சகாயம் குறித்த எழுத்தாளர் பெருமாள்முருகனின் “இருக்கிற இடம் தெரியாமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் காலத்தைக் கழிக்கும் சராசரி ஆட்சியர் அல்ல அவர்” என்ற வரிகளோடு தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நாமக்கல் மாவட்டத்தின் மிகச்சிறப்பானதொரு நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருந்த போதுதான் ஊடகங்களின் பார்வை சகாயம் அவர்கள் மேல் விழத்தொடங்கியது. அதன்பின்னரே அதுவரை அவர்கடந்து வந்த பாதையில் அவருடைய நேர்மையும், அதற்காக அவர் தாண்டி வந்த இடர்களும் தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் அவர் ஆட்சித்தலைவராக இருந்த காலத்தில் அரசு பள்ளிகள் மேல் செலுத்திய கவனம், சுற்றுச்சூழல் காக்க நட்ட பல லட்சம் மரக்கன்றுகள், விவசாயிகளை நோக்கி கிராமம் கிராமமாக ஒவ்வொரு இரவுகளில் தன் பரிவாரங்களோடு புயலாய் புறப்பட்டு நல்ல ஆட்சியை வழங்கிய விதம், நள்ளிரவுகளில் நெடுஞ்சாலைகள் மேற்கொண்ட சோதனைகள், கிராமங்களில் கணினி நிறுவி இணையத்தில் புகார்களைப் பெற்று உடனே தீர்வுகண்ட வேகம் என, இப்படித்தான் ஒரு மாவட்ட நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தார்.
கிராம நிர்வாக அதிகாரிகள் தாங்கள் பணிபுரியும் கிராம எல்லைக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும் என அவர் இட்ட கட்டளைக்கு, எதிர்ப்புத் தெரிவித்து ஒட்டுமொத்த கிராம நிர்வாக அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்ய, அதுகண்டு மக்கள் வெகுண்டெழுந்து கிராம நிர்வாக அதிகாரிகளை விரட்டியடித்த வரலாறும் உண்டு.
நேர்மை எப்போதும் ஆள்வோருக்கு பிடிப்பதில்லை என்பதற்கிணங்க ஆட்சித்தலைவர் பதவியிலிருந்து சகாயம் விலக்கப்பட்டு, சில நாட்கள் கழித்து புதிய திருப்பூர் மேம்பாட்டு கழக பணிக்கு அனுப்பப்பட்டார். நாமக்கல் மாவட்டம் அதுவரை காணாத ஒரு கொந்தளிப்பை மக்கள் மூலம் கண்டது, ஆனாலும் எல்லாக்கொந்தளிப்பு போல அதுவும் கரைந்து போனது கூடவே சகாயம் ஆற்றிவந்த மக்கள் சார் நற்பணிகளும் கரையத் தொடங்கியது.
காலங்கள் கரைந்ததில், இதுவரை இந்தியா காணாத புரட்சியாக தமிழகத் தேர்தல் ஆணையம் தேர்தலைச் செம்மையாக நடத்த புதிய புதிய யுக்திகளை வகுத்து வந்தநிலையில், தேர்தலை நேர்மையாக நடத்த சரிவராது என நினைத்த அதிகாரிகளை (மாநில காவல்துறைத் தலைவர் உட்பட) ஒரே இரவில் மாற்றியமைத்ததில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தூக்கப்பட்டார், மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் நியமிக்கப்பட்டார்.
திருமங்கலம் சூத்திரத்தை பயன்படுத்த நினைத்த மதுரையை மையம் கொண்ட அரசியல்வாதிகளுக்கு சகாயத்தின் நேர்மை சிம்ம சொப்பனமாக அமைந்தது. அதிர்ந்த ஆளும்கட்சி தேர்தல் ஆணையத்தை எதிரியாக பாவிக்கத் துவங்கியது, மக்கள் நேசிக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை ”நெருக்கடி நிலை” என பிரகடனப்படுத்தச் செய்தது. ”சகாயம் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று” பேசுகிறார் என பொய்யாக அலறியது. ”சகாயம் மிரட்டுகிறார்” என கீழே பணிபுரியும் அதிகாரியைவிட்டு தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கச் சொன்னது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
பாரபட்சமின்றி தனக்கு கிடைத்த வாய்ப்பை நேர்மையாக செயல்படுத்த நினைக்கும் ஒரு மிகச் சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவரை நாளொரு புகார் பொழுதொரு புலம்பல் என தங்கள் சொந்த ஊடகங்கள் மூலம் முடிந்தவரை தோற்கடிக்க முயற்சி செய்கிறது ஆளும்கட்சி!
இதுவரை சகாயம் குறித்த புகார்களை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் அவர்கள் தள்ளுபடி செய்திருக்கிறார். கூடுதலாக சகாயம் மீது பொய்ப் புகார் கூறிய தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் பணி இடைநீக்கம் செய்ததோடு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டிருக்கிறது.
இதோ இப்போது மதுரையில் இருக்கும் பல பொதுநல அமைப்புகள் ஒட்டுமொத்தமாக சகாயத்தின் நேர்மையான செயல்பாடுகளை ஆதரித்து குரல் உயர்த்த ஆரம்பித்திருக்கின்றன.
எந்தக்கட்சியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், நல்ல வேட்பாளர் என மக்கள் யாரை நினைக்கிறார்களோ அவர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கட்டும், தகுதியான நபர் வெற்றியடையட்டும்.
ஆனால்
எதிர்க்கட்சிகளைவிட தங்களுக்கு இடையூறாக இருக்கும் நேர்மையான ஆட்சியர் சகாயம் அவர்களை எதிரியாக நினைக்கும் இந்தத் தேர்தலில்…….. தேர்தல் என்பதை விட இந்தப் போரில் சகாயம் வெல்ல வேண்டும்.
நேர்மைக்கு மரியாதை செலுத்த, நேர்மையின் கரங்களை வலுப்படுத்த நான் சகாயம் அவர்களை ஆதரிக்கிறேன்…
-0-
-0-
