Showing posts with label உறவு. Show all posts
Showing posts with label உறவு. Show all posts

Dec 8, 2014

தற்காலிக வலி நீக்கி



இந்த வாழ்வின் ஆகச்சிறந்த சுவாரஸ்யங்களில் ஒன்று மரணம். ஒவ்வொருவருக்கும் தம்முடைய மரணம் மிகுந்த மிரட்சியூட்டுவதாய்த் தோற்றமளிக்கிறது. அதேசமயம் தம் உற்றாரின் மரணம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த வாழ்க்கை மீது மிகப்பெரிய அவநம்பிக்கையூட்டுவதாய் அமைந்து விடுகிறது. வாழ்க்கையின் அத்தனை வெற்றிகளையும், கெக்கலிப்புகளையும் சிதறடித்து, நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கிட உடனிருப்பவரைக் கொய்துபோகும் ஒற்றை மரணத்தால் முடிகின்றது. எவருக்குத் தெரியாது, இந்த வாழ்வின் நிறைவுப் புள்ளி சாவு என்பது? ஆனால் எவருக்குத்தான் அது பிடித்ததாய், விரும்புவதாய் அமைந்துவிடுகிறது.

மரம்போல் இருக்கும் குடும்பத்தின் வேர்களாய் இருப்பவை உறவுகள். ஆணிவேரைத் தொலைத்து சல்லிவேர்களில் ஊசலாடும் மரமாகவோ, சல்லிவேரினைத் தொலைத்து ஆணிவேரின் பிடிப்பில் காலம் நகர்த்தும் மரமாகவோ நாமோ அல்லது நமக்கு நெருக்கமான யாரோ ஒருவர் காலத்தை கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்று ஜீவித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

ஒரு விபத்து, ஒரு கவனக்குறைவு, ஒரு பேராசை, ஒரு துரோகம், ஒரு சதி, இரத்த நாளத்தில் உருவாகும் ஒரு சிறு அடைப்பு, ஒரு தவறு, ஒரு மெத்தனம், ஒரு தோல்வி, ஒரு அவநம்பிக்கை, ஒரு அறியாமை, கூடுதலாய் அமையும் ஒரு மிடறு மது என இவற்றில் ஏதாவது ஒரேயொரு ‘ஒரு’ போதுமானாதாய் இருக்கின்றது, ஆசையாய்க் கட்டிக்கொண்டிருக்கும் கனவின் மேல் அமிலத்தை வார்த்துவிட்டுப் போக.

அமிலத்தின் காயங்களை காலம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆற்றிவிட முனைவதை அதை அனுபவித்து வருபவர்களுக்கு காலம் புரியவைத்து விடுகிறது. ஆனால் அது ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கும் தழும்புதான் எப்போதும் ஜீவிக்கும் பிரச்சனை. எதேச்சையாய் விரல்கள் ஊர்ந்துபோகும் போதோ, தன் பார்வையே வருடிப்போகும்போதோ நிரடும் தழும்புகளுக்கு குறிப்பிடும் படியான நிறமும், வடிவமும் உண்டு. அதனுள் நீங்காமல், நிறமற்று வடிவமற்று, மறைந்திருக்கும் சூன்யமான வலிக்கு நிகராய் எதையும் உருவகப்படுத்திட முடியாது.
ஒரு குடும்பத்தின் கனவு ஊஞ்சல்களின் சங்கிலியாய் இருக்கும் ஒருவனோ, ஒரு குடும்பத்தின் குலதெய்வமாய் பாவிக்கப்படும் ஒருத்தியோ, இந்த நொடி முதல் இல்லாமல் போகின்றார்கள் என்பதை உணரும் தருணம் எத்தனை கொடியது என்பதை அனுபவித்துக் கடந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

இவ்வாறாக தங்கள்மேல் ஏவிவிடப்பட்ட ஒன்றை, அதே போன்று சுமக்கும் எத்தனையோ பேருடன், விதவிதமாய் ஒப்பீடுகளுக்குள் உட்படுத்தி சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றாலும், திமிறிக்கொண்டு வெளியே வந்து தனித்து நின்று, சீழ் வைத்த புண்ணில் துளிர்க்கும் வலிபோல் மீண்டும் மீண்டும் வதைத்துக் கொண்டேயிருப்பது அதன் தனியியல்பு.

