Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

Dec 19, 2011

இளஞ்சூடாய் இன்னுமிருக்கும் கைகுலுக்கல்கள் – சங்கமம் 2011


கடந்த இரண்டு ஆண்டுகளாக சங்கமம் நிகழ்ச்சி நடந்தவுடன், உடனுக்குடன் பரபரப்பாக அதுகுறித்து இடுகையெழுதுவது வழக்கம். இந்த முறை மிகமிக குறுகிய காலத்தில் கொஞ்சம் வித்தியாசமான திட்டமிடல், அதற்கான மிகக்கடின உழைப்பு, எப்படி செய்யவேண்டும் என நினைத்தோமோ, கிட்டத்தட்ட அப்படியே செய்ததாக ஒரு மனநிறைவு என்று நிறைவடைந்ததில்ல், பலதரப்பட்ட மனோநிலைகளில் மாறிமாறி உழன்றுகொண்டிருந்த என்னால், எனக்குள் வேறு வேறு திசைகளில் பரபரப்பாய் பறக்கும் வார்த்தைகளை எட்டிப் பிடித்து உடனே வரிகளுக்குள் கோர்க்க முடியாமல் போனது.

நிகழ்ச்சி நிறைவடைந்த பின்மதிய நேரத்தில் இரண்டு நாட்களாகத் தொலைத்த உறக்கத்தைச் சரிசெய்ய விழுந்தாலும், எள்ளவும் தூக்கம் எட்டவில்லை. மாலை 6 மணிக்கு விஸ்வம் அண்ணன் வீட்டில் குழும நண்பர்கள் சந்திப்போம் என முடிவெடுத்திருந்ததால், அப்படியே ஒரு அரை மயக்கத்தில் அங்கு வந்து எல்லோரும் கூடிப் பேசிப்பேசி சிரித்து சிரித்து சிரித்து சிரித்து, வலித்த வயிற்றுக்கு இதமாய உணவு உண்டு பின்னரவில் பிரிந்தபோதும் என் கைகளுக்குள் வார்த்தைகள் வந்து சிக்கவில்லை
.
எங்களின் மகிழ்ச்சி, எங்களுக்குள் அலையடிக்கும் நெகிழ்ச்சியை அப்படியே எடுத்துக்கொட்டிட இப்போது நான் முயற்சிக்கும் இந்த வார்த்தைகள் சரியானவைதானா என்ற சந்தேகமும் இருக்கின்றது.



முதலில் இந்த ஆண்டு சங்கமம் தேவையா இல்லையா என்ற ஒரு நிலைப்பாடு எங்களுக்குள் சில மாதங்களாவே இருந்துகொண்டுதான் இருந்தது. அதற்கு ஒரே காரணம் வலைப்பதிவுலகம் சற்றே தொய்வாக இருந்தது மட்டுமே. ஆனாலும் தனிமனிதனாகப் போராடி எங்களை ஊக்குவித்து, இதை நடத்த வைத்தது சந்துரு அண்ணன் மட்டுமே. எனவே இந்த முறை வலைப்பதிவுகள் பக்கம் அதிகம் பரிட்சயம் இல்லாதிருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் நண்பர்களையும் அழைப்போம் என்று முடிவானது

நடத்தலாம் என முடிவெடுத்த பிறகு பெரிய அரங்கு வேண்டும் எனத்தேடியதில், நாங்கள் விரும்பியவண்ணம் கிடைத்தது இந்த ரோட்டரி அரங்கு. டிசம்பர் 6ம் தேதி இரவு ஏழு மணிக்கு ஆரூரன், அரங்கிற்கு முன்பணம் கொடுத்த ரசீதை என்னிடம் அளித்தபோது அதில் 18ம்தேதி எனக்குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு, அதிர்ந்து கேட்டேன் “என்ன மாம்ஸ், வெறும் 11 நாள்தான் இருக்கு, எப்படி?” என்றேன் “என்ன பண்ணுவீங்களோ தெரியாது, நடத்துறோம், அதுவும் சூப்பரா” என்று சொல்ல சந்துரு அண்ணன் அழைத்து “சாப்பாடு விசயத்தை (திட்டமிடல்) முழுக்க முழுக்க  பார்த்துக்குறேன். நிகழ்ச்சிக்கு திட்டமிடவேண்டியது உங்க பொறுப்பு” எனச் சொல்லிவிட, அடுத்த நாள் மிக அவசரமாக குழும உறுப்பினர்களை அழைத்தோம். பேசினோம் பேசினோம் என்ன பேசினோம் என்று தெரியவில்லை. எந்த முடிவுக்கு வரவும் முடியவில்லை. ஆனால் சமூக வலை தளங்களில் இயங்கும் சிலரை அழைத்துப் பாராட்டுவது என்று மட்டும் ஒருவரி முடிவு எட்டப்பட்டது. யாரை எப்படித் தேர்வு செய்வது என்பது ஒரு குழுவின் பொறுப்பில் விடப்பட்டது. சிறப்புவிருந்தினராக மக்கள் சிந்தனைப் பேரவையின் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களை அழைப்பதாக முடிவு செய்யப்பட்டது.

பட்டியல் தயாரானவுடன், நான், ஜாபர், ஆரூரன், பாலாசி, சந்துரு அண்ணன், கார்த்திக் என ஆளாளுக்கு ஒவ்வொருவரை அழைத்தும், மின் மடல் வாயிலாகவும் விழாவுக்கு வரவேண்டும் என ஒப்புதல் பெறத் துவங்கினோம். ஒப்புதல் கிடைத்தபிறகு டிசம்பர் 9ம் தேதி முறைப்படியாக அவர்களுக்கு மின்மடல் வாயிலாக அவர்களை பாராட்ட விரும்புவதையும், அதற்காக அவர்களின் சுயவிபரங்கள், குறிப்பிட்ட பல தகவல்கள், புகைப்படங்கள் என கேட்டோம்.

