Showing posts with label மலையாளம். Show all posts
Showing posts with label மலையாளம். Show all posts

Mar 7, 2023

யாருக்கோ நிகழ்ந்தால் ஒரு நீதி, தமக்கு நிகழ்ந்தால் ஒரு நீதி - Iratta


Iratta - மலையாளம் (Spoiler Alert)
படம் பார்த்த பலருக்கும் இறுதிக்காட்சியின் அதிர்ச்சி மிகக் கனமானதாக இருப்பதாக உணர முடிகின்றது.
அது 'எது’ சார்ந்த அதிர்ச்சி என்பது குறித்துத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
வழக்கமான மலையாள த்ரில்லர் வகை. DySP பிரமோத் - ASI வினோத் ஆகிய இரட்டையர் பாத்திரங்களிலும் ஜோஜு ஜார்ஜ் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் என்பதையெல்லாம் சொல்ல வேண்டிய கட்டத்தை அவர் தாண்டிவிட்டார்.
மாலினியாக வரும் அஞ்சலியின் மீள் வருகை, அஞ்சலிக்கு இனி வாய்ப்புகள் கிடைக்கும் எனும் நம்பிக்கையைத் தருகின்றது.
மற்றபடி த்ரில்லர்கள் முடிக்கும்போது அவ்வளாக தொடர்பில்லாத, எதிர்பாராத ஒன்றில் கொண்டு வந்து முடிப்பார்கள். இதில் சற்றும் எதிர்பாராவண்ணம் சுருக்கென தைக்கும் ஒரு புள்ளியில் முடித்திருக்கிறார்கள். அந்தப் புள்ளிதான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது.

”நான் பேசி முடிக்கும்வரை போன் கட் பண்ணிடாதே, 17 வருசம் ஆகிடுச்சு. எல்லாத் தப்பும் என்னோடதுதான். அதோட கணக்குவழக்கு எதும் வச்சுக்கல. மகள டிவில பார்த்துட்டு இருக்கேன். கம்பீரமா இருக்கா. உங்க ரெண்டு பேரையும் பார்க்கனும். அவகிட்ட என்னைப் பத்தி சொல்லிவை. அவளோட அப்பன் உயிரோட இருக்கானு தெரியும் உரிமை அவளுக்கு உண்டு” என பிரிந்துசென்ற அதுவரை பேசாதிருந்த மனைவியிடம் வேண்டும் பிரமோத்துக்கும்...

ஒரு நாள்கூட முடிவடையாத நிலையில், மகளுடன் சந்திக்க வருகிறோம் எனச் சொல்லும் அதே மனைவிடம் “வர வேண்டாம். மகள்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். அவள் எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாம். அவள் என்னோட முகத்தைப் பார்க்க வேண்டாம். இனி எப்பவும் என்னைக் கூப்பிட வேண்டாம்.” என உறுதியாக, இறுதியாகச் சொல்லும் பிரமோத்துக்கும்...

இடைப்பட்ட தருணத்தில் அறிய வந்ததுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

*

காவல் நிலையத்தில் உடன் பணிபுரியும் இரண்டு பேரின் வாழ்விலும் வினோத் செய்தது, செய்ய முனைந்தது மற்றும் பினீஸ் சொல்லும் அந்த லாட்ஜ் நிகழ்வு அனைத்தும் வழக்கமான சினிமா வில்லன் செய்வதுதானே!

வினோத் பிரமோத்தின் மனைவி மற்றும் கைக்குழந்தையாக இருக்கும் மகளை எந்த உணர்வுகளுமற்றவனாகச் சந்திக்கிறான். பிறகு பிரமோத்திடமே எள்ளி நகையாடுகிறான்

மாலினியின் பிரச்சனையில் அவள் ‘அழகான பெண்’ என்பதற்காகவே தானே வலிய வந்து உதவுகிறான். அவளை மருத்துவமனையிலிருந்து அழைத்து வரும் நோக்கம் மற்றும் அந்த முதல் ’முயற்சி’யையும் நாம் அறிந்தே இருக்கின்றோம்.

இவை யாவும் ‘வில்லன்’ எனப்படும் வினோத் மீது வெறுப்பை, கோபத்தை, எரிச்சலை உண்டாக்கவே செய்தன.

இதன்பிறகு, வரும் காட்சிகளில்...
மும்பையில் பிரமோத் மனைவி-மகளைச் சந்தித்துவிட்டு திரும்பும் முன், சந்திப்பில் குழந்தைக்கென்று சில பொருட்களை வாங்கித் தந்துவிட்டு வருகின்றான்.

அந்த முதல் ‘முயற்சி’யால் மிரண்டோடும் மாலினியை தேடி அழைத்து வருகிறான். வேறொரு முகம் காட்டுகிறான். அவள் வேலை செய்யும் அங்கன்வாடி வகுப்பறையைக் கூட்டிவிடுகிறான். புடவை வாங்கித் தருகிறான். நெகிழ் மனதோடு தம் வாழ்க்கை முழுவதும் அழுக்கு என ஒப்புதல் தருகிறான். முன்பாக ஒரு மான்டேஜ் பாடல் உண்டு.

இவைகளுக்குப் பிறகு, அதுவரை வினோத் மீதிருந்த வெறுப்பு, கோபம், எரிச்சல் தணியவே செய்கின்றன.

