Showing posts with label டாஸ்மாக். Show all posts
Showing posts with label டாஸ்மாக். Show all posts

May 19, 2017

R.I.P சிந்தாமணி ஒயின்ஸ்

சிந்தாமணி ஒயின்ஸ், ஒரு ஒயின்ஸ் கடைக்கான எந்த லட்சணத்தோடும் இருக்காது. சிந்தாமணி ஒயின்ஸ் என்பது ரொம்பப் பழைய பெயர். பத்தாண்டுகளுக்கும் மேலாக அது அரசின் அமுதசுரபியான டாஸ்மாக். எனினும் டாஸ்மாக் கடைக்கான எந்த லட்சணமும் அதில் இருக்காது. அதுவொரு நடை வீடு. அடுத்தடுத்து அறைகள் கொண்டு நீளமாக இருக்கும் வீட்டிற்கு நடை வீடு என்று பெயர்.

அந்த வீடு ஒரு மதுக் கடையாக மாறி கால் நூற்றாண்டுகளுக்கு மேல் இருக்கலாம். எனக்குத் தெரிந்தே இருபது வருடங்களுக்கு மேலாக அதில் மது விற்பனை நடக்கிறது. அரசின் ஒரு அமைப்பான சிந்தாமணிதான் அந்த மதுக்கடையை முதலில் நடத்தி வந்தது. அக்கம்பக்கம் போட்டிக் கடைகள் உண்டு. நூறு மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற மாஸ் ஒயின்ஸ். எதிர் சாரியில் நூற்றைம்பது மீட்டர் தொலைவில் மூர்த்தி ஒயின்ஸ். பக்கவாட்டில் ஒரு பார், இன்னொரு டாஸ்மாக் என, ஆயிரம் அடி சுற்றளவிற்குள் ஐந்து கடைகள். அவ்வளவு அடர்த்தியாய் கடைகள் அமைந்ததன் தேவையென்ன என்பது குறித்து பல நேரங்களில் விவாதித்ததுண்டு.

கடைகள் புடைசூழ மையத்தில் சிந்தாமணி ஒயின்ஸ் இருந்தாலும், அப்படியொரு கடை இருப்பது பளிச்செனத் தெரியாதுதான் அதன் பலவீனம். காரணம், அதன் வாஸ்துஅப்படி. பாரம்பரியமான புகழ்பெற்ற நவீன வசதி கொண்டபார் அந்தக் கடையிலும் உண்டு. பார் நடத்தும் முதலாளிகள் மட்டும் அடிக்கடி மாறிக் கொண்டேயிருப்பார்கள். பார் நடத்திக்கொண்டிருந்த ஒருவரை அவ்வப்போது எதிர்ப்பக்கம் இருந்த டீக் கடையில் சந்தித்ததுண்டு. பார் நடத்துவதற்கான டெண்டர் போக, மாதா மாதம் பல இடங்களில் அளிக்கப்படும் மாமூல்களால், பார் நடத்த முடியவில்லை என பலரிடம் புலம்புவார்.

கெத்தாக குடிக்கச் செல்பவர்களுக்கானது மாஸ் ஒயின்ஸ். ஓரளவு பிரபலமான முகங்களை மாஸ் ஒயின்ஸ் வாசலில் அடிக்கடி காண முடியும். மாஸ் ஒயின்ஸ் இந்தப் பகுதிக்கு லேண்ட் மார்க். அருகே ஆஸ்பிடல், நகராட்சியின் ஒரு அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என எது வந்தபோதும் அந்தக் கடைக்கான கெத்து மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை. இதற்கும் அடுத்த படி நிலையாகக் கருதுவோர் செல்லும் இடம் தான் மூர்த்தி ஒயின்ஸ்.

சிந்தாமணி ஒயின்ஸின் சாபக்கேடு, ஏற்கனவே சொன்னதுபோல், அப்படியொரு கடை இருக்கும் லட்சணமே தெரியாததுதான். முகப்பு பரபரப்பான சாலையில் பழக்கடை, மெஸ், டீக்கடை ஆகியற்றுக்கு நடுவே நசுங்கிக் கிடக்கும். சாலையை விட்டு உள் நுழைந்தாலே இருள் அப்பிக் கிடக்கும். ஆனால் இந்தக் கடைக்கு இருக்கும் கூடுதல் வசதி, அதற்கு பின் வாசல் உண்டு என்பதுதான். ஆனால் அந்த பின் வாசல் என்பது ஒரு அச்சு அசல் மூத்திரச் சந்து. ஆக இருளடைந்த முன் வாசல் வழியாக வருவதோ, மூத்திரச் சந்தாகக் கிடக்கும் பின் வாசல் வழியாக கடைக்குள் செல்வதோ புதியவர்களுக்கு எளிதானதல்ல.

