞ்சம் காசும், நம்பிக்கையும் இருப்பவர்கள், தம் நிலத்தில் புதிது புதிதாய் நீர் தேடி ஆழ்துளைக் கிணறு தோண்டுகிறார்கள். ‘இந்த இடத்தில் இத்தனை அடி ஆழத்தில் நீர் கிடைக்கும்என்கிற உத்தரவாதம் எதுவும் கிடையாது. தேவை மிகுந்துவிடின், எதன்மீதும் நம்பிக்கை வைக்கத் துணிந்து விடுகிறோம். இருக்கும் கொஞ்சம் தென்னைகளைக் காப்பாற்ற வேண்டி அரை ஏக்கர் நிலப்பரப்பிற்குள் போடப்பட்ட இரண்டு ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளிலும் நீரின் சுவடுகளைக் கூட கண்டறிய முடியாதவர்... ஏற்கனவே இருக்கும் ஆழ்துளைக் குழாய்க் கிணற்றை ஆழப்படுத்தும் முயற்சியில், கடைந்தெடுக்கும் பகுதி உள்ளே சிக்கிக் கொண்டதால், இருந்த ஒரே ஆழ்துளைக் குழாய்க் கிணற்றையும் இழந்தவர்... ஆயிரத்து எழுநூறு  அடிகள் ஆழம் வரை கிணறு தோண்டியதில் கடல் நீருக்கு நிகரானதொரு உப்புநீரை அடைந்தவர்... இப்படி தோல்வியின் வடுக்கள் பதிந்த மனிதர்களால் நிரம்பியிருக்கின்றன நம் கிராமங்கள்.

குடிக்கவும் தண்ணீர் இல்லை எனும் இக்கட்டு நேர்வதுபோல், வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் ஒவ்வொருவருக்கும் முடிச்சு விழுகிறது. வாழ்க்கையின் எத்தகைய நிலையை எடுத்துக் கொண்டாலும், அது விரும்பிய வண்ணம், பழகிய வண்ணம் இடையூறுகள் ஏதுமின்றி அமைந்துவிடுதலே அனைவரின் விருப்பமும். அந்த விருப்பத்தின் மிக முக்கியக் காரணம், அது விருப்பம் என்பதையும்விட பழக்கம் என்பதே முதன்மையானது. ஏற்கனவே பழகிப்போன ஒன்றிலிருந்து புரண்டுவிடுதல் என்பது எவ்வகையிலும் எளிதானதல்ல. எல்லாம் அதனதன் போக்கில் நகர்ந்து கொண்டிருக்கும் வரைக்கும், எல்லாமுமே இதமாக இருக்கும். ஏதோ ஒரு புள்ளியில் முடிச்சு விழும்போதோ, தேங்கும்போதோ, அது முன்வைக்கும் புதிர்தான் நமக்கிருக்கும் பெரும் பிரச்சனை.

இப்படியான தருணங்களில் புரள்வதை விரும்பி ஏற்பது ஒருவகை, தன் மேல் திணிக்கப்படுவதை உள்வாங்குவது இன்னொரு வகை. இதில் இரண்டாம் வகையை எதிர்கொள்ளும்போது ஏற்படும் அச்சம் கலந்த பதற்றமும், அலுப்பும், திடுக்கிடலும்தான் அரக்கத்தனமாக நம்மை வதைக்கத் துவங்கும்சுருண்டு மிரளும் புள்ளியிலிருந்துஅடுத்து என்னஎனும் கேள்வியோடு தவிக்கையில் ஏற்படும் உளப்போராட்டம் சாதாரணமானதல்ல.

அந்தப் புள்ளியில் ஏற்படும் தவிப்பிற்கான மிக முக்கியக் காரணம் அதுவரைக்கும் கடந்த காலம் நமக்குள் படிய வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் கருதியிருப்பவை. ‘இவையெல்லாம் இப்படித்தான்என நாமாக நினைத்துக் கொள்வதை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை. எல்லாச் சூழல்களில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்அடுத்தது என்ன!?” எனும் கேள்விக்கு பல பதில்களை நாம் தயாரித்து வைத்துக்கொண்டே காத்திருக்க வேண்டும்.



இங்கே நீரின்மை மட்டும்தான் பிரச்சனையாஎன்ற கேள்விக்கு ஆம்எனும் பதில் முழுமையானதாக இருக்க முடியாது. எதையெதையோ கணிக்கத் தெரிந்த நமக்கு, இப்படியானதொரு வறட்சி வரப்போகிறது என கணிக்கத் தெரியவில்லை அல்லது கணித்ததை மக்களிடம் விழிப்புணர்வாக ஏற்படுத்த முடியவில்லை. வந்தபின் எந்த அறிவுரையும், தரவுகளும் எரிச்சலைத்தான் தரும். வரும்முன் காப்போம் என்பதில் தொடர்ந்து பிழை நிகழ்கிறது.

ஒருவகையில் இம்மாதிரியான வறட்சியை, நிலத்திற்கான ஓய்வென்று புரிந்து கொள்தல் நலம். சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் முறைப்படுத்தல்கள் இருந்திருந்தால், இந்த வறட்சியை எதிர்கொள்ள சற்று முன்னேற்பாடாய் இருந்திருக்க முடியும். சில விவசாய பயிரிடல்களை கை விட்டிருந்திருந்தால், இப்போது இவ்வளவு அழிவுகளைச் சந்திக்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்காது. ‘எப்போதும் ஒரே மாதிரியான பயிர்களைத்தான் பயிரிடுவேன்எனும் பிடிவாதம், இம்மாதிரியான வறட்சிக் காலத்தில் நம்மை வாரிச் சுருட்டி மிதித்துவிடும். ’எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் நீரைப் பயன்படுத்துவேன்எனும் வீம்பில் சிக்கல் நமக்கு மட்டுமல்ல. அந்த நீருக்கு தாகத்தோடு காத்திருக்கும் இன்னொரு உயிருக்குச்  செய்யும் வஞ்சனையும் கூட.