அம்மா, அப்பா, சகோதரி, சகோதரன், மனைவி, கணவன், மகள், மகன், , பேரன், பேத்தி, உற்ற தோழமை என எவர் ஒருவரை இழந்தாலும், இழப்பவர்களுக்குள் ”எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி!”யெனும் கேள்விகள் தொடர்ந்து முளை விட்டுக்கொண்டேயிருக்கும். அவர்களுக்கும் நிதர்சனம் புரியும். அவை பதிலில்லாக் கேள்விகள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் தங்களின் மிச்சமிருக்கும் நாட்களைக் கடத்த, அவர்களிடமிருக்கும் ஒரு தற்காலிக வலி நீக்கியாய் அந்தக் கேள்விகளைத் தவிர்த்து வேறு எதுவும் இருப்பதில்லை!

Mar 29, 2014

கடிதம் எழுதுங்க பாஸ்


ஐந்து ஆண்டுகள் இருக்கும் தேவகி அக்கா எனக்கு நட்பாகி. நீண்ட வருடங்களாக அமெரிக்காவில் வசித்துவரும் குடும்பம். என்னுடைய கசியும் மௌனம் வலைப்பக்கங்களின் வாசகியாய் முதலின் மின்மடலின் வாயிலாக அறிமுகமானார். கிட்டத்தட்ட எல்லாப் பதிவுகளுக்குமே மின் உரையாடலிலோ அல்லது மடல் வாயிலாகவோ தன் கருத்துகளைத் தெரிவித்துவிடுவார். இவர் மூலமாகத்தான் டாக்டர். செந்தில் சேரன் எனக்கு நட்பானார். குழந்தைகளை கடிதம் எழுத வைப்பதற்காக செந்திலும் நானும் ஒரு இணையப் பக்கத்தை வடிவமைத்தோம். சிலகாரணங்களால் அதைத் தொடர இயலவில்லை ஆனாலும் அதைத் தொடர்ந்து நடத்த வேண்டும் எனும் பெருங்கனவு எனக்குண்டு.

தேவகி அக்காவிற்கு இரண்டு பிள்ளைகள். அதில் இளையவருக்கு 14 வயதாகின்றது. அவருக்கும் எனக்கும் ஏகப்பட்ட பொருத்தங்கள். முதல் பொருத்தம் அவன் பெயரும்கதிர்’. அடுத்த பொருத்தம் இனிசியலும் P. மூன்றாவது மிக முக்கியப் பொருத்தம் இருவரின் பிறந்தநாளும் அக்டோபர் - 7.

மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு அவர்கள் இந்தியா வந்தபோது சந்திக்கும் வாய்ப்பு தவறிவிட்டது. கடந்த ஆண்டு கதிர் இந்தியா வந்திருந்தபோது சென்னையில் சில நிமிடங்கள் பார்த்துப் பேசினேன். பிறந்து வளர்ந்தது முழுக்க முழுக்க அமெரிக்கா என்றாலும் தொடர்ந்து என்னோடு தமிழில் உரையாடல் நிகழ்த்துபவன்.

அங்கிருந்து சென்னையில் இருக்கும் குரு மூலம் பாடல் கற்றுக்கொண்டவன். கடந்த ஆண்டு பாடல் அரங்கேற்றம் அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது.

இப்படிப்பட்ட அருமை பெருமைகள் கொண்ட கதிர் சில நாட்களுக்கு முன்பு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்திருந்தான். அமெரிக்காவில் தமிழ் கற்றுவருவதில் வீட்டுப்பாடமாக கடிதம் எழுத பணித்திருக்கிறார்கள். அதன் காரணமாய் எனக்கு மின் மடலில் ஒரு அழகிய கடிதம் அனுப்பியிருந்தான்




//  அன்புள்ள கதிர் மாமா,


நான் நலமாக இருக்கிறேன். நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பாட்டி கண் சிகிச்சை செய்வதற்கு சென்னைக்கு வந்தார்கள் என்று செந்தில் அண்ணா கூறினார். அவர் எப்படி இருக்கிறார்.


