Showing posts with label விவசாயி. Show all posts
Showing posts with label விவசாயி. Show all posts

Jan 13, 2016

'பீட்டா' தோழர்களுக்கு ஓர் உள்ளூர்க்காரன் எழுதும் லெட்டர்!



அன்புள்ள 'பீட்டா' தோழர்களுக்கு...
விலங்குகள் மீது நீங்கள் அன்பு செலுத்துவதாலேயே உங்கள் மீது எனக்கு அன்பு பெருக்கெடுக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டு, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு முதலான வேர்களின் ஆழம் அறியாது, போட்டி நடைபெறும் அந்த ஒற்றை தினத்தில் சில கணிப்புகளையொட்டி நீங்கள் எடுத்துவரும் முன்னெடுப்புகள் ஒருபுறம் இருக்கட்டும். உங்களிடன் எனக்குப் பகிர்வதற்கு சில சொந்த அனுபவங்கள் உள்ளன.

எனக்கும், நான் பிறந்த ஊருக்கும், வளர்ந்த ஊருக்கும் இப்போது வாழும் ஊருக்கும் ஜல்லிக்கட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

பொங்கல் பண்டிகையில் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னம்பட்டியில் எருதாட்டம் என்ற பெயரில் வீதிகளில் கோமாளி ஒருவர் ஓட அவர் பின்னே சீற்றத்தோடு ஓடும் காளைகளை மிரட்சியோடு பார்த்ததுதான் என் ‘ஜல்லிக்கட்டு’ அல்லது ‘எருதாட்ட’ அனுபவம்

காலம் காலமாய் வளர்த்த காளைகளும், எருதுகளும் கிட்டத்தட்ட எங்கள் பகுதிகளில் அற்றுப்போன நிலையில், பாலுக்காக கலப்பின மாடுகள் பெருமளவில் நிரப்பப்பட்ட நிலையில், அறிவியல் வளர்ந்த(!) நிலையில், உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்ட நிலையில்.... ''போயும்.. போயும் மாட்டை விரட்டிவிட்டு அதன் மேல் கும்பலாகப் பாய்ந்து, சில நொடிகள் பிடித்து விட்டதை வீரம் என நினைத்துக்கொள்ளும்'' ஜல்லிக்கட்டு தேவைதானா எனும் பெயரளவிலான அறிவார்ந்த(!) கேள்வி எனக்கும் இல்லாமல் இல்லை.

எனக்கு உண்மையில் ஜல்லிக்கட்டின் வரலாறு மற்றும் புவியியல், விலங்கு நேயர்களின் காருண்யம் குறித்தெல்லாம் பெரிய அறிவு கிடையாது.

எருமைகளின் இயல்பும், மாடுகளின் இயல்பும் ஓரளவு தெரியும். பல்லாண்டுகளாக அவைகளை வளர்த்து, தீனி போட்டு, காலை நேரக் குளிரில் சாணி அள்ளி, தவிடு புண்ணாக்கு தாழிகளில் போட்டு, அவ்வப்போது பருத்திக்கொட்டை ஆட்டி ஊற்றி என பக்குவம் செய்ததோடு, அவைகளுக்கு அண்ணாங்கால் போட்டு காடு மேடுகளில் பல வருடங்கள் மேய்த்த அனுபவம் உண்டு.

பொதுவாக அவை யாவும் விலங்குகள் என்ற முறையில் மட்டும் அன்பும் அக்கறையும் செலுத்தப்பட்டதில்லை. விவசாயிகளின் குடும்பத்தில் அவையும் ஒரு அங்கம், அந்த வீட்டில் அது ஓர் உறவு. அவற்றின் பெயர்கள்கூட ஜிம்மி, பப்லு, பிங்கி, ஷங்கி என்றெல்லாம் இருக்காது. காளை (அ) மாடுகளுக்கு சின்னவன், பெரியவன், கருவாயன், வெள்ளையன், செவள என்றோ எருமைகளுக்கு கோணக்காலி, வெள்ளச்சி, பெரிய கெடா, வவுரி, சப்பக்காலி, காட்டேரி என்றோ அதனதன் இயல்புகளுக்கேற்ப, அவர்கள் புழங்கும் மொழியில் உரிமையாக, கிண்டலாகப் பெயர் சூட்டப்பட்டிருக்கும்.