அடுத்த நாள் டிசம்பர் 10ம் தேதிதான் குழுமம் சார்பில் சங்கமம் குறித்து முறைப்படியான அழைப்பு என் வலைப்பக்கத்தில் விடுக்கப்பட்டது.  ஃபேஸ்புக், ட்விட்டர் உட்பட வேறு தளங்களிலிருந்தும் அழைத்ததால், பங்கேற்பாளர்களின் வருகை மின்மடல் வாயிலாக உறுதிசெய்யுமாறு கேட்டிருந்தோம். அதில் தொடந்து வந்த பதிவுகள் எங்களை மேலும் வேகம்கொண்டு இயக்கத்துவங்கியது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நபர்களைப் பற்றிய விபரங்கள், படங்கள் சேகரிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்தது. ஒருவாராக அனைத்தையும் சேகரித்து ஒட்டுமொத்தமாக தயாரிப்பு பணி துவங்கியது டிசம்பர் 16ம் தேதி காலையில் தான். மே

இதை எப்படி மேடையில் வழங்குவது என்பது குறித்து மூளைக்குள் ஒரு போராட்டம் நடந்துகொண்டேயிருந்தது. எப்போதும் மண்டைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஒரு பூச்சி ஓடுவதுபோல் சிந்தனை ஓடிக்கொண்டேயிருக்கும். தேநீர் அருந்த செல்லும் வேளைகளில் கார்த்தியிடம் நகைச்சுவையாக புலம்புவதும் உண்டு, ”எப்படியாச்சும் திடீர்னு 18ம் தேதி மதியம் இரண்டு மணி வந்துடக்கூடாதா?, எப்படியோ எல்லாத்தையும் முடிச்சுட்டோம்னு இருந்திட மாட்டோமா?” என்று.

மின்மடல் வாயிலாக பதிவு செய்பவர்களுக்கு பதில் அளிப்பது, உதவி செய்வது என அனைத்து வேலைகளையும் பாலாசி எடுத்துக்கொண்டார். வெளியூரிலிருந்து வருகின்றவர்களுக்கான அறைகள், வாகனவசதிகள் ஏற்பாடு செய்வதை ஜாபர் எடுத்துக்கொண்டார். சிறப்பு விருந்தினருக்கான கவனத்தை ஆரூரன் எடுத்துக்கொண்டார்.

ஃபேஸ்புக் நண்பர் நந்தகுமாரிடம் பாராட்டு பெறுவோரை மேடைக்கு அழைக்கும் நிகழ்ச்சிக்கு என்னோடு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டேன். இருவர் போதாது என்பதால் இன்னும் சிலரை மனதிற்குள் குறித்து அணுக அவர்களின் சூழல் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்த நேரத்தில் பொதிகை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ”தென்காசி தமிழ்ப்பைங்கிளி” அருள்மொழி மீரா அவர்கள் ஈரோடு சங்கமத்திற்கு வருவதாகத் தெரிவித்தையொட்டி இதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாமே என்று அணுகினேன். ஈரோட்டில் இருக்கும் தமது மாமியார் வீட்டுக்கு சனிக்கிழமை வருவதாகச் சொன்னார். சென்னையிலிருந்து வந்தவர் நேராக என்னைச் சந்தித்து, எப்படி நிகழ்ச்சியை வழங்கலாம் என ஆலோசித்துவிட்டு அன்று மாலையே நிகழ்ச்சியை ஒருமுறை ஒத்திகை பார்ப்பது என முடிவெடுக்கப்பட்டது.

பாராட்டுப் பெறுவோரிடம் சேகரித்து வைத்திருந்த நிழற்படங்களைக் காட்சிப்படுத்தும் பணியை அகல்விளக்கு ராஜா எடுத்துக்கொண்டார். ஒருநாள் முழுக்க உணவையும் மறந்து அதற்காக உழைத்த ராஜாவின் பணி அளப்பரியது.

பாராட்டுப்பெறுபவர்களை அரங்கின் கடைசி வரிசையில் அமர்த்தி, அவர்கள் குறித்த விபரங்களை வாசிக்கும்போது, திரையில் அவர்கள் குறித்த காட்சிகள் ஓடும், அதன்பின் அவர்களை மேடைக்கு அழைத்து பாராட்டி ஒரு கேடயமும், நினைவுப் பரிசும் வழங்குவதாக ஏற்பாடு. மேடையில் சிறப்பு விருந்தினரின் கையில் அவைகளைக்கொண்டு வந்து சேர்ப்பிக்க குழந்தைகளைப் பயன்படுத்துவது என்று முடிவெடுத்தோம். கடைசி இருக்கையில் இருந்து மேடைக்கு பாராட்டுப் பெறுவோர் நடந்துவரும் வரையில் இருக்கும் இடைவெளியை நிரப்பிட இசைக்குழுவை ஏற்பாடு செய்யலாமா, இசைக்கோப்புகளை வைத்து சமாளிக்கலாம என யோசிப்பின் கடைசி நுனியில் சந்துரு அண்ணன் தெரிவித்த மேளதாளம் ஒருமனதாக மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காலையிலிருந்து சந்துரு அண்ணனும் விஸ்வம் அண்ணனும் சமையல் பணிகளை மேற்பார்வை பார்த்துக்கொள்ள, பதாகைகள் பரிசுப் பொருட்கள் என ஜாபரும் ஆரூரனும் ஓட, அடையாள அட்டைகள், கேடயங்கள் என லவ்டேல்மேடி ஒரு பக்கம் ஓட என எல்லோரும் திசைகள் தோறும் ஓடிக்கொண்டிருந்தோம்

ஒருவாராக கிட்டதட்ட தயாரான மனோநிலையோடு சனிக்கிழமை மாலை அரங்கிற்குச் சென்று மேடையில் பதாகை பொருத்தி, நாற்காலிகள் போட்டு, ஒலிவாங்கி, காட்சிக் கருவி என எல்லாம் எங்கள் வசதிக்குப் பொருத்தி, மேளதாளக்காரர்களையும் அழைத்து ஒத்திக்கைக்குத் தயாரானோம். அருள்மொழி மீரா, நந்தகுமார் ஆகியோருடன் மீண்டும் மீண்டும் வாசிப்பு என ஒருவழியாய் ஒத்திகையை நிறைவுசெய்து பின்னிரவில் அங்கேயே உணவு உண்டு கலைந்தோம்.