லாரியில் நிரம்பி, தளும்பித் தளும்பி வரும் தண்ணீருக்காக நகர்புறத்தில் வசிப்பவர்கள் காத்திருக்கிறார்கள். தம்மை அண்டியிருக்கும் கால்நடைகளையும், செடி, கொடி, மரங்களையும் காப்பாற்றத் தவிக்கும் விவசாயி இந்தத் தண்ணீரைத் தரமுடியாமல் மனப்போராட்டம் நடத்துகிறார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிகழும் நிலை வந்து வெகு காலமாகிவிட்டது. இதில் யார் வெல்ல, யார் தோற்க!? ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவையின் அடிப்படையிலான நியாயங்களுண்டு.

காசு கொடுத்தால் தண்ணீர் லாரிக்கு டீசல் கிடைக்கலாம், ஆனால் தண்ணீருக்கு எங்கே செல்வது!?. லாரித் தண்ணீர் என்பது நேர்மையில்லா ஒரு சமன்பாடு. அந்தந்த நிலத்து மனிதர்களுக்கானா நீரையும் உணவையும் பணத்தால் அடித்துப் பிடுங்குவது நியாயமான செயலாகுமா!? ஒருவகையில் அங்கிருந்த மனிதர்களெல்லாம் நகரத்துக்கு நகர்ந்து விட்டதால், நீரும் லாரிகளில் நகர்ந்து வர வேண்டியிருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமோ?

-

நம்தோழி மே வெளியான கட்டுரை


May 2, 2017

வேகத்தின் ருசி

து நான்கு வழிச்சாலைகள் இல்லாத காலம். எதிரெதிரே வாகனங்கள் சீறியபடியே இருக்கும், சாலையோரங்களில் மரங்கள் அடர்ந்திருக்கும். பயணங்கள் எதுவும் பெரிய குறையாகத் தெரியவில்லை. காலம் வளர்ச்சியென்ற வடிவில் சாலைகளை விரிவாக்கம் செய்யப் பணித்தது. அத்தனை மரங்களும் வெட்டப்பட்டன. கண்ணுக்கெட்டும் வரை நேர்கோடாய், அலை மடிப்புகளோடு அழகிய வடிவம் கொண்டன சாலைகள். இடையில் மட்டும் அரளிச்செடிகள் புகை படிந்து. செல்லும் வழியெங்கும் இருக்கும் ஊர்களைப் புறக்கணித்து புறவழிச் சாலைகள். அந்தச் சாலைகள் மீது சொல்லொணா கவர்ச்சியொன்றுன்று. செல்லும் இடத்தை விரைந்து அடைய யாருக்குத்தான் பிடிக்காது. ஆனாலும் நமக்கு இப்படியான புறவழிச்சாலைகள் வராத காலம்வரை, ஊர்களினூடாகப் பயணித்தது குறித்து புகார்கள் இல்லை, சலிப்புகள் இல்லை.

இப்போது அப்படியொரு பயணம் வாய்க்கும்போது, புறவழிச் சாலையில் விரையும் பேருந்து எங்கேனும் ஊர்ப் பக்கம் நுழைந்தால் மிகுந்த கோபம் வருகிறது. புறப்பட்ட இடத்திலிருந்து செல்லுமிடத்திற்கு உடனே செல்ல வேண்டுமென்கிற வேட்கை ஏற்படுகிறது. சில நேரங்களில் அது வெளியில் பகிர முடியா வெறி அல்லது அவஸ்தை. ‘அது எதுவாக இருந்தால் என்ன? எனக்கு வேகமாகப் போகவேண்டும்என்கின்ற தவிப்பு அது. என்றைக்கு நெகுநெகுவென, மிதப்பது போன்ற உணர்வு தரும் சாலையில் பயணிக்க ஆரம்பித்தோமோ, அப்போது முதல் விரிவுபடுத்தப்பட்ட  சாலைகளென்றாலே வேகம் அப்பிக்கொண்டது.

இந்த வேகம் வெறும் பயணித்திற்கானதாக மட்டுமில்லை. ஆழ்ந்த உளவியல் ரீதியானதும்கூட. ஒருமுறை வேகத்தின் ருசி உணர்கின்றவர்களைஇனியெல்லாம் வேகம் என்பதே தம் விருப்பமாய் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. வேகம் குறித்துப் பேசுகையில் வேகம் எனும் சொல்லை தனக்குள் அடைத்துக்கொண்டு கண்ணியமாய் வேடிக்கை பார்க்கும் விவேகம் என்ற சொல் குறித்துச் சிந்திக்கத் தோன்றுகிறது. இவ்விரண்டு சொற்களுக்கும் எப்படி ஒரு பிணைப்பு ஏற்பட்டிருக்கும்? எதிலிருந்து எது வந்திருக்கும்? ஒரு எழுத்தில் வேறுபடும் இவ்விரு சொற்களும் எப்படி எதிரெதிர் முரண்களாய் வாழ்கின்றன என்றெல்லாம் யோசிக்காமல் இல்லை.



மீபத்தில் ஒரு கல்லூரியில் முப்பெரும் விழா. நையாண்டியும், கருத்துச் செறிவும் கலந்த பாட்டரங்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது. உதவியாய் இரண்டு இசைக் கலைஞர்கள். அதில் ஒருவர் பார்வைத் திறனற்றவர்நிகழ்வின் இடையே ஒரு பேராசிரியர் பாடுவதற்காக அழைக்கப்படுகிறார். அந்த இடைவெளியில் இரண்டு பாடகர்களும், இசைக்கலைஞர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒலி வாங்கியை கையில் ஏந்திவிடியுது... பொழுது விடியுதுஎனும் பாடலைப் பாடத் துவங்கிய பேராசிரியர் தன் வரிகளுக்கான இசை கோர்க்கப்படவில்லை என்பதை உணர்ந்து அடுத்த வரிக்கு நகரத் தடுமாறுகிறார். சட்டென இசைக் கலைஞர்களைப் பார்த்தவாறு மீண்டும் அதே வரியைப் பாடுகிறார். பார்வையற்ற கலைஞருக்கு இவர் பார்ப்பது, எதிர்பார்ப்பது தெரிய நியாயமில்லை.

