Showing posts with label திரையெனும் திணை. Show all posts
Showing posts with label திரையெனும் திணை. Show all posts

Jan 9, 2023

உணர்தலும் உணர்ச்சிகளும் சார்ந்த இடம்

 ஒரு புத்தகம் இப்படியும் செய்யுமா என்ற பிரமிப்பின் உணர்வால் உந்தப்பட்டு இதனை எழுதுகிறேன். கடந்த சில வருடங்களாக உங்கள் எழுத்துடன் பயணிப்பதால், அதனால் பயன் பெற்றதால், பண்பட்டு வருவதால், புத்தகம் கிடைத்தபோதே "திரையெனும் திணை" மிகுந்த ஆவலை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் வாசிப்பின் ஊடேயும் வாசிப்பின் முடிவிலும் இப்படியொரு ஆசுவாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. எனவே இதை அனுபவப் பகிர்வு என்பதையும் தாண்டி "நன்றி” செலுத்தும் முகமாக எடுத்துக் கொள்ளவும்.



உங்கள் புத்தகம் என்ற உற்சாகத்துடன் வாசிக்க துவங்கினேன். சில பக்கங்கள் கடந்த நிலையில், அலையடிக்கும் கடல் போல மனம் ஆர்ப்பரிக்கத் துவங்கிவிட்டது . கிளம்பிய எண்ணங்களை எங்காவது கொட்ட வேண்டும் எனத்தோன்றியது. எழுதத் துவங்கினால், பல பக்கங்கள் நீளும்.

நினைவு அடுக்குகளில் மறைந்தவை, மறைத்தவை, உறைந்தவை என எல்லாவற்றையும் என் முன்னே இழுத்து விட்டது இந்தக் கட்டுரைகள்.
மிகவும் அசௌகரியமாக உள்ளது. புதைக்கப்பட்ட நினைவுகள் மீண்டால் வரக்கூடிய திணறலை என்ன செய்வது எனத் தெரியாமல் உங்களிடம் இறக்கி வைக்கிறேன். என் வார்த்தைகள் பல பக்கங்கள் நீளலாம். உங்கள் நேரத்தை விரயம் செய்கிறேனோ என்ற எண்ணம் என்னை தடுக்கவும் செய்கிறது. அதைப் புறந்தள்ளி, இளைப்பாற இடம் தேடி வேறு வழியின்றி தொடர்கிறேன்

’வேட்கையோடு விளையாடு’ வாசிப்பின் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது என்றால், ’திரையெனும் திணை’ - உணர்தலின் அடுத்த நிலைக்கு அழைத்து வந்துள்ளது. வேட்கையோடு விளையாடு சுயநேசிப்பை சொல்லிக் கொடுத்தது. அதற்குண்டான வழியில் பயணிக்கும்போது, சுய நேசிப்பிற்கு சுய மன்னிப்பு தேவை என்று நான் புரிந்து வைத்திருந்தேன். இதனைப் புரட்டி போட்டுள்ளது ’திரையெனும் திணை’.

பதிமூன்று ஆண்டுகளாக உள்ளே வதைத்துக் கொண்டிருந்த ஒரு குற்ற உணர்ச்சி - என்னில் சூழ் கொண்ட ஒரு ஜீவனை கருவிலேயே அழித்தது. அந்த நினைவு வரும்போதெல்லாம் பிறக்காத அந்த குழந்தைக்காக அழாமல் இருக்க முடியாது. கணவரும் நானும் இணைத்து எடுத்த முடிவெனினும், அவரது காரணம் வேறு, எனது காரணம் வேறு. இருப்பினும் நான் மறுத்திருந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டிருப்பார் என்ற குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே இருந்தது. ’வினாக்களற்ற விடைகள்’ வாசிக்கும்போது நினைவூட்டப்பட்ட அந்தக் குற்ற உணர்ச்சி மீண்டும் அழச்செய்தது. ஆனால் இதுவே அந்தச் சம்பவத்திற்காக, நான் சிந்தும் கடைசிக் கண்ணீராய் இருக்கும் என்பதை கட்டுரையின் முடிவில் உணர்ந்தேன்.

