டிசம்பர் 28 முதல் டிசம்பர் 28 முடிய

உண்மையில் 2017ம் ஆண்டு எனக்கு ஜனவரி 1ம் தேதி துவங்கவில்லை.

2016 டிசம்பர் 28ம் தேதியே எனக்கான ஆண்டு துவங்கிவிட்டது எனச் சொல்லலாம். தென்காசி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பயிரங்கு நடத்திய நிகழ்விலிருந்துதான் பள்ளி மாணவ மாணவியர்களை நோக்கி கூடுதல் கவனம் கொடுக்க ஆரம்பித்தேன். 2017ன் முதல் நிகழ்ச்சியாக குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் பிரைமரி பள்ளி ஆண்டு விழா எனத் தொடர்ந்த பயணத்தில், இந்த ஆண்டு அதே டிசம்பர் 28ம் தேதி குருமந்தூர் அருகே வெட்டையம்பாளையும் கொமரசாமிக்கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 14ம் ஆண்டு விளையாட்டு விழா 99வது நிகழ்ச்சி. 31ம் தேதி இரவு ஒரு குடியிருப்பு நலச்சங்கத்தின் புத்தாண்டு இரவு நிகழ்ச்சியில் பேசவுள்ளதால் எண்ணிக்கை 100ஐ அடைந்து விடும். எந்த விதத்திலும் திட்டமிடாத்து இந்த 100 எனும் எண்ணிக்கை.

இந்தப் பயணத்தில் பெரு நிறுவனங்கள், பள்ளிக்கல்வித் துறை, பல்வேறு அமைப்புகள் ஆகியவற்றோடு அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், விவசாயக் கல்லூரி, தொழிட்நுட்பக் கல்லூரி, ஆசிரியர்கள் பயிற்சி மையம் என பல்வேறு தரப்பில் இருக்கும் பணியாளர்களையும், மாணவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

இந்த ஆண்டு கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் வாயிலாக சந்தித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 18,000. மாணவர்கள், ஆசியர்கள் சார்ந்த 65 உரை மற்றும் பயிலரங்குகளின் வாயிலாக சந்தித்த மாணவ மாணவியர்கள் சுமார் 13000 பேர், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 850 பேர்.

யாழ்ப்பாணம் தெள்ளிப்பளையில் சந்தித்த ஒன்பது வயது மாணவர்கள் முதல் ஈரோட்டில் ஐம்பத்தைந்து வயதில் ’நான் இப்பொழுதுதான் வாழ்க்கையைத் தொடங்குகிறேன்’ எனச் சொன்ன ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் வரை பல்வேறு வயதில், பல்வேறு நிலையில் இருப்பவர்களை இந்த ஆண்டில் கடந்து வந்திருக்கிறேன். குறிப்பாக யாழ்ப்பாணத்தின் வாழ்வகத்தில் சந்தித்த பார்வைத் திறனற்ற பிள்ளைகள் எனக்குள் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர்கள்.

நிகழ்ச்சிகளின் முடிவில் வெளியில் ஓடி வந்து கை பற்றிக் கொள்ளும் பிள்ளைகள், கால் தொட்டு ஆசிர்வதியுங்கள் என உயிரை நடுங்க வைக்கும் பிள்ளைகள், ஆர்வமாய்ப் பேச ஆரம்பித்து திக்கித் திணறி கண்ணீர் சிந்தும் பிள்ளைகள், இரண்டு நாட்கள் கழித்து யோசித்து யோசித்து கை பேசியில் அழைக்கும் பிள்ளைகள், வாட்சப்பில் வந்து என்ன பேசுவதெனத் தெரியாமல் திணறும் பிள்ளைகள், உங்களை அண்ணாவென அழைக்கட்டுமா எனக் கேட்கும் வால் முளைத்த பட்டாம்பூச்சிகள் என இந்த ஆண்டு எனக்கு பிள்ளைகள் சூழ் சிறப்பு ஆண்டு.

இத்தனைக்கும் மேலாக, நான் படித்த கல்லூரிக்கு 25 ஆண்டுகள் கழித்து பயிற்சியாளராக போன அனுபவம் பெரும் தெம்பூட்டுகிறது.

கல்வி உலகம் தவிர்த்து...

என்னை வளர்த்து ஆளாக்கிய ஜேஸிஸ் இயக்கத்தில், பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மண்டல மாநாட்டிலும், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டிருக்கிறேன்.

மிகப் பெரிய மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு ‘மாற்றத்தை நிர்வகித்தல்’ பயிலரங்கினை நான்கு அமர்வுகளில் நடத்தியது மிக நல்ல அனுபவம்.

உரை, பயிற்சி எனத் தீவிரமானதில் எழுத்து மிகவும் குறைந்து போயிருக்கின்றது. ஆண்டின் துவக்கத்தில் வெளியான “பெயரிடப்படாத புத்தகம்”, “உறவெனும் திரைக்கதை” கட்டுரைகளுக்குப் பிறகு இந்த ஆண்டில் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக எதுவுமே எழுதவில்லை.

மகள் மழலையாக பத்தாண்டுகளுக்கு முன்பு உச்சரித்துக் கொண்டிருந்த அதே காரை இந்த ஆண்டு அவள் பிறந்த நாளன்று சஸ்பென்சாக வாங்கியது, குடும்பத்துடன் வடகிழக்கு இந்தியா, நண்பர்களோடு கர்நாடகா-கேரளா மற்றும் இலங்கை பயணங்கள் என மகிழ்வான தருணங்கள் கொண்ட ஆண்டு.

எங்க ஊர் நட்புகளை ஒன்று திரட்டி “ஈரோடு வாசல்” எனும் வித்தியாசமான வாட்சப் குழுமத்தை உருவாக்கி, அதில் எழுத்து, உடற்பயிற்சி, வாசிப்பு பேச்சு, வாசிப்பு, உரையாடல் என பல்வேறு திறமையாளர்களை இனம் கண்டது நெகிழ்வான அனுபவம்.

எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் பாஸ்போர்ட்டை தவற விட்டதன் மூலம் மிகப் பெரிய பாடம் கற்றுக்கொண்ட ஆண்டு.

நிறைவான அன்பைத் தருவதற்கும், பெற்றுக்கொள்வதற்கும் யோசித்ததேயில்லை. எவர் மீதும் புகார் இல்லை, வெறுப்பு இல்லை, வன்மம் இல்லை. சில தருணங்களில் சிலரிடம் கோபம் உண்டு. ஒருபோதும் அதை திட்டமிட்டு வளர்க்கவோ நீட்டிக்கவோ விரும்பியதில்லை.




எல்லா வகைகளிலும் என்னைச் சுற்றிலும் இருப்பவர்களின் அன்பு மற்றும் நேசிப்போடு இந்த ஆண்டை மகிழ்வோடு நிறைவு செய்கிறேன்... இன்னும் கூடுதல் அன்பினையும் பிரியங்களையும் தேடிக்கொண்டே....

No comments: