Showing posts with label சென்னை மழை. Show all posts
Showing posts with label சென்னை மழை. Show all posts

Jan 4, 2016

மன்னிப்பு என்கிற இன்னொரு கதவு



சேலம் மாவட்டத்தையும் ஈரோடு மாவட்டத்தையும் வகுந்து கொண்டு ஓடுகிறது காவிரி. இடது கரையில்தான் மைதிலி பிறந்து வளர்ந்தது. வலது கரையில் இருக்கும் கிராமம் ஒன்றில்தான் மைதிலியின் அம்மாயி வீடு. இங்கிருந்து பார்த்தால் மறுகரையில் இருக்கும் கிராமத்தின் கோபுரம் தெரியும். நோம்பிக்கும், விடுமுறைக்கும் கால் நூற்றாண்டு காலம் காவிரியைக் கடந்து செல்வதே வாடிக்கையாகிப் போனது.

காவிரி பருவத்திற்கு தகுந்த மாதிரி வடிவம் கொள்ளும். அணை சுண்டிப்போகும் காலத்தில் மணலும் பாறையும், தேங்கிய குட்டை நீருமென நடந்தே காவிரியைக் கடந்துவிடலாம். ஓரளவு தண்ணீர் ஓடும்போது சுழன்று சுழன்று செல்லும் பரிசலில் போய்விடலாம். பெருக்கெடுத்து ஆர்ப்பரிக்கும் காலமெனில் தூரத்தில் இருக்கும் பாலத்தின் வழியேதான் கடக்க முடியும். இதனால் அறியப்படும் சேதி யாதெனில் காவிரிக் கரையிலிருந்த மைதிலிக்கு தண்ணீர் எப்போதும் தோழமையானது.

அவளைக் காவிரிக் கரையிலிருந்து உலகின் இரண்டாவது மிக அழகிய கடற்கரை நகரத்திற்கு கடத்திப்போனது காலம். அதன்பின் பெரும்பாலும் தண்ணீர் பஞ்சத்தையும், எப்போதாவது மழைச் சீற்றத்தையும் கடந்து வந்தவளுக்கு சென்னையில் சொந்த வீடு கட்ட வேண்டுமென்ற கனவு கனிந்தது. ”சென்னைக்கு மிக அருகில்…. நல்ல காற்றோட்டம்…. சுத்தமான குடிநீர்….” அப்படியான விளம்பரங்களில் காட்டப்படுவது மாதிரியான ஒரு நிலத்தில் வாழ்நாளின் சேமிப்புகளைக் கொண்டு இரண்டடுக்கு வீடு நிமிர்ந்து நின்றது. தரை தளம் வாடகைக்கு, முதல் தளம் தங்களுக்கென சமீபத்தில்தான் குடி பெயர்ந்திருந்தார்கள். வீட்டிற்கு இந்த தீபாவளிதான் தலை தீபாவளி… ஆனால் தீபாவளி தீராத வலியாகிப் போகுமென கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. கணவன் ஆன்சைட்டுக்கு வெளிநாடு பறந்திருக்க, பேத்தியும் பேத்தியின் பத்து வயது மகளும் தனியே இருப்பார்களே என ஊரில் இருந்து பாட்டி வந்து உடன் இருக்கிறார்.

ஏரிகளிலிருந்து ஐயாயிரம், பத்தாயிரம், இருபதாயிரம் என தண்ணீர் திறப்பு ஏலம் விடப்பட்டபோதெல்லாம் லட்சங்களில் கரைபுரண்ட காவிரியாற்றங் கரைக்காரிக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. விடியலொன்றில் எங்கிருந்து வந்தது எப்படி வந்தது எனத் தெரியவில்லை வாடகைக்கு வைத்திருந்த கீழ் வீட்டின் சன் சேடுகளுக்கு மேல் தண்ணீர் அலையடித்துக் கொண்டிருந்தது. கண்ணிற்கு எட்டிய தூரம் வரையில் சுழித்து நகரும் செந்நீர். காவிரியின் ஆர்பரிப்பைக் கண்டிருண்டிருந்தவளுக்கு வீட்டைச் சுற்றிலும் காவிரி கரை புரண்டோடுவதுபோல் பார்க்க உண்மையில் பயம் சூழ ஆரம்பித்தது. ஊருக்குப் போயிருந்த குடித்தனக்காரர்களுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. படகுகள் போவதை பத்து வயதுக் குழந்தை ஆச்சரியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. படகு வந்து பத்திரமாக அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் விட்டார்கள். காத்திருந்த தோழியின் குடும்பம் அழைத்துச் சென்றது.

நடந்ததை நம்ப முடியவில்லை. நீர் மட்டம் குறையத் துவங்கியது. வாட்சப்பில் வெள்ளக் காட்சிகள் காணொளிகளாய் வந்து குவிந்தன. பார்க்கப்பார்க்க பீதி கூடியது. சுவற்றில் வண்ணம் மாற்றி கோடு போட்டதோடு வெள்ளம் கரைந்து போயிருந்தது. ”என்னதான் இழப்பு” எனக் கணக்கிட்டுவிட முடியாத அளவிற்கு குடித்தனக்காரர் குமைந்து போயிருந்தார். இரு சக்கர வாகனத்திற்கு மூன்றாயிரம் செலவானதோடு வெள்ளத்தின் கதை மைதிலியைப் பொறுத்த வரை முடிந்து போயிருந்தது.

ஆனால் காலம் முடித்து வைக்கவில்லை. குலைந்திருந்த குடித்தனக்காரர் எல்லாம் சுத்தம் செய்து சற்றே நிமிர்ந்த நேரம்… மீண்டும் மழை. அவர்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியேறிவிட, கீழ் வீட்டிற்குள் மீண்டும் தண்ணீர் பிரவேசிக்கத் தொடங்கியது. வானம் கிழிந்ததுபோல் இடைவிடாது ஊற்றிக்கொண்டேயிருந்தது. இரவு எட்டு மணிக்கு கீழ் வீட்டின் சன் சேட் மூழ்கத் துவங்கியது. மின்சாரம் இல்லை. மைதிலியின் கை பேசியிலிருந்து பத்து வயதுக் குழந்தை குறுந்தகவல் அனுப்பியிருந்தாள் “பயமா இருக்கு, நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா?” கை பேசி அழைப்புகள் கிட்டத்தட்ட முடங்கிவிட்ட கொடும் இரவு. நானூரு கி.மீ தொலைவு செவ்வாய் கிரகத்துக்கான தொலைவு போல் உணரப்பட்டது. புதன் விடியலில் ’இன்னும் இரண்டு படி தான் மிச்சம்’ என்ற குறுந்தகவலோடு மைதிலியின் கை பேசி உயிரை விட்டது. எந்த அஸ்திரங்களைப் பிரயோகித்தும் அடுத்த 48 மணி நேரத்திற்கு எட்ட முடியவில்லை. வெள்ளி காலை உயிர்பெற்ற கைபேசி வழியே ”முகாமில் தங்கியிருக்கிறோம்” எனும் தகவல் மட்டும் வந்தது.

எல்லா வடிவங்களிலும் காவிரியைக் கண்டிருந்தவள் சென்னையின் ’வரலாறு காணாத’ வெள்ளத்தில் உருக்குலைந்து, கரைந்து, உறைந்து போயிருந்தாள். விரக்தி மேலிட்டிருந்தது. பாட்டியின் பதற்றத்திற்கு தான் உதிர்க்கும் சொற்களால் ஒருபோதும் அவளால் திருப்தி செய்திட முடியவில்லை. குழந்தை, அம்மா, கொள்ளுப்பாட்டி என மூவரும் மின்சாரம் தொலைந்த, சலசலக்கும் மழையில், ஓங்காரமாய் கொக்கரித்த வெள்ளத்தின் மத்தியில் இருந்த 48 மணி நேரத்திலிருந்து இன்னும் மீண்டதாகத் தெரியவில்லை.

ஊருக்கு வந்தவர்கள் சென்னைக்கு புறப்படாமல் உறைந்த மௌனத்தோடு இருக்கும் ஒரு நாளில் அந்த பத்து வயதுக் குழந்தை வெள்ளம் பற்றிய கதையை தன் போக்கில் சொல்ல ஆரம்பித்தாள். ”இப்படி பாப்பாவை படுத்துன அந்த மழையை எதாச்சும் பண்ணியே ஆவனும்” எனச் சொன்ன மைதிலியின் அம்மாவிடம் “அம்மாயி… நீ ஒன்னும் பண்ணாதே…. நான் அந்த மழையை மன்னிச்சிட்டேன்” என்றாள். 
அந்த மன்னிப்பில் மேகங்கள் உறைந்து போயிருக்கும் சாத்தியமுண்டு.