அவனை அவன் கீழ்மைகளோடு ஏற்க(!) மனம் துணிகின்ற தருணத்தில்தான், அந்த க்ளைமாக்ஸ்.
பொதுவாகவே, எந்தவொரு குற்றமும், யாருக்கோ எனும்போது ஒரு மாதிரியும், தன்னைச் சார்ந்தவர் எனும்போது வேறொரு மாதிரியும் வடிவம் பெற்றுவிடுகின்றது. அதுதான் வினோத்திற்கும்!

ஆனால், மூன்றாவது துப்பாக்கிக் குண்டில் அங்கே செத்தொழிவது வினோத்தாக இருந்தாலும், செத்தொழிய வேண்டியது, 'யாருக்கோ நிகழ்ந்தால் ஒரு நீதி, தமக்கு நிகழ்ந்தால் ஒரு நீதி!’ என்றிருக்கும் எல்லா மனநிலைகளும்தான்.

போதைப் பழக்கத்தால், பணி அழுத்தத்தால், மன உளைச்சலால் என ஏதோ ஒரு காரணம் சொல்லி முடித்துவைக்கப்படும் தற்கொலை வழக்குகளின் பின்னே உண்மையில் இருக்கும் காரணங்கள் யாரும் அறியாத, யாரும் தாங்கவியலாத அளவுக்கு கொடூரம் நிறைந்ததாகவும்கூட இருக்கலாம்.
*

Jan 22, 2023

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்

 Mukundan Unni Associates - மலையாளம்

டைட்டில் கார்டில் Smoking Kills எனப் போடும்போதே ‘கொன்னு களையு’ எனும் குரலே நிமிர வைத்துவிடுகின்றது.



மலையாள சினிமா இன்னுமொரு பரீட்சார்த்த முயற்சியில் இறங்கியிருப்பதாகவே இந்தப் படத்தை எடுத்துக் கொள்கிறேன்.
'நெகடிவ் குடோன்’ என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கும் படத்தில், அது சொல்லப்பட்ட விதத்தை ஒரு கலைப் படைப்பாக ரசிக்கும் அதே தருணத்தில், வினித் சீனிவாசன் மாதிரியான இலகுவான, எவரும் ஏற்கும் முகத்தை இதற்குப் பயன்படுத்தியிருப்பதை மிகுந்த அச்சத்தோடுதான் உள்வாங்குகிறேன். பலரின் சமூக வலைதள முகப்புப் படங்களாக 'சித்தார்த் அபிமன்யு’ மற்றும் 'ரோலக்ஸ்’ அலங்கரிப்பதுபோல 'முகுந்தன் உன்னி’யும் அலங்கரிக்கத் தொடங்கிவிடுமோ எனும் அடிப்படை அச்சமே அது!
“இப்படி ஒரு படத்தில் நீ நடிக்கலாமா!?” என வினித் சீனிவாசனைக் கேட்டபோது, அவரிடம் உதவியாளராக இருந்த இயக்குனரின் இந்தக் கதையை எந்த நடிகரும் ஏற்க மறுத்ததால், தானே நடித்தேன் என்று சொன்னாராம். ஒருவேளை தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வினித் இதைச் சரியான வாய்ப்பாக நினைத்திருக்கலாம்.
படம், இந்த உலகில் இல்லாத எந்தவொன்றையும் மிகைப்படுத்திக் காட்டிவிடவில்லை. முழுதாக உள்வாங்கிப் பார்த்து முடிக்கும்போது, தம் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிகளை(!) ஈட்டிய பல்வேறு ஆளுமைகளின்(!) இன்னொரு பக்கம் நினைவுக்கு வராமல் போகாது. எல்லாத் துறைகளிலுமிருந்தும் நினைவுக்கு வருவார்கள்.
“தோற்றுப் போவதைவிடச் சிறந்தது செத்துப்போய் விடுவது” என்பதைக் கோட்பாடாகக் கொண்டவன் என்னவெல்லாம் செய்வானோ அதைத்தான் ’என்னைப்போல் நான் மட்டுமே உண்டு’ எனும் இறுமாப்பு கொண்ட முகுந்தன் உன்னி செய்கிறான்.
ஒரு 'லவ் யூ' சொல்வதற்கு அவனுக்கு மனசு இளகவேண்டியதில்லை, ஹார்மோன் தூண்டப்பட வேண்டியதில்லை, ஆக்ஸிடோசின் சுரக்க வேண்டியதில்லை, அவன் வைத்திருக்கும் கணக்கு ’டேலி’ ஆனால் போதும்.
இறுதிக் காட்சியில் மீனாட்சி ”வெற்றியடைந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் Hardwork, Dedication, Perseverance கொண்டு வென்றார்கள்னு நினைக்கிறியா? அதெல்லாம் தன்னம்பிக்கை புத்தகங்களுக்கான தந்திரக் கதைகள்” எனச் சொல்லும் காட்சியை, அதனுள் இருக்கும் முரண்களோடு மிகவும் ரசித்தேன்.
எந்த Hardwork, Dedication, Perseverance, Discipline எல்லாம் இருந்தும், தன்னால் வெல்ல முடியவில்லை என்று, முகுந்தன் உன்னி பாதை மாறுகிறானோ அதன்பிறகு அவன் செய்யத் தொடங்கியதில் Hardwork, Dedication, Perseverance 100% இருந்தது, என்ன Discipline மட்டும் அவன் வடிவமைத்த உலகத்திற்கானதாக இருந்தது.
குரூரமான மரணத்தை அழகிய கவிதை வாசிப்புபோல் அவன் கருதுகையில் உள்ளுக்குள் அதிரும் நடுக்கம், நமக்கு நம்மை உணர வைக்கும்.
’தவறு செய்தால் சாமி கண்ணைக் குத்திவிடும், கெட்டவர்கள் கடைசி சீனில் செத்துப்போய்விடுவார்கள் அல்லது திருந்திவிடுவார்கள்’ உள்ளிட்ட நம்பிக்கை(!) கொண்டோர் படத்தைத் தவிர்த்துவிடலாம். இல்லாவிடில் தூக்கம் வராது... 😉 மற்றபடி அவரவர் விருப்பம்.

