Showing posts with label புனைவுன்னாலும் நடக்காததா என்ன?. Show all posts
Showing posts with label புனைவுன்னாலும் நடக்காததா என்ன?. Show all posts

Nov 2, 2010

போக்கத்த பொழப்பு


”நாந்தா, யென்ன பண்றது, எதப் பண்ணாலும் பொழைக்கத் தெரியாத போங்குன்னு சொல்றாங்க”

”மவராசனுங்களா, நீங்களே சொல்லுங்க, நானென்ன தப்பு பண்ணன்னு”

”எங்கப்பெ குடிச்சழிச்சது போவ மிச்சமுட்டதுல்ல எனக்கு ஒன்னேமுக்கா, தம்பிகாரனுக்கு ஒன்னேமுக்கான்னு, தண்ணிக்கு கொறைச்சல்லதா வயக்காடு.”

”கெணரு பொதுவுதான். ஆளுக்கொரு நாளைக்கு தண்ணி மொற, அவனுக்கு தெக்குப் பக்க பங்குல கொட்டாயி, எனக்கு வடவரத்துல., கொட்டாயிக்குப் பக்கத்துல தனித்தனியா பெரிய தொட்டி கட்டி, வூடு வாசல் கட்டுத்தரன்னு நல்லாத்தான் இருந்துச்சு”

எங்கம்மா செத்தப்பொறவு, அது வட்டிக்யுட்ருந்த காசுல, காரியம் கருமாதின்னு செலவு போவ தலைக்கு முப்பதாயரம் ரூவா வந்துச்சு”

அம்மாளுக்கு எரும வச்சு பாலூத்துறதுன்னா கொள்ள ஆச. தண்ணிப்பஞ்சம் இருந்த காலத்துல கூட கொடம்போட்டுக்கிட்டு அமுத்துப் பைப்புக்கு போயி தண்ணி கொண்டாந்து எருமய வளர்த்துச்சு. அதெல்லாம் ஒரு காலம். கடைசி காலத்துல எருமை ஒன்னு ஊட்ல இல்லீங்ற கவலையே பெருங்கவல அதுக்கு.,

செரி அம்மா காசு தானே அது நாவகார்த்தமா எரும வாங்கலாம்னு, சந்தைக்குப் போயி தலச்சன் கெடாரியா, கிட்டக்கி ஈனற மாதர, நல்ல செனையா ஒன்னு வாங்கியாந்தேன். சந்தைக்கு போயி புரோட்டா தின்னது, புரோக்கருக்கு கொடுத்ததுன்னு, வண்டியேத்தி கொண்டு வந்த செலவு வரைக்கும், முப்பதாயிரம் முடிஞ்சு கைக்காசு ஒரு ஆறுநூறு ரூவா செலவாயிடுச்சு”

பாக்குற விவசாயம் பத்தலைன்னு, பக்கத்துக்காட்டுக்கு அப்பப்ப கூலி வேலைக்கும் போன பொண்டாட்டிகாரி மொனகிட்டே கெடந்தா, இருக்குற பகுமானத்துல எரும வச்சு சம்பாதிக்ரையாக்கும்னு.

அம்மா மேல நம்ப பாசமா இருந்தானேன்னு, தம்பிக்காரன கேட்டேன்,
”தென்றா, நீய்மு எருமகிரும வாங்கறயா?”

அவன் அப்பவே சொன்னான், ”இல்லீணா நான் பிசுனசு பண்றேனு”

”அட என்றா பிசுனசுன்ன்னு” கேட்டதுக்கு

”இப்பவெலாம் சொல்ல மாட்டேன். சொன்னா நீ ஊரு முச்சூடும் போய்ச் சொல்லுவே, பொறுத்துப் பாரு, ஒரு வரசம் கழிச்சு, உம்பட எரும பெருசா, எம்மட பிசுனசு பெருசான்னுன்னான்”

நானும் மாட்டுத்தீவனம், தவுடு, பருத்திக்கொட்டை, வக்கிப்பில்லுன்னு வாங்கியாந்து வச்சுக்கிட்டு, காத்தாலயும், வெய்யத்தாழவும் எருமய வாய்க்கா வறப்புன்னு மேயவுட்டுக்கிட்டிருந்தேன்”



ரெண்டு நா கழிச்சு, தம்பிகாரனூட்டுக்கு மினிடோருல அஞ்சாறு பொட்டி வந்து எறங்குச்சு. கூடவே பளபளன்னு பிளாஸ்டிக் கேனு நெறையா எறங்குச்சு

மேய்ஞ்சிக்கிட்டிருந்த எருமய புடிச்சுக் கட்டிப்போட்டு, வெசையாப் போயி “”தென்றா இது”ன்னு கேட்டா, ”தண்ணி மெசின்னுனான்.”