ஒரு கட்டத்தில் காலம் காலமாக நாங்கள் வளர்த்த நாட்டு மாடுகள் எப்படியோ குறைந்துபோய், உயரம் குறைந்த, சற்று நீளமான, வயிறு தொங்கலான சிந்து மாடுகள் என்றொரு வகை கட்டுத்தரைகளில் வந்து இறக்குமதியாகின. நாட்டு மாடுகள் முக்கி முக்கி மூன்று படி கறந்த இடத்தில் இவை எட்டுப் படி என தாராளம் காட்டின. ஆனால் நாட்டு மாட்டுப் பாலின் ருசிக்கு பக்கத்தில்கூட சிந்து மாட்டுப் பாலின் ருசி வரவில்லை. ''பாலு என்ன பாலு, நம்ப மாடு (நாட்டு மாடு) போடற சாணி வாசத்துக்கு பக்கத்துல நிக்க முடியுமா அந்த மாடு எருவற சாணி'' என்பார் எங்கள் கிராமத்தில் ஒருவர்.

ஆனாலும் கூட... ஃபேஸ்புக்கில் ஆங்க்ரிபேடு விளையாடத் தெரியாத, பாஃர்ம் வில்லாவில் விவசாயம் செய்யத் தெரியாத, உலகில் எந்த நல்ல மாற்றங்கள் நடந்தாலும் அது எவ்விதமும் தங்களை எட்டாதது குறித்து அலுப்பில்லாமல் வாழும் ஒரு கூட்டம் இருக்கின்றது. அவர்கள் இன்றும் தங்களிடம் இருக்கும் கொஞ்சம் நிலத்தை உழுவதற்காகவோ, என்னதான் ட்ராக்டரில் உழுதாலும் குட்டக் கலப்பையோ, கொத்துக் கலப்பையோ போட்டு மண்ணைக் கிளர்ந்து ஒரு உழவு ஓட்டிடனும் என கூப்பிடுவார்கள் என்ற நம்பிக்கையில் காளைகளை / எருதுகளை கொஞ்சம் நம்பிக்கையோடு வளர்த்து வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதோ ஈரோடு நகரத்துக்குள் குட்டியானை எனச் சொல்லப்படும டாடா ஏஸ் வண்டிகள் வந்து குவிந்த பின்னும் கூட, இன்னும் ஜவுளிக் கடைப் பகுதிகளில் ஒற்றை மாடு பூட்டிய வண்டிகள் ஓரளவு இருக்கத்தான் செய்கின்றன.

அவசர வாழ்க்கையில் விரைகின்றவர்களுக்கு, சாலைகளில், வீதிகளில் ஆடி அசைந்து போகும் மாட்டு வண்டிகள் எரிச்சலை உண்டாக்கத்தான் செய்கின்றன. சில நேரங்களில் அவ்வண்டிகளால் போக்குவரத்து நெரிசல்கூட ஏற்படுகிறது. சாலைகளில் சாணம் போட்டுவிடுகின்றன. ''இன்னும் ஏன் தான் இவுங்க முன்னேறாம இருக்காங்களோ!? அதான் சின்னச் சின்னதா வண்டி வந்திருக்கே… வாங்கி ஓட்ட வேண்டியதுதானே… இவங்களால ட்ராபிக் ஆவுது… பெரிய இடைஞ்சலா இருக்கு'' என நாட்டை எடுத்து நிமிர்த்தி வைக்க ஓடுபவர்களுக்கு ''அந்த வண்டிகள் ஒருபோதும் பெட்ரோல் பங்குகளில் வந்து டீசல் பிடிக்க நிற்பதில்லை என்பதும், டெல்லி போல ஒற்றை, இரட்டை இலக்க வாகன இயக்கப் பரிசோதனைக்குள் ஆட்பட்டு மாசுக் கட்டுப்பாட்டுக்கு முடங்க வேண்டிய அவசியமில்லை'' என்பது தெரியுமா எனத் தெரியவில்லை.