அப்போதே சென்னை, மதுரைப் பதிவர்கள் என சங்கமம் களைகட்டத்துவங்கியது. அவர்களுக்கான கவனிப்பு அறைகள் என ஜாபரும், சங்கவியும் சுழன்றடித்து வேலை செய்ததைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

இரவு பத்துமணிக்கு மேல், திடீரென நந்தகுமாரை  தவிர்க்க இயலாது அடுத்தநாளைய ஒரு பணி அழைக்க, அவர் என்னை அழைத்தார். அப்படி அழைத்தவர் எந்தவிதப்பதட்டத்தையும் என் மேல் திணிக்காமல் மிக நேர்த்தியாக தன் சூழலைச் சொல்லி, தனக்குப் பதிலாக எங்கள் நண்பர் மகேஷ்வரன் அவர்களை தன் இடத்தில் நிரப்பலாமா எனக் கேட்டு, அவரை அழைத்து, தன்னிடம் இருந்த கோப்புகளைக் கொடுத்து, அவரை தயார்படுத்திக்கொள்ளப் பணித்தார். இக்கட்டான சூழலை மிக நேர்த்தியாக் கடக்கச் செய்த நந்தகுமாரை நான் பாராட்டியே தீரவேண்டும்.

இரவு கலைந்த பிறகும் இருவருக்கான விபரங்கள் தயாரிப்பு பணி நிறைவடையாமல் கிடந்தது. எல்லாம் முட்த்து உறங்க செல்லும்போது இரவு இரண்டு மணி. காலை ஐந்து மணிக்கு எழுந்து, அலுவலகம் ஓடி ஒட்டுப் மொத்த தயாரிப்புகளை தொகுத்து அச்சிலெடுத்துக்கொண்டு, தொடர்வண்டியில் வந்த சில நண்பர்களை அழைத்துக்கொண்டு, ஒரு வழியாக கிளம்பி அரங்குக்குச் செல்லும்போது காலை உணவு தயாராக இருந்தது. இரவே வந்திருந்த நண்பர்கள பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.



ஒன்பது மணிக்கு அரங்கில் மக்கள் மெல்லமாய்க் கூடத்தொடங்கினர். 9.30ஐக் கடக்கும் போது முக்கால்வாசி அரங்கு நிறைந்திருந்தது. பாராட்டு பெறுவதற்காக அழைத்திருந்த நண்பர்கள் அரங்கை அடைய, பத்துமணிக்கு அரங்கு நிரம்பி வழியத்துவங்கியது. போக்குவரத்து காரணங்கள் ஓரிருவரின் தாமதைத்தையடுத்து 10.20 மணிக்கு நிகழ்ச்சியைத் துவங்கினோம்

ஆரூரன் அவர்களின் பிள்ளைகள் அருட்சுடர், அமர்நீதி தமிழ்வணக்கம் பாட, சந்துரு அண்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினருக்கான அறிமுகத்தை ஆரூரன் அவர்கள் அற்புதமாக வழங்கினார். அதையடுத்து வெறும் 3 வரியில் துவங்கிய சங்கமம், இன்று எட்டியிருக்கும் இடம் குறித்த விளக்கத்தோடு, இந்த ஆண்டு சங்கமத்தின் நோக்கம் என்ன, எதற்காக இந்த அங்கீகாரம், பாரட்டுகள் எனும் உரையோடு நான், அருள்மொழிமீரா, மகேஸ்வரன் என பாராட்டுப் பெறுவோரின் விபரங்களை தொகுத்து வழங்க ஆரம்பித்தோம். அருள்மொழி மீரா மற்றும் மகேஷ்வரன் அவர்கள் வழங்கியவிதம் மிக அருமை. பாராட்டுகளும் நன்றிகளும்.

உண்மைத் தமிழன், ஜாக்கி சேகர், ஜீவ்ஸ், அதிஷா, தேனம்மை, வெயிலான், சீனா, கேஆர்பி செந்தில், சுரேஷ்பாபு, யுவகிருஷ்ணா, ரவிக்குமார், பாலபாரதி, இளங்கோவன், மகேந்திரன், ஓவியர் ஜீவா என ஒவ்வொருவரராய் மேடைக்கு வந்து நினைவுப்பரிசு மற்றும் பாராட்டுக் கேடயத்தினைப் பெற்று மேடையில் அமர்ந்தனர்.



மிக எழுச்சியான நிகழ்ச்சிக்குப் பிறகு, திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அந்த மேடைக்கு மிகப்பொருத்தமானதொரு உரையை வெகுஅற்புதமாக வழங்கினார். எத்தனையோ மேடைகளில் நான் அவரின் சிறப்பான உரையை கேட்டிருந்தாலும், நேற்றைய மேடை அவருக்கு ஒரு புதிய களம், அதில் மிக வெற்றிகரமான உரையை அவர் வழங்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்கான நினைவுப் பரிசினை விஸ்வம் அண்ணன் வழங்கினார்.

இயக்குனர் செல்வக்குமார் அவர்களின் மனசு குறும்படத்தை ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் வெளியிட்டார்.