Apr 25, 2020

சாமானியனின் வெற்றி அவனுக்கானது மட்டுமல்ல


மனிதர்களுக்கு வெற்றி மீதிருக்கும் பேரார்வம் எப்போதும் அலாதியானது. அந்த ஆர்வம் இத்தகையதானது என்று எந்த வடிவத்திற்குள்ளும் அடைக்க முடியாது. ஒவ்வொருவரின் வெற்றியும் ஒவ்வொருவிதமான உணர்வுகளைக் கொடுக்கலாம். சாமானியர்களின் வெற்றி சக சாமானியர்களுக்கு சிற்சில நேரங்களில் பொறாமையைக் கொடுக்கலாம். பல நேரங்களில் தானே வென்றதுபோல் ஒருவித மகிழ்ச்சியையும், யாரும் வெல்ல முடியும் எனும் பெரு நம்பிக்கையையும் தருவதுண்டு.

சுராஜ் வெஞ்சரமூடு :

2013ல் பார்த்த ஸ்பிரிட் படத்தில் வரும் மந்திரி முரளிகிருஷ்ணனாகத்தான் எனக்கு அறிமுகம். இத்தனைக்கும் அவர் ஓரிரு காட்சியில்தான் வருவார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோகன்லாலிடம் சிக்கி திணறும் பாத்திரம். படத்தில் வரும் எத்தனையோ சில்லறைப் பாத்திரங்களில் ஒன்றுதான் அந்தப் பாத்திரமும். ஆனாலும் அப்பவே அவர் யார், என்ன, ஏதென்று தேடினேன். அவர் மலையாள திரையுலகத்தில் பிரபலமான காமெடி நடிகர் என அறிய முடிந்தது. அவரின் மற்ற படங்கள் எதையும் தேடிப் பார்க்க முயவில்லை. அதற்கான தேடலும் என்னிடம் இல்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவரைப் பார்த்த்து தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும்படத்தில்தான். நாயகனுக்கு நிகரான பிரசாத் எனும் சவால் நிறைந்த பாத்திரம். இதற்கிடையே அவர் சுமார் எழுபது படங்களில் நடித்திருந்தார். அவற்றில் நான் ஹவ் ஓல்ட் ஆர் யூ, கம்மாட்டிப்பாடம் ஆகிய படங்களில் கண்டிருந்தாலும், மனசுக்குள் இருந்ததென்னவோ அந்த மந்திரி முரளிகிருஷ்ணன்மட்டுமே.

தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும் பிரசாத் முதன்முறையாக முரளிகிருஷ்ணனை மன நாற்காலியில் இருந்து அகற்றிவிட்டு இடம் பிடித்தார். மலையாள சினிமாக்கள் மீது பல தருணங்களில் ஏற்பட்ட பிரமிப்பு இந்த பிரசாத் பாத்திரத்தின் வழியாகவும் கூடியது. காலம் காலமாய் இவர்கள் மட்டுமே நடிக்க வேண்டும் என்று பட்டா போட்டிருக்கும் சூழல் நல்லவேளையாக மலையாளப் படங்களில் அவ்வளவாக இல்லை என்றே கருதுகிறேன்.

அந்த இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் எழுபது எண்பது படங்கள் நடித்திருந்த சுராஜ் வெஞ்சரமூடு, 2017ம் ஆண்டிற்குப் பிறகு ஆண்டுக்கு ஒற்றை இலக்கத்தில்யே நடித்து வருவதாக அவரின் பட்டியல் சொல்கின்றது. எண்ணிக்கை முக்கியமல்ல என்பதற்கு அவரும் தற்போது ஓர் உதாரணம். பலரின் பரிந்துரைகளில் இடம் பெற்ற ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன், ட்ரைவிங் லைசன்ஸ் மற்றும் விக்ருதி ஆகிய படங்களைப் பார்த்தபோது, சுரேஜ் வெஞ்சரமூடு அபாரமான வளர்ச்சியை எட்டியிருக்கிறார் என்பது புரிந்தது.

நாற்பதுகளில் இருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு தந்தையைப் போல் ராணுவத்தில் சேர முற்பட்டு, முடியாமல் போக, ஸ்டாண்டப் காமெடியன் மற்றும் மிமிக்ரி கலைஞனாக மேடையேறியிருக்கிறார். மெல்ல திரைப்படம் அவரை உள்ளிழுக்க நகைச்சுவை நடிகராக ஓரிரு காட்சிகளில் தோன்றி, பிறகு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வருடத்திற்கு 25 படங்கள் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விறுவிறுவென எண்ணிக்கைகளைக் கூட்டியிருக்கின்றார். சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சுராஜ் 2000 முதல் 2010 வரை நகைச்சுவை நடிகனாகவே தன்னை வைத்துக் கொண்டிருந்திருக்கிறார். இதில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மாநில விருதுகளும் பல முறை பெற்றிருக்கின்றார்.