சூழலை உணர்ந்த மற்றொரு பாடகர், சுதாரித்து பார்வையற்ற இசைக்கலைஞரின் முதுகைத் தொடுகிறார். அது நீ இசைக்க வேண்டும்என்பதற்கான உத்தரவு. தன்னிலை மீண்ட அந்தக் கலைஞர், இசைக்கும் குச்சிகளை ஓங்குகிறார். அப்பொழுது பாடல் வரி இடையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஓங்கிய குச்சிகளை அடிக்காமல், காற்றிலேயே வைத்தபடி வரியின் நிறைவுக்காகக் காத்திருக்கிறார். வரி நிறைகிறது. ஒரு இடைவெளி கிடைக்கிறது. அடுத்த வரியின் முதற்சொல் ஒலிக்கையில் முன் குச்சிகளை நளினமாய் இறக்குகிறார். அதிரும் இசை இணைந்து பயணிக்கிறது. தருணம் இனிக்கிறது. இந்தக் காட்சியில் அந்த இசைக் கலைஞர் குச்சிகளை ஓங்கியது வேகம் என்றால், வரி நிறைவுறும் வரைக் காத்திருந்தது விவேகம் என்றாகிறது.

ந்த யுகத்தின் மாபெரும் அறப்போராய் நிகழ்ந்தேறிய மாணவர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டம்கூட விவேகத்தின் அடையாளமென்றே கருதத் தோன்றுகிறது. அந்தப் போராட்டமும்கூட நம் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனும் கதவு தட்டல்தான். திறக்கப்படுவதற்காக இரண்டு வழிகளை மேற்கொள்ளலாம். பதட்டமாகவோ, நிதானமாகவோ தட்டுவது ஒரு வழி. எது குறித்தும் பிரஞ்னையற்று உடைத்துத் திறத்தல் இன்னொரு வழி. இவற்றில் எதில் வேகம், எதில் விவேகம் அடங்கிய வேகம்  என்பதை நாம் அறிவோம். அந்தப் போராட்டத்தின் முடிவு கசப்பானதாய் மாற்றப்பட்டதில் அரசியல் இருந்தாலும் அதுவும் வேகம் என்பதின் ஒரு வடிவமே!
 
நீண்டு கொண்டிருந்த போராட்டத்தின் நிறைவுக் கணங்களை வேகமாய் அல்லது விவேகமாய்க் கையாளும் பொறுப்பு போராட்டக்காரர்களுக்கும், காவல்துறைக்கும் வழங்கப்பட்டது. அதை வேகமாய்க் கையாண்டவர்கள் அதையொரு கறுப்பு தினமாய் மாற்றினர். போராட்ட முடிவை விவேகமாய்க் கையாண்ட காவல்துறை இணை ஆணையர் ஒருவர், தம் செயலை ஒரு முன்னுதாரணமாக அமைத்து தன்னை கதாநாயகனாய் மாற்றிக் கொண்டார்.

தீக்குச்சி உரசுகையில் உருவாகும் நெருப்புக்கு பெயரிடச் சொன்னால், நான் அதற்குவேகம்என்று பெயரிடுவேன். அழுத்தி அடைப்பட்டுக் கிடந்த வெப்ப ஆற்றலின் விடுதலை அது. விடுதலை இப்படியானது என்பதை உருவகிக்கும் செயல் அது. ஆனால் அதை வேகமாகவே பயன்படுத்துவதற்கும், விவேகமாகப் பயன்படுத்துவதற்கும் வேறுபாடுகள் உண்டு. இலக்கின்றி வேகமாய் இயங்கும் நெருப்புச் சொட்டினை, எதன் மீதேனும் தூக்கிப்போட்டால், அது தன் வேகத்தைப் பல மடங்கு பெருக்கி எதையும் அழிக்கும் வல்லமை கொண்டதாய் மாறிப்போகிறது. பாரதியின் அக்னிக் குஞ்சுக்கு பெருங்காடொன்றினை வெந்து தணிக்கச் செல்லும் வல்லமை இருந்ததுதானே. ஆற்றலும் வேகமும் ஒருங்கே இருக்கும் நெருப்பை ஒரு ஒழுங்குக்குள் ஆட்படுத்துவதை விவேகமெனக் கருதத் தோன்றுகிறது.

அதை அடுப்பின் வழி செலுத்தி அதன் மேல் கனை வைத்தால் அது சமைக்க உதவும் நெருப்பு. இயந்திரங்களின் வடிவத்திற்குள், பொருந்தும் வழிகளினூடாக செலுத்தினால் மாபெரும் ஆற்றல் கிட்டும். நீரில் மிதக்கும் கப்பலின் இயந்திரத்திற்குள்ளிருப்பதாக மாற்றினால்நீந்திக் கடல் கடக்கவும், விமானத்தின் இயந்திரத்திற்குள்ளிருப்பதாக மாற்றினால் . வானமேகி எல்லைகள் கடந்து பறக்கவுமான ஆற்றல் அது. அதையே ராக்கெட் இயந்திரத்திற்குள் செலுத்தினால் கோள்கள் தேடும் ஒரு பேராற்றல்.

இதோ காட்டாறு என்பதை வேகமென உருவகப்படுத்துகையில் அதன் வேகம் மிரட்சியூட்டுகிறதுஅதே காட்டாற்றை அணை கட்டித் தேக்கும்போது தன்னை விவேகமுடையதாய் வடிவமைத்துக் கொள்கிறது. வேகமாய் நகரும் நீரை, தடுப்பு ஏற்படுத்துகையில் இயல்பாகவே அழுத்தம் கூடுகிறது. அழுத்தம் கூடிய  நீரை ஒரு பாதை வழியாய்ச் செலுத்தி சக்கரத்தைச் சுழல விட்டால், அங்கிருந்து கிடைப்பதுபசுமை மின் சக்தி’. அணையிருந்து மதகுகளின் வழி செலுத்தி நீர்மின் திட்டங்களுக்கும், கால்வாய் வழியே பாசனங்களுக்கும் பயன்படுத்தும் செயலுக்கு பெயர்தானே விவேகம்.

இடை விடாது வீசும் காற்றின் வேகத்திற்கு குறுக்கே, தூண் ஒன்றை நிறுவி அதன் தலையில்  காற்றாடியைப் பொருத்தினால், விவேகமாய் மாற்றப்படும் காற்றில் சுழலும் காற்றாடியிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.

