Showing posts with label சொல்வனம். Show all posts
Showing posts with label சொல்வனம். Show all posts

Jul 14, 2014

முலைப்பால் - ஆனந்தவிகடன் கவிதை





பெருநகரங்களின்
உயர்ந்தோங்கிய குடியிருப்பருகே
கட்டடம் முளைக்கா நிலத்தில்
எப்படியோ முளைத்துவிடுகின்றன
பச்சையோடு
கொஞ்சம் புற்கள்

தின்று பசியாறுவதாய்ப்
பாவனை புரிந்தபடி
எங்கிருந்தோ மேய்சலுக்கு வந்திருக்கும்
கிழவியின் ஆடுகள்

கான்க்ரீட் மர நிழலோரத்தில்
ஒதுங்கும் தாய் ஆட்டின்
கனிந்த முலைக் காம்புகளை
எட்டிச் சப்புகின்றன இரண்டு குட்டிகள்

மூன்று மாதத்தில்
பால் மறக்கடிக்கப்பட்டு
வேலைக்கார ஆயாவின்
மடியிலிறுத்தப்பட்ட பிள்ளையொன்று
அவளின் சுருங்கிய முலை போர்த்திய
ரவிக்கையை இழுத்துப் பிடித்தவாறு
ஆட்டின் முலைக் காம்புகளை
பார்த்துக் கொண்டிருக்கிறது

மனதை வீட்டில் தொலைத்தபடி
அலுவலகப் பணியிலிருக்கும்
அம்மாவின் மார்புகளில்
வலி கூடிக்கொண்டிருக்கிறது!

-
ஆனந்தவிகடன் (17.07.2014) சொல்வனத்தில் வெளியான கவிதை

Jul 12, 2014

ஹோம்வொர்க் - ஆனந்தவிகடன் கவிதை





முதுகு ஒடிய சுமந்து வந்த
பள்ளிக்கூடப் பைகளிலிருந்து
ஒவ்வொரு ஏடாய் எடுத்து
ஹோம் வொர்க் செய்கிறார்கள்
அடுத்தடுத்த வகுப்பில் படிக்கும்
அண்ணனும் தங்கையும்

எதிர்புறச் சுவரில்
தலைக்குமேலே ஒளிரும் குழல்விளக்கில்
முத்தமிடும் பூச்சியும்
கள்ள மௌனம் பூசிய பல்லியொன்றும்
நெடுநேரமாய் அவர்களோடு
உடனிருக்கின்றன

பூச்சிக்கும் பல்லிக்கும்
பெயர் சூட்டலாமென
அண்ணனும் தங்கையும்
ஒருமனதாய்த் தீர்மானித்து
பசித்த பல்லிக்கு ஆளுக்கொரு
ஆசிரியர் பெயரைச் சூட்டுகிறார்கள்

பல்லியினருகே பூச்சி வந்தமரும்
அவசர கணத்தில்
வேறு பெயர் வைக்க நேரமில்லையென
பல்லிக்கு வைத்த பெயர்களை
பூச்சிக்குச் சூட்டுகிறார்கள்

வேறு பெயர்
யோசிக்க நேரமில்லையென
தத்தமது பெயரை
பல்லிக்குச் சூட்டிவிட்டு
ஹோம் வொர்க்கைத்
தொடர்கிறார்கள்.



*

ஆனந்தவிகடன் (17.07.2014) சொல்வனத்தில் வெளியான கவிதை

Jan 20, 2014

பூ வாசம்





வீதியோரம் பூத்திருந்த
செடிப்பூவை வருடியபடி,
வெட்கி வெட்கி கைபேசியில்
அவள் பேசிக்கொண்டிருக்கிறாள்
எதிர்முனையிலிருப்பவர்
பூவின் வாசமுணரும்
சாத்தியங்களோடு!

-

நன்றி : ஆனந்தவிகடன்

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...