Oct 11, 2009

குழந்தைகள் குரோட்டன்ஸ் செடிகளா?

என் மகள் படிக்கும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு. (ஒன்னாப்பு தானுங்க படிக்குது) கடந்த மாதம் காலண்டுத் தேர்வுகள் முடிந்த பின், அதில் பெற்ற மதிப்பெண்களை வைத்து பிள்ளைகளின் தரத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வு.

முதலில் வகுப்பாசிரியையோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு, அடுத்து சோசியல் பாடம் எடுக்கும் ஆசிரியை சந்திக்கச் சென்றபோது, அந்த வகுப்பில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சரி மற்ற ஆசிரியைகளைப் பார்த்து விட்டு பின்னர் அவரைச் சந்திக்கலாம் என நினைத்து, மற்ற ஆசிரியைகளிடம் சில சில நிமிடங்களைச் செலவழித்து விட்டு கடைசியாக வந்த போதும், அந்த அறை கூட்டமாகவே இருந்தது.

சரி வேறு வழியில்லையென்று கூட்டத்தோடு நின்று கவனிக்கும் போது தெரிந்தது. கிட்டத் தட்ட எல்லாப் பெற்றோர்களும்
* எப்பா பார்த்தாலும் விளையாட்டு
* அடங்காத குறும்பு
* வீட்டிலே படிக்கிறதேயில்லை
* சீக்கிரம் தூங்கறதில்லை
என அந்த ஆசிரியையைச் சுற்றி நின்று கொண்டு ஒவ்வொருவராக புகார் சொல்லிக் கொண்டேயிருந்தனர்.

என் மகள் என் கையை இறுகப் பிடித்துக் கொண்டு, அடிக்கண்ணால் என்னைப் குறுகுறுப்பாக பார்த்தது.

என் மகள் குறும்பு என்ற புகார் எப்போது என்னிடம் இருந்ததில்லை. நாற்காலியில் நான் உட்கார்ந்து இருக்கும் போது, பெரும்பாலும் என் கால்களின் மேலேயேதான் நின்று கொண்டிருக்கும், சில சமயம் பக்கவாட்டில் ஏறி கழுத்து மேல் உட்கார்ந்து சரிந்து சறுக்கல் விளையாடுவதும் நடக்கும்.

எல்லோருக்கும் ஒரு புன்னைகையோடு அந்த ஆசிரியை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார். “இதுகெல்லாம் குழந்தைங்க, குழந்தைங்னா விளையாடத்தானே செய்யும். தயவுசெய்து குறும்பு செய்யும் குழந்தையை மிரட்டி மிரட்டி அடக்கி வைக்காதீங்க. நீங்க வீட்டில் அதைத் தொடாதே, அங்க போகாதேனு தொடர்ந்து மிரட்டினா, எதற்கெடுத்தாலும் அந்த குழந்தைக்கு பயம் வர ஆரம்பிக்கும் அல்லது அங்கே அடக்கி வைத்ததெல்லாம் பள்ளியில் வந்து வெளிப்படுத்த முயலும். நான் 40 நிமிட வகுப்பில் 25 நிமிடங்களுக்கு மேல் பாடம் நடத்துவதில்லை. மீதி 15 நிமிடங்கள் கட்டாயம் கதை பேசுவேன்” என்றார்.

இது போல் தொடர்ந்து நிறைய பகிர்ந்து கொண்டேயிருந்தார்...

மனது விட்டேத்தியாக இருந்தது. ‘ஏன் குழந்தைகள் பற்றி பெற்றோரிடம் இத்தனை புலம்பல்கள்’

*சமீபகாலமாக குழந்தைகளை அதிகமாக பொத்திப் பொத்தி வளர்க்கிறோமோ?
அதிக தூரம் நடக்க பழக்குவதில்லை
*வீட்டு வாசலிலிருந்து வாகனத்தில் அழைத்துச் செல்ல வசதி செய்து கொடுத்திருக்கிறோம்
*வீட்டிற்கு வெளியே விளையாடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை அல்லது அனுமதிப்பதில்லை
*நமக்கு சிரமம் கொடுக்கும் நேரங்களில் ஒன்று மிரட்டி தூங்க வைக்கிறோம் அல்லது தொலைக்காட்சி பார் என ஒதுக்கி வைக்கிறோம்.

நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட குடும்பங்களில் குழந்தைகளை அழகாகவும், சொகுசாகவும் குரோட்டன்ஸ் செடி போல் வளர்க்க ஆரம்பித்து விட்டோமோ என அச்சம் வருகிறது.

-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

Oct 10, 2009

ஏமாற இந்தக் காரணம் போதும்



ரண்டு நாட்களாய் எங்கள்
வீட்டு தொலைக்காட்சிகளின்
முக்கியச் செய்திகளில் உங்கள்
பெயர்கள் மின்னியாயிற்று...

கொளுத்தும் வெயில் அறியா
குளிர்காரில் வந்திறங்கி
கசங்காத உடையோடு
கட்சிக்காரர்கள் புடைசூழ...

கேமாரக்களின் ஒளியில் நனைந்து
சம்பிரதாயமாக உதடுகளைப்
பிரித்து ஓரிரு வார்த்தைகளை
உதிர்த்து விட்டு...

த்துப் பேர் கொண்ட படை
பந்தாவாகப் புறப்பட்டுவிட்டது
ஈழத்துக்கு உண்மையாய் குரல் கொடுத்தவன்
எவன் ஒருவனும் இல்லாமல்...

ரவேற்க கொஞ்சம் கசங்கிய
வண்ணக் கம்பளத்தோடு
காத்திருப்பான் காடையன்
காயாத இரத்தக் கறையோடு

பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...

வாடி வதங்கிப்போய் வாழ்விழந்த
மனிதக் கூடுகளோடு கட்டாயம்
புகைப்படம் பிடித்து வாருங்கள்
பயணக்கட்டுரை எழுத வேண்டும்...

ரும்போதாவது கண்டிப்பாக
முகத்தைக் கொஞ்சம் வாட்டமாக
வைத்திருங்கள்... இன்னும் ஒருமுறை
ஏமாற இந்தக் காரணம் போதும்

Oct 9, 2009

பட்டியலில் ஒரு வரியாக


இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற போது நண்பரின் தந்தை அடிபட்டு அவசரப் பிரிவில் கவலைக்கிடமான முறையில் இருப்பதாக தகவல். அது நகரத்தின் மையத்தில் இருக்கும் பிரபல மருத்துவமனை. நண்பரும், அவரைச் சார்ந்தவர்களும் கவலை தோய்ந்த முகத்தோடு சோர்ந்து போய் அமர்ந்திருக்கின்றனர்.



மருத்துவமனை பரபரப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளிகளில் உயிரை அறுக்கும் ஓசையோடு ஆம்புலன்ஸ் வண்டிகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலும் விபத்தில் அடிபட்டவர்கள்தான் கொண்டு வரப்படுகின்றனர். விபத்தில் சிக்கி வருபவர்களில் பெரும்பாலும் தலையில் அடிபட்டுத்தான் வருகின்றனர். அவர்கள் வரும்போது உடன் வரும் நண்பர்களின் பதறும் முகமும், உறவினர்களின் கண்களில் தெரியும் கலக்கமும் நமக்கும் தொற்றிக் கொள்கிறது.


விபத்துகளில் அதிகமாய் சிக்குபவர்கள் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளாகத்தான் இருக்கின்றனர். இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் பெரிதும் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். விபத்தில் சிக்கியவர் குடும்பத்தின் முக்கிய நபராக இருக்கும் பட்சத்தில், அவசரப் பிரிவின் முன்பக்கம் அவர்கள் குடும்பத்தினர் தவிக்கும் தவிப்பையும், எதிர்காலத்தை எப்படி சந்திக்கப் போகிறோம் என்னும் வெளுத்த முகத்தையும் பார்க்கும் போது, வார்த்தைகளில் வடிக்க முடியாத ஒரு சோகம் நம் மனதைக் கவ்விக்கொள்ளும். அந்த சோகத்தை தாங்கி நிற்கும் மனிதர்களிடம் என்ன சொல்லி ஆறுதல் கூறுவது என்பது இன்னும் கடினமான ஒன்று.

எந்தச் சமாதானமும், ஆறுதலும் அவர்களைத் தேற்றாது எனத் தெரிந்தாலும், எதையாவது பகிர்ந்து கொண்டு ஒரு அடர் மௌனத்தோடு புழங்குவது வேதனையான ஒரு நிகழ்வுதான். ஒவ்வொரு முறையும் விபத்து நிகழ்ந்த பின் அது குறித்து, யாராவது ஒருவர் சிலாகித்து, அது எப்படி நடந்தது அல்லது நடந்திருக்கும் என்று விவரித்துக் கொண்டிருப்பது சகிக்க முடியாத கொடூரம்.

பெரும்பாலும் விபத்து வேகத்தினாலோ, கவனக் குறைவினாலோ அல்லது மது போதையினாலோதான் நடக்கிறது. இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் போது அதுவும் தலையில் அடிபடும்போது, அது மரணத்தை நோக்கி எளிதாக நகர்த்திச் செல்கிறது.

மற்றவர்களுக்கு நடக்கும் விபத்துகள் முதலில் ஒரு அதிர்ச்சியான சம்பவமாக தொடங்கி, பின் கடினமான சூழலாக மாறி, கடைசியாக பட்டியலில் ஒரு வரியாக படிந்து விடுகிறது. ஆனால் அந்தக் குடும்பத்திற்கு... வாழ்நாள் முழுதும் ஆற்ற முடியாத வலியாக, மறக்க முடியாத வடுவாக வாழ்ந்து கொண்டேயிருக்கிறது.

பொறுமையும், கவனமும் உயிர்காக்கும் அதைவிட பல இடங்களில் நாம் விரும்பாத ஹெல்மெட் எனப்படும் தலைக்கவசம் கட்டாயம் உயிர்காக்கும்.


பொறுப்பி:
வெறும் இரண்டு மைல் தொலைவு தான் அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் என்று என்னிடம் இருக்கும் தலைக்கவசத்தை அணிவதில்லை. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் விழுந்து உதட்டில் பலத்த அடி வாங்கினேன். ஆனாலும் திரும்பவும் அணிவதில்லை. நகரத்தை விட்டு தாண்டி இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிகிறேன்.


-------------------------------------------------------------------------


இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

Oct 6, 2009

கொள்ளி - கொஞ்சம் தள்ளி நில்லு


-------------------------------------------------------------------------

இயற்கையாய் வரும் மரணம் வரம். யாரும் எதிர்பாராத கணத்தில் இயற்கைச் சீற்றத்தால் வரும் மரணம் தடுக்க, தவிர்க்க இயலாத ஒன்று. விபத்தில் வரும் மரணத்தில் கூட இன்னொருவனின் தவறு இருக்கிறது.

அன்றெல்லாம் எங்கேயோ, புற்று நோயால் இறந்து போய் விட்டாராம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. இன்று... நண்பன் இறந்தான், நண்பனின் நண்பன் இறந்தான், ஒன்று விட்ட சித்தப்பாவின் நெருங்கிய உறவில் இறந்தார் என்பது வாடிக்கை...

தனக்குத் தானே கொள்ளி வைத்துக் கொண்டு செத்துப் போவதில் என்னதான் சுகமோ?

சராசரியாக நூறில் ஒருவருக்கு புற்று நோய் தாக்கி வருகிறது என்பது, அதிர்ச்சிகரமான தகவல்.

கடந்த ஐந்து வருடத்தில் இரண்டு நண்பர்களை புற்று நோய்க்குப் பலி கொடுத்திருக்கிறேன். ஒருவருக்கு சிறுநீரகத்தில் புற்று, இன்னொருவருக்கு தொண்டையில் புற்று (தொடர்ச்சியாக இவர் பான்பராக்-ஐ உட்கொண்டதுதான் காரணம்). இருவருக்குமே வயது முப்பதுகளின் சமீபத்தில். ஒருவருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை, இன்னொருவருக்கு திருமணமாகி ஆறு மாதம்.

இருவருமே, புற்று நோய் என்று தெரிந்த பின் தங்கள் மரணம் வரை தவித்த தவிப்பும், மரணத்தை தவிர்க்க போராடிய போராட்டமும், தவிர்க்க முடியாது என்றான பின் தள்ளிப்போட பதை பதைத்ததும், ஹீமோ தெரபி சிகிச்சை எடுத்து உடல் உபாதையில் பரிதவித்ததும் என்றும் மறக்கவே முடியாத துன்பம்.

ஒரு கட்டத்திற்கு மேல், வலியின் கொடுமை தாளாமல், இந்த விநாடியே மரணம் வந்து விடக்கூடாதா என்று கண்ணீரோடு கதறியதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

“சிகரெட் பிடிக்காதவனும், பாக்கு போடாதவனும் செத்துப்போகிறான் தானே” என்ற சப்பை வாதத்திற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால் புகை, பாக்கு பழக்கம் உள்ளவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு பல்லாயிரம் மடங்கு அதிகம்.

வாழ்க்கை என்பது ஒருமுறை கிடைத்திருக்கும் அதிசயம். மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. அதில் பிதுங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் வலி சாதாரணமானது இல்லை. நலமாக இருக்கும் வரை அந்த வலி உணரப்படுவதில்லை. ஒருமுறை கொடிய நோய் தாக்கினால், மீள்வது மிகக் கடினம்.


நீங்கள் புகை பிடிப்பவரானால் அடுத்து பிடிக்க எடுக்கும் முதல் சிகரெட்டை உடைத்து எறியுங்கள். உங்கள் நண்பர் புகை பிடிப்பவரானால், அவர் அடுத்து பிடிக்க எடுக்கும் சிகரெட்டை பிடுங்கி உடைத்து எறியுங்கள்...

-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

Oct 5, 2009

கலைந்துபோன கடுதாசி

கடிதம் எழுதி எத்தனை நாள் இருக்கும்?

.... ம்ஹூம்....... சத்தியமாய் மறந்துவிட்டது. ஏன் இப்போதெல்லாம் கடிதமே எழுதவே முடிவதில்லை.....

அது ஒரு காலம்......பையன் படித்து பெரிய ஆளா வருவான்னு நம்பிக்கையோடு (மூட நம்பிக்கைக்கு நானெப்படி பொறுப்பாக முடியும்) எங்கப்பா என்னை உடுமலைப்பேட்டை அருகே கரட்டு மடத்தில் உள்ள காந்தி கலா நிலையம் ஹாஸ்டலில் தங்க வைச்சு படிக்க வைச்சாரு..... அப்போவெல்லாம் இப்போ மாதிரி செல் போன் கிடையாது, ஒரே ஒரு கருப்பு போன் வார்டன் ரூம் ஜன்னல் பக்கம் இருக்கும்...... நெருங்கின சொந்தத்திலே யாராவது செத்துட்டா மட்டும் அந்த போனுக்கு தகவல் வரும், அதுவும் பியூன் தான் சொல்லுவார்.....

மற்றபடி பதினைந்து நாளுக்கு ஒருமுறைதான் அப்பாவிடம் இருந்து கடிதம் வரும். அன்புள்ள மகனுக்கு அப்பா எழுவது என்று ஆரம்பிக்கும்..... என்ன செய்வது நமக்கெல்லாம் கடிதம் எழுதுவதற்கென்றே "நலம் நலம் அறிய ஆவல்" என்ற பார்முலா உண்டு...... அதுவும் அப்படிதான் ஆரம்பித்து, வீட்டில் உள்ளவர்கள், பக்கத்து வீட்டுக்காரர், கொஞ்சம் தூரத்து உறவு ஆகியோர் நலம், மழை பெய்த விபரம், தோட்டத்தில் நடந்த அறுவடை, விதைப்பு பற்றி கொட்டை எழுத்தில் கடிதம் முழுவதும் வரிகளாக நிறைந்து இருக்கும்.... கடைசியாக "நன்றாக படிக்கவும், உடம்பை பார்த்துக்கொள்ளவும்" போல் இருக்கும்.....

சில‌ச‌ம‌ய‌ம் ஹாஸ்ட‌ல் வார்ட‌ன் பிரித்து ப‌டிக்கும் ஆப‌த்தும் உண்டு. என‌வே ச‌ம்பிராத‌ய‌ வ‌ரிக‌ள் தான் அதிக‌ம் இருக்கும். பெரும்பாலும் எல்லா கடிதங்களுமே மேலே சொன்ன மாதிரி தான் இருக்கும்..... ஆனாலும் ஒவ்வொரு கடிதமும் இனம் புரியாத சிலிர்ப்பினை மனதில் உருவாக்கியது சத்தியம்..... கடிதம் இன்றைக்கு வந்து விடாதா என்று சில நேரம் ஏக்கமாக இருக்கும்.