தனித்த பார்த்திரங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்க, எண்ணிக்கைகள் குறைந்து, தன்னை இன்னொரு கோணத்தில் மிகச் சிறப்பாக நிரூபிக்க போதிய களம் கிடைத்திருக்கின்றது. ஆன்ட்ராய்ட் குஞ்சப்பனில் வரும் பாஸ்கர பொதுவால் அவரின் வாழ்நாள் சாதனை பாத்திரங்களின் பட்டியலில் இடம் பெறலாம். ட்ரைவிங் லைசன்ஸ் மிக நுண்ணியதொரு களம். உண்மையில் ப்ருத்விராஜ் எனும் பிரமாண்டத்தை உடன் வைத்துக் கொண்டு புகழெய்துவது அத்தனை எளிதன்று. எனக்கென்னவோ, பிருத்விராஜும்கூட அந்தப் படத்தில் சுராஜ் களமாடுவதற்கு இசைவாய் இடம் கொடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதுவேதான் தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும் படத்தில் பஹத் வாயிலாக நடந்திருக்கலாம்.




சௌபின் சாஹிர்:

அன்னயும் ரசூலும், அஞ்சு சுந்தரிகள், இயோபின்டே புஸ்தகம் உள்ளிட்ட படங்களில் கண்டிருந்தாலும், பிரேமம் படத்தில் ஜாவா சாருக்கு யோசனைகளை அள்ளித்தரும் சிவன் சார் பாத்திரம்தான் சௌபின் சாஹிரை மனதில் நுழைய வைத்தது. நுழைந்தவருக்கு நல்லதொரு இடம் பெற்றுக் கொடுத்தது மகேஷிண்ட பிரதிகாரம் கிரிஸ்பின். அதன்பிறகு அவர் எந்தப் படத்தில் தென்பட்டாலும் கவனிக்கத் தவறுவதில்லை. அந்த வரிசையில் இடம் பெற்றவர்கள்தான் களி படத்தில் வந்த பிரகாசன் மற்றும் கம்மாட்டிபாடத்தில் வந்த கராத்தே பிஜு. கூடுதலாக காம்ரேட் இன் அமெரிக்கா, பறவா, மாயநதி ஆகியவற்றில் கண்டிருந்த நேரத்தில் சூடானி ஃப்ரம் நைஜீரியாமீண்டும் மலையாள திரையுலகத்தின் மீது பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

நடிகர்களுக்கான பாத்திரம், நடிகர்களுக்கான கதை என்று வீம்பு பிடிக்காமல், கதைக்கான பாத்திரம், அந்தப் பாத்திரத்திற்கான நடிகர் என்று தயவுதாட்சன்யமின்றி இறங்கி அடிப்பதில் மலையாள திரையுலகம் முன்னணியில் இருப்பது நிரூபிக்கப்பட்டது. ஆம் காமெடியன் சௌபின் சாஹீர்ஹீரோஆக்கப்பட்டுவிட்டார். எனினும்கூட வைரஸ் படத்தில் அவர் அந்த சின்னப் பாத்திரத்தை மறுக்காமல் ஏற்று, அதுவே முக்கியப் பாத்திரம் ஆகி தனக்கென இடம் பிடித்திருந்தார். இடையில் இயக்குனராக அவர் துல்கர் சல்மானை வைத்துபறவாபடத்தையும் இயக்கியிருந்தது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது.

இந்தத் தருணத்தில்தான் சௌபின் சாஹிர் தனக்கான மிக முக்கியாமான அங்கீகாரத்தைப் பெறும் வாய்ப்பு கிட்டியது. பஹத் ஃபாசில் தனது தயாரிப்பில் தன்னை சற்றே சுருக்கிக் கொண்டு அழகியதொரு வாய்ப்பினைகும்ப்ளாங்கி நைட்ஸ்படத்தில் சாஜி பாத்திரத்தில் சௌஃபினை பொருத்தினார். அந்த வாய்ப்பு சௌபின் சாஹிரை நல்லதொரு உயரத்திற்குக் கொண்டு செல்ல, ‘அம்பிளிஅவரை அதகளமான கொண்டாட்டத்திற்கு இட்டுச்சென்றது என்று சொல்லலாம்.
 ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்சன் 5.25’ மற்றும்விக்ருதிசௌபின் சாஹிருக்கும் சுராஜ் வெஞ்சுரமூடுக்கும் கற்பனை செய்ய முடியாத அற்புதமான வாய்ப்பாக அமைந்தது

சௌபின் 2003ல் மலையாள திரைத்துறையில்  உதவி இயக்குனராக வாய்ப்பு பெற்று நுழைந்திருக்கிறார். இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில், ஃபஹத் ஃபாஷில் அறிமுகமான ’கையெத்தும் தூரத்துபடத்தில் சௌபின் சாஹிரும் நடித்திருக்கிறார். ஆனால் அடுத்த பத்து ஆண்டுகள் நடிப்பில் இல்லாமல் உதவி இயக்குனாராக பலரிடம் பணிபுரிந்து, 2013ம் ஆண்டில்தான் அன்னயும் ரசூலும் படத்தின் மூலம் திரைக்கு வந்திருக்கிறார்.