ஆகவே இனியும் உழவுக்கும், பாரம் இழுக்கவும் எருதுகளே வந்துவிடும் என்றெல்லாம் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், எல்லாம் சுழற்சியில்தான் வருகின்றன.

ஒரு காலகட்டத்தில் காட்டில் கடலை விதைத்து, அறுவடை செய்து, உரித்து, மாடு பூட்டப்பட்ட செக்கில் கொடுத்து ஆட்டி எடுத்த கடலை எண்ணெய் தான் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். யாரோ எவ்விதமோ கடலை எண்ணெய் கொழுப்பு நிறைந்தது எனக் கிளப்பி விட்டார்கள். பனை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் என ஏதேதோ எண்ணெய்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அவைகளின் வாயிலாக அவை சார்ந்த நிறுவனங்கள் கொழுத்தன. அதையனைத்தையும் தாண்டி மீண்டும் கடலை எண்ணெய்தான் வேண்டும், அதுவும் மரச்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் வேண்டும், விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை எனக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதேதான் நாட்டுக்கோழி முட்டைகளிலிருந்து பண்ணைக்கோழிக்கு மாறிவிட்டு மீண்டும் எவ்வளவு காசு ஆனாலும் நாட்டுக்கோழி முட்டை கிடைக்குமா என்பதும். இதுபோல் ஒவ்வொன்றிலும்.

சரி இந்த சுழற்சிகளுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு என நினைக்கலாம். காலம்காலமாக மாடு கன்று ஈன்றால், அது பெண் கன்றாக இருந்தால் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள். ஆண் கன்றாக இருந்தால் சிலர் காளையாக பின் காயடித்து எருதாக மாற்றி, பயன்படுத்த வைத்துக்கொள்வார்கள். இல்லாவிடில் காளைக்கன்றை விற்றுவிடுவார்கள். அப்படியாக தப்பிப்பிழைத்த காளைதான் அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து பசுமாடுகளுடனும் இணை சேர்ந்து பிள்ளை வரம் கொடுக்கும். அந்தக் காளையின் பயன்பாடு பசுக்களோடு இணை சேர்வது அல்லது எருதாக உழவுக்கும், வண்டிகளிலும் பயன்படுவது.

அப்படியாக வளர்க்கப்பட்ட காளைகளைத்தான் தெற்கத்திச் சீமைகளில் விளையாட்டில் பயன்படுத்தி வந்திருக்கலாம் அல்லது வருகின்றனர். உண்மையில் பசுக்களுக்கு இணை சேர்க்காமலே செயற்கைக் கருவூட்டல் மூலம் 150 ரூபாய்க்கு ஊசி போட்டு வேறொரு இனத்தை விதைத்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் பரம்பரையைக் குழப்பி இப்போது என்ன வகை மாடு வளர்த்துகிறோம் என்றே தெரியாமல் வளர்த்துகிறோம். உழவுக்கும், வண்டி இழுப்பதற்கும் காளைகளைப் பயன்படுத்தாத இச்சூழலில், பாரம்பரிய இன மாடுகளை அழித்துவிடாமல் தொடர்ந்து வளர்த்துவதற்கு, அதற்காக காளைகளை வைத்து பராமரிக்க அந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டு அவசியமான ஒரு காரணமாக நான் எடுத்துக்கொள்கிறேன்.