’நியாயமான காரணங்களால் தன் கனவில் உறுதியாக நிற்கும் ஒரு பெண் தன் கருவை கலைக்க விரும்பினால் அது அவரின் உரிமை’ - இந்தத் தவறுக்கு எனக்கு மன்னிப்பே கிடையாது என்று நான் என்றோ என்னுள்ளே பதிய வைத்திருந்ததை, நடந்த சம்பவத்தில தவறு எதுவுமில்லை என்று உணர வைத்தது மேற்குறிப்பிட்ட வரிகள். எப்போதாவது கீறி ரணப்படுத்தும் அந்த கூர்நினைவினை வேருடன் பிடுங்கி தூர வீசி விட்டேன் .

இத்தனை ஆண்டுகளாக என்னை நானே மன்னிக்க முடியாத ஒரு நிகழ்வு - குற்றமே இல்லை - என்பதை உணர்ந்த அந்த நொடியினை எப்படி எழுத்தில் சொல்வதென்று தெரியவில்லை.

அதே கட்டுரையில், ’அரை நூற்றாண்டுக்கு முன்பாக இயற்றப்பட்ட சட்டத்தை அப்படியே வைத்து கொண்டு மௌனம் காத்திருக்கிறோம்’ - சட்டக்கல்லாரி பாடத்திலும் சட்டசபையிலும் வைக்க வேண்டிய ‘Subject’.

ஒரு கட்டுரை மட்டுமில்லை, பல கட்டுரைகள் அதனதன் போக்கில், எனது புரிதலின் அடிப்படையில் ஒவ்வொரு வகையில் என்னைச் சுத்திகரித்துள்ளன.

’குடும்பம் விரும்புவதையே அந்த வீட்டுக்கு வந்த மருமகளும் விரும்ப வேண்டும் என்பதை ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் தெளிவாக, அழுத்தம் திருத்தமாக உணர்த்தி வெகு காலம் ஆகிவிட்டது’ - என் இருபதுகளும் இந்த வரியில்தான் ஆரம்பித்தது. அப்போது ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு முகத்தினை வைத்துக்கொண்டதெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றது. ஒருகட்டத்தில் நிஜ முகமே மறந்தும் போனது. காலமும், சூழலும், கிடைத்த வாய்ப்பும், எடுத்த முயற்சிகளும் பலவற்றை மாற்றியது என்னளவில் வரமே.

நினைவு வரத்துவங்கிய பால்ய காலத்தில் தாத்தா பாட்டி வீட்டில் சில ஆண்டுகள் வளர்ந்தேன். என் தாத்தாவின் குரலைவிட பாட்டியின் குரலே எப்போதும் சத்தம் அதிகமாயிருக்கும். பாட்டி வைத்ததுதான் சட்டம். அந்தப் பாட்டியின் மகனான என் அப்பா - நல்ல 'அப்பா' மட்டும்தான். அப்பா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவர் அம்மாவுக்கு தந்த தழும்புகளை நினைவுபடுத்தினால், உள்ளே கசியும் ரத்தத்தின் வாசம் இப்போதும் நாசியை நெருடும்.

எப்போதும் தன் அம்மா, அப்பாவிடம் கையில் கிடைத்ததில் அடி வாங்கி அலறுவதை பார்த்து வளர்ந்த என் கணவரிடம் அதன் சாயல் எப்போதும் வந்ததில்லை.

பாட்டி, அம்மா, மாமியார், நான் இன்னும் நெருக்கத்தில் உள்ள பல 'மருமகள்'களை நினைவுக்குக் கொண்டுவந்து அலசுகிறேன். என் கதை இப்போது நன்றாகத்தானே போய்க்கொண்டுள்ளது, எதற்கு இந்த வீண் ஆராய்ச்சி எனத் தோன்றலாம் .

என் மகனும் சில வருடங்களில் ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை துணையாய் மாறுவான். ஒரு அம்மாவாக ஒரு பெண்ணாக ‘சக மனுஷியின் உரிமையை’ இப்போதிருந்தே அவனுள் பதிய வைக்க வேண்டும். ’The Great Indian Kitchen’ பார்க்கும்போது தோன்றாத இந்த எண்ணத்தை, ’அவர்களுக்கு பெயர்கள் தேவையா?’ ஆழமாக விதைத்துள்ளது.

ஆண் குழந்தைக்கு ஒரு அம்மா எப்படி இதையெல்லாம் புரிய வைக்க முடியும் என்று எனக்கிருந்த பெரும் சவாலிற்கு கண்டிப்பாக இப்புத்தகம் துணை நிற்கும் .