”தண்ணிக்கெதுக்குடா மெசினு”ன்னேன்

“அட இதுல தண்ணிய சுத்தம் பண்ணிக் குடுத்தா லிட்ரக்கு ஒரு ரூவா கிடைக்கும்னான்”

மெசினு ஒன்னு நாலாயிரம் ரூவான்னு அஞ்சு மெசினும், பத்தாயிரம் ரூவாக்கு தண்ணிக் கேனும் வாங்கியாந்தானாம்.

”தென்னடா, நானு பாலு விக்கிலாம்னு இருக்கேன், நீ தண்ணி விக்கப்போறியா”ன்னு சொல்லிட்டு வந்தேன்.

மொதத்தடவ தண்ணிய போட்டு, குடிச்சுப்பாருன்னு கொண்டாந்து குடுத்தான். கொஞ்சம் ருசியாத்தான் இருந்துச்சு.

அடுத்த நாள்ல இருந்து டிவிஸ் வண்டீல அஞ்சஞ்சு கேணா கட்டிக்கிட்டு அப்ப்டியே காலணிப் பக்கம், பஞ்சாயத்தாபிஸ் பக்கம்னு நாலஞ்சு தடவ போய்ப்போட்டு போய்ப்போட்டு வந்தான்.

“தென்றா பண்றீன்”னதுக்கு, ”கால்னீல கேனு இரவதுன்னு வாங்ராங்ணான்னான்”

எருமைக்கு தண்டு நறுங்கிருச்சு, மேய்சலுக்கு புடிக்கிறதில்லை, எப்பவேணா கண்ணுப் போட்ரும்போல இருந்துச்சு.

முதல்ல ரெண்டு நட போனவன், இப்ப எடப்பட்ட நேரத்லியு ரெண்டு கேனு, மூனு கேனுன்னு வேற போயிட்ருந்தான்”

வெடிகாத்தால கெடாரிக்கன்னாப் போட்டுச்சு, நஞ்சு போட்டபொறவு, சீம்பால பீச்சி பாதிய காச்ச சொல்லீட்டு, மீதிய தம்பி கொட்டாய்க்கு கொண்டு போனா, புருசம் பொண்டாட்டிக்கு பேசக்கூட நெரமில்லாம கேனக் கழுவறதும், தண்ணி புடிக்றதும்னு கெடந்தாங்க.

செரி, ரெண்டு நாள்ல நல்ல பாலும் திரும்பீறும், நாமுளும் பால்காரனுக்கு ஊத்துனா படி இரவத்தஞ்சுக்குத்தான் போவும், கால்னீல ஊத்னா, முப்பது வெரைக்கும் போவும்ண்டு, சின்னவங்கிட்ட “டேய், ராசு கால்னீல ஆராவது பால் வேணும்னு கேட்டாச் சொல்றா”ன்னு வந்துட்டேன்.

மொதக்கறவைனாலும் காத்தால நாலு படி, பொழுதோட நாலு படின்னு கறவ பரவால்ல. கோழிகூப்ட எந்திருச்சு பாலப்பீச்சிட்டு, கட்டுதர சுத்தம் பண்ணீட்டு கேன எடுத்துக்கிட்டு கால்னீ சுத்தறதுக்குள்ளயே போழுது மேல வந்துறுச்சு.

அல்லாரும், எனக்கு குடு, உனக்கு குடுன்னு போட்டி போட்டுக்கிட்டு வாங்னாங்க.

”ஏனுங், தண்ணீக்காரக்கு அண்ணன்னு சொல்லி தண்ணி கலந்துறாதீங்னு ஒரம்மா சொல்லுச்சு”
இன்னொரம்மா, ”தண்ணீ, பாலுன்னு அண்ணனும் தம்பியும் நல்ல யாவாரந்தான்னு” பெரும பேசுச்சு

எல்லாம் இளிச்சிளிச்சு பேசுனாங்களே தவர காசு தர, வாரக் கணக்கு, மாசக் கணக்குன்னு இழுத்தடிச்சாங்க. தம்பிக்கார மட்டும் தண்ணிய வெச்சாப் போதும்னு காசுக் குடுத்துட்டாங்க

தலச்சன் கெடாரின்னாலும் பால் கறக்க மடி பூவாட்டம் நல்லாத்தான் இருந்துச்சு. நாலு மாசத்துல கெடா சேத்துனதுல்ல பயிராச்சு. செரியான நேரத்திக்கு செனப் புடிக்குதேன்னு சந்தோசப் பட்டப்பவே, கறவ வத்தாரம்பிச்சிடுச்சு, தீவனத்துல கொறச்சலில்ல, பாலு மட்டும் படி எட்லருந்து அஞ்சுக்கும் ஆறுக்கும் எடப்பட்றுச்சு. கால்னீல காசுக்கு இழுத்த ரெண்டு வூட்டுக்கு, இதச்சொல்லி பால நிறுத்த வேண்டியதப்போச்சு.