வகுப்பு முடிந்து விடுதிக்கு வரும்போது முன்பக்க பலகையில் அன்று வந்த கடிதங்கள் சொருகப்பட்டிருக்கும், போகிற போக்கில் "டேய் உனக்கு லட்டர்" என்ற குரல் கேட்கும்..... உடனே மனசு மத்தாப்பு போல பூக்கும்..... நீல நிற இன்லேன்ட் லட்டர் தபால் பலகையில் செருகப்பட்டிருக்கும்... கடிதத்தை எடுக்கும் போதே மனசு சிலிர்க்கும்.... முகவரி பகுதியில் அப்பாவின் கையெழுத்து அழுத்தமாக, அடர்த்தியாக தெரியும்..... மனசு பட்டாம் பூச்சியாய் குதூகலிக்கும்....

ஒட்டிய பகுதியை விரல் வேகமாய் பிரிக்கும்....ஒரே மூச்சில் ப‌டித்தால்தான் நிம்ம‌தி. ஆனால் வ‌ரிக‌ள் வ‌ழ‌க்க‌மாகவே இருக்கும்..... லேசாக‌ ச‌ப்பென்றிருக்கும்... என்ன‌ செய்வ‌து... நம்ம‌ அப்பா என்ன‌ ஜ‌வ‌ஹ‌ர்லால் நேருவா..... க‌டித‌ம் எழுதுவ‌தில் நிபுண‌த்துவ‌ம் காண்பிக்க‌.....ஆனாலும் முறையாக வெளிப்ப‌டுத்த‌த் தெரியாவிட்டாலும், ஒவ்வொரு வார்த்தையும் அன்பையும், அக்க‌றையையும் அற்புத‌மாக‌ காட்டிக்கொடுக்கும்...உட‌னே பதிலுக்கு ஒரு கடிதம் எழுதாவிட்டால் மண்டை வெடித்துவிடும்.....(ஏங்க இதுவரைக்கும் யாருக்காவது மண்டை வெடித்திருக்கிறதா?). ஹாஸ்ட‌ல் ரூமில் க‌டித‌ம் எழுதுவ‌தே பெரிய‌ த‌வ‌மாக‌ ந‌ட‌க்கும். பெரும்பாலும் சுவ‌ர் ப‌க்க‌ம் பார்த்து உட்கார்ந்துதான் எழுதுவ‌து வ‌ழ‌க்கம். க‌டித‌ம் எழுதும் வ‌ரை அப்பா அம்மாவுட‌ன் பேசுவ‌து போன்றே ஒரு உண‌ர்வு ம‌ன‌து முழுதும் ஆட்டிப்ப‌டைக்கும்.

க‌ச‌ங்கி கிழியும் வ‌ரை ச‌ட்டைப்பைக்குளேயே க‌டித‌ம் கிட‌க்கும். இர‌ண்டு நாட்க‌ளில் க‌டித‌த்தின் பாதிப்பு பெரிதும் குறையும்....ஒவ்வொரு 15 நாள்க‌ளுக்கொரு முறையும் க‌டித‌ம் வ‌ருவ‌தும், போவ‌தும் வ‌ழ‌க்க‌மாய் ந‌ட‌க்கும்....

கால‌ம் ந‌க‌ர‌ ந‌க‌ர‌ நானும் வ‌ள‌ர்ந்தேன்.... ஹாஸ்டல் லைப் முடிந்தது. க‌டித‌ம் தேய்ந்த‌து..... டெலிபோன் வ‌ந்த‌து, கேபிள் டிவி வந்தது...... கடைசியாய் செல்போன் வ‌ந்த‌து..... காலப்போக்கில் க‌டித‌த்தில் ஒளிந்திருந்த‌ க‌ண்ணுக்கு தெரியாத‌ பாச‌மும் தேய்ந்த‌து......

................................................ நானும் எப்ப‌டியாவ‌து ஒரு க‌டித‌ம் எழுத‌வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம்.... அப்பா மிஸ்டு கால் கொடுத்து விடுகிறார்.......
குறிப்பு: மீள் இடுகை
-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

Oct 4, 2009

பெங்களூரு மாடுகளும், அழுக்குப் பாலும்

எனக்கு பெரு நகரங்கள் அவ்வளவாக பழக்கமில்லை. பெங்களூரு மட்டும் அடிக்கடி செல்லும் வழக்கம் இருப்பதால் காட்டன் பேட்டை பகுதியில் இருக்கும் நெரிசல் கொஞ்சம் பழகிப்போயிருந்தது...