1986ல் நிகழ்ந்த செர்னோபில் அணு உலை விபத்தின் வடுக்கள் கிழக்கு ஐரோப்பாவில் நீண்ட வருடங்களாக நீடித்தபடிதான் இருக்கின்றன. விபத்து நடந்து நான்கு ஆண்டுகள் கழித்து தான்யா @ டட்சியான க்விட்ஸ்கோ எனும் ஒரு பெண் குழந்தை பெலாரஸ் நாட்டில் பிறந்தாள். செர்னோபில் சாபம் அவளையும் சபித்தது. இடது காலில் பாதம் இல்லை. வலது காலில் மூட்டுக்கு கீழே எதுவுமே இல்லை., இடது கையில் மூன்று விரல்களும், வலது கையில் ஒரு விரலும் மட்டுமே. குழந்தையின் நிலை கண்டு மிரண்ட பெற்றோர்கள் மனதை கல்லாக்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட குழந்தைகள் வசிக்கும் ஒரு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கின்றனர்.

நான்கு ஆண்டுகள் கழித்து ஒரு தம்பதியினர் தான்யாவை தத்தெடுக்கின்றனர். ஆறு வயதாக இருக்கும் போது அமெரிக்க அமைப்பு ஒன்றின் உதவி கிட்டுகிறது. காலம் அவள் கால்களுக்கு நடக்கும், ஓடும் வகையிலான பிளேடுகளை வழங்குகிறது. இப்போது அவளுக்கு 24 வயதாகிறது. உலகம் கொண்டாடப்படும் வகையிலான ஒரு பிளேடு ரன்னர் ஓட்டப் பந்தய வீராங்கனையாகவும், உடல் கட்டமைப்பாளராகவும் ஜொலிக்கிறார்.

தான்யாவின் சாதனைகளைக் கொண்டாடுவதும், அடைந்த பாதைகள் குறித்து விவரிப்பதும் அல்ல இதன் நோக்கம். தத்து பெற்றோர்கள் அரவணைப்பில் அன்பாக வளரும் தான்யா பதின் வயதில் பயணிக்கும் போது யதேச்சையாக அவளின் தத்து அம்மாவின் 13 வயது நிழற்படத்தைப் பார்க்கிறாள்.  படத்தில் இருக்கும் பதின்வயது அம்மா முகம், தினந்தோறும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கின்றது. இன்ப அதிர்ச்சியில் தவிக்கிறாள். அம்மாவிடம் இது எப்படி எனக் கேட்கும்போது உண்மை புரிகிறது தன்னை பாதுகாப்பு மையத்தில் தத்துக்கொடுத்த அவளின் உண்மையான பெற்றோர்களே நான்கு ஆண்டுகள் கழித்து தத்தெடுத்திருக்கிறார்கள்.

தான்யாவின் பிறப்பு அவள் விரும்பியதாக இருக்க முடியாது. அது பெற்றோர்களின் காதலினாலோ, காமத்தினாலோ மட்டுமே நிகழ்ந்திருக்க வேண்டும். தான்யாவிற்கு கால்கள் இல்லாது போனதும், கைகளில் ஆறு விரல்களும் அற்றுப்போனதும் பேராசையின் குற்றம்; அல்லது அறிவியலின் பிழை. அதன் பலனாக தான்யா உடலால் வஞ்சிக்கப்பட்டு, இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு மனதளவிலும் தண்டிக்கப்பட்டாள்.

தான்யா வாழ்க்கை உலகம் கொண்டாடப்படும் ஒரு சரித்திரமாக மாறியிருக்கிறது. சரித்திரத்தில் எது முக்கியமான பக்கமாக இருக்கும்? அவள் தத்து கொடுக்கப்பட்ட தினமா? தத்து எடுக்கப்பட்ட தினமா? கால்களில் பிளேடு பொருத்தப்பட்ட கணமா? தன் திறனை உணர்ந்த கணமா? சாதனைகளை நிகழ்த்திடும் கணங்களா?

அதையெல்லாம் விட மிக முக்கியமான ஒரு கணம் இருக்கின்றது. தத்தெடுத்த அம்மாதான் தன்னை ஈன்றவளும், தத்துக்கொடுத்தவளும் என்பது தெரிந்து, அவளை மன்னித்து மாறா அன்பை நீட்டித்த அந்தக் கணம்தான் அவளின் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் வடிக்கப்படும் பக்கமாக இருக்கும். 