ஆனால் விளிம்பு நிலை மனிதர்களுக்கான மையமாக, இளைப்பாறும் இடமாக பின் வாசல் வாய்த்தது. ஒரு கட்டத்தில் பாதையாக இருந்த அந்த சந்து, குடி மக்களின் ஆக்கிரமிப்பால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு முட்டுச் சந்தாக, மூத்திரச் சந்தாக மாறிப்போனது.எப்போதும் பின் வாசல் சந்தில் அருகாமை கட்டிடச் சுவரோரம் அமர்ந்து ஒரு குப்பி சரக்கை பங்கு பிரித்தபடி இருக்கும் சிலரை எப்போதும் பார்க்க முடியும். கூலி வேலைக்குச் செல்வோர், குப்பை பொறுக்குவோர் என்பதான மனிதர்கள் அந்த பின்பக்கத்தில் மொய்த்துக் கிடப்பர். அடிக்கடி தென்பட்டதாலேயே சில முகங்கள் மனதில் தங்கிவிட்டன. அந்த முகங்களில் வயதான சில பெண்களும் அடக்கம். குறிப்பிட்ட கால இடைவெளிகளுக்குள் அவர்கள் காணாமல் போவதும், அவர்களுடைய இடத்தை அவர்களுக்கு நிகரானவர்கள் நிரப்புவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டன. அப்படி காணாமல் போகிறவர்கள் என்பவர்கள் பெரும்பாலும் மாண்டு போகிறவர்களே எனக் கேள்விப்படுவதுண்டு.

இத்தனையாண்டுகளும் சோம்பிக் கிடந்த சிந்தாமணி ஒயின்ஸ் என்ற டாஸ்மாக்கிற்கு ஒருநாள் வெளிச்சம் பிறந்தது. கூட்டம் வரிசை கட்டி நின்றது. எப்படி இந்த அதிசயமென, அதிர்ந்து போய் விசாரிக்க, நீதிமன்ற ஆணைக்கிணங்க பல கடைகள் மூடப்பட, திறந்திருக்கும் கடைகள் எங்கிருந்தாலும் தேடி வந்தடையும் குடி மக்களின் கூட்டம் அதுவெனப் புரிந்தது. சிந்தாமணி ஒயின்ஸ்க்கே இந்த வாழ்வென்றால், அப்ப மாஸ் ஒயின்ஸ்!? முதலிரு நாட்கள் எள் விழுந்தால் எண்ணையாகிவிடும் எனும் உவமைக்கு நிகரான கூட்டம் அந்தக் கடை முன்பு. அடேய்அடடேய்எங்கிருந்துய்யா வர்றீங்க!எனும் கேள்வி அடி மனதில் எழாமல் இல்லை. போய் கேட்கவா முடியும்?. நாட்கள் போகப் போக கூட்டம் கொஞ்சம் மட்டுப் பட்டது. சிந்தாமணி ஒயின்ஸில் பழையபடி வாடிக்கையாளர்கள் தேய்ந்தார்கள்.

இப்படியாக, பெரும் பரபரப்பு, சுவாரஸ்யம், திருப்பு முனைகள் இல்லாமல் சவசவத்துக் கொண்டிருக்கும் சிந்தாமணி ஒயின்ஸ் வரலாற்றை எவ்வளவு நேரம் தான் கேட்பது? முற்றுப்புள்ளி வேண்டுமென விரும்புகிறீர்களா!?

நெடுஞ்சாலையை அழுந்த இருந்தும் சிந்தாமணி, மாஸ் ஒயின்ஸ்கள் மட்டும் எதன் பலத்தாலோ மூடு விழா காணாமல் தப்பித்து வந்த மர்மம் புரியாமலே இருந்தது போலவே, நான்கைந்து நாட்களுக்கு முன்பு திடீரென மூடப்பட்ட மர்மமும் புரியவில்லை. இப்படியாக மூத்திரச்சந்தில் ஜீவித்து வந்த சிந்தாமணி ஒயின்சும், கெத்தாக வீற்றிருந்த மாஸ் ஒயின்சும் ஒரு முற்றுப்புள்ளியில் நிற்கின்றன. எப்போதும் லாரியில் வந்து, கடைகளுக்குள் சாரை சாரையாகச் செல்லும் சரக்குப் பெட்டிகள், முதன் முறையாக கடைக்குள் இருந்து வெளியேறி காத்திருந்த லாரிக்குள் தஞ்சம் புகுந்து கொண்டிருந்தன.



கடைசி வரிகளை எழுதும்போது, இத்தனை ஆண்டுகளாக பல்வேறு தருணங்களில், நிலைகளில் மென்மையான வீக்கத்தையும், மதமதப்பையும் சுமந்து திரிந்த பல தரப்பட்ட மனிதர்களின் முகங்களெல்லாம் நினைவில் வந்து போகின்றன.

ஆனாலும் ஆனந்தமாய்ச் சொல்லலாம்...
“R.I.P சிந்தாமணி ஒயின்ஸ்


Mar 21, 2012

குடிமகனே…. பெருங்குடிமனே!

பகல் நேரத்தில் பேருந்துகளில் பயணித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. இப்பொழுதெல்லாம் ஏனோ, அதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக் கொள்வதேயில்லை. அன்று பேருந்திலேயே செல்லலாம் என முடிவெடுத்தேன். பவானி பேருந்து நிலையத்தை அடைந்தபோது, நான் செல்ல வேண்டிய ஊர் வழியே செல்வதற்காக B20 அரசுப்பேருந்து மட்டும் நின்று கொண்டிருந்தது. அது மைலம்பாடி வழியே ரெட்டிபாளையம் வரை செல்லும் என்பது நினைவுக்கு வந்தது.

படம் உதவி.. கூகுள்


வெயில் உச்சந்தலையில் ஊசி போல் குத்திக்கொண்டிருந்தது. இருக்கைகள் நிரம்பி, பலர் நின்று கொண்டிருந்தனர். பேருந்து கிளம்பும்போது ஏறிக்கொள்ளலாம் என பேருந்தின் ஓரத்தில் சோம்பலாய் உறங்கிக்கொண்டிருந்த நிழலில் ஒதுங்கினேன். நிழல் போதவில்லை. பாதி உடலை வெயில் சுட்டெரித்தது. 15 நிமிடப்பயணம் தானே, அனுசரித்துப் போய்விடலாம் என நினைத்துக் காத்திருந்தேன்.

ஒருவாறு ஆடி அசைந்து வந்த ஓட்டுனர், இருக்கையில் அமர்ந்து, கதவை அடித்துச் சாத்தினார். பேருந்து பின் பக்கம் வருவதற்காக, நடத்துனர் இரட்டை விசில் கொடுக்க ஆரம்பித்தார். பின்பக்க படியில் ஏறிக்கொண்டேன். வண்டி முழுதும் நெருக்கமாக நின்றவாறு பலர். வாரநாட்களில் மதியத்தில் ஒரு நகரப்பேருந்தில் இவ்வளவு பேரா என ஆச்சரியமாகவும் அயர்ச்சியாகவும் இருந்தது.

பேருந்து மெல்ல ஊர்ந்து வேகத்தடைகளையெல்லாம் கடந்து மேட்டூர் சாலையில் திரும்பியது. கூட்டம் அதிகமாக இருந்ததால் நடத்துனர் பயணச்சீட்டு கொடுக்க ஏதுவாக, ஓட்டுனர் மெதுவாக நகர்த்திக்கொண்டிருந்தார். பின்பக்க படி அருகே கிடந்த கூடுதல் டயர் மீது சில மூட்டை முடிச்சுகள் கிடந்தன. கூடவே ஒரு குடிமகனும் சரிந்து கிடந்தார். அந்த ஆள் இடைவிடாமல் ஏதோ பேசிக்கொண்டேயிருந்தார். பேச்சு என்பதைவிட கெட்ட கெட்ட வார்த்தைகள் உதிர்ந்து கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.