உதவி இயக்குனர் என்பதிலிருந்து முழு மூச்சாக நடிப்பின் பக்கம் திரும்பி சின்னச் சின்னப் பாத்திரங்கள் மூலம் தனக்கான அடையாளத்தை சில ஆண்டுகளிலேயே பிடித்துக் கொண்டார். சூடானி ஃப்ரம் நைஜீரியாவிற்குப் பிறகு ”கும்ப்ளாங்கி நைட்ஸ்வெற்றி அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்திருக்கலாம். விக்ருதி சமீர் அவரின் மறக்க முடியா பட்டியலில் முக்கிய இடம் பிடிக்குமெனக் கருதுகிறேன். அவரால் ‘மெட்ரோயில் பாம்பு’ எனப் பெயர் சூட்டப்பட்ட, எல்தோ குறித்த உண்மைகள் ஊடகங்கள் வாயிலாக உலகிற்குத் தெரிந்த கணத்தில், சமீர் பாத்திரம் சுமக்கத் துவங்கும் குற்ற உணர்வு, பதைபதைப்பு, குமைதல் உள்ளிட்டவற்றை முகத்தில் அப்பட்டமாக தரவிறக்கம் செய்து, உடல் மொழியாலும் இறுதிக்காட்சி வரை சுமந்ததில் பெரு வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

 *

மலையாளத் திரைப்படங்கள் குறித்து எப்போது எழுத முனைந்தாலும், அதில் வெறும் புகழ்ச்சியும், தமிழ் மொழித் திரைப்படங்களுடனான ஒப்பீடு மட்டும் எனக்கு இருந்து விடுவதில்லை. அங்கே நிகழும் அற்புதமான சில மாற்றங்கள் ஏற்படுத்தும் வியப்புகளே எழுத்தாக உருவெடுத்து நிற்கும். மிகச் சாதாரணம் என நாம் நினைத்து கடக்கும் சம்பவங்களே அந்தத் திரைப்படங்களில் கதையாக மாறி திரைக்கதையாவடிவெடுத்து, தனக்குப் பொருத்தமானவர்களைக் கோரி நல்லதொரு படைப்பாக அமைந்து விடுகின்றன.

உண்மையில் பெரிய நாயக பிம்பங்கள் விட்டுக்கொடுக்கிரார்களா அல்லது திரைக்கதையும், இயக்குனர்களும் சமரசமின்றிக் கோருகிறார்களாக எனத் தெரியவில்லை. சுராஜ் வெஞ்சரமூடு, சௌபின் சாஹிர் போன்ற நகைச்சுவைப் பாத்திரங்களாக மட்டுமே இருந்த சாமானியர்கள், நாயகர்களுக்கான அளவீடுகளுக்குள் அடங்காதவர்கள் வெல்வதற்கான வாய்ப்பு அங்கு பிரகாசமாக இருக்கின்றது.

சாமானியனின் வெற்றி அவனுக்கானது மட்டுமல்ல, அவனைப் போன்றிருக்கும் பலருக்குமானது.

(பொறுப்பேற்றல் : நான் பார்த்த  குறைவான படங்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டது. முழுமையான ஆய்வு சார்ந்தது கிடையாது)

Dec 15, 2014

முன்னறியிப்பு - Munnariyippu




இருபது ஆண்டுகாலம் சிறைக்குள் இருந்து, உறவு நட்பென எவரையும் சந்திக்காத, எல்லாவற்றையும் தத்துவமாய், எளிதானதாய் அணுகுபவனும், அவனை ஒரு பண்டமாக, கருவியாக அணுகுபவளும் ஒரு புள்ளியில் தொடங்கி, ஒரு கால் புள்ளியில் முடிக்கிறார்கள்.



ஃப்ரீலான்ஸர் எழுத்தாளர் அஞ்சலிக்கு (அபர்னா கோபினாத்), சிறைக் கண்காணிப்பாளர் ஒருவரின் சுயசரிதை எழுதும் வாய்ப்பு கிட்டுகிறது. சிறையில் இரண்டு கொலைகள் செய்த ஆயுள் தண்டனை கைதி ராகவனை (மம்முட்டி) சந்திக்கிறாள். தண்டனைக்காலம் முடிந்தும் வெளியேறாமல், இருபது ஆண்டுகளாய் சிறையில் இருக்கும் ராகவனை, அத்தனை நாட்களும் ஒருவரும் வந்து சந்திக்கவில்லை என்பதும், அவர் பரோலில் வெளியே போகவில்லை என்பதும் ஆச்சரியம் தருகிறது.



தான் கொலைகளைச் செய்யவில்லை எனச்சொல்பவனிடம் ஏன் தண்டனைக்காலம் முடிந்தும் வெளியில் செல்லவில்லையெனும்போது ”தனக்கென வெளியில் என்ன இருக்கிறது” எனக்கேட்கிறான். வெளியே காத்திருக்கும் புதுவாழ்க்கை குறித்துக் கேட்கும்போது, ”வாழ்க்கையில் புதியது, பழையதென்றில்லை, வாழ்க்கை என்பது ஒன்றுதான்” எனத் தத்துவம் பேசுகிறான். ”இல்லை வெளியில் சந்தோசமான வாழ்க்கை” எனச் சொல்ல வரும்போது, ”இங்கே சங்கடமொன்றுமில்லை” என்கிறான். கொலைகள் செய்யவில்லை என்றவனிடம் என்ன உண்மை எனக் கேட்கும்போது, ”இருள் இருக்கும் இடத்தில் ஸ்விட்ச் போட்டால் ஒளி கிடைப்பது போலே, வெளிச்சம் இருக்கும் இடத்தில் ஸ்விட்ச் போட்டால் இருள் கிடைக்கும் வகையிலான சாதனம் உண்டா!?” என்றும் கேட்கிறான்.



