Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Oct 23, 2019

மாற்றத்தை ஏற்படுத்திய மந்திரம் - இந்து தமிழ் திசை கட்டுரை

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் சொன்ன ஒரு மந்திரம்தான் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. வாய்ப்புகளைத் தவறவிடாதே என்பதுதான் அந்த மந்திரத்தின் உட்பொருள். நம் வாழ்க்கை உயர இதுபோன்ற ஒரு சொல், ஒரு செயல் போதும்” என்கிறார் எழுத்தாளர், பேச்சாளர், மனிதவளப் பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட ஈரோடு கதிர் (எ) கதிர்வேலு பழனிசாமி.

பள்ளி, கல்லூரிகள், இலக்கியக் கூட்டங்கள், புத்தகத் திருவிழாக்களில் இவர் தவிர்க்க முடியாத ஆளுமை. இவர் எழுதியவை நான்கு புத்தகங்கள். அவற்றில் இரண்டு பிரபல வார இதழ்களில் தொடராக வெளிவந்தவை. இவைதவிர, இணையத்திலும் 850 படைப்புகள் எழுதியுள்ளார்.

தமிழகம் முழுக்க பேச்சாளராக அறியப் பட்டுள்ள இவர், தமிழகம் மட்டுமின்றி, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உரையாற்றியுள்ளார். பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் சிறப்பு அழைப்பாளராக, மனிதவளப் பயிற்சியாளராகவும் தொடர்கிறார். தொலைக்காட்சி, வார, மாத இதழ்கள், பண்பலை என பெரும்பாலான ஊடகங்களிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஈரோடு அருகேயுள்ள சின்னியம்பாளையம்தான் கதிரின் ஊர். அரசு ஆரம்பப் பள்ளியில் தொடங்கி, ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி வரை கல்விப் பயணம். எழுத்தாளராக, பேச்சாளராக மாற கதிருக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது அவர் நடத்திவரும் ‘சிகரம்’அச்சகம். ஏறத்தாழ 19 ஆண்டுகள் அச்சகப் பணியில் இருந்துவிட்டு, 2008-ல் இணையத்துக்கு மாறினார். அவரிடம் பேசினோம்.

“ஈரோட்டை விட்டு விலகிய, உள்ளடங்கிய கிராமத்தில், அரசுப் பள்ளியிலேயே படித்து, நகர்ப்புறத்துக்கு இடமாற்றம் செய்வது அத்தனை எளிதானதல்ல. பார்வையில்படும் எதுவுமே மிரட்சியூட்டும். இயல்பாகவே மொழி, பழக்கவழக்கம், அனுபவம், தகவல்கள், அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் தன்னம்பிக்கை தளர்ந்திருக்கும். அப்படியான பின்னணியில் இருந்து நகரத்துக்குள் நுழைந்து, எழுத்தாளராக, பேச்சாளராக தகவமைத்துக்கொள்ள முயன்றவன் நான்.



சமூகவலைதளங்களில் தொடங்கிய பயணம்...
மனித வாழ்க்கையில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளும், சில எதிர்பாராத மாயங்களை நிகழ்த்திவிடுகிறது. கல்லூரி நாட்களில் துணுக்கு, கவிதை என கிறுக்கிக் கொண்டிருந்தாலும், ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஒரேயொரு வரிகூட எழுதாத சூனிய வெளியில் இருந்த எனக்கு, 2008-ல் இணையத்தின் வாயிலாக எழுத முடியும் என்பது தெரிய வந்தது.

என்னைச் சுற்றி நடப்பதை பகிரத் தொடங்கிய பயணம், இன்று பலரது வாழ்க்கையை செழுமைப்படுத்தும் புத்தகம் வரை தொடர்கிறது.
உணர்வுகளையும், மனதில் தேங்கிய காட்சிப் படிமங்களையும் சொற்களாக மாற்றிப் பதியத் தொடங்கியதுதான் எழுத்துத் துறையின் ஆரம்பம். இதில், பெரிய வாய்ப்புக் களமாக அமைந்தவை சமூக வலைதளங்களான ப்ளாக், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை.