கடைசி இருக்கையின் வலது ஓரம் அமர்ந்திருந்த பெண்மணி, தன் முகத்தில் முந்தானையைப் போட்டு தூங்குவதுபோல் பாவனையிலிருந்தார். பேருந்தின் இயக்கத்தில் அந்த ஆள் உளறுவது விட்டுவிட்டு கேட்டுக்கொண்டிருந்தது.

முதல் நிறுத்தமான குருப்பநாயக்கன்பாளையம் வந்தபோதும் நடத்துனர் பின்பக்கம் வந்து சேரவில்லை. பேருந்து நிற்க முன்பக்கம் சிலர் இறங்கினார்கள், பின்பக்க படியில் ஒருவர் இறங்கினார். பின்பக்கம் இறங்கியவர், அவர்பாட்டுக்கு நகர முற்பட நடுப்பேருந்தில் நின்றிருந்த நடத்துனர் வேகமாக பயணிகளை, இடித்தவாறு பின்பக்கம் வந்துகொண்டே “டிக்கெட், அல்ல்ல்லோ சார், டிக்கெட்” என இறங்கிய நபரை சத்தமான வார்த்தையால் சிறைபிடித்தார்.

“டிக்கெட்ட வாங்குங்க சார், டிக்கெட் என்ன லட்ச ரூபாயா இருக்கப்போவுது, வெறும் 3 ரூவாதான் சார்” என சொல்லிக்கொண்டே ஒரு டிக்கெட்டை அனுப்பினார். கீழே இருந்த ஆள் இருண்ட முகத்தோடு சில்லறைகளைக் கொடுக்க, நடத்துனர் டபுள் விசில் கொடுத்தார். 

“3 ரூவா டிக்கெட்டு இப்படிப் ஓடப்பாக்குறாரே, இதுல பேண்ட் சட்டை இன் பண்ணிட்டு வேற வந்திருக்காங்க” என முனகினார் நடத்துனர்.

நெண்டிமுண்டி படிக்கட்டு அருகே வந்தார் நடத்துனர். நிற்கும் ஆட்களை ஒதுக்கி டயர் மேல் கிடந்த மூட்டை முடிச்சுகளுக்கு லக்கேஜ் போட்டார். கடைசி இருக்கையில் பெண்மணி அருகே இருந்த நபர், டிக்கெட்-லக்கேஜ் எல்லாம் வாங்கினார்.

குடிமகன் குனிந்துகொண்டே முனகிக் கொண்டேயிருந்தார். நடத்துனர் கூட்டத்துக்குள் தன்னை ஒருவாறு சாய்த்துக்கொண்டு, அந்த ஆளின் தோளைத்தொட்டு, “டிக்கெட்ட்ட்ட்…. எங்க போவனும்” எனக் கேட்டார்.

தலையை உலுக்கிச் சிலுப்பிய அந்தக் குடிமகன் வாயிலிருந்து கெட்ட வார்த்தைச் சுனாமி அடித்தது.

அந்த ஆளைவிட்டு நிமிர்ந்த நடத்துனர், சில விநாடிகள் இடைவெளி விட்டு, ”அண்ணா கொஞ்ச நவுருங்” என வாகாக இடம் ஏற்படுத்திக்கொண்டு கொஞ்சம் பக்கத்தில் நகர்ந்து, அந்த ஆளின் சட்டைக் காலரைப் பிடித்து “என்னய்யா சொன்னே!” என்றார்.

மீண்டும் வார்த்தைச் சுனாமி வீசியது.

”ச்சட்டீர்… ச்சட்டீர்…” என அந்தக் குடிகாரனின் கன்னத்தில் அறைந்தார் நடத்துனர்.

எனக்கு என்னவோ, போலீஸ் என்கவுண்டர் செய்ததுபோல் தோன்றியது.

