Aug 9, 2010

புத்தகத் திருவிழா- சகாயம் – நேர்மை


               கொங்கு மண்டலமே கொண்டாடும் ஈரோடு புத்தகத் திருவிழா, மக்கள் சிந்தனைப் பேரவையின் கடும் உழைப்பில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று மாலை நான் சென்றிருந்த போது பதிவுலக நண்பர்கள் மதுரையிலிருந்து கார்த்திகை பாண்டியன், மதுரை சரவணன், திருப்பூரிலிருந்து முரளிகுமார், ஈரோடு குழுமத்தூண்கள் ஆரூரன், பாலாசி, அகல்விளக்கு, கார்த்திக் ஆகியோர் வருகை புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மாலை நேரம் மக்கள் கூட்டம் நெருக்கியடித்தது. நேற்றைய விழாவின் பேச்சாளர்கள் விஜய் டிவி விஜயன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.உ.சகாயம். மழைச்சாரல் மிரட்டிக்கொண்டே இருந்தது. பேச்சாளார்கள் பேசத் துவங்கும் முன்பே ஒரு கட்டத்தில் மழையின் மிரட்டலுக்குப் பயந்து மக்கள் களைந்து, ஆனாலும் சகாயம் அவர்களின் உரை கேட்க சற்று ஒதுங்கி மீண்டும் அமர்ந்தனர். விழாவிற்கு எஸ்.கே.மயிலானந்தன் தலைமை தாங்கினார்.

அகல்விளக்கு, க.பாலாசி, நான், மதுரை சரவணன், கார்த்திகை பாண்டியன்

முதலில் விஜயன் உரையைத் துவங்கினார். அருமையான குரல் வளம், கட்டிப்போடும் பேச்சுத்திறன், இருந்தும் என்ன செய்ய, மனதில் ஒன்றும் பதியவில்லை. ”தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கனக்கான பல்கழைக் கழகம்” என்ற போது சிரிப்பு வந்தது. பேச்சில் இன்னும் பக்குவம் கைவரவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. (ஓராண்டுக்கு முன் எங்கள் அரிமா சங்க கூட்டத்தில் பேசியதும் இது போன்றே). 

புத்தகத் திருவிழாவில் கல்லூரி அளவில் நடந்த பேச்சுப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டு முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்கள் தலா நான்கு நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். 

எல்லாம் நிறைந்து திரு. சகாயம் அவர்கள் ஒலி வாங்கியைப் பிடித்தார். பல்லாயிரக்கணக்கான மக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததற்கு மிகச் சரியான தீனியாக அமைந்தது உரை.
 
உரை நிகழ்த்தும் திரு. சகாயம்



நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் இ.ஆ.ப. – உரை ஒரு பார்வை

நேர்மையாக இருப்பது எவ்வளவு கடினம், எவ்வளவு முக்கியம் என்பதை அவருடைய உரை மிகத் தெளிவாக காட்டியது. நேர்மையாக இருப்பதால் நண்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்றது. எதிரிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது எனவும், தன்னுடைய உறவுகளும், நட்புகளும், உடன் பணி புரியும் அதிகாரிகளும், கீழே பணிபுரியும் அலுவலர்களும் இவருடை நேர்மையின் பொருட்டு விலகிப்போவதைச் சொல்லும் போது வலியாய் உணரமுடிந்தது. தான் நேர்மையாக இருப்பதற்கு தன்னுடைய பெற்றோரின் வளர்ப்பு ஒரு காரணம் என்றாலும், இன்று மனைவியின் முழு ஒத்துழைப்பே அதற்கு முக்கிய காரணம் என்றார். அதில் இருந்த உண்மை அவருடைய துணைவியார் மீது மிகுந்த மரியாதை ஏற்படுத்தியது.

பத்து வருடங்களுக்கு முன்பு, உலகத்தின் சர்வ வல்லமை படைத்த பெப்சி(Pepsi) நிறுவனத்தின் குளிர்பானத்தில் பாட்டிலில் மாசு படிந்திருப்பதாக வந்த புகாரையடுத்து, மூன்று மாதங்கள் ஆய்வு நடத்தி, இறுதியாக நிரூபித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இருக்கும் பெப்சி ஆலையை சீல் வைத்து மூடிய செய்தி பற்றிக் கூறும் போது, அந்த ஆலையை சீல் வைத்து இழுத்து மூட வேண்டிய முடிவினை எடுக்க வெறும் பனிரெண்டு பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் தயார் செய்து அளிக்கக்கூடிய அறிவு மட்டும் போதாது, தன் பணியில் துளியும் கறைபடியாத நேர்மை தந்த துணிவுதான் மிக முக்கியம் என்று சொன்னபோது, பெருமிதத்தில் மனம் சிலிர்த்தது.

