Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts

Oct 19, 2025

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர்

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர்

ஒரே நாளில் பல்வேறு விதமான அனுபவங்கள் அமைவது இயல்பான ஒன்றுதான். சில வாரங்களுக்கு முன் ஒரு நாளில், எனக்கு அடுத்தடுத்துப் பல அனுபவங்கள் அமைந்தன. ஆனால், அதிலிருந்த சுவாரஸ்யம் அனைத்தும் ஒரே மையப்புள்ளியைக் கொண்ட அனுபவங்கள் என்பதுதான்.

அந்தத் தினத்திலிருந்து, இரண்டு வாரம் கழித்து, “90% கோபம் கம்மி பண்ணிவிட்டேன்என்று அந்தத் தம்பி அனுப்பிய வாட்சப் தகவல் இப்போதும் மனதிற்குள் அலை பாய்ந்து கொண்டிருக்கின்றது.

90% கோபத்தைக் குறைப்பது அத்தனை எளிதா என்ன? அது அத்தனை எளிதில் வசப்படாத ஒன்றுதான். கோபம் கணிசமாகக் குறைந்திருக்கலாம். கோபம் வரும் தருணங்களில் எங்களின் உரையாடல் நினைவில் வந்து போயிருக்கலாம். 

அந்த உரையாடல் அன்று வாய்த்ததற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு.

சரி... அன்று நடந்தது என்ன...!?

 

01

அதுவொரு செவ்வாய்க்கிழமை. காலை ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தேன். அன்று அந்த நிகழ்ச்சியில் பேசுவது தவிர்த்து, வேறு எந்தத் திட்டமிடலும் முந்தைய இரவு வரை இருக்கவில்லை.

முந்தைய இரவு, ஒருவர் தொடர்பு கொண்டு, 'நாளைக் காலை நிகழ்ச்சி நிறைவடைந்ததும் சிறிது நேரம் உரையாட முடியுமா?' எனக் கேட்டார். நாங்கள் அவ்வப்போது ஃபோனில் உரையாடிக் கொள்கிறவர்கள்தான். நேரில் என்றதும் குடும்ப விசயம் குறித்து இருக்கலாம் எனக் கருதினேன். குடும்ப விசயம் குறித்து நேரில் ஒருமுறையும், ஃபோனில் சில முறையும் உரையாடியிருக்கின்றேன். சந்திக்கலாம் என ஒப்புதல் தெரிவித்தேன்.

அன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வந்துவிட்டார். நிறைவடையும் வரை காத்திருந்தார். நிகழ்விலிருந்து விடைபெற்ற பிறகு, இடம் தேர்ந்து அவருடன் உரையாடல் தொடங்கினேன். கருதியதுபோல் குடும்ப விசயம்தான். எளிய குடும்ப சிக்கல். ஆனால் முடிச்சு இறுகிக் கொண்டேயிருக்கின்றது. அவர் தனியே நின்று அனைத்தையும் அமைதிப்படுத்தி, சரி செய்துவிட முயற்சி செய்கிறார். ஆனால் அவர் மட்டுமே தனித்து எதுவும் செய்ய முடியாது. அதனால் எப்படி சரி செய்வது என்பதில் பெரும் குழப்பம். காரணம், சரி செய்ய வேண்டியதில் இவருடைய பங்கு குறைவானது. சிக்கலை இறுக்கிக்கொண்டே செல்லும் மற்றவர்கள்தான் அதனை சரி செய்ய வேண்டும்.

முன்பே அது பற்றி நாங்கள் பேசியிருக்கின்றோம். அவர் தீர்வு காண விரும்பினாலும், அவரிடம் மட்டுமே பேசுவதால், எதுவும் நகராது. தொடர்புடையவர்களில் ஒருவரிடம் பேசுவதுதான் முக்கியத் தேவை. ஆனால் அவர்கள் உடன்பட மாட்டார்கள். அனைவருக்குமே தாம் செய்வதுதான் சரியென்றிருக்கலாம் அல்லது தாம் ஒரு சிக்கலில் உள்ளோம், அதற்கான தீர்வை தாம்தான் தேட வேண்டும் எனும் தெளிவில்லாமல் இருக்கலாம்.

நீண்ட நேரம் அந்த உரையாடலை எடுத்துச் செல்லத் தேவை இருக்கவில்லை. உங்க வருத்தம், வலி புரியுது. ஆனா, நீங்க  மட்டுமே  சொல்யூசன் உருவாக்க முடியாது. அவங்களும் உடன்படனும். அவங்கள்ல யாராவது ஒருத்தரைக் கூட்டிட்டு வாங்க. அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்டாங்க. அவங்களாகவே ஆதரவோ அல்லது  ஆலோசனையோ தேடும் ஒரு புள்ளி இருக்கும், அதை அவங்க அடையும்போது, ஜஸ்ட் நீங்க தோளைத் தொட்டால் போதும், சரினு சொல்லிடுவாங்க. வரட்டும் பேசிப் பார்ப்போம். எது தேவையோ, யாரிடம் சரி வருமோ, அதற்கு ஏற்பாடு செய்வோம்!என்று உறுதியளித்தேன்.

அவர் எவ்வளவு தூரம் மனதளவில் திருப்தி அடைந்தார் எனத் தெரியவில்லை. ஆனால் சில தீர்வுகளுக்கு அதிக தொலைவு பயணிக்க வேண்டும், சில தீர்வுகளுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டும். சில தீர்வுகளுக்கு அதீத சகிப்புத்தன்மை வேண்டும்.


02

நண்பரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தருணத்தில் அவர் எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்குத் தகுந்த ஆலோசனை தேவை எனக் குறிப்பிட்டிருந்தேன். அதை அவர் நினைவில் கொண்டிருந்தாலும், அவருடைய அன்றாட வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்.

அவரின் தொடர் ஓட்டத்தில் ஒரு சவால் வந்தது. ஒரு சாதாரண சம்பவம், சரியாகக் கையாளத் தவறியதால், மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டேயிருந்தது. தவறியது எந்தவிதத்திலும் குறைபாடு அல்ல. அப்போது அதுதான் சாத்தியப்பட்டிருக்கும். அது சிக்கலாக மாறி, நாட்களைக் கடந்து, வாரங்களைக் கடந்து, பல மாதங்களாக நீடித்தது. ஒவ்வொரு சந்திப்பிலும் உரையாடலிலும் அதனைச் சரி செய்ய வலியுறுத்தினேன். முடிந்தவரை தொடர்ந்து என் கவனத்தையும், அக்கறையையும் செலுத்திக் கொண்டேயிருந்தேன். ஆனால் எனக்கும் எல்லைகள் இருந்தன. எல்லைக்கு மறுபக்கமிருந்து கொடுக்கப்பட்டவை பல நேரங்களில் அவ்வளவாகப் பலன் தராது.

பெரும்பாலும் பொருளாதார இழப்புகளை, நெருக்கடிகளை நாம் பேசும் அளவிற்கு, மனதளவிலான நெருக்கடிகளை, இழப்புகளைப் பேசுவதில்லை. நாட்கள் நகர நகர அவருக்கு மன நெருக்கடி கூடிக்கொண்டேயிருந்தது. அந்த நெருக்கடிகள் அவருக்கு வந்திருக்கக் கூடாதவைதான். ஆனாலும், வரத்தான் செய்யும். அதற்கு சில காரணங்கள் இயல்பாக அமைந்துவிடும். அவர் எடுத்த சில முடிவுகள் எனக்கு ஒப்புதல் இல்லாததாக இருந்தன. எதையும் பூசி மெழுகாமல் முடிந்தவரை என்னுடைய கருத்துகளை நேரடியாகத் தெரிவித்துக் கொண்டேயிருந்தேன். அதுவே அந்த நட்பிற்கு நான் செய்யும் அறம். ஒவ்வொரு முடிவும் தெரிவிக்கப்படும்போது, ‘அடடா! கொஞ்சம் முன்ன சொல்லியிருந்திருந்தா வேற மாதிரி சொல்லியிருக்கலாமே எனத் தோன்றும். அதையும் தெரிவிக்கத் தவறவில்லை. ஆனாலும் உணர்ச்சிகள் ஆளும் களம் இப்படித்தான் இருக்கும்.

ஒருகட்டத்தில், எல்லாவற்றையும் சமன் செய்யும், சரி செய்யும் ஒரு புள்ளி வந்தது. அப்படியொரு தருணம் வந்துவிட்டால் நன்றாக இருக்குமே என மனதார விரும்பியிருந்தேன். மிக முக்கியமான முடிவினை அவர் எடுக்க வேண்டிய தருணம். என் கவனத்திற்கு வந்தவுடன், தகுந்த ஆலோசனையோடுதான் முடிவெடுக்க வேண்டுமென ஒரு உளவியலாளரைப் பரிந்துரை செய்தேன். தேவைப்பட்டால் நானும் உடன் வருவதாகத் தெரிவித்தேன். அந்தச் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு ஆலோசனை நேரம். 

உளவியலாளரின் ஆலோசனை மிகச் சரியாக அமைந்தது. அவருக்கு பல்வேறு கோணங்களில் நிறைய தெளிவு கிட்டியது. கடந்த காலத்தின் பிழைகளுக்குக் காரணங்கள் புரிந்தன. எடுக்க வேண்டிய முடிவிற்கு நல்லதொரு வழிகாட்டுதலாக அமைந்தது. 

திரும்ப வரும் வழியில் காஃபி குடிப்பதற்காக ஒரு உணவகத்தில் நண்பர் வண்டியை நிறுத்தினார். அந்தச் சாலை வழியே நூற்றுக்கணக்கான முறை சென்று வந்திருந்தாலும், நான் அப்படி குறிப்பாக அந்த உணவகத்தில் நிறுத்தியதில்லை. சிற்றுண்டி, காஃபி என உரையாடல் தொடர்ந்தது. அங்கிருந்து புறப்படும்போது, உணவகத்தின் முன்பிருந்த விளக்குத் தூணை படம் எடுத்து வாட்சப் ஸ்டேட்டஸில் பகிர்ந்திருந்தேன். 


03

அந்தப் படத்தை வைத்து யாரும் அந்த இடத்தை அடையாளம் கண்டுபிடிப்பார்கள் என நான் கருதவில்லை. அதை ஒரு தம்பி கண்டுபிடித்தார். உணவகத்தின் பெயரைச் சுட்டி அதுதானே எனக் கேட்டார். நான்கு மாவட்டங்கள் தள்ளி இருக்கும் அவர், ஒரு ட்ராவலர் என்பதால் பெரிய ஆச்சரியம் எழவில்லை. ஆனாலும் கண்டுபிடித்ததைப் பாராட்டினேன். அதிலிருந்து உரையாடல் தொடங்கியது.

உடனே அந்த உணவகத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்தார். பல மாதங்களுக்கு முன்பு ஒருநாள் பின்னிரவுப் பொழுதில் சாப்பிடச் சென்றிருக்கிறார். ஒரு மேசையில் அமர, பரிமாறுகிறவர் அவரை இடம் மாறி அமரச் சொல்லிவிட்டு குடும்பமாக வந்தவர்களை அந்த மேசையில் அமர வைத்திருக்கிறார். சொன்ன விதமும் சரியானதாக இருக்கவில்லை. அதனால் அந்த உணவகம் குறித்து கூகுள் ரிவியூவில் ஒற்றை நட்சத்திரம் அளித்து, புகாரினைப் பதிவு செய்திருக்கிறார்.

அவர் அதைச் சொன்னபோது என் மனம் கனிந்திருந்தது. தம்பி அந்தப் பணியாளார் செய்தது தவறுதான். சில நெடுஞ்சாலை உணவகங்களில் இப்படியான சேவைக் குறைபாடு இருக்கின்றதுதான். அதை இன்னொரு கோணத்தில் பார்த்திருந்தால் உன்னால் கடந்து வந்திருக்க முடியும். அந்த நபர் அன்று எத்தனையாவது மணி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தாரோ தெரியாது. அவருக்கென்று எதுவும் இலக்கு இருக்கின்றதா என்பது நமக்குத் தெரியாது. எல்லாவற்றையும் சுமந்து கொண்டிருக்காதே. சுமப்பதற்காக நீயாக சில வழிகளை உருவாக்கிக் கொள்ளாதே!என்பது போல் தெரிவித்தேன். அவர் ஒற்றை நட்சத்திரம் அளித்ததைத் தவறு என்று சொல்லவில்லை. 

சில நிமிடங்களில் அந்த ஒற்றை நட்சத்திர கருத்துப் பகிர்வை அழித்துவிட்டதாகத் தெரிவித்தார். உரையாடல் தொடர்ந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவர் அதுவரை எங்கெல்லாம் ஒற்றை ஸ்டார் கருத்து / புகார் பதிந்திருந்தாரோ அத்தனையையும் அழித்துவிட்டேன் என்றார். இப்போது நான் என்னவெல்லாம் சொன்னேன் என்பது முழுமையாக நினைவில் இல்லை. ஆனால், அந்த நேரத்தில் அவர் மனதை நெகிழ்த்தும்விதமாக ஏதோ சொல்லியிருக்கின்றேன். 




இரண்டு வாரங்கள் கழித்து, அவராகவே 90% கோபத்தைக் குறைத்துவிட்டேன் என்றார். உண்மையில் அது அத்தனை எளிதல்ல என்றாலும், பல தருணங்களில் அவர் முயற்சி வெற்றி கண்டிருக்கலாம்.

குறை காணும் இடத்திலெல்லாம் ஒற்றை நட்சத்திரம் இட்டு புகார் அல்லது குறையைப் பதிவு செய்வது தவறொன்றுமில்லை. சேவைக் குறைபாடுகளைக் கண்டாலும், தம் கருத்தினைப் பதிவு செய்யாமல் ஒதுங்க வேண்டியதில்லை. ஆனால், நான் பகிர்ந்த படத்தை அவர் அடையாளம் கண்டதும் அவருக்கு என்னிடம் பகிரத் தோன்றியது, அந்த புகார் தவிர வேறெதுவும் இல்லை என்பதுதான் எனக்கு அப்போது முதன்மையாகப்பட்டது.  

அதே நாளில் மேலும் இரண்டு பேருக்காக  தனித்தனியே ஃபோனில் காலையும், மாலையும் உளவியல் தொடர்பாக மட்டுமே உரையாடியிருந்தேன். இருவருமே இளம் வயது. நன்கு வாழ வேண்டிய வயது. அவர்கள் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் அவர்களுக்கு வந்திருக்கக்கூடாது. மீள்வதற்கு மிகப் பெரும் பிரயத்தனம் தேவை. 

நாள் முழுக்க சந்தித்த, உரையாடிய, உடன் பயணித்த அவர்கள் குறித்து நிறைய மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் வாழ்வில் மனச் சமநிலையுடன் இருப்பது எத்தனை முக்கியம் என்பதை உணர்த்தியிருந்தனர். அந்தத் தருணத்தில்தான் இந்தத் தம்பி ஒற்றை நட்சத்திரத்தோடு என்னிடம் வந்தார்.  அந்த உரையாடலும் தொடங்கியது. 

உடனே, அதிலிருந்து அவரை வெளியேற்றுவது எனக்கு முதன்மையாகப்பட்டது. அப்படி தோன்றியதற்கு அன்றைய தினம் அடுத்தடுத்து நிகழ்ந்த செயல்களும் காரணமாக இருக்கலாம். எனக்குள் மன நலனும், மனிதமும் முதன்மையாக நின்றன. எதன் நிமித்தமாகவும் மனதிற்குள் கடுமைகளைச் சேர்த்து சுமப்பதில் உடன்பாடு இருக்கவில்லை.

