சாமானியனின் வெற்றி அவனுக்கானது மட்டுமல்ல


மனிதர்களுக்கு வெற்றி மீதிருக்கும் பேரார்வம் எப்போதும் அலாதியானது. அந்த ஆர்வம் இத்தகையதானது என்று எந்த வடிவத்திற்குள்ளும் அடைக்க முடியாது. ஒவ்வொருவரின் வெற்றியும் ஒவ்வொருவிதமான உணர்வுகளைக் கொடுக்கலாம். சாமானியர்களின் வெற்றி சக சாமானியர்களுக்கு சிற்சில நேரங்களில் பொறாமையைக் கொடுக்கலாம். பல நேரங்களில் தானே வென்றதுபோல் ஒருவித மகிழ்ச்சியையும், யாரும் வெல்ல முடியும் எனும் பெரு நம்பிக்கையையும் தருவதுண்டு.

சுராஜ் வெஞ்சரமூடு :

2013ல் பார்த்த ஸ்பிரிட் படத்தில் வரும் மந்திரி முரளிகிருஷ்ணனாகத்தான் எனக்கு அறிமுகம். இத்தனைக்கும் அவர் ஓரிரு காட்சியில்தான் வருவார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோகன்லாலிடம் சிக்கி திணறும் பாத்திரம். படத்தில் வரும் எத்தனையோ சில்லறைப் பாத்திரங்களில் ஒன்றுதான் அந்தப் பாத்திரமும். ஆனாலும் அப்பவே அவர் யார், என்ன, ஏதென்று தேடினேன். அவர் மலையாள திரையுலகத்தில் பிரபலமான காமெடி நடிகர் என அறிய முடிந்தது. அவரின் மற்ற படங்கள் எதையும் தேடிப் பார்க்க முயவில்லை. அதற்கான தேடலும் என்னிடம் இல்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவரைப் பார்த்த்து தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும்படத்தில்தான். நாயகனுக்கு நிகரான பிரசாத் எனும் சவால் நிறைந்த பாத்திரம். இதற்கிடையே அவர் சுமார் எழுபது படங்களில் நடித்திருந்தார். அவற்றில் நான் ஹவ் ஓல்ட் ஆர் யூ, கம்மாட்டிப்பாடம் ஆகிய படங்களில் கண்டிருந்தாலும், மனசுக்குள் இருந்ததென்னவோ அந்த மந்திரி முரளிகிருஷ்ணன்மட்டுமே.

தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும் பிரசாத் முதன்முறையாக முரளிகிருஷ்ணனை மன நாற்காலியில் இருந்து அகற்றிவிட்டு இடம் பிடித்தார். மலையாள சினிமாக்கள் மீது பல தருணங்களில் ஏற்பட்ட பிரமிப்பு இந்த பிரசாத் பாத்திரத்தின் வழியாகவும் கூடியது. காலம் காலமாய் இவர்கள் மட்டுமே நடிக்க வேண்டும் என்று பட்டா போட்டிருக்கும் சூழல் நல்லவேளையாக மலையாளப் படங்களில் அவ்வளவாக இல்லை என்றே கருதுகிறேன்.

அந்த இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் எழுபது எண்பது படங்கள் நடித்திருந்த சுராஜ் வெஞ்சரமூடு, 2017ம் ஆண்டிற்குப் பிறகு ஆண்டுக்கு ஒற்றை இலக்கத்தில்யே நடித்து வருவதாக அவரின் பட்டியல் சொல்கின்றது. எண்ணிக்கை முக்கியமல்ல என்பதற்கு அவரும் தற்போது ஓர் உதாரணம். பலரின் பரிந்துரைகளில் இடம் பெற்ற ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன், ட்ரைவிங் லைசன்ஸ் மற்றும் விக்ருதி ஆகிய படங்களைப் பார்த்தபோது, சுரேஜ் வெஞ்சரமூடு அபாரமான வளர்ச்சியை எட்டியிருக்கிறார் என்பது புரிந்தது.

நாற்பதுகளில் இருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு தந்தையைப் போல் ராணுவத்தில் சேர முற்பட்டு, முடியாமல் போக, ஸ்டாண்டப் காமெடியன் மற்றும் மிமிக்ரி கலைஞனாக மேடையேறியிருக்கிறார். மெல்ல திரைப்படம் அவரை உள்ளிழுக்க நகைச்சுவை நடிகராக ஓரிரு காட்சிகளில் தோன்றி, பிறகு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வருடத்திற்கு 25 படங்கள் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விறுவிறுவென எண்ணிக்கைகளைக் கூட்டியிருக்கின்றார். சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சுராஜ் 2000 முதல் 2010 வரை நகைச்சுவை நடிகனாகவே தன்னை வைத்துக் கொண்டிருந்திருக்கிறார். இதில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மாநில விருதுகளும் பல முறை பெற்றிருக்கின்றார்.

தனித்த பார்த்திரங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்க, எண்ணிக்கைகள் குறைந்து, தன்னை இன்னொரு கோணத்தில் மிகச் சிறப்பாக நிரூபிக்க போதிய களம் கிடைத்திருக்கின்றது. ஆன்ட்ராய்ட் குஞ்சப்பனில் வரும் பாஸ்கர பொதுவால் அவரின் வாழ்நாள் சாதனை பாத்திரங்களின் பட்டியலில் இடம் பெறலாம். ட்ரைவிங் லைசன்ஸ் மிக நுண்ணியதொரு களம். உண்மையில் ப்ருத்விராஜ் எனும் பிரமாண்டத்தை உடன் வைத்துக் கொண்டு புகழெய்துவது அத்தனை எளிதன்று. எனக்கென்னவோ, பிருத்விராஜும்கூட அந்தப் படத்தில் சுராஜ் களமாடுவதற்கு இசைவாய் இடம் கொடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதுவேதான் தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும் படத்தில் பஹத் வாயிலாக நடந்திருக்கலாம்.




சௌபின் சாஹிர்:

அன்னயும் ரசூலும், அஞ்சு சுந்தரிகள், இயோபின்டே புஸ்தகம் உள்ளிட்ட படங்களில் கண்டிருந்தாலும், பிரேமம் படத்தில் ஜாவா சாருக்கு யோசனைகளை அள்ளித்தரும் சிவன் சார் பாத்திரம்தான் சௌபின் சாஹிரை மனதில் நுழைய வைத்தது. நுழைந்தவருக்கு நல்லதொரு இடம் பெற்றுக் கொடுத்தது மகேஷிண்ட பிரதிகாரம் கிரிஸ்பின். அதன்பிறகு அவர் எந்தப் படத்தில் தென்பட்டாலும் கவனிக்கத் தவறுவதில்லை. அந்த வரிசையில் இடம் பெற்றவர்கள்தான் களி படத்தில் வந்த பிரகாசன் மற்றும் கம்மாட்டிபாடத்தில் வந்த கராத்தே பிஜு. கூடுதலாக காம்ரேட் இன் அமெரிக்கா, பறவா, மாயநதி ஆகியவற்றில் கண்டிருந்த நேரத்தில் சூடானி ஃப்ரம் நைஜீரியாமீண்டும் மலையாள திரையுலகத்தின் மீது பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

நடிகர்களுக்கான பாத்திரம், நடிகர்களுக்கான கதை என்று வீம்பு பிடிக்காமல், கதைக்கான பாத்திரம், அந்தப் பாத்திரத்திற்கான நடிகர் என்று தயவுதாட்சன்யமின்றி இறங்கி அடிப்பதில் மலையாள திரையுலகம் முன்னணியில் இருப்பது நிரூபிக்கப்பட்டது. ஆம் காமெடியன் சௌபின் சாஹீர்ஹீரோஆக்கப்பட்டுவிட்டார். எனினும்கூட வைரஸ் படத்தில் அவர் அந்த சின்னப் பாத்திரத்தை மறுக்காமல் ஏற்று, அதுவே முக்கியப் பாத்திரம் ஆகி தனக்கென இடம் பிடித்திருந்தார். இடையில் இயக்குனராக அவர் துல்கர் சல்மானை வைத்துபறவாபடத்தையும் இயக்கியிருந்தது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது.

இந்தத் தருணத்தில்தான் சௌபின் சாஹிர் தனக்கான மிக முக்கியாமான அங்கீகாரத்தைப் பெறும் வாய்ப்பு கிட்டியது. பஹத் ஃபாசில் தனது தயாரிப்பில் தன்னை சற்றே சுருக்கிக் கொண்டு அழகியதொரு வாய்ப்பினைகும்ப்ளாங்கி நைட்ஸ்படத்தில் சாஜி பாத்திரத்தில் சௌஃபினை பொருத்தினார். அந்த வாய்ப்பு சௌபின் சாஹிரை நல்லதொரு உயரத்திற்குக் கொண்டு செல்ல, ‘அம்பிளிஅவரை அதகளமான கொண்டாட்டத்திற்கு இட்டுச்சென்றது என்று சொல்லலாம்.
 ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்சன் 5.25’ மற்றும்விக்ருதிசௌபின் சாஹிருக்கும் சுராஜ் வெஞ்சுரமூடுக்கும் கற்பனை செய்ய முடியாத அற்புதமான வாய்ப்பாக அமைந்தது

சௌபின் 2003ல் மலையாள திரைத்துறையில்  உதவி இயக்குனராக வாய்ப்பு பெற்று நுழைந்திருக்கிறார். இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில், ஃபஹத் ஃபாஷில் அறிமுகமான ’கையெத்தும் தூரத்துபடத்தில் சௌபின் சாஹிரும் நடித்திருக்கிறார். ஆனால் அடுத்த பத்து ஆண்டுகள் நடிப்பில் இல்லாமல் உதவி இயக்குனாராக பலரிடம் பணிபுரிந்து, 2013ம் ஆண்டில்தான் அன்னயும் ரசூலும் படத்தின் மூலம் திரைக்கு வந்திருக்கிறார்.

உதவி இயக்குனர் என்பதிலிருந்து முழு மூச்சாக நடிப்பின் பக்கம் திரும்பி சின்னச் சின்னப் பாத்திரங்கள் மூலம் தனக்கான அடையாளத்தை சில ஆண்டுகளிலேயே பிடித்துக் கொண்டார். சூடானி ஃப்ரம் நைஜீரியாவிற்குப் பிறகு ”கும்ப்ளாங்கி நைட்ஸ்வெற்றி அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்திருக்கலாம். விக்ருதி சமீர் அவரின் மறக்க முடியா பட்டியலில் முக்கிய இடம் பிடிக்குமெனக் கருதுகிறேன். அவரால் ‘மெட்ரோயில் பாம்பு’ எனப் பெயர் சூட்டப்பட்ட, எல்தோ குறித்த உண்மைகள் ஊடகங்கள் வாயிலாக உலகிற்குத் தெரிந்த கணத்தில், சமீர் பாத்திரம் சுமக்கத் துவங்கும் குற்ற உணர்வு, பதைபதைப்பு, குமைதல் உள்ளிட்டவற்றை முகத்தில் அப்பட்டமாக தரவிறக்கம் செய்து, உடல் மொழியாலும் இறுதிக்காட்சி வரை சுமந்ததில் பெரு வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

 *

மலையாளத் திரைப்படங்கள் குறித்து எப்போது எழுத முனைந்தாலும், அதில் வெறும் புகழ்ச்சியும், தமிழ் மொழித் திரைப்படங்களுடனான ஒப்பீடு மட்டும் எனக்கு இருந்து விடுவதில்லை. அங்கே நிகழும் அற்புதமான சில மாற்றங்கள் ஏற்படுத்தும் வியப்புகளே எழுத்தாக உருவெடுத்து நிற்கும். மிகச் சாதாரணம் என நாம் நினைத்து கடக்கும் சம்பவங்களே அந்தத் திரைப்படங்களில் கதையாக மாறி திரைக்கதையாவடிவெடுத்து, தனக்குப் பொருத்தமானவர்களைக் கோரி நல்லதொரு படைப்பாக அமைந்து விடுகின்றன.

உண்மையில் பெரிய நாயக பிம்பங்கள் விட்டுக்கொடுக்கிரார்களா அல்லது திரைக்கதையும், இயக்குனர்களும் சமரசமின்றிக் கோருகிறார்களாக எனத் தெரியவில்லை. சுராஜ் வெஞ்சரமூடு, சௌபின் சாஹிர் போன்ற நகைச்சுவைப் பாத்திரங்களாக மட்டுமே இருந்த சாமானியர்கள், நாயகர்களுக்கான அளவீடுகளுக்குள் அடங்காதவர்கள் வெல்வதற்கான வாய்ப்பு அங்கு பிரகாசமாக இருக்கின்றது.

சாமானியனின் வெற்றி அவனுக்கானது மட்டுமல்ல, அவனைப் போன்றிருக்கும் பலருக்குமானது.

(பொறுப்பேற்றல் : நான் பார்த்த  குறைவான படங்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டது. முழுமையான ஆய்வு சார்ந்தது கிடையாது)

1 comment:

heymonthninja said...

மிகவும் சிறப்பான கட்டுரைங்க சார் 👏🏻👏🏻👏🏻💐💐💐