யாரோ எங்கோ மாடுகளுக்கு சாராயம் புகட்டியிருக்கலாம், அடித்து கொடுமைப்படுத்தியிருக்கலாம். அதுவே பொதுவான நடைமுறையாக ஆகாது. உழவிலும், வண்டியிலும் இழுக்காத மாட்டை அடிக்கும் அதே உரிமையாளன்தான், கட்டுத்தரையில் பாராட்டிச் சீராட்டி கட்டியணைத்து நிற்பான். அடுத்து… தன் மண்ணில்… தான் ஆண்டு முழுதும் சீராட்டி, தாலாட்டி, பழக்கி வளர்த்தும் மாடுகளோடு, ஒரு நாள் ஓடவிட்டு திமில் பிடித்து சில நொடிகள் நிற்கும் விளையாட்டையெல்லாம் தடுக்க விஷமத்தனத்தோடு வருபவர்கள்…. செயற்கைக் கருவூட்டலிலியே பிறந்து, தன் வாழ்நாளில் உடலுறவின் சுகமே காணாமல், செயற்கை கருவூட்டலிலேயே கருத்தரித்து, கன்று ஈன்று, இயந்திரம் உறிந்துகொள்ள மடி கொடுத்து, எல்லாக் கொடுமைகளிலும் அமைதி காத்து, இயற்கை மேய்ச்சலை மறந்து வருடம் முழுவதும் இன்பமற்று, இலக்கற்று நிற்கும் பண்ணைகளில் விலங்குகளுக்கு நேயம் பேணிவிட்டு, தினவோடு ஆகிருதியாய் பாயும் காளைகளிடம் காருண்யம் காட்ட வரட்டும்.

இவ்வாறான ஒவ்வொரு முடக்கத்திற்குப் பின்னும், ஒவ்வொரு விரிவாக்கத்திற்குப் பின்னும், பலரின் வேர்கள் அவர்கள் அறியாமலே ஆழத்தில் மௌனமாக அறுக்கப்பட்டுவிடுகின்றன. அறுக்கப்படும் போதெல்லாம் ஏதோ ஒன்று கவர்ச்சியாகக் காட்டப்பட்டு அல்லது மிரட்டப்பட்டு ஒடுக்கிவிடுகிறார்கள்.

தன் வேர் அறுந்தது தெரியாமல் தலையாட்டிக்கொண்டே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தம் ஜீவனை இழந்து கொண்டேயிருப்பார்கள். வேர் அறுந்த சமூகம் வீழ்ந்து தன்னை முழுவதும் இழந்தபின்பு அதே இடத்தில் வேறொரு விதை ஊன்றப்படும். அது விஷம் பரப்பும் மரமாகவும் இருக்கலாம்… ஆனால் அவ்வாறெல்லாம் தெரியா வண்ணம் அது பளபளப்பாகவும், அழகூட்டப்பட்டதாகவும், சுவையும் சுகமும் தருவதாகவும் கூட இருந்து தொலைக்கும்!

பீட்டா தோழர்களே... மீண்டும் சொல்ல விழைகிறேன்... விலங்குகள் மீது நீங்கள் அன்பு செலுத்துவதாலேயே உங்கள் மீது எனக்கு அன்பு பெருக்கெடுக்கிறது!

உங்களைப் போலவே விலங்குகளை நேசிக்கும்,

உள்ளூர்க்காரன்

-

நன்றி
தி இந்து

.

Nov 2, 2010

போக்கத்த பொழப்பு


”நாந்தா, யென்ன பண்றது, எதப் பண்ணாலும் பொழைக்கத் தெரியாத போங்குன்னு சொல்றாங்க”

”மவராசனுங்களா, நீங்களே சொல்லுங்க, நானென்ன தப்பு பண்ணன்னு”

”எங்கப்பெ குடிச்சழிச்சது போவ மிச்சமுட்டதுல்ல எனக்கு ஒன்னேமுக்கா, தம்பிகாரனுக்கு ஒன்னேமுக்கான்னு, தண்ணிக்கு கொறைச்சல்லதா வயக்காடு.”

”கெணரு பொதுவுதான். ஆளுக்கொரு நாளைக்கு தண்ணி மொற, அவனுக்கு தெக்குப் பக்க பங்குல கொட்டாயி, எனக்கு வடவரத்துல., கொட்டாயிக்குப் பக்கத்துல தனித்தனியா பெரிய தொட்டி கட்டி, வூடு வாசல் கட்டுத்தரன்னு நல்லாத்தான் இருந்துச்சு”

எங்கம்மா செத்தப்பொறவு, அது வட்டிக்யுட்ருந்த காசுல, காரியம் கருமாதின்னு செலவு போவ தலைக்கு முப்பதாயரம் ரூவா வந்துச்சு”