தன்னை ஒரு எழுத்தாளராய் நிரூபிக்க, புகழின் படிகளில் ஏற தனக்கான வாய்ப்பாக ராகவன் தென்படுகிறான். ராகவன் குறித்து கட்டுரை எழுதுகிறாள். அஞ்சலிக்கும் ராகவனுக்கும் கிடைக்கும் புகழ், தன்போக்கில் சொடுக்கி வேறு பாதையில் அஞ்சலியை இழுத்துச்செல்கிறது.



”கண்ணாடி பார்க்கும்போது கண்ணாடிக்குள்ளே இருக்கும் தனது பிம்பம் தன்னைப் பார்க்கும். கண்ணாடியை விட்டு விலகும்போது உள்ளிருக்குமா, விலகிப்போகுமா? ஆனாலும் திரும்பவும் கண்ணாடி பார்க்கும்போது அது அங்கிருந்தே பார்க்கும்” என்பது உள்ளிட்ட ராகவனின் எழுத்துக்களைக் காணும் அஞ்சலிக்கு, ராகவன் ஒரு புத்தகத்திற்கான பொக்கிஷமாய்த் தென்படுகிறான்.



வேகமாய் காலம் கரைந்தோடும் காலகட்டத்தில் இருபது ஆண்டுகளை சிறை வளாகத்திற்குள்ளும், அறைக்குள்ளும் கழித்து, உலகத்தின் நெடி உணராமல் இருந்தவனிடம் கட்டாயங்களும், நிர்பந்தங்களும் திணிக்கப்படுகின்றன. ஃப்ரீலான்ஸர் எழுத்தாளராய் ஏற்றுக்கொண்டிருந்த பணியை ஆரம்பிக்க இயலாமலும், கார்ப்ரேட் பதிப்பக நிறுவனத்திடம் ராகவனின் ஒப்புதலோடு ஒப்பந்தம் போட்ட பணியை காலக்கெடுவிற்குள் நிறைவேற்ற முடியாமலும் தவிக்க ஆரம்பிக்கிறாள்.



இருவரின் போராட்டங்களுக்கும் மிகச் சரியான காரணங்களுண்டு. அவரவருக்கான நியாயங்களும் உண்டு. ராகவனாய் உள்ளுக்குள் முடங்கித் தடுமாறவும், அஞ்சலியாய் உள்ளுக்குள் கொதித்துக் குமையவும் நம்மை ஆட்படுத்தி, என்னதான் நடக்கப்போகுமென அலுப்பூட்டி, அந்த திருப்பத்தின் சிலநொடிகளில் பொதுவான நியாயம் வேறு ஒன்றாகவும் இருக்கத்தானே செய்யுமென ஒப்புக்கொள்ளச்செய்கிறது.



*

சீனிவாசன் நேரமின்மையால் நடிக்காமல் விட்ட பாத்திரத்தில் மம்முட்டி மிக அற்புதமாக நடித்திருக்கிறார். துடிப்பும் தவிப்பும் ஆசையும் நிராசையுமாய் எல்லா உணர்வுகளையும் காட்டும் அபர்னா கோபிநாத்தும், மம்முட்டியும் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

*

Oct 17, 2014

வாழ்தலை விடவும்...


காணும் எல்லோரையும் நம் மனதிற்கு மிகவும் பிடித்துப்போய்விடுவதில்லை. எதன்பொருட்டோ சிலரை மிக நெருக்கமாகப் பிடித்துவிடும். அப்படிப் பிடித்துப் போனவர்களோடு ஏதேனும் ஒரு சூழலில் பிணக்கோ ஊடலோ ஏற்பட்டாலும், மீண்டும் நெருங்கிப்போகும் சமயத்தில் பீறிடும் அன்பினை விளக்கிட வார்த்தைகள் கிடைப்பதில்லை. பிடித்தலையும், பிடிக்காமையையும் ஏதோ ஒரு காரணத்தை தனக்குள்ளே வைத்துக்கொண்டு முடிவெடுக்கும் மனம் மிக நுணுக்கமானது. ஒருவரைப் பிடிக்காமல் போனதற்கும், பிடித்துப் போனதற்கும் என்னதான் நேரடிக்காரணமென எவ்வளோ யோசித்தாலும், இதுதான் காரணமென தீர்க்கமாய் தீர்மானித்திட முடிவதில்லை.
 
அவளைப் போலவே நீங்கள் ஒருத்தியைக் கடந்து போயிருக்கலாம். அவளுக்கு வாழ்க்கையில் வேறேதும் குறையில்லை. திருமணத்தில் எடுத்த பொருந்தா முடிவு தவிர. பொருந்தா முடிவு என்பதற்குள் நுண்ணிய சிக்கல்களுண்டு. விளைவு கையில் வலிந்து பரிசாகத் திணிக்கப்பட்ட மோசமான தாம்பத்ய வருடங்கள். வாழ்தலை விட எல்லாம் விட்டொழிந்து மரணித்துப்போவதில் கூடுதல் பிரியம் அவளுக்கு. மரணம் மிக அருகில் வந்து இரண்டொரு முறை வருடிப்போனதுமுண்டு. அவளின் துன்பங்களை அவள் பக்கமிருந்து ஓரளவு அறிவேன். தற்கொலை முயற்சிகளை விதவிதமாய் செய்பவர்களைக் கண்டால் ஒரு பயமிருப்பதுண்டு. ஒருமுறை முயன்றுவிட்டால் எப்போதிருந்தாலும் அவ்வழியேதான் முடிவு வருமென எவரோ எங்கோ எப்போதோ நம்ப வைத்ததன் வெளிப்பாடுதான் அந்தப் பயம். 