திரைப்படங்கள் 'பாடம்' என்றால், அந்த திரைப்படத்தின் மைய கருத்தை நுணுக்கமாக மனதிற்கு கடத்தும் உங்கள் கட்டுரைகளே எனக்கு ’ஆசான்’.

’உறவுகள் இணைந்திருக்க ஆயிரம் நேச இழைகளை நெய்தாலும், விலகி இருக்க ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆயிரமாயிரம் காரணங்கள், நிலைப்பாடுகள் உண்டு’ - இந்த வரிகளைக் கட்டுரையிலிருந்து தனித்து எடுத்து சிந்திக்கிறேன். சங்கடமும் சச்சரவும் உள்ள இடங்களில் பொருத்திப் பார்க்கிறேன். பக்கமும் தூரமுமாய், ஒட்டியும் ஒட்டாமலுமாய் உள்ள உறவுகளின் நிலையினைப் புரிய வைத்த வரிகள். எதிர் தரப்பின் நியாயங்களும், அவர்தம் சூழல்களும் இப்போது விளங்குகிறது. மனதால் விலகி இருந்தாலும் அந்த உறவுகளின் மேல் புதிதாய் பிரியம் மலர்கிறது.

முப்பதுகளின் பிற்பகுதியில் கணவரை இழந்த அம்மாவிற்கு மறுமணம் செய்து வைக்க நினைத்த ஒரு மகளின் முகம் மனதை நிறைத்து விழிகளில் நீர் திரையிட வைத்தது - துணை நலம் சேறல்.

வெளிநாட்டிலிருந்து அழைத்த குடும்ப உறவு, சாணம் கொண்டு வாசல் மெழுகியது, பலகாரம், அன்றைய உணவுப்பட்டியல் என சின்னச்சின்ன விஷயங்களைக்கூட கேட்டு தெரிந்து கொண்டார். எப்போது பேசினாலும் அவர் அப்படித்தான். அவரது விசாரணை அவ்வப்போது சலிப்பளிக்கும். அந்தச் சமயம் என் மனநிலையை பொறுத்து அந்த விசாரணைகளை அக்கறை அல்லது அதிகாரம் என்று எதோ ஒரு பட்டியலில் சேர்த்து விடுவேன். ஆனால் அவருடன் பேசி முடித்த சில மணி நேரங்களில் இந்தக் கட்டுரையை வாசிக்க வைத்ததுதான் காலத்தின் கணக்கோ என்னவோ?

’குடும்பத்தை விட்டு விட்டு தனித்து போவோருக்கு தம்மையும் அறியாமல் ஒரு பதட்டம் இதயத் துடிப்பினூடே கலந்திருக்கும். அதை அவ்வளவு எளிதில் தணித்து விட முடியாது. அதை எந்தக் கருவி கொண்டும் அளக்கவும் முடியாது’ - இந்த வரிகளை வாசித்து முடிக்கவும், அத்தனை விசாரணைகளுக்கும் பின்னாலிருந்தது ’எது’ என்று தெளிந்தது. மனதின் ஒரு ஓரத்தில் இருந்த எண்ணக் கசடை துவைத்து காயப்போட்டது ’Pathemari’ குறித்து பேசும் ’துவைக்காத சட்டை’.

இதே கட்டுரையில் ’அப்பா எனும் வாசனையை...’ இந்த வார்த்தைகளை விட்டு நகர முடியவில்லை. ஏனெனில் என் அலமாரியில் யாருக்கும் தெரியாமல் அப்பாவின் வாசத்தை ஒளித்து வைத்துள்ளேன்.

பிரிவின் வாதைக்கு விலையேது? பிரிவை நினைத்து எத்தனை அழுதாலும் , எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வற்றாதுபோல. பிரிந்தாலும் அவர்கள் மேல் கொண்ட பிரியம் ஊறி கொண்டே இருப்பதாலோ என்னவோ.

’PAD MAN’ திரைப்படத்தைச் சொல்லும் கட்டுரையில், ஒரு தலைமையாசிரியரின் அணுகுமுறையை குறிப்பிடும் போது - ’அந்த மொழி சரி, தவறு என்று பார்த்த சில நிமிடங்களில் நாம் தீர்மானிக்க முடியாது’ - இந்த ஒரு வரி அந்த தலைமை ஆசிரியரின் மேல் எந்த நிழலும் விழாமல் நிதானிக்க வைக்கிறது. ஒரு இடம் நோக்கி பயணிக்கையில் வழியில் காணும் ஒரு மலையின் அழகோ, ஆற்றின் போக்கோ சில வினாடிகள் நின்று கவனித்து ஒரு உற்சாகத்தை கொடுத்து, சரி கிளம்பு என்று வழியனுப்பும். சேர வேண்டிய இடம் சேர்ந்த பின்னும்கூட இடையில் கிடைத்த அனுபவம் இனித்துக்கொண்டே இருக்கும். அதுபோலவே இந்த கட்டுரை கூட்டிச் செல்லும் இடம் வேறெனினும் இந்த வரியும் நினைவில் ஊறிக்கொண்டே இருக்கும். பார்த்த மாத்திரத்தில் யாரையும் எடை போடும் புத்தியை நிச்சயம் நிதானிக்க வைக்கும் .

நீர்ஜா திரைப்படத்தின் கட்டுரை 2018-ல் கொடுத்த தாக்கமும் அதை தொடர்ந்த உரையாடல்களும் இப்போதும் நினைவில் உள்ளது. அப்போது இருந்த புரிதலின் அடிப்படையில் - தனவேல் முருகனின் பெற்றோரையும், நீர்ஜாவின் தாயையும் , என் அம்மாவையும் ஒரே புள்ளியில் நிறுத்தியது அந்த கட்டுரை. இப்போது வாசிக்கையில் எந்த வரி அந்த வேலையை செய்ததோ, அது என்னை பார்த்து கண் சிமிட்டியது. ’அந்த கட்டுரையை வாசித்துணர்ந்த அன்றைய தினத்தில் அம்மாவிற்கு மீண்டும் ஒருமுறை நான் மகளாக பிறந்தேன்’ என்றால் அது மிகையாகாது. அன்றிலிருந்து எங்களுக்குள் ‘மாறாததும் மாற்ற முடியாததும்’ என்றிருந்த எல்லாமே திருத்தி எழுதப்பட்டு வருகிறது .

ஓட்டமுறி வெளிச்சம் திரைப்படம் - கொடூரத்தின் வலியை உயிரில் ஊடுருவ செய்கிறது உங்கள் வார்த்தைகளின் வலிமை - மிகுந்த சிரமத்துடன் அயர்ச்சியுடனும் வாசித்து முடித்தேன். அந்த படத்தை பார்க்கவே முடியாது என்ற முடிவுக்கு வரச் செய்துள்ளது கட்டுரை .

இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் சிலிர்த்ததை , சிலாகித்ததை, கரைத்ததை, கரைந்ததை எனச் சொல்லிக் கொண்டே போகலாம் .

’முனைகளிடையே நிகழும் அதிர்வு’, ’காடுகொல்லி’ - எங்கிருந்துதான் வார்த்தைகள் வசப்படுகின்றதோ?!

கடந்த 15 நாட்களாக இப்புத்தகத்துடன் பயணிக்கிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் நான் உணர்த்ததில் ஒரு பகுதியை மட்டுமே சொல்ல முற்பட்டேன். இத்தனை நீண்ட பதிவாக அமையும் என எதிர்பார்க்கவில்லை.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒன்றிரண்டு கட்டுரைகளை என்னால் 100% முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. மீள் வாசிப்பு செய்து, திரைப்படத்தை பார்த்து, மீண்டும் வாசிக்கும்போது வசப்படும்.

எல்லோரிடமும் உறங்கி கொண்டிருக்கும் ரகசியங்கள் ஏராளம்.
’மூன்றாம் நபருக்கு தெரிந்த ரகசியம் வெளியில் வராமல் போவதில்லை’ என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பீர்கள். அந்தப் பயத்திலேயே இரண்டாம் நபருக்குகூட தெரியாமல் புதைத்து கொண்டவை நிறையவே .

ஆழ்மன ரகசியங்களை கண்ணீரில் கரைந்து கொண்டே காகிதத்தில் எழுதி நெருப்பிலிடும் ஒரு பயிற்சி முறை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதன் பிறகு மனம் மிகவும் இலேசாகி விடும் என்பார்கள்.
அப்படி ஒரு ’மகத்தான’ அனுபவமாகவே இப்புத்தகம் அமைந்தது.

மனதின் பாரம் குறைந்துள்ளது .

’திரையெனும் திணை’ என்று எப்படி உங்கள் எண்ணத்தில் உதித்ததோ தெரியவில்லை - இந்த புத்தகத்திலேயே சில நாட்கள் வாழ்ந்திருந்தேன் என்றுதான் குறிப்பிட வேண்டும் .

#திரையெனும்திணை - உணர்தலும் உணர்ச்சிகளும் சார்ந்த இடம்.

‘கண்ணாடியில் முகம் பார்க்கும் போது சற்று உற்றுப் பார்த்தால், அவர்கள் அங்கு பிரதிபலிக்கலாம்’ என்று முடியும் ஒரு கட்டுரை .

உங்கள் எழுத்தைவிட அகம் காட்டும் கண்ணாடி வேறில்லை.


*

திரையெனும் திணை பெற்றிருக்கும் மிகக் கனமானதொரு அங்கீகாரம்! 

Jul 9, 2022

அன்பின் நிமித்தமாய்

 அடுத்தடுத்த நிகழ்வுகளில் ஒரு பள்ளி மாணவி மற்றும் ஒரு கல்லூரி மாணவி ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை 2018 மார்ச் மாதம் ஃபேஸ்புக்கில் சிறிய பகிர்வுகளாக எழுதியிருந்தேன். அந்தச் சூழலில்தான் 'புதிய தலைமுறை கல்வி’ வார இதழ் ஆசிரியர் அண்ணன் பெ. கருணாகரன் அழைத்தார்.

ஃபேஸ்புக் பதிவுகளைப் படித்ததாகக் கூறி ’அதையே கட்டுரை வடிவில் எழுதலாமே கதிர்’ என்றார்.
”சரிங்ண்ணா.... ட்ரை பண்றேன்’ என்று சொல்லிவிட்டாலும், முடியாது என்கின்ற பதிலுக்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்.
பொதுவாக எழுத முடியுமா என்று கேட்டால், ‘சிரமம்’ என்றோ, ‘முடியாது’ என்றோ மறுக்க எளிதாக வாய்ப்புகள் கிடைத்துவிடும். ஆனால் அவர் சொன்னது ‘எழுதலாமே’. முடியுமா என்று ஒருவரைக் கேட்பதைவிட, ’செய்யலாமே’ என்று சொல்லி செயல்படுத்துவதை அவரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்.
எழுத ஒப்புக்கொண்டாலும் மிகுந்த தயக்கம் இருந்தது. தயக்கம் என்பது வாரத்திற்கு 750 சொற்கள் எழுத முடியுமா என்றில்லை. மாணவர்களுடனான அனுபவம் குறித்து ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யமாக எழுத முடியுமா? அப்படி எழுதும் கட்டுரைகள் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற வகையென முத்திரை படிந்துவிடக்கூடாது உள்ளிட்ட தயக்கம் மட்டுமே. தயக்கங்களை கனமாய்ச் சுமந்தபடியே ஒப்புக்கொண்டேன்.
தொடருக்கான தலைப்புகளாக நிறைய யோசித்து இறுதியாக வேட்கையோடு விளையாடு என முடிவு செய்தோம்.
ஆரம்பத்தில் எத்தனை வாரங்கள் என்று தெரிந்திருக்கவில்லை. 2016ல் குங்குமத்தில் ஐந்து கட்டுரைகள் மட்டுமே எழுத முடியும் எனத் தொடங்கி உறவெனும் திரைக்கதை தொடரில் 25 கட்டுரைகள் எழுதிய அனுபவம், எத்தனை வாரங்கள் என்றாலும் இதையும் எழுதுவோம் எனும் நம்பிக்கையைக் கொடுத்திருந்தது.
ஒவ்வொரு வாரமும் கட்டுரையை அனுப்பிவிட்டு அவருடைய பதிலுக்காக காத்திருப்பேன். நானே எதிர்பார்த்திராத கோணத்தில் இருந்து அவருடைய பாராட்டு வரும். ஆரம்பம் முதலே அந்தப் பாராட்டு இதழ் ஆசிரியர், எழுத்தாளருக்குச் சொல்லும் பாராட்டாக மட்டுமே இல்லை. குறிப்பிட்ட ஒரு கட்டுரை எனக்கு படு வறட்சியாக இருந்தது. அந்தக் கட்டுரை குறித்தும் நேர்மையான தன் பார்வையைக் கொடுத்ததுதான் மிகுந்த மனநிறைவான அனுபவம். ஒருவேளை அந்தக் கட்டுரையை அவர் பாராட்டியிருந்திருந்தால் அதுவரையிலும் வந்திருந்த பாராட்டுகள் குறித்து எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திருக்கலாம். அவர் இதழ் ஆசிரியராக இருந்துகொண்டு, நல்லதொரு வாசகனாகவும் இடம் பெயர்ந்து அளித்த பாராட்டுகளே அவை. தொடர் எழுதிய காலத்தில் மகாராஷ்ட்ரா பயணத்தால் ஒருவாரம் கட்டுரை கொடுக்க முடியவில்லை. அதையும் மிக எளிதாக எடுத்துக்கொண்டார்.
தொடர் இருபத்து ஐந்து வாரங்களைத் தொட்டு 2018 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.
என்னதான் அவர் ஊக்கம் தந்து 25 வாரங்கள் என்னை எழுத வைத்து கட்டுரைகள் வாங்கியிருந்திருந்தாலும், எழுதிய காலத்தில் பாராட்டுகள் கிடைத்திருந்தாலும் முந்தைய தொகுப்புகளில் இடம் பெற்ற கட்டுரைகள் போல் இவை இல்லை எனும் எண்ணத்தில் தொகுப்பாக மாற்றுவதில் சுணக்கம் கொண்டிருந்தேன்.
சுணக்கம் என்றால் ஒருநாள், ஒரு வாரம் இல்லை. ஏறத்தாழ ஐந்து மாதங்கள். இனியும் இப்படியே விட்டால் தொகுப்பு வராமலே போய்விடும் எனும் அச்சத்தில், டிசம்பர் இறுதியில் ஒரே வாரத்தில் புத்தகமாக வடிவமைத்து 2019 ஜனவரியில் தொகுப்பாக வெளிவந்தது. வேட்கையோடு விளையாடு தொகுப்பிற்கு அண்ணன் கருணாகரன் மிக நேர்த்தியான அணிந்துரை வழங்கியிருந்தார்.
வெளியீட்டில் இரண்டு முக்கியமான முடிவுகள் எடுத்திருந்தேன். ஒன்று சொந்த பதிப்பில் வெளியிட்டது, இரண்டாவது முதல் பதிப்பில் 2000 நூல்கள். கட்டுரைகள் வறட்சியான தன்மை கொண்டிருப்பதாக நினைத்து சுணக்கம் கொண்டு நான் தாமதித்த புத்தகம், ஆறே மாதத்தில் இரண்டாவது பதிப்புக்குச் சென்றது. தற்போது நான்காவது பதிப்பில் தொடர்கின்றது.
இப்போதும் சொல்கிறேன், நான்தான் அந்தக் கட்டுரைகளை எழுதினேன், ஆனால் எழுத வைத்தது அவர் என் மீது வைத்த அந்த நம்பிக்கையும், கொடுத்த வாய்ப்பும்தான். அது கிடைக்காமல் போயிருந்தால் ஆங்காங்கே சில நூறு சொற்களில் அந்த அனுபவங்கள் அனைத்தும் குறுகியதொரு வட்டத்தில் முடங்கியிருந்திருக்கும்.
இதை எழுதக் காரணம், இன்று அவருடைய பக்கத்தில் நகைச்சுவையாக எழுதியிருந்த...
//
நான்லாம் உன்னால் முடியும்னு சொல்லியே பல பேரை தெறிக்க விட்டிருக்கேன்
//
எனும் பதிவுதான்.
நகைச்சுவையாக அவர் குறிப்பிட்டிருந்தாலும், தான் அறிந்தும் அறியாமலும் அவர் பலரை ஊக்குவித்து வேறொரு இடத்திற்கு நகர்த்தியிருப்பார் என்றே நம்புகிறேன்.
வேட்கையோடு விளையாடு தொடர் முடிந்து, போதிய இடைவெளியில் இன்னொரு தொடர் ஆரம்பிக்கும் திட்டமும் அப்போது இருந்தது. கோவிட் முடக்கத்தால் இதழ் தொடர்ந்து வர முடியாமல் நின்று போனது. அடுத்து அவர் இணைய இதழாகத் தொடங்கிய கல்கோணா இதழில் நான் எழுத ஒப்புக் கொண்டும், அப்போது இருந்த சூழ்நிலை காரணமாக எழுத முடியாமல் போனது இன்றும் உறுத்தலாகவே இருக்கின்றது.
நிறைவாய் ஒன்று சொல்ல விரும்புகிறேன்...
அன்பின் நிமித்தமாய் திரையெனும் திணை நூலை நான் அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கின்றேன்.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...