வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து வவுனியா செல்லும் 87ம் எண் பேருந்து புறப்பட்டு கொழும்பு வீதிகளைக் கடந்தது. எப்படியும் ஏழு மணி நேரப் பயணத்தை, நெரிசலோடு அனுபவிக்க வேண்டும் என மனதை பதப்படுத்திக்கொண்டேன். கொழும்பு வீதிகளில் மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம், எல்லாப் பலகைகளில் தமிழ் எழுத்துகள் அழகாய் இருந்து கொண்டிருக்கின்றன. நிமிடங்கள் கரையக்கரைய பேருந்தில் மனிதர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது, சிலாபம், புத்தளம் என நேரமும், பேருந்தின் வேகமும் சாலைகளைத் தின்று, ஊர்களை குடித்துக்கடந்து கொண்டிருந்தது. புத்தளத்தில் பேருந்து கொள்ளாத கூட்டம் பிதுங்கி வழியத் தொடங்கியது. புத்தளத்திலிருந்து அனுராதபுரம் வரை பெரும் தொகையிலான இடங்கள் காடுகளாகவே, பசுமை நிறைந்த பகுதியாகவே இருந்தது. அனுராதபுரம் கடக்கும் போது இருள் கவ்வத் தொடங்கியது. அனுராதபுரத்தை விட்டு வவுனியா நோக்கி பேருந்து வேகம் கொள்ளத் துவங்கிய போது, இருள் துகள்களாய் படியத் தொடங்கியது.
சிங்கள வாசனை முழுதும் அகன்று தமிழ் மணம் வீசும் மண்ணுக்குள் நுழைகிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் குதூகலமாய் இருந்தாலும், அடிபட்டு துவண்டு கிடக்கும் பூமிக்கு நெருங்குவதை நினைக்கும் போது மனது முழுதும் இறுக்கம் பிணைந்து கிடந்தது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்று முறையே வவுனியா என்ற பெயர்ப்பலகை வரவேற்றது.
நல்ல இருட்டு சூழ்ந்து கிடந்தது. வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்த நண்பர் தயாராக இருந்தார். ஒல்லியான உருவங்களில் நகர் முழுதும் இலங்கைப் போலீசார் இருவர் இருவராக நின்று கொண்டிருந்தனர். குறிப்பிட்ட இடைவெளியில் சாலையில் செல்லும் வாகனங்களை ஏனோ நிறுத்தி நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தனர். காவலர்களின் கண்களில் துளியும் சிநேகம் இருப்பதாகத் தெரியவில்லை. என்னை அழைத்துச் சென்ற நண்பரையும் நிறுத்தி விசாரித்தனர். ஏதோ சிங்களத்தில் வாக்குவாதம் நடந்தது. ஆச்சரியமாக இருந்தது, நண்பர் அந்த காவலர்களிடம் சிறிதும் பயம் இல்லாமல் விவாதித்தது.
அடுத்த நாள் காலை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை, செல்வதாகத் திட்டம். வடக்குப் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன், ஆனையிறவு, யாழ்ப்பாணம் பகுதிகளுக்குச் செல்ல இலங்கை பாதுகாப்புத் துறையினரடிமிருந்து அனுமதிக் கடிதம் பெறவேண்டும் என்பதால், என்னுடைய கடவுச்சீட்டின் பிரதியை கொழும்பு நண்பரிடம் கொடுத்துவிட்டு, அடுத்த நாள் அனுமதிக் கடிதம் கிடைத்தவுடன் மின் மடலில் அனுப்ப வேண்டியிருந்தேன்.
இலங்கையில் ’போயா’ தினத்திற்காக பொதுவிடுமுறை நாள் என்பதால், அனுமதிக் கடிதம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது என்று நண்பர் சொல்ல, பெருத்த ஏமாற்றமாக இருந்தது. சரி சென்று பார்ப்போம், சோதனைச் சாவடியில் அனுமதி கிடைத்தால் செல்வோம் என புறப்பட்டோம். வாகனம் வவுனியாவைத் தாண்டி ஏ-9 வீதியில் வாகனம் விரையத் துவங்கியது. தாண்டிகுளம் தாண்டும் வரை அவ்வளவாக இராணுவம் கண்ணில் படவில்லை. சாலைக்குப் பக்கவாட்டில் புகையிரதத் தடமும் உடன் பயணித்து வருகிறது. ஓமந்தை பகுதிக்குள் நுழைந்ததிலிருந்து சுமார் முந்நூரு அடிக்கு ஒரு குடில் என ஏ-9 வீதி மற்றும் புகையிரத தடம் ஓரம் இராணுவம் அமைத்திருக்கிறது. இரண்டு பக்கமும் வயல் வெளிகள் வெறும் புற்கள் மூடி அகலமாகக் கிடக்கின்றது. ஒவ்வொரு இராணுவக் குடில்களின் முன் புறத்திலும் தவறாது ஒரு துப்பாக்கி சாலையை நோக்கியும், புகையிரதம் செல்லாத வெற்றுத்தடத்தை நோக்கியும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது, ஒவ்வொரு குடிலுக்குள்ளும் இரண்டு இராணுவ வீரர்களாவது தென்பட்டனர். சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் வாகனங்கள் விரைந்து கொண்டிருக்கின்றன. முன் செல்லும் வாகனத்தை வேகத்தோடு ஒதுங்கி தாண்டிச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாம்.
துப்பாக்கிக் குடில்களைத் தாண்டி ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தால் எங்கள் வாகனம் ஓரம் கட்டப்பட்டது. நண்பரின் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டது, என் இந்திய கடவுச்சீட்டை வாங்கிப்பார்க்கும் போது, அலட்சியமான புன்னகை அந்த இராணுவ அதிகாரியின் இதழோரம் வழிந்தது. பாதுகாப்புத் துறையின் அனுமதிக் கடிதம் இல்லாமல் அனுமதிக்க முடியாது என்று திருப்பியனுப்பப் பட்டோம். இந்தியன் என்றதையறிந்த அந்த இராணுவத்தானின் இதழோரம் வழிந்த அலட்சியப் புன்னகை மனதில் ஆழப் பதிந்து குடைந்துகொண்டேயிருந்தது.
தமிழர்கள் யாரைச் சந்தித்தாலும் வரவேற்று உபசரிப்பதில் அன்பை அள்ளித் தெளிப்பதை உணரமுடிந்தது. சந்தித்தவுடன் தவறாமல் கேட்கும் முதல் கேள்வி, இலங்கை எப்படியிருக்கிறது, உங்களுக்கு பிடித்திருக்கிறதா. பெரிதும் போர் குறித்து பேசுவதை ஒரு வகையாய் தவிர்க்கவே விரும்புகின்றனர். நீண்ட நேரம் பேசும் போது, கொஞ்சம் கொஞ்சமாக போர் குறித்த செய்திகளை ஒரு வித விரக்தியோடு பகிர்ந்து கொள்ள முன் வருகின்றனர். தோல்வி மிகப் பெரிய அயர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஊடகங்களின் துரோகத்தனத்தை, தமிழகத்தின் சில அரசியல்வாதிகளின் நாடகத்தனத்தை குறித்து மிகக் கடுமையாக வேதனையோடு பேசுகின்றனர்.
விடுமுறை தினமாதலால் பிறிதொரு இடத்தில் ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்குச் சென்று கொண்டிருந்த இந்திய ராணுவத்தினர் சிலரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மிதிவெடி, கண்ணி வெடிகளை அகற்றும் இந்திய ராணுவத்தைச் சார்ந்த அவர்கள் போர் நடந்த உள்ளடங்கிய கிராமங்களையொட்டி பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடி, மிதி வெடிகளைக் கிண்டிக் கிண்டி எடுக்கும் பணிகளைச் செய்து வருகின்றனர்.
முதலில் ஒருவித சந்தேகத்தோடு பேசத் தயங்கியவர்கள் கொஞ்சம் நம்பிக்கையடைந்த பின் நிறைய பகிர்ந்து கொள்ளத் துவங்கினர். இவர்களும் புலிகள் அமைப்பை இயக்கம் என்றும், பிரபாகரன் அவர்களை தலைவர் என்றுமே பெயரிட்டு அழைப்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. இயக்கம் புதைத்து வைத்த வெடிகளுக்கு நிகராக, இராணுவமும் வெடிகளை நிலத்தில் புதைத்து வைத்துள்ளதாக சொல்கின்றனர். ஒவ்வொரு நாட்டு இராணுவமும் பாதுகாப்பிற்காக எல்லையோரங்களில் கண்ணிவெடி, மிதிவெடிகளை வைக்க ஐக்கிய நாடுகள் சபை அனுமதிக்கின்றது, அதே நேரம் அதற்கான சில வரைமுறைகள் உண்டு, ஆனால் எந்த வரைமுறைகளையும் மதிக்காமல் இலங்கை இராணுவம் வெடிகளை வைத்திருக்கின்றது.
அவர்கள் பேச்சில் தமிழர்கள் மேலும், இயக்கம் மேலும் மரியாதை வைத்திருப்பதை உணர முடிந்தது. இறுதிக்கட்டப் போரில் இந்திய வீரர்கள் பங்கேற்றதாகச் சொல்வதை மறுக்கும் அவர்கள், இறுதிப்போருக்காக ரேடார் மற்றும் தொழில் நுட்ப உதவிகளை இந்திய ராணுவம்தான் செய்ததாக அடித்துச் சொல்கின்றனர். புலிகள் அமைப்பிற்கு வரவேண்டிய ஆயுதக் கப்பல்களை அழிக்க இந்திய ராணுவமே முக்கியக் காரணம், அதுவே போரின் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானது என்றும் சொல்கின்றனர். கூடவே கிழக்கில் புலிகளுக்குள் ஏற்பட்ட பிரிவும் தோல்விக்கு முக்கியக் காரணம் என்பதும் அவர்களின் கருத்து. சீனாவின் பங்கு குறித்து கேட்கும் போது, ஆயுதங்களை பெருமளவில் கொடுத்தது சீனாதான் என்றும் அதற்கு பிரதியுபகாரமாக, மன்னாரில் சீனப் படை தளம் அமைக்க அனுமதி கொடுத்து, பொது மக்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்ட ஒரு பகுதியில் சீனர்கள் குடியமர்த்தப் பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். மன்னாரில் உட்கார்ந்து மிக வசதியாக சீனா இந்தியாவை கவனித்து வருகிறது, அதுவும் தமிழகத்திற்குத்தான் பெரிதும் இடைஞ்சலான ஒன்று என்பதும் அவர்கள் கருத்து. கிராமப் புறங்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொன்னால் அடிக்க வந்துவிடுவார்கள் என்று ஒரு வீரர் சொன்னதை கசப்பான புன்னைகையோடு கேட்கவேண்டியிருந்தது.
வவுனியா முகாமில் கைது செய்யப்பட்ட பெண் புலிகளை அடைத்து வைத்திருப்பதாகச் சொன்னார்கள். ஓமந்தை மத்தியக் கல்லூரி இப்போது முகாமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு போரில் பிடிபட்ட புலிகளை அடைத்து வைத்திருப்பதாகச் சொல்கின்றனர். கடந்து போகும் வேலையில் கவனிக்கும் போது, பக்கவாட்டில் சுருண்டு கிடக்கும் கம்பியோரம் ஒரு ஆள் மெலிந்த தேகத்தோடு, சுடும் வெயிலில் நின்று கொண்டு சாலையைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. சரி முகாமில் இருக்கும் புலிகளின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் எனக்கேட்கும் போது முகம் இருண்டு போகிறது.
பெரும்பாலும் சந்தித்த மனிதர்களில் சிலர் கடினமான செய்திகளைப் பேசும் போது இடையிடையே, முந்தைய போர் வெற்றிகளை சிலவற்றை சிலாகித்துச் சொல்லி, மனித மனம் நாடும் தற்காலிக சுகத்தால் மனதை சிறிது நேரம் சமநிலைப்படுத்திக் கொள்வதாகவே தோன்றுகிறது. இத்தனை காலம் இதற்காகத்தான் எங்கள் பொடியன்கள் போராடினார்களா எனக் கேட்கும் போது இயலாமை நம்மையும் அடித்து நொறுக்கிறது.
எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு வடிவத்தில், வகையில் பாதிப்பு இருந்து கொண்டேயிருக்கின்றது. போர் நடந்த பகுதியில் இருந்த குடும்பங்கள் குறைந்த பட்சம் தங்கள் குடும்பத்திலிருந்து பாதி மனிதர்களையாவது இழந்திருக்கின்றனர். கிளிநொச்சியைக் கைப்பற்றியது முதல் இராணுவம் கொடூரமான ஒரு யுக்தியை கையாண்டிருப்பதாக அவர்கள் பேச்சில் உணரமுடிகிறது. நகர்புறத்தில் இருக்கும் சில கட்டிடங்களைத் தவிர்த்து, கிளிநொச்சி தொடங்கி முல்லைத்தீவு வரை, போரில் பாதிக்கப்பட கட்டிடங்கள் உட்பட எல்லாக் கட்டிடங்களையும் புல்டோசர் மூலம் முற்றிலும் இடித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட கிளிநொச்சி முதல் முல்லைத்தீவு வரை மனிதர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் முற்றிலும் சிதைக்கப்பட்டிருக்கிறதாகவே உணரமுடிகிறது. முல்லைத்தீவைச் சார்ந்தவர் மிக இயல்பாகச் சொல்கிறார், தன்னுடைய வீடு முற்றிலும் இராணுவத்தால் சிதைக்கப்பட்டதாகவும் போர் முடிந்தும் இன்னும் அதற்கான நிவாரணம் வழங்கப்படவில்லை அப்படியே வழங்கினாலும் மூன்று லட்சம் மட்டும் வழங்குவார்கள் (இந்திய மதிப்பில், ரூ.1,20,000), அது எந்த வகையிலும் வீடு கட்ட உதாவது என்பதுதான்.
போரை உக்கிரமாக நடத்தி முடித்த ராணுவம், போரினால் சாகும் மனிதர்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் ஆத்திரத்தையும், அவசரத்தையும் காட்டிய அரசாங்கம், போரில் வாழ்விடங்களைத் துறந்து, மிகக் கொடுமையான முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் மனிதர்கள் குறித்து சிறிதும் அக்கறையில்லாமல் இருப்பதுவும், அப்படியே ஏதோ கண் துடைப்பிற்காக ஆங்காங்கே குடியமர்த்தப் போவதாக போக்கு காட்டிக்கொண்டிருப்பதும் சிறிதும் மனிதாபிமானமற்ற செயல் என்பது மிகத் தெளிவாகத் தருகிறது. முகாமில் அடைந்து கிடக்கும் மக்களை, அப்படியே தொடர்ச்சியாக அடைத்து வைத்து மனதளவிலும், உடலளவிலும் முற்றிலும் சிதைப்பதை மிகத் தெளிவாக அரசு செய்து வருகிறது. முகாமில் இருக்கும் மக்களை வெளியில் இருக்கும் மக்கள் எப்படி நோக்குகிறார்கள் என்று கேட்கும் போது, வெளியில் இருக்கும் மக்களும், தங்கள் வீடு, உறவுகளில் பாரிய அளவில் இழப்பைச் சந்தித்திருப்பதால், அது அவர்களுக்கு மிக பெரிய தாக்கத்தைக் கொடுக்கவில்லையென்றே சொல்கின்றனர். இதுவும் கூட இராணுவ யுக்திக்கு ஒரு வித வெற்றி மனோநிலைதான்.
வட மற்றும் கிழக்கு பகுதியில் அரசோடு இணைந்து பதவிகளை அனுபவித்து வரும் சில தலைவர்கள் குறித்து பேசும் போது, மக்கள் அந்த இயலாமையிலும் கொந்தளிக்கின்றனர் வெள்ளை வேன் என்ற பதத்தை பயன்படுத்துகின்றனர். வடபகுதியைச் சார்ந்த ஒரு குறிப்[பிட்ட அரசியல் ஆட்கள் வெள்ளை வேன் மூலம் மக்களைக் கடத்தி மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்பது கசப்பான உண்மை. புலிகள் தமிழர்கள் பகுதியை ஆண்ட பொழுது திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு என்பது நூறு சதவிகிதம் ஒழிக்கப்பட்டிருந்தது. அதே பூமியில் இன்று அரசாங்கத்தின் கைக் கூலியாய் இருக்கும் தமிழர்கள் ஆள் கடத்தலிலும், இராணுவ வீரர்கள் கற்பழிப்பிலும் ஈடுபடுவது மிகச் சாதாரணமாக இருக்கின்றன.
போரின் இறுதி சில நாட்களில் எல்லைகள் மிகச் சுருங்கி தாக்குப்பிடிக்க முடியாது போன புலிகள், பொது மக்களை தங்கள் கேடயமாக பயன்படுத்தியதாகவும், அதில் இருந்து தப்ப முயன்றவர்களை ஒரு கட்டத்தில் புலிகளே சுட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். அதே சமயம் இராணுவத்தின் ஆட்கள் புலிகளோடு புலிகளாக கலந்திருந்ததாகவும், அவர்களே அப்படிப்பட்ட குழப்பங்களை ஏற்படுத்தியதாகவும் சிலர் கூறக்கேட்டேன்.
மேலும் இறுதிக் கட்டத்தில் தோல்வியை உணர்ந்த புலிகள் தாங்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தை இராணுவத்திடம் கிடைக்காமல் இருக்க எரித்தது, இப்போது இராணுவம் ஆங்காங்கே சத்தமில்லாமல் தோண்டியெடுத்துப் போகும் தங்கப் புதையல்கள் குறித்து கூறும் போது, அதை தங்களையே நம்பி கடைசிவரை வந்த மக்களிடமாவது புலிகள் கொடுத்திருக்கலாம் என்றும், இப்போது அது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு பயன்படாமல் போய்விட்டதையும் மிகுந்த கொஞ்சம் வேதனையோடு ஒருவர் குறிப்பிட்டார்.
என்னோடு பேருந்தில் பயணித்த, கிழக்கு பகுதியைச் சார்ந்த மருந்து விநியோகஸ்தரான ஒருவர், தங்களைப் போன்றவர்களுக்கு எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இருந்தும், மாங்குளத்திலிருந்து முல்லைத் தீவு வரை செல்லும் சாலையில் தங்களையும்கூட முற்றிலும் அனுமதிப்பதில்லை எனவும், அந்தப் பகுதிகள் இன்னும் மர்மமாகவே அரசாங்கத்தின் பிடியில் இருப்பதாகவும் கூறினார்.
எல்லோரும் வருத்தமாகக் கூறுவது, இறுதிக்கட்டத்தில் தங்கள் கண்முன்னே முகாமிற்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட பெருந்தொகையான மக்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லையென்பதே. குடும்பத்தில் தன்னோடு சக உறவாக இருந்த மகனையோ, மகளையோ, கணவனையோ எங்கிருக்கார், உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்றே தெரியாமல் தேடிக் கொண்டிருக்கும் கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது என்றே நினைக்கின்றனர். இறுதிக்கட்ட போர் நடந்த பகுதியில் இருந்த மக்கள் பல இலட்சம், அதில் இறந்ததாகவும், முகாமில் இருப்பதாகவும் அடையாளம் காட்டப்பட்டவர்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மட்டுமே, மீதி அவ்வளவு பேர் என்ன ஆனார்கள் என்ற கேள்வி மட்டும் எல்லோருக்குள்ளும் குடைந்துகொண்டேயிருப்பதை அறிய முடிகிறது. தகவல் தொடர்பு சுருங்கிப்போன உலகத்தில் இப்படி லட்சக்கணக்கில் காணாமல் போன, கொலையுண்ட மக்கள் குறித்து பல நாடுகள் குறைந்த பட்சம் அழுத்தம் கூட தராமல் மேம்போக்கான மௌனம் காத்து வருவது அறுவெறுப்பான ஒன்று.
கடைசி வரை இந்தியாவோ அல்லது வேறு நாடோ எப்படியாவது போர் நிறுத்தத்திற்கு உதவும் என உயிரைக் கையில் பிடித்துக்காத்திருந்த மக்களின் உயிர்கள் கொத்துக்கொத்தாக பறிபோனதை நினைக்கும் போது பதறுகிறது. ஒட்டுமொத்த உயிர்களோடு விளையாட இந்திய அரசியலுக்கு அப்படியென்ன இத்தனை ரத்த வெறி என்று கேட்கும் ஓங்கிய குரல்களுக்கு தலை தாழ்ந்துதான் இருக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த ஊடகங்கள் தமிழர்களின் தோல்வியை விலை பேசி வீதி வீதியாக விற்றதை கோபத்தோடு பகிர்கிறார்கள். போரின் இறுதிவரை புலிகள் அமைப்பு எப்படியாவது இராணுவத்தை திருப்பி அடிப்பார்கள் என்பது போல் ஒரு மாயையை உருவாக்கி தங்களுக்கு உண்மையை புரியாமலே ஏமாற்றி வைத்திருந்த ஊடகங்களை பேச்சினாலேயே காறி உமிழ்கிறார்கள்.
யாழ்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டாலும் காலம் காலமாக கொழும்பிலேயே வசித்து வரும் ஒரு விடுதித் தொழிலாளி, புலிகளின் வீழ்ச்சி தங்களுக்கிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் வீழ்த்தி விட்டதாக வலியோடு கூறினார். புலிகள் அமைப்பு இருக்கும் வரை தங்களை ஒரு வித பயம் மற்றும் மரியாதையோடு மதித்த சிங்களவர்கள், இப்போது அவர்களை கேவலமாக நடத்த முனைவதாக, நான் கொழும்பில் சந்தித்த ஒரு தமிழர் கூறினார், இத்தனைக்கு அவருடைய குடும்பம் காலம் காலமாக கொழும்பில் வசித்து வருகிறது.
ஏ-9 வீதி வழியாக திரும்பி வரும்போது ஆங்காங்கே படர்ந்திருக்கும், மர நிழலில் சிறப்பு சேவை என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பேருந்துகள் நின்று கொண்டிருக்க, மக்கள் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் தென் இலங்கையிலிருந்து யாழ் வரை சுற்றுலா என்ற பெயரில் இராணுவ வெற்றிகளைப் பார்த்துவர அனுப்பி வைக்கப்படுவதாகவும், அதற்கு ஒவ்வொரு பேருந்திற்கும் ரூ.25,000 அரசாங்கம் தந்துதவுதாகவும் கூறுகிறார்கள். புலிகள் இறந்தவர்களுக்கு அமைத்திருந்த மாவீரர் துயிலகம் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டு இறந்த ராணுவ வீரர்களுக்கு நினைவிடம் கட்டப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். வென்றெடுத்து விட்டோம் என்று கொக்கரிக்கும் ராணுவமும், அரசும் இன்னும் ஏன் முன்னூரு அடிகளுக்கு ஒரு துப்பாக்கி என காவல் காக்கிறதென்று தெரியவில்லை. இந்தக் காவல்களுக்கு மத்தியில்தான் தங்கள் வெற்றிகளை சுதந்திரமாக தம் இன மக்களை அழைத்து ரசிக்கச் சொல்லி அழகு பார்க்கின்றது.
விரக்தி மேலிட ஒரு அடர்மௌனம் எல்லோர் மனதிலும் இன்னும் கிடந்து தவித்துக் கொண்டிருக்கிறது. அந்த மனிதர்களுக்கு இப்போதைய உடனடித்தேவை போர் அல்ல, தொலைந்த தங்கள் உறவுகளைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டியதும், முகாமில் மிகக் கேவலமான சூழலில் இருப்பவர்கள் வெளியில் வந்து சுதந்திரத்தை அனுபவிக்க வைப்பதுமே. மீண்டும் ஒரு போர், இரத்தம், இழப்பு குறித்து சற்றும் சிந்திக்கும் மனோநிலையில் நான் சந்தித்த மனிதர்கள் இல்லவே இல்லை. கொழும்பில் சந்தித்த நண்பர் சொன்னதும் நாங்கள் இப்போது கட்டமைக்க நினைப்பது எங்கள் மனிதர்களின் உளவியல் மேம்பாடு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் விசயங்களைத் தான். எதையும் அரசியலாக்கும், தமிழ்நாட்டின் சில அரசியல்வாதிகள் போலி பற்றையும், தர்மம் சிறிதுமின்றி மீண்டும் ஒரு போர் நிகழும் என்ற தொணியில் எழுதிவரும் ஊடகங்களை அந்த மனிதர்கள் முற்றிலும் புறந்தள்ளி காறி உமிழ்வதாகவே தோன்றுகிறது.
