சமீபத்தில் ஒரு தொடர்வண்டிப் பயணத்தில் சேலம் தொடர்வண்டி நிலையம் அருகே நிழற்படக் கருவிக்குள் சிக்கிய கவிதை இது.
படங்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், உருவெடுக்கும் உணர்வுகளின் வண்ணங்கள் மனது முழுதும் ஒன்றன்மேல் ஒன்றாய்ப் படிந்து பாரத்தைக் கூட்டவே செய்கின்றன. கூடவே அந்த பாட்டியின் மீதும் பிள்ளையின் மீதும் ஏதோ ஒரு இனம்புரியா பாசத்தை விதைக்கவும் செய்கின்றது.
தொட்டில் கட்ட வாய்ப்பில்லாத வெட்டவெளியில், ஒற்றைக் கம்பு ஒருபக்கமாய் சாய்ந்து ஒரு பிள்ளையின் உறக்கத்தைத் தாங்கிப்பிடிக்கிறது.
பால், மருந்து, தண்ணீர் என குடுவைகள் தவம் இருக்கின்றன அந்தப் பிள்ளையின் விழிப்பிற்காக!
ஒற்றைச் சிணுங்களைக் கண்ணுறும் பாட்டி ஓடி வந்து இசைக்கும் தாலாட்டில் தூக்கம் தொடர்கிறது.
அவர்கள் போராடிப் பூட்டும் தண்டவாளத்தில், அவர்களுக்கு ஒரு சொகுசுப் பயணம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை
எங்கும், யாரோ படைக்கிறார்கள், உருவாக்குகிறார்கள், செய்கிறார்கள் பிறருக்காக மட்டுமே கூலியைவிட கூடுதலாக !
தியாகங்களால் மட்டுமே உலகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது
-0-