முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்

 Mukundan Unni Associates - மலையாளம்

டைட்டில் கார்டில் Smoking Kills எனப் போடும்போதே ‘கொன்னு களையு’ எனும் குரலே நிமிர வைத்துவிடுகின்றது.



மலையாள சினிமா இன்னுமொரு பரீட்சார்த்த முயற்சியில் இறங்கியிருப்பதாகவே இந்தப் படத்தை எடுத்துக் கொள்கிறேன்.
'நெகடிவ் குடோன்’ என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கும் படத்தில், அது சொல்லப்பட்ட விதத்தை ஒரு கலைப் படைப்பாக ரசிக்கும் அதே தருணத்தில், வினித் சீனிவாசன் மாதிரியான இலகுவான, எவரும் ஏற்கும் முகத்தை இதற்குப் பயன்படுத்தியிருப்பதை மிகுந்த அச்சத்தோடுதான் உள்வாங்குகிறேன். பலரின் சமூக வலைதள முகப்புப் படங்களாக 'சித்தார்த் அபிமன்யு’ மற்றும் 'ரோலக்ஸ்’ அலங்கரிப்பதுபோல 'முகுந்தன் உன்னி’யும் அலங்கரிக்கத் தொடங்கிவிடுமோ எனும் அடிப்படை அச்சமே அது!
“இப்படி ஒரு படத்தில் நீ நடிக்கலாமா!?” என வினித் சீனிவாசனைக் கேட்டபோது, அவரிடம் உதவியாளராக இருந்த இயக்குனரின் இந்தக் கதையை எந்த நடிகரும் ஏற்க மறுத்ததால், தானே நடித்தேன் என்று சொன்னாராம். ஒருவேளை தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வினித் இதைச் சரியான வாய்ப்பாக நினைத்திருக்கலாம்.
படம், இந்த உலகில் இல்லாத எந்தவொன்றையும் மிகைப்படுத்திக் காட்டிவிடவில்லை. முழுதாக உள்வாங்கிப் பார்த்து முடிக்கும்போது, தம் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிகளை(!) ஈட்டிய பல்வேறு ஆளுமைகளின்(!) இன்னொரு பக்கம் நினைவுக்கு வராமல் போகாது. எல்லாத் துறைகளிலுமிருந்தும் நினைவுக்கு வருவார்கள்.
“தோற்றுப் போவதைவிடச் சிறந்தது செத்துப்போய் விடுவது” என்பதைக் கோட்பாடாகக் கொண்டவன் என்னவெல்லாம் செய்வானோ அதைத்தான் ’என்னைப்போல் நான் மட்டுமே உண்டு’ எனும் இறுமாப்பு கொண்ட முகுந்தன் உன்னி செய்கிறான்.
ஒரு 'லவ் யூ' சொல்வதற்கு அவனுக்கு மனசு இளகவேண்டியதில்லை, ஹார்மோன் தூண்டப்பட வேண்டியதில்லை, ஆக்ஸிடோசின் சுரக்க வேண்டியதில்லை, அவன் வைத்திருக்கும் கணக்கு ’டேலி’ ஆனால் போதும்.
இறுதிக் காட்சியில் மீனாட்சி ”வெற்றியடைந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் Hardwork, Dedication, Perseverance கொண்டு வென்றார்கள்னு நினைக்கிறியா? அதெல்லாம் தன்னம்பிக்கை புத்தகங்களுக்கான தந்திரக் கதைகள்” எனச் சொல்லும் காட்சியை, அதனுள் இருக்கும் முரண்களோடு மிகவும் ரசித்தேன்.
எந்த Hardwork, Dedication, Perseverance, Discipline எல்லாம் இருந்தும், தன்னால் வெல்ல முடியவில்லை என்று, முகுந்தன் உன்னி பாதை மாறுகிறானோ அதன்பிறகு அவன் செய்யத் தொடங்கியதில் Hardwork, Dedication, Perseverance 100% இருந்தது, என்ன Discipline மட்டும் அவன் வடிவமைத்த உலகத்திற்கானதாக இருந்தது.
குரூரமான மரணத்தை அழகிய கவிதை வாசிப்புபோல் அவன் கருதுகையில் உள்ளுக்குள் அதிரும் நடுக்கம், நமக்கு நம்மை உணர வைக்கும்.
’தவறு செய்தால் சாமி கண்ணைக் குத்திவிடும், கெட்டவர்கள் கடைசி சீனில் செத்துப்போய்விடுவார்கள் அல்லது திருந்திவிடுவார்கள்’ உள்ளிட்ட நம்பிக்கை(!) கொண்டோர் படத்தைத் தவிர்த்துவிடலாம். இல்லாவிடில் தூக்கம் வராது... 😉 மற்றபடி அவரவர் விருப்பம்.

No comments: