Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Jan 9, 2023

உணர்தலும் உணர்ச்சிகளும் சார்ந்த இடம்

 ஒரு புத்தகம் இப்படியும் செய்யுமா என்ற பிரமிப்பின் உணர்வால் உந்தப்பட்டு இதனை எழுதுகிறேன். கடந்த சில வருடங்களாக உங்கள் எழுத்துடன் பயணிப்பதால், அதனால் பயன் பெற்றதால், பண்பட்டு வருவதால், புத்தகம் கிடைத்தபோதே "திரையெனும் திணை" மிகுந்த ஆவலை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் வாசிப்பின் ஊடேயும் வாசிப்பின் முடிவிலும் இப்படியொரு ஆசுவாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. எனவே இதை அனுபவப் பகிர்வு என்பதையும் தாண்டி "நன்றி” செலுத்தும் முகமாக எடுத்துக் கொள்ளவும்.



உங்கள் புத்தகம் என்ற உற்சாகத்துடன் வாசிக்க துவங்கினேன். சில பக்கங்கள் கடந்த நிலையில், அலையடிக்கும் கடல் போல மனம் ஆர்ப்பரிக்கத் துவங்கிவிட்டது . கிளம்பிய எண்ணங்களை எங்காவது கொட்ட வேண்டும் எனத்தோன்றியது. எழுதத் துவங்கினால், பல பக்கங்கள் நீளும்.

நினைவு அடுக்குகளில் மறைந்தவை, மறைத்தவை, உறைந்தவை என எல்லாவற்றையும் என் முன்னே இழுத்து விட்டது இந்தக் கட்டுரைகள்.
மிகவும் அசௌகரியமாக உள்ளது. புதைக்கப்பட்ட நினைவுகள் மீண்டால் வரக்கூடிய திணறலை என்ன செய்வது எனத் தெரியாமல் உங்களிடம் இறக்கி வைக்கிறேன். என் வார்த்தைகள் பல பக்கங்கள் நீளலாம். உங்கள் நேரத்தை விரயம் செய்கிறேனோ என்ற எண்ணம் என்னை தடுக்கவும் செய்கிறது. அதைப் புறந்தள்ளி, இளைப்பாற இடம் தேடி வேறு வழியின்றி தொடர்கிறேன்

’வேட்கையோடு விளையாடு’ வாசிப்பின் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது என்றால், ’திரையெனும் திணை’ - உணர்தலின் அடுத்த நிலைக்கு அழைத்து வந்துள்ளது. வேட்கையோடு விளையாடு சுயநேசிப்பை சொல்லிக் கொடுத்தது. அதற்குண்டான வழியில் பயணிக்கும்போது, சுய நேசிப்பிற்கு சுய மன்னிப்பு தேவை என்று நான் புரிந்து வைத்திருந்தேன். இதனைப் புரட்டி போட்டுள்ளது ’திரையெனும் திணை’.

பதிமூன்று ஆண்டுகளாக உள்ளே வதைத்துக் கொண்டிருந்த ஒரு குற்ற உணர்ச்சி - என்னில் சூழ் கொண்ட ஒரு ஜீவனை கருவிலேயே அழித்தது. அந்த நினைவு வரும்போதெல்லாம் பிறக்காத அந்த குழந்தைக்காக அழாமல் இருக்க முடியாது. கணவரும் நானும் இணைத்து எடுத்த முடிவெனினும், அவரது காரணம் வேறு, எனது காரணம் வேறு. இருப்பினும் நான் மறுத்திருந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டிருப்பார் என்ற குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே இருந்தது. ’வினாக்களற்ற விடைகள்’ வாசிக்கும்போது நினைவூட்டப்பட்ட அந்தக் குற்ற உணர்ச்சி மீண்டும் அழச்செய்தது. ஆனால் இதுவே அந்தச் சம்பவத்திற்காக, நான் சிந்தும் கடைசிக் கண்ணீராய் இருக்கும் என்பதை கட்டுரையின் முடிவில் உணர்ந்தேன்.

’நியாயமான காரணங்களால் தன் கனவில் உறுதியாக நிற்கும் ஒரு பெண் தன் கருவை கலைக்க விரும்பினால் அது அவரின் உரிமை’ - இந்தத் தவறுக்கு எனக்கு மன்னிப்பே கிடையாது என்று நான் என்றோ என்னுள்ளே பதிய வைத்திருந்ததை, நடந்த சம்பவத்தில தவறு எதுவுமில்லை என்று உணர வைத்தது மேற்குறிப்பிட்ட வரிகள். எப்போதாவது கீறி ரணப்படுத்தும் அந்த கூர்நினைவினை வேருடன் பிடுங்கி தூர வீசி விட்டேன் .

இத்தனை ஆண்டுகளாக என்னை நானே மன்னிக்க முடியாத ஒரு நிகழ்வு - குற்றமே இல்லை - என்பதை உணர்ந்த அந்த நொடியினை எப்படி எழுத்தில் சொல்வதென்று தெரியவில்லை.

அதே கட்டுரையில், ’அரை நூற்றாண்டுக்கு முன்பாக இயற்றப்பட்ட சட்டத்தை அப்படியே வைத்து கொண்டு மௌனம் காத்திருக்கிறோம்’ - சட்டக்கல்லாரி பாடத்திலும் சட்டசபையிலும் வைக்க வேண்டிய ‘Subject’.

ஒரு கட்டுரை மட்டுமில்லை, பல கட்டுரைகள் அதனதன் போக்கில், எனது புரிதலின் அடிப்படையில் ஒவ்வொரு வகையில் என்னைச் சுத்திகரித்துள்ளன.

’குடும்பம் விரும்புவதையே அந்த வீட்டுக்கு வந்த மருமகளும் விரும்ப வேண்டும் என்பதை ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் தெளிவாக, அழுத்தம் திருத்தமாக உணர்த்தி வெகு காலம் ஆகிவிட்டது’ - என் இருபதுகளும் இந்த வரியில்தான் ஆரம்பித்தது. அப்போது ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு முகத்தினை வைத்துக்கொண்டதெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றது. ஒருகட்டத்தில் நிஜ முகமே மறந்தும் போனது. காலமும், சூழலும், கிடைத்த வாய்ப்பும், எடுத்த முயற்சிகளும் பலவற்றை மாற்றியது என்னளவில் வரமே.

நினைவு வரத்துவங்கிய பால்ய காலத்தில் தாத்தா பாட்டி வீட்டில் சில ஆண்டுகள் வளர்ந்தேன். என் தாத்தாவின் குரலைவிட பாட்டியின் குரலே எப்போதும் சத்தம் அதிகமாயிருக்கும். பாட்டி வைத்ததுதான் சட்டம். அந்தப் பாட்டியின் மகனான என் அப்பா - நல்ல 'அப்பா' மட்டும்தான். அப்பா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவர் அம்மாவுக்கு தந்த தழும்புகளை நினைவுபடுத்தினால், உள்ளே கசியும் ரத்தத்தின் வாசம் இப்போதும் நாசியை நெருடும்.

எப்போதும் தன் அம்மா, அப்பாவிடம் கையில் கிடைத்ததில் அடி வாங்கி அலறுவதை பார்த்து வளர்ந்த என் கணவரிடம் அதன் சாயல் எப்போதும் வந்ததில்லை.

பாட்டி, அம்மா, மாமியார், நான் இன்னும் நெருக்கத்தில் உள்ள பல 'மருமகள்'களை நினைவுக்குக் கொண்டுவந்து அலசுகிறேன். என் கதை இப்போது நன்றாகத்தானே போய்க்கொண்டுள்ளது, எதற்கு இந்த வீண் ஆராய்ச்சி எனத் தோன்றலாம் .

என் மகனும் சில வருடங்களில் ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை துணையாய் மாறுவான். ஒரு அம்மாவாக ஒரு பெண்ணாக ‘சக மனுஷியின் உரிமையை’ இப்போதிருந்தே அவனுள் பதிய வைக்க வேண்டும். ’The Great Indian Kitchen’ பார்க்கும்போது தோன்றாத இந்த எண்ணத்தை, ’அவர்களுக்கு பெயர்கள் தேவையா?’ ஆழமாக விதைத்துள்ளது.

ஆண் குழந்தைக்கு ஒரு அம்மா எப்படி இதையெல்லாம் புரிய வைக்க முடியும் என்று எனக்கிருந்த பெரும் சவாலிற்கு கண்டிப்பாக இப்புத்தகம் துணை நிற்கும் .

திரைப்படங்கள் 'பாடம்' என்றால், அந்த திரைப்படத்தின் மைய கருத்தை நுணுக்கமாக மனதிற்கு கடத்தும் உங்கள் கட்டுரைகளே எனக்கு ’ஆசான்’.

’உறவுகள் இணைந்திருக்க ஆயிரம் நேச இழைகளை நெய்தாலும், விலகி இருக்க ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆயிரமாயிரம் காரணங்கள், நிலைப்பாடுகள் உண்டு’ - இந்த வரிகளைக் கட்டுரையிலிருந்து தனித்து எடுத்து சிந்திக்கிறேன். சங்கடமும் சச்சரவும் உள்ள இடங்களில் பொருத்திப் பார்க்கிறேன். பக்கமும் தூரமுமாய், ஒட்டியும் ஒட்டாமலுமாய் உள்ள உறவுகளின் நிலையினைப் புரிய வைத்த வரிகள். எதிர் தரப்பின் நியாயங்களும், அவர்தம் சூழல்களும் இப்போது விளங்குகிறது. மனதால் விலகி இருந்தாலும் அந்த உறவுகளின் மேல் புதிதாய் பிரியம் மலர்கிறது.

