Jan 21, 2011

ஒரு கலயக் கள்ளும் ஓவர் சீனும்!


நம்மாளுக எப்பத்தான் உருப்படுவாங்களோ தெரியல!

சத்தமில்லாம பண்ண வேண்டிய சோலிக்கு செமையா சவுண்டு குடுத்துடறாங்க!

பாருங்க பின்ன!


கண்ட கருமத்தக் குடிச்சு, காசும், ஒடம்பும் வீணாப்போகுதேன்னு இயற்கையா கெடைக்கிற கள்ள குடிச்சுட்டு தெம்பா இருக்கட்டுமேங்குற நல்லெண்ணத்துல (!) காட்டுல இருக்குற தென்ன மரம், பன மரத்துல கலயத்தக் கட்டி கள் எறக்கி சமூக சேவையாத்தாலாம்னு(!) நம்ம குடியானவங்க நெனைச்சாங்க சரி, ஆனா அத ஒரு தன்னடக்கமா பண்ணனும்ல…

அட தன்னடக்கம்ன்னா என்னங்க்றீங்ளா… நம்ம அரசியல்வாதிக பத்து, நூறு, ஆயிரம் எல்லாம் தாண்டி இப்போ லட்சம் கோடின்னு கூட கொள்ளையடிக்றாங்களே, அவங்கல்ல ஒரே ஒருத்தராவது “இதாப் பாருய்யா, நான் கொள்ளையடிக்கப்போறேன்”னு ஒரு நாளாச்சும் சவால் வுட்டாங்ளா? எவ்வளவு அடக்க ஒடுக்கமா, கட்சிக்குள்ள இருக்கிறவிகளுக்குக் கூடத் தெரியாமா நெதனாம அடிக்கிறாங்க… அதப்பார்த்தாவது தெரிஞ்சுக்கவேணாமா? அந்த தன்னடக்கம் இவிங்களுக்கு தெரிய வேணாமா?

சொட்டத் தலையில இருக்குற மசுரு மாதிரி, காட்டுக்குள்ளெ அங்கொன்னு, இங்கொன்னுன்னு மரம் வச்சுக்கிட்டு, ஒருபடி ஒன்றப்படின்னு சீசனுக்குச் சொரக்குற கள்ள எறக்கறதுக்கும் விக்கிறதுக்கும், குடியானவமூட்டுக்கும், மரமேறரவங்களுக்கும் எதுக்குய்யா நான் கள்ளு எறக்கப் போறேன் கள்ளு எறக்கப்போறேன்னு” வடிவேலு கணக்கா வெட்டி வெளம்பரம்?”

கடைசியா என்னாச்சுன்னு இப்ப பாத்தீங்ளா? கள்ளு எறக்கறம்னு வெளம்பரம் போட்டீங்க, பெரிய போலீசு சின்ன போலீசுன்னு மரத்தச் சுத்தி தெம்பா நிக்க, முக்கா டவுசர் போட்டுக்கிட்டு மரத்துல ஏறுறீங்க, ஒன்னே முக்கா லட்சம் கோடி ஊழலு கூட கண்ணுக்குத் தெரியாத, கலைஞர் டிவி, சன்னு டிவின்னு வளச்சு வளச்சு, லைட் அடிச்சு எப்பிடி படம் புடிச்சாங்க…

ஏறி எறங்கி இன்னொரு போசியில ஊத்துறப்போ, எப்பிடித் தெறமையா போலீசு புடிச்சாங்கன்னு பாத்தீங்கள்ள!!! நெசமாலுமே கேக்குறேன் இதெல்லாம் தேவையா நமக்கு…. அட நமக்குன்னு ஏன் சொல்றேன்னு பாத்தீங்ளா, நம்முளுதும், நம்ம சொந்த பந்தத்ததும் அங்கங்கே கொஞ்ச நஞ்சம் தென்ன, பன மரம் இருக்குதுல்ல…

மரம் இருக்குதுன்னு பெருமப் பட்டு என்ன பிரயோசனம், தென்ன மரத்துல காப்பு செரியில்ல, அப்படியே காய் வந்தாலும் மூனு ரூவாக்கு மேல யேவாரி எடுக்க மாட்டீங்றான்… எண்ணைக்குன்னு ஒடைச்சுப்போட்டாலும் ஒரு பிரயோசனும் இல்லன்னு என்ன சொல்லி என்ன!!!