அன்று காலையிலிருந்தே மழை சிணுங்கிக் கொண்டிருந்தது. அதுவே நம் ஊராக இருந்தால் சிணுங்கும் மழைக்கு ஊரே அடங்கிப் போயிருக்கும், ஆனால் அங்கு இயல்பு வாழ்க்கை சிறிதும் பாதிக்கப்படவில்லை. வேகமாய் மழை துளிர்க்கும் நேரங்களில் மட்டும் மக்கள் நடமாட்டம் சிறிது குறையும், மழை குறைந்தால் மீண்டும் வீதிகளில் நெரிசல் அதிகரிக்கும், இது போல் காலை முதல் மாலை வரை இயல்பாக மனிதர்கள் புழங்கிக் கொண்டிருந்தனர்.

தொழில் நிமித்தமாகப் போன நான், இரவு வரை இருக்க வேண்டிய காரணத்தால் மழையையும், மனிதர்களின் நெரிசலையும் மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தீன். மழையிலும் நெரிசலிலும் நிறைய சுவாரஸ்யங்கள் நடந்து கொண்டேயிருந்தது.

அவ்வளவு நெரிசலிலும் இரண்டு, மூன்று மாடுகள் வீதியில் முன்னும் பின்னும் வந்து போய்கொண்டிருந்தன. அது வட இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி, சிலர் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்கும் மாட்டின் பின் பக்கத்தை தொட்டுக் கும்பிடுவதும், அவர்கள் தொடும் போது மாடு வாலால் அடிப்பது சகஜமாக நடந்து கொண்டிருந்தது.

மாலை நான்கு மணியிருக்கும், சுமார் பதினைந்து வயதிருக்கும் ஒரு சிறுவன் பெரிய இரும்பு வாளியோடு வந்தான், நடு வீதியில் ஒரு மாட்டின் காலடியில் உட்கார்ந்தான், மாட்டிக் காம்புகளை லேசாக கசக்கினான். மாடு அசால்டாக நின்றது (எனக்கு சின்ன வயதில் பால் கறக்கும் மாட்டின் காம்புகளைத் தொட்டு உதை வாங்கியது நினைவிற்கு வந்தது)

மழை பெய்து அந்த இடம் சேறும் சகதியுமாக இருந்தது. இரண்டு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் அடுத்தடுத்து வேகமாக வருவதும், போவதுமாக இருந்தன. அடுத்த சில நிமிடங்களில் அந்த சிறுவன், இரும்பு வாளியில் “சர்சர்” என பாலைக் கறக்க ஆரம்பித்தான். கவனிக்க வேண்டிய விசயம் அவன் மாட்டின் காம்புகளை கழுவவேயில்லை. வேகமாக செல்லும் வாகனம் சிதறியடித்த சேற்றுத் துளிகளும் அந்த வாளியில் தொடர்ந்து விழுந்து கொண்டேயிருந்தது. அதைப் பற்றி அந்தச் சிறுவன் துளியும் கவலைப் படுவதாக தெரியவில்லை. மாடும் நடு வீதியில் பாலைத் தருவதும், பசியில் போஸ்டரைத் தின்பதும், ஓராமாய் கிடக்கும் குப்பையில் மீந்து போன காய்கறிகளைத் தேடுவதும் என “இதெல்லாம் சகஜம் பாஸ்” என்பது போல் சாவகாசமாக நின்று பால் கொடுத்துக் கொண்டிருந்தது.

கிராமத்தில் பச்சைப்புல்லும், வைக்கோலும் தின்று, வாகன ஓசைக்கு மிரளும் தோட்டத்து மாடுகளும், காம்புகளைச் சுத்தமாகக் கழுவி, மிகச் சுத்தமான பாத்திரத்தில் பால் கறக்கும் விவசாயிகளும் மனதிற்குள் கிண்டலாக சிரிப்பதுபோல் ஒரு விநாடி தோன்றியது.



-------------------------------------------------------------------------

இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

Oct 2, 2009

சிதையும் உண்மைகள்

ஒரு வருடத்திற்கு முன்பு நானும் என் மகளும் முன்னிரவு நேரத்தில் காரில் சென்று கொண்டிருந்தோம், எங்களுக்குப் பின்னால் ஒரு வாகனத்தின் சைரன் ஒலி கேட்டது,உடனே என் மகள் "அப்பா அது ஆம்புலன்சா" என கேட்டாள், பின்னால் திரும்பி பார்த்தபோது ஒரு காவல் துறை வாகனமும், ஒரு அமைச்சரின் வாகனமும் வந்தன. நான் "இல்லை அது போலீஸ் வண்டி" என்றேன், உடனே அவள் "முதல் வண்டி போலீஸ், அதற்கு பின்னால் வருவது யார்" என்றாள், அப்போது அவள் வயது 5, நான் அமைச்சரின் வாகனம் என்று சொன்னாள் புரியுமா எனும் சந்தேகத்தோடு அவளிடம் "அது மினிஸ்டர் கார், மினிஸ்டர் வந்தால் போலீசும் கூட வரும்" என்று சொன்னேன், அடுத்த விநாடி அவள் "மினிஸ்டர்னா கெட்டய்விங்க, கொலகாரய்ங்க" என்று சொன்னபோது அதிர்ச்சியின் உச்சத்தில் சட்டென வாகனத்தை நிறுத்தினேன். அதிர்ச்சி மிகுந்த குரலில் "ஏய்.. என்ன குட்டி சொல்றே, யார் உனக்கு இப்படி சொன்னது, உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்" என்றேன், "ம்ம் நான் டிவியில் பார்த்தேன்" என்றாள், "அப்படியெல்லாம் இல்லை, அப்படி சொல்லக்கூடாது" என்ற சொத்தை சமாதானத்தோடு, இறுகிய மனதோடு வாகனத்தை கிளப்பினேன்....


சமீபத்தில் ஒரு பெண் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சமீப காலமாக குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது பற்றி நிறைய கற்றுக்கொடுத்து வருகிறார். குழந்தைகளின் நுண்ணறிவு பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மேற்குறிப்பிட்ட நிகழ்வை கூறினேன். அப்போது அவர் கூறியதை கேட்ட பொழுது இன்னும் அதிர்ச்சியாய் இருந்தது...சில வருடங்களுக்கு முன்பு ஒரு அரசியல் தலைவர் பற்றி தன் மகனிடம் சொல்லும் போது, அவர் நிறைய ஊழல் செய்கிறார், மக்கள் மேல் கவனம் இல்லை என்று எதிர்மறையான உண்மைகளை சொல்லியிருக்கிறார். சில நாட்கள் கழித்து அவர் மகன் தொலைக்காட்சி பார்க்கும்பொழுது அந்த அரசியல் தலைவரின் கால்களில், அதே கட்சியைச் சார்ந்த பெரிய, பெரிய தலைவர்கள் கடவுளை போல் சுற்றி வந்து காலில் விழுந்து கும்பிடுவதை பார்த்திருக்கிறான். அந்த நிகழ்வின் உச்சகட்டமாக அவர்களின் உறவினரும், அந்த பகுதியைச் சார்ந்த ஒரு அமைச்சர் ஒருவர் அந்த தலைவரின் காலில் விழுவதை கண்டு அதிர்ச்சியோடு தன் அம்மாவை பார்த்து ஒரு கேள்வி கேட்டிருக்கிறான்... "ஏம்மா.... நீ அந்த தலைவர் மிக மோசம் என்றாய், ஆனால் இத்தனை பேர் அவர் கால்களில் விழுந்து வணங்குகிறார்கள், அதுவும் நம்ம சொந்தக்கார தாத்தா நல்லவர்தானே, அவரும் கூட காலில் விழுந்து கும்பிடும் போது, நீ சொன்ன மாதிரி அந்த தலைவர் எப்படி மோசமானவராக இருக்க முடியும். நீதான் தப்பு தப்பாக எனக்கு சொல்லிக்கொடுக்கிறாய்" என்று வருத்தப்பட்டிருக்கிறான். என்ன சொல்வதென்று தெரியாமல் இவரும் விழித்திருக்கிறார்.


குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க முனையும் போது பெற்றவர்களுக்கு விழிபிதுங்குகிறது. புறக்கூறுகள் வேகமாக, வித்தியாசமாக நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றன. சில நேரம் சரியாக, பல நேரம் தவறாக.... குழந்தைகள் கேட்கும் அசாத்தியமான கேள்விகள் பல நேரம் அடி வயிற்றில் பயத்தை கிளப்புகின்றன. சில நேரம் ஆச்சரியத்தை கிளப்புகின்றன.


பல நேரம் நாம் சொல்லும் உண்மை அவர்களுக்கு பொய்யாக தெரிகிறது, அவர்கள் சொல்லும் உண்மை நமக்கு பொய்யாக தெரிகிறது.




குறிப்பு: மீள் இடுகை


-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...