இந்த ஆண்டு, கேரி, வடக்கு கரோலினாவில் அதிகமான பனி பெய்தது. முதல் முறை,  சனவரியில்  3-4 அங்குலம் பனி பெய்தது. இதனால் எங்கள் பள்ளிக்கூடத்தை மூன்று நாட்கள் மூடினார்கள்இதன் பிறகு, பிப்ரவரியில் 6-7 அங்குலம் பனி பெய்தது. இது மட்டும் அல்லாமல் அடுத்த நாள் இன்னொரு அங்குலம் பனிக்கட்டி பெய்ததுஇதற்காக ஒரு வாரமே பள்ளியிலிருந்து விடுமுறை மறுபடியும் கிடைத்தது! இதன் பிறகு மார்ச்சில் சிறிய அளவில் பனிக்கட்டி பெய்ததுஅதன் அளவு 1/2 அங்குலத்திற்கு குறைவே. இதற்கும் ஒரு நாள் பள்ளி விடுமுறை கிடைத்தது. இந்த செவ்வாய் இன்னொரு முறை பனி பெய்யப் போகிறது என்று நம்பபடுகிறது. இந்த குளிரும் பனியும் எங்களுக்கு மிகவும் வெறுப்பை ஏற்றியது.இதனால் எங்கள் மாநில விவசாயமும் பாதிக்கப்படும்.ஆனால் இதற்குப் பிறகுவரும் கோடையில் ஊருக்கு வந்து குளிர் இல்லாமல் இருக்கலாம்.


இந்தப் பனியால் எங்கள் விடுமுறை நாட்கள் குறைந்தன. இது மட்டும் இல்லாமல். பள்ளிக்கூடம், ஜூன் பத்து முடிந்துவிடும். ஆனால் பனியால் ஜூன் 13-தான் முடியும். நான் இறுதி நாள் பள்ளிக்கு போக முடியாது. காரணம் நானும் அம்மாவும் 13-ஆம் தேதி சென்னைக்கு கிளம்புகிறோம். உங்களையும் மற்ற உறவினர்களையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். மேலும் என் அக்கா, சிந்துவின் திருமணம் ஜுன் 30 நடக்கப் போகிறது. திருமணத்தில் நான் மாமாவிற்கு மோதிரம் போடப் போகிறேன். மேலும் என் கச்சேரி திருமணத்தில் நட்க்கப் போகிறது.


திருமணத்தில் கலந்துகொள்வதால் பெரும்பான்மையான உறவினர்களைப் பார்க்கலாம். மாமாவின் உறனிர்களையும் சந்திக்கலாம்.


உங்கள் ஊர் எப்படி இருக்கிறது? நிறைய மழை பெய்ததா இல்லை மழையே பெய்யவில்லையா? விசாயம் நன்றாக இருக்கிறதா? அல்லது மழை இல்லாமல் மோசமாக இருக்கிறதா? எந்த விதமான பயிர்களை நீங்கள் விவசாயம் செய்கிறீர்கள்? உங்கள் ஊரில் வெயில் அதிகமாக இருக்கிறதாநாங்கள் வரும்பொழுது மிகவும் வெயிலாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் ஊரில் ஏதாவது முக்கியமான நிகழ்வுகள் நடந்ததா?


அன்புடன்

கதிர் பச்சமுத்து

//

எல்லாம் அவசரமாகிவிட்ட சூழலில், இந்தக் கடிதம் தரும் இதமும் கிளறிவிடும் நினைவுகளும் அலாதியானது. என்ன பதில் கடிதம் எழுத எனக்கு சில நாட்கள் பிடித்துவிட்டது. பதில்க்கடிதம் எழுதிவிட்டு அவன் பதிலுக்காக காத்திருக்க தொடங்கிட்டேன். இனி நாங்கள் இருவரும் கடிதம் வாயிலாக தொடர்ந்து தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருக்கலாம். ஒரு கால் நூற்றாண்டு இடைவெளி இருக்கும் எங்களுக்குள் காலம் சுருங்கலாம். இருவரும் பரஸ்பரம் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். இன்னும் கூடுதலாய் நேசிக்கலாம்.

இதனால் சொல்ல வருவது என்னவென்றால்… ”கடிதம் எழுதுங்க பாஸ்காலம் இனிக்கும்!”

நன்றி கதிர்!

-


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...