நேரம் கடக்கக்கடக்க அங்கிருந்து புறப்படவேண்டும் என்ற மனநிலையில், அந்த மண்ணின் மேலும், அந்தக் காற்றின் மேலும் ஏதோ பாசம் கூடிக்கொண்டே போனது, ஏதோ சொந்த ஊரில் ஒரு உறவினர் வீட்டில் இருப்பது போன்று அந்நியத்தன்மை ஏதுமற்ற மண்ணாகவே வவுனியா மனதிற்குப் பட்டது.
இரவு பனிரெண்டு மணிக்கு வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிய பேருந்தில் அமர்ந்தேன். சொல்ல முடியாத அளவிலான மிகுந்த களைப்பு, கொஞ்சம் சொகுசு கூடிய இருக்கை, குளிர்ப் பதனப்படுத்தப்பட்ட பேருந்து, இருந்தும் பொட்டுத் தூக்கம் இல்லை. மனதுக்குள் ஏதோ சுழற்றி சுழற்றி அடித்துக்கொண்டே இருந்தது. இந்த மனிதர்களும் மனிதர்களாய் மகிழ்ச்சியாய் வாழ்ந்திட ஒரு நாள் வரவேண்டும் என்ற பிரார்த்தனை ஓயாமல் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஏதாவது ஒரு விடியலில் முகாம்கள் எல்லாம் மறைந்து போய், அங்கு அடைந்து கிடக்கும் மனிதர்கள் தங்கள் உறவுகளோடு வீடு, வாசல் என கை கோர்த்து திரிவதை, நிம்மதியாய் உறங்குவதை எப்போது காண முடியும் என்ற ஏக்கம் மனது முழுதும் நிரம்பிக்கிடந்தது. அங்கு வாழும் மனிதர்களுக்கு மனதளவில் ஏதாவது ஒரு வகையில் நாம் ஆறுதலாய் இருப்பது மிக அவசியம் என்பது ஆழப்புரிந்தது.
_______________________________________
96 comments:
Nice
படிப்பதற்கே மிகவும் வேதனையாக இருக்கிறது.. அங்கு இருப்பவர்களின் நிலைமை இன்னும் மோசமாக தான் இருக்கிறது...எப்போது தான் அவர்கள் கவலை தீருமோ
தலைவரே ரொம்ப நாள் கழிச்சு இலங்கை தமிழர்கள் பற்றி இவ்வளவு நெருக்கமா ஒரு பதிவு அல்லது செய்தியை படித்தது இல்லை. படிக்கும் போதே ரொம்ப கஷ்டமா இருக்கு, சீனாகாரன் இந்தியாவை குறி வைக்கிறான் என்று தெரிந்து நமது அரசாங்கம் அமைதியா இருக்கிறது எவ்வளவு வேதனையா இருக்கு ..
வெறும் உயிர் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது....வேறு எதுவும் இல்லை...
நல்ல பதிவு. படிக்க படிக்க நெஞ்சு கணக்கிறது. நல்ல நிலை உருவாகனும்.
இனம்தெரியாத குற்றவுணர்வும், தவிப்புமாய் உணர்வுகளைப் படிக்க நேர்ந்திருக்கிறது. எழுத்துகள் தரும் அழுத்தமே அங்கிருப்பவரின் சூழலை உணரச் செய்கிறது. எப்போதும் போல் மனதுக்குள் அழுது..உணர்வுகளை அடக்கி..நகரத்தான் விதித்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றி கதிர்.
கதிர்!இதுவரை இணையம் மூலமாக அறிந்தவைகள் உண்மை என்பதை மட்டுமே உங்கள் எழுத்துக்கள் முத்திரையிடுகின்றது.
பகிர்வுக்கு நன்றி.
படித்து முடித்த பின் ஒன்னும் சொல்ல முடியாமல் மனம கனத்துபோய் கிடக்கிறது.
ஒன்றும் சொல்ல இயலவில்லை. மனம் கனக்கிறது.
ரொம்ப வேதனையாக இருக்கிறது.....
இனம் புரியாத ஒரு வேதனை மனதில்... படித்த எனக்கே இப்படி என்றால்... உங்களுக்கு வலி அதிகமாவே இருக்கும்...
மாலையில்தான் வாசிக்க முடியும்... பகிர்ந்தமைக்கு நன்றி!
அப்பாவிகளின் படுகொலைகளுக்கு துணை போன அனைவரும் நாசமாய் போகட்டும்.
அடர் மௌனம்......
போயாதினம் வந்து யாழுக்கான உங்கள் அனுமதியை மறுத்து நிரம்பக் கவலை. இன்னொரு சமயம் வாருங்கள் யாழ், வன்னி செல்ல முடியும்.
மிக வருத்தமாக இருந்தது. இருக்கிறது. இதைவிட குறிப்பிட்ட தகுந்த விசயம் சீனா தற்போது நம்முடைய செற்கை கோள்கை குறிவைத்து அழித்து வருகிறது. இன்சாட் 4பி அப்படித்தான் அழிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்தவண்ணம் இருக்கிறது. அடியேன் சந்திராயனும் அப்படித்தான் அழிக்கப்பட்டிருக்குமோ என்று தகவல்களை திரட்டிவருகிறேன்
அழுத்தமான பதிவு சிந்தனைக்கு!
என்ன பின்னூட்டம் இடுவதென்று தெரியவில்லை. இதயம் கனத்துப்போனது
கதிர்,
கண்கள் கலங்குகிறது.
புகைப்படங்கள் இருந்தால் இடவும்.
மனம் கனக்கிறது
சொல்ல முடியாத வேதனை....நிலைமை சீரடைய ஆண்டவன் விரைவில் அருள் புரிய வேண்டும். பகிர்வுக்கு நன்றி.
''வெளியில் இருக்கும் மக்களும், தங்கள் வீடு, உறவுகளில் பெரிய அளவில் இழப்பைச் சந்தித்திருப்பதால், அது அவர்களுக்கு மிக பெரிய தாக்கத்தைக் கொடுக்கவில்லையென்றே சொல்கின்றனர்.'' ரொம்ப வருத்தமாக இருந்தும் வெறுமனே வாசித்து கடந்து போக மட்டும் தான் முடிகிறது
கதிர்..
நேரில் பார்ப்பது போல் உள்ளது உங்கள் விவரிப்பு.
ஊடகங்களை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை.
நல்ல காலம் பிறக்க வேண்டும்..
பகிர்வுக்கு நன்றி..
கதிர் !
உண்மைக்கு அருகில் உங்கள் பதிவு,
ஆனால் கொஞ்சம் போட்டோ போட்டு இருக்கலாம்..
பேரவலத்தின் சாயல் கூடத் தமிழகத்தில் இல்லை என்பதுதான் பெரும் வேதனையைக் கூட்டுகிறது.
கிராமத்து வேர் கொழும்புக்கு போயிருந்ததா ?
கொடுப்பினை தோழனே.தூரத்திலிருந்து கண்ணீணர் வடிப்பதற்கும் அருகில் போய் ஆறுதல் சொல்லுவதற்கும் நிறைய்ய வித்தியாசம் இருக்கிறது.'இந்தியன் என்று சொன்னதும் அலட்சியம்'எழுத்தில் இன்னும் கூர்மையாகப்பாய்கிறது.
மாப்பு, நாலுவாட்டித் திரும்பத் திரும்பப் படிச்சாச்சு... என்ன சொல்ல?
கேளிக்கைப் பயணமாகச் சென்றதனை ஒதுக்கி வைத்துத் தன்னை விடுவித்துக் கொண்டு, துணிச்சலாகச் சென்று வந்தமைக்கான உங்கள் அன்பு, பற்றுதல் முதலானவற்றுக்கு எனது நெகிழ்ச்சியைத்தான் தர இயலும்!!!
குறுகிய பயணத்திலும் நிரம்ப உண்மைகளை அறிந்துவந்த கதிருக்கு நன்றிகள். யாழ் செல்ல முடியாத நிலைமையையும் சாதகமாக்கி இந்திய இராணுவத்தாரோடும் பேசி அறிந்தவை பயனுள்ள தகவல். தர்மத்தின் வாயினைக் கௌவிய சூதினைக் கலைக்கும் கதிரவனுக்குத் தலை சாய்க்கிறேன்.