இயற்கையின் வடிவத்திற்குள் மாறாமல் இருப்பவை இன்னும் கோடானு கோடி. குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்க, ஒருபோதும் வேகத்தை விரும்புவதில்லை. தன் வருகைக்காக பனிரெண்டாண்டுகள் காத்திருக்க ஆணையிடுவது அவற்றின் கர்வம் அல்லது அதுதான் இயற்கையின் நியதி.

கருவாகும் ஒரு உயிர் வேகமாய் உலகைக் காண நினைத்தால் அதற்குப் பெயர் குறைப் பிரசவம். அதே உயிர் மிக வேகமாய் உலகைக் காண நினைத்தால் அதற்குப் பெயர் கருச்சிதைவு. கருவொன்று இந்த உலகை நோக்கி வருவதற்கு பத்து மாதங்கள் தேவையென்பது இயற்கையின் நியதி. அதற்கு கோடானு கோடிக் காரணங்கள் இருக்கும். அந்தக் காரணங்களை வேகமென்ற பெயரில் கேள்வி கேட்க இன்னும் அனுமதிகள் வழங்கப்படவில்லை.

வேகத்தைக் காதலிக்கும், நேசிக்கும், யோசிக்கும், யாசிக்கும் எவரொருவரும் மரணம் என்று வரும்போது மட்டும் வேகத்தை விலக்க நினைக்கும் முரண் எவ்வளவு அழகியதொரு தத்துவம். வேகமாய் வாழ்வு முடிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தானே, ஒவ்வொருவரும் காலை நேரங்களில் வேர்க்க விறுவிறுக்க வேகமாக ஓடுகிறோம், நடக்கிறோம். ஒன்று சாலையில் அல்லது மருத்துவமனைகளை நோக்கி என்பது நமக்குப் புரியும் கணம் விவேகம் முளைக்கும் ஒரு புனித கணம்.

ஆங்கிலத்தில்விஎனும் எழுத்து விக்டரி எனும் வெற்றியைக் குறிப்பதாகச் சொல்வதுண்டு. அதை இங்கு பொருத்துவது சரியாக வருமா என்ற சந்தேகம் இருந்தாலும், அழகானதாகப் பொருந்துவதை மறுக்க முடியாது. ‘விஉடன் இணையும் வேகம்விவேகம்என்று கருதப் பிடிக்கிறது. விவேகம் என்பது வேறொன்றுமில்லை. அது வேகத்தைக் கையாளும் ஒரு ஆகச்சிறந்த கலை!

-

நம்தோழி ஏப்ரல் இதழில் வெளியான கட்டுரை

-


Apr 13, 2017

கர்வம் எனும் வெங்காயம்

தொலைவிலுள்ள மனிதர்களை கவல் தொழில்நுட்ப யுகம் மிக எளிதாய் அருகில் நகர்த்துவதற்கு நிகராக, ஒரே வீட்டிற்குள் இருக்கும் மனிதர்களையும் தொலைவில் நிறுத்தி வேடிக்கை பார்க்கச் செய்திருக்கிறது. இதுகுறித்த பேச்சுகள், விவாதங்கள்கூட திகட்ட ஆரம்பித்து, தேய்வழக்காக மாறிக் கொண்டிருக்கிறதென்றே கருதுகிறேன். இவை யாவற்றையும் கடந்து, இந்த மனித சமூகம் உறவுகள் மேல் கொண்டிருக்கும் ப்ரியம் வெவ்வேறு பரிணாமங்களை அடைவதையும் மறுக்க முடியாது.

தம் பிள்ளைகள் மீது அதீதக் கவனமும், பிரியமும் பகிரும் பெற்றோர்களின் தலைமுறைக் காலம்என்று இந்தத் தலைமுறையை அழைக்கலாம். எப்போது இருந்ததையும்விட பிள்ளைகளுக்காக கூடுதல் திட்டமிடல், கூடுதலாய் வளைந்து கொடுத்தல், அவர்களுக்காக செயற்கரிய தியாகங்களை மேற்கொள்ளல் என நெகிழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். தம் ஊரில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வரும் பெற்றோர்கள் கூட, பிள்ளைகளின் பள்ளி மேல்நிலைக் கல்வி இறுதியாண்டிற்கு, எல்லாவற்றையும் சமரசம் செய்து கொண்டு பிள்ளைகளின் வசதிக்காக, பள்ளிகளுக்கு அருகில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் வெறுமைகளையும் தனிமைகளையும் மென்று தின்றபடி நாட்களைக் கடத்துவதை ஆங்காங்கே காண முடிகிறது. இதுபோல் ஆயிரமாயிரம் வடிவங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக தம்மை வளைத்து நெளித்து இணங்கிப் போவதை பேரன்பின் ஒரு வடிவமாகவும், கடமையின் அடையாளமாகவும்

இம்மாதிரியான செயல்கள் குறித்த ஒரு விவாதம் வந்தபோது, ’இந்தக் காலப் பெற்றோர்கள் தங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாக இதைச் செய்கிறார்கள்என்ற வாதம் முன் வைக்கப்பட்டது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ’பிள்ளைகள் மீதான அதீதப் பிரியம்எதிர்காலத்திற்கான தங்களுக்கான உறுதிப்படுத்தல்என்பதைவிட சக உயிர்களின் மீது கருணையும் பிரியமும் பாவிக்க முற்படும் மனிதர்களின் ஒரு மொழியாகவே என்னால் பார்க்க முடிகிறது.

தம் வாழ்நாள் முழுதும் உடனிருக்க உறவுகள் தேடும் முரண்கள் நிறைந்த ஒரே உயிரினம் மனிதனாகத்தான் இருக்க வேண்டும். ’மனித உறவுகள் போல் விந்தையான வடிவம் கொண்ட ஓர் உறவு இந்த உலகில் வேறெங்கும் இருந்துவிட முடியாதுஎன்ற எண்ணம் எப்போதும் எனக்குள் எழுவதுண்டு. வெவ்வேறு பெயர்களில், பதங்களில் உறவுகள் எப்போதும் தன்னைச் சூழ்ந்திருப்பதை இடைவிடாது விரும்பவே செய்கிறார்கள். அவ் உறவுகளிலிருந்தே தனக்கு மகிழ்ச்சி தருவதாக கருதுகின்றவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களிலிருந்து பேரன்பையும் மகிழ்ச்சியையும் ஈட்டிவிட முனைகின்றனர். அதற்கான பிரயத்தனங்களாய் சில தருணங்களில் நிகழ்த்தும் குளறுபடிகளே மிகப்பெரிய காயத்தையும் வடுக்களையும் அதே மனிதர்களின் மத்தியில் விட்டுச் செல்கின்றன.