அந்த மன்னிப்புதான் உலகின் மிக உயரிய ஒரு ’மன்னிப்பாக’ இருக்க முடியும்.

-

மிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு எனும் வசனம் இக்கணத்தில் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லைதான். உண்மையில் மன்னிப்பு என்பது முற்றிலும் மறுக்கக்கூடியதா? அல்லது முற்றிலும் தரக்கூடியதா என்பதை சூழல்களும், தருணங்களும் மட்டுமே முடிவு செய்ய வேண்டியவை.

பத்து வயது குழந்தையால் தங்களுக்கு அவ்வளவு பேரிடர் அளித்த மழையை மன்னிக்க முடிகின்ற போது, தன்னை வேண்டாமென ஒதுக்கி, பின் தத்தெடுத்த பெற்றோரை தான்யாவால் மன்னிக்க முடிகின்ற போது மன்னிப்பு என்பது ஒருபோதும் வழங்கிட முடியாத ஒன்று என நினைப்பவர்களுக்கு இன்னொரு கதவு இருக்கின்றது என அடையாளம் காட்ட முடியும் தானே!

மன்னிப்பு என்பது சில இடங்களில் இயலாமையாலும், கோழைத்தனத்தினாலும், கழிவிரக்கத்தினாலும் கொடுக்கப்பட்டதாக நினைத்தாலும் பல இடங்களில் அது பெருங்கருணையாகவும், மாவீரத்தின் வெளிப்பாடாகவும்தான் வழங்கப்படுகின்றன.

வெறென்ன…. 
இதுவரை மன்னிக்க இயலாத ஒருவருக்கு மன்னிப்பு வழங்குவது பற்றி ஒரு கணம் யோசித்தால்தான் என்ன?

-

நம்தோழி ஜனவரி’ 2016 இதழில் வெளியான கட்டுரை

-

Nov 18, 2015

கண்டிப்பாக மழை வேண்டும்...

பெய்ய வேண்டியதிலும், பொய்த்துப் போவதிலும் ஒருபோதும் இயற்கைக்கு அளவீடுகள் இருப்பதில்லை. வீடுகளுக்குள்ளேயே தனித்தனி தீவுகளாக வசிக்கும் மனிதர்களை உள்ளடக்கிய நகரங்கள் பெருமழை நாட்களில் தீவுகளாக மிதப்பது வருத்தமாகத்தான் இருக்கின்றது. ஆனால், அது முழுக்க முழுக்க இயற்கையின் குற்றமல்ல.
குளங்கள், ஏரிகள் மூடப்பட்டு வீட்டுமனைகளும், பேருந்து நிலையங்களும், வணிக வளாகங்களும் உருவாக்கப்பட்டபோது, எல்லாம் அருகில் இருப்பதும் ஒரு வகையில் வசதிதான் என மவுனமாய் இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமெனில் கள்ளமவுனமாய்க் கடந்துபோன, நமக்கான பாடம் அல்லது எச்சரிக்கை இந்த பெருமழையில் ஏற்பட்டிருக்கும் சங்கடம் என்பதை காலம் தாழ்ந்தேனும் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். 

வெள்ளப் பாதிப்புகள் குறித்து பார்வையிட கொடிகள் புடைசூழச் செல்பவர்களை, நிவாரணம் வழங்குமிடங்களில் பெரிய அளவில் நிறுவப்படும் பதாகைகளை, சகித்துக் கொண்டு மறந்துபோவது போலவே மழை நீர் சேகரிப்பையும், மிக எளிதாக மறந்துபோனோம். 

வாழ்நாள் கனவாக இடம் வாங்கி வீட்டைக் கட்டும் எவரும், அதற்கு முன் அந்த இடம் ஏரியாக இருந்ததா? குளமாக இருந்ததா? என்பது குறித்து கிஞ்சித்தும் யோசிக்கவோ, கேள்வி கேட்கவோ பொறுமையில்லை. 

ஏரிகளைச் சமாதியாக்கி அதன் மேல் எழும்பி நிற்கும் சாம்ராஜ்யங்களின் காலடி முழுக்க இதுதான் என் இடமென மழை நீர் நாய்க்குட்டிபோல் காலைச் சுற்றியபடி சூழ்ந்துகொண்டு அடம் பிடிக்கின்றது. சாலையில் மிதந்து செல்லும் விலை உயர்ந்த கார்களுக்கு இப்போது அங்கு வேலையில்லை. அழுக்கடைந்த படகுகள்தான் அசைந்தபடி வந்திருக்கின்றன அனைவரையும் மீட்க. 