இதுக்குமேல கள்-ளப் பத்தி பேசுனா, எதுனாச்சும் (இறையாண்மைக்கு எதிரான) சட்டம் பாஞ்சாலும் பாஞ்சுறுமப்போ!!! நான் போய் பொழப்பப் பாக்குறேன்.... போறதுக்கு முன்னால ஒன்னு மட்டும் சொல்லிட்டு போறேன்... நம்ம தலைவருக ’ஊழல் திட்டம்’ மாதிரி எல்லாத்துலயும் ஒரு ஒளிவு மறவு, நெழிவு சுளுவு இருக்கோனும்... இல்லீனாக்கா, அப்பு...... இப்பிடித்தான் ஆப்பு வந்து சேரும்...

செரி வரட்டுமா.....

ம்ம்ம்ம்.. அப்புறம் இன்னொன்னு, 

ஏய்ய்ய்யா, இந்த வெவசாயிகதான் நாட்டு முதுவெலும்பாமே. மரம் கொடுக்குற நம்ம சரக்கு தப்புன்னு அரசாங்கம் சொல்லுதுல்ல.... செரி... அதுல என்னமோ நாயம் இருக்குட்டும்... அப்போ வெவசாயம் சம்பந்தமிருக்குற ஒரு பயலும் அரசாங்கம் விக்கிற டாஸ்மாக்ல போயி கோட்டர் பாட்லு வாங்கம மூடிட்டு இருக்குனும்ல!

இருக்கமாட்டம்ல, அப்பிடியிருந்தாத்தான் ஊருக்கு ஊரு கவர்மெண்ட் கட தொறந்து வச்சிருந்திருக்காதே! செரி வுடுங்க, ஒரு கோட்டர போட்டுட்டு தென்னமரத்தடிய கட்டல போட்டு அன்னாந்து பாத்துக்குட்டு படுத்தம்னா எல்லாஞ் செரியாப்போயிரும்... இனிமே மரம் செரையெடுக்குறதுன்னாக்கூட ஆருகிட்டயும் சொல்லாம செய்ங்கப்பா! செரையெடுக்காட்டி கீழ தூங்றப்போ காத்துக்கு தலமேல மட்ட வுழுந்துறும்னு தெரியாதா என்ன?




பொறுப்பி : படம் உதவி வால்பையன் பாஸ் (எ) கார்த்திக்
-0-

Jan 20, 2011

புனைவு


உள்ளே புதைந்து கிடக்கும்
காமம் கோபம் கண்ணீர் வலி
மகிழ்ச்சி அன்பு பாசம் நேசம் 
எல்லாவற்றையும் எளிதாய்
இறக்கி வைத்தேன் எழுத்தில்.

என்னைப் பிரதியெடுத்ததை
இன்னுமொரு வாசித்தேன்
பிரதியின் நாற்றம் சகிக்காமல்
இற்று விழுந்தேன் எழுத்திற்குள்ளே!
நீந்திக்கொண்டிருந்த
எல்லாக் கசடுகளும் முட்டி மோதி
இன்னும் பயமுறுத்தின.

தட்டுத்தடுமாறி வெளியேறி
இன்னும் எழுத்துகளை இட்டேன்
புனைவு என…
போலி மாயத்திரையொன்று
தற்காலிகமாக
காத்துக் கொண்டிருக்கிறது
என்னை என்னிலிருந்து!

-0-

Jan 17, 2011

பகிர்தல் (17.01.2011)

பொங்கல்:

வழக்கத்திற்கு மாறான உற்சாகத்தோடு பொங்கல் நாள் மகிழ்ச்சியில் நகர்ந்தது. விவசாயப் பின்னணி என்பதால் மாட்டுப் பொங்கல் மட்டுமே வழக்கமாய்க் கொண்டாடி வருவதில் ஒரு மாற்றமாய் பொங்கல் தினத்தன்று உறவுகளோடு ஒன்று கூடி குழந்தைகள் சூழ பொங்கல் வைக்கலாமே என்ற ஆசை மிக அழகியதாய் நிறைவேறியது. பலகாரங்களைவிட, பொங்கலில் கலந்திருந்த வெல்லச் சுவையைவிட, சுற்றியிருந்த உறவுகளின் புன்னகைத்த முகங்களே கூடுதல் சுவையாய் இருந்தது.