அடுத்து, பாராட்டுப் பெற்றவர்களை ஓரிரு வார்த்தைகளில், ஏற்புரை வழங்குமாறு ஒலிவாங்கியைக் கொடுத்தோம். ஒவ்வொருவரும் உணர்வுப் பூர்வமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதீத மகிழ்ச்சியும் கண்கலங்க வைக்கும் என்பதை மேடையில் கண்டேன். சிலருக்கு நா தழுதழுத்தது. அவர்கள் அடிமனதிலிருந்து அவர்களை அறியாமல் வந்த வார்த்தைகளைக் கண்டபோது, சங்கமத்திற்காக நாங்கள் உழைத்த உழைப்பு சரியானாதுதான் பொருத்தமானதுதான் எனத் தோன்றியது. பாராட்டுப் பெற்றவர்களில் ஒரு சிலர் நெகிழ்ந்து கலங்குவது இயல்புதான். ஆனால், மேடையில் ஒரு மூத்த பதிவர் ஏற்புரை வழங்கும்போது, அரங்கில் இருந்த ஓரிருவர் கண் கலங்கியதைப் பார்த்தபோது, உண்மையில் அதிர்ந்து போனேன். எதையோ செய்ய முயன்று எப்படியோ சரியாகத்தான் செய்திருக்கின்றோம் எனப் பெருமகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக இளங்கோவன், பாலபாரதி ஆகியோரின் ஏற்புரைகள், நிகழ்ச்சி குறித்த முக்கியத்துவத்தின் அடர்த்தியைக் காட்டியது.

நிறைவுக்கு சற்றுமுன் எங்கள் குழுமத்தின் தூண்களை ஒருமுறை மேடையேற்றி அழகு பார்த்துக்கொண்டோம். நம் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது போன்று இதுவும் ஒரு சுய தட்டிக்கொடுத்தலுக்குத் தேவையாகத்தான் இருக்கின்றது. செயலர் பாலாசி நன்றியுரை வழங்க நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தபோது மதியம் 12.30 மணி. அடுத்த ஒரு மணி நேரத்தை பதிவர்கள் யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக மேடையைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கபட்டது. என்னுடைய கணக்குப்படி 220க்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர். ஃபேஸ்புக் சார்ந்த நிறையப் பெண்கள் கலந்துகொண்டனர். ஒரு மணியிலிருந்து மதிய விருந்து துவங்கியது.

நினைவுப் பரிசுக்குப் பதிலாக புத்தகம் அளித்திருக்கலாம் என்ற கருத்து நிலவியது. 15 பேர்களுக்கு ஒரே மாதிரி புத்தகத்தை தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்காது என்பதாலும், எங்கள் பகுதியின் பெருமை பேசும் துணி வகையை அளிக்கவேண்டும் என்றும் சென்னிமலையிலிருந்து சிறப்பாக வரவழைக்கப்பட்ட நினைவுப் பரிசை அளித்தோம்.

பாராட்டுப்பெற்ற ஒரு பதிவர் தன்னைவிட சில மூத்த பதிவர்களைப் பாராட்டியிருக்கலாம் எனக்கூறினார். இது பதிவர்களுக்கான வெறும் பாராட்டுவிழா மட்டுமல்ல. வலைதளத்தில் இல்லாமல் ஃபேஸ்புக்கில் மட்டுமே இயங்குபவரையும் நேற்று மேடையேற்றியிருக்கின்றோம். சமூகவலை தளங்களில் இயங்குவதோடு வேறுவேறு தளங்களிலும் சிறப்பாகப் பணியாற்றும் பலரைப் பட்டியலிட்டு அதிலிருந்து வடித்தெடுத்து, ஒரு முயற்சியாக இதை நிறைவேற்றியிருக்கின்றோம். இதற்காக ஒரு குழு பெரும் உழைப்பை செயல்படுத்தியிருக்கின்றது. நாங்கள் இந்த நிகழ்ச்சிக்காக் இறுதிசெய்த பட்டியல் மட்டுமே இறுதியானது அல்ல. தமிழ்தேசமெங்கும் இது போன்ற அங்கீகார நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதற்கான ஒரு உதாரணம் மட்டுமே! இதுபோன்று அங்கீகரிக்கத் தகுதியான இணைய நண்பர்கள் நிறைய உள்ளனர் என்பதையும் அறிவேன். மிகக்குறுகிய காலத்திட்டம் என்பதாலும் சிலரைத் தவறவிட்டிருக்கிறோம் என்பதாகவும் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். அதே சமயம் எங்கள் குழு தேர்ந்தெடுத்த இந்த 15 பேர் பட்டியல் மிக மிகப்பொருத்தமான பட்டியல் என்பதில் பெருமகிழ்வுகொள்கின்றேன். மேடையில் சிறப்பிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை இங்கே காணலாம்

அன்போடு கை பற்றி குலுக்கி அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டவர்கள் சிலரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. நன்றியுரையோடு விழா நிறைவுபெரும் வரை, உண்மையிலே என் சிந்தனைகள் எதும் என் கட்டுப்பாட்டில் இல்லை. அதுவரையில் நான் சந்தித்த நண்பர்களிடம் சரியாகப் பேசவோ, பழகிடவோ எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அப்படியேதேனும், யாரையாவது நான் சங்கடப்படுத்தியிருந்தால் தயைகூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன்.

நிகழ்ச்சியை நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மிக நேர்த்தியாகவே நாங்கள் நடத்தியதாக நம்புகிறோம். ஒரு நடத்துனராக எங்களிடம் சிறுசிறு பிசிறுகள் இருந்திருக்கலாம். அதே சமயம் இதுபோன்ற ஒரு ஒத்துழைப்பு மிகுந்த பங்கேற்பாளர்களை நான் பார்த்ததில்லை என்றுதான் சொல்லவேண்டும். 9 மணிக்கு அரங்கில் அமரத் துவங்கியதிலிருந்து மிகச் சிறப்பாக நிகழ்ச்சியைக் கண்டு களித்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். நிகழ்ச்சியை பதிவர்களிடம் எடுத்துச்செல்ல உதவிய சங்கமம், யுடான்ஸ் திரட்டிகளுக்கு நன்றிகள்.