ஒரு சுனாமியில் பெரும் பாதிப்படைந்த நாம், இன்னொரு சுனாமி வந்தால் எதிர்கொள்ளவும் தப்பிக்கவும் முன்தயாரிப்புகளோடு, யுக்திகளோடு இருக்கிறோமா என்பதற்கான நேர்மையான பதில் தேவை. 

முந்தைய ஆண்டுகளில் இதைவிட பாதிப்பேற்படுத்திய மழை வெள்ளத்தில் சிக்கிய நாம், இந்த ஆண்டு மழை வெள்ளத்தை எதிர்கொள்ளவும், தப்பிக்கவும் எவ்விதத்திலும் தயார் நிலையில் இருக்கவில்லை என்பதை வரவேற்பரையில் பிரியமாய் நிற்கும் வெள்ள நீரில் வெடவெடத்தபடி ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 

சரியான நேரத்துக்கு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை, கடை திறக்கும் நேரத்திற்கு முன்பாகாவே காத்திருந்த வாடிக்கையாளர்களை, தொப்பலாய் நனைந்தபடி முண்டியடித்து அரசு கொடுக்கும் விலையில்லாப் பொருட்களைப் பெற்று வந்தவர்களையும் இந்தப் பெருமழை தினங்களில் காணமுடிந்தது. 

கிராமங்களையும்தான் மழை பதம் பார்த்துள்ளது. கிராமங்கள் மீண்ட வேகத்தில் நகரங்கள் மீள முடிவதில்லை. அதன் கைகள் கட்டப்பட்டுள்ளனவா அல்லது விரல்கள் இக்கட்டுகளுக்கு சிக்கிக் கொண்டிருக்கின்றனவா என்பது அவரவர்க்குத் தெரியும். பொதுவாக கூடுதல் வாடகைக்குப் போகும் தரை தளத்து வீடுகள், மழை வெள்ளத் தாக்குதலையொட்டி, இனி அதிகம் கவனம் பெறாமல் போவது மட்டும்தான் இந்த மழையிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாக இருந்தால் இன்னும் எத்தனை மழை வந்தாலும் நம்மைத் திருத்தமுடியாது என்றெல்லாம் அறிவுரை சொல்வது மட்டுமல்ல இப்போதைய நோக்கம். 

நகரத்தினர் பெரிதாக அறிந்திடாத பல்லாயிரம் கிராமங்களின் கதைகள் இங்குண்டு. உதாரணத்துக்கு அதில் ஒன்றை இங்கே பகிர்வது மட்டுமே இப்போதைய நோக்கம்… 



கர்நாடக அரண்களைத் தாண்டி ஒகேனக்கல்லில் குதித்து வரும் காவிரி ஆறு சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையில் தஞ்சம் அடைகிறது. அங்கிருந்து புதுவடிவமெடுத்து ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களை உரசிச் சென்றாலும், அம்மாவட்ட மக்களுக்கு காவிரியால் பெரிதாகப் பயனேதும் இல்லையென்றே சொல்லலாம். நீர்மின் திட்டங்கள் தவிர்த்து ஜேடர்பாளையம்வரை தடுப்புகள் கிடையாது. கால்வாய்கள் கிடையாது. ஜேடர்பாளையத் தடுப்பணையிலிருந்து வேலூர் மோகனூர் என நாமக்கல் மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு மட்டும் பாசனம் உண்டு. ஆனால் மேட்டூர் அணையிலிருந்து தனியாக அமைக்கப்பட்ட இடதுகரை, வலது கரை கால்வாய்கள்தான் சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரளவு நேரடியாகப் பலன் தருபவை. நீர் திறப்பில் தஞ்சைக்கு முதலிடம் கொடுத்துவிட்டு, அதன்பின்னரே இடது மற்றும் வலது கரை கால்வாய்களுக்கு என்பதுதான் விதி. 