அடுத்த நாளும் கிணற்றில் குளியல், தோட்டத்தில் வெட்டிய கரும்பு என மாட்டுப் பொங்கலும் மகிழ்வாய்ப் போனது!

ஓய்வில் உரல்களும், உலக்கைகளும்:

திங்களூருக்கு அருகில் இருக்கிறது அப்பிச்சிமார் மடம். குறிப்பிட்ட தினங்களில் பல ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் வருவதுமுண்டு. பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பலதரப்பட்ட மனிதர்களின் வேண்டுதலுக்குரிய ஓர் இடம். பல நூறு முறை திங்களூருக்குச் சென்று வந்தாலும் மடத்திற்குச் செல்ல நினைத்தது இந்த பொங்கல் தினத்தில் மட்டுமே. அப்பிச்சிமார், இராவணத்தன், மசிரியாத்தாள் ஆகியோரின் சமாதிகள் தனித்தனியே வணங்கப்படுகின்றன. 


குறிப்பிட்ட தினங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு பேய் ஓட்டுதல் நடைபெறும் என்று கூறுகிறார்கள். மடத்தில் ஒரேயொரு ஒற்றை மான் மட்டும் கம்பிகளுக்குள் இருந்து வருவோர் போவோரை ஏக்கமாய் பார்த்து நின்று கொண்டிருக்கிறது. அருகில் சென்றால் தடவிக் கொடுக்க ஏதுவாய் அமைதிகாக்கிறது. மடத்தில் கவர்ந்த விசயம் அழகாய்க் கிடந்த உரல்களும், உலக்கைகளும். நெல் கொண்டுவந்து அங்கேயே குத்தி, அரிசியாக்கி, பொங்கல் வைத்து சாப்பிட்டுப் போனதை நினைவுபடுத்தும் வகையில் அழகாய்க் கிடக்கின்றன உரல்களும் உலக்கைகளும்.

வலைப்பூக்களில் எழுத்தாளர்கள்:
கங்கணம், நிழல்முற்றம், கூளமாதாரி ஆகிய புத்தகங்களை எழுதிய நேசத்துக்குரிய எழுத்தாளரான திரு. பெருமாள் முருகன் சமீபத்தில் ”பெருமாள் முருகன்” என்ற வலைப்பூ மூலம் இணையத்தில் காலடி பதித்திருக்கிறார். சென்ற வாரம் வெளியான மாதொருபாகன் மிக நிச்சயமாக பேசப்படும் ஒரு புத்தகமா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழகத்தில் ஒரு எழுச்சி மிகு பேச்சாளராக அறியப்படுபவரும், இராமைய்யாவின் குடிசை, என்று தணியும் ஆவணப்படங்களின் இயக்குனருமான பாரதிகிருஷ்ணகுமார் ”உண்மை புதிதன்று” என்ற வலைப்பூ வாயிலாக இணையத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இருவரையும் வலைப்பூ எழுத்தில் காண்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்மணம் விருதுகள்:

தமிழ் வலைப்பூக்களின் மிக முக்கிய அடையாளமாக இருக்கும் தமிழ்மணம் திரட்டியின் 2010 விருதுகளில் என்னுடைய

வுனியாவுக்குப் போயிருந்தேன்” இடுகைக்கு முதல் பரிசும், 

”கோடியில் இருவர்” இடுகைக்கு இரண்டாவது பரிசும் 
கிடைத்திருக்கிறது. முதல் இரண்டு கட்டங்களில் வாக்குகள் மூலம் தேர்வு பெற்று, நடுவர்கள் மூலம் இறுதிச்சுற்றில் தேர்வு பெற்றிருக்கின்றன. தேர்வு பெற உதவிய அனைவருக்கும், தமிழ்மணம் திரட்டிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