அம்மாளுக்கு எரும வச்சு பாலூத்துறதுன்னா கொள்ள ஆச. தண்ணிப்பஞ்சம் இருந்த காலத்துல கூட கொடம்போட்டுக்கிட்டு அமுத்துப் பைப்புக்கு போயி தண்ணி கொண்டாந்து எருமய வளர்த்துச்சு. அதெல்லாம் ஒரு காலம். கடைசி காலத்துல எருமை ஒன்னு ஊட்ல இல்லீங்ற கவலையே பெருங்கவல அதுக்கு.,

செரி அம்மா காசு தானே அது நாவகார்த்தமா எரும வாங்கலாம்னு, சந்தைக்குப் போயி தலச்சன் கெடாரியா, கிட்டக்கி ஈனற மாதர, நல்ல செனையா ஒன்னு வாங்கியாந்தேன். சந்தைக்கு போயி புரோட்டா தின்னது, புரோக்கருக்கு கொடுத்ததுன்னு, வண்டியேத்தி கொண்டு வந்த செலவு வரைக்கும், முப்பதாயிரம் முடிஞ்சு கைக்காசு ஒரு ஆறுநூறு ரூவா செலவாயிடுச்சு”

பாக்குற விவசாயம் பத்தலைன்னு, பக்கத்துக்காட்டுக்கு அப்பப்ப கூலி வேலைக்கும் போன பொண்டாட்டிகாரி மொனகிட்டே கெடந்தா, இருக்குற பகுமானத்துல எரும வச்சு சம்பாதிக்ரையாக்கும்னு.

அம்மா மேல நம்ப பாசமா இருந்தானேன்னு, தம்பிக்காரன கேட்டேன்,
”தென்றா, நீய்மு எருமகிரும வாங்கறயா?”

அவன் அப்பவே சொன்னான், ”இல்லீணா நான் பிசுனசு பண்றேனு”

”அட என்றா பிசுனசுன்ன்னு” கேட்டதுக்கு

”இப்பவெலாம் சொல்ல மாட்டேன். சொன்னா நீ ஊரு முச்சூடும் போய்ச் சொல்லுவே, பொறுத்துப் பாரு, ஒரு வரசம் கழிச்சு, உம்பட எரும பெருசா, எம்மட பிசுனசு பெருசான்னுன்னான்”

நானும் மாட்டுத்தீவனம், தவுடு, பருத்திக்கொட்டை, வக்கிப்பில்லுன்னு வாங்கியாந்து வச்சுக்கிட்டு, காத்தாலயும், வெய்யத்தாழவும் எருமய வாய்க்கா வறப்புன்னு மேயவுட்டுக்கிட்டிருந்தேன்”



ரெண்டு நா கழிச்சு, தம்பிகாரனூட்டுக்கு மினிடோருல அஞ்சாறு பொட்டி வந்து எறங்குச்சு. கூடவே பளபளன்னு பிளாஸ்டிக் கேனு நெறையா எறங்குச்சு

மேய்ஞ்சிக்கிட்டிருந்த எருமய புடிச்சுக் கட்டிப்போட்டு, வெசையாப் போயி “”தென்றா இது”ன்னு கேட்டா, ”தண்ணி மெசின்னுனான்.”

”தண்ணிக்கெதுக்குடா மெசினு”ன்னேன்

“அட இதுல தண்ணிய சுத்தம் பண்ணிக் குடுத்தா லிட்ரக்கு ஒரு ரூவா கிடைக்கும்னான்”

மெசினு ஒன்னு நாலாயிரம் ரூவான்னு அஞ்சு மெசினும், பத்தாயிரம் ரூவாக்கு தண்ணிக் கேனும் வாங்கியாந்தானாம்.

”தென்னடா, நானு பாலு விக்கிலாம்னு இருக்கேன், நீ தண்ணி விக்கப்போறியா”ன்னு சொல்லிட்டு வந்தேன்.

மொதத்தடவ தண்ணிய போட்டு, குடிச்சுப்பாருன்னு கொண்டாந்து குடுத்தான். கொஞ்சம் ருசியாத்தான் இருந்துச்சு.

அடுத்த நாள்ல இருந்து டிவிஸ் வண்டீல அஞ்சஞ்சு கேணா கட்டிக்கிட்டு அப்ப்டியே காலணிப் பக்கம், பஞ்சாயத்தாபிஸ் பக்கம்னு நாலஞ்சு தடவ போய்ப்போட்டு போய்ப்போட்டு வந்தான்.