"ஒகேனக்கல்லில் வெள்ளம்" என மின்னும் மகிழ்ச்சியான செய்திகளைக் காணும்போதே, களைத்த முகத்துடன் யாரேனும் ஒருவர் "ம்ம்ம்ம்... ஒகேனக்கல்ல குளிக்கலாம்னு வந்தம், தண்ணி நெறய போவுதுனு வுடமாட்டேங்றாங்க… ப்ச்… இப்ப என்ன பண்றதுனு தெரியல!?" என வருத்தம் தோய்ந்த முகத்தோடு காவிரியை சபிக்கும் மனநிலையோடு பேட்டி கொடுப்பார்."அருவியில் குளிக்கத் தடை, சுற்றுலாப் பயணிகள் அவதி" என்றும் செய்திகள் வரும். அப்படிப் பேட்டி கொடுப்பவர்களைப் பார்க்கும்போது அடிவயிற்றிலிருந்து அப்படியொரு கோவம் வரும். அவர்கள் குளிக்க முடியவில்லையே எனக் காவிரியைச் சபிக்கும் நேரத்தில் இங்கே எழுநூறு அடி ஆழ்துளைக்குழாய் கிணற்றிலிருந்து திணறித் திணறி மோட்டார் உவர் நீரை கொஞ்சமாய் உமிழ்ந்து கொண்டிருக்கும். அதில்தான் மாடு கன்று, மனிதர்கள், எஞ்சியிருக்கும் செடி கொடிகள், தப்பிப்பிழைத்திருக்கும் தென்னை மரங்கள் உயிர் பிழைத்தாக வேண்டும். 

எப்படியும் மைசூர் அணை நிரம்பிவிடும், கபினி நிரம்பிவிடும், நிலத்தை வெட்டியாக போட்டு வைத்திருக்க முடியாது என ஏதாவது பயிரிட நினைக்கும் ஒவ்வொரு முறையும் காவிரியின் மடியை இறுத்திப் பிடித்துக்கொண்டு கர்நாடகா வஞ்சிக்க, விவசாயிகளின் வயிறு கபகபவென எரிந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் "விதைத்து தொலையாவிட்டாலும் போகுது, இருக்கிற பண்டம்பாடிகளுக்கு குடிக்கத் தண்ணி வேணுமே!" என்பதே வேண்டுதலாய் இருக்கும். 

ஆடியில் முறையாய் ஆடிப்பாடி வந்தடைய வேண்டிய தண்ணீர் தரையெட்டாமல் மேகத்திற்குள்ளேயே பதுங்கிக் கிடந்தது. ஆடிப் பட்டம் தேடி விதை என்பதற்கு இந்த ஆண்டும் வாய்ப்பில்லாமல் போனது. மே, ஜூன் பருவ மழை ஏமாற்றிப்போக, காவிரி மேல் இருந்த நம்பிக்கை தூர்ந்துபோனது கால்வாய்ப் பாசன விவசாயிகளுக்கு. கடந்த ஆண்டுகளிலும் கூட ஏதோ ஒரு மாயம் நிகழும், மேட்டூர் நிரம்பும், காவிரி கடைமடைவரைப் பாயும். 

இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் வருமா வராதா என்ற கவலையில் மேட்டூர் அணையை நோக்கி இடைவிடாது பிரார்த்தித்தபடி தவமிருந்த அந்த சந்தேகக் காலத்தில், கபினி அணை மட்டும் ஒரு முறை நிரம்ப, ஆணையத் தீர்ப்புக்காக கொஞ்சம் நீர் திறக்க என மேட்டூர் அணை திக்கித் திணறி 80 அடிகளைக் தொட்டு நின்றது. ஒருவழியாக "மாண்புமிகு முதல்வரின் ஆணைக்கிணங்க பாசனத்திற்காக மேட்டூர் இடது மற்றும் வலதுகரை கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது" எனும் மின்னற்செய்திகளைப் பார்த்தபோது உயிரின் வேர்களில் 'நீர்' வார்த்ததுபோன்றே இருந்தது. 