||தமிழ்மணத்தில்  நடுவராக நானும் கலந்து கொண்டிருந்தேன். உங்களதுவவுனியாவுக்குப் போயிருந்தேன் படைப்புச் செறிவும் மனவெழுச்சியைத் துாண்டுவதாகவும் அமைந்திருந்தது. ”எனது நண்பர்தான்... அப்படி இருப்பதனால் நல்ல படைப்பாக இருந்தும்கூட, அதைப் பரிந்துரைக்கத் தயக்கமாக இருக்கிறது. இது எனது ஆலோசனை. நீங்களே முடிவு செய்யுங்கள்என்று எழுதியிருந்தேன். தரமானதைத் தேர்ந்தெடுத்த அவர்களது முடிவு மகிழ்ச்சி அளித்தது.||

தமிழ்மணம் தேர்வு குறித்து, நடுவராக இருந்த நட்பிற்குரிய ஒரு பதிவர் எனக்கு அனுப்பியிருந்த மின்மடல். நட்பு என்ற காரணத்திற்காக இதைத் தேர்ந்தெடுங்கள் என்ற அழுத்தத்தைக் கொடுக்காமல், தன் கருத்தை நேர்மையாக திரட்டிக்கு அனுப்பிய நடு நிலைக்கு நன்றிகளும் வணக்கங்களும். நல்ல நடுவர்களை இனம் கண்ட தமிழ்மணத்திற்கும் பாராட்டுகள். 


புத்தகங்களை வாங்கும் பழக்கத்தில் தொய்வில்லாத போதும், இணையத்தில் அதிக நேரம் தீர்ந்து போவதால் வாசிப்பில் மிகப்பெரிய தொய்வு விழுந்து விட்டது உண்மையே. வாசிக்காமல் அலமாரியில் உறங்கும் புத்தகங்கள் மிகப் பெரிய குற்ற உணர்வை தொடர்ந்து ஏற்படுத்தும் சூழலில் தமிழ்மண விருதுகள் வாயிலாக வரவிருக்கும் புத்தங்கள் வாசித்தே தீர வேண்டும் என்ற நிர்பந்தத்தை மனதிற்குள் திணித்துக் கொண்டிருக்கிறது.

சபரி மலை:

இரண்டு நாட்களாய் தொலைக்காட்சியை விட்டு தொலைவில் இருந்ததால் அதிர்ச்சி தரும் செய்திகள் எல்லாம், காலம் கடந்து கேட்டதால் மிகச் சாதரணாமாவே தோன்றியது. சபரிமலையின் சாவுகள் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எதைக்குறை சொல்ல, பக்தியோ, பணமோ ஆத்திரம் மிகுந்ததாகவே மாறிவிட்டது. எல்லாவற்றையும் பணத்தால் தீர்க்க முடியும் என்பது போல், எல்லாக் கஷ்டத்தையும் பக்தியால் கரைத்துக் கொள்ளமுடியும் என்ற எண்ணமும் மேலோங்கி வருகிறதோ என்றே தோன்றுகிறது. மாலையணிந்து செல்வதும், பாதயாத்திரையாய் பயணிப்பதும் ஒரு வித அழகியல் என்ற மனோநிலை கூடிவிட்டதோ? தேசிய நெடுஞ்சாலையில் பல கல் தொலைவிற்கு சாரைசாரையாய் பாதயாத்திரை செல்லும் பல்லாயிரக் கணக்கானோரின் வெற்றுப் பாதங்களைப் பார்க்கும் போது ஏதோ ஒரு நம்பிக்கை மனிதர்களை அதன் போக்கில் நடத்திச் செல்வது மட்டும் புரிகிறது.

பழகிப்போச்சு:

காலையில் பதிவுலக நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம், திரைப்படம், சில நடிகர்கள், அரசியல், பங்குச்சந்தை, சீனாவின் ஆதிக்கம் என என்னவேன்னவோ பேசிக்கொண்டிருந்தோம். யார் ஒருவரும் 63 ரூபாயை எட்டியிருக்கும் பெட்ரோல் விலை குறித்து நினைக்கவுமில்லை, பேசவுமில்லை. பேசியும் ஒன்றும் கிழிக்கமுடியாது என்பதில் மட்டும் எல்லோருக்கும் ஒருமித்த கருத்து. எனவே இது குறித்து முனகக்கூட மனதில்லை. இப்படித்தான் நடத்துவோம், உங்களால் என்ன செய்திட முடியும் என்ற அரசாங்கத்தின் மனோபாவத்திற்கு முன்னால் மண்டியிட்டு குரல்களற்றுக் கிடக்கிறோம். முப்பது நாட்களுக்குள் 12% அதிகரிக்கப்பட்ட பெட்ரோல் விலையில் எட்டணாவோ, ஒரு ரூபாயோ குறைக்கப்பட்டால் ஏற்படும் மகிழ்ச்சியில் ஏற்றங்களையும், ஏமாற்றங்களையும் மறந்துபோகும் வரம் நமக்கு இருக்கத்தானே செய்கின்றது.

-0

Jan 9, 2011

(ச்)இறந்த காலம்


கொழைஞ்ச நெல்லஞ்சோத்துக்கு
பச்சப்பயிறுக் கொழம்போடு
நெய் கொஞ்சம் ஊத்தி
நெருக்கிப் பிசையும் போது
விரலிடுக்கில் பிதுங்கி வழியும்
கிராமத்து ருசியில் ஒரு போதும்
அலுப்பும் சலிப்பும் இருந்ததில்லை
”இன்னிக்கும் அதே சட்னிதானா?”

-0-

வேலாத்தா கடைப்பக்கம்
வெளியூரூ மாப்பிளைக
வறட்டு இருமலோடு
வாங்கிக் குடிப்பதில்
அவ்வப்போது வீசும்
காலி சிகரெட் பெட்டியில்
சீட்டுக்கட்டு விளையாட
நைந்து கிழிந்து போன
இரண்டு சீட்டுகளுக்கு
மாற்று கிடைப்பதுண்டு

-0-

எம்ஜிஆரா சிவாஜியா
பரம்பரைப் போட்டிகளின் நீட்சியாய்
புதிதாய் வரும் போஸ்டர்களுக்கு
போடும் பந்தயங்களில்
ஜெய்சங்கரின் குதிரை துப்பாக்கியில்
சிவகுமாரின் முருகன் மயிலில்
எப்போதும் இணையாத
ரஜினி கட்சியும் கமலு கட்சியும்
இணைந்தே தோற்றுப்போவதும் உண்டு

-0-

Jan 6, 2011

அதன் பொருட்டு


படம் உதவி : www.harrybliss.com

சிலந்தி வலையாய்
இழுத்துப் பிணைக்கும் இணையமும்
கண்கள் காதுகள் வழியே மனதிலும்
மாயவர்ணத்தை நிரப்பும் தொ(ல்)லைக்காட்சியும்
திணறத் திணறத் திணிக்கும்
இனம் புரியாச் சுவையில் நிறைந்து…

வெட்டி வைத்த மாங்காய் துண்டில்
பூத்து நிற்கும் புளிப்புச் சுவையையும்
தட்டில் மல்லாந்து திமிறும்
உப்பு மிளகாய்தூளின் உன்னதச் சுவையையும்
ருசிக்க மறந்த மறத்த உள்நாக்கு போல்…

நீள மறுக்கும் கைகளால்
வாசனை தீராப் புத்தகங்கள்
சீந்தப்படாமல், தீண்டப்படாமல்
ஒட்டடைக் கம்பிகளில் சிறைபட்டு
கொஞ்சம் கூடுதலாய்
விசும்பிக் கொண்டேயிருக்கிறது.

-0-



Jan 4, 2011

தற்கொலை, கொலை

எர்ணாகுளம் அருகே நெட்டூர் நெடுஞ்சாலையில் காலை பதினொரு மணியளவில் அதிவேகத்தில் வந்த அந்த விலை உயர்ந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு எதிரில் வந்த இரு சக்கர வாகனத்தில் மோதுகிறது. மோதிய வேகத்தில் காரின் ஏர்பேக் திறந்து முன்னிருக்கையில் இருந்த இருவரைப் பாதுகாக்கிறது. ஆனால் இரு சக்கர வாகனத்தில் ஒரு கணவன் மனைவியுடன் வந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று அதே இடத்தில் இறந்து போகிறது. மற்ற மூவரும் மிக மோசமாக அடிபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சம்பவத்தை நேரில் கண்ட அருகாமை கிராமத்து மக்கள் கோபத்தில் காரை மிக மோசமாக அடித்து சிதைக்கின்றனர். காரில் சென்றவர்கள் போதையில் இருப்பது தெரிந்ததும் கோபம் மூர்க்கமாகிறது. நான்கு பேரையும் சரமாரியாக அடித்துத் துவைக்கின்றனர்.  நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து அடித்ததில் நால்வரும் மிக மோசமாக தாக்கப்படுகின்றனர். விரைந்து வந்த காவல்துறை நால்வரையும் மீட்கிறது. காவல் துறை இன்னும் சில நிமிடங்கள் தாமதித்து வந்திருந்தாலும் நால்வரும் அடித்தே கொல்லப் பட வாய்ப்பிருந்திருக்கிறது. 

இறுதியாய் காரை ஓட்டியவர் போதையில் இருந்ததாகவும், அதிவேகத்தில் வந்து மோதியதாகவும் இ.பிகோ 304ன் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓட்டிய நபர் சிறையில் இருக்கிறார். ஒரு பாவமும் அறியாக் குழந்தையை பலி கொடுத்து இன்னும் அந்தக் குடும்பம் இன்னும் மருத்துவமையில் இருக்கிறது. காரை ஓட்டியவரின் குடும்பமும், நண்பர்களும் கோவைக்கும் எர்ணாகுளத்திற்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கிறனர்.

-0-

இரவு நேரம் விருந்தில் சிறப்பாக சாப்பிட்டத்தோடு, கூடுதல் மகிழ்ச்சியாய் மதுவோடு சரசமாடிவிட்டு இரவு பத்து மணிக்கு நாமக்கல்லில் இருந்து காரில் நண்பர்கள் இருவர் புறப்படுகின்றனர். வாகனத்தை இயக்கச் சென்ற கார் உரிமையாளரை ”இருங்க.. நான் ஓட்டுறேன், நீங்க தூங்குங்க” என்று கட்டாயப்படுத்திவிட்டு நண்பர் காரை ஓட்டத்துவங்குகிறார். எப்போதும் மிகச் சிறப்பாக காரை ஓட்டும் திறமை கொண்டவர்தான். 



கண்ணாடிகள் ஏற்றப்பட்டு குளிரூட்டப்பட்ட நிலையில் கார் திருச்செங்கோடு நகரைத்தாண்டி பள்ளிபாளையம் அருகே நெருங்கும் போது, இடது பக்க இருக்கையில் உறக்கத்தில் இருந்தவர் திடுக்கிட்டு எழுந்து ”எதோ சப்தம் வருது, டயர் கருகுகிற வாசம் அடிக்குது” என நிறுத்தச் சொல்கிறார். இறங்கிப் பார்த்தால் இடது பக்க பின் சக்கர டயர் நார்நாராக் கிழிந்து புகை பறக்கிறது. வரும் வழியில் பஞ்சர் ஆனது கூடத் தெரியாமல் பல கி.மீ. தொலைவிற்கு காரை ஓட்டி வந்தது புரிகிறது. 


-0-

இது அவ்வப்போது கேள்விப்படும், சா()தா’ரணமான சம்பவங்களே. இந்த நிகழ்வுகளில் இடம் பெறுபவர்கள் நாம் எனில் பாதிப்பின் சூட்டை, அழுத்தத்தை, வலியை நேரிடையாக உணர்கிறோம். நிகழ்வுகளில் இருப்பவர்கள் நம் நண்பர்களெனில், அவை கொஞ்சம் கூடுதல் கவனத்தையும் ஆர்வத்தையும் பெறுகின்றன.


ஒவ்வொரு பயணமும் மறுபிறவி என்பதை அனுதினமும் நாம் சந்திக்கும், கேள்வியுறும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டேயிருக்கிறது. எல்லோரையும் மீறி விபத்து நிகழ்வதை ஒருபோதும் தடுக்க முடிவதில்லை. அது நியதியாய் இருக்கும் மரணம் போன்றது. குடி போதையில் ஏற்படுத்தும் விபத்துகள் தற்கொலைக்கும், கொலைக்கும் நிகரானது. தடுப்பது நம் கையில் இருக்கிறதென்பதை மறுக்கவும் வேண்டாம், மறக்கவும் வேண்டாம். குறைந்த பட்சம் குடி போதையில் வாகனம் இயக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவோம்!

-0-

Jan 1, 2011

சில சிறப்புச் சமரசங்கள்

வழக்கமான நேற்று கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாய்க் கடந்து போனது. ஒவ்வொரு முறையும், வலிய செயற்கை உற்சாகம் திணிக்கப்படும் தினம் அது. கொஞ்ச காலமாய் மிகப் பெரிய வியாபார தினமும் கூட. புத்தாண்டுச் சலுகை என பெரும்பாலான கடைகள் இன்னொரு தீபாவளிக்கு முந்தைய நாட்களாகவும், தி.நகர் ரங்கநாதன் தெரு போலவும் ஒரு பிம்பத்தை எங்கள் ஊரிலும் கட்டமைக்கும் வல்லமை பெற்றுவிட்டது.

சட்டம் ஒழுங்கிலும் கூட கொஞ்சம் தளர்ச்சி, இரவு ஒரு மணி வரை எவ்வளவு குடித்து விட்டு ஓட்டினாலும் பரவாயில்லை. ஏதும் சத்தம் போடாமல், சாகசம் நிகழ்த்தாமல் போனால் போதும். பக்க வாட்டில் சாலையோரம் பாதுகாப்புக்கு(!) நிற்கும் காவல்துறையினரை வினாடி நேரமேனும் தலைவர்களுக்கு பாதுகாப்பிற்கு நிற்பது போல் நமக்கும் நிற்கிறார்கள் என கற்பனை செய்து கொள்வதில் சில துளிகளேனும் மகிழ்ச்சி நமக்குள் சுரக்கத்தான் செய்கின்றன.

ஓநாய்க் குரலை ஒலிப்பானில் ஒலித்து அலட்டல் விடும் இரு சக்கர வாகன சர்க்கஸ்காரர்களை விரட்டிப் பிடிக்க, தயார் நிலையில் காவல் வாகனங்கள் ஆங்காங்கெ தென்படுவதும் இந்த நாட்களின் அடையாளம்.
காலை முதலே யாரை நோக்கினாலும், உடனே ஒரு செயற்கைச் சாயம் வழியும் புன்னகை பூத்துக் கொள்கிறது. “ஏப்பி நியூ இயர்” என்ற கை பற்றும் வாழ்த்துகளுக்கு, அட நாளையும் ஒரு நாள்தானே என்ற எண்ணம் இருப்பினும், மரியாதை(!) நிமித்தமாய் “ஸேம் டூ யூ” வென உதடுகளில் பதில்கள் அனிச்சையாய் கசிந்தோடிவிடுகிறது.

குடி பழகிய காலத்திலிருந்து, தவறாமல் தவிர்க்காமல் குடிக்கும் 31ம் தேதி இரவுகளில் நேற்று மட்டும் அதீத சுய கட்டுப்பாடு(!), விருப்பத்தின் பேரில் தப்பித்துக் கொண்டது. ஏனைய நாட்களில் எப்போதாவது குடிப்பதற்கு எல்லைகளும் அளவுகளும்  இருக்கும். இந்த நாளில் மட்டும் செயற்கைக் கொண்டாட்டம் செய்யும் சித்து விளையாட்டுகளில் அளவுகள் மாறிப் போவதும், வாழ்த்துகிறேன் என வழவழவென அழைப்புகள் தொடுப்பதில் அடுத்த நாள் விழித்து கைபேசியின் அழைப்புப் பட்டியலை பார்க்கும் போது, ஒரு கௌரவ வெட்கம் சூழ்ந்து கொள்வதும் வாடிக்கை.