முப்பதுகளின் பிற்பகுதியில் கணவரை இழந்த அம்மாவிற்கு மறுமணம் செய்து வைக்க நினைத்த ஒரு மகளின் முகம் மனதை நிறைத்து விழிகளில் நீர் திரையிட வைத்தது - துணை நலம் சேறல்.

வெளிநாட்டிலிருந்து அழைத்த குடும்ப உறவு, சாணம் கொண்டு வாசல் மெழுகியது, பலகாரம், அன்றைய உணவுப்பட்டியல் என சின்னச்சின்ன விஷயங்களைக்கூட கேட்டு தெரிந்து கொண்டார். எப்போது பேசினாலும் அவர் அப்படித்தான். அவரது விசாரணை அவ்வப்போது சலிப்பளிக்கும். அந்தச் சமயம் என் மனநிலையை பொறுத்து அந்த விசாரணைகளை அக்கறை அல்லது அதிகாரம் என்று எதோ ஒரு பட்டியலில் சேர்த்து விடுவேன். ஆனால் அவருடன் பேசி முடித்த சில மணி நேரங்களில் இந்தக் கட்டுரையை வாசிக்க வைத்ததுதான் காலத்தின் கணக்கோ என்னவோ?

’குடும்பத்தை விட்டு விட்டு தனித்து போவோருக்கு தம்மையும் அறியாமல் ஒரு பதட்டம் இதயத் துடிப்பினூடே கலந்திருக்கும். அதை அவ்வளவு எளிதில் தணித்து விட முடியாது. அதை எந்தக் கருவி கொண்டும் அளக்கவும் முடியாது’ - இந்த வரிகளை வாசித்து முடிக்கவும், அத்தனை விசாரணைகளுக்கும் பின்னாலிருந்தது ’எது’ என்று தெளிந்தது. மனதின் ஒரு ஓரத்தில் இருந்த எண்ணக் கசடை துவைத்து காயப்போட்டது ’Pathemari’ குறித்து பேசும் ’துவைக்காத சட்டை’.

இதே கட்டுரையில் ’அப்பா எனும் வாசனையை...’ இந்த வார்த்தைகளை விட்டு நகர முடியவில்லை. ஏனெனில் என் அலமாரியில் யாருக்கும் தெரியாமல் அப்பாவின் வாசத்தை ஒளித்து வைத்துள்ளேன்.

பிரிவின் வாதைக்கு விலையேது? பிரிவை நினைத்து எத்தனை அழுதாலும் , எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வற்றாதுபோல. பிரிந்தாலும் அவர்கள் மேல் கொண்ட பிரியம் ஊறி கொண்டே இருப்பதாலோ என்னவோ.

’PAD MAN’ திரைப்படத்தைச் சொல்லும் கட்டுரையில், ஒரு தலைமையாசிரியரின் அணுகுமுறையை குறிப்பிடும் போது - ’அந்த மொழி சரி, தவறு என்று பார்த்த சில நிமிடங்களில் நாம் தீர்மானிக்க முடியாது’ - இந்த ஒரு வரி அந்த தலைமை ஆசிரியரின் மேல் எந்த நிழலும் விழாமல் நிதானிக்க வைக்கிறது. ஒரு இடம் நோக்கி பயணிக்கையில் வழியில் காணும் ஒரு மலையின் அழகோ, ஆற்றின் போக்கோ சில வினாடிகள் நின்று கவனித்து ஒரு உற்சாகத்தை கொடுத்து, சரி கிளம்பு என்று வழியனுப்பும். சேர வேண்டிய இடம் சேர்ந்த பின்னும்கூட இடையில் கிடைத்த அனுபவம் இனித்துக்கொண்டே இருக்கும். அதுபோலவே இந்த கட்டுரை கூட்டிச் செல்லும் இடம் வேறெனினும் இந்த வரியும் நினைவில் ஊறிக்கொண்டே இருக்கும். பார்த்த மாத்திரத்தில் யாரையும் எடை போடும் புத்தியை நிச்சயம் நிதானிக்க வைக்கும் .

நீர்ஜா திரைப்படத்தின் கட்டுரை 2018-ல் கொடுத்த தாக்கமும் அதை தொடர்ந்த உரையாடல்களும் இப்போதும் நினைவில் உள்ளது. அப்போது இருந்த புரிதலின் அடிப்படையில் - தனவேல் முருகனின் பெற்றோரையும், நீர்ஜாவின் தாயையும் , என் அம்மாவையும் ஒரே புள்ளியில் நிறுத்தியது அந்த கட்டுரை. இப்போது வாசிக்கையில் எந்த வரி அந்த வேலையை செய்ததோ, அது என்னை பார்த்து கண் சிமிட்டியது. ’அந்த கட்டுரையை வாசித்துணர்ந்த அன்றைய தினத்தில் அம்மாவிற்கு மீண்டும் ஒருமுறை நான் மகளாக பிறந்தேன்’ என்றால் அது மிகையாகாது. அன்றிலிருந்து எங்களுக்குள் ‘மாறாததும் மாற்ற முடியாததும்’ என்றிருந்த எல்லாமே திருத்தி எழுதப்பட்டு வருகிறது .

ஓட்டமுறி வெளிச்சம் திரைப்படம் - கொடூரத்தின் வலியை உயிரில் ஊடுருவ செய்கிறது உங்கள் வார்த்தைகளின் வலிமை - மிகுந்த சிரமத்துடன் அயர்ச்சியுடனும் வாசித்து முடித்தேன். அந்த படத்தை பார்க்கவே முடியாது என்ற முடிவுக்கு வரச் செய்துள்ளது கட்டுரை .

இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் சிலிர்த்ததை , சிலாகித்ததை, கரைத்ததை, கரைந்ததை எனச் சொல்லிக் கொண்டே போகலாம் .

’முனைகளிடையே நிகழும் அதிர்வு’, ’காடுகொல்லி’ - எங்கிருந்துதான் வார்த்தைகள் வசப்படுகின்றதோ?!

கடந்த 15 நாட்களாக இப்புத்தகத்துடன் பயணிக்கிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் நான் உணர்த்ததில் ஒரு பகுதியை மட்டுமே சொல்ல முற்பட்டேன். இத்தனை நீண்ட பதிவாக அமையும் என எதிர்பார்க்கவில்லை.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒன்றிரண்டு கட்டுரைகளை என்னால் 100% முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. மீள் வாசிப்பு செய்து, திரைப்படத்தை பார்த்து, மீண்டும் வாசிக்கும்போது வசப்படும்.

எல்லோரிடமும் உறங்கி கொண்டிருக்கும் ரகசியங்கள் ஏராளம்.
’மூன்றாம் நபருக்கு தெரிந்த ரகசியம் வெளியில் வராமல் போவதில்லை’ என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பீர்கள். அந்தப் பயத்திலேயே இரண்டாம் நபருக்குகூட தெரியாமல் புதைத்து கொண்டவை நிறையவே .

ஆழ்மன ரகசியங்களை கண்ணீரில் கரைந்து கொண்டே காகிதத்தில் எழுதி நெருப்பிலிடும் ஒரு பயிற்சி முறை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதன் பிறகு மனம் மிகவும் இலேசாகி விடும் என்பார்கள்.
அப்படி ஒரு ’மகத்தான’ அனுபவமாகவே இப்புத்தகம் அமைந்தது.

மனதின் பாரம் குறைந்துள்ளது .

’திரையெனும் திணை’ என்று எப்படி உங்கள் எண்ணத்தில் உதித்ததோ தெரியவில்லை - இந்த புத்தகத்திலேயே சில நாட்கள் வாழ்ந்திருந்தேன் என்றுதான் குறிப்பிட வேண்டும் .

#திரையெனும்திணை - உணர்தலும் உணர்ச்சிகளும் சார்ந்த இடம்.

‘கண்ணாடியில் முகம் பார்க்கும் போது சற்று உற்றுப் பார்த்தால், அவர்கள் அங்கு பிரதிபலிக்கலாம்’ என்று முடியும் ஒரு கட்டுரை .

உங்கள் எழுத்தைவிட அகம் காட்டும் கண்ணாடி வேறில்லை.


*

திரையெனும் திணை பெற்றிருக்கும் மிகக் கனமானதொரு அங்கீகாரம்! 

Oct 1, 2020

சில அகக் கேள்விகளுக்கான பதில்

‘எதுக்கு இதெல்லாம் செய்திட்டிருக்கோம்?’ எனும் கேள்விகள் அவ்வப்போது எழுவதுண்டு. எப்போதாவதுதான் அதுவரையிலான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்கள் கிட்டும்.


அப்படியானதொரு பதில்...
அமெரிக்காவிலிருந்து...

இந்த நாளை இனிதாக்கியிருக்கும் கடிதம்.

~*~

தம்மா துண்டு புக்கு ஈரோடுல இருந்து கெளம்பி... மதுரைக்குப் போயி... லோக்கல் ஃப்ளைட் ஏறி சென்னைக்கு வந்து... அங்கேருந்து இன்டர்நேஷனல் ஃப்ளைட் புடிச்சி பத்தரமா அமெரிக்கா வந்து சேந்தாச்சு😁👏🙌 (பொட்டி வந்தாச்சு 🥳பொட்டி வந்தாச்சு 🥳பொட்டி வந்தாச்சு 🥳)... ஊருக்கே கூவி கூவி சொன்னாதான் கொண்டாட்டம்..

ஒரு புக்கு பின்னாடி ப்ளூ ஜிப்பாவ பந்தாவா மடிச்சு விட்டுகிட்டு கதிரய்யா நிக்கிறாரு. இன்னொரு புக்கு பின்னாடி சேர்ல ஸ்டைலா போஸ் குடுத்துகினு உக்காந்துருக்கார். ஃப்ளைட்ல ஏறி வர்றோமே... சீட்டு புடிச்சு உக்காருவோமே, சீட் பெல்ட் போட்டுப்போமேனு இல்லாம இப்டி நின்னுகிட்டு, சீட் பெல்ட் போடாம வந்துருக்காரு. இந்த சேட்டை எல்லாம் செய்யலாமா?😛🤭

ஏதோ என்னோட நல்ல நேரம் தப்பிச்சார். இல்லைனா அப்டியே பொட்டியோட திருப்பி ஈரோடுக்கே கடத்தி விட்ருப்பாக... ஆமா...🤭

பத்து நாட்களில் பொட்டி வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு வாரத்தில் பொட்டியும் அதில் ”வேட்கையோடு விளையாடு”, ”உறவெனும் திரைக்கதை” ஆகிய புத்தகங்களும் வந்து சேர்ந்தன.

இரு புத்தகங்கள் என் வீட்டிற்குள் நுழைந்தது என்று கூறாமல் தமிழ் என் வீட்டிற்குள் முத‌ல் முறையாக காலடி எடுத்து வைத்திருக்கிறது என்று கூறுவதே சரியானதாய் இருக்கும்😊

என் வாழ்க்கையில் நான் படித்த புத்தகங்கள் என்றால் பள்ளி, கல்லூரியில் படித்த பாடப் புத்தகங்கள் மட்டுமே. அந்த புத்தகங்களை படித்ததும்கூட விரும்பி விரும்பாமல், புரிந்தும் புரியாமல், பல நேரங்களில் கடம் தட்டி, மண்டையை குடைந்து, முட்டி மோதி... இறுதியில் படித்ததெல்லாம் அறிவை வளர்த்துக் கொள்ளவா? கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கா? பேருக்கு பட்டம் வாங்குவதற்கா? ஏதோ ஒரு வேலை தேடிக் கொள்வதற்கா? பணம் ஈட்டுவதற்கா? எந்த ஒரு தெளிதலும் இல்லாமலே படித்தாகி முடிந்தது.

இந்த பாடப் புத்தகங்கள் தவிர்த்து வேறு எந்த புத்தகமும் பெரிதாய் வாசித்ததாக நினைவில்லை. சிறு வயதில் எப்போதாவது வாரமலரின் குறுக்கெழுத்து போட்டி பக்கத்தில் சிறிது நேரம் மூழ்கிக் கிடப்பேன்.

தாய்மொழி தமிழ் இல்லை என்பதால் வீட்டுக்குள் தமிழ் பேச வாய்ப்பில்லை. திருமணம் முடிந்து அமெரிக்கா வந்த பின்னால் எனக்கும் தமிழுக்கும் முற்றிலும் தொடர்பு இல்லாமல் போனது.

ஆனால் தமிழ் பிடிக்குமானு கேட்டா ரொம்ப பிடிக்கும். அமெரிக்கா வந்து ஆண்டுகள் பல கழிந்தும் ஆங்கிலம் ஒரு அந்நிய மொழியாகத்தான் இருக்கின்றது. உண்மையாய் சொல்ல வேண்டும் என்றால் என் தாய்மொழியைவிட தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். வேணும்னா எனக்கு ரெண்டு தாய்மொழினு வெச்சிக்கலாம்).

நண்பர்களின் வற்புறுத்தலில் 2012-13 ஆண்டு ஃபேஸ்புக்கில் நுழைந்தேன். அடர்வனம் ஒன்றில் பயணிக்கும் வேளையில் செவிகளுக்கு எட்டும் ஒரு நதியின் ஓடையின் அருவியின் சப்தம் அத்திசை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும்.

அப்படிதான் ஒரு நாள் ஃபேஸ்புக்கில் அலைந்து திரிந்த வேளையில் ஒரே ஒரு வாக்கியம் தற்செயலாய் கண்ணில் தென்பட்டது "நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்"😊. அதை வாசிக்க வித்தியாசமாக இருந்தது.

சரி, உள்ள என்ன தான் இருக்குனு போயி தான் பாப்போம். பார்க்கத் தான் போனேன்..ஆனால் அங்கேயே தங்கிக் கொண்டேன். ஈரோடு கதிர் பக்கத்தை பின் தொடர ஆரம்பித்தேன்.

என்னை பொறுத்த அளவில் எந்த ஒரு விசயத்தையும் ஆ..ஊனு பிரம்மாண்டமாய் காட்ட வேண்டும்னு அவசியம் இல்லை. ரொம்ப சாதாரணமா, எளிமையா, தனக்கே உரித்தான நடையில், அறுசுவையும் சமச்சீராய் அளவாய் கலந்து, ரொம்பவும் திகட்டாம படிக்கிறதுக்கு பாந்தமா இருந்தா போதும். அப்படியானது தான் ஈரோடு கதிரின் எழுத்துக்கள்.

அந்த பக்கத்தில் தினமும் வரும் பதிவுகளை வாசித்து, வாசித்து ஒரு கட்டத்தில் தமிழ் எனக்கு அவ்வளவு பிடித்திருக்கானு என்னையே நான் கேட்டுகிட்டேன்.

ஒரு சூழலில் நெருங்கிய தோழியை விட்டு பிரிய வேண்டிய நேரம் வந்தது. ஃபோன்ல அந்த தோழிகூட பேசும் போது, நட்பின் பிரிவின் வலியை சொல்லி தோழி அழும் பொழுது... என்னையும் அறியாமல் அந்த கணத்தில் சில கவிதை வரிகள் (அது கவிதையானுகூட எனக்கு தெரியாது) மனசுல ஓடுது. ஃபோன் பேசிட்டு அந்த வரிகளை ஒரு பேப்பர்ல எழுதி மேலும் சில வரிகளை அதில் எழுதி முடித்தேன்.

அந்த தோழிக்கு எழுதிய கவிதையை பரிசாக குடுத்தேன். அதுக்கு அப்புறம் நண்பர்கள் கிட்ட கவிதையை பகிர்ந்து கொண்டப்ப எல்லாருக்கும் பிடிச்சது. அப்போதுதான் உணர்ந்தேன்... எனக்கும் ஏதோ கொஞ்சம் எழுத வருது போல..

இதை இந்த இடத்தில் சொல்லுவதற்கான காரணம்... ஈரோடு கதிரின் பக்கத்தை பின் தொடர்ந்து, அங்கே நான் வாசித்த அவரின் பதிவுகள் எனக்குள் ஒரு தாக்கத்தை, ஒரு தூண்டுதலை, எனக்குள் மெளனித்திருந்த தமிழை கொஞ்சம் கசிய செய்திருக்கிறது 😊..

அதுக்கு அப்புறம் எனக்கு மனசுல தோணுறது எல்லாம் எழுதிட்டு இருப்பேன். அதுக்காக தமிழ் எனக்கு சூப்பரா வருமானு கேட்டா எனக்கு தெரியாது. தமிழ் இலக்கணம் எல்லாம்... அது சுத்தமாவே மறந்து போச்சு... 'பின்ன நீ என்ன, எப்டிதான் எழுதுவ?’னு கேட்டா... எனக்கு தானா உள்ள இருந்து என்ன வருதோ எழுதுவேன் அவ்வளவு தான்.

ஓடுற ஆறு, வீசுற காத்து, பெய்யிற மழை, பாடும் பறவை, இயற்கையில் நடக்கும் எந்த விசயமும் எந்த விதிமுறை தெரிந்து, எதையும் கத்துகிட்டு செய்றது இல்ல. அது அது அதன் போக்குல இயங்கிட்டே இருக்குறது தான். அதுக்காக அதை எல்லாம் நாம ரசிக்காம இல்லையே. வர்றது எழுத வேண்டியது தான்😊..

எனக்கு எந்த புத்தகம் பெயரும், எழுத்தாளர் பெயரும்கூட பெரிசா தெரியாது. எப்படியா இருந்தாலும் புத்தகம் வாசிப்புனு ஒரு சிந்தனை வந்ததுக்கும்கூட கதிரின் எழுத்துக்கள் தான் காரணம். வாசிப்பதாக இருந்தால் முதலில் எழுத்தாளர் கதிரின் புத்தகம் தான் வாசிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில்😊இந்தியாவில் இருந்து குழம்புபொடி, ரசப்பொடி, சாம்பார்பொடிகளுடன், இனிப்பு காரத்துடன் புத்தகங்களும் வரவழைக்கப்பட்டு, புத்தகங்களை கண் குளிர பார்த்தாகிவிட்டது. பக்கங்களை புரட்டி கண்களால் அலசி ஆகிவிட்டது.

சிறு வயதில் பிடித்த கிடைத்த ஒரே ஒரு சாக்லேட் தீர்ந்துவிடக் கூடாது என்று கொஞ்ச கொஞ்சமாய் கடித்து, பேப்பரில் சுருட்டி ஒரு வாரத்திற்கு தக்க வைத்து..இறுதியில் பேப்பரில் ஒட்டி போன மீதத்தையும் வீணடிக்காமல் பேப்பரை மென்று சுவைத்ததைப் போல்... நாளுக்கு ஒரு கட்டுரை படிக்க முடிவு எடுத்து‌ள்ளேன் 😉

தம்மா துண்டு புக்குக்கு இம்மாம் பெரிசா எழுத வேண்டி இருக்கு. இன்னும் எழுதலாம் படிக்கிற எழுத்தாளருக்கு கொஞ்சம் break குடுப்போம் 😁

'நிறைய எழுது; நிறைய வாசி'... கண்டிப்பாக நிறைய எழுதுவேன் வாசிப்பேன்🙏



Jun 4, 2020

தமிழ் Quora : கேள்வி பதில்-1


தமிழ் Quora-வில் கணக்குத் தொடங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. என்ன செய்வதென்றும்கூட பெரிய புரிதல் இல்லை. எப்பொழுதாவது எட்டிப் பார்ப்பதுண்டு. இன்று அப்படி எட்டிப் பார்த்தபோது அங்கு பொதுவில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளும்... அதற்கான என்னுடைய அரியபதில்களும்...

மக்கள் ஏன் புகழுக்கு அடிமையாகிறார்கள்?

ஏதோ ஒன்றிற்கு அடிமையாக இருப்பதை இயல்பான குணமாக வைத்திருக்கிறார்கள். அந்த ஏதோ ஒன்றில் புகழ் என்பது மிகவும் இனிப்பானது. மெல்லியதொரு போதையை நினைக்கும் கணம்தோறும் தந்து கொண்டேயிருப்பது. மீள முடியாத போதையாகவும் மாறிப்போயிருப்பது.

திருடன் மணியம் பிள்ளை புத்தகம் எப்படிபட்டது விமர்சனம் தாருங்கள்?

வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம். நல்லதொரு மொழிபெயர்ப்பு. ஒரு சாமானியனின் சாகசங்கள் என்பதாகத் தோன்றினாலும், ஒவ்வொரு சம்பவத்தில் இருந்தும் மிக நிச்சயமாக ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும்.

கிளைச்சிறையில் இருக்கும் கைதிகளிடம் பேச வேண்டிய தேவை ஏற்பட்டபோது, இந்தப் புத்தகத்தை வாசித்திருந்ததால், அவர்களைப் புரிந்து கொள்ள உதவியது. வாசிக்காமல் இருந்திருந்தால் கிளைச்சிறை கைதிகளை நான் மிகத் தவறாகவே அணுகியிருப்பேன்.

அண்மையில் உங்களை மனவேதனை அடைய செய்த செய்தி என்ன?

ஒருவன் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாய் வசை பாடுவது.
இதை வாசிக்கலாம்...

//கேரளாவில் ஊர் பக்கம் வந்த யானைக்கு ஒருவன் அன்னாசிப்பழத்தில் வெடி மருந்தை வைத்துக் கொடுக்க, அதைச் சாப்பிட முற்படும்போது வாயில் வெடித்து, அதன்பிறகு அது உணவெடுக்க முடியாமல், தண்ணீரில் நின்றபடியே உயிர் விட்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகின்றது. அந்த யானை தாய்மையடைந்திருக்கின்றது.

மனிதனை நம்பிய பாவத்திற்கு, வாய் வெடித்து, சித்திரவதை அனுபவித்து, மரணத்திற்காக காத்திருந்து... என அந்த யானையின் ஒவ்வொரு தருணத்தையும் நினைக்கும்போது மனசு பதறுகிறது. சொல்லத் தெரியாத ஓர் இருண்மை சூழ்கிறது.

அதே நேரம், அந்த யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடி வைத்தவனை திட்டும் விதமாக ஒட்டுமொத்த மனித குலமே நாசமாகட்டும்என்கிற ரீதியில் சாடும் போக்கு ஆச்சரியம் தருகின்றது. கோடியில் ஒருவன் செய்துவிட்டால், அவனை, அவனையொத்தவனைப் பழிப்பதை விடுத்து ஒட்டுமொத்தமாய்ச் சாடுவதில் ஒருவித சுகம் இருக்கின்றது போலும்.

வெடி வைத்த கொடியவன் ஒரு மனிதன் என்றால், அந்த யானையின் மரணத்தை உலகிற்கு கொண்டு வந்த வனத்துறை அதிகாரி, அந்த யானையை, அது வாழ்ந்த இடத்திலேயே புதைக்க உதவியவர்கள், வழக்கு தொடர்ந்திருக்கும் காவல் அதிகாரி என அனைவரும் நாசமாகட்டும் எனும் மனித குலத்தின்அங்கமேதான்.

யோவ்... உணர்ச்சி வசப்பட்டு ரொம்ப சாபம் கொடுக்காதீங்கய்யா... ஏற்கனவே கொரானா, வெட்டுக்கிளினு திக் திக்னு இருக்கு!
//

சில மனிதர்கள் மிருகங்களிடம் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கின்றனர்?

மனிதனிடமிருக்கும் கீழ்மையான குணங்களில் தம்மைவிட எளியவரை ஏதோ ஒரு கணத்தில் வதைப்பதுவும் ஒன்று. அதை பல தருணங்களில் மனிதர்களிடமே காட்டுவார்கள்.

பாதுகாப்பான சூழலில் இருந்து விலங்குகளிடம் காட்டுவது எளிதானது. அப்படிச் செய்பவர்களை விலங்குகளால் அடையாளம் காட்ட முடியாது. அவை ஒன்று சேர்ந்து வந்து போராட்டம் செய்ய முடியாது உள்ளிட்ட பல காரணங்கள் அதில் உண்டு.

எனது வாழ்க்கையை மேம்படுத்த சுய உதவி புத்தகங்களை (self-help books) எவ்வாறு பயன்படுத்துவது?

அதில் இருக்கும் உண்மையான உதாரணங்கள் உங்களுக்குப் பயன்படலாம். உண்மையான உதாரணங்கள் தெளிவான, தீர்க்கமான நம்பிக்கையைத் தரும். அவற்றை உங்களின் இன்றைய நிலை மற்றும் எதிர்காலத் தேவையையொட்டி பொருத்திப் பார்க்கலாம்.
அதே சமயம், புத்தகத்தில் இருக்கும் அனைத்தும் உங்களுக்குப் பொருந்தாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்.

வாழ்க்கையில் மோசமான நேரங்களைக் கையாள்வதில் சிலருக்கு ஏன் சிரமங்கள் உள்ளன?

அந்த மோசமான நேரம் வாழ்வில் இதுவரை சந்திக்காத ஒன்றாக இருப்பதால் ஏற்படும் மிரட்சி.
அடுத்து அது 'நிம்மதி, நேரம், ஆற்றல், பொருளாதாரம், மகிழ்ச்சி' உள்ளிட்ட பலவற்றையும் விலையாகக் கேட்பதால், அவற்றைக் கொடுக்க முடியாமல் ஏற்படும் நிலைமையே சிரமமாகக் கருதப்படுகின்றன.

அனைத்தையும் இழந்து ஒருவனால் 30 வயதுக்குமேல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா?

எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு நிலையிலும் அனைத்தையும் இழந்து விடுவதில்லை.

இங்கே அனைத்தையும் இழந்து என்பது உறவுகள், புகழ், பொருளாதாரம் என்ற வட்டத்திற்குள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.
இதை வாசிக்கலாம்...

//“ஊனம் என்பது மோசமான மனோபாவம் மட்டுமே

இதுவரை நிகழ்ந்தவைகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், இதோ இந்தப் புள்ளியிலிருந்து இருப்பதை வைத்துத் துவங்குவோம். எல்லோருக்கும் அவர்களுக்கான மிச்சமிருக்கும் வாழ்க்கை இன்னும் வாழ்ந்து பார்க்கப்படாமலேயே இருக்கின்றது.

எவர் ஒருவர் தம்மிடம் இருக்கும் குறைகளையும் கடந்து, தம்மைக் கொண்டாடுகிறாரோ, அவரே நினைத்தவற்றை எட்டும் உரிமைகளைப் பெறுகிறார். சரி அப்படிக் கொண்டாட என்ன இருக்கிறதெனக் கேட்டால், தம்மிடம் இருக்கும் குணம், திறமை, திறன் ஆகிய ஒவ்வொன்றிலும் தலா மூன்றினைப் பட்டியலிட்டால் புரிந்து விடும்.

அப்படியொரு பட்டியலைத் தயாரிக்கும் தைரியம் வந்துவிட்டாலே வாழ்க்கையின் கடிவாளம் தம் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதென அர்த்தம். இது சொல்வதற்கும் கேட்பதற்கும் எளிதுதான். ஆனால் அப்படிப் பட்டியலிட மனதில் உரம், நிதானம், தெளிவு, ஆர்வம், நம்பிக்கை வேண்டும்.

வழங்கப்பட்டது எதுவாகினும் வாழ்ந்து காட்டுவேன் எனும் உறுதிகொண்டவர்களுக்கு, இந்த வாழ்க்கை என்பது கொண்டாட்டம் எனக் கருதுபவர்களுக்கு உரம், நிதானம், தெளிவு, ஆர்வம், நம்பிக்கை உள்ளிட்ட அனைத்துமே மிக எளிதில் கிட்டிவிடும்.

#வேட்கையோடு_விளையாடு புத்தகத்தில் எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகளில் இதுவும் ஒன்று. கட்டுரையில் இருந்து ஒரு பகுதி...


//

எனக்கு
வயது 22, நிறைவான வாழ்க்கையை வாழ எனக்கு ஒரு அறிவுரை வழங்க முடியுமானால், அது என்னவாக இருக்கும்?

எது 'நிறைவுஎன்பதை முதலில் கண்டறிந்து விடுங்கள்.

நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை என்ன?

வாழ்தல் அறம்

*

தமிழ் Quora-வில் தொடர... https://ta.quora.com/profile/Erode-Kathir



வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...