கோபங்களைக் கொட்டுவதற்காகவே சில உறவுகளை உடன் வைத்திருக்கிறோமா!?’ எனும் சந்தேகம் அவ்வப்போது தோன்றுவதுண்டு. ந்த உறவுகளுக்குள் நிகழும் உரசல்களுக்குக் கூட தொனி மாற்றி வீசும் ஓரிரு சொற்களும், வாசகங்களுமே காரணமாய் அமைவதைப் பலரும் உணர்ந்திருப்போம். இதில் மிகப் பெரிய சிக்கல், அதைத் தாமதமாக உணர்வதுதான். பயன்படுத்துவது ஒரு வாசகமாக இருந்தால், அதற்கு ஒரே அர்த்தம்தான் இருக்குமென்றில்லை. சொல்லும் நபர்களுக்கும், சூழலுக்கும் ஏற்ப, அதுவே வேறுவேறு அர்த்தங்களைப் பெற்றுவிடுவதை முறுக்க முடியாது.

“உடம்புக்கு எப்படி இருக்கு?” என ஒருவர் மற்றொருவரைப் பார்த்துக் கேட்கும் கேள்விக்கு நேரிடையாக அர்த்தம் தேடினால், அதுவொரு நலம் விசாரிப்புஎன்பது மட்டுமே. அதே வாசகம் சில பல சூழல்களில், அதை வெளிப்படுத்தும், குரல்கள் மற்றும் நபர்களினால் வேறு வம்புக்குரிய அர்த்தம் தரும் சாத்தியம் உண்டு. ஒருவருக்கொருவர் பிரச்சனையில் ஈடுபட்டிருக்கும்போது ஒருவரை உடல்ரீதியாக எச்சரிக்கும் ஒரு வம்பு வழக்காகவும் அந்த “உடம்புக்கு எப்படி இருக்கு?” என்பதைக் கருதலாம். இதுபோல் நாம் மிக இயல்பாக பாவிக்கும் பல சொற்களை சொற்றொடர்களை நபர்களுக்கும் சூழலுக்கும் ஏற்ப வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்துகிறோம். சில நேரங்களில் வேறு தொணி அதில் இருப்பதை நாம் அறிந்தே பயன்படுத்துகிறோம், பல நேரங்களில் அது தெரியாமலே பயன்படுத்துகிறோம்.

வேறொரு தொனியில் அதை நாம் பாவிப்பது நமக்குத் தெரிந்து அவர்களுக்குத் தெரியாதபோதும், நாம் வெகு இயல்பாகச் சொல்வதில் வேறு ஒரு தொனி இருப்பதாக அவர்கள் நினைக்கும்போதும் வீணான பதட்டங்கள் அங்கு உருவாகவே செய்கின்றன. அதிலிருந்துதான் மனதிற்குள் சில முடிச்சுகள் விழுகின்றன. இயல்பாய் இருந்திருக்க வேண்டிய அன்பு, பிரியம், புரிதல், விட்டுக்கொடுத்தல் எல்லாமே அந்த முடிச்சுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றன.

எப்போதுமே முடிச்சிடுவது வெகு எளிது. சில நேரங்களில் நாம் எதோ ஒன்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது, இயல்பான நிகழ்வுகளில் தாமாகவே முடிச்சுகள் விழ வாய்ப்புண்டு. அந்த முடிச்சுகளுக்கு நாம் காரணமே இல்லாதது போலவும் தோன்றும். ஆயினும் முடிச்சுகள் விழுந்தபிறகே நமக்குத் தெரியும்.

நாம் உறவுகளுக்குள் இப்படியான முடிச்சுகள் இடுவதைப் போன்றே, ’ஏன், எதனால், எப்படிஎன எதையும் தீர்மானிக்க முடியாத சிக்கல்கள், இணக்கங்கள் மனித உறவுகளுக்குள் உருவாகுவதை நிறையக் காண முடியும்.



ம்பதுகளின் தொடக்கத்திலிருக்கும் அந்த தாயை, ஒரு மருத்துவமனைக் காத்திருப்பில் சந்திக்க நேர்ந்தது. அவர் வாழ்ந்த அனுபவங்களோடு ஒப்பிட்டால் சட்டென வயதானவர்எனச் சொல்லிவிடலாம். ஆனால் ஐம்பதின் தொடக்கம் என்பது முதுமை எனச் சொல்லிவிட முடியாது. இன்னும் வாழ்வில் எழுதப்பட வேண்டிய அத்தியாயங்கள் இருக்கின்றன என்பதை அவரும் அவரோடு இருக்கும் அனைவரும் அறிந்தே இருக்கின்றனர்.

கண்ணீரின் காய்ந்த தடங்களை ஈரமாக்கவே நிரம்பித் தளும்பிக் கொண்டிருக்கும் விழிகளோடு தனியே காத்திருந்தவரைப் பார்க்கவே கனத்தது. வேறொன்றுமில்லை, ஏதேதோ பெயர் புரியாத விளங்கங்களோடு சொல்லப்பட்டதின் சுருக்கம் என்னவென்றால், அவரின் இரண்டு சிறுநீரங்களும் பாதிக்கப்பட்டதால், உடனடியாக மாற்றுச் சிறுநீரகம் பொருத்தியாக வேண்டிய நிலை.

தம் உடல்நிலை குறித்தும், உடனடியாக சிறுநீரகம் மாற்ற வேண்டியது குறித்தும் சொல்லிவிட்டு, பேச்சைத் தொடர முடியாமல் மௌனமாகப் பொங்க ஆரம்பித்தார். ’சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கலாஎனக் கேட்டபோது இல்லையென மறுத்துவிட்டு, ”கெடைக்காம இருந்தாக்கூட நிம்மதியா இருக்கும்... கெடைக்கிறதுதான் நிம்மதியைத் தொலைக்குதுஎன்றார்.