நிகழ்ச்சியின் நேர்த்திக்கு பல வகைகளில் பெரும் உழைப்பை விதைத்த சந்துரு அண்ணன், ஆரூரன், பாலாசி, ஜாபர் (இங்கிவரை யான்பெறவே என்ன தவம் செய்தேனோ?), கார்த்திக், அகல்விளக்கு ராஜா, சங்கவி, மேடி, விஸ்வம்அண்ணன், வேலு, அருள்மொழிமீரா, மகேஷ்வரன், நந்தகுமார், வால்பையன், பவளசங்கரி, ரோகிணி, நந்து மற்றும் எங்கள் குழந்தைகள் என எல்லோருக்கும் பணிவான பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பங்கெடுத்த குழும உறுப்பினர்கள் இளா, அமரபாரதி, ராஜி, சரவணமூர்த்தி என அனைவருக்கும் நன்றிகள். சிறப்பு விருந்தினருக்கு பெரு நன்றி. பாராட்டுப் பெற்றவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

இந்த சங்கமத்தை நடத்தியே தீரவேண்டும் என எங்களை பலவாறு ஊக்குவித்து வெற்றிகரமாக நடத்தச்செய்த சந்துரு அண்ணன் அவர்களுக்கு இந்த சங்கமத்தின் வெற்றியை சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.

நிறைவுக்குப் பின் நெகிழ்ச்சியோடு கைகளை இதமாய்பற்றி தங்கள் மகிழ்ச்சியை எங்களுக்குள் ஊடுருவசெய்த உள்ளங்களின் அன்பை அப்படியே சிந்தாமல் சிதறாமல் எங்களுக்குள் பதுக்கிக்கொள்கிறோம், நாங்கள் சந்திக்கும் நபர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். கைகளை விரித்துப்  பெருமகிழ்வோடு நெஞ்சோடு நெஞ்சணைத்து மென்மையான அணைப்பில்  அன்பைப் பகிரும்போது தாயின் கருவறை சுகத்தை உணரமுடிந்தது.

மேலதிகப் படங்களுக்கு:



நன்றி

-0-

Mar 21, 2011

வாசிப்பைத் தவிர வேறெதில் புதுப்பித்துக்கொள்ளமுடியும்?

சமீப காலங்களில் ஏதாவது நிகழ்ச்சி அல்லது விழாக்களில், பரிசு அல்லது நினைவுப்பரிசு என்ற பெயரில் வண்ண நெகிழித்தாளால் சுற்றப்பட்டு அளிக்கப்படுபவைகளில் புத்தக வடிவத்தையொத்த பரிசுகள் மேல் கொஞ்சம் கூடுதல் ஈர்ப்பு ஏற்படுவதுண்டு. அதே சமயம் அதுகுறித்து அச்சமும் அலுப்பும் சிலசமயம் தோன்றுவதுமுண்டு, காரணம் ஏற்கனவே நம்மிடம் இருக்கு புத்தகமாகவோ அல்லது ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆவது எப்படியென்ற சுயமுன்னேற்ற புத்தகமாகவோ அமைந்துவிடுவதால். அந்த நேரங்களில் இந்தப் புத்தகம் கொடுத்ததற்குப் பதிலாக ஒரு பொட்டலம் வெள்ளைக்காகிதம் கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்குமேயென்று நினைத்துக்கொள்வதுண்டு.

வருடந்தோறும் தமிழ்மணம் திரட்டி நடத்தும் போட்டியில், 2010 ஆண்டிற்கான போட்டியில் மட்டுமே கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இருவேறு பிரிவுகளில் ஒரு முதல் பரிசும், ஒரு இரண்டாம் பரிசு கிடைத்தது. பரிசுக்கான தொகைக்கு புத்தகமாக மட்டுமே வாங்க முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. நியூ புக்லேண்ட்ஸ், நூல் உலகம் ஆகிய புத்தக நிலையங்களிலிருந்து தமிழ்மணம் சார்பாக பரிசாக நான் பெற்ற புத்தகங்களின் பட்டியல்:



நியூ புக்லேண்டில் இருந்து………….

1 .நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி - ராமச்சந்திர நாயர்
2. உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்
3. கள்ளி - வாமுகோமு
4. அரசூர் வம்சம் - இரா.முருகன்
5. சித்தன் போக்குபிரபஞ்சன்
6. என் வீட்டின் வரைபடம் - ஜே.பி.சாணக்யா
7. பேசாத பேச்செல்லாம் - .தமிழ்ச்செல்வன்
8. பீக்கதைகள் - பெருமாள் முருகன்
9. ஏழாம் உலகம்ஜெயமோகன்
10. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
11. ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி
12. லா.ச.ராமாமிர்தம் கதைகள்
13. மெல்ல சுழலுது உலகம் – செல்வராசு
14. யுத்தங்களுக்கிடையில் அசோகமித்ரன்



நூல்உலகம்.காம்-ல் இருந்து….

15. சுஜாதாட்ஸ் – சுஜாதா
16. கூண்டும் வெளியும் - சுப்ரபாரதிமணியன்
17. கொள்ளைக்காரர்கள் - பொன்னீலன்
18. மூடிய முகங்களில் - அழகியபெரியவன்
19. தேடல் - பொன்னீலன்
20. சொல்லாத சொல் - மாலன்
21. ரெண்டு – பா.ராகவன்
22. களை எடு - நம்மாழ்வார்
23. இருளர்கள் ஓர் அறிமுகம் – க.குணசேகரன்
24. கடல்புரத்தில் - வண்ணநிலவன்
25. நரிப்பல் - இறையன்பு
26. விசும்புஜெயமோகன்



வேண்டிவிரும்பிக்கேட்ட புத்தகங்கள் வந்தடைந்துவிட்டன. புத்தகத்தின் புது’மை’ வாசம், எடுத்துக்கொள் என இருகரம் விரித்து அழைக்கிறது.

அதேசமயம், வாசிக்காமல் அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் பட்டியலில் இந்தப் புத்தகங்களும் இணைந்து, வாசிக்க நேரம் ஒதுக்கமுடியா சோம்பேறித்தனம் குறித்த குற்ற உணர்வின் அடர்த்தியை கூடுதலாக்கிக் கொண்டிருக்கிறது.

