Showing posts with label நீச்சல். Show all posts
Showing posts with label நீச்சல். Show all posts

Sep 13, 2009

மின்னல் போல் வருபவன்

-------------------------------------------------------------------------

சரியாக பத்து வருடங்களுக்கு முன் செப்டம்பர் மாத ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு எனக்கு என் நண்பனின் நண்பனிடமிருந்து அலைபேசிக்கு அழைப்பு வருகிறது...ஆற்றில் குளிக்கச் சென்றதாகவும், அதில் என் நண்பனைக் காணவில்லையென்று. அதிர்ச்சியில் பதறினேன் “காணோம்னா எங்கே, எப்படி”

அவனிடம் நான் பழகி இரண்டு வருடங்கள்தான் இருக்கும், இது நாள் வரை என் வாழ்க்கையில் சந்தித்த நண்பர்களில் மிகப்பெரிய யதார்த்தவாதி அவன். ஒரு விடயம் தொடர்பாக ஆலோசனை கேட்கும் போது, நமக்கு சாதகமாக ஆலோசனை சொல்லும் போது, அவன் மட்டும் நடைமுறை சாத்தியம் என்னவோ அதை மட்டும் தான் சொல்லுவான், அது நான் விரும்பத்தகாத கூற்றாகக் கூட இருக்கும், ஆனாலும் அவன் சொல்லுவதுதான் மிகச்சரியாக இருக்கும்.

எங்கள் ஊரின் மிகப்பெரிய வழக்கறிஞர் ஒருவரின் மைத்துனன் அவன். தன் சகோதரியின் வீட்டிலேயே தங்கி தன் மாமாவுடன் உதவியாக இருந்தான். அப்போதுதான் சட்டம் முடித்திருந்தான். செப்டம்பர் கடைசி வாரத்தில் தன் மாமாவுடன் நீதி மன்றத்தில் இணைவதாக கூறியிருந்தான். வழக்கறிஞராக மிகப்பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது.

பழகிய இரண்டு வருடத்தில் சில முறை மட்டுமே அவன் மது அருந்தி அதுவும் சிறிதளவு அருந்துவதை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் சில நாட்களாக அடிக்கடி, அதிக அளவில் குடிப்பதை அறிந்தேன். ஏன் என்ன காரணம் என்று கேட்டால் தத்துவார்த்தமாக, எல்லாக் குடிகாரனும் சொல்லும் சொத்தை சமாதானத்தை என்னிடமும் சொன்னான்.

அந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணிக்கு என்னிடம் பேசினான், ராசிபுரத்தில் இருக்கிறேன், ஒரு கிடாவெட்டு விருந்து. மாலை ஈரோடு திரும்புவதாக கூறினான். ஈரோடு வரும் வழியில் பள்ளிபாளையம் தாண்டும் போது மாலை நான்கு மணிக்கு, காவிரியில் குளிக்க நான்கு பேரும் சென்றிருக்கிறார்கள். தண்ணீர் கொஞ்சம் அதிகமாக ஓடிக்கொண்டிருந்த நேரம் அது. அற்புதமாக நீச்சல் அடிக்கக் கூடியவன். இன்னும் அதிகமாக தண்ணீர் போகும் போதும் கூட ஒரே நாளில் இரண்டு, மூன்று முறை அந்த ஆற்றை நீச்சலிலேயே கடக்கும் வல்லமை படைத்தவன்.


ஆனால் அன்று ஆற்றில் இறங்கி நீந்தி கால்வாசி ஆற்றைக் கடக்கும் போது தீடீரென மூழ்கியிருக்கிறான். ஒரு விநாடி மேலே எம்பி “டேய் முடியல” என்றிருக்கிறான், அவ்வளவுதான் எங்கே என்றே தெரியவில்லை. உடன் வந்தவர்கள் சில அடிகள் தூரத்தில் இருந்திருக்கின்றனர். சில நிமிடங்கள் ஏதோ விளையாட்டாக சொல்கிறான் என்று நினைத்து, இன்னும் சில நிமிடங்களில் ஏதோ விபரீதத்தை உணர்ந்து கூச்சலிட அந்தப் பகுதி மீனவர்கள், துணி வெளுப்போர் பரிசல் போட்டு வந்து பரபரப்பாய் தேடியும் அவன் எங்கே என்றே தெரியவில்லை.

எதுவும் முடியாத நிலையில் எனக்கு முதல் அழைப்பு வந்தது. அவனுடைய சகோதரியிடம் தகவல் சொல்லவேண்டி.

காணாமல் மட்டும் போனதாக மனது நினைத்தது. இறந்திருப்பான் என நினைக்கக் கூட தயங்கியது. எங்காவது தண்ணீருக்குள்ளேயே நீச்சல் அடித்து, ஏதோ ஒரு இடத்தில் கரையேறியிருப்பான், நிச்சயம் கண்டுபிடித்து விடுவோம் என ஒரு நம்பிக்கை.

பதட்டம், குழப்பம், வேதனை, பயம், நம்பிக்கை, அவநம்பிக்கை எல்லாம் அடுத்த சில மணி நேரங்கள் மனதைப் பிசைந்தது. காவல்துறை, தீயணைப்புத்துறை என யார் யாரோ வந்தார்கள், வெளிச்சம் மங்கி இருள் சூழ ஆரம்பித்தது. ஆறு ஓங்காரமாய் சுழித்து ஓடிக்கொண்டிருந்தது. இரவு பத்து மணிவரை அந்த ஆற்றங்கரையில் குறுக்கும் மறுக்குமாய் ஓடி, பழகிய முகத்திடமெல்லாம் ஏதாவது நம்பிக்கையான ஒரு வார்த்தை வராதா எனத் தேடினேன். அதே நேரம் நம்பிக்கையும் வேகமாக கரைய ஆரம்பித்தது.

“சரி காலையில் வந்து தேடுவோம்” என எல்லோரும் கலைந்து அவரவர் வீடு செல்ல, அலைபேசியை இறுகக் கையில் பிடித்தபடி, மூட மறுக்கும் இறுக்கமான விழிகளோடு எப்போது விடியும் எனக் காத்துக்கிடந்து, விடிந்தும் விடியாமல் ஆற்றங்கரைக்கு ஓடி வந்தால், இரவு நடந்த கவலையான பரபரப்பு இல்லாமல் அந்தப் பகுதி நபர்கள் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தனர்.

அதன்பின் ஒவ்வொருவராய் வர பல முறைகளில் இறுகிய மனதோடு தேடுதல் வேட்டை துவங்கியது, இனி உடல் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து, தேடித்தேடி செவ்வாய்கிழமை இரவு நீரில் நொதித்துப் போன உடலை மட்டும் எடுத்தோம்.

சில நாட்களுக்குப் பின் அவன் இறந்த போது அலைபேசியில் அழைத்தவனைச் சந்தித்து பேசிய போது “ஏங்க எத்தன தடவ இந்த ஆத்த கிராஸ் பண்ணியிருக்கான், ஆனா, அன்னைக்கு மட்டும் குடிக்காம இருந்திருந்தா செத்துருக்க மாட்டான்” என்றான்.

குடிக்க நினைக்கும் போது, எப்போதாவது குடிக்கும் போதும், குடிப்பவர்களைப் பார்க்கும் போதும் அவன் ஒரு மின்னல் மாதிரி நினைவில் இன்னும் வந்து கொண்டேயிருக்கிறான்.

-------------------------------------------------------------------------

கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...