சில நாட்களில் தண்ணீர் கால்வாய்களில் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது. தயங்கித் தயங்கி வந்தடைந்த தண்ணீரை ஒருவரும் நம்பத் தயாரில்லை. மேட்டூர் அணைக்கு நீர் வருவதும், நிற்பதுமான கண்ணாமூச்சிக் காலத்தில் சற்று தாமதமாய்ப் பூத்த நம்பிக்கையில் நாற்றங்கால்களைத் தயார்படுத்தினார்கள். ஓரிரு மழைகளும் உதவிட நடவும் செய்தார்கள். பயிர் வேர் பிடித்து பச்சை அடர்த்தியாகும் தருணத்தில் அணைக்கு நீர் வரத்து அற்றுப்போக நீர்மட்டம் 60 அடிக்கும் கீழே சறுக்கத் தயாராக இருந்தது. 60 அடித் தண்ணீரை நம்பி பயிர்கள் விளைந்துவிடும் என நம்புவது மூட நம்பிக்கைக்கு நிகரானது. விட்ட தண்ணீர் விளைச்சல் வரை நீடிக்குமா, கொடுஞ்சாபமாய் கருகிப்போகுமா என்ற பயத்தில் ஒவ்வொரு விவசாயியும் உறக்கம் வராமால்தான் புரட்டாசியில் புரண்டு கொண்டிருந்தார்கள். வெயில் வேறு தன் பங்கிற்கு சித்திரைபோல் வெளுத்து வாங்கியது. 

பொதுவாக ஐப்பசி மாதம் அடைமழைக்காலம். இயற்கையின் கருணை ஈரம் மிகுந்தது. உண்மை மீண்டும் உரத்து நிரூபிக்கப்பட்டது. கர்நாடகம் கருணை காட்டவில்லையெனினும், ஆங்காங்கு பெய்த மழையின் உதவியோடும் கர்நாடகத்தின் துணையின்றியே மேட்டூர் அணை 60 அடியிலிருந்து அடுத்த சில நாட்களில் 85 அடியை எட்டிவிட்டது. 

விவசாயிகள் கால்வாய்களில் தங்களுக்குத் தண்ணீர் வேண்டவே வேண்டாமென கெஞ்சும் அளவிற்கு எங்கும் பரவலாய் அடைமழை, புயல்மழை, பேய்மழை பெய்யத் தொடங்கியது. ஓர் இரவில் மட்டும் கொட்டிய மழையில், கால்வாயின் கசிவு நீரும் இணைந்துகொள்ள 40 ஆண்டுகளில் காணாத பெரு வெள்ளத்தை எங்கள் கிராமங்கள் தரிசித்தன. காலம் காலமாய் நிரம்பாத, வானம் பார்த்த பூமியின் கிணறுகள் கடை போகின்றன. எதனினும் வலியது இயற்கை என்பதை இன்னுமொருமுறை தன் போக்கில் நிரூபித்துவிட்டது. 

இடைவிடாமல் மழை நனைத்த தீபாவளி நாட்கள் குறித்து கிராமத்தில் எவருக்கும் பெரிதாய்ப் புகாரில்லை. உரச் சாக்கினை மடித்து கொங்கடை செய்து தலையிலும் முதுகிலும் போட்டுக்கொண்டு வயலோரங்களில் மாடுகளையும் எருமைகளையும் மேய்த்தபடி அவர்கள் மழையை கடந்துபோகும் தருணங்களில் நகரங்கள் அதுவும் குறிப்பாக தலைநகரம் தண்ணீரில் மிதக்கும் செய்தி கேட்டு வருந்துவதா, நொந்து போவதா, பிரார்த்தனை செய்வதா எனும் மனநிலையில் இருக்கையில், நகரத்தின் நெடு வீதிகளில் படகு ஓடுவதை நகரங்களில் வாழ்வோரே படம் பிடித்து பகடி செய்து இணையவெளியெங்கும் பரப்பிக்கொண்டிருப்பதை கசப்பான புன்னகையோடு பார்க்க மட்டுமே செய்யமுடிகிறது. 

காவிரி ஆற்றின் கிளைக் கால்வாயின் கரையிலமர்ந்து நான் இதை எழுதுவது போன்றே பல்லாண்டுகளுக்குப் பிறகு வெள்ளத்தைக் கண்ட பாலாற்றின் கரையில் மனசை அமர்த்தி ஒருவர் எழுதுவதும் உங்கள் கண்களில் படும் சாத்தியமுண்டு. 

உண்மையில், மழை வேண்டும்… வேறு வழியில்லை… கண்டிப்பாக மழை வேண்டும்… அதை எவ்வகையிலும் நிந்திக்க இயலவில்லை…!
அதேநேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பாதிப்பிலிருந்து மீண்டு வரவேண்டும் எனும் வேண்டுதல்களும், இனியாவது எச்சரிக்கையுடன் கூடிய உள்கட்டமைப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனும் கோரிக்கைகளும் உண்டு!

-
நன்றி : தி இந்து

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...