மனது குதூகலிக்கும் வகையில் பரிசளித்த தமிழ்மணம் திரட்டி, நியூபுக்லேண்ட், நூல்உலகம்.காம் மற்றும் வாக்களித்த பதிவுலக நண்பர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

இயந்திரத்தனமான போக்கிலிருந்து கொஞ்சம் கூடுதல் நேரத்தை வாசிப்பிற்காக பதியனிடவேண்டும். வாசிப்பைத் தவிர வேறெதில் புதுப்பித்துக்கொள்ளமுடியும்.

-0-

Dec 26, 2010

என்னிடம் மிச்சமிருப்பது அன்பு தோய்த்த ஒற்றை நன்றி மட்டுமே

வலையுலக வாழ்வில் மிக நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று இனிதே நிறைவேறியது. சென்ற ஆண்டு கொஞ்சம் ஆசையோடு நடத்திய பதிவர் சங்கமம் கொடுத்த உற்சாகம் எங்கள் குழும உறுப்பினர்கள் மனதிற்குள் ஏற்படுத்திய உணர்வு இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என்ற உத்வேகத்தைக் கிளப்பியது. 

சங்கமம் 2010 நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்த முடிவு செய்த போது, சென்ற ஆண்டிலிருந்து வித்தியாசப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. வித்தியாசமான உணவு, பெரிய அரங்கு, வந்து போக வாகனம், பதிவர்கள் அல்லாத சிறப்பு விருந்தினர்கள், காலை ஆரம்பித்து மாலை முடிப்பது என திட்டம் தீட்டியதில் ஒன்று புரிந்தது. சென்ற ஆண்டு செய்த செலவை விட நிச்சயம் மூன்று மடங்கு ஆகும் என்று. அதே நேரம் குழும உறுப்பினர்கள் சிலர் பெருந்தொகையளித்து உற்சாகப்படுத்தியதில், சிறப்பான விருந்து அதுவும் சமையல்காரர் வைத்து விருந்து தயாரிப்பது என முடிவானது. மறுபக்கம் நிகழ்ச்சி வடிவமைப்பு மற்றும் அதற்கான ஏற்புடைய ஆட்களை தேர்ந்தெடுத்து அழைப்பது என குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் பொறுப்பைத் திரும்ப திரும்ப நினைவூட்ட வேகமாக வேலைகள் நடக்க, ஒருவழியாய் 26.12.2010 இனிதாய் விடிந்தது. முதல் நாளே மதுரைப் பதிவர்கள் கும்க்கி, கா.பா, ஸ்ரீ, சிங்கைப் பதிவர் பிரபாகர் வருகை தர, சனிக்கிழமை இரவு உணவுடன் அரங்கில் நிகழ்ச்சிகள் தொடங்க ஆரம்பித்தது.


காலை 11 மணிக்கு மிகச் சரியாக ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டும் தவிர்க்க இயலாத காரணங்களால் சிறப்பு விருந்தினர்கள் சற்றே தாமதமாக வர சரியாக 40 நிமிடங்கள் கழித்து 11.40க்கு நிகழ்ச்சி தொடங்கியது.

பதிவர் ஆரூரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க, பதிவர் சிங்கை பிரபாகர் தமிழ் வணக்கம் வாசித்தார். அண்ணன் தாமோதர் சந்துரு வரவேற்புரை நிகழ்த்த, இரா.வசந்த்குமார் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். “சிறுகதைகளை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் பெருமாள் முருகன் பல எடுத்துக் காட்டுகளுடன் மிகச் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
சங்கவி எழுத்தாளர் பாமரன் அவர்களை அறிமுகப்படுத்த, “உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள்” என்ற தலைப்பில் தான் இணையத்திற்கு வந்ததுமுதல் சுவாரசியமான பல விசயங்களைப் பகிர்ந்து இணையத்தை எவ்வளவு தூரம் பயனுள்ளதாக உபயோகிக்க முடியும் என்பதை நகைச்சுவையோடு பகிர்ந்தார்.

அடுத்து கார்த்திகைப் பாண்டியன் தமிழ்ஸ்டுடியோ.காம் அருண் அவர்களை அறிமுகப்படுத்த, “குறும்படம் எடுக்கலாம் வாங்க” என்ற தலைப்பில், குறும்படம் எடுக்க விருப்பமுள்ளவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், அதற்கான பயிற்சி என தங்கள் அமைப்பு மூலம் இலவசமாக தருவது குறித்துப் பேசினார்.

பதிவர் ஸ்ரீதர் வழக்குரைஞர் சிதம்பரன்.கி அவர்களை அறிமுகப்படுத்த, “உலகத்திரைப்படங்கள்” குறித்த பார்வையை சிதம்பரன்.கி.அவர்கள் எளிமையாக எடுத்து வைத்தார்.


மதிய உணவு இடைவேளைக்குக் கலையும் முன்பாக, பதிவர்களுக்கிடையேயான அறிமுகத்தை நடத்தி உணவுக்கு அனுப்பப்பட்டனர்.

மிக நேர்த்தியான சைவ, அசைவ உணவு பரிமாறப்பட்டது. கொங்கு மண்டலத்திற்கே உரிய வகையிலான அசைவ வகைகளாக கோழிக்கறி, ஆட்டுக்கறி, தலை-குடல்க் கறி, தண்ணிக்குழம்பு என வித்தியாசமாக அளிக்கப்பட்டதை அனைவரும் விரும்பி உண்டனர். இதுபோல் உணவிடலாம் என ஆலோசனை கூறிய பதிவர் நந்து, அதற்கான அத்தனை பணிகளையும் முன்னின்று செய்த அண்ணன் தாமோதர் சந்துரு, சமையல்காரர் பரமன் ஆகியோரே மிக முக்கியக் காரணம்.

நேர்த்தியான நிறைவான உணவிற்குப் பிறகு, பதிவர்களின் பங்கேற்பு எப்படி இருக்குமோ என நினைத்ததை தவிடு பொடியாக்கியது, பங்கேற்பாளர்களின் ஒத்துழைப்பு.