தம்பி சளைக்காம தெனத்திக்கும் தண்ணிக் கேனோட ஓடிக்கிட்டேயிருந்தான். கன்னும் பெருசாச்சு, கறவை ஒரு நேரமாச்சு, எண்ணி எட்டாவது மாசம் பாலு வத்திப்போச்சு. தீவனதுக்கும், தவுட்டுக்கும், முடிஞ்ச வெச்ச காச அவுத்து செலவு பண்றதாச்சு.

செரியா ஒரு வருசம் முடிஞ்சுது. சொன்ன மாதரயே தம்பிக்காரன் வந்தான்
”ஏண்ணா, இந்தக் கருமத்தவுட்டுப்போட்டு நீயும்தான் தண்ணி செமக்குறதுதானேன்னான்”

எனக்கு, கருக்குன்னுச்சு, “தேண்டா இப்டிச்சொல்றேன்னு” கேட்டா

சொல்றான் பாருங்க கணக்கு, ”மனுச மக்கா, பாலு வாங்காம காபி, டீத்தண்ணி குடிக்காம கூட இருந்துருவாங்க போல, தண்ணிக்கு அத்தன டிமாண்டுண்ணா, தெனத்திக்கும் 20-25 கேனு வச்சா 400-500 ரூவா கை மேல காசு வந்துறுது. நுப்பதாயரத்துப் போட்டு எனக்கு எல்லாச் செலவும் போவ மாசத்திக்கு பத்துன்னு சீட்டுப்போட்டதுல லட்சத்தி சில்றல சீட்டுப்பணம் இருக்குது…. எருமயக் கட்டிட்டு கெடக்றியே உங்க்ட்ட எவ்வளவு இருக்குது”ன்னு கேட்டான்

கருமாந்தரம் நானெங்க எழுதியா வெச்சேன். வாய்க்கணக்காப் போட்டுப்பார்த்தா, மொத்தமா பாலூத்துன காசு நாப்பத்தாஞ்சாயரம் கணக்கு வந்தது, மாட்டுத்தீவன மூட்ட, தவுடு வக்கிப்பில்லுன்னு போனதே நுப்பத்தஞ்சாயரம். இருக்குற கன்னு கெடாரிங்றதால ஒரு மூனு நாலுக்கு போவும். மேய்ச்ச கூலிக்கு வூட்டுக்குப் பாலும், காட்டுக்குச் சாணியும் கெடச்சது போவ முக்கி முக்கி கணக்குப்போட்டாலும் பத்தாயிரத்து மேல கணக்குல வரலையே,

”தென்றா கொடுமயிது, தண்ணிய புடிச்சு பாட்டல்ல அடச்சு குடுத்தா படி பாஞ்சு ரூவான்னும், கேன்ல வித்த இரவதுபடி இரவத்துஞ்சுன்னு வாங்றாங்க, விக்கரவன்னு லட்சத்தலயும் கோடிலயெல்லாம் சம்பாதிக்கலாமாட்ருக்குது. ஒரு சீவனக்கொண்டாந்து கட்டி வளர்த்து, ராத்திரி பகலா பராமரிப்புப் பண்ணி, சாணியெடுத்து, நோவு நொடி வரமா பாத்து, பச்சப் புல்லாப் போட்டு, தவுடு புண்ணாக்குன்னு வெச்சு, தின்னதயும், குடிச்சதயும் இரத்தமா ஊறவச்சு,  அதப் பாலா மாத்திக் கொடுக்றத, எட்டி ஒதச்சாலும் தாங்கிட்டு கறந்து கொண்டாந்து வித்தா, மிஞ்சர காசுல பிஞ்ச கோவணத்துக்கு மாத்துத் துணிக்குக்கூட பத்தாது போலன்னு” சொல்லிட்ருக்கும் போது, வூட்டுக்குள்ளருந்து இதெல்லாம் கேட்டுக்கிட்டிருந்த பொண்டாட்டிகாரி போன வேகத்துல கீழ கெடந்த மட்டைய எடுத்து எருமைய ரெண்டு சாத்து சாத்துனா, அவ அங்க சாத்துன சாத்து, பிஞ்ச சீமாத்த சாணியில நலச்சு என்ற மூஞ்சியில அடிச்ச மாதர இருந்துச்சுங்க..

”நாந்தா, யென்ன பண்றது, எதப் பண்ணாலும் பொழைக்கத் தெரியாத போங்குன்னு சொல்றாங்க”


***********************

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...