தேவைகளுக்கும் இங்கு சாத்தியப்படும் உடல் உறுப்பு தானங்களுக்கும் இடையே மிகுந்த இடைவெளி ருக்கும் சூழலில், பிள்ளைகள் இருவரும் அம்மாவின் உயிர் காக்க தங்கள் உயிரிலிருந்து பங்கு கொடுக்க முன் வருகிறார்கள். அதிலும் பிள்ளைகளிடம் நீ நான் எனக் கடும்போட்டி. அதற்கேற்ப இருவருக்கும் இடையே சோதனை முடிவுகளும் சரி சமமாய் அமைகின்றன.

அதுதான் பிள்ளைங்க தர்றாங்களே...அதும் அவங்களே நீ நான்னு போட்டியும் போடுறாங்களே!?” என்ற சமாதானத்தால் அவரை எள்ளளவும் அசைக்க முடியவில்லை. “உங்க குழந்தை தன்னோட ஒடம்புல இருந்து ஒரு உறுப்பை உங்களுக்கு எடுத்துக் கொடுக்கிறதை, உங்களால் ஏத்துக்க முடியுமா!?” என்ற எதிர்க்கேள்வித் தாக்குதலில் நிலை குலைந்து போனேன்.

பெற்றோர்களைப் பொறுத்த அளவில் இந்த அன்பென்பது ஒருவழிப்பாதைதான். தாம் மட்டும் பிள்ளைகளுக்காக உயிரைக் கொடுக்கவும் பிரியப்படலாம். ஆனால் தனக்காக பிள்ளைகள் ஒருபோதும் இப்படியான தியாகங்கள் செய்ய முன்வருவதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது.

அம்மாக்களின் தொப்புள் கொடி அறுப்பட்டதிலிருந்து, பிள்ளைகள் தங்களுக்கென வழங்கப்பட்டதொரு தனி வாழ்க்கைக்குள் புகுந்து கொள்கின்றனர். அவர்களின் அப்போதைய மனநிலைப்படி, பெற்றோர் என்பது உறவின் ஒரு அங்கம். மிக முக்கியமான அங்கம் என்றும் கூடச் சொல்லலாம். ஆனால் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் என்பது வெறும் உறவு மட்டுமல்ல. தம் உயிரின் பாதி. அந்த உயிரிலிருந்து கொஞ்சம் உயிரை தான் பெற்றுக்கொள்வதைவிட வலி மிகுந்ததாக வேறு எதையும் அவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை.

அதற்கு மாற்றாக ஒவ்வொரு பெற்றோரும் ஏங்குவது அதீதமான பிரியத்தையும் பேரன்பையும் மட்டுமே. அது எவ்விதத்தில் கிடைத்தாலும் அதை ருசித்து, அந்த ருசிக்கு நிகராய் தானும் தன்னை அமைத்துக் கொள்வதில் நிறைவினை உணர்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தாம் இயல்பிலேயே கொண்டிருக்கும் கர்வத்தை, பிள்ளை உறவுகளோடு பிணையும் போது ஒதுக்கிவிடவே முற்படுகிறார்கள். இப்படியான மனிதக் கர்வத்தை வெங்காயத்தோடு ஒப்பிடப் பிடிக்கிறதுசிலர் அக்கர்வத்தை உரித்துப் பார்க்கத் துணிகிறார்கள். அதனால் சில வேளைகளில் கண்களில் கலக்கம் உண்டாவதுண்டு. ஆனால் உரித்துப் பார்த்தால் தம்முள் ஒன்றுமே மிஞ்சியிருக்காது என்பதை உணர்த்த, கர்வம் ஒருபோதும் தவறுவதில்லை.

-

நம்தோழி மார்ச் இதழில் வெளியான கட்டுரை


Mar 7, 2017

கனவில் புத்தனை எதிர்நோக்கி!

அந்தக் கூட்ட அரங்கில் இருந்தவர்களிடம் சமீபத்தில் யாரேனும் கொசுவைப் பார்த்தீர்களா?” எனக் கேட்டேன். ‘இதெல்லாம் ஒரு கேள்வியா!?’ என்ற ஏமாற்றம் கிட்டத்தட்ட அனைவர் முகத்திலும் தெரிந்தது. கை உயர்த்த வேண்டினேன். கொஞ்சம் வெட்கப்பட்டபடி ஏறத்தாழ எல்லோருமே தம் கைகளை உயர்த்தினார்கள். கூட்டத்தின் பின்பக்கமாக இருந்த ஒருவர் ’இப்போதுதான் ஒரு கொசுவை அடித்தேன்’ எனச் சொல்லி இறந்த கொசு இருக்கும் உள்ளங்கையைத் ஆர்வத்தோடு தூக்கிக் காட்டினார். சிலர் சிரித்தார்கள், பலர் கை தட்டினார்கள்.

சரி சமீபத்தில் உங்களில் யாரெல்லாம் பட்டாம் பூச்சியைப் பார்த்தீர்கள்?” எனக் கேட்டேன். கேள்வி புரியவில்லை என்பதுபோல் பாவனை செய்தார்கள். ”பட்டாம்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, பட்டர்ஃப்ளைஎன்றவுடன் லேசாக அவர்களின் முகங்கள் மலர்ந்தன. ஆனால் ஏமாற்றமாக உதடு பிதுக்கினார்கள். இட வலமாய் தலையை ஆட்டினார்கள். வெகு சிலரே கை உயர்த்தினார்கள். அந்தக் கைகளும் கூட முழுதாய் உணர்த்தப்பட்ட கைகள் இல்லை. கேட்கின்ற வியத்திற்கு உற்சாகமாக, தெம்பாக, தெளிவாக பதில் சொல்ல விரும்புகிறவர்களின் கை உயர்த்தல் மொழி வேறு. அதில் வானை முட்டிவிடும் தினவு இருக்கும். தயக்கமாக, சந்தேகமாக பதிலளிக்க விரும்புவோரின் கைகள் எப்போதும் வளைந்தபடி மட்டுமே உயரும், இன்னும் சிலருக்கு  கை தலைக்கு மேல் உயராது.