அகல்விளக்கு ராஜா, கருவாயன் (எ) சுரேஷ்பாபு அவர்களை அறிமுகம் செய்ய, “நேர்த்தியாக நிழற்படங்கள்” என்ற தலைப்பில் பல உதாரண படங்களுடன் எடுத்துச் சொல்லியது நிழற்படம் எடுக்க விரும்பும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதிலும் சுரேஷ்பாபு இதுபோல் வகுப்பெடுக்க ஏறிய முதல் மேடை இது என்பது தான் ஆச்சரியமான விசயம்.

பதிவர் கணபதி ஓசை செல்லா அவர்களை அறிமுகப்படுத்த, வலைப்பதிவர்கள் இணையத்தை திறனுடன் பயன்படுத்துதல் குறித்தும், எழுத்து மட்டும் இல்லாமல் ஒலி, ஒளிப்பதிவு என எந்த ஊடகத்தையும் விட மிகவும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும் என்றதொரு மிகப் பயனுள்ள ஒரு உரையை ஓசை செல்லா நிகழ்த்தினார்.

கார்த்திகை பாண்டியன் கூழாங்கற்கள் லட்சுமணராஜாவை அறிமுகப்படுத்த, “நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல்” என்ற தலைப்பில், நிழற்படங்களை வேறொரு கோணத்தில் எடுத்து, அதன் மூலம் ஒரு நிகழ்வை ஆவணப்படுத்துவது குறித்து இரண்டு வேறு விதமான ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தினார். ஒரு திருமணம் மற்றும் வேதாண்தா நிறுவனம் மூலம் சிதைந்து மாறி வரும் கிராமப் பகுதி என வினோத் அவர்களின் படங்கள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டது மிகுந்த கைத்தட்டல்களைப் பெற்ற ஒரு படைப்பாக அமைந்தது.

ஏழு வித்தியாசமான தலைப்பில், ஒரு பதிவரை தன் எழுதும் இயல்பையொட்டி மிகச் சிறப்பாக பட்டைதீட்ட ஏழு சிறப்பு விருந்தினர்கள் தங்கள் சிந்தனையை, உழைப்பை நம் பதிவர்களுக்கா அளித்ததற்கு என்ன சொல்லி நன்றி பாராட்ட.

ஏழு நிகழ்வையும் மிகத் திருப்தியாக நடத்திய நிறைவோடு அனைவருக்கு நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்து, கலந்துரையாடலுக்காக சேர்தளம் அமைப்பிடம் மேடை ஒப்படைக்கப்பட்டது. பதிவர்கள் வெயிலான், சீனா, பரிசல், கார்த்திகைப் பாண்டியன் ஆகியோர் தலைமையில் கடலையூர் செல்வம் ஒருங்கிணைக்க அனைவரும் பங்கேற்ற கலந்துரையாடலுக்குப் பின் எல்லோரும் பிரியா விடை பெற்றனர்.

இவ்வளவு பெரிய நிகழ்ச்சியின் வெற்றிக்குக் கலந்து கொண்ட ஒவ்வொரு பதிவரின் பங்கேற்புமே காரணம். அடுத்து, எண்ணத்தில் எழுந்த எல்லாவற்றையும் நிஜமாய் நிகழ்த்திட நேரம் காலம் பாராது உழைத்த எம் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும்தான் காரணம். இதைச் செய்யலாம் என நினைத்துத் திரும்பும் அந்த வினாடி என்ன செய்ய வேண்டும்  எனத் தயாராக இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரின் வியர்வைத்துளியும் இந்த வெற்றியில் இருக்கிறது.

அமெரிக்காவிலிருந்தாலும் இது நம் குடும்ப விழா என தொடர்ந்து பேசி உற்சாகப்படுத்தி நிதியளித்த விவசாயி-இளா, அமரபாரதி, ஆப்ரிக்காவில் இருந்து இந்த ஆண்டும் நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்ய தன் நண்பன் கென்னடி மூலம் ஏற்பாடு செய்து, தன்னுடைய பங்களிப்பாக நிதியளித்து தொடந்து உற்சாகப்படுத்தி வரும் சண்முகராஜ், சௌதியிலிர்ந்து கலந்து கொள்ள முடியாவிட்டாலும் குழுமத்திற்காக உதவும் மருத்துவர். ரோகிணி ஆகியோரின் உற்சாகமும், ஒத்துழைப்பும் எங்களை மிக வேகமாக இயங்க வைத்தது என்றால் மிகையில்லை.

கூடிக்கூடித் திட்டம் தீட்டி, ஒவ்வொன்றையும் உற்றுக் கவனித்து, எல்லாப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு விழாவை வெற்றியடையச் செய்த அண்ணன் தாமோதர் சந்துரு, ஆரூரன், கார்த்திக், நந்து, வால்பையன், ஜாபர், பாலாசி, லவ்டேல் மேடி, சங்கவி, அகல்விளக்கு, வேலு, கணபதி, வசந்த், தாராபுரத்தான், விஸ்வநாதன் மற்றும் கலந்து கொள்ளமுடியாத சூழலிலும் தங்கள் ஆலோசனைகள் மூலம் உடனிருந்த இயற்கை ராஜி, நித்திலம் பவள சங்கரி என ஒவ்வொரு பதிவரும் எங்கள் குழுமத்திற்கு கிடைத்த மிக அரிய சொத்தே என்றே சொல்ல வேண்டும்.
நினைவுப் பரிசாக அனைவருக்கும் பதிவர் பழமைபேசியின் ஊர்ப்பழமை புத்தகம் அளிக்கப்பட்டது. அதை தங்கள் சார்பாக அன்பளிப்பாகக் கொடுத்த அருட்சுடர் பதிப்பக உரிமையாளர் பதிவர். ஆரூரன், பழமைபேசி ஆகியோருக்கு நன்றி.

சங்கமம் குறித்து இடுகை, இலச்சினை, சுட்டி என தங்கள் முகப்பில் வெளியிட்ட பதிவர்கள், தமிழ்மணம், தமிழ்வெளி, இண்ட்லி, சங்கமம் திரட்டிகளுக்கும் நன்றிகள்.

வாழ்க்கை முழுதும் இன்பம் துன்பமும் கலந்து வந்து கொண்டேயிருந்தாலும், அத்தனை துன்பங்களையும் போக்கும் விதமாய் அவ்வப்போது நம்மைச் சூழ்ந்து மகிழ்ச்சி சுழலில் மூழ்கடிக்கும் இன்பங்களே அத்தனை சோர்வுகளிலும் இருந்து நம்மை அடுத்த கட்டத்தை நோக்கி மிக வேகமாய், உத்வேகத்தோடு நகர்த்திப் போகின்றன. அந்த இனிய நிகழ்வுதான் இன்றைய வெற்றிகரமான சங்கமம் 2010. இந்த வெற்றிக்கு பலவகைகளில் உதவியவர்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை அன்பையும் தோய்த்து தருகிறேன்.
நன்றி என் இனிய நண்பர்களே, உங்களால் மிக இனிய ஒரு பொழுதை இன்று கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட பதிவுலக சொந்தங்கள் அனுபவித்துக் கடந்திருக்கின்றோம்.

-0-



Dec 21, 2009

நன்றி! நன்றி!! நன்றி!!!


என்றோ மனதில் தோன்றிய ஒரு சிறு கனவு
இன்று மிகப் பிரமாண்டமாய் நிகழ்ந்தேறியது...

மிகுந்த நெகிழ்ச்சியோடு, மனதில் பொங்கும் நன்றியோடு, நீண்ட நாள் கனவு கண்ட பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமம் வெற்றிகரமாய்.

சுமார் அறுபது பதிவர்கள், பத்து வாசகர்கள் என எழுபதுக்கும் மேற்பட்ட நண்பர்களோடு மாலை மிகச்சரியாக நான்கு மணிக்கு மிகச்சுவையான, சூடான தேநீரோடு ஆரம்பித்த சங்கமம் துல்லியமாக ஏழு மணிக்கு மிகுந்த மகிழ்ச்சியோடு நிறைவடைந்தது.

இனிய நண்பர் ஆரூரன் தலைமை தாங்க, புலவர் முனைவர். இராசு மற்றும் தமிழ்மணம் காசி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள...

பதிவர்கள் வசந்த்குமார், வலைச்சரம் சீனா, சுமஜ்லா, பழமைபேசி, பட்டர்பிளை சூர்யா, செந்தில்வேலன், ரம்யா, அகநாழிகை வாசு ஆகியோர் தனிப்பட்ட தலைப்புகளில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள...

பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி, அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி, கார்த்திகை பாண்டியன் ஆகியோரால் “ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்” துவக்கி வைக்கப்பட...

பதிவர்கள் லதானந்த், பழமைபேசி, கேபிள் சங்கர், அப்துல்லா, வெயிலான், ஸ்ரீதர் ஆகியோரால் மிகச் சிறப்பாக கலந்துரையாடல் ஒருங்கிணைக்கப்பட...

மிகச்சரியாக கூட்டம் ஏழு மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

சங்மத்திற்கான அனைத்து செலவுகளையும் ஈரோடு சார் பதிவுலக நண்பர்கள் ஆரூரன், சண்முகராஜன் , ஈரோடு கதிர், கார்த்திக், நந்து, லவ்டேல்மேடி, தங்கமணி, அப்பன், தாமோதர் சந்துரு, க.பாலாசி, பட்டிக்காட்டான், அகல்விளக்கு, பீம்பாய், இரா.வசந்த்குமார், கோடீஸ்வரன், வால்பையன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

தொடர்ந்து மூன்று மணி நேரம், அனைவரையும் அரங்கினுள் அமர்த்தி, மிக நேர்த்தியாக நடத்திய ஆரூரன் அவர்களே சங்மத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

குறிப்பாக பதிவர்கள் பாலாசி, அகல்விளக்கு, கோடீசுவரன் மற்றும் வாசகர்கள் ஜாபர், பைஜு செய்த பணிகள் மறக்க முடியாதவை.

மூத்த பதிவர்களான கார்த்திக், நந்து மிக ஆதரவாக, இணக்கமாக குறிப்பாக மிகுந்த மனோதைரியத்தை அளித்தார்கள் என்றே சொல்லவேண்டும்.

சங்கமம் குறித்து முகப்பு பக்கத்தில் வெளியிட்ட தமிழ்மணம், சங்மத்தின் முழுக் காணொளியை வெளியிடவிருக்கும் சங்கமம் லைவ் இணையதளம், படப்பதிவு செய்த ஸ்டார் வீடியோஸ் ஆகியோருக்கு நன்றிகள்.


கடந்த பல நாட்களாக அமெரிக்காவில் இருந்து என்னைத் தொடர்ந்து தொடர்புகொண்டு வழிநடத்திய கொங்கு வாசல் நா. கணேசன் அவர்களுக்கு நன்றி.

இருக்கும் திசைதோறும் தென்றலாய் வீசிய பதிர்வர்களின் வருகை இந்த சங்மத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கொடை...

அந்த மகிழ்ச்சியை வெறும் நன்றி என்ற மூன்று எழுத்தால் என்னால் நிரப்பமுடியவில்லை....

ஒவ்வொருவர் கைபற்றிய போதும், புன்னகைத்த போதும், தோள் அணைத்த போதும் என் உடன் பிறந்த சொந்தமாகவே நினைத்து மனம் நெகிழ்கிறேன்...


இந்த சங்கமம் வெற்றிகரமாக நடந்ததாக யார் கருதினாலும் அதற்கு இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு நபருக்கும் பங்கு உண்டு.

சங்கமத்தில் ஏதாவது குறையோ, நெருடலோ இருப்பின் அதற்கு என் திட்டமிடலில் இருந்திருக்கும் குறைபாடே காரணம் என்று கூறி வரும்காலத்தில் அது நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி கூறுகிறேன்.


சில நயம்மிகு நிழற்படங்களைக் காண இந்தச் சுட்டியை அழுத்துங்கள்

சங்கமம் குறித்த மேலதிக தகவல்களுக்கு....
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
__________________________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...