செத்தே தீரவேண்டும் என முடிவெடுத்தால், என்னிடம் அனுமதி பெற்றுவிட்டு செத்துப்போ என்பதுதான் எங்கள் நட்பிற்குள்ளிருக்கும் ஒப்பந்தம். இப்படியான ஒப்பந்தத்திற்கு சத்தியம் பெறுவதே ஒரு கசப்பான முரண்தான். வாழ்வின் மீதான அச்சங்களைக் கொண்டிருப்பவனுக்கு சத்தியங்கள் மீது சற்றேனும் நம்பிக்கை வரலாம். அச்சங்களைக் கடந்து, எல்லாம் துறந்து, வெறுத்து, மறுத்து வாழ்க்கையையே முடித்துக்கொள்ள நினைப்பவனுக்கு முதலில் சத்தியம் செய்தது நினைவுக்கு வருமா? சத்தியம் எனும் மெல்லிய நூல் என்ன செய்துவிடப்போகிறது. இந்த சத்தியங்கள் சம்பிராதாயங்கள் எல்லாம் ஒரு திருப்திக்குத்தான்.


மனதில் வெளிச்சமற்றுப் போயிருந்த அவளுக்கு, தன் தோழியின் வீட்டில் காய்ந்த மாலையோடு தொங்கிய தோழியின் கணவனின் நிழற்படம்தான் இதுவரை எவரும் சொல்லித்தந்திடாத வைராக்கியத்தைக் கொடுத்திருக்கிறது. தோழியின் கணவர் இறந்தது, தோழி கடினமாய் உழைத்து பிள்ளைகளை வளர்ப்பது என்பதெல்லாம் தெரிந்திருந்தாலும், இருள் கவிழ்ந்த மனநிலையில் அன்று அந்த நிழற்படம் ஏதோ இம்சை செய்திருக்கிறது. விபூதி சந்தனம் குங்குமத்தின் தடயங்கள் மட்டுமே படத்தில் தெரிந்தன. போன இறந்த தினத்தில் இடப்பட்டிருக்கலாம். சட்டத்திற்குள் அடங்கிக்கிடக்கும் அந்தக் கணவனின் விழிகள் இவளைத் தைப்பது போலவே உணர்கிறாள். அவனின் இல்லாமை மட்டுமே அந்தக் குடும்பத்திற்குள் நிரப்பிவைத்திருக்கும் துன்பங்கள் ஏராளம். தோழியின் தனிமை, பிள்ளைகளின் ஏக்கம், சுற்றத்தின் வரம்பு மீறல்கள், இன்னும் இத்யாதிகள். அவளோடு வந்த தம் பிள்ளைகளை ஒரு கணம் பார்க்கிறாள். அந்தப் படத்தை மீண்டும் நன்றியோடு பார்க்கிறாள். தோழியின் கணவனின் கண்களிலிருந்து கருணை கசிவதாய் உணர்கிறாள். மரணம் வெகு தொலையில் அதன் போக்கில் அமைதியாய் இருப்பதாய் நிறைவாய் உணர்கிறாள். பிடிக்காததை ஒரு கணமேனும் ஒதுக்கியோ, விலக்கியோ இந்த வாழ்க்கை எத்தனை அதி அழகானது என்பதை ரசித்து வாழ்ந்துவிட வேண்டுமென்றாள். வாழ ஆரம்பித்துவிட்டாய் என நான் சொல்லவில்லை. வாழ்ந்து கொண்டிருப்பதும் தானாகவே புரியட்டுமே!

கண்டு மாதங்கள் கடந்தும் மனதில் குறுகுறுத்துக்கொண்டிருக்கும் ஒரு படம் “பிரணயம்”. அச்சுதமேனன், கிரேஸ் யதேச்சையாக சந்தித்து காதல் கொண்டு கடிமணம் புரிந்து மகனுக்கு இரண்டரை வயதாகும்போது எதனாலோ விவாகரத்துப் பெற்று பிரிந்து விடுகின்றனர். மகன் தந்தை வளர்ப்பில். நாற்பது வருடங்கள் கரைந்த ஒரு முதுபொழுதில் மாரடைப்பு ஏற்பட்டு ஓய்விலிருக்கும் சூழலில், ஜெயப்பிரதாவை ஒரு லிப்டில் சந்திக்க நேர்கிறது. இன்ப அதிர்ச்சியில் இரண்டாம் முறை நெஞ்சுவலியில் மயங்கிவிழ, ஜெயப்பிரதாவே அவரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டி வருகிறது. கலங்கிய மனதோடு வீடு திரும்ப, தத்துவத்தில் துறைப் பேராசிரியாக இருந்து ஓய்வுபெற்று, பக்கவாதத்தில் ஒரு பக்கம் விழுந்து கிடக்கும் தன் நாற்பதாண்டு காலக் கணவன் மேத்யூஸிடம் அச்சு குறித்துச் சொல்கிறாள். இரண்டு குடும்பமும் ஒரே அபார்ட்மெண்டில் வசிக்கிறது. இரண்டு குடும்பத்தினருக்கும் பழைய கதைகள் தெரிய வருகின்றன. அவர்கள் மூவருக்குள்ளும் மிகஅழகியதொரு நட்பு பூக்கிறது. மனைவின் முன்னாள் கணவனை எதிர்கொள்ளும் மேத்யூஸிடம் கொட்டிக்கிடக்கும் புரிதலும், அன்பும் பொறாமைகொள்ள வைக்கிறது. அவர்களின் நட்பை அவர்களின் இரு குடும்பமும் அதிர்ச்சியாய்ப் பார்க்கிறது. ஒரு கட்டத்தில் கொச்சைப்படுத்துகிறது. 



ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் மூவரும் புறப்பட்டு நெடும் பயணம் துவங்குகின்றனர். ஒவ்வொன்றையும் கொண்டாடுகிறார்கள். பயணிக்கிறார்கள், தாங்கள் மகிழ்ந்திருந்த இடங்களைப் பார்க்கிறார்கள், குடிக்கிறார்கள், ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், வாழ்வின் அற்புதமான மகிழ்வினை அனுபவிக்கிறார்கள். அப்போது மேத்யூஸ் உதிர்க்கும் ஒரு அற்புத வரி “சொப்னங்கள் காண் மனோகரமானது ஜீவிதம்” (Life is beautiful than dreams). படம் பார்க்கும் நொடியில் வழமையாய் விழும் கூர்மையான வசனங்களைக் கடந்து செல்வது போல் என்னால் இந்த வரியைக் கடந்து சென்றுவிட முடியவில்லை. கனவுகள் எத்தனை வர்ணங்கள் நிரம்பிய ஒன்று. எல்லைகளை உடைத்தெறிந்து விரும்புமளவிற்கு நீட்டித்துக்கொள்ளும் அனுமதியுண்டு. பூட்டுகள் கிடையாது. சன்னல்களைத் திறந்து ஒரு கையில் கடலையும் மறுகையில் மேகத்தையும் தொட கனவில் அனுமதியுண்டு. எத்தனையெத்தனை அனுமதிகள் இருந்தென்ன பயன். மனதையும் உடலையும் உயிரையும் உலுக்க, உறையச் செய்ய, குதூகலிக்கச் செய்ய வாழ்வின் ஆசிவர்வதிக்கப்பட்ட ஒரு நிஜமான பொழுதில்தான் முடியும்.

வாட்ஸப்பில் எங்கள் நண்பர்களுக்குள் ஒரு குழு உண்டு. பெரும்பாலும் தங்களுக்கு வரும் நகைச்சுவைத் துணுக்குகளை, அரசியல், சினிமா பகடிப் படங்களை அங்கு பகிர்ந்து கொள்வதுண்டு. அவ்வப்போது குரல் குறிப்புகளையும் அனுப்பிக்கொள்வதுமுண்டு. அப்படியான ஒரு சூழலில் ஒரு நண்பர் தாம் சொல்லவிரும்பும் ஏதேனும் பொதுத் தகவலை, வித்தியாசமான கதை வடிவிலானதை தன் குரலில் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். மற்றவர்களுக்கு அதற்கு அவ்வழியாகவே மறுமொழி செய்யத் தெரியவில்லையெனினும், அவர் அனுப்பிய குரல் பதிவுகள் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அதை எல்லோருமே அவரவர் வழியில் செம்மையாக செய்ய முயன்றால், மிக முக்கிய ஆவணமாக எடுத்தாளவும் இயலும். ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டேதான் இருக்கின்றோம். எதற்கோ செய்கிறோமென்பதைவிட எதற்காகச் செய்கிறோமென கொஞ்சமே கொஞ்சம் புரிந்துகொண்டால் போதும்.

காலையிலும், இரவிலும் சம்பிராத வணக்கங்களை அனுப்பிக்கொண்டிருந்த தங்கை, சில நாட்களாய் காலையில் தான் கேட்டுக்கொண்டிருக்கும் பாடலை, ஓரிரு நிமிட அளவிற்கு ஒரு துண்டாய் வாட்ஸப் வழியே பிடித்து அனுப்பத் துவங்கினாள். ஏதோ ஒரு மனப்போக்கில் துவங்கும் அந்த நாளின் துவக்கத்தில் ச்சிலீரென வந்து விழும் ஒரு இசைத்துண்டு சொல்வதற்கரிய ஒரு மனநிலையில் முங்கியெடுக்கும். அந்தப் பாடலின் முன்னும் பின்னுமான வரிகளைத் தேடி மனசு அசைபோடும். அது எந்தப் படமென யோசிக்கத் தோன்றும். அந்த வரிகளுடனான பழைய நினைவுகளை மீட்டியெடுக்க மனம் விழையும். ஒருநாள் ”உனக்கும் பாடவரும் தானே!” எனக் கேட்டேன். இப்போது அவள் குரலில் அவ்வப்போது ஓரிரு வரித் துண்டுகள் வந்து செவி நுழைந்து மனதை நனைத்தபடி.

ஏதோ ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு முயற்சி, ஒரு காட்சி, ஒரு நிகழ்வு, ஒரு திரைப்படக் காட்சி போதுமாயிருக்கிறது. சற்றே புரட்டிப்போட… சற்றே என்ன சற்றே முழுதுமாய்ப் புரட்டிப் போடவும் கூட. வாழ்தலைவிட இனிதாய் என்ன இருந்துவிடப்போகிறதென்பதே இதன் இறுதி வரியாய் இருக்க வேண்டுமெனவும் ஏதோ ஒன்று சொல்கிறது.

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...