எப்போது பார்த்தீர்கள்?” என்றேன். அவர்களில் சிலர் நேற்றும, முந்தா நாள் என்றும், இன்னும் சிலர் நாலஞ்சு நாள்’, ’ரெண்டு மூனு வாரம்’ என்றும், சிலர் பார்த்தேன் ஆனா எப்போங்கிறது மறந்துடுச்சுஎன்றும் சொன்னார்கள். சரி நீங்கள் பார்த்த வண்ணத்துப்பூச்சி என்ன செய்து கொண்டிருந்தது?. அதன் நிறம் நினைவில் இருக்கிறதா?” எனக் கேட்டேன். பெரிதாக பதில்கள் வரவில்லை. ”கொசுவை யாருக்கெல்லாம் பிடிக்கும்?, வண்ணத்துப் பூச்சியை யாருக்கெல்லாம் பிடிக்கும்” எனவும் கேட்டேன். பதில் என்ன வந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே!.

பிடிக்காத கொசுவை அத்தனை பேரும் சந்தித்ததற்கும், பிடிக்கும் வண்ணத்துப்பூச்சியை மிகச் சொற்பமாக மட்டுமே சந்தித்ததற்கும் முக்கியமான காரணம் என்ன?’ என வினவினேன். பலதரப்பட்ட பதில்களுக்குப் பிறகு வண்ணத்துப்பூச்சிகள் உலவும் இடங்களைவிட்டு, கொசுக்கள் புழங்கும் இடங்களுக்கு நாம் வந்துவிட்டோம்அல்லது, ”நாம் இருக்கும் இடங்களுக்கு வண்ணத்துப்பூச்சிகளுக்கு வேலையில்லை, கொசுக்களுக்கு வேலை இருக்கிறது” என்றும் புரிதல் சார்ந்த பதிலை எட்ட முடிந்தது.

ஏன் நாம் நகர்ந்தோம்’, ’ஏன் அவைகள் வருவதில்லைஎன்பதன் நீள அகலம் முழுவதும் நமக்கும் தெரியாமல் இல்லை. ஆனாலும் அது குறித்து யோசிக்கும் அவகாசமும் நமக்கில்லை. அதில் கணிசமான நேரத்தை நாம் கொசு விரட்டுவதிலேயே கழிக்க வேண்டியிருக்கிறது என்பதும் ஒரு கசப்பான உண்மை. கொசுக்கடி எதையும் சந்திக்காமல் ஒரு மனிதன் ஒரு நாளைக் கடந்துவிடுவதற்கென தமிழகத்தில் ஏதேனும் ஊர்கள் இருக்கின்றனவா?.




சில மாதங்களுக்கு முன்பு என் மடிக்கணினித் திரையில் சேமிக்கப்பட்ட படம் ஒன்று. அழிபடாமல் அடம் பிடித்து ஜீவித்திருக்கிறது. கணினி முகப்புத் திரையை ஒழுங்குபடுத்தும் சமயங்களில் எல்லாம் அந்தப் படத்தை நீக்க நினைத்து தோற்றுப் போயிருக்கிறேன். இத்தனைக்கும் அந்தப் படம் காணக் கிடைக்காத படம் என்றோ, ஆகச்சிறந்த படம் என்றோ சொல்லிவிட முடியாது.

அது ஆங்கில தினசரி கட்டுரை ஒன்றில் வெளியாகியிருந்த படம். பார்த்தவுடனே என்னைச் சுண்டியிழுக்கும் ஒரு வசீகரத்தன்மையைக் கொண்டிருந்தது. படத்தில் இருக்கும் இடம் மலைப் பகுதியாகவோ, மலையடிவாரமாகவோ இருக்கலாம். அழகிய ஓடையொன்று சலசலக்கிறது. கரைகளாய் இருபக்கமும் நீண்ட பசும் புற்களினாலான புதர். ஓடையின் நடுவே மேடாக இருக்கும் ஒரு சிறிய இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்து கொஞ்சம் காய்கறிகளை, கிழங்குகளை நீரில் அலசி சுத்தம் செய்யும் காட்சிதான் அந்தப் படம். அவர்கள் இருவரின் முகங்களும், அவர்கள் ஏதேனும் வடகிழக்கு மாநிலத்தைச் சார்ந்தவர்களோ அல்லது தென்கிழக்கு ஆசிய நாட்டினைச் சார்ந்தவர்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு ஆணும் பெண்ணும் ஒரு ஓடையில் தம் காய்கறிகளைக் கழுவுகின்றனர். மேலோட்டமாகப் பார்த்தால் ’இந்தக் காட்சியில் அப்படி என்ன பெரிசா இருக்குஎனும் எண்ணத்தோடு எளிதாக கடந்து போய்விடக்கூடிய ஒன்றுதான். ஆனால் சற்று உற்றுப் பார்த்தால் அந்த நீரின் தூய்மையும், காய்கறிகளின் ஃப்ரெஷ்னஸ் என்று சொல்லும் புத்துணர்வுத் தன்மையும், அதில் இருக்கும் மலர்ச்சியும், அந்தச் சூழலும் நம்மில் பெரும்பாலானோர் தொலைத்துவிட்ட ஒன்றென்பது புரியும்.