பொறுமையா வரி விடாம வாசித்தேன்.. கதிர்...!
வாசிக்கும் போது கனத்திருந்த நெஞ்சமும், இப்போதா.. இல்லை இடையிலா இல்லை கட்டுரையின் கடையில நான் கண்ணீரை விட என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருந்த கண்களும், வார்த்தைகளுகுள் சிக்கிக் கொண்டு கடந்த கால சம்பவங்களை தெளித்துக் கொண்டிருந்த என் மூளையும்....என்னை இயல்பாய் இருக்க விடவில்லை.
காற்றிலே கலந்திருந்த சோகத்தையும் அதை தப்பாமல் ஏந்தி வந்து எமக்காய் எழுத்துருவாக்கிய கசியும் மெளனத்தையும்... சேர்த்தே வாங்கிக் கொண்ட மனது விம்மிய ஓசை கேட்டிருக்க வாய்ப்பில்லை கதிர்.
இயல்பாய் எம்மகளின் செளகரிய அசெளகரியங்களை விளங்கி விளக்கியிருக்கும் உங்களுக்கு வாழுத்துக்கள் கூட சொல்லவிடாமல் சோகம் அப்பிப் போய் கிடக்கிறது மூளையில்....
ஏ...காலமே...
ஏன் எம் மக்களுக்கு மட்டும்
சோகத்தை சுவாசமாக்கினாய்....!
வரலாற்றின் பெரும்பக்கங்களில்
ஏன் என் இனத்தின் கண்ணீர் மட்டே
வழிந்தோடுகிறது....!
கதிர்...உப்புக்கரிச்சலோடு கூடிய எழுத்துக்களை எமக்காக சமர்ப்பித்தமைக்கு....அனேக கோடி நமஸ்காரஙக்ள்.....!
காலத்தின் பக்கங்கள் மாற்றி எழுதப் போகும் எம்மவரின் வரலாற்று வெற்றிகளை நாம் இல்லையெனினும் நமது சந்ததிகள் பார்க்கும்!
ப்ரியங்களுடன்....!
என்ன சொல்வதென்றே தெரியவில்லை , நாமனைவரும் இங்கே
சொத்து சுகம் குழந்தை குட்டி என சேர்ந்து சந்தோசமாக இருக்கும்
அதே வேலையில் அங்கே நமது ரத்த சொந்தங்கள் அழக்கூட மறந்துபோய்
மரத்துப்போய் இருக்கிறார்களே , பங்களாதேசிகளை (பங்களாதேஷ் ) வாழ வைத்த
இந்தியா நமது தொப்புள்கொடி தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றொழிக்க
துணை போனதே ................ ஐயோ ! என்ன கொடுமை இது ! இந்த பாழாய் போன
அரசியல் நம் உறவுகளை இப்படி சிதைத்துவிட்டதே !
உண்மைக்கு மிக அருகில் உள்ள எழுத்து ..மனம் கனக்கிறது.
ஒன்றும் சொல்ல இயலவில்லை. மனம் கனக்கிறது
உங்களுடன் பயணித்தது போன்ற உணர்வு கண்களில் நீருடன்
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்
""Blogger கலகலப்ரியா said...
:-) ""
(என் இந்திய கடவுச்சீட்டை வாங்கிப்பார்க்கும் போது, அலட்சியமான புன்னகை அந்த இராணுவ அதிகாரியின் இதழோரம் வழிந்தது)
கதிர் சார் இந்த இரண்டு 'புன்னகைக்கும்' பெரிய வித்தியாசம் எதுவும் தெரியலை.
சொல்ல முடியாத வேதனை மனதெங்கும் வலியை ஏற்படுத்துகிறது ...
நாதியத்து போனான் தமிழன் ...
யாழ்ப்பாணம் வந்தா வாங்க சார் சந்திக்கலாம்...
Ki2thigan@gmail.com
// தகவல் தொடர்பால் சுருங்கிப்போன உலகத்தில் இப்படி லட்சக்கணக்கில் காணாமல் போன, கொலையுண்ட மக்கள் குறித்து பல நாடுகள் குறைந்த பட்சம் அழுத்தம் கூட தராமல் மேம்போக்கான மௌனம் காத்து வருவது அறுவெறுப்பான ஒன்று.//
மனிதம் மாண்டு விட்டதென்பதற்கு இந்த செயல் ஒன்றே சாட்சி.
////இந்த மனிதர்களும் மனிதர்களாய் மகிழ்ச்சியாய் வாழ்ந்திட ஒரு நாள் வரவேண்டும் என்ற பிரார்த்தனை ஓயாமல் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது./////
நல்ல பதிவு.
//எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு வடிவத்தில், வகையில் பாதிப்பு இருந்து கொண்டேயிருக்கின்றது. போர் நடந்த பகுதியில் இருந்த குடும்பங்கள் குறைந்த பட்சம் தங்கள் குடும்பத்திலிருந்து பாதி மனிதர்களையாவது இழந்திருக்கின்றனர்.//
உண்மைலேயே வலிக்கிறது அண்ணா .,!!
மனதிற்கு மிகவும் வருத்தமளிக்கிறது அண்ணா.
இலங்கைத்தமிழர்கள் பற்றி அதிகமாக நான் படித்தது இதுவாகத்தான் இருக்கும் ..
வாசித்தேன் கதிர். கருத்துச் சொல்லவியலாத அளவுக்கு துயரத்துடன் குமுறும் மனம்.
||♠புதுவை சிவா♠ said...
""Blogger கலகலப்ரியா said...
:-) ""
(என் இந்திய கடவுச்சீட்டை வாங்கிப்பார்க்கும் போது, அலட்சியமான புன்னகை அந்த இராணுவ அதிகாரியின் இதழோரம் வழிந்தது)
கதிர் சார் இந்த இரண்டு 'புன்னகைக்கும்' பெரிய வித்தியாசம் எதுவும் தெரியலை.||
http://kalakalapriya.blogspot.com/2010/10/blog-post_26.html
எல்லாத்தையும் படித்துவிட்டு மனதில் உண்டாகிற அழுத்தம் வார்த்தைகளற்றுவிடுகிறது...
அன்பின் கதிர்..
நீங்கள் எழுதிய அனைத்து விஷயங்களும் இதற்கு முன் துண்டு துண்டாய் கேட்டு என்ன நடந்து இருக்கும் என்று யூகிக்க என்னால் முடிந்தது.
பல நாட்களுக்கு பிறகு கோர்வையாய் நடந்தவற்றை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி..
கடைசிவரை திருப்பி அடிப்பார்கள் என்றுதான் நாமும் நினைத்துக்கொண்டு இருந்தோம்..
புலிகள் தரப்பிலும்.. தங்கள் தோல்வியை அந்த நேரத்திலும் ஒத்துக்கொண்டு உலக நாடுகளிடம் உதவி கோரிஇருந்தால் ஒருவேளை வரலாறு மாறி இருக்கும்...
இப்போது எம் மக்களுக்கு நம்பிக்கை மட்டுமே தேவை... துவண்டு விடும் பரம்பரை அல்ல..
விரிவான பகிர்தலுக்கு மிக்க நன்றி..
இதுக்கும் ஒரு மைனஸ் ஓட்டு குத்தி தனது எதிர்ப்பை பதிவு செய்த உண்மைதமிழனை வாழ்த்துகின்றேன்...
நம்ம இனத்துக்கு வெளியே எதிரிகள் இல்லை..நம்மகிட்டயே இருக்கின்றார்கள்..
நல்லது...
சில இடங்களிலே உண்மையை அப்படியே படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள்.
//வீதிகளில் மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம், எல்லாப் பலகைகளில் தமிழ் எழுத்துகள் அழகாய் இருந்து கொண்டிருக்கின்றன//
இதுதான் கொஞ்சம் உறுத்துகிறது..
அது உங்கள் தவறல்ல ..
கொஞ்சம் கொழும்பை முழுமையாக சுற்றிப் பார்த்தால் கொழும்புக்கு குழம்பு என்றும் சிறுவர் வைத்தியர் சாலைக்கு சிரிவார் வைத்திய சாலை என்றும் அழகிய தமிழ்க் கொலைகளை கொழும்பு நகர் முழுவதும் காணலாம்.
நமது பதிவர்கள் செய்யும் தவறோடு ஒப்பிடும் போது அது புறக்கணிக்கத் தக்கதுதான்.
வன்னிப் பகுதி இராணுவக் கட்டுப் பாட்டிற்கு வரும் முன் பயணித்து இருந்தால் உலகத்திலேயே உண்மையான ஒரு தமிழ்ப் பிரசேத்தில் ஒரு நாளாவது இருந்த சந்தோசம் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.அந்தக் காலத்தில் எங்கு பார்த்தாலும் தமிழ் மயம்.
பல தூய தமிழ் சொற்கள் எனக்கு அறிமுகம் ஆனதே அந்தக் காலத்தில் வன்னிப் பகுதியில் இருந்த அறிவித்தல் பலகைகள் மூலமே.
அதுமட்டுமல்ல அந்தக் கால கட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வரும் பாடசாலை மாணவர்கள் கையிலே குறிப்புப் புத்தகம் வைத்து வன்னிப் பகுதியில் ( குறிப்பாக கிளிநொச்சி) வீதி நெடுக இருக்கும் தமிழ்ப் பெயர்களை குறித்துக் கொள்வதை என் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
அந்த தமிழ் வளத்தைப் பார்க்கும் பாக்கியம் இனி எந்தத் தமிழருக்கும் கிடைக்கப் போவதில்லை என்பதே நிதர்சனமான unamai.
இருந்தாலும் இப்படி ஒரு கட்டுரை எழுதிய உங்களுக்கு நன்றிகள்.
//போர் நடந்த பகுதியில் இருந்த குடும்பங்கள் குறைந்த பட்சம் தங்கள் குடும்பத்திலிருந்து பாதி மனிதர்களையாவது இழந்திருக்கின்றனர். //
:((
தமிழகத்தின் தொற்குமுனையிலிருந்து 20கி.மீட்டருக்குள்ளும் குறைவான இடைவெளியில் இத்தனை பெரிய அவலம் அதனைப் பற்றிய எந்தவொரு ப்ரக்ஞையுமற்ற கூட்டம் நம்முடையது... பெரும் வரலாற்றுச் சாபம்.
அறுவடை செய்யும் ஒரு நாளும் உண்டுதானே -
நன்றி கதிர்-
கதிர்,
வலியுடன் படித்து முடித்தேன். வழக்கமில்லாத வழக்கமாக முதல் முறையாக ஓட்டுப் போட முயற்சித்தேன். மைனஸ் போட்டேனா அல்லது பிளஸ் போட்டேனா என்று தெரியவில்லை. தவறாக மைனஸ் போட்டிருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.
இந்த வலியாவது தமிழனை ஒன்றாக்கட்டும்.சிங்களத்தின் இராஜதந்திரம் எமக்கானதாகட்டும்.
வாசிக்க கவலையாக இருக்கிறது. சேர சோழ பாண்டியர் காலத்துக்குப் பிறகு 21ம் நூற்றாண்டில் தமிழன் ஆண்ட ஈழமண்ணின் அவலத்தினை நேரில் கண்டு எழுதிய கதிருக்கு நன்றிகள்.
என்ன சொல்லுவது ...உங்களை நெருங்கிய சொந்தமாக்குறது..உங்கள் எழுத்து..
kalam than avargalukku pathil sollum
ஒரு தலைவனின் சொல் கேட்டு தமிழர்களின் துயரம் துடைக்கப் புறப்பட்ட 12000 விடுதலைப் புலிகள் இன்னும் சிறையிலிருக்கிறார்கள்.
ஆனால் நமக்குத்தான் எந்திரன் முதல் கொண்டாட்டம் வரை எவ்வளவோ இருக்கிறதே.
மனது கனக்கிறது!!
Please write it in English as well, so it would reach many people.
அன்பின் கதிர், விரைவில் உடைந்து நாசமாகப் போகவிருக்கும் ஆசியாவின் இரண்டு பேட்டை இரவுடிகளான சீனா மற்றும் இந்தியாவினால் சூறையாடப்பட்ட ஈழத்திற்கு நேரில் சென்று வந்து எழுதியதற்கு நன்றி. அம்மக்கள் விரைவில் போரின் விளைவுகளிலிருந்து மறுவாழ்வமைக்க வேண்டும். கொடிய போரையும் கொத்துக் குண்டுகளையும் அனுபவித்த இளம்பிள்ளைகள் வளரத்தானே போகிறார்கள்.
தமிழகத்துத் தமிழர்கள் இரத்தக் காட்டேரி சோனியா-இராகுல்-காங்கிரசு கும்பலைத் தமிழகத் தேர்தலில் மண்ணோடு மண்ணாய்ப் புதைத்தால் நல்லது. அதுவே இப்பொழுது அம்மக்களுக்கு நாம் அளிக்கக் கூடிய மருந்து.
நன்றி - சொ.சங்கரபாண்டி
இனம் அழிய துணை போன அரசியல் கட்சிகளுக்கு வாக்கு போட்டு டெல்லிக்கு அனுபிவைத்த தமிழக மக்களை நினைக்கும் போது வெறுப்பாகவும் விரகிக்தியகவும் வருகிறது.
என்று தணியும் என் இன இந்த சுதந்திர தாகம்.
செல்வன்
கருத்துகள் இட்ட அனைவருக்கும் நன்றி.
சில காரணங்களை முன்னிட்டு நான் சென்ற இடங்களில் படம் எதுவும் எடுக்கவில்லை, அடுத்து போர் நடந்த பகுதிகளுக்கும் நான் செல்லவில்லை. எல்லாம் கேட்டுஅறிந்தவைகள் மட்டுமே.
@@ புதுகை சிவா.
இரண்டு புன்னகைகளையும் ஒப்பிட முடியாது. அதற்கான வேறுபாடுகளை நான் நேரில் அறிந்தவன். நன்றி
@@ மதுவதனன்
@@ தமிழ்நதி
என் பயணத்தை மிக எளிமையாக்கியவர்களில் உங்கள் பங்கும் ஏராளம். மிகுந்த நன்றிகள்
@@ மயாதி
நான் கொழும்பு நகரத்தில் அதிகம் பயணப்படவில்லை. அடுத்து என் ஒப்பீடு தமிழகத்தில் உள்ள தமிழ் மொழியின் பயன்பாட்டோடு இருந்தது. அதிகமாக சிங்களவர்கள் வசிக்கும் சிலாபம், புத்தளம், அனுராதபுரம் பகுதிகளில் கூட தமிழ்ப் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை மனதில் கொண்டு குறிப்பிட்டேன்.
@@ ஜாக்கி
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். அங்கு சந்தித்த நபர்களின் மூலம் கேட்டறிந்தவைகளையொட்டி என் நடையில் எழுதியிருக்கிறேன். அதனால் வாசிப்பவர்கள் அனைவரும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுவும் இல்லை. அதன் பொருட்டு எதிர் வாக்கு, எதிர் கருத்து வருவதில் ஒன்றும் தவறோ, ஆச்சரியமோ, குற்றமோ இல்லை.
@@ அமரபாரதி
:) ஆகா, ஒன்றும் தவறில்லை. விடுங்கண்ணே!
இந்த மனிதர்களும் மனிதர்களாய் மகிழ்ச்சியாய் வாழ்ந்திட ஒரு நாள் வரவேண்டும் என்ற பிரார்த்தனை ஓயாமல் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது//
நல்ல எண்ணங்களுக்கு அப்போதும் சக்தியுண்டு..சென்று வந்து பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் கதிர்..
அவர்கள் அனைவரையும் கண்டது போல ஒரு சேர மகிழவும் துயரும் ஏற்படுகிறது..
//இந்தியன் என்றதையறிந்த அந்த இராணுவத்தானின் இதழோரம் வழிந்த அலட்சியப் புன்னகை மனதில் ஆழப் பதிந்து குடைந்துகொண்டேயிருந்தது.//
இந்தியனையும், தமிழனையும் இனி சிங்கள நாய்கள் மயி**க் கூட மதிக்கமாட்டானுங்க. அவனுங்க வேலை முடிஞ்சுபோச்சு.