’ஒரு அரசு ஊழியன், அதும் ஒரு நடத்துனர், எந்த அதிகாரத்தை வைத்து பயணியை இப்படி அடிக்கிறார்’, என எனக்குள் ஏதேதோ மனித உரிமைக் கருத்துகள் ஓடியது. இங்கு ஒரு மனித உரிமை ஆர்வலர் இருந்திருந்தால் இப்போது என்ன நடக்கும் என யோசித்தேன். நான் உட்பட அங்கே ஒரு கூமுட்டைக்கும் மனித உரிமைகள் குறித்துப்பேச, நெரிசலும், வியர்வையும் இடம் கொடுக்கவில்லை என்றும் தோன்றியது. ஆனாலும் அப்போது தோன்றிய  நினைப்புகள் அனைத்தும் அபத்தமானது, அப்பட்டமான செயற்கைத்தனமானது எனவும் தோன்றியது.

”உன்ன என்றா கேட்டேன், டிக்கெட் எடுனுதானே சொன்னேன். பொம்பள உக்காந்திருக்கிறது தெரியாதா உனக்கு, என்ன வேணும்னாலும் பேசுவியா? சோத்துக்கு வதலா எதப்போட்டாலும் திம்பியா நீ” என பொளேரென்று இன்னொன்று விட்டார்.

அடிவாங்கிய வேகத்தில் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த ஆளின் கால் மீது சரிந்து விழ, அவரும் முதுகில் ரெண்டு போட்டார்.

“அய்யோ, சாமி, நா ஒன்னுமே பேசலீங்களே” அதுவரை அருவியாய் கொட்டிக்கொண்டிருந்த அந்த குடிகாரனின் வாய் வற்றிப்போனது.

”எங்க போவனும்? காசக்குடு” என நடத்துனர் கேட்க
”மைலம்பாடிண்ணா”

“ஆறு ரூவா குடு”

சட்டைப்பைக்குள் மணிக்கட்டு வரை கை திணித்துத் தேடி, ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும், “இந்தாண்ணா” என முனகியவாறே நீட்ட

“ஓ.. ஒரு ரூவாயை வெச்சுக்கிட்டுத்தான், இந்த ஆட்டம் போட்டியா” என நீண்ட விசில் கொடுக்க, பேருந்து குலுங்கி நின்றது.

“இந்தா…. எறங்கு மொதல்ல, உன்ன ஒரு ரூபாய்க்கு கொண்டு உடுறதுக்கு ஒன்னும் கவருமெண்ட்ல வண்டி உடல, எறங்கு நீ” என விரட்ட
அந்த ஆள் டயர் மேல் அப்படியே கிடக்க, எழுந்து இறங்கும் வாய்ப்பில்லையெனத் தெரிந்தது.

அப்படியே சட்டையைப் பிடித்து இழுத்த நடத்துனர், படி வழியே வெளியே தள்ள, கூட்டம் ஒதுங்கி வழிவிட்டது. படி வழியே சரிந்து தள்ளாடி நின்று, முன்னும் பின்னும் ஆட்டம் போட்டார் குடிமகன்.

“டேய் தேவிடியா பையா! என்னைய எறக்கியுட்டுட்டு, வண்டி ஓட்டீருவியாடா நீ!?” என தள்ளாடியவாறே பேருந்தைப் பிடிக்க முயலும்போது பேருந்து நகர்ந்திருந்தது.

முன்னும் பின்னும் ஆடியவாறே கை நீட்டி, கத்திக்கொண்டிருப்பது பின்பக்க கண்ணாடி வழியே ஊமைப்படமாய் தெரிந்தது.

நடத்துனரையும், குடிமகனையும் இரண்டு தட்டுகளில் வைத்து மனசு என்னென்னவோ ஊசலாட்டம் நடத்திக் கொண்டிருந்தது. குடிகாரன் பெண்குறியையொட்டிய வார்த்தைகளை வாந்தியெடுத்தபோதோ, நடத்துனர் அடித்தபோதோ, ஐந்து ரூபாய் இல்லையென நடு வழியில் இழுத்து இறக்கியபோதோ, எதாச்சும் செய்திருக்க வேண்டுமோ அல்லது ஆணியே புடுங்காமல் இப்படியே கடந்து போவதுதான் நல்லதோ என சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்போதே….