இரண்டு வார காலத்தில் அவர் கோபத்தைக் குறைத்தது அவருடைய சுய விருப்பம், திறனில் பேரில் நிகழ்ந்திருக்கலாம். அதற்கு என் சொற்கள் மட்டுமே காரணம் எனக் கருதவில்லை. அடுத்த நாளே தெரிவித்திருந்தால் இந்தளவு அதனைப் பொருட்படுத்தியிருப்பேனா எனத் தெரியவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து எனும் போது அவர் எடுத்த முடிவு செயல்பட்டிருக்கின்றது எனப் புரிந்துகொண்டேன். ’90% கோவம் கம்மி பண்ணிவிட்டேன்' எனப் பகிர்ந்ததும் 90% இல்லாவிட்டாலும் குறிப்பிட்டதொரு சதவிகிதம் இருக்குமென மகிழ்ச்சியாக இருந்தது.

மனம் நெகிழ்ந்திருக்கும்போது, மனம் நிறைவாக இருக்கும்போது சொற்களும் நிறைவாகவும், நெகிழ்வாகவுமே வெளிப்படும். அந்த இளகிய சொற்கள் ஒருவேளை 10% நோக்கம் மட்டுமே கொண்டிருந்தாலும், 90% பலனைத் தரும் என்பதை அன்று புரிந்து கொண்டேன். 

 *

Dec 15, 2023

வெறுப்பென்பது வீரமோ, உரிமையோ அல்லது அடையாளமோ அல்ல

மேலோட்டமாகப் பார்த்தால் ‘ஒரே ஒரு வாழ்க்கைதான்’ என்பது பல தருணங்களில் கேட்டுச் சலிப்புற்ற, வெகு எளியதொரு வரிதான். ஆழ்ந்து யோசித்தால் செய்து கொண்டிருக்கும் எத்தனையோ செயல்களை மீளாய்வு செய்யவும், செய்யாமல் இன்னும் விட்டுவைத்திருக்கும் செயல்களை முடுக்கிவிடவும் மிகப் பெரும் ஆற்றல் கொண்ட உண்மை அது.


மனிதர்கள் தம் வாழ்க்கையை மிக அதிகமாக நேசிப்பது வெற்றியடையும் தருணங்களில் மட்டுமேயல்ல. எதன் நிமித்தமாகவோ வாழ்க்கை தன் கையை விட்டுப் போய்க்கொண்டிருக்கின்றது என்பதை உணரும் கொடுங்கணத்தில் வாழ்க்கையை இழக்க மறுக்கும் எண்ணம் வரும்போது, முதலில் பதட்டம் ஏற்படும். அந்தப் பதட்டம் அடங்கி உண்மை புரியும்போது, அதுவரையிலும் இல்லாததொரு நேசிப்பு அதன் மீது கூடும். என்ன செய்தாவது இதனை நான் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனும் வேட்கை அது. அந்தக் கணத்தில் நெகிழும் மனம் அதுவரையிலும் வாய்க்காத ஒன்று. அந்தத் தருணத்தின் வேட்கை தோய்ந்த நேசிப்புக்கு நிகரேதுமில்லை.

விவாதிப்பதற்கென்று சில நட்புகள் எனக்குண்டு. எங்கள் சந்திப்புகளில் உரையாடல் விவாதமாகச் செல்லும். அப்படியானதொரு விவாத தருணத்தில் நானும் நண்பரும் எதிரெதிர் புள்ளியில் நின்று பலவற்றைக் குறித்தும் உரையாடிக் கொண்டிருந்தோம். எதிரெதிர் புள்ளியில் நின்று விவாதிப்பதன் மூலம் பல கோணங்களை எட்ட முடியும் என்பதை அறிந்தவர்கள் நாங்கள். எங்களுக்குள் இருந்த ஆழமான புரிதலின் விளைவாக மட்டுமே அப்படியாதொரு உரையாடலை முன்னெடுக்க முடிகின்றது. தண்டவாளம் போல் இணையாமல் நீண்டு கொண்டிருந்த விவாதம் ஒருகட்டத்தில் அதன் நிறைவுப்புள்ளியினை எட்ட, தண்டவாளங்கள் இரண்டும் இணைந்தன. எதிரெதிர் வாதங்கள் வைக்க முடியாமல் இருவரும் ‘ஆமாமா... சரிதான்!’ என ஒப்புக்கொண்ட உண்மையின் பெயர் ‘வெறுப்பு’.

மனிதர்கள் எப்போதுமில்லாத அளவுக்கு ‘வெறுப்பினை’ உமிழத் தொடங்கியிருக்கின்றனர் எனும் புள்ளியில் இருவரும் எதிர்க்கருத்துகள் வைக்காமல் ஆழ்ந்த அமைதியில் நின்று ஒப்புதலாய் தலையசைத்துக் கொண்டோம். அந்த அமைதி மௌனம் கிடையாது. அலையலையாய் அவ்வப்போது வீசும் வெறுப்பின் வாசனையில் நனைந்திருந்த மௌனம்.

நட்பு, உறவு, அமைப்பு, அரசியல், சாதி, மதம், பொருளாதார மாறுபாடு என நீளும் பட்டியலில் சிலவற்றில் ஓரளவு, பலவற்றில் பெருமளவு வெறுப்பு, வேர் பாய்ச்சி கிளை பரப்பியிருப்பது எல்லோருக்குமே காணக்கிடைக்கின்றது. இந்த வெறுப்பின் அடிப்படையில் அவரவர் மனப்பாங்கு ஒருபக்கம் என்றால், மற்றவர்கள் மெல்ல நஞ்சாக ஊற்றுவது மறுபக்கம்.




மனப்பாங்கு என்பதுவும்கூட ஒவ்வொருவரும் காலப்போக்கில் கட்டமைப்பதுதான். தனக்குக் கிடைக்காதவொன்று இன்னொருவருக்குக் கிடைக்கும்போது ஏற்படும் போட்டி, இயலாமை, ஆற்றாமை மிகச் சரியாகக் கையாளப்படவில்லையென்றால், அது அந்த இன்னொருவர் மீது அல்லது அது தொடர்பான யாவற்றின் மீதும் வெறுப்பை விதைக்க ஆரம்பித்துவிடும். வெறுப்பின் வேர்களுக்கும், கிளைகளுக்கும் வேகமும் தாகமும் அதிகம்.

இசைக்கு, ஏதோவொன்றின் எழிலுக்கு, வாசனைக்கு, நெகிழ்த்தும் சொல்லுக்கு மயங்காதோர் உண்டா?. எதுவெல்லாம் பிடித்ததாக மனம் ஏற்றுக்கொண்டு மூளையில் பதிவாகின்றதோ, அவற்றையெல்லாம் நிபந்தனைகளின்றி ஏற்றுக்கொண்டு அதன் வசியத்தில் கிறங்கிப் போவதென்பது உயிரிகளுக்கேயுரிய எளியதொரு அம்சம்தான்.

கட்டமைக்கப்படும் பிம்பமாகினினும், அவதூறாகினும் எளிதில் வசப்பட்டுவிடுவார்கள். தனக்கு நேசிக்க ஒன்று கிடைத்தால், அத்தோடு நிற்கவியலாது. தான் நேசிக்கும் ஒன்றின் எதிர்நிலையில் உள்ளதன் மீது வெறுப்புக் கணைகளை வீசுவதையும் தம் நேசிப்பின் அங்கமெனக் கருதுவதுண்டு.