நம்மில் எத்தனை பேருக்கு இப்படி முழுக்க முழுக்க இயற்கைச் சூழலில் விளையும் காய்கறிகளை, தானியங்களை, பழங்களை, கிழங்குகளை  எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இன்றைக்கு இருக்கின்றது? மனிதன் மாற்றியமைத்த நிலம் தவிர்த்து மற்ற இடங்களில் தானாய் முளைக்கும் எல்லாத் தாவரங்களும் அதனதன் போக்கில் செழிப்பாகத்தானே இருக்கின்றன. அவைகளுக்கு யாரேனும் நீரூற்றுகிறார்களா? உரம் வைக்கிறார்களா? களை எடுக்கிறார்களா? பூச்சிக்கொல்லி தெளிக்கிறார்களா? எதுவும் இல்லை. ஏனெனில் எல்லாச் செடி கொடி தாவரங்களும் இயற்கையின் பிள்ளைகள். எங்கே மனிதன் தன் முயற்சியென்று, தன் விருப்பதிற்கேற்ப உருவாக்கினானோ அப்போதிலிருந்து நீர் பாய்ச்ச, உரம் வைக்க, களை எடுக்க, பூச்சி அழிக்க என தேவைகள் பெருகின. அந்தத் தேவைகளோடு பெரும் பேராசையைப் பிசைந்து நிலத்திலும், நிலத்திலிருந்து விளைவதிலும் முடிந்த வரையில் நஞ்சினை சேர்த்துக் கொண்டு நோய்களை வரவழைத்துக் கொண்டு, பச்சை வர்ணம் அடித்த, வியாபாரம் நுணுக்கம் மிகுந்த இயற்கை அங்காடித் தேடுகிறோம். இதழ் வழியாகஇயற்கை, இயற்கைஎன செய்த பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் செய்வதுபோல் அலைந்து கொண்டிருக்கிறோம்.

இப்படி காய்கறிகளையும், கனிகளையும், கிழங்குகளையும் மட்டுமா இழந்துவிட்டு இல்லாத இடம் தேடி அலைகின்றோம். உணவாய் உண்ணும் எல்லாப் பொருட்களுக்கும் இப்படியான ஒரு மாய ஓட்டமும் தேடலும் துவங்கி வெகு காலம் ஆகிவிட்ட்து. காய்கறிகளைத் தொலைத்ததைவிட அம்மாதிரியான ஓடைகளையும், நீர் நிலைகளையும், நீர் வழிப் பாதைகளையும் நாம் தொடர்ந்து தொடர்ந்து இழந்து கொண்டேயிருக்கிறோம் அல்லது தொலைக்கச் செய்கிறோம். நாம் மரணிக்கச் செய்துவிட்டோம் என்பதுதான் இதிலிருக்கும் சுடும் உண்மை.

கடைசியாக எப்போது ஒரு ஓடையைப் பார்த்தீர்கள்?. அந்தத் தண்ணீர் எங்கிருந்து வருகின்றது எனும் யோசனை இருந்ததுண்டா. மெல்ல நம் பாதங்களை நழுவச் செய்யும் பாறையின் வழுக்குத்தன்மை பிடித்த பாறைகளை ஸ்பரிசித்ததுண்டா? ஓரமாகப் பாசி பிடித்துக் கிடக்கும் உதிர்ந்த இலைகளைக் கண்டதுண்டா? கால் வைத்தவுடன் ஓடி வந்து கடிக்கும் மீன் குஞ்சுகளையும், வெடுக் வெடுக்கென ஓடும் தலைப்பிரட்டைகளையும் கடைசியாக எப்போதுதான் கண்டீர்கள்?

ஆழ்துளைக் குழாயிலிருந்து மேல்நிலைத் தொட்டிக்கு ஏற்றி, அங்கிருந்து குழாய்கள் வழியே வீடுகளுக்குள் பாய்ந்து வரும் நீரோடு மட்டுமே தொடர்பு கொண்டவர்களாக மாறிப்போய் வெகுகாலம் ஆனவர்களிடம் கால்வாய்கள், ஆறுகள், கடல் ஆகியவற்றை விடுத்து ஓடை, ஏரி, குளம் என்று கேட்கும்போது எவ்விதமான பதில்களும் கிடைப்பதேயில்லை. அப்படி தெரியாத, இல்லாத பதில்கள் குறித்து கிஞ்சித்தும் கவலையும் இருப்பதில்லை. ஏனேனில் நீர் நிலைகளுக்கும் நமக்கும் தொடர்பேதுமில்லையென்றும் நாம் நம்பிக் கொண்டிருக்கலாம்.

மனிதர்களற்ற வனத்தில் பயணித்து நீருக்கான புனிதத்தில் பிறழ்வேதும் கொள்ளாமல் வரும் ஓடை நீரை வாழ்நாளில் ஒருமுறை கூட ருசித்திடாதவர்களும் இங்குண்டு. அம்மாதிரியான இடத்தை நோக்கிச் செல்லும் போதெல்லாம்கூட சுகாதாரம்என்ற பெயரில் இங்கிருந்தே பாட்டில் தண்ணீர் கொண்டு செல்பவர்களும் இங்குண்டு.

எதை நோக்கி இந்த ஓட்டம்என்ற கேள்விக்கு, ஒவ்வொருவரும் அவசர அவசரமாக தனக்கேற்ப ஒரு இலக்கு, கனவு, ஆசை அல்லது நிர்பந்தம் என ஏதேனும் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் அந்த ஆசை, தேவை, நிர்பந்தம், கனவு, இலக்கு என எதிலும் அவர்கள் இயற்கையை விட்டு தொடர்ந்து விலகுகிறார்கள்அது குறித்த அறிதலும் தெளிதலும் கூட இல்லை.

மரத்தின் உச்சியிலோ, பாறைகளின் இடுக்கிலோ கட்டப்பட்டிருந்த தேன் கூட்டிலிருந்து தேனெடுத்துச் சாப்பிட்ட அனுபவத்திற்கும், சாலையோரங்களில் ஆங்காங்க வியாபாரிகளால் உருவாக்கி விற்கப்படும் பெட்டித் தேனீக்களின் தேனிற்கும் இருக்கும் வித்தியாசம் ருசி மட்டுமில்லை ஆரோக்கியமும்தான். இதுபோல் பட்டியலிட்டால், அதை வாசித்து யோசிக்கவே நமக்கு பல நாட்கள் பிடிக்கும்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கும், இயற்கையோடு முரண்பட்ட வாழ்கைக்கும் இடையே இருக்கும் இடைவெளிகளை நிரப்புதல் என்பது பேராசைதான். வாழ்க்கையில் பேராசையே படக்கூடாது என என் கனவில் புத்தன் வந்து சொல்லும் வரை பேராசையோடு காத்திருப்பது குறித்து கவலையேதுமில்லை.

-

பிப்ரவரி நம்தோழி மாத இதழில் வெளிவந்த கட்டுரை

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...