“எப்பிடியும் ரெண்டு கோட்டரு போட்ருப்பானுங்க” என்றார் பக்கத்தில் நின்றிருந்த ஆள்

ரெண்டு கோட்டர் எவ்ளோ இருக்கும் என மனசு கணக்கிடும்போதே…

அரசாங்கத்தின் டாஸ்மாக்-க்கு சுமார் 150 ரூபாயை  கொடுத்த ஒரு கொடைவள்ளலை, வெறும் ஐந்து ரூபாய் இல்லையென அவமானப்படுத்தி, இறக்கிவிட்டுவிட்டு வரலாற்றின் பக்கத்தில் கரும்புள்ளியை பதித்துக் கொண்டோமே எனும் எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி அந்த B20 அரசுப்பேருந்து ஊராட்சிக்கோட்டையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

-0-

Jan 31, 2012

போதை கனக்கும் டாஸ்மாக் குடுவை



மாயப்போதை தேடும் மூளையோடும்
எச்சிலூறும் நாவோடும்
சில்லறைகளைப் பொறுக்கி
போதை பதுங்கிக்கிடக்கும் குடுவையை
கையகப்படுத்துகிறான் குடிமகன்.

அழுக்கடைந்த குடிப்பக மூலையில்
ஆலமரக்கிளையொன்று சிந்தும் நிழலில்
கோணலாய் நிற்கும் மேசையில்
காக்கையொன்று நேற்றும் எச்சமிட்டிருந்தது.

முதலிரவுக்கு வந்த மனைவியைப்போல்
குறுகுறுப்பாய் குடுவையைக் கையாள
அடைபட்டுக்கிடந்த அவனுக்கான அமிர்தம்
விடுபட்டு மெல்லச் சிரிக்கிறது

நடுங்கும் விரல்களோடு குவளையில் சரித்து
இனிப்பூட்டிய குளிர்பானத்தையோ
வாயு நிரம்பிய சோடாவையோ
பிளாஸ்டிக் பை தண்ணீரையோ பீய்சிக்கலந்து
ஒரு புணர்ச்சியின் தொடக்கம் போல்
தன் அனுபவத்துக்கேற்றார்போல் அருந்துகிறான்.

நாவு கடக்கும் மதுவின் கடுமையை
காரக்கடலையிலோ ஊறுகாயிலோ,
திட்டிய மனைவியின் வார்த்தைகளிலோ,
தன்னை ஒதுக்கிய சகமனித நினைப்பிலோ
தொட்டும்தொடாமலும் நீவிவிடுகிறான்

துளைத்தூடுருவும் கள்ள போதை
மெல்ல மெல்ல அவனை மேதையாக்கி
வன்மப் போர்வையை உதறிப்போட்டு
அன்புக் குடுவையின் மூடியை திறந்துவைத்து
வார்த்தைகளுக்கு பிரசவம் பார்க்கிறது

வெற்றிடத்தைக் குடித்த குடுவை சிரிக்க
போதையை ஊட்டிய திரவம் சிரிக்க
போதை தளும்பும் அக்கம்பக்கமும் சிரிக்க
ஓங்காரமாய் அவனும் சிரிக்கின்றான்
உலகமும் அவனைப் பார்த்து சிரிக்கின்றது!

போதையின் கனம் தாங்காத
பிறிதொரு குடுவை தன்னை
எவர் விடுவிப்பதென ஏக்கமாயிருக்கிறது
ஆனாலும் அது அறியும்,
இன்றோ, நாளையோ
இவனோ, இன்னொருவரோ
விடுவித்துவிடுவார்களென்று

-0-

நன்றி திண்ணை

Sep 26, 2011

டாஸ்மாக்



போதை சூழ் மனிதர்களிடம்
போதையற்று உழல்வதே
ஒரு போதை!

-0-

சபதத்தோடு தொடங்கும் குடி
மதுக்குப்பி தீர்கையில்
தீர்த்துவிடுகிறது சபதத்தை!

-0-

தழுவித் தஞ்சம்புகும் மது
திறக்கிறது அம் மனங்களையும்
சிலநேரம் அம்மணங்களையும்!

-0-

பசியாய் அன்பும் உணவாய் வம்பும்
அவ்வப்போது பரிமாறப்படுகிறது
மதுபான மேசைகளில்!

-0-

கூடுதலாய்ச்சேரும் மதுத்துளிகள்
ஒரேநேரத்தில் எழுப்பவல்லது
உறங்கும் கடவுளையும் சாத்தானையும்!

-0-

வரம்புகள் மீறப்படும்
மதுச்சுற்றிலும் உணரலாம்
சிறுதுளி பெருவெள்ளம்

-0-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...