இந்தியாவுக்கு, சிங்களன் சீனாவோட சேந்துகிட்டு பெரிய ஆப்பா வைக்கும்போது தெரியும்.
வேதனையை விட இனம் புரியா கோவம்தான் அதிகமா வருது.
"புதுகை சிவா.
இரண்டு புன்னகைகளையும் ஒப்பிட முடியாது. அதற்கான வேறுபாடுகளை நான் நேரில் அறிந்தவன்"
நன்றி கதிர் சார்
உண்மையில் பதிவுக்கு பின்னோட்டம் போடும் போது அந்த சிரிப்பானை கண்டதும் எழுந்த கோபத்தில் அவ்வாறு எழுதினேன்.
பின் தோழி கலகலப்ரியா இதற்காக பதிலை ஒரு பதிவாக அவர் எழுதியதை கண்டு உண்மையில் என்னுடைய தவறுக்கு வருந்துகிறேன்.
கலகலப்ரியா என்னுடைய தவறை மன்னிக்கவும்.
|| ♠புதுவை சிவா♠ said...
"புதுகை சிவா.
இரண்டு புன்னகைகளையும் ஒப்பிட முடியாது. அதற்கான வேறுபாடுகளை நான் நேரில் அறிந்தவன்"
நன்றி கதிர் சார்
உண்மையில் பதிவுக்கு பின்னோட்டம் போடும் போது அந்த சிரிப்பானை கண்டதும் எழுந்த கோபத்தில் அவ்வாறு எழுதினேன்.
பின் தோழி கலகலப்ரியா இதற்காக பதிலை ஒரு பதிவாக அவர் எழுதியதை கண்டு உண்மையில் என்னுடைய தவறுக்கு வருந்துகிறேன்.
கலகலப்ரியா என்னுடைய தவறை மன்னிக்கவும்.||
நன்றிங்க.. வருத்தம் எதுவுமில்ல.. பின்னூட்டத்திற்கு பதில் சொல்லும்போது... உங்களுக்கும் விளக்கம் கொடுக்கணும்னு நினைச்சேன்... பதில் நீண்டு விட்டதால் போஸ்ட்...
மனதைக் கனக்க வைக்கும் காட்சிகள். ஊடகங்கள் இந்தப் போரைச் சமூக நினைவிலிருந்து அகற்றிவிடவே தொடர்ந்தும் முயன்று கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் மறந்துவிடாமல் எதையாவது செய்துகொண்டேயிருக்க வேண்டும். சோதனைகளைக் கடந்து இப்பயணத்தை மேற்கொண்டமைக்கு நன்றி!
கதிர் அவர்களின் கட்டுரையைப் படிக்க மிகவும் துன்பமாக இருந்தது. கண்கள் குளம் ஆயின. நாம் உறுதி பூண்டு செயல் ஆற்றவேண்டும். காங்கிரஸ் கட்சிதான் தமிழர்களின் முதல் எதிரி. 1948-ஆம் ஆண்டு முதல், காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் பல துரோகங்களைச் செய்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சென்ற ஆண்டு படுகொலை செய்யப்பட்டதற்கு சோனியா-ராகுல் ஆகியோர்தான் முதல் காரணம். இவர்களுக்குத் துணைபோன கருணாநிதியும், தமிழ் நாட்டில் இருந்துகொண்டே தமிழர்களுக்கு எதிராகச் செயல் படும் ஜெயலலிதாவும் இரண்டாவது காரணம். இந்தக் கயவர்கள் அனைவரையும் அரசியலில் இருந்தே துரத்தியடிக்க வேண்டும். அந்நாளே தமிழர்களின் நன்னாள்.
மிக மிக அற்புதமான கட்டுரை கதிர். பாராட்டுகள். இது போல நேர்மையாக எழுதுபவர்கள் மீடியாவிலும் இருந்தால், அந்த மக்களுக்கு பெரிய பயனளிக்கும். காசுக்காக கற்பனை பரபரப்புகளை விற்றுக் கொண்டிருக்கும் பத்திரிகைகள் இதை படித்து தங்களை தாங்களே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும். இங்கிருக்கும் போலி அரசியல்வாதிகளுக்கு அங்கு என்ன செல்வாக்கு என்பதை நன்றாக உணர்த்தி இருக்கிங்க. ஆனாலும் இந்த போலிகள் சீன் போடுவதை நிறுத்தாதுங்க.
இந்தக் கட்டுரையை சேமித்து வைக்கிறேன். மீண்டும் நன்றி.
அழுத்தமான எழுத்து... மனசு கலங்கித்தான் போகிறது கதிர். :-(
துணிச்சலாகச் சென்று வந்தமைக்கான உங்கள் அன்பு, பற்றுதல் முதலானவற்றுக்கு எனது நெகிழ்ச்சியைத்தான் தர இயலும்.
SanjaiGandhi™ said...
மிக மிக அற்புதமான கட்டுரை கதிர். பாராட்டுகள். இது போல நேர்மையாக எழுதுபவர்கள் மீடியாவிலும் இருந்தால், அந்த மக்களுக்கு பெரிய பயனளிக்கும். காசுக்காக கற்பனை பரபரப்புகளை விற்றுக் கொண்டிருக்கும் பத்திரிகைகள் இதை படித்து தங்களை தாங்களே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும். இங்கிருக்கும் போலி அரசியல்வாதிகளுக்கு அங்கு என்ன செல்வாக்கு என்பதை நன்றாக உணர்த்தி இருக்கிங்க. ஆனாலும் இந்த போலிகள் சீன் போடுவதை நிறுத்தாதுங்க.
இந்தக் கட்டுரையை சேமித்து வைக்கிறேன். மீண்டும் நன்றி.
//
உங்களால் முடியாது என்பது தெரிந்தாலும் சொல்கிறேன், மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் நினைத்தால் மிச்சமுள்ள தமிழனையும் அவர்களது நிலங்களையும் காப்பாற்றமுடியும், சம உரிமை வாங்கித்தரவும் முடியும். காங்கிரஸ் செய்யுமா? கண்டிப்பாக திருமா, வைகோவால் முடியாது, காங்கிரஸ் தலைமை மனது வைத்தால் முடியும் செய்யுமா?
பொறுமையாக படிக்க வேண்டும் என்று எண்ணி இப்போதுதான் படித்து முடித்தேன்.
மனம் கணத்து விட்டது....
வலிக்கிறது.
என்னவேண்டுமானாலும் சொல்லுங்கள் அனைத்து தமிழர்களும் இந்த தோல்வியினால் உளவியல் ரீதியாக சிறிதாகவோ பெரிதாகவோ பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தோனோசியாவில் சந்தித்த பதிவர் மிக உறுதியாக சொல்லிக்கொண்டிருக்கிறார் மீண்டும் போர் ஆரம்பிக்கும் பிரபாகரன் தலைமை தாங்குவார் என்று.
லிங்க் என்னுடைய ப்ளாகில் தருகிறேன். நிறைய போரை சேரட்டும்
வலிக்கிறது.
என்னவேண்டுமானாலும் சொல்லுங்கள் அனைத்து தமிழர்களும் இந்த தோல்வியினால் உளவியல் ரீதியாக சிறிதாகவோ பெரிதாகவோ பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தோனோசியாவில் சந்தித்த பதிவர் மிக உறுதியாக சொல்லிக்கொண்டிருக்கிறார் மீண்டும் போர் ஆரம்பிக்கும் பிரபாகரன் தலைமை தாங்குவார் என்று.
லிங்க் என்னுடைய ப்ளாகில் தருகிறேன். நிறைய பேருக்கு சேரட்டும்
Getting angry against myself.. Are we human being? We were not able to extend our hands to our brothers & sisters and still we are watching everything without protest anything.. Thanks sharing your experience..
நெஞ்சு அடைக்கிறது, படிக்குபோதே கண்ணீர் வழிந்தோடுகிறது..ஏற்றுக்கொள்ள முடியாத துயரம்..மறுக்க முடியாத நிஜம்..இயலாமையின் உச்சத்தில் இருக்கிறோம்..காலம் மாறும் என்ற பொல்லாத வாசகத்தை நம்புவதைத்தவிர..
தமிழன் வேறெருதுவம் செய்யதுவிட முடியாத நிலைதான் மனதை கொடைகிறது..