இப்படி சமூக வலைதளங்களில் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த எனக்கு `நம் தோழி’ மாத இதழில் தொடர் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதில் வெளியான, உலகத் திரைப்படங்கள் குறித்த கட்டுரை, என்னை வெளியுலகுக்கு அறிமுகம் காட்டியது. தொடர்ந்து, குங்குமம் வார இதழில் ‘உறவெனும் திரைக்கதை’ என்ற தலைப்பில் 25 வாரங்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

மாணவ, மாணவிகளை சந்திக்கும் வாய்ப்பு மற்றும் அனுபவங்களை முன்வைத்து, பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கான, ‘வேட்கையோடு விளையாடு’ கட்டுரைத் தொடர் புதிய தலைமுறையின் கல்வி வார இதழில் வெளிவந்தது. கிளையிலிருந்து வேர் வரை, பெயரிடப்படாத புத்தகம், உறவெனும் திரைக்கதை, வேட்கையோடு விளையாடு ஆகிய நான்கு புத்தகங்களுமே இரண்டாம் பதிப்பைக் கண்டுள்ளன. குறிப்பாக, ‘வேட்கையோடு விளையாடு’ வெளியான 5 மாதங்களில் இரண்டாம் பதிப்பைக் கண்டது.

ஓராண்டில் 25 ஆயிரம் மாணவர்கள்...
எழுத்தாளர் என்ற நிலையைத் தொடர்ந்துகொண்டு, பேச்சாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளராக மாறினேன். ஓராண்டில் சராசரியாக 25 ஆயிரம் மாணவ, மாணவிகளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் கிடைத்த அனுபவங்களே ‘வேட்கையோடு விளையாடு’ கட்டுரைத் தொடர்கள். பதின் பருவ மாணவி தொடங்கி, 50 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் மகப்பேறு மருத்துவர் வரை பலரையும் இந்தப் புத்தகம் ஆழ்ந்து யோசிக்கவும், தன்னை உணர்ந்து கொள்ளவும் வைத்துள்ளது.

புத்தக திருவிழாக்கள், பொது அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்கள் என பல்வேறு மேடைகளில் பேசி வருகிறேன்” என்கிற கதிர், இன்றைய கல்விச்சூழல், இளைய தலைமுறையின் எதிர்மறை எண்ணங்கள், சமூகத்தை அவர்கள் அணுகும் முறை, பெற்றோருடனான உறவு-முரண் ஆகியவை குறித்து அதிகம் கவலைப்படுபவராக உள்ளார்.

இதற்காக, பிள்ளைகள் மீது பெரும் நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கான பல்வேறு பயிலரங்குகளை நடத்தி வருகிறார். இளைய தலைமுறையை நெறிப்படுத்த, அவர்களது சூழலைப் புரிந்துகொண்டு, அவர்களோடு இணைந்து, அவர்களை மாற்ற வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு வலியுறுத்துகிறார்.

“பயிலரங்குகளில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்தாலும், உண்மையில் பெற்றோரிடமே உரையாட வேண்டிய தேவையே அதிகம் உள்ளது. கல்வி என்பதே வாழ்வின் ஆதாரம் என்று மாறிவிட்ட இக்காலத்தில், முழுப் பொறுப்பையும் ஆசிரியர்கள், பிள்ளைகள் மீது மட்டுமே சுமத்திவிட்டு, செலவு செய்வது மட்டுமே தமது பொறுப்பு என்பதே பெற்றோரின் மனநிலையாக உள்ளது. பிள்ளைகளை வடிவமைப்பதில், தயார்படுத்துவதில் பெற்றோர்களும் முன்நிற்க வேண்டும்” என்கிறார் கதிர்.

சமூக வலைதளங்களை நேர்மறையாக பயன்படுத்தும் வகையில், நண்பர்களுடன் இணைந்து ‘ஈரோடு வாசல்’ எனும் வாட்ஸ்அப் குழு வாயிலாக இரண்டு ஆண்டுகளில் பலரையும் பேச்சாளராக, எழுத்தாளராக, படைப்பாளியாக, கதை சொல்லியாக, வாசிப்பாளராக மாற்றியிருக்கிறார்.

“இந்த மாற்றங்களுக்குப் பின்னால் இருப்பது, 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சக பயிற்சியாளர் சொன்ன மந்திரம்தான். `ஒரு வாய்ப்பு வரும்போது முடியாது என்று நீ கை விட்டால், வேறு யாரும் அதை செய்யாமல் இருக்கப்போவதில்லை. அந்த வாய்ப்பை யாரோ ஒருவர் செய்யத்தான் போகிறார். அந்த யாரோ ஒருவராக நீயே ஏன் இருக்கக் கூடாது’ என்பதுதான் அந்த மந்திரம். ஏதோ ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு செயல் போதும். உடைவதற்கும்... உயர்வதற்கும்...” நம்பிக்கையுடன் கூறி விடை கொடுத்தார் ஈரோடு கதிர்.

-எஸ்.கோவிந்தராஜ்

May 29, 2012

கடிதம்.நெட் – வெளிநாடு வாழ் தமிழ்க் குடும்பங்களுக்கான உறவுப்பாலம்

கவல் தொழில்நுட்பம் நாம் வாழும் தூரத்தைக் குறைத்துப்போட்டதில் கசங்கிப்போனது நாம் எழுதிவந்த கடிதங்களும்தான். கடந்துகொண்டிருக்கும் தலைமுறை நினைத்து நினைத்துச் சிலாகிக்க இருக்கும் நினைவுகளில் மிஞ்சியிருப்பது கடிதங்களும், கடிதங்களோடு காலம்காலமாய் நிகழ்ந்த சுவாரசியங்களும்தான். என்னதான் இனி அதைச் செயல்படுத்தினாலும் மின்மடல், குறுந்தகவல் என்று தொலைத்தொடர்பு மிக மிக எளிமையாகிவிட்ட காலகட்டத்தில் அந்தச் சுகானுபவம் கிட்டாதுதான்.



நானறிந்த தமிழ்ச் சொந்தங்களில், உள்ளூர், மாவட்டம், மாநிலம், உள்நாடு எனப் பிரிந்துகிடக்கும் மனிதர்கள் பெரிய இடைவெளிகளிலின்று கூடி மகிழ வாய்ப்புகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

அதே சமயம் வெளிநாடுகளுக்குப் பணி நிமித்தம் பெயர்ந்த தமிழ் உறவுகள், தன் குடும்பம், பிள்ளைகள் என மிகக் குறுகிய வட்டத்திற்குள் வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். ஒவ்வொருவருக்குள்ளும் மெலிதாய் இருக்கும் மனக்குறை தங்கள் பிள்ளைகளுக்கும், தமிழகத்தில் இருக்கும் தங்கள் முந்தைய தலைமுறைக்குமான இடைவெளி நீண்டு கிடக்கின்றன என்பதுதான்.


என்னதான் ஆண்டுக்கொரு முறை தாய்நாட்டுப் பயணம், வாரம் ஒரு முறை தொலைபேசியில் பேச்சு, எப்போதாவது மின் அரட்டை மூலம் காணொளி உரையாடல், சில நேரங்களில் மின்மடல் தகவல் பரிமாற்றம் என்றிருந்தாலும், எதையுமே சேமித்து வைத்தோ, அடைகாத்துச் சிலாகிக்கவோ வாய்ப்பின்றி மிகக் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றோம்

அன்புள்ள அப்பா அம்மாவுக்கு / தாத்தா பாட்டிக்கு,
நலம், நலறிய ஆவல்…..  எனத்தொடங்கும் கைப்பட எழுதப்படும் கடிதங்களில் வெறும் எழுத்துகள் மட்டுமா நிரம்பியிருக்கும். உயிரோட்டமாய், எழுதுபவரின் அன்பும், அக்கறையும் ஒவ்வொரு எழுத்தில் வளைவு நெளிவுகளிலும் கலந்து கரைந்துதானே கிடைக்கும். எத்தனையெத்தனை அன்பு, மகிழ்ச்சி, பாசம், பிரியம் அதில் நிரம்பியிருக்கும் என்பதை அனுபவித்தவர்களால் மறந்திடமுடியுமா?

அதே மகிழ்ச்சியைச் சிந்தாமல் சிதறாமல், வெளிநாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கும், தமிழகத்தில் வாழும் அவர்தம் உறவுக்கும் ஏற்படுத்தித்தர அமெரிக்காவில் இருக்கும் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை அமைப்பால் தோற்றுவிக்கப்பட்டதுதான் கடிதம்.நெட் கடிதச் சேவை மையம்.


  
கடிதம்.நெட் என்பது

கடிதம்.நெட் என்பது வெளிநாடு வாழ் தமிழ்ப் பிள்ளைகளுக்கும், தமிழகத்தில் இருக்கும் அவர்தம் உறவுக்கான ஓர் அஞ்சலம். வெளிநாட்டுக் குழந்தைகள் எழுதும் கடிதங்களை அவர்களின் உறவுகளுக்கு அனுப்பவும், அவர்களிடமிருந்து கடிதங்களைப் பெற்று வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு விரைந்து அனுப்பவும் செய்கின்றது.


வெளிநாட்டுக் குழந்தைகள் தாயகத்திற்குக் கடிதம் அனுப்புவது எப்படி

http://kaditham.net இணையதளத்தில் பயனாளராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். கைப்பட தமிழில் எழுதிய கடிதத்தை PDF அல்லது JPG கோப்பாக அனுப்பலாம். கடிதங்களைத் ஒருங்குறி எனச் சொல்லப்படும் Unicode தமிழில் தட்டச்சுச் செய்தும் அனுப்பலாம். பெறுபவரின் முகவரியைக் குறிப்பிட்டு http://kaditham.net/ இணையத்தளம் வாயிலாக அனுப்பவேண்டும். நிழற்படம் (புகைப்படம்) அனுப்ப இருப்பின் அதையும் இணைக்கலாம். தமிழகத்தில் இருக்கும் கடிதம் சேவை மையம் மின்மடலில் பெறப்பட்ட கடிதங்களையும் நிழற்படங்களையும் அச்சிட்டுக் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பும். அந்தக் கடித்ததோடு பதில் மடல் எழுதுவதற்குத் தேவையான வெற்றுத்தாள்கள், கடிதம் சேவை அமைப்பின் முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட கடித உறை ஆகியவற்றை இணைத்து அனுப்பும்.




தமிழகத்தில் இருப்பவர் பதில் கடிதம் அனுப்பும் முறை...

வெளிநாட்டுக்குழந்தைகள் அனுப்பிய கடிதத்தோடு, கடிதம் சேவை மையம் அனுப்பியிருக்கும் வெற்றுத்தாள்களும், அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட கடித உறையும் பெற்றுக்கொண்டவர், அந்தக் காகிதங்களில் தாங்கள் எழுதவேண்டியதை எழுதி, உறையில் இட்டு ஒட்டி அருகில் இருக்கும் அஞ்சல் பெட்டியில் போட்டால் போதும். அந்தக் கடிதம் எங்கள் சேவை மையத்திற்கு வந்தடையும்.


வந்தடையும் கடிதம் உடனடியாகப் படமாக்கப்பட்டு (scan செய்யப்பட்டு) PDF அல்லது jpg கோப்பாகக் குறிப்பிட்ட பிள்ளையின் (பயனாளரின்) மின்மடல் முகவரிக்கு அனுப்பப்படும்.




நிபந்தனைகள்...
கடிதம் தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். மற்ற மொழிகளில் அனுப்பப்படும் கடிதங்கள் சேவை மையத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.



கட்டணம்...                                                                     
கடிதம் சேவை முற்றிலும் இலவசம்.  தமிழை வளர்ப்பதைத் தவிர இந்தச் சேவையினால் எந்த ஆதாயமும் கடிதம் சேவை மையத்திற்கோ உலகத் தமிழ்மொழி அறக்கட்டளைக்கோ இருக்காது


கொள்கை...                                                                    
கடிதம் சேவை மையம் கடிதங்களையோ நிழற்படங்களையோ மின்னஞ்சல் அல்லது வீட்டு முகவரிகளையோ வேறு யாருக்கும் அளிக்காது, எங்கும் பிரசுரிக்காது. அதே சமயம் தனிப்பட்ட ரகசியங்கள், அந்தரங்கங்கள், சட்டத்திற்குப் புறம்பான தகவல்கள் போன்றவற்றை எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறோம். நீங்கள் அனுப்பும் கடிதங்களை வாசிப்பதில் கடிதம் சேவை அமைப்பினர்க்கு ஆர்வம் இல்லாவிட்டாலும், தவறான முறையில் இந்தச் சேவை பயன்படாமால் இருப்பதை உறுதிப்படுத்துவதற்குப் பல கடிதங்கள் வாசிக்கப்படும்

-
வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் உறவுகள் தங்கள் குடும்பத்தோடு, கூடுதல் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள கடிதம்.நெட் அரிய வாய்ப்பாக விளங்குகிறது. அதோடு மாதாமாதம் குழந்தைகள் தாத்தா, பாட்டிக்குத் தொடர்ந்து கடிதம் எழுதி, இருபக்கமும் அந்தந்தக் காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை எழுத்தில் பகிர்ந்துகொள்வதன் மூலம், அக்கடிதங்களின் தொகுப்பு குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளுக்கான வரலாற்று ஆவணமாகவும் இருக்கும்.  

எதிர்காலத்தில் கடிதம்.நெட் சேவை புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் தமிழ்ப்பிள்ளைகளையும் தமிழகத்தில் வாழும் பிள்ளைகளையும் இணைக்க விரும்புகிறது.  

அனைத்து விபரங்களுக்கும்......  http://kaditham.net/

-0-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...