நல்ல பிள்ளையாய் 9 மணிக்கு வீடு சென்று, நன்றாய் சாப்பிட்டு, பொறுமையாய் உட்கார்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் தசாவதாரத்தை தரிசனம் பண்ணக் கொட்டாவி அழைத்தது, வந்து தூங்கு என்று. மிகத் தெளிவாக கைபேசியை அமைதி நிலையில் கிடத்திவிட்டு உறக்கத்தைத் தழுவ, சற்று நேரத்தில் சட சடவென பட்டாசும், வானவேடிக்கையும் சப்தங்களாக அடைபட்ட சன்னல் வழியே கசிந்து வந்து எழுப்பியது.

”அடேங்கப்பா! என்ன்ன்ன்னா பெரிய்ய்ய்ய சாதனை புது வருசம் சுகப்பிரசவமாய் அமைந்தது போலும்” என அரைத்தூக்கத்தில் கடந்து காலை எழுந்த போது, விடுமுறையில் என் அம்மா வீட்டிலிருக்கும் மகள் பல முறை அழைத்திருந்தது கைபேசியில் தவறிக் கிடந்தது. கொஞ்சம் குறுகுறுக்கும் மனதோடு திருப்பியழைக்க, எட்டு மணிக்கும் எழாமல் “போங்கப்பா, ஹேப்பி நியூ இயர் சொல்லக் கூப்பிட்டா, போனே எடுக்கல…” என சிணுங்கிவிட்டு வாழ்த்தைத் தவழவிட்டாள். என்னதான் வாதம் விதண்டாவாதம் வைத்தாலும் குழந்தைகள் முன், அதுவும் சொந்த மகள் முன் எல்லாம் துறந்து, இனிப்பாய் இனிக்கும் வாழ்த்துகளை அள்ளி எடுத்துக் கொள்ளும் சமரசத்தில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

நேற்றுத் தவிர்த்த மது குறித்து நண்பரிடம் பெருமையாக தம்பட்டம் அடிக்கும் போது “ம்ம்ம்ம்…. குடிக்காம அப்படி என்னதான் சாதிச்சிட்டீங்களாக்கும்” என்று சொல்லிவிட்டு “என்ன்ன்ன்ன இந்தக் கருமத்தக் குடிச்சா, அடுத்த நாளு தலை வலிக்கத்தான் செய்யுது. செரி வாங்க ஒரு டீ அடிப்போம், தலை வலிக்குது” என அழைத்த போது மின்னலாய் ஒரு மகிழ்ச்சி நேற்று தவிர்த்த குடிக்கு நிகராய் ஒரு போதையை மனதுக்குள் பரவவிட்டது.

வழக்கம் போல் அலுவலகம் வந்தாகிவிட்டது, நாட்காட்டித் தாளை கிழிப்பதற்குப் பதிலாக, கிழிக்க வசதியாய் 365 தாள்கள் கொண்ட, அன்பளிப்பாய்க் கிடைத்த நாட்காட்டியை புதிதாய் மாட்டி, புதிய வருடத்தைத் துவங்கியாவிட்டது. நாட்காட்டிகளைத் தவிர குறிப்பிடத்தகுந்த விசயம், இன்னும் பல நாட்களுக்கு எதற்காகவேனும் தேதிகளை எழுதும் போது ஏற்படும் 11க்கு பதிலாக வழக்கம் போல 10 என்றே எழுதும் குளறுபடிகள்தான். 

எனக்கு இது நடந்தது, அவருக்கு அது நடந்தது என்று ஒவ்வொரு முக்கிய செயல்களிலும் ஆண்டுகளின் எண் ஒட்டிக்கொண்டேதான் இருக்கின்றது. அரிய நட்புகளையும், உறவுகளையும் கண்டெடுத்தது குறித்து நினைவுகளை மீட்டும் போது, அதில் 2010 என்ற எண்ணிற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கவே செய்யும்.

ம்ம்ம்ம்… தேடல் தானே வாழ்க்கை…. தேடுவோம், அன்பு, நேசம், நெகிழ்ச்சியோடு இன்னும் கூடுதல் நட்புகளையும், உறவுகளையும். கூடவே தேவையானவற்றை அடையாளப்படுத்துவோம், ஆவணப்படுத்துவோம் நமக்கு கிடைத்த வாய்ப்புகளின் வழியே.

-0-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...