அரசு பள்ளிகள் மேல் தான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்காக தொடர்ந்து தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு ஆய்வு செய்து அங்கிருக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய தான் பெரும் முயற்சியெடுப்பதை சில உதாரணங்களுடன் விவரித்தார்.

பெற்றோர்களுக்கான ஒரு தனிப்பட்ட குடும்பச் சண்டையில், பள்ளியில் படிக்கும் மகன், தன்னைத் தேடி மனு அளிக்க வந்த சம்பவம் குறித்து பேசும் போது, மாணவனை ஊக்குவித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கயெத்தனித்த நேரத்தில் செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறுக்கிட, அதே சமயம் தன் கீழ் உள்ள அதிகாரியை அதற்கு நியமித்தும், அந்த மாணவனின் தாய் தீர்வுக்கு ஒத்துவராத நேரத்தில் அந்தத் தந்தை தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள, தன்னால் தீர்வு வழங்கமுடியாமல் போனதை கனத்த இதயத்தோடு, வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார்.

தேசம் போலிகளின் தேசமாய் மாறிப்போனதை மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் போலிகளை கண்டுபிடிக்கும் வேட்டையில் போலி டீத் தூள், போலி உணவுப் பொருட்கள், போலி மருந்துகள், போலி மருத்துவர்கள் இறுதியாக போலி வாக்காளர் அட்டை மற்றும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் நிறுவனம் வரை சிக்கியதாகக் கூறினார்.

குவிந்து கிடந்த மக்களில், ஆட்சித் தலைவரின் உரை கேட்க பலநூறு பள்ளிக் குழந்தைகளும் பள்ளி சீருடையுடன் குவிந்து கிடந்தது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது, அதே சமயம் பெரு மகிழ்ச்சியாகவும் இருந்தது.





Aug 7, 2010

வலைப்பதிவு துவங்குதல் - கருத்தரங்குகள்


அழகிய தருணங்கள், ஒரு கவிதையாய், சாரல் மழைத்துளியின் சிணுங்கலாய், மிக எளிதாய்க் கைகூடும் என்பது மற்றுமொருமுறை நிரூபணமாகியிருக்கிறது. என்னையும் இத்தனை நண்பர்களையும் இணைத்து வைத்த வலைப்பக்கத்தை நம்மையொத்த மனிதர்களிடம் திணிப்போம் அல்லது ஊட்டுவோம் என்பது நீண்ட கால ஆசை…










அப்படிப்பட்ட அற்புத தருணம் இன்று கைகூடியது. நண்பர் பதிவர் பழமைபேசியின் ஈரோடு வருகையை வித்தியாசமாக அமைக்க விரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் இரு வேறு பொறியியற் கல்லூரிகளில் பணிபுரியும் இரண்டு பேராசிரியர்களிடம் தனித்தனியே பேசும் போது, தங்கள் கல்லூரியில் எதாவது ஒரு நிகழ்ச்சிக்கு நண்பர்  பழமைபேசியிடம் இசைவு பெற்றுத் தர இயலுமா என வினவ, நான் வலைப்பதிவுகள் குறித்து உங்கள் மாணவர்களிடம் அவரை வைத்து ஒரு கருத்தரங்கம் நடத்தலாம் என்று கூற, ஒரு வழியாக நிகழ்ச்சி கை கூடி வந்தது.

பெருந்துறை கொங்கு பொறியியற் கல்லூரி











ஆனாலும், பொறியியற் கல்வியில் மூழ்கிய மாணவர்களிடம் ஆங்கிலம் அதிகமாய்க் கோலோச்சும் காலத்தில் தமிழ் பதிவுகள் குறித்த கருத்தரங்கம் எந்த அளவுக்கு வெற்றியைத் தன்வசம் கொள்ளும் என்ற சந்தேகம் மனதில் கனத்தைக் கூட்டிக் கொண்டேயிருந்தது.

 









ஒரு வழியாய் திட்டமிட்டபடி 07.08.2010 காலை பத்து மணிக்கு பெருந்துறை கொங்கு பொறியற் கல்லூரிக்கு சென்றடைந்தோம்.

கணினி தொழில் நுட்பத் தலைவர் முனைவர். ஜெயபதி, கணினி பிரிவுகள் முதன்மைத் துறைத் தலைவர் முனைவர். பாலமுருகன், இந்திய கணினி சமூக அமைப்பு (CSI) ஒருங்கிணைப்பாளர் முனைவர்.கௌசல்யா மற்றும் பேராசிரியை. ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் இந்திய கணினி சமூக அமைப்பு (CSI) உறுப்பினர்கள் (கணினி அனைத்துப்பிரிவுகளையும் சார்ந்தவர்கள்) சுமார் 260 பேருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. நண்பர். பழமைபேசி அவர்கள் முதலில் வெளிநாட்டு கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து சிறிது உரையாற்றியபின் தமிழில் வலைப்பக்கங்களின் அவசியம், அதை உருவாக்குதல், அதில் இடுகைகள் மூலம் பங்கேற்பு என்பது குறித்து மிக விரிவாக கருத்தரங்க உரையாற்றினார். பொறியியற் கல்லூரி மாணவர்கள் மத்தியில் தமிழ் வலைப்பதிவுகள் குறித்த விளக்கங்கள் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.














கருத்தரங்கில் குறிப்பிட்ட சில வலைப்பக்கங்கள், திரட்டிகள், ஈரோடு குழுமம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வலைப்பக்கங்களில் என்னுடைய பங்கு என்ற தலைப்பில் நானும் சிறிது உரையாற்றினேன். 


நிகழ்ச்சியில் மிகவும் அசந்து போன துறைத்தலைவர் முனைவர். ஜெயபதி நிகழ்ச்சி நிறைவிற்குப் பின் கொங்கு வளாகத்தில் இயங்கும் கொங்கு பண்பலையில் உடனடியாக ஒரு செவ்விக்கு (பேட்டி) ஏற்பாடு செய்து பழமைபேசி மற்றும் என்னிடம் செவ்வி எடுத்து பதிவு செய்யப்பட்டது. சட்டென திட்டமிட்ட நிகழ்வில் எந்த முன் தயாரிப்புமின்றி செவ்விக்காக கேள்விகளை வீசிய இரண்டு மாணவிகளின் திறமை மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.


சென்னிமலை
எம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரி

நிகழ்ச்சியின் நிறைவில் கொங்கு வளாகத்தில் திளைத்த மகிழ்ச்சியுடன், அடுத்த நிகழ்ச்சியை நடத்த சென்னிமலைக்கு கிளம்பினோம். நிகழ்வு சென்னிமலையில் இருக்கும் எம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE) சார்ந்த 263 மற்றும் 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.












தாளாளர் திருமதி. வசந்தா சுத்தானந்தன், முதல்வர் (பொறுப்பு) பேரா.சண்முகசுந்தரம், மிகுந்த முன்னேற்பாடுகளுடன் திட்டமிட்டிருந்த துறைத்தலைவர் பேரா. பார்த்திபன், விரிவுரையாளர்கள் திரு.மோகன், திரு. கோபி, திரு. மகேஷ் ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்.

உரிய நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நண்பர். பழமைபேசி அவர்கள் அந்த மாணவர்களிடமும் வெளிநாட்டுக் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து உரையாற்றிய பின் தமிழ் வலைப்பதிவுகள் குறித்து மிக நேர்த்தியாக, மிக அற்புதமாக, தெளிவாக கருத்துரை வழங்க, ஆங்காங்கே மாணவர்களிடமிருந்து கேள்விக்கணைகள் பறந்தன. மாணவர்களிடையே ஊடுருவி, ஒன்றாய் கலந்து நண்பர் மிக அற்புதமாக நிறைவு செய்தார்.












நிகழ்ச்சி தொகுப்புரையை வழங்கிய ஐந்து மாணவ, மாணவியர்களின் தயாரிப்பு மெச்சத் தகுந்த அளவில் இருந்தது.

ஒரு மனிதனின் சமூகக் கடமை மற்றும் அதில் என் வலைப்பக்கங்களின் பணி என்ற தலைப்பில் முப்பது நிமிடங்கள் உரை நிகழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.












கிடைத்த வாய்ப்பினை மிக நேர்த்தியாக பயன்படுத்தி, கனவுகளை வீரியமாகக் கொண்டுள்ள மாணவ சமுதாயத்திடம் நிதானமாக விதைகள் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளன. அரவணைத்து வளர்ப்போம், நமக்கும் நம் அடுத்த தலைமுறைக்கும் தாய்மொழி சார்ந்த இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாய் நிரப்புவோம்.