“தென்றா பண்றீன்”னதுக்கு, ”கால்னீல கேனு இரவதுன்னு வாங்ராங்ணான்னான்”

எருமைக்கு தண்டு நறுங்கிருச்சு, மேய்சலுக்கு புடிக்கிறதில்லை, எப்பவேணா கண்ணுப் போட்ரும்போல இருந்துச்சு.

முதல்ல ரெண்டு நட போனவன், இப்ப எடப்பட்ட நேரத்லியு ரெண்டு கேனு, மூனு கேனுன்னு வேற போயிட்ருந்தான்”

வெடிகாத்தால கெடாரிக்கன்னாப் போட்டுச்சு, நஞ்சு போட்டபொறவு, சீம்பால பீச்சி பாதிய காச்ச சொல்லீட்டு, மீதிய தம்பி கொட்டாய்க்கு கொண்டு போனா, புருசம் பொண்டாட்டிக்கு பேசக்கூட நெரமில்லாம கேனக் கழுவறதும், தண்ணி புடிக்றதும்னு கெடந்தாங்க.

செரி, ரெண்டு நாள்ல நல்ல பாலும் திரும்பீறும், நாமுளும் பால்காரனுக்கு ஊத்துனா படி இரவத்தஞ்சுக்குத்தான் போவும், கால்னீல ஊத்னா, முப்பது வெரைக்கும் போவும்ண்டு, சின்னவங்கிட்ட “டேய், ராசு கால்னீல ஆராவது பால் வேணும்னு கேட்டாச் சொல்றா”ன்னு வந்துட்டேன்.

மொதக்கறவைனாலும் காத்தால நாலு படி, பொழுதோட நாலு படின்னு கறவ பரவால்ல. கோழிகூப்ட எந்திருச்சு பாலப்பீச்சிட்டு, கட்டுதர சுத்தம் பண்ணீட்டு கேன எடுத்துக்கிட்டு கால்னீ சுத்தறதுக்குள்ளயே போழுது மேல வந்துறுச்சு.

அல்லாரும், எனக்கு குடு, உனக்கு குடுன்னு போட்டி போட்டுக்கிட்டு வாங்னாங்க.

”ஏனுங், தண்ணீக்காரக்கு அண்ணன்னு சொல்லி தண்ணி கலந்துறாதீங்னு ஒரம்மா சொல்லுச்சு”
இன்னொரம்மா, ”தண்ணீ, பாலுன்னு அண்ணனும் தம்பியும் நல்ல யாவாரந்தான்னு” பெரும பேசுச்சு

எல்லாம் இளிச்சிளிச்சு பேசுனாங்களே தவர காசு தர, வாரக் கணக்கு, மாசக் கணக்குன்னு இழுத்தடிச்சாங்க. தம்பிக்கார மட்டும் தண்ணிய வெச்சாப் போதும்னு காசுக் குடுத்துட்டாங்க

தலச்சன் கெடாரின்னாலும் பால் கறக்க மடி பூவாட்டம் நல்லாத்தான் இருந்துச்சு. நாலு மாசத்துல கெடா சேத்துனதுல்ல பயிராச்சு. செரியான நேரத்திக்கு செனப் புடிக்குதேன்னு சந்தோசப் பட்டப்பவே, கறவ வத்தாரம்பிச்சிடுச்சு, தீவனத்துல கொறச்சலில்ல, பாலு மட்டும் படி எட்லருந்து அஞ்சுக்கும் ஆறுக்கும் எடப்பட்றுச்சு. கால்னீல காசுக்கு இழுத்த ரெண்டு வூட்டுக்கு, இதச்சொல்லி பால நிறுத்த வேண்டியதப்போச்சு.

தம்பி சளைக்காம தெனத்திக்கும் தண்ணிக் கேனோட ஓடிக்கிட்டேயிருந்தான். கன்னும் பெருசாச்சு, கறவை ஒரு நேரமாச்சு, எண்ணி எட்டாவது மாசம் பாலு வத்திப்போச்சு. தீவனதுக்கும், தவுட்டுக்கும், முடிஞ்ச வெச்ச காச அவுத்து செலவு பண்றதாச்சு.

செரியா ஒரு வருசம் முடிஞ்சுது. சொன்ன மாதரயே தம்பிக்காரன் வந்தான்
”ஏண்ணா, இந்தக் கருமத்தவுட்டுப்போட்டு நீயும்தான் தண்ணி செமக்குறதுதானேன்னான்”

எனக்கு, கருக்குன்னுச்சு, “தேண்டா இப்டிச்சொல்றேன்னு” கேட்டா

சொல்றான் பாருங்க கணக்கு, ”மனுச மக்கா, பாலு வாங்காம காபி, டீத்தண்ணி குடிக்காம கூட இருந்துருவாங்க போல, தண்ணிக்கு அத்தன டிமாண்டுண்ணா, தெனத்திக்கும் 20-25 கேனு வச்சா 400-500 ரூவா கை மேல காசு வந்துறுது. நுப்பதாயரத்துப் போட்டு எனக்கு எல்லாச் செலவும் போவ மாசத்திக்கு பத்துன்னு சீட்டுப்போட்டதுல லட்சத்தி சில்றல சீட்டுப்பணம் இருக்குது…. எருமயக் கட்டிட்டு கெடக்றியே உங்க்ட்ட எவ்வளவு இருக்குது”ன்னு கேட்டான்

கருமாந்தரம் நானெங்க எழுதியா வெச்சேன். வாய்க்கணக்காப் போட்டுப்பார்த்தா, மொத்தமா பாலூத்துன காசு நாப்பத்தாஞ்சாயரம் கணக்கு வந்தது, மாட்டுத்தீவன மூட்ட, தவுடு வக்கிப்பில்லுன்னு போனதே நுப்பத்தஞ்சாயரம். இருக்குற கன்னு கெடாரிங்றதால ஒரு மூனு நாலுக்கு போவும். மேய்ச்ச கூலிக்கு வூட்டுக்குப் பாலும், காட்டுக்குச் சாணியும் கெடச்சது போவ முக்கி முக்கி கணக்குப்போட்டாலும் பத்தாயிரத்து மேல கணக்குல வரலையே,

”தென்றா கொடுமயிது, தண்ணிய புடிச்சு பாட்டல்ல அடச்சு குடுத்தா படி பாஞ்சு ரூவான்னும், கேன்ல வித்த இரவதுபடி இரவத்துஞ்சுன்னு வாங்றாங்க, விக்கரவன்னு லட்சத்தலயும் கோடிலயெல்லாம் சம்பாதிக்கலாமாட்ருக்குது. ஒரு சீவனக்கொண்டாந்து கட்டி வளர்த்து, ராத்திரி பகலா பராமரிப்புப் பண்ணி, சாணியெடுத்து, நோவு நொடி வரமா பாத்து, பச்சப் புல்லாப் போட்டு, தவுடு புண்ணாக்குன்னு வெச்சு, தின்னதயும், குடிச்சதயும் இரத்தமா ஊறவச்சு,  அதப் பாலா மாத்திக் கொடுக்றத, எட்டி ஒதச்சாலும் தாங்கிட்டு கறந்து கொண்டாந்து வித்தா, மிஞ்சர காசுல பிஞ்ச கோவணத்துக்கு மாத்துத் துணிக்குக்கூட பத்தாது போலன்னு” சொல்லிட்ருக்கும் போது, வூட்டுக்குள்ளருந்து இதெல்லாம் கேட்டுக்கிட்டிருந்த பொண்டாட்டிகாரி போன வேகத்துல கீழ கெடந்த மட்டைய எடுத்து எருமைய ரெண்டு சாத்து சாத்துனா, அவ அங்க சாத்துன சாத்து, பிஞ்ச சீமாத்த சாணியில நலச்சு என்ற மூஞ்சியில அடிச்ச மாதர இருந்துச்சுங்க..

”நாந்தா, யென்ன பண்றது, எதப் பண்ணாலும் பொழைக்கத் தெரியாத போங்குன்னு சொல்றாங்க”


***********************

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...