பகிர்வுக்கு நன்றி நண்பரே...
அரசியல் நாயகர்கள், நாயகிகளின் சுயநலன், சுயலாபங்களுக்காய், எளிதில் விலைபோகும்,
ஏமாறும், ஏமாற்றப்படும் இனங்களில் முதன்மையான இனம் "தமிழ் இனம்".
இந்திரா காந்தி முதல்,ராஜிவ் தொடர, அவர் மகள் பிரியங்கா வரை,(பயிற்சி தொடங்கி, சிறை சந்திப்பு)ம்த்தியின் சூட்சி சாதரண மக்கள் அறியாதது (எத்தனயோ சூதும் வாதும்). இந்திராவின் அணு சோதனக்கு இலங்கை யுஎன்னில் ஆதரவு தந்ததற்கு பரிசு தான் கச்சத்தீவு என்பதை யார் யார் அறிவர். தமிழகத்திலோ, இலங்கை தமிழரின் சிந்தும் ரத்தத்தில், இரு கட்சி தலைமையும்
தங்கள் கொடிகளுக்கு வண்ணம் சேர்த்துக் கொள்ள துடிப்பாய் இருந்தனர். பிரபாகரன் ஒரு பக்கம்,
சிபாரத்திணம் ஒரு பக்கமாய், இடையில் தமிழீழம், இந்தியா பூனையிடம் முறையிடப்பட்ட வெண்ணக் கட்டியாய். தொடர்ச்சி....
ராஜீவ் கொலை ஒரு பெரிய துருப்புச்சீட்டு, அது எல்லாருக்கும் வசதியாய்
பொருந்திப் போனது. 2009 ஜனவரி 2ல் கிளிநொச்சி விழுந்தவுடன் கிளம்பிய இந்திய தமிழர்களின்
ஆதரவு அலையின் வேகம் ஒருங்கிணைக்கப் படாமல், வைகோ,சினிமாகாரர்கள், கம்யூனிஸ்ட், சிறுத்தை, அதிமுக, விஜய்காந்த், திமுக போன்ற பலரது தலைமையில் (இலங்கைத்தமிழன் முன்பு எப்படி ஒன்று படாமல் பல்வேறு இயக்கங்களில் இருந்தது போல்)சிதறி, அதன் தாக்கம் நீர்த்துப் போனது. மறுபடியும் முத்துக்குமரனின் தியாகத்தால் தூண்டப்பட்ட தீ ஆளும் கட்சியின் தேர்தலுக்கு தீவினையாகலாம், என்ற நோக்கில் அவசரமாய் அணைக்கப்பட்டது. 2009 மே மாத பாரளுமன்ற தேர்தல் இதற்கு மேலும் உறுதுணையானது. ஊடக வெளிச்சம் வேறு பக்கம் கவிழ்ந்தது. இப்ப என்ன சொல்லி, என்ன ஆகப்போகிறது. கதிரின் பதிவை படித்தபின் தோன்றிய இயலாமையை, சுய துக்கத்தைக் குறைக்க, இப்படித்தான், தன் நிழல் பார்த்து குரைக்கும் கோட்டி நாயாய் மனம் ஆற்றாது எழுதிக் கிழிக்கிறோம். இராணுவ மரியாதையின் போது ராஜிவ் காந்தியை துப்பாக்கியால் அடித்தவனின் வாரிசாய் இருப்பானோ? "அந்த இராணுவத்தானின் இதழோரம் வழிந்த அலட்சியப் புன்னகை". கொடுமை.
HAI அண்ணா,
அருமையான கட்டுரை
hai அண்ணா
கட்டுரை அருமை.படிப்பதற்கு கடினமாக இருக்கிற்து
தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
கதிர்...தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்.
நான் முன்னமே இந்தப் பதிவு வாசித்துப் பின்னூட்டம் தந்ததாய் ஞாபகம்.காணவில்லை ஏன் ?
வவுனியாவை பேருந்து விழுங்கத்தொடங்கும்போது இருள் கவியத்தொடங்கியது இது வெறும் வார்த்தையல்ல.எமது எதிர்காலம்பற்றிய வெளிசூனியமாக விரிந்துபோய் கிடக்கின்றது.எம்மக்களின் மனங்கள் பேசப்பட்டதையும் இன்னும் பேசப்படாததையும் படிக்கும்போது துயரம் சத்தம் போட்டபடி ஓடும் ஒரு ஆற்றைப்போல் பெருக்கெடுத்தோடுகிறது. காலத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் யாரும் தப்பவே முடியாது.இன்னும் எழுதுங்கள்.
அன்புடன் சாந்தினி.
குற்றவுணர்வு மட்டுமல்ல தமிழர்கள் என்பதில் நாம் ஒன்று படாது இருப்பதை எண்ணி ஆத்திரம் மட்டுமே மிஞ்சுகின்றது!
சிதைந்து போன நம் உறவுகளை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்று துடிக்கிறது . இருந்தும் கையாலாகதவனாகியிருக்கிறேன் .
one day will come....sure our lankan tamils will get their justice...but they have paid a lot.
vidiyal varum endra nambikkaiyudan manam kanakkirathu...
காலங்கள் மாறும்
ithayam kanakindrathu..
Etuvum seiya mudiavillaye endru manasatchi urthukirathu..
Aandava, avargalukku nalla valvu kidaika nee than ethavathu seiya vendum, nee irunthal....
Kannerudan
Gopal
//இறுதிக் கட்டத்தில் தோல்வியை உணர்ந்த புலிகள் தாங்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தை இராணுவத்திடம் கிடைக்காமல் இருக்க எரித்தது, இப்போது இராணுவம் ஆங்காங்கே சத்தமில்லாமல் தோண்டியெடுத்துப் போகும் தங்கப் புதையல்கள் குறித்து கூறும் போது, அதை தங்களையே நம்பி கடைசிவரை வந்த மக்களிடமாவது புலிகள் கொடுத்திருக்கலாம் என்றும், இப்போது அது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு பயன்படாமல் போய்விட்டதையும் மிகுந்த கொஞ்சம் வேதனையோடு ஒருவர் குறிப்பிட்டார்//
really sad...
கனத்த மனதுடனும் கலங்கிய கண்களுடனுமே முழுமையாக படிக்க முடிந்தது.....
வவுனியா சென்று உறவுகளுடன் கலந்துரையாடிய உணர்வை தரும் உங்கள் பதிவுக்கு நன்றி ...
ராஜாதாஸ்.R
கனத்த மனதுடனும் கலங்கிய கண்களுடனுமே முழுமையாக படிக்க முடிந்தது வவுனியா சென்று உறவுகளுடன் கலந்துரையாடிய உணர்வை தந்த உங்கள் பதிவுக்கு நன்றி ...
ராஜாதாஸ்.R
தலைப்பை பார்த்தவுடன் ஒரு விதமான பதற்றத்துடன் தான் படிக்க ஆரம்பித்தேன்..
ஊடகத்தில் வரும் செய்தி உண்மைக்கு சற்று தொலைவில் இருக்கும் என்று தெரியும்,அதையே பார்க்க மனம் கனக்கும்.உங்க எழுத்து அங்கு நடப்பதை அப்படியே சொல்லுமே என்று மனதை தயார்ப்படுத்திக்கொண்டு தான் படிக்க ஆரம்பித்தேன்...
படிக்க,படிக்க மனம் முழுவதும் பாரம்,விரக்தி.என்ன பாவம் செய்தார்கள் அந்த மக்கள்,ஏன் இவ்வளவு பெரிய தண்டனை,அந்த மண்ணில் தமிழனாய் பிறந்த ஒரே குற்றத்திற்காகவா?அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? குறிப்பா குழந்தைகள்... இறப்பையும்,அழிவையும் இரத்தத்தையும் நேரில் பார்த்து பார்த்து பழகிய அந்த பிஞ்சு குழந்தைகளை நினைத்தால் மனது வெதும்பி போகிறது.
நேரில் இந்த மக்களின் வாழ்க்கையை பார்த்துவிட்டு வந்தால் மனசு நிறையவே பக்குவப்பட்டிருக்கும்...
உண்மையின் உறைகல்லாய் ஒரு வேதனையான பதிவு...நேரில் சென்று ஆறுதல் படுத்திய உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கு..
nichaym vidivu undu
Post a Comment