யாரோ அல்லது எதுவோ ஊட்டிய வசியத்தில் சிக்கி இடைவிடாது, இதுஅதுவென எந்த வரைமுறைகளுமற்று தன்னைச் சுற்றிலும் இருக்கும் எல்லாவற்றின் மீதும் வெறுப்பை உமிழ்கின்றவர்களை நீங்களும் கண்டிருக்கலாம். எல்லாவற்றிலும் ‘இதுவென்றால் இப்படித்தான் இருக்கும், அதுவென்றால் அப்படித்தான் இருக்கும்’ என்பதாக முன்முடிவோடு அணுகி, அதன் மீது வெறுப்பினை பாய்ச்சி அதிலொரு அதீத போதை உணர்வதை நிறையக் காணலாம்.

மனப்பாங்கு சரியாக அமையாமல் போவதற்கு தன்னைக் குறித்த ‘தாம் யார் எனும் சுய உணர்தல்’ இல்லாததுவும் மிக முக்கியமான காரணம். தன்னைக்குறித்த சுய உணர்தலற்றவர்கள் இந்த வசியத்தில் எளிதாக தம் வசம் இழப்பார்கள். தம் வசம் இழந்து பிறிதொன்றின் வசம் சென்றால், அது ஆட்டுவிக்கும். இதுதான் நான் என தன்னை வரையறை செய்துகொள்வதன் மூலமாக அந்த வெறுப்புணர்வு சுரக்கத் தொடங்கும்போது, வரையறைக்கு உகந்ததுதானா இதுவெனக் கேள்வியெழுந்தால் வெறுப்பின் வேர்களில் வெந்நீர் பாய்ச்சிவிட முடியும்.

வெறுப்பின் நிழல் பிறரை மட்டுமே தீண்டுவதாகத் திருப்தியடைவோர் புரிந்து கொள்ளாத கசப்பான உண்மை, அதன் வேர்கள் தம் ஆன்மாவில் நீண்டு உயிர் பருகுவதை. வெறுப்பின் தன்மையை தாம் ஒருபோதும் அனுபவிக்காமல் எவரொருவருக்கும் வழங்கிவிட இயலாது. எப்பொழுதெல்லாம் வெறுப்பு வெளியேறித் தீண்டுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அது உள்ளே கசிந்து, பரவத்தான் செய்யும். அந்தப் பரவலில் மடிந்துபோன நேசத்தின் வேர்களை அறியாதது மிகப் பெரிய விந்தையல்ல. நேசத்தின் வேர்கள் மடிந்துபோகும்போதெல்லாம் மனம் என்னவாகும்? சிதைவைத்தான் சந்திக்கும். மெல்ல மெல்ல மனம் சுருங்கும், இறுகும், கருகும். ஒருகட்டத்தில் அது நோய்மையுறும்.

பலரும் என்னிடம் பேசுவதுண்டு, நானும் கேட்பதுண்டு. சிலவற்றை ஏற்றுக்கொள்ளவதில் பெரும் சவால் உண்டு எனக்கு. குறிப்பாக ஒரே கூரையின் கீழ் மிகப் பெரும்பாலான பொழுது வாழும் தம்பதிகள் ’நாங்கள் பேசிக்கொள்வதில்லை’ எனச் சொல்வதை மனச் சமநிலையோடு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.

மனிதர்களற்று மனிதர்களால் வாழ்ந்துவிட முடியாது. அதன் நிமித்தமாக எங்கெங்கோ மனிதர்களைத் தேடிக்கொண்டேதான் இருக்கின்றோம். நான்கு சுவற்றுக்குள் உடனிருப்போரிடம் உரையாடலுக்கு இடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்க மறுக்கின்றனர். பேச்சை விடுங்கள், பார்வைப் பரிமாற்றங்கள்கூட இல்லாமல் காலத்தை நகர்த்துவதற்கு அவர்கள் சொல்லும் சமாதானங்கள் வெற்றுச் சொற்கள் மட்டுமே.

என் நண்பரின் நண்பரொருவர் தம் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கொடுங்காலத்தில் இருக்கின்றார். ஒருபக்கம் நம்பிக்கையோடு போராடினாலும், மறுபக்கம் மரணம் எனும் உண்மையை தான் தவிர்க்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள மனதளவில் தம்மை தயார்படுத்திக் கொண்டுவிட்டார்.

அந்த நண்பரின் உரையாடல்கள் சில அவ்வப்போது என்னிடம் பகிரப்படுவதுண்டு. அவர் குறித்த பழைய பிம்பங்கள் நிறைய உண்டு. அது அவரின் காலமாக இருந்த அத்தியாயங்களில் நிகழ்ந்தவை. இது அவருடைய காலம் அல்ல. இறுதி அத்தியாயத்தின் கடைசிச் சொல் எதுவென்று கண்ணாமூச்சி ஆடும் மனிதனிடம் பழைய பிம்பங்களின் எச்சம்கூட இல்லை. பகிரப்பட்ட உரையாடல்களில் ஆழ்ந்து ஆழ்ந்து வாசித்ததில் நான் கண்டடைந்தது, அவர் வெறுப்புணர்வின் கூறுகள் அனைத்தையும் முற்றிலுமாகக் கைவிட்டிருப்பதை உணர முடிகின்றது. ஒருவேளை அவர் நலமோடு இயல்பான வாழ்க்கையில் இருந்திருந்தால், இந்த மனநிலை வாய்த்திருக்குமா என்றும் யோசிக்காமல் இல்லை.

கிடைத்திருக்கும் ஒரே ஒரு வாழ்க்கையில் எத்தனையோ நிறைவேறாமல்தான் போகின்றன. அதற்கான முக்கியக் காரணம் ஏதோவொரு போதாமை. அது நேரமாகவோ, மனமாகவோ அல்லது அறியாமையாகவோ இருக்கலாம். இத்தனை போதாமைகள் இருக்கும்போது, வெறுப்பிற்காக எப்படி நம்மால் தனித்து நேரமும், மனமும், ஆற்றலும் ஒதுக்க முடிகின்றது. நாம் அப்படியாகவே வழிவழியாகப் பழக்கப்படுத்தப்பட்டு விட்டோமா?

வெறுப்பு என்பது வேறொன்றுமில்லை. அதுவும் ஓர் உணர்வுதான். இந்த உணர்வு வேண்டுமா, வேண்டாமா எனும் தெளிவு வந்துவிட்டால் போதும். முயற்சித்தால் மெல்ல மெல்ல கட்டுக்குள் வைக்கும் உணர்வுதான். ஆனால் முயற்சிக்கும் முடிவுதான் இதில் மிகப் பெரிய சவால். இதை முன்னெடுக்க ‘தான் யார்!’ எனும் சுய அடையாளம் அறிந்திருப்பது மிகப் பெரிய அளவில் உதவும். ’தாம் வெறுப்பு உணர்வற்றவர்’ எனும் சுய நிலைப்பாடு வெறுப்பின் திசை நோக்கி வேர் நுனி பயணிக்க முற்படும்போதெல்லாம் டேக் டைவர்சன் என மாற்றுப்பாதைக்கு வழி காட்டும்..

எல்லாவற்றையும் அதனதன் இயல்பில் புரிந்துகொள்தல், மனிதர்கள் அப்படியும்தான் இருப்பார்களென ஏற்றுக்கொள்தல், வெறுப்பால் எதையும் எட்ட முடியாது எதும் தெளிவு, தாம் விடுபடும் பொருட்டு இன்னொருவரை மன்னித்தல் என்பதுள்ளிட்டவைகளாலும் வெறுப்பு மனநிலைகளிலிருந்து மெல்ல விடுபட முடியும்

வெறுப்பென்பது ஒருபோதும் வீரமோ, உரிமையோ அல்லது அடையாளமோ அல்ல, அது அவரவரை சுயமாக மாய்க்கும் பெரும் பிணி.

- ஈரோடு கதிர்

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...