இரு நிகழ்ச்சிகளும் சிறப்புற நிறைவடைந்த மகிழ்ச்சியோடு இன்றைய பொழுது மிகப் பயனுள்ளதாக நிறைந்தது.

நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நண்பர் பழமைபேசி, முனைவர், கௌசல்யா மற்றும் பேராசிரியர் பார்த்திபன்.

இந்த நிகழ்ச்சி குறித்து திட்டமிட்டபோது தட்டிக்கொடுத்த எம் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்திற்கே இந்த மகிழ்ச்சி சமர்ப்பணம்.

___________________________________________________________________

Aug 6, 2010

நாணல்கள்



இளம்காலை நேரம் கோவை செல்ல வாகனத்தில் நண்பரோடு கிளம்பினேன். அவிநாசியை கடக்கும் போது ”இங்கேயே சாப்ட்றலாம்” என நண்பர் பேருந்து நிலையம் தாண்டி, ஒரு டீக்கடையோரம் நிறுத்தினார் . ”என்ன இங்கியா” எனக் கேட்க, ”நிக்கிற கார் எல்லாம் பாருங்க, அப்புறம் சாப்ட்டுச் சொல்லுங்க, எப்படின்னு” என்றார்

முன் பக்கம் கூரை வேய்ந்த உள்ளே பனிரெண்டுபேர் மட்டும் சாப்பிடும் அளவுக்கு ஒரேயொரு அறை. அதுவும் நிரம்பியிருக்க, காத்திருப்பு பட்டியலில் ஏற்கனவே நிற்கும் மனிதர் பின்னால் ஒரு மாதிரி கூச்சத்தோடு நிற்கத் துவங்கினோம். சில நிமிடங்கள் கழித்து வந்த மனிதர் வரிசையைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், சடசடவென உள்ளே போய் சாப்பிடும் ஒரு ஆள் பக்கத்தில் இடம் பிடிக்க நின்று கொண்டார், நாங்கள் இருவரும் இயலாமையில் ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொள்ள மட்டும் செய்தோம்.



அடுத்த சில நிமிடங்களில் எங்களுக்குப் பின் கூட்டம் அதிகமானது, நண்பரிடம் கேட்டேன் “இப்படி நின்னு வேற சாப்பிடனுமா”ன்னு. ”இல்ல, ஒரு வாட்டி சாப்பிட்டு பாருங்க” என்றார்.

சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் முடிப்பது போல் தெரிய, உள்ளே சென்று வழக்கமான இந்தியக் கலாச்சார முறையில் இடம் பிடித்தோம். அப்போதுதான் கவனித்தேன் இலை போட்டு தண்ணீர் தெளித்து, வைத்து, பரிமாறி, கடைசியாய் இலையடுத்து, காசு வாங்குவது வரை அறுபது வயது மதிக்கத் தக்க ஒரே ஒரு ஆள் மட்டும் பம்பரமாய் சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார்.

நான் வழக்கம் போல் “என்ன சொல்லலாம்” என்று நண்பரைக் கேட்க, “ஒன்னும் சொல்ல முடியாது, முதல்ல இட்லி வரும் அப்புறம் தோசை குடுப்பாங்க, அவ்வளவுதான்” “அடப்பாவி மக்கா இதுக்குத்தான் இந்தப் பில்டப்பா, அதுதான் தினமும் வீட்ல போடறாங்களே”ன்னு நினைச்சிக்கிட்டேயிருக்கும் போது இட்லி வைக்கப்பட்டது, பரபரப்பாய் சாம்பார், சட்னி ஊற்றப்பட்டது.
இதற்குள் அந்த சிறிய அறைக்குள் இன்னும் சிலர் வந்து இடம் பிடிக்க நின்று கொள்ள கிடைத்த இடைவெளியில் மிக லாவகமாய் அந்த நபர் புகுந்து புகுந்து பரிமாறினாலும் சாப்பிடும் அனைவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

சாப்பிடுவோருக்கோ சட்னி போதவில்லை, சாம்பார் போதவில்லையென கை காய்ந்து கொண்டிருக்க, நிற்கும் நபர்களுக்கு சாப்பிடுவோர் சீக்கிரம் எழ வேண்டும், பொறுத்துப்பொறுத்த பார்த்த சாப்பிட வந்து காத்திருந்த நபர் அருகில் இருந்த சட்னி, சாம்பார் வாளியை எடுத்து காய்ந்த கையோடு இருக்கும் இலைக்கு பரிமாற ஆரம்பித்தார், இதைப் பார்த்த காத்திருக்கும் இன்னொரு நபர் “சார் உங்களுக்கு என்ன வேணும் (மனசுக்குள் ”யோவ் சீக்கிரம் எந்திரிய்யா”)” எனக் கேட்டு தட்டில் இருந்த தோசை, இட்லியை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், பசியோடு வந்து கால் கடுக்க நின்று, காத்திருந்து, ஒரு கட்டத்தில் யாருக்காகவோ யாருக்கோ பரிமாறி, யுக்தியோடு இடம் பிடித்து தன் பசியாறிச் செல்லும் அந்த நபர்கள் வந்த கார்களின் விலை ஒவ்வொன்றும் குறைந்த பட்சம் 3 முதல் 15 லட்சம் வரை இருக்கும்.

உணவின் சுவையோ, அவர்களின் நண்பர்கள் பெருமையாக அல்லது மிகைப்படுத்திச் சொன்னதோதான், அந்த மனிதர்களை அவ்வளவு தியாகங்களைச்(!) செய்து, காத்திருந்து சாப்பிடத் தூண்டியிருக்கலாம், அதேசமயம் பணம் கொடுத்தால் எதுவும் கிடைக்கும் என்ற உலகத்தில் பணக்காரர்களை சட்டினியும், சாம்பாரும், இட்லியும், தோசையையும் முன்பின் தெரியாத ஒரு நபருக்கு பரிமாற வைத்த சனநாயகத்தை ஒரு நிமிடம் சிரிப்போடு வணங்கவே தோன்றியது

சுவையின் பொருட்டோ, பெருமையின் பொருட்டோ இவ்வளவு தூரம் இறங்கி வரும் ஒரு (பணக்கார) மனிதனின் நாணல் மனோ நிலையில், இதே வேறு ஒரு சராசரியான உணவுவிடுதியில் இவ்வளவு பொறுமையும், சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுத்தலும் இல்லாமல் போவது ஏன்?

ஏதோ கவனக்குறைவில் தனது பணியில் தடுமாறும் உணவு விடுதிப் பணியாளனை ஆங்காங்கே இன்னும் அடித்தோ, திட்டிக் கொண்டுதானே இருக்கின்றோம்.

தனக்குத் தேவை அல்லது வேறு வழியேயில்லையெனும் போது சட்டென பணம், பகட்டு என எல்லாவற்றையும் விலையாய் கொடுத்து, சகித்துக் கொள்ளும் மனோபாவம் எல்லா சமயங்களிலும் நிகழாமல் போவது ஏன்?

இதற்கு முழுக்க முழுக்க மனிதனின் மனோநிலை மட்டுமே காரணமா, வாய்ப்புகள் மட்டுமே காரணமா? விடை தெரியாத கேள்வியோடு சற்றுக் கட்டிப்புரள்வோம்..

_____________________________________________________




Aug 2, 2010

கூடுதலும் பகிர்தலும்


அறிந்த மனிதர்களை, அன்பாய் கை நீட்டும் உறவுகளைச் சந்திக்கும் போதேல்லாம் மகிழ்ச்சி வழிந்தோடுவது வழக்கமாகிப்போனது.

நேற்றும் அது போல் ஒரு வழக்கான தினம், ஆனால் மகிழ்ச்சி அதீதமாய் வழிந்தோடியதினம். காரணம் ஒன்றல்ல இரண்டல்ல பல. அதில்….
  • நண்பர் பழமைபேசியின் புத்தகம் அறிமுகம்
  • நண்பர் ஆரூரன் நடத்தும் விழா
  • கோவையில் சட்டென எதிர்பாராமல் கூடிய பதிவர்களின் அருமையான எண்ணிக்கை
  • மூத்த பதிவர்கள் மற்றும் பெண்பதிவர்களின் வருகை
  • எழுத்தில் மட்டுமே பார்த்த, பதிவர்கள் தமிழ்மணம் காசி, வானம்பாடிகள் பாலா, வெயிலான், சஞ்சய் ஆகியோரின் மிகத் தெளிவான உரை
  • சேர்தளம் (திருப்பூர் பதிவர்களின்) குறித்த தினமலர் கட்டுரை
  • முகப்புத்தக உறவுகளின் வருகை
என காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
op1 op3op4




op6 op5 op7


op8 op9 op10


 op11 op12op13


op14 op15 op16
 
op17 op18op19


op20  op21 op22
op23 op24 op25



பழமைபேசியின் ஊர்ப்பழமை அறிமுக விழா குறித்து முடிவானபோதே, எப்படியும் கோவையில் இருக்கப்போகிறோம், எனவே பதிவர்களைச் சந்திக்கும் வாய்ப்பாகவும் மாற்றிக்கொண்டால் என்ற எண்ணத்தில் ஒரு திட்டமிடாத திட்டமாக கோவையில் கூடுவோம் என்று இடுகையிட்ட போது, மிகக் குறைவான எதிர்பார்ப்புகள் மட்டுமே ஆட்கொண்டிருந்தது.

ஆனாலும் ஞாயிறு காலை முதல் மனதுக்குள் கொஞ்சம் சுவாரசியமும் பரபரப்பும் கூட ஆரம்பித்தது. மூன்று மணிக்கு மேல் பதிவுலக நண்பர்கள் ஓரு சிலராய்க் கூடி வட்டமாய் அமர… பின்னர் நிமிடத்திற்கு நிமிடம் வட்டம் பெரிதாகிக்கொண்டே போனது

தமிழ்மணம் காசி, லதானந்த, வானம்பாடிகள் பாலா, க.பாலாசி, சஞ்சய் காந்தி, முனைவர் கந்தசாமி, தாராபுரத்தான், வெயிலான் ரமேஷ்,  தமிழ்பயணி சிவா, மஞ்சூர் ராசா, வின்சண்ட், பால கணேஷ், மயில் விஜி, தாரணிப்பிரியா, வீட்டுப்புறா சக்தி, ஈரோடு கார்த்திக், லலிதா முரளி, கலாராணி, வடகரை வேலன், செந்தில் நாதன், ராமன் குட்டி, நிகழ்காலத்தில் சிவா, நந்தகோபால், பொன். கருணாநிதி, சுப்பையா வாத்தியார் (மன்னிக்கவும் இன்னும் மூன்று பதிவர்கள் பெயரை மறந்துவிட்டேன்) என பதிவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்க, பதிவர்கள் அறிமுகப் படலம் நிறைவேறி, முதலில் சந்திப்பவர்கள் ஆச்சர்யங்களில் திளைத்து, வழக்கம்போல் கலாய்த்துக்கொண்டிருக்க அரங்கு நிறைந்தது… விழா தொடங்கியது

மிக நேர்த்தியான விழாவிற்கு கூடுதல் பலம் சேர்த்தது நம் பதிவர்கள் ஆற்றிய உரை. எழுதுவது பலருக்கு எளிது, ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட கூட்டத்திற்கு முன்பு ஒலிவாங்கியில் பேச நிர்பந்திக்கும் போது பலரின் உயிரை ஒலிவாங்கி சுருட்டி இழுப்பது போல் தோன்றும். தமிழ்மணம் காசி அவர்களின் புத்தகம் குறித்த அறிமுகவுரை மிக நேர்த்தியாக தெளிவாக இருந்தது விழாவின் வெற்றிக்கு கனம் கூட்டியது. அடுத்து புத்தகம் குறித்து தங்கள் பார்வைகளை பகிர்ந்த வானம்பாடிகள் பாலா, வெயிலான், சஞ்சய் காந்தி மூவருமே வேறு வேறு கோணங்களில் புத்தகத்தில் இருக்கும் ஆழ்ந்த எழுத்துக்கான வெகுமதியான வார்த்தைகளை மிக அருமையாக அள்ளித் தெளித்தனர். குறிப்பாக வெயிலானின் தயாரிப்பு மிக அற்புதம்.

மேலும் விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் திரு.தங்க.விசுவநாதன், திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர் திரு. செல்வராஜ், திரு.மருதால அடிகளார், திரு.சுப்பிரமணி, திருமதி. இந்திராணி சுப்பிரமணியம் ஆகியோர் சிறிதும் தடம் பிசகாமல் புத்தகத்தில் உள்ளவற்றையொட்டியே பேசியது விழாவின் வெற்றிக்கு உத்திரவாதம் அளித்தது.

விழாவில் பதிவர் பழமைபேசி, அட்டைப் படங்களை அளித்த கருவாயன் (எ) சுரேஷ்பாபு ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மேடையை அலங்கரித்த அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான தினங்களில் நேற்றும் ஒன்று, இந்த இனிய விழாவிற்கு காரணமாய் இருந்த பழமைபேசி, ஆரூரன் மற்றும் கலந்து